Tuesday, October 16, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 35

1/1/05
இன்னைக்கு மத்தியானம் 12.30க்கு கோபால் வந்துட்டார். சாப்பிட்டதுக்கு அப்புறம் அங்கே போனொம். என்னென்னெ வேலை நடந்துச்சுன்னு
சொன்னேன். கதவுங்களுக்குப் பெயிண்டிங் சரியா இல்லைன்னு ஒரு அபிப்ராயம். என்னன்னு பார்க்கணும். சாயங்காலம் கோவிலுக்குப் போய்வரணும். எல்லாருக்கும் புதுவருசம் நல்லபடியா இருக்கணும்.


2/1
கிங் 11 மணிக்கு வர்றதா ஃபோன் செஞ்சார். அங்கே போனோம். அடுப்புக்குப் பின்னாலெ வைக்கற 'ஸ்ப்ளாஷ் பேனல்' கண்ணாடியை
சரியா வச்சு அதுக்கு சிலிகான் போட்டு ஒட்டிட்டுப் போனார். நாங்க அதுக்கப்புறம் சண்டே மார்கெட் போயிட்டு அப்படியே 'மைட்டர் 10'க்குப்
போய் ஸ்பைரல் லைட் ஒண்ணே ஒண்ணு வாங்கிவந்து போட்டுப் பார்த்தோம். கொஞ்சம் வெளியே நீட்டுதுன்னு ஒரு தோணல்.


அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுட்டு, லைட்டிங் கடைக்குப் போய் ஒடஞ்ச கண்ணாடிக்கு ரீப்ளேஸ்மெண்ட் வந்ததை வாங்கிக்கிட்டு
(பல்பும் குடுத்தாங்க!)வந்தோம்! இந்த பல்பு ஒரு நோணாவட்டம். வெறுங்கையாலெ தொடக்கூடாதாம். நம் கையில் இயற்கையாக இருக்கும்
எண்ணெய்ப்பசை அதில் ஒட்டிருமாம். ஒட்டுனா? அந்த இடம் மட்டும் சூடாகி
பல்ப் வெடிச்சுருமாம். ஒரு டிஷ்யூ பேப்பர்லெ பிடிச்சுக்கிட்டுத்தான் பல்ப் மாத்தணுமாம். ஒரு இஞ்சு நீளம்தான் இருக்கு. இதுக்கு இப்படி ஒரு சவரட்சணை:-)


3/1
இன்னைக்கும் அங்கெ போனோம். இப்ப கிறிஸ்மஸ் லீவு நடக்குது. இவர் 24 தேதிக்குத்தான் வேலைக்குப் போவார். கொஞ்ச நேரம் ச்சும்மா
ஒரு அஞ்சு நிமிஷம் இருந்துட்டு அப்படியே மாஸ்டர் பெட்ரூம்லே இருக்கற ஸ்ட்ரிப் லைட் பல்பு புதுசு போட்டுட்டு வந்தோம். கொஞ்சம் ஃபோட்டோவும்
எடுத்தேன். அதையெல்லாம் இந்தக் கம்ப்யூட்டரில் போடும்போது ரொம்பத் தகராறு!


4/1
காலேல ஒரு 10 மணிக்குப் போய் சும்மாகொஞ்சநேரம் இருந்துட்டு, அப்படியே ஜன்னலுங்க அளவெல்லாம் எடுத்தோம். திரைச்சீலை போடணுமே!
இது ஒரு வேலையத்த வேலை! கண்ணாடியா வைக்கறதாம் அப்புறம் துணியான துணிபோட்டு மூடறதாம்.




மத்தியானம் ப்ளேஸ்மேக்கர் போய் ஷெல்ஃப் பலகை பார்த்துட்டு அப்படியே காய் வாங்கப் போனோம். வாங்கிக்கிட்டு பேசாம வந்திருக்கலாம்.
விதி நம்மளை பீச்சுக்குக் கொண்டு போச்சு! அங்கே ஒரு மரத்துக்கு முன்னாலேதான் பார்க்கிங். ஒண்ணும் தெரியலே. வேற இடத்துலே
நிறுத்தலாம்ன்னு பார்த்தா ஒரு இடம் இருந்துச்சு. அங்கே இடம் இருக்குன்னு இவர்கிட்டே சொல்லிட்டு, அந்த இடத்துக்கு நான் நடந்து போய்கிட்டு இருக்கேன்.


