Tuesday, January 13, 2009

PITம் பழமும்

எங்க வீட்டில் பிட்டு செய்தால் (அதாங்க, புட்டு அவிச்சால்) துருவியதேங்காய், நெய், சக்கரை சேர்த்துச் சாப்புடுவோம். வேலை அதிகமுன்னு இதை அடிக்கடி செய்ய மாட்டாங்க. ஆனால் கேழ்வரகு மாவில் கொஞ்சம் சுலபமாச் செய்யலாமுன்னு சொல்வாங்க. அதுக்கும் தண்ணீர் கலந்த மாவை சுளகில் போட்டுக் கட்டியில்லாம மெதுவா உதிர்க்கவும் நிறைய நேரம் எடுக்கும்.

கேரளா, போன புதுசுலே எனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துருந்துச்சு. அனுதினமும் பிற்பகலில் விமலா , ஊறவச்ச அரிசியை உரலில் இடிச்சு மாவாக்கறதை வேடிக்கைப் பார்ப்பேன். இட்லி தோசைக்குக்கூட இப்படி இடிச்ச மாவுதான் மீனாட்சி அம்மா வீட்டில். உளுந்தை மட்டும் ஊறவச்சு அரைச்சுச் சேர்ப்பாங்க.

அதுக்குப்பிறகு குடிபோன அன்னம்மாச் சேச்சி வீட்டில் ஆட்டுக்கல்கூட இல்லை. அங்கே வீட்டு வேலைக்கு உதவும் புஷ்பாவும் தினசரி அரிசிமாவு இடிப்பாங்க. உளுந்து? அம்மிக்கல்லில் அரைச்சு, இடிச்சமாவுடன் சேர்த்துக் கலக்கித் தோசை வார்ப்பாங்க. எனக்கு அம்மிக்கல்லில் அரைக்கும் உளுந்துமாவு இன்னும் வியப்பான வியப்பு.

பிட்டை விட்டுட்டு இட்லிதோசைக்குத் தாவிட்டேனே......போட்டும். பிட்டுக்கு மேற்படி ரெண்டு இடங்களிலும் பழம்( நேந்திர வாழைப்பழம்)தான் தொட்டுக்க. அதுவும் காலை ஆகாரமா இருந்தால் பழம் மட்டும்தான்.

கேரளாவில், எப்போவாவது ஹோட்டலுக்குச் சாப்பிடப்போனால் பிட்டுக்குக்கூடவேக் கொத்துக்கடலைக் கறி, முட்டை பொரிச்சதுன்னு கிடைச்சப்ப எப்படி இதெல்லாம்? காலங்கார்த்தாலே இவ்வளவு கனமாச் சாப்பிட முடியுமா என்பதே என் கேள்வி.

இங்கே உள்ள நண்பர் (இலங்கைத் தமிழர்) புட்டு செஞ்சு அதை காய்கறிகளுடன் பொரிச்சுச் சாப்பிடுவார்.

இப்படிப் பலவிதமான 'தொட்டுக்க'கள் இருந்தாலும் ஏத்தப்பழம்தான் என்னோட சாய்ஸ்:-)))

தலைப்புலே இருக்கும் பிட்டுக்கும், மேலே சொன்ன பிட்டுக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் வாழைப்பழம்தான். பொதுவா வாழைக்குலையில் காய்கள் நல்லா முற்றுனதும் அறுத்துக் கொண்டுவந்து பழுக்கவிடுவாங்க. மரத்திலேயே பழுக்கவிட்டுப் பார்த்ததே இல்லை நான். அந்தக் குறையை நிவர்த்தி செய்யணுமுன்னு இங்கே எங்கூர் தாவர இயல் பூங்காவில் (கண்ணாடி வீடு) இருப்பவர்களுக்குத் தோணிப்போச்சு.

போனவாரம் அங்கே போனப்ப, ரெண்டு வாழைமரத்தில் குலைதள்ளி நிக்குது. அதுலே ஒன்னு பழுத்த பழங்களோடு. காணக்கிடைக்காத அபூர்வ காட்சியாச்சேன்னு க்ளிக்கினேன். வாழைக்கன்னுகளும் ஒரு ஏழெட்டு அங்கங்கே நிக்குதுங்க ஆள் உயரத்தில். பழத்தோடு இருக்கும் மரங்கள் அஞ்சு மீட்டர் உயரம் இருக்கு.



