அடுத்துப்போன கோவில் வாசலில் நம்மை வரவேற்றவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசிட்டு, ரெண்டு க்ளிக்ஸும் ஆச்சு. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.
தண்ணீர்மலை ஸ்ரீ நாகநாதர் கோவிலில் இருந்து இங்கேவர ஏழே நிமிட்தான் ! நாம் அந்தக்கோவிலுக்கு இதே சாலையில்தான் போயிருந்தோம். நான் வலதுபக்கம் உக்கார்ந்திருந்ததால்.... இடது பக்கம் இருந்த இந்தக் கோவில் என் கண்ணுக்குப் படலை. ஆனால் ஒரு பெரிய கட்டடத்தின் வாசலில் நாலைஞ்சுபேர் ஒரே போல புடவை உடுத்து அலங்காரமாக நிற்பதையும் சுற்றி ஒரு சின்னக்கூட்டம் இருப்பதையும் பார்த்தேன்தான். க்ளிக்கவும் செய்தேன்தான். ஆனால் காடி போகும் வேகத்தில் படம் சரியா வரலை.
இப்ப இந்தக் கோவில் வாசலில் நின்னு சுத்தும் முத்தும் பார்வையை ஓடவிட்டால்.... அந்த அழகான பெரிய கட்டடம் எதிர்வாடையில் தெரியுது ! கல்யாண மண்டபமாக இருக்கவேணும்.
சரி இருக்கட்டும்னு நாம் கோவில் வளாகத்தின் வெளியே நடைபாதையையொட்டி இருந்த ஸ்டேண்டில் காலணிகளை வைக்கும்போது சின்ன யோசனை வந்தது உண்மை. வரவேற்பாளர்கள் கைவரிசையைக் காண்பிச்சாலோ ? காணாமல் போனால் , நம்ம பீடை ஒழிஞ்சு, நமக்கு நல்லகாலம் வருதுன்னு சொல்லக் கேள்வி. நடப்பது நடக்கட்டும்னு வளாகத்துள் நுழைஞ்சேன். முதலில் அங்கே மாடத்தில் 'நான்' !!! இருக்கட்டும். நல்லா இருக்கட்டும் ! நேரே பார்த்தால் ஒரு பெரிய மண்டபம்.
அதன் சுவரில் மீனாக்ஷி சுந்தரர் திருக்கல்யாணம்! ஹைய்யோ....... என்ன ஒரு அழகு !
நம் வலப்பக்கம் கோவில் வாசல். கோவில் வாசலுக்கும் மண்டபத்துக்கும் இடையில் சின்ன சந்நிதியில் புள்ளையார் ! ஒரு ஏழுபடிகள் ஏறிக் கோவிலுக்குள் போறோம். நடுவில் சிவன் இரண்டு மனைவிகளுடன் உக்கார்ந்துருக்கார். பச்சை வண்ணம், மலைமகள் ! நீலவண்ணம் யார்? ஒருவேளை கங்கையோ ? அப்படித்தான் இருக்கணும். ஜடாமுடிக்குள் இல்லாம வெளியில் வந்து உக்கார்ந்துருக்காள் !!!
கோவிலுக்குள் அடுத்தடுத்து ரெண்டு கொடிமரங்கள் & ரெண்டு சந்நிதிகள். ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும், ஸ்ரீ மீனாக்ஷிக்கும் ! சிவன், லிங்க ரூபத்திலும், மீனாக்ஷி, மனித உருவிலுமாக இருந்து நமக்கு அருள் பாலிக்கிறார்கள் !


இந்தாண்டை கோவில் வரலாறு கரும்பளிங்குக் கல்வெட்டில் !
ஸ்வாமி தரிசனம் முடிச்சுக் கருவறையை வலம் வர்றோம்.
நமக்கு இடது பக்கச் சுவரையொட்டி மற்ற சந்நிதிகள். நால்வர், சரஸ்வதி, புள்ளையார், உற்சவர்கள் , முருகன் தன் மனைவியருடன்.....இப்படி !
கோஷ்டத்தில் லிங்கோத்பவர். நமக்கிடதுபக்கம் கம்பியழி போட்டுருக்கு.