இவர் வண்டியை வேகமா ரிவர்ஸ் எடுத்துக்கிட்டு வந்து என்னைக் கவனிக்காம பின்னாலெ இருந்து மோதிட்டார். அப்படியே கத்திக்கிட்டேக்
கீழே மூட்டையாட்டம் விழுந்துட்டேன். வலி பயங்கரமா இருக்கு. என்னவோ ஆயிருச்சு! கடவுளே, இடுப்பை ஒடிச்சு வச்சுராதே. அதுக்குப்
பதிலா உயிரை எடுத்துக்கோன்னு மனசுலெ கும்பிடறேன்.




இவர் பயந்துட்டார். பக்கத்துலே வந்து தரையிலே உக்கார்ந்துக்கிட்டு அழறார். அக்கம்பக்க ஆளுங்க ( பீச்சுக்கு வந்தவுங்கதான்)உதவி செய்ய
றாங்க. தலைக்கு ஒரு டவல் வச்சாங்க. அதுலெ ஒரு நர்ஸ் இருந்தாங்கபோல. பல்ஸ் எல்லம் செக் செஞ்சாங்க. எனக்கு நினைவு இருக்கு.
ஆனா நகர முடியலே. மயக்கம் வரமாதிரி இருக்கு. இவுங்கெல்லாம் மூஞ்சிலெ தண்ணி தெளிக்கறாங்க! நல்லவேளை விழுந்தப்பத் தலையிலே அடி படலே!



உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டாச்சு. இவரு புலம்பிக்கிட்டு இருக்கார். எப்பப் பார்த்தாலும் ஒரு அசட்டுத்தனமான வேகம்!
இல்லேன்னா அசமஞ்சம்மாதிரி மெதுவா இருக்கறது! இடைப்பட்டமாதிரி இருக்கத்தெரியாதா? எதுக்கு பதபதன்னு பதைக்கறது!




ஆம்புலன்ஸுக்கு முன்னாலே போலீஸ் வந்துருச்சு! இவரோட லைசன்ஸை வாங்கிக்கிட்டாங்களாம்! அதுக்குத்தான் அழுதாருபோல.
அப்புறம் ஆம்புலன்ஸ் வந்துச்சு. எனக்கு கழுத்து அசையாம காலர் போட்டாங்க. அப்படியே தூக்கி ஸ்டெச்சர்லெ வச்சு வண்டியிலெ ஏத்தினாங்க.
நான் நல்ல கனமாச்சே. கஷ்டப்பட்டாங்கன்னு நினைக்கறேன்.



அதுக்கப்புறம்தான் கொடுமை! ஆஸ்பத்திரியிலே போனா சர்ஜரி செய்வாங்கன்னு இப்பவே நரம்பைத்தேடி ஊசி குத்தி வைக்கறாங்களாம்.
எனக்கோ வெயின் சட்டுன்னு கிடைக்காது! பல இடத்துலே ச்சும்மா குத்திக் குத்திப் பாக்குதுங்க! கையெல்லாம் ஓட்டை போட்டுட்டுத்தான்
நிப்பாங்க போல! நேரம் ஓடிக்கிட்டே இருக்கு வண்டி கிளம்புற வழியைக் காணோம். பல்ஸ், பி.பி செக் செய்யறாங்க.வலியோ உயிர்
போகுது.வாந்தி வரமாதிரி இருக்கு. இவர் மகளைப் ஃபோன்லெ கூப்பிட்டு விஷயம் சொன்னார். அப்புறம் யார்கிட்டேயோ ஃபோன்லே
பேசறார். வண்டி ஒருவழியாக் கிளம்புச்சு! வேகமாப் போறபோது படுத்துக்கிட்டே இருக்கறது தலை சுத்துது. ஆபத்து அதிகமில்லைபோல, சைரன் சத்தத்தைக் காணொம்?



