கண் முழிக்கும்போதே மனசு பரபரன்னு இருக்கு. இன்னிக்கு 'லேடீஸ் டே அவுட்'. இவருக்கு வேலை சம்பந்தமான ஒரு 'வேலை' இருக்காம். நவீன்கிட்டே ஏற்பாடு செஞ்சாச்சு...இவரை 'அங்கே' கொண்டுபோய் விட்டுட்டு வந்து 'எங்களை' பிக் பண்ணிக்கணும்.
காலையின் வேலைக்குப் போகும் வழியில் தென்றலின் ரங்ஸ்க்கு ஒரு கடமை இருக்கு. தங்க்ஸைக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கணும். எல்லாம் சொன்னது சொன்னபடிக்கு!
'ச்சலோ சார்மினார்' னு புறப்பட்டோம். வளையல் யாவாரம் பரபரப்பா நடக்கும் இடம். புதுகைத் தென்றலுடன் உல்லாசமாய்ப் பேசிக்கிட்டே அவுங்களுக்குத் தெரிஞ்ச கடைகளுக்குப் போனோம். கண்ணாடி வளையல்கள் கலர்கலரா ஜொலிக்குது. எதை வாங்க எதை விட?
சார்மினார்ஹைதையில் பரபரப்பே இல்லாம ஒரு 'ஸப் ச்சல்த்தா ஹை'ன்னு கொஞ்சம் சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை போல! கடைகள் கண் திறக்கவே காலை பதினொரு மணி ஆகிருது. மகளுக்கும், இன்னொரு தோழிக்குமாகக் கொஞ்சம் வளையல்கள் வாங்கிக்கிட்டோம். எனக்குன்னு வாங்கிக்கலை. கண்ணாடி வளையல்கள் ஆசை மனசை விட்டுப்போய் பல வருஷங்கள் ஆகியிருந்துச்சு.( இதுக்குப்பின்னே ஒரு கதை இருக்கு. அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறில்' சொல்வேன்) நாம் சிலுப்பும் சிலுப்புக்குன்னு ஒரு மோர் மத்து வாங்கினேன். கடைஞ்சுறமாட்டேனா இனி:-))))
அங்கே இங்கேன்னு கொஞ்சம் க்ளிக்கினேன். 'பளிச்'ன்னு தேங்காய்ச் சில்லுகளை அழகா அடுக்கி வச்சுருக்கார் வண்டிக்காரர். மீந்து போச்சுன்னா என்ன செய்வார்? பக்கத்துலேயே ஒரு டப்பாவில் தேங்காய் மிட்டாய் இருப்பதைப் பார்த்து வச்சுக்குங்க:-)))) பச்சைப் பசேலுன்னு கீரைகள், காய்கறிகள், குண்டுகுண்டாக் கொய்யாப் பழங்கள், திருவிழாவில் பொரிகடலைக் குவியல்போல கூடைகளில் குவிச்சுவச்சுருக்கும் வளையல்கள் இப்படி. ஒரு இடத்துலே ஏதோ கிழங்கு, சின்ன வவ்வால்களை அடுக்கிவச்ச மாதிரி ஒன்னு வயலெட் நிறத்துலே இருக்குது. என்னவோ பெயர் சொன்னார் விற்பனைப் பையர். மனசுலே பெயர் தங்கலை(-:
குட்டி வவ்வால்?
முத்து பவழம் விற்கும் ஒரு கடையில் ரெகுலர் கஸ்டமராம் நம்ம தென்றல்! பவழச் சரங்கள் விலை சல்லிசாத்தான் இருக்கு. சின்னதா 100 பவழம் இருக்கும் சரம் 330 ரூபாய்தானாம். தய்வானில் இருந்து வருதாம். மகளுக்கு ஒரு கழுத்தணி வாங்கினேன். கடைகண்ணிகள் ரொம்பத் தாமதமாத் திறப்பதால் வியாபாரம் மாலை நேரங்களில்தான் சூடு பிடிக்குமாம். அதுவும் ரம்ஜான் காலங்களில் இரவு 12 வரை கடைகள் திறந்துருக்குமாம்.
மணி ஒன்னு ஆகப்போகுது. தென்றலின் செல்வங்கள் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துருவாங்கன்னு ஷாப்பிங்கை அ(த்)தோடு அப்படியே முடிச்சுக்கிட்டு அறைக்கு வந்து கோபாலையும் கூப்புட்டுக்கிட்டுப் பகலுணவுக்கு ஓடுனோம்.
