Wednesday, January 24, 2018

அட! பெருமாளே பருப்புப்பொடி சாதமா உனக்கு? (இந்திய மண்ணில் பயணம் 105)

ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு விதம் என்கிற போது, நாமும்     ஒவ்வொரு கோவிலுக்கும் வெவ்வேற  ஸ்டைல் காமிச்சா தப்பா?   நம்ம  அடையார் அநந்த பதுமன் கோவில்னா,  பெருமாள் முன்னே  இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமா மாறி மாறிப்போய்  உக்கார்ந்து  பாத தரிசனம், முக தரிசனம்,  நாபி தரிசனம்னு  கண் கொட்டாமப் பார்த்துக்கிட்டே இருப்பேன்.  மனசுக்குள் மட்டும் தெரிஞ்ச ஸ்லோகங்களோ, பாஸுரங்களோ  ஓடிக்கிட்டு இருக்கும். சிலசமயம் கண் மட்டும்தான் அங்கே..... மனசு தறி கெட்டு ஓடுவதும் உண்டு!  போனாப் போகட்டுமேன்னு  விட்டுடறதுதான்..... பின்னாலே ஓடினாக் கஷ்டம்தான். எங்கே கொண்டு போய்த் தள்ளுமோ.....
நம்ம சிங்கைச்சீனுவுக்கு மட்டும் எப்பவும்  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் ஸ்பெஷலாக்கும்!  பயணங்களில் ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகம் (பெரிய எழுத்து !) கையோடு கொண்டு போவது வழக்கம். கேபின் பேகில்  மூடிக்குள் இருக்கும் வலைப்பையில் வச்சுக்குவேன்.  மனசுக்குத் தோணினால்....  பயணத்திலும் எடுத்துப் பார்த்துச் சொல்லிக்கொண்டே (மனசுக்குள்தான்)  போறதும் உண்டு. முக்கியமா மேகக்கூட்டத்தின் மேல் தேவர்கள் நடமாட்டம் உண்டோன்னு  பார்க்கும்போது.....  பெருமாள் தெம்படுவாரான்னு கூட பார்த்துக்கிட்டே போறதுதான்.... (ப்ச்... பைத்தாரி..... )


காலை வேளைகளில் சீனு தரிசனத்துக்குப் போகும்போது  அங்கே உக்கார்ந்து வாசிச்சுட்டு வருவோம். நம்மவரும் இதிலெல்லாம்  கலந்துக்குவார்.  காலை வேளைன்னாக்கூட ஒரு ஏழரை , எட்டுமணி ஆகிரும் எப்பவும். 

இந்த முறைதான்  விஸ்வரூபம் பார்க்கணுமுன்னு   முடிவு செஞ்சது . அதுகூட நேத்து நடை அடைப்பதைப் பார்த்த பின்னேதான் தோணுச்சு !

 காலை ஆறேகாலுக்கு விஸ்வரூபமாம். விடக்கூடாதுன்னு அஞ்சு மணிக்கே எழுந்து ரெடியாகி ஆறுமணிக்கே கோவிலுக்குப் போயிட்டோம்.  பொடிநடை கூட இல்லை....  ஊர்ந்து போனாலும் அஞ்சு நிமிட்!
அந்த அதிகாலைப்பொழுதில் சிங்கை செராங்கூன் சாலையின் முகம் அமைதி காட்டி, அருமையாக இருந்துச்சு!

ராஜகோபுரக் கதவு திறந்துருக்கு.  நேர்ப்பார்வையில் நேத்து  மூடிய அதே நிலையில் கருவறை வாசல்!
சுத்தமாக் கூட்டிப் பெருக்கிய கோவில் தரைகளும், அங்கங்கே கோலமுமா  மங்களகரம்!  ராஜகோபுர நிலைப்படியில்  சின்னதாக் கோலம் போட்டு பூக்களை வச்சுருந்தாங்க.
ஒன்னுரெண்டு பக்தர்கள் அங்கங்கே.....  காலையில் வேலைக்குப்போகும் வழியில் பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டுப் போகும் பழக்கம்!
நம்ம ஆஞ்சி சந்நிதி மட்டும் திறந்துருக்கு! ஆபரணம் அலங்காரம் ஒன்னுமில்லாமல் அமைதியா ஒற்றைச் செவ்வாடையில் இருக்கார்! கும்பிடு போட்டு, குட் மார்னிங் சொன்னேன்.