ஆஸ்பத்திரிக்குப் போயிட்டோம். டாக்டர், நர்ஸ் வந்து பார்த்துட்டு சில கேள்விங்க கேட்டாங்க. எல்லாம் எனக்கு நினைவு இருக்கான்னு
பாக்கத்தான்! எக்ஸ்ரே எடுத்தாத்தான் தெரியும்ன்னு சொன்னாங்க. மகள் வந்துட்டா.. நண்பர்கள் கணேஷும் , சுபாஷும்
வந்தாங்க. அம்லு அவங்களொடபோய் நம்ம வண்டி பீச்சுலே இருக்கறதைக் கொண்டுவரணும்ன்னு ஏற்பாடு. இவரு ஓட்டமுடியாது, லைசன்ஸ்
இல்லையே! அவுங்க போனப்புறம் போலீஸ் வந்துச்சு. என்ன விவரம், நான் எப்படி இருக்கேன்னு கேட்டாங்க. இவர் எக்ஸ்ரேக்கு காத்திருக்கோம்ன்னு
சொன்னார். என்கிட்டே வந்து எப்படி இருக்கேன்னு எட்டிப் பார்த்தாங்க. ரொம்ப அடின்னா விவரம் தரணும்ன்னு சொல்லிட்டு, இவரோட லைசன்ஸைத் திருப்பித் தந்தாங்களாம்.



மகள் பீச்சில் இருந்துக் காரைக் கொண்டுவந்துட்டாளாம். எக்ஸ்ரேக்குக் கொண்டு போனாங்க. ரெண்டு மூணு எடுத்தாங்க. இன்னும் சில எக்ஸ்ரே எடுக்கணுமாம். நான் விவரம் சொன்னேன்.



அதுக்கு அப்புறம் டாக்டருங்க வந்து பார்த்துட்டு, கழுத்துலே இருக்கற காலரை எடுத்தறலாம். அங்கெ அடி, ஃப்ராக்ச்சர் ஒண்ணும் இல்லேன்னு
சொன்னங்க. அப்பாடா, நரகவேதனையா இருந்தது!




அதுக்கப்புறமும் எனக்கு வலி நிறையவே இருக்கு. வயித்தை அமுக்கோ அமுக்கோன்னு அமுக்கிப் பார்த்துட்டு இன்னோரு எக்ஸ்ரே எடுக்கணும்ன்னு
சொல்லி மறுபடி எக்ஸ்ரே இடத்துக்குப் படுக்கையைத் தள்ளிக்கிட்டே போனாங்க. எப்படா இந்த எழவெல்லாம் முடியும்ன்னு இருக்கு. வலிவேற ப்ராணன் போறமாதிரி இருக்கு.



வலி நிவாரணியா இங்கெ ஆஸ்பத்திரிங்களிலே கொடுக்கறது மார்ஃபின்தான். எனக்கு அது அலர்ஜி. வாந்தி வாந்தியா வந்து இன்னும் வலியை
ஜாஸ்தியாக்கிரும். அது வேணாம்ன்னு சொன்னதாலே டாக்டருங்களுக்கு ஒரே கவலை! வலி எத்தனை நம்பர்ன்னு கேட்டுகிட்டே இருக்காங்க.
வலிக்கு நம்பரா? ஸீரோன்னா வலி இல்லையாம்.10ன்னா ரொம்ப வலியாம்! அது என்ன கணக்கோ? வலியால துடிக்கறவங்களுக்கு அது
10ன்னுதானே தோணும்! 10 எப்படின்னு தெரிஞ்சாத்தானெ மத்த நம்பரைச் சொல்ல முடியும்?