ஒரு பத்து வருசம் முன்பு நம்மூர் பூங்காவில் இருக்கும் கண்ணாடிவீட்டில் ஒன்னேஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு மரம் இருந்துச்சு. அதைப் பார்த்தவுடன் எனக்குப் பயங்கர சந்தோஷம் & ஹோம்சிக். இந்த மரத்தைப் பார்க்கணுமுன்னே அப்பப்பப் போய்வருவேன். எந்தப் படுபாவியோ இந்த மரத்தைக் கண்டம் துண்டமா வெட்டிப் போட்ட விஷயம் தினசரியில் வந்ததும் அப்படியே மனசொடிஞ்சு போயிட்டேன்.

ஒரு அஞ்சு வருசம் முன்னே, தற்செயலா ஒரு வாழைமரம் விற்பனைக்குக் கடையில் இருந்ததைப் பார்த்ததும் வாங்கிவந்தேன். அஞ்சு மீட்டர் வரை வளருமுன்னு விவரம் போட்டுருந்துச்சு. நம்ம வீட்டில் குளிர்வந்தவுடன் மண்டையைப் போட்டு, வெய்யில் வந்தவுடன் உயிர்வந்துன்னு இன்னும் ஜீவனோடு இருக்கு. இப்ப வீட்டில் ஒரு கன்ஸர்வேட்டரி இருப்பதால் கொஞ்சம் நல்லமுறையிலே பிழைச்சுக் கிடக்கு.



அதுக்கூடப் பாருங்க, கொஞ்சம் வெய்யில் வந்துக்கேன்னு எடுத்து வெளியில் வச்ச உடனே இருக்கும் நாலைஞ்சு இலைகளும் பழுத்துருச்சு. க்ளொரஃபில் வேணாமாமே! (மேலே உள்ள மூணு படங்களும் வருசத்துக்கு ஒன்னான வளர்ச்சி)

இப்போதான் ஒரு மீட்டர் உயரம். இன்னும் நாலு மீட்டர் வளர்ந்ததும் வாழைக்குலை தள்ளும். அப்போ எல்லாருக்கும் பழம்பறிச்சுத் தர்றேன்.

இந்தப் படம்தான், இந்த மாசத்துக்கான நம்ம பிட் போட்டிக்கு என் சமர்ப்பணம்

24 comments:

said...

ஊரில் இருந்த பொழுது சாப்பிட்டது
இப்பொழுதும் நினைத்தால்........

வாழ்த்துகள்

said...

பிட்டுக்கு மண் சுமந்த பார்ட்டிங்க பத்தி தெரியும். இங்க மண்ணே பிட்டு சுமக்குதே!! :)

ஆஹா!! கொஞ்சம் உடைச்சுப் போட்டு, ஓ!! எல்லாம் போட்டா கவுஜ ரெடி போல! :)

said...

செடி( ?மரம்) வளரும் பாத்திரத்தில் கூட நுணுக்கமான வேலைப் பாடுகள்.. அபாரம்...

said...

மேடம் உங்க புகைப்பட கருவி தெளிவோ தெளிவு..

அருமையாக இருக்கிறது படங்கள்.

said...

professional touch!! பிட்டு பேரைப் பார்த்துட்டு ஓட்டமா ஓடி வந்தேன்! வாழைப்பழமும் கிடைச்சது. நன்னி!

said...

பொங்கலையொட்டி
மங்களகரமாக
குலை தள்ளிய வாழை
புறப்படுகிறது போட்டிக்கு.
வாழ்த்துக்கள் மேடம்!

said...

உங்க வீட்டுத் தோட்டம் எப்படிப்பா இவ்வளவு பளா பள அ ண்ணூ இருக்கு!!!!!!


அழகோ அழகு. வாழைக்குப் பக்கத்தில துளசியா!!
சூப்பர் பழம். அதைப் போட்டோ எடுத்த பக்குவமும் அழகு.நல்லா இருக்க்ப்பா.

said...

வாங்க திகழ்மிளிர்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

உடைச்சுப்போட்ட ஒவ்வொரு சொல்லும் ஒரு வரியில் வச்சால் கவுஜ வந்துரும்தானே?

அதான் புதுக் கவுஜ.

said...

வாங்க சுரேஷ்.

எல்லாம் சீனக்கைவரிசைகள். நாடுபூராவும் இப்படித்தான்.

