Friday, January 19, 2018

சென்னையில் இருந்து சிங்கை..... (இந்திய மண்ணில் பயணம் 103)

அடையார்  கோவிலில் சாயங்காலம் சாயரக்ஷை பூஜை ஆறரைக்கு நடக்கும். அதே அடையாறில் ஒரு நியூஸித்  தோழியின் பெற்றோர்களைப் போய்ப் பார்த்துட்டு வரணும்.  முதலில் அவுங்களைப்போய் பார்த்துட்டு,  அப்புறம் கோவிலுக்குப் போகணுமுன்னு திட்டம். அப்படியே ஆச்சு.





இந்தக் கோவிலுக்குள் சிவனுக்கும் ஒரு சந்நிதி வெளிப்பக்கம்  ஸ்வர்க்க வாசலைத் தாண்டி அந்தாண்டை இருக்கு.   வழக்கம்போல்  பதுமன் ஆழ்ந்த சயனத்தில்!  அறிதுயில் மன்னன்! 'போயிட்டு வரேண்டா' சொல்லியாச். 'இனி எப்போ? ' கேட்டுட்டான்!  'யாருக்குத் தெரியும்'னு பதில் சொன்னேன்.

எப்பவும் கொஞ்சம் பேச்சு வார்த்தை உண்டு எங்களுக்குள் :-)  எதிரே கொஞ்ச நேரம் உக்கார்ந்து  அவனைக் கண்ணால் கண்டுக்கிட்டே இருப்பேன். 'என்ன சௌக்கியமா' ன்னு மனசுக்குள் வந்துருவான்!  ஜருகு கிருகுன்னு ஒன்னும் இல்லாமல் மனசடங்க உக்கார்ந்து தரிசிக்க முடியும் இங்கே!

அங்கிருந்து கிளம்பி நேரா  வெங்கடநாராயணா ரோடு, திருப்பதி  தேவஸ்தானக் கோவில்.    உள்ளே போகலை. தலை தெரிஞ்சது !     வெளியில் இருந்தே ஒரு கும்பிடு.  அப்படியே   அடையார் கோவில் தரிசனத்தை இவனுக்கும் சொன்னேன்.  "பாரு.... அப்படிக்    காட்சிக்கு எளியவனா இருக்கணும் கடவுள்!  ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறயே  திருப்பதியிலே!  "
" என்ன பண்ணச் சொல்லுறே..... கூட்டம் அம்முது. அதுக்கேத்தாப்பல ஆட்களும் ஆடறாங்க........  "

"உனக்கும் நல்லா வேணும்.....  ஆசை ஆசையா ஓடிவர்ற பக்தர்களை, ஒரு அஞ்சு செக்கன்ட் தரிசிக்க விடாமக் கையைப் பிடிச்சு இழுத்து வெளியே கடாசும் அரக்கிகளை அங்கே வச்சுருக்கே.... பார்லிமென்ட் அங்கம் என்ற ஹோதாவில் வர்ற கண்டவங்களையும் தீர்த்தம் என்ன, பிரஸாதம் என்ன, புடவை என்னன்னு தாராளமா வாரிக்கொடுத்து  உபசரிச்சயே....   இப்பப் பாத்தியா  உன்னைப்பத்தி இழிவாப் பேசிக்கிட்டுத் திரியுது  ஒன்னு....  அதுகளைக் கைப்பிடித்துக் கடாச முடியுமோ அந்த வல்லரக்கிகளால்? "

இப்போப் பதிவு எழுதும்போதே இதெல்லாம் வந்து விழுது மனசுக்குள்....  அதன் போக்கில் அப்படியே விட்டுட்டேன்....

  அடுத்த ஸ்டாப்  அதே ரோடில் இருக்கும் சரவணபவன்.   இந்தப் பயணத்தில் சென்னையில்   இதுதான் முதல்முறை இங்கே!

எனக்கொரு நெய் ரோஸ்ட்டும்,  நம்மவருக்கு  ஒரு ரவா தோசையும்...... கூடவே ஆளுக்கொரு பால்!  சீனிவாசன்   வீட்டுலே போய் சாப்பிடப் போறாராம்.... மணி எட்டுக்கூட ஆகலைன்னார்...