அப்புறமும் ஏன் வலி நிவாரணம் எடுத்துக்கலே? எதுக்காக மார்ஃபின் வேணாம். வாந்திமட்டும் காரணம்ன்னா வாந்தி வராம இருக்க ஒரு ஊசி
போடறோம்ன்னு நச்சரிக்கறாங்க. வலியோ உயிர் போகுது. நானும் மாட்டேன் மாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். அப்புறம்
இன்னோரு மருந்து தரோம். அதுலெ வாந்தி சிலசமயம் வரும், ஆனா ஊசியும் போடறோம்ன்னு சொல்லி அதைக் கட்டாயமாக் கொடுத்தாங்க.



வலி குறைஞ்சதென்னவோ நிஜம். அப்புறம் இன்னோரு ஊசி போட்டாங்க. கொஞ்ச நேரத்துலே இன்னோரு ஊசியும் போட்டாங்க.
நல்லவேளை குத்தலெ. ஏற்கனவே குத்திவச்ச வெயின் ட்யூப் வழியாத்தான் இதெல்லாம்!



இவருக்கு இப்ப பசின்னு நினைக்கறேன். இல்லே இல்லேன்னு சொல்லிகிட்டு நடந்துகிட்டே இருக்காரு. மகளும் இருக்கா. அவளுக்கும் நாளைக்கு வேலைக்குப் போகணுமே. வீட்டுக்குப் போன்னு சொன்னேன். கேக்கலே. அவளைப் போய் சாப்பிட்டுட்டு,
311 போய் பசங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு எனக்கு மாத்துத்துணி கொண்டுவரச் சொன்னேன். சரின்னு போனாள்.




அப்புறம் டாக்டருங்க வந்து பார்த்துட்டு, ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் செய்யணும்ன்னு சொன்னாங்க. இடுப்பிலே இடிச்சதாலெ சிலசமயம்
கிட்னி பழுதாக வாய்ப்பு இருக்காம். அதுக்கு செக் செய்யணுமாம்.
கொஞ்ச நேரம் ஆச்சு. மகள் திரும்ப வந்தாள். ஒரு ஹாட் வாட்டர் பேக் வாங்கி வந்திருந்தாள். ஐய்யோ பாவம் குழந்தைன்னு இருந்துச்சு! கரிசனம் இருக்குன்னு நினைச்சுக் கண் கலங்குச்சு.



அப்புறம் என்னை வீட்டுக்கு விடறதாச் சொன்னாங்க .மணி இப்ப 12க்குமேல் ஆயிருச்சு. ஒருவழியா வீடுவந்து சேர்ந்தோம். இனி 4 மணிக்கு
ஒருதடவை 2 நியூராஃபின் சாப்பிடணும்!
அஞ்சரைமணி நேரம் ஆஸ்பத்திரி வாசம்! யாரு நினைச்சா இப்படியெல்லாம் ஆகும்ன்னு? நல்லவேளை, முடக்காம கடவுள் காப்பாத்திட்டார்.
ஆனா வலிதான் அடங்கலெ!



இவருதான் பாவம்! குற்ற உணர்ச்சியாலெயும், பசியாலயும் தவிச்சுப் போயிட்டார். மணி எட்டானாவே படுக்கைக்குப் போற ஆளு. இப்ப
நேரம் ரொம்ப ஆயிருச்சே!


இதைப்பத்தி ஒரு ரெண்டு பதிவுலே அப்பவே புலம்பியாச்சு:-)
விவரங்கள் இங்கே இருக்குது.








( இந்தப் பதிவுக்குப் படம் இல்லேன்னா பரவாயில்லைதானே குமார் ? :-)


தொடரும்.......................

18 comments:

said...

ஆகா...அடிபட்டிருச்சா...அடடா! வேகம் நல்லதுக்கில்லைன்னு சொல்றாங்களே. பின்னாடி வரும் போதாவது மெதுவா வந்திருக்கலாம். சரி. நடந்தது நடந்து போச்சு. லைசன்ச திரும்பக் குடுத்துட்டாங்களா? ஒங்க ஒடம்பு நல்லாருக்குல்ல.

said...