திறந்த கம்பிக்கதவினூடே நுழைந்தால்............. ஆஹா.........பெருமாள் சந்நிதி!!! நின்ற திருக்கோலத்தில் தகதகன்னு ஜொலிக்கிறார் ! குலசேகரன் படிக்கருகில் ஜயனும் விஜயனும்
இந்தாண்டை உற்சவமூர்த்திகள் !
மூலவர் ஸ்ரீ வெங்கடாசலபதியோன்னு நினைச்சது, உண்டியல் பார்த்ததும் கன்ஃபர்ம்டு !
விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர், பெரிய திருவடி, மஹாலக்ஷ்மித்தாயார்னு சுத்திவர மாடச்சந்நிதிகள் ! தீபாரத்தி, துளசி& தீர்த்தம், சடாரி எல்லாம் கிடைச்சது. பட்டர் ஸ்வாமிகள், கொஞ்சம் நம்மைப்பற்றி விசாரித்தார். நாமும் நியூஸி என்று சுருக்கமாகச் சொன்னோம். ப்ரஸாதமாக ஆளுக்கொரு லட்டு !
உண்மையிலேயே நான் எதிர்பார்க்கவேயில்லை, இங்கே பெருமாள் தரிசனம் லபிக்குமுன்னு ! மனசு நிறைஞ்சுருச்சு !நவக்ரஹ சந்நிதி சுத்திட்டு வெளியே வந்தால், திருக்கல்யாண மண்டபத்தில் நமக்காக வரவேற்பாளர் ஒருவர் காத்திருக்கார். நம்மவர் ப்ரஸாத லட்டுவை அவருடன் பகிர்ந்துகொண்டார். சிந்தாமல் சிதறாமல் செல்லம் போல் வாங்கி வாயில் போட்டுக்கொண்டது அழகோ அழகு ! நம்மவர்தான் லட்டைப் பிட்டுத்தரும்போது கொஞ்சம் தரையிலே விழுந்துருச்சு. ப்ச்.... செல்லம் அதையும் அழகா எடுத்து வாயில் போட்டுக்கிச்சு.
https://www.facebook.com/reel/867076479587521
கோவிலுக்கு எதிரே இருந்த பூக்கடை + பெட்டிக் கடையில் ஒரு சேவல். கட்டியெல்லாம் போடாமலேயே சமத்தா நிக்குது. அந்தக் கடையில் ராகுகாலம், எமகண்டம் நேரங்கள் எழுதிய போர்டு !!!!
நாம் காடிக்குத் திரும்பினோம். அங்கே காத்திருந்த மேகநாதன், எதிர்ப்பக்கம் இன்னொரு கோவில் இருக்கு. வாங்க போகலாமுன்னு சாலையைக் கடந்து அந்தக் கல்யாணமண்டப வாசலில் கொண்டுபோய் விட்டார்.
தொடரும்.......:-)






































3 comments:
ஊர் சென்றதில் இருவாரம் படிக்க முடியவில்லை. மற்றைய பதிவுகள் இனித்தான் படிப்பேன்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் வணங்கிக் கொண்டோம்.
அக்கா
சுந்தரேஸ்வரருக்கு இடப்பக்கம் உட்காந்திருக்குறது பிரியாவிடை (பிரியா ஆவுடை?) அம்மன். சுவாமிக்கு வலப்பக்கம் நிக்கிறது நீங்க சொன்ன மாதிரி மீனாக்ஷி அம்மன்.
இந்தியா தவிர வெளிநாட்ல எல்லாம் சுத்தமாக இருக்கணும், தரைல குப்பை போடக்கூடாதுன்னு செல்லத்துக்கு கூட தெரிஞ்சிருக்கு!!
கோவில் படங்களும், விவரங்களும் அழகு.
Post a Comment