நாங்க லோட்டஸுக்கு வந்துட்டோம். நாளைக்குச் சீக்கிரமா எழுந்து ரெடி ஆகணும்.   காலை  ஆறேமுக்காலுக்கு சீனிவாசனை வரச்சொல்லியாச்சு, பெரிய  வண்டியை எடுத்துக்கிட்டு, ஃபைனல் பில்லையும் வாங்கிக்கிட்டு  வந்துருவார்.

நாங்களும் ராத்திரியே ஃபைனல் பேக்கிங் முடிச்சுக்கிட்டோம். அப்பதான்  கவனிக்கிறேன்....   ரெண்டு பெரிய பெட்டிகள்  புதுசா  இருக்கேன்னு....   ஒன்னுதானே  வாங்கினோம்.....    கேட்டதுக்கு 'எங்கே இதையெல்லாம் கவனிக்கிறே.....    ஜாலியா சுத்திக்கிட்டுல்லே இருக்கே....   முதலில் ஒரு பெட்டி வாங்கிட்டு,  பத்தாதுன்னு  இன்னொன்னும் வாங்கினோமே.....'

ஓ.... பெட்டி வேலைகளை இவர் பார்த்துக்கிட்டு இருக்கும்போது பிக்பஸாரின்  பாத்திர செக்‌ஷனுக்கு போனது இப்பத்தான் நினைவுக்கு வருது.  அழகான பாத்திரங்கள் (நல்ல தரம்!) இருந்தாலும் ஒன்னும் வாங்கிக்கலை, கேட்டோ!!!

நான் திரும்பி வர்றதுக்குள்ளே  பில் பணம் கட்டியதும், பெட்டிகளை சீனிவாசன் கொண்டுபோய் வண்டியில் வச்சுருக்கார்.

காலை ஆறரைக்குக் கிளம்பி நேரா பேங்க் ஏடிஎம், ஜிஎன் செட்டி சாலையில். நம்மவர் ஒரு தொகையைச் சொல்லி 'இவ்வளவு போதுமா'ன்னார்.  ' ஏடிஎம் ஒரு  முறைக்குக் கொடுக்கும்  அதிகபட்ச தொகையை எடுத்துக்குங்க. செலவு இல்லைன்னா, அடுத்த பயணத்துக்கு ஆச்சு'ன்னேன்.

அங்கிருந்து நேரா நம்ம கீதா கஃபே, இந்தப் பயணத்தில் கட்டக் கடைசி !
இட்லி வடை காஃபி மூவருக்கும் :-)  லோட்டஸுக்குத் திரும்பி பெட்டிகளை எடுத்துக்கிட்டு அறையைக் காலி செஞ்சுட்டு, ட்யூட்டி ஸ்டாஃப்களிம் கணக்கை செட்டில் செஞ்சுட்டு நேரா ஏர்ப்போர்ட் தான்.  காலை வேளை என்பதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லை. வெறும் 25 நிமிட்ஸில் வந்துருந்தோம்.

மணி இப்போ ஏழே முக்கால்.  நம்ம ஃப்ளைட் பத்து மணிக்கு!







சீனிவாசனுக்கு 'எல்லாம்' செட்டில் செஞ்சுட்டு, நாலைஞ்சு க்ளிக்ஸ் ஆனதும்  ரெண்டு ட்ராலிகளையும் தள்ளிக்கிட்டு உள்ளே போயிட்டோம்.  'எடை பயம்' இன்னும் இருக்குன்னாலும், நம்மவர் 'பிபிஎஸ் க்ளப்  கோல்ட் கார்ட் ' வச்சுருக்காரேன்னு  ஒரு தைரியம்தான்.  அப்புறம் பார்த்தால்.....  ரெண்டு கிலோ கொறையுது!!!!!   விடலாமோ?  ஓடிப்போய் ஸ்ரீக்ருஷ்ணா ஸ்வீட்ஸில்  இனிப்பு :-) இங்கெதான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.  பால் பொருட்கள் இங்கே கொண்டு வந்தால் சில சமயம் பிரச்சனை (பைத்தார மாடு வியாதி) என்பதால் அதை விட்டுட்டு மற்ற இனிப்புகள்னு  (அவசரத்தில்) சொல்லிட்டேன்.  என்னத்தையோ வச்சுட்டாங்க..... பேசாம மைஸூர்பா ரெண்டு அரைக்கிலோ பேக்கும்,  ஹல்வா ரெண்டு அரைக்கிலோக்களும் வாங்கியிருந்தால் கொடுக்க வசதியா இருந்துருக்கும்,  இல்லே?