வேலை முடிஞ்சு டாக்ஸியில் அறைக்கு வந்தவர் இணையத் தொடர்பு கிடைக்கலையே அதோட மாரடிச்சுக்கிட்டு இருந்துருக்கார். மூணுநாளா இதே கதிதாங்க. ஹொட்டேல் ரிஸப்ஷனில் நிறைய தடவை புகார் செஞ்சாச்சு. கம்ப்யூட்டர் ஆளு வந்தவுடன் அறைக்கு அனுப்பறோமுன்னு சொல்லிக்கிட்டேக் காலத்தை ஓட்டிட்டாங்க. கடைசியில் பார்த்தா...... நெட் கனெக்ஷனுக்குன்னே அங்கே மேசையடியில் ஒரு ஸ்விட்ச் இருக்காம். அது பவர் போனதும் நின்னுருமாம். பவர் வந்ததும் அதை மீண்டும் தட்டிவிட்டாத்தான் அறைகளில் இணையத்தொடர்பு கிடைக்குமாம். கவனமா மறந்துட்டாங்களாம். தட்டாம விட்டதுதான் தப்பாப் போயிருச்சு.
போதுண்டா சாமி......
சிக்கந்தராபாத் போய், தென்றலுக்கு ஆகிவந்த ஒரு உணவகத்துலே பகலுணவு ஆச்சு. 'தாலி' மீல்.:-))))) பிள்ளைகள் வந்துருப்பாங்களேன்னு அடிச்சுப்பிடிச்சு ஓடுனோம். ஆஷிஷ் & அம்ருதா ரொம்ப சமர்த்தா சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஸ்நாக்ஸ் மட்டும் சமையலில் சேராதா என்ன? கொஞ்சநேரம் அவுங்களோடு இருந்துட்டுப் பிரியாவிடை பெற்றோம்.ஸ்நாக்ஸ் சமையல்!
ஹுஸைன்சாகரில் கால்கடுக்க நிற்கும் புத்தரை இதுவரைப் படம் எடுக்கலை. சரியான கோணம் (வண்டியில் போகும்போதே எடுக்கலாமுன்னா) அமையலை. இந்த ஏரியில் இருந்து அடிக்கடி மூக்கைப் பொத்திக்கும் மணம் ஒன்னு வீசுது. நாம் போன நாட்களில் இது...... ஐயோ.... படகு ஒன்னு புத்தர் காலடி வரை கொண்டு போகுதாம். மூச்சு இருந்தாத்தானே 'நடந்ததை' எழுதமுடியும்? வேண்டாத ரிஸ்க் வேணாம்.....
ராமதாஸு
பனி மூட்டமா? மசமசன்னு நிக்கிறாரே புத்தர்! தியாகையர்
ஏரிக்கரைச் சாலையில் ஒரு ரவுண்டு போனோம். மெரினாவுக்கும் இதுக்கும் ஒத்துமை நிறைய. சிலைகளான சிலைகள். 33 இருக்காம். சாம்பிளுக்காக இதோ ரெண்டு. 'சீதைக்கு மடிமேல் இடம் கொடுத்த ஸ்ரீராமன், லக்ஷ்மணனோடு இருக்கும் தியாகைய்யர், பக்த ராமதாஸ் (பித்தன் வாக்கு, கவனிக்கவும்) விவேகானந்தர் இப்படி சிலரைப் புடிச்சுக்கிட்டு லும்பினி பார்க் வழியாப் போனப்ப..... 'லேபாக்ஷி' னு கண்ணுலே பட்டது. கைவினைப்பொருட்களுக்கான கண்காட்சி & விற்பனை. வாசலில் டெர்ரக்கோட்டா பொருட்கள் குவிஞ்சு கிடக்கு. ஒன்னொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. நானும் (கெமெரா கண்ணில்) அள்ளிக்கிட்டேன்.
கத்வால் புடவையாம். புடவையை விட அதைச் சுருட்டி வச்சுருக்கும் விதம்? பரோட்டாவுக்கு மாவை நீளமா உருட்டுவோம் பாருங்க. அதைப்போல அந்த ஆறுகஜத்தையும் உருட்டி, பாம்பாட்டம் வச்சுருக்காங்க. அஞ்சடி நீளப் பாம்பு!
போச்சம்பள்ளி, வெங்கடகிரி இப்படி எல்லா ஊர்ப் புடவைகளும் தனித்தனி ஸ