OOOOOOOOOOOOOOOOOOOOOPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPSSSSSSSSSSSSS.

Anonymous said...

//அதுக்கப்புறம்தான் கொடுமை! ஆஸ்பத்திரியிலே போனா சர்ஜரி செய்வாங்கன்னு இப்பவே நரம்பைத்தேடி ஊசி குத்தி வைக்கறாங்களாம்.
எனக்கோ வெயின் சட்டுன்னு கிடைக்காது!//

எனக்கேன்னமோ இந்த ஊர்ல வெயின் கண்டுபிடிக்கறதுல யாருக்கும் அனுபவம் இல்லையோன்னு தோணுது. இல்ல நம்ம உடம்பு வாகான்னு தெரியலை. எனக்கும் இந்த மாதிரி 2 முறை ஆச்சு. பாவம் கோபால் சார். நல்லா திட்டு வாங்கிருப்பார். அடிபட்ட நீங்களும்தான் பாவம்.

said...

//அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுட்டு, லைட்டிங் கடைக்குப் போய் ஒடஞ்ச கண்ணாடிக்கு ரீப்ளேஸ்மெண்ட் வந்ததை வாங்கிக்கிட்டு
(பல்பும் குடுத்தாங்க!)வந்தோம்! இந்த பல்பு ஒரு நோணாவட்டம். //

இந்தியாவில் நிறையா இடங்களில் வெறும் பல்ப் மட்டும்தான் தந்திருப்பாங்க! :))

//ஒரு டிஷ்யூ பேப்பர்லெ பிடிச்சுக்கிட்டுத்தான் பல்ப் மாத்தணுமாம். ஒரு இஞ்சு நீளம்தான் இருக்கு. இதுக்கு இப்படி ஒரு சவரட்சணை:-)//

இதெல்லாம் ஓவரா இல்லை! அது என்ன சவரட்சணை? கேள்விப்பட்டதே இல்லையே!!

//இவர் வண்டியை வேகமா ரிவர்ஸ் எடுத்துக்கிட்டு வந்து என்னைக் கவனிக்காம பின்னாலெ இருந்து மோதிட்டார். //

கவனிக்காமன்னு சொன்னாராக்கும்? :))

//பக்கத்துலே வந்து தரையிலே உக்கார்ந்துக்கிட்டு அழறார். //

செஞ்ச வேலையைச் சரியாச் செய்யலையேன்னு வருத்தம் போல! :))

///ஆபத்து அதிகமில்லைபோல, சைரன் சத்தத்தைக் காணொம்?//
சில சமயங்களில் லைட் மட்டும்தான் போடுவாங்க. பொதுவா அது தெரியக்கூடிய நேரங்களில். சந்திப்புகளில் மட்டும் கொஞ்சம் சத்தம். அப்படி இருந்திருக்கலாம்.

//எப்படா இந்த எழவெல்லாம் முடியும்ன்னு இருக்கு. //
அதான் அடி பலமா இருக்குன்னு ஆரம்பிக்கவே இல்லையே அப்புறம் என்ன முடியறதைப் பத்திப் பேச்சு! :))

//10 எப்படின்னு தெரிஞ்சாத்தானெ மத்த நம்பரைச் சொல்ல முடியும்?//

ஆமாங்க. நானும் பல முறை நினைச்சு இருக்கேன். இப்படி நம்பரிலோ அல்லது அழுவாச்சி முகங்களையோ வெச்சு கேட்கும்போது அது எப்படிச் சொல்ல? ஆதியும் அந்தமும் தெரிஞ்சாத்தானே நாம இருக்கிற இடம் தெரியும். இல்லை நம்ம வலிதான் பெருசுன்னு 10ஆம் நம்பர் போடத்தானே தெரியும்...

//இந்தப் பதிவுக்குப் படம் இல்லேன்னா பரவாயில்லைதானே குமார் ? //

கோபால் அழுதா மாதிரி படம் கேட்க நினைச்சேன் அப்புறம் டெய்லி நடக்குற விஷயத்துக்கு எல்லாமா படம் போடுவாங்கன்னு நானே சொல்லிக்கிட்டேன். ஹிஹி...

said...