இந்தமுறை நாம் ஸில்க் ஏர் ஃப்ளைட்.   சென்னையில் காலை பத்துமணிக்குக் கிளம்பி சிங்கைக்கு மாலை நாலே முக்காலுக்கு வருது. ஏற்கெனவே நாம்  புக் பண்ணியது வழக்கமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃப்ளைட்டுதான். ராத்திரி  பதினொன்னே முக்காலுக்குக் கிளம்பி பொழுதுவிடிய சிங்கை வந்துரும்.  இது நமக்கு ரொம்பவே வசதி, சென்னையில். பகலெல்லாம் சுத்தியடிச்சுட்டு ராத்திரி  ஒன்பது, ஒன்பதரைக்கு ஏர்ப்போர்ட் வரலாம்.  இதுலே ஒரே ஒரு  கஷ்டம் சிங்கை வந்தபின்.....  ஹொட்டேல்  செக்கின் டைம் பகல் மூணு மணின்றதால்   கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் திண்டாடணும். என்னதான் ஷவர் எடுத்துக்கவும், பொட்டிகளைப் பத்திரமா வச்சுக்கவும் ஹொட்டேல் வசதிகள் இருக்குன்னாலும்.... ராத்திரி எல்லாம் தூக்கமில்லாமல் ஒன்பது மணி நேரம் சிங்கை வெயிலில் சுத்தறதும் கஷ்டம்தானே?
நம்மவர் கண் பிரச்சனை காரணம், நாம் சிலநாள் முன்னதாகவே டிக்கெட்டை மாத்தி இருந்தோம்.  அப்பதான் ஸில்க் ஏர்  பகல் நேர ஃப்ளைட் எடுக்கலாமுன்னு  தோணுச்சு. நாலே முக்காலுக்கு  சிங்கைக்கு  வந்து ஹொட்டேல் போய்ச் சேர எப்படியும் அஞ்சரை ஆகிரும். அறை  தயாரா இருக்கும். ஆனால் ஒரு நாள் முழுசாக் காணாமப்  போயிருதே  :-(  ஒன்னு கிடைச்சால் ஒன்னு கிடைக்காது...   ப்ச்....

வண்டியில் வந்து ஏறுங்கன்னு  கூப்பிட்டதும்  முதல்லே   உள்ளே போய் உக்கார்ந்தாச்சு.  சரசரன்னு கொஞ்ச நேரத்துலேயே சனங்கள் வந்து நிறைஞ்சுட்டாங்க. பத்து மணின்னுட்டு பத்து நிமிட் இருக்கும்போதே  வண்டி நகர ஆரம்பிச்சது!
மேலே இருந்து சென்னையைப் பார்த்தால்  ஒரே மசமச.....  கண்ணுலே தண்ணியா என்ன?  ஊஹூம்... புகை மூட்டம்...
ஒரு மணி நேரத்துலே பாடாவதியா ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்  :-(  சிங்கை டைம் பார்த்து விளம்பறாங்க போல.....    லஞ்ச் ன்னு சொல்லலாம்.  ஆலூகறி, சோறு, பன், ஸாலட்ன்னு...     கூடவே ஒரு தண்ணி பாட்டில்.  பசி இல்லை.....

தேவர் நடமாட்டம் உண்டான்னு பார்த்தால்....   வெறும் நீலவானம்.  மேகங்கள் எல்லாம் எங்கே போச்சோ?  ஃப்ளைட் பாத் பார்த்துப் பொழுதை ஓட்டினேன். நம்மவர் பேப்பர் படிச்சுட்டுத் தூங்கிட்டார்.
சாங்கி வழக்கம்போல கலகலன்னு இருக்கு.  மயில்கள்தான் எங்கே பார்த்தாலும்!