அச்சில்வடிச்ச டெர்ரகோட்டா லுக் இருக்கும் ப்ளாஸ்டிக் தொட்டிதான் இது.

ஆனால் சதுரமா இருக்கும் தொட்டி, மண் தொட்டிதான். நெசமான டெர்ரகோட்டா.

said...

வாங்க கிரி.

படம் அழகா இருந்தா அது நம்ம திறமைப்பா. நல்லா இல்லேன்னாதான் இகழ்ச்சி அந்த புகைப்படக் கருவிக்கு:-))))

said...

வாங்க கீதா.
பொங்கலுக்கு மஞ்சள் குலை இல்லேன்னா என்னன்னு வாழைக்குலை வச்சுட்டேன்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இதெல்லாம் போட்டிக்கு நிக்காதுப்பா. அதுவும் உங்க முன்னால்......

ச்சும்மா.... ஒரு இருத்தலின் அடையாளம்.

said...

வாங்க வல்லி.

போட்டோவில் அழுக்குத் தெரியாதுப்பா:-))))

சதுரத் தொட்டி துளசிக்கு வாங்குனது. ஆனால் நான் ரொம்பக் குண்டாயிட்டதால் அதுலே நிக்க முடியலை. அதான் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல் துளசி மாடத்தில் ரோசா:-)

said...

இங்க நானும் சாப்பிட்டுயிருக்கேன்..பட் ஒட்டல் சாப்பாடு இல்லையா ஒரு மாதிரி தான் இருக்கும்..படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கு ;))

தைத்திருநாள் வாழ்த்துக்கள் ;)

said...

இந்தியாவில எல்லாருக்கும் கிடைக்கும் பழம் வாழைப்பழம். எங்க வீட்டில எப்பவும் உண்டு. மாமனார் வீட்டிலும் எப்போதும் வாழை இருக்கும்.பாத்ததும் ஃபீலிங்கஸ் கிளப்பி என்னை சீன் சிந்தாமணி ஆக்குறீங்களே ரீச்சர் இது நியாயமா... மங்களகரமான வாழைகுலை.. காலங்காத்தால.. நல்ல சகுனம் தான்.. இனிய பொங்கல் வாழ்த்துக்க்ள்

said...

வாங்க கோபி.

ஓட்டல் புட்டு ஒருவேளை விக்குமோ?

said...

வாங்க இலா.

இங்கே எங்களுக்கு ரொம்பவும் விலை உயர்ந்த அருமையான பழமுன்னா அது இந்த வாழைப்பழம்தான். எல்லாம் இறக்குமதி சரக்குதான்.
அபூர்வமான, அதிசயமான உள்நாட்டு விளைச்சலைத்தான் படத்தில் போட்டேன்.

ஆஸ்பத்ரியில் நோயாளியைப் பார்க்கப்போனால்...... வாழைப்பழம்தான் கொண்டுபோவோம்!!!!

said...

அதில் வெடிச்ச பழம்(2) எனக்கு. :-)

said...

வாங்க குமார்.

ரெண்டென்ன...குலையே உங்களுக்குத்தான்:-))))

said...

தொட்டியிலயே வாழை மரத்தை முழுசா வளர்க்க முடியுமா என்ன?

கடைசி போட்டோ அருமை. அதிலும் பாதி பழுத்து பாதி காயாக இருக்கும் குலை பார்க்க அருமையாக இருக்கிறது..

said...

//ச்சும்மா.... ஒரு இருத்தலின் அடையாளம்.//
நானும் அப்படித்தேன்!!!அம்புட்டுதேன்!!

said...

வாங்க வெண்பூ.

தாவர இயல் பூங்கா அளவுக்குக் காசு நமக்கிருந்தால் வெளியே நட்டு, அதுக்குக் கண்ணாடி அறை கட்டி வளர்க்கலாம்.

நம்ம ஐவேஜுக்குத் தொட்டியில்தான் வளர்க்கணும். நம்ம செடிக்கு வயசு 5 ஆகப்போகுது. இன்னும் உசுரோட இருக்கேன்னு பெருமைப் பட்டுக்கலாம்.

said...

வாங்க நானானி.

ஆழ்ந்து தூங்கும்போதும் காலை ஆட்டிக்கிட்டே தூங்கணுமாம். இல்லாட்டி......????

இருத்தல் + அடையாளம்.


அதே அதே:-))))