வாங்க ராகவன்.


ஒடம்பு நல்லா (தான்) இருக்கு. முதுகெலும்பு வரிசையில் 12வது எலும்புலெ ஒரு பக்கம் கொஞ்சம் நசுங்கி இருக்காம். இன்னமும் தினசரி வலிநிவாரண மருந்து முழுங்கிக்கிட்டுத்தான் இருக்கேன்.

வண்டி ஓடறவரை ஓடட்டும்னு இருக்கேன்ப்பா.

லைசன்ஸ் திருப்பிக் கொடுத்துட்டாங்க.

said...

வாங்க இளா.

ஒரேதா பயந்துறாதீங்க. விபத்து சொல்லிக்கிட்டா வருது?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இங்கே இது நிஜமாவே ஒரு ப்ராப்ளம்தான்.

நம்ம டாக்டர் ஒரு முறை இப்படித்தான் ரத்தப் பரிசோதனைச் செய்யச் சொன்னப்ப அங்கெ இருக்கும் நர்ஸம்மாகிட்டே ரத்தம் கொடுங்க. அவுங்க அனுப்பிருவாங்கன்னு சொன்னாங்க. நானும் ஒரு நடை மிச்சமுன்னு நர்சம்மாகிட்டெ தெரியாத்தனமாக் கையை நீட்டிட்டேன். மூக்குக் கண்ணாடி மூக்கு நுனியில் தொத்திக்கிட்டு இருக்கும் ரொம்ப வயசான நர்ஸம்மா, ஒரு நாலைஞ்சுவாட்டி இங்கே அங்கேன்னு குத்திப் பார்த்துட்டு, அப்பப்ப oops, sorry எல்லாம் சொல்லிக்கிட்டே இந்தக் கையிலெ சரியா வெயின் கிடைக்கலை. அடுத்த கையைக் காமின்னதும், உஷாராயிட்டேன். ஆளை விடும்மா தாயி. நான் லேபுக்கே போயிக்கறேன்னு தப்பிச்சு ஒடுனேன்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

குமார் சொல்லிட்டாருன்றதுக்காக வரிக்கு வரி படிச்சுட்டீங்க:-)))))

சவரட்சணைன்னு சொல்றது ஒரு பேச்சுவழக்குதான். சம்ரட்சணைதான் சரியானதா இருக்கணும்.

உங்க மற்ற சந்தேகங்களுக்கு 'பாம்பின்கால் பாம்பறியும்' என்பதுதான் பதில்:-)))

said...

உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டாச்சு. இவரு புலம்பிக்கிட்டு இருக்கார். எப்பப் பார்த்தாலும் ஒரு அசட்டுத்தனமான வேகம்!
இல்லேன்னா அசமஞ்சம்மாதிரி மெதுவா இருக்கறது! இடைப்பட்டமாதிரி இருக்கத்தெரியாதா? எதுக்கு பதபதன்னு பதைக்கறது!

அடிபட்டாலும் ...லு போகாத மாதிரி இருக்கே? :-))
படித்து முடிக்கும் போது(பின்னூட்டத்தையும் சேர்த்து) இரண்டு கண்ணிலும் நீர்,சும்மா சொல்லக்கூடாது இ.கொத்தனார் போட்டு உழுதிருக்கார்.சிரிப்பை நிறுத்த முடியவில்லை.
அதான் லைட் படம் போட்டுவிட்டீர்களே அது போதும்.

said...

வாங்க குமார்.

போன வகுப்புலே தூங்கிட்டார் கொத்ஸ்ன்னு சொன்னீங்க. இப்பப் பாருங்க, பிரிச்சு மேயறதை:-)))))

said...