 மயிலன்கள்தான்  அழகன்கள் :-)
பெரிய பெட்டிகள் எல்லாம் செக்த்ரூ பண்ணிட்டதால்   ரெண்டு கேபின் பேக் மட்டும்தான்.  டாக்ஸி பிடிச்சு ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தாச்.  வழக்கமான இடம்தான்... இந்த பார்க் ராயல். பெருமாளுக்குக் கிட்டக்க என்பதால் முன்னுரிமை கொடுத்துருக்கேன் :-)

தொடரும்.......  :-)

10 comments:

said...

இந்த அடையார் கோவிலில்தான் நான் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் அபிஷேக் ரகுராம் கச்சேரி கேட்டேன்.

said...

/செலவு இல்லைன்னா, அடுத்த பயணத்துக்கு ஆச்சு'ன்னேன்.// அடுத்த பயணத்துக்கு முன் அது செல்லாக்காசாகிவிடும். கையில் ஏதாவது கொஞ்சம் ரூபாய் நோட்டு வச்சிருக்கிறதே பயந்து பயந்து தான்.

Jayakumar

said...

அருமை நன்றி;
கோமலாஸ் ? 2 முறை முறைச்சதுக்கு அப்புறம் இட்லி தந்து பில்லுல பழிவாங்கியதை படிச்சது நான் இன்னும் மறக்கலே, ஹிஹிஹி

said...

வாங்க ஸ்ரீராம்.

கோவிலைச்சேர்ந்த ஹாலில் நானும் ஏராளமான நிகழ்ச்சிகளைப் பார்த்துருக்கேன். கட்டணம் கூட இல்லையாக்கும்!

ஓ ஐ மிஸ்...... தட் பார்ட் ஆஃப் சென்னை லைஃப் :-(

said...

வாங்க விஸ்வநாத்.

யானைப்ப்ரேமியின் வாசகர்களுக்கும் ஞாபகசக்தி அதிகம்தான் :-)

said...

வாங்க ஜயகுமார்.

ஐயோ.... அப்படியேதான் ஆச்சு :-(

said...

கண் வலி வீட்டுக்காரர் கிட்ட இருந்து மனைவிக்கும் வந்ததுதான்
விசேஷம்.
பத்திரம் துளசி.
இன்னும் நிறைய பயணம் செய்ய வாழ்த்துகள்.

said...

இந்தப் பயணம் அக்டோபர் 2016ல் இல்லையோ (அதாவது மகள் திருமணத்துக்கு முன்பு). இன்னும் ஒரு வருடத்தில் நடந்த பயணங்களை எப்போது எழுதப்போகிறீர்களோ? இதற்கிடையில் வேறு ஒரு பயணம் வேறு ஆரம்பித்துவிட்டது என்று எழுதியிருக்கிறீர்கள்.

said...

வாங்க வல்லி.

கண்வலி ஒட்டுவாரொட்டி இல்லையோ!!! :-) :-) :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பயணக்கதைகளை 'எல்லாம் விஸ்தரிச்சு' எழுதினால் இப்படித்தான் ஒரு பயணம் முடிக்கவே ரொம்ப நாள்(!) ஆகிருது!

அநேகமாக இப்ப எழுதும் இந்தப் பயணத் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் முடியலாம் :-)

நீங்க சொன்னது மாதிரிதான் இதுக்கிடையில் நாலைஞ்சு பயணங்கள் நடந்து முடிஞ்சது. சின்னதும், கொஞ்சம் பெருசுமா......

அமெரிக்கா, கனடா பயணங்கள் அருமை! எழுத நேரமில்லைன்னு பயணத்தின்போதே ஃபேஸ்புக்கில் கொஞ்சம் கோடி காமிச்சுக்கிட்டே வந்தேன். நாலு மாசம் ஆச்சு போய் வந்து!

அடுத்த அஞ்சு மாதத்தில் மூணு பயணங்கள் ஏற்பாடு ஆகியாச்.

எப்போ இதையெல்லாம் எழுதி முடிக்கப்போறேனோ.... பெருமாளே !!!!