வெளிமண்டபத்துத் தூணோரம் உக்கார்ந்து, கையோடு கொண்டு போயிருந்த ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தைப் பார்த்து, மெல்லிய குரலில் படிக்க ஆரம்பிச்சோம்.
ராத்திரி கடைசியாகக் கிளம்பும்போது, மூடிவச்சக் கருவறைக் கதவு, திறக்கும் போது எப்படி இருக்கும் என்ற ஆவலோடு கதவுகளில்   அப்பப்ப ஒரு  கண் நட்டு இருந்தேன்.
ஆச்சு.... இதோ.... பட்டர் ஸ்வாமிகள் வந்துட்டார்! மணிக்கதவம் திறந்தது! ஆனால் உள்ளே திரை! குழந்தைக் கண்ணன் இருக்கான்!

கையில் இருந்த ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை மூடி வச்சேன். விஸ்வரூபம் பார்த்துட்டு, அப்புறம் வாசிக்கணும்.
வாசலில் ஒரு மைக் முன்னால் வந்து உக்கார்ந்த பட்டர் சுப்ரபாதம் 'சொல்ல' ஆரம்பிச்சார். அவருக்கு எதிரில் இந்தப்பக்கமாப் போய் உக்கார்ந்து கூடவே சொல்ல ஆரம்பிச்சேன். மனசுக்குள்தான் :-) அப்பத்தானே தெரியாத இடங்களில் மௌனம் சாதிக்கலாம், இல்லையோ!

வெளியே குத்துவிளக்குகள் ஒத்தைத் திரியில் நின்னு நிதானமா..... எரிஞ்சதும் ஒரு அழகே!

வாசலில் ஜெயவிஜயர்கள்! பார்த்துக்கிட்டே க்ளிக்கும்போதுதான் கவனிக்கறேன், கிஷ்கிந்தன், தீர்த்தன் என்று போட்டுருக்கே! பெயரை மாத்திக்கிட்டாங்க போல! எப்போ? இத்தனை வருசத்துலே இப்பதான் கவனிக்கிறேனோ?  (இந்தப் பெயர்களைத்தான் போன பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்!)
'சொல்லி' முடிச்சதும் திரை விலகி அதோ.... எம் பெருமாள்! நேற்றைக்குப் பார்த்தது பார்த்தபடியே! தீப ஆரத்தி ஆனதும் தீர்த்தப் பாத்திரம் எடுத்து பெருமாளுக்கு காண்பிச்சுட்டு, அதே பாத்திரத்துடன் தாயார் சந்நிதி, அடுத்து நம்ம ஆண்டாள் சந்நிதின்னு போய் வந்து தீர்த்த விநியோகம் ஆரம்பம். தலையில் தடவிக்க ரெடியாக் கை நீட்டுனா..... உள்ளங்கையில் விழுந்தது பால்! நல்ல வேளை அனிச்சையாக் கை தலைக்குப் போகாமல் தலை தப்பிச்சது:-)
திரும்ப வந்து மூலவருக்கு முன் இன்னொரு தீப ஆரத்தி ஆச்சு. திரையும் போட்டாங்க. இதுக்குள்ளே ஒரு பத்திருபது பக்தர்கள் வந்துருந்தாங்க. காலை நைவேத்யமா ரெண்டு ஐட்டம்ஸ் உள்ள வாளி, உள்ளே போனது!

ரெண்டே நிமிசத்தில் பெருமாளின் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. இனி நமக்கு விளம்பறது ஆரம்பம். நமக்கு ஒரு இலை (ப்ரவுன் பேப்பர்) கொடுத்துக்கிட்டே வந்தார் ஒரு தன்னார்வலர். அதைக் கையில் வாங்கிக்கிட்டு வரிசையில் போனோம். சுடச்சுட சாதம், ஒரு ப்ளாஸ்டிக் டம்ப்ளரில் பாயஸம் கிடைச்சது.

புளிசாதம் ஏன் இப்படி இந்தக் கலரில் இருக்குன்னு நினைச்சுக்கிட்டே வாயில் போட்டால் பருப்புப்பொடி சாதம்!! அட! பெருமாளே பருப்புப்பொடி சாதம் சாப்பிடறப்ப எனக்கென்ன கேடு!    ஆஹா  இன்றைய சமையல் அதுதான் :-)

ஆஞ்சி சந்நிதி ஓரத்தில் உக்கார்ந்துருந்தோம். பாதி சாப்பிடும்போதே ஆஞ்சிக்கு திருமஞ்சனம் ஆரம்பிச்சது. சின்ன அண்டா பால்!