ஐயையோ டீச்சர் இப்படியாயிடுச்சே... இப்ப பரவாயில்லையா? இப்படி ஆயிடக்கூடாதுன்னு பயந்துதான் நான் எந்த வண்டியும் ஓட்டறதில்லை. சாரா கொஞ்சம் கவனமா வண்டியோட்ட சொல்லுங்க.

said...

ஐயோ பாவம் துளசி. எப்படி வலிச்சிருக்கும்.
கோபாலை நினைச்சா இன்னும் பாவமா இருக்கு.

விபத்து சொல்லிக்கிட்டா வரும்.
ஆஸ்பத்திரி, நரம்பு ,ஊசி .....சாமி ,அந்த ஐந்தரை மணிநேரம்
மஸ்ட் ஹேவ் பீன் ஹெல்.


இப்பவும் அந்த அதிர்ச்சி போகலைன்னா எத்தனை ஷாக் பாருங்க.
விழுந்தாலே பேச்சு கட் ஆயிடும்னு நினைக்கிறேன்.

இனிமேக்கொண்டு ஒண்ணும் வராது.

said...

வாங்க ஆடுமாடு.

இப்ப எவ்வளவோ பரவாயில்லை.

வண்டி ஓட்டாம இங்கே இருக்கறதுக் கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் ச்சின்னப்பிள்ளைங்க இருக்கும் வீடுன்னா....அதுகளை அங்கே இங்கெ கொண்டுபோக வண்டி ஓட்டித்தான் ஆகணும்.

இங்கெல்லாம் 15.5 வயசு முடிஞ்சதும் லேர்னர்ஸ் லைசன்ஸ் எடுக்கலாம்.இதுக்குப் படிச்சு பரிட்சை எழுதணும்.அதுக்கப்புறம் மூணு மாசம் கழிச்சு ப்ராக்டிக்கல் ட்ரைவிங் டெஸ்ட்.

பசங்க 16 வயசுலெயெ கார் ஓட்டுதுங்க.

said...

வாங்க வல்லி.

//விழுந்தாலே பேச்சு கட் ஆயிடும்னு நினைக்கிறேன்//

?????


ஆமாம்ப்பா. அதான் எழுதிக் காமிக்கறேன்:-)))))

said...

சீக்கிரமே குணமாக இறைவன் துணை கிட்டட்டும். பாவம் கோபால் - ரொம்பத் திட்டிடாதீங்க. மெதுவச் செஞ்சாலும் திட்றீங்க - அவர் என்ன தான் செய்வாரு ...

சற்றே பருமணான உடல்களில் ரத்தம் எடுப்பதென்பது சற்றே சிரமம் தான் - இந்தியாவிலும் கூடத்தான்

ஆஸ்பத்திரியில் ஐந்தரை மணி நேர நரகத்தை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்

said...

ம் .. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க போலயே..:(

என் மகளுக்கு ஒரு சின்ன ஆபரேஷன் அப்ப நர்ஸ் உள்ள எங்க கிட்ட சொல்லாம ஒரு கையில் வெயின் எடுத்து ஊசி மாட்டிட்டா நான் டாக்டர்கிட்டபேசிட்டு உள்ளே போறேன் ... அந்த அவசரக்குடுக்கை எந்த கையில் ஆபரேசனோ அந்தகையில் போட்டிருக்கா.. பாவம் மகள் ஒரே அழுகைதிருப்பி யுமான்னு ... :(

said...

வாங்க சீனா,

பருமனா இருந்தாக் கஷ்டம்தான். சிலபேருக்கு ஒல்லியா இருந்தாலும் இப்படி ஆகிருது.

நான் ரொம்பக் குச்சியா இருந்த காலத்திலும் இதே நிலமைதான்.
கையின் வெளிப்புறத்தில்தான் நரம்பு பளிச்சுன்னு தெரியும். ஆனா அங்கெ எடுத்துக்கச் சொன்னா இவுங்களுக்கு ரொம்ப யோசனை.

said...

வாங்க முத்துலெட்சுமி.

பாவம்.குழந்தை. வலியாலெ துடிச்சுப் போயிருக்குமேப்பா(-:

இப்ப நலம்தானே?