சாப்பிட்டு முடிச்சு 'இலை'யைக் குப்பைத்தொட்டியில் போட்டுட்டுக் கையைக் கழுவிட்டு மீண்டும் பெருமாளை க்ளிக்கலாம் என்று போனால்....  அர்த்தமண்டபத்துலே  மூலவர் சந்நிதியை மறைச்சு நீளமான திரை!  திருமஞ்சனத்துக்கான ஏற்பாடு நடக்குது!
கொஞ்ச நேரத்தில் சரேல்னு திரை விலகியது!  பெருமாளும் தாயார்களுமா உற்சவர்கள் திருமஞ்சனத்துக்குத் தயாரா இருந்தாங்க. அந்தந்த நிகழ்வுகளுக்கான அருமையான அமைப்பு!  துளித் தீர்த்தம் கூடத் தரையில் சிந்தாமல் இருக்க,  விளிம்பு கட்டிய பெரிய மேடை, நகர்த்திக் கொண்டு போக சக்கரங்கள்!
இங்கே  யாக குண்டத்துக்கும் சக்கரம் இருக்குத் தெரியுமோ? வேண்டிய இடத்துக்குச் சர்னு நகர்த்திக்கிட்டுப் போகலாம். ஹோமம்  முடிஞ்சதும்  சர்னு உருட்டிக்கிட்டுக் கொண்டுபோய் அதுக்கான  இடத்தில் வச்சுடலாம்.   இதனால் கோவில்  பளிச்!




கோவில் வாத்ய கோஷ்டியினரின் மங்கள இசையுடன் திருமஞ்சனம் நடந்துச்சு.  நாங்களும்     மண்டபத்தில் உக்கார்ந்து   கண்குளிர  திருமஞ்சனம்  கண்டோம்.  பிறகு திரை போட்டு அலங்காரம் ஆரம்பிச்சது.   நாங்க  ஆஞ்சி சந்நிதியாண்டை உக்கார்ந்து  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் மெல்லிய குரலில் வாசிச்சு முடிச்சோம். 
இன்னும்  அர்ச்சனை டிக்கெட் கவுன்ட்டர் திறக்கலை.  'அவனுக்கு இப்ப வேணாம் போல'!  ஆகட்டும்....


கோவில் பிரகாரத்தை வலம் வந்து, நம்ம ஆண்டாளுக்குத் தூமணி மாடம் பாடிட்டுக் கிளம்பிட்டோம்.
சிங்கை வெய்யில், காலங்கார்த்தாலெயே  கடூரமா ஆரம்பிச்சுருது.   பிரஸாதம் வயிறு நிரம்பக் கொடுத்த பெருமாள் ஒரு காஃபியும் கொடுக்கப்டாதோ? 'கோமளாஸ்'குப் போயேன்'னுட்டா ன் :-)

  (அடையார் அநந்த பத்மநாபன் கோவிலில்,  திருவோணம் புறப்பாடு நடக்கும் நாட்களில்,  குளிர் காலமுன்னா டீயும்,   கோடைகாலமுன்னா ஸர்பத்தும்  விநியோகம் உண்டு !)

தொடரும்........ :-)

6 comments:

said...

எங்களுக்கும் தரிசனம் ஆச்சு.

said...

விஸ்வரூப தரிசனம் உங்கள் தயவில் ஆச்சு. ஒரு தடவை அவனை சேவிச்சிருக்கேன். மனைவியோடு அங்கு செல்லவேண்டும்.

காபி டீ எல்லாம் பெருமாள் கோவில்ல எதிர்பார்க்க ஆரம்பிச்சாச்சா. இனி காலையிலேயே ஏன் சாப்பாடு, சாண்ட்விச் போதாதோன்னு கேட்பீங்க போலிருக்கு.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.

நலம் உண்டாகட்டும்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்!

கட்டாயம் ஒரு முறை போகத்தான் வேணும்! பெருமாள் ரொம்பவே அழகு!

ஸாண்ட்விச் கூட நல்லதுதான்..... பேலியோ ஃபாலோ பண்ணி பாதாம் கொடுத்தாலும் தேவலைதான் :-)

நமக்கெது வசதியோ அதுதான் 'அவனுக்கும்' !

நம்ம வீட்டில் காலை காஃபியும் சாயங்காலம் டீ யும் பெருமாளுக்கு உண்டு! அப்புறமும் எதெது வயித்துக்குள்ளே போகுதோ அத்தனையும் அவனுக்குக் காமிச்சுட்டுத்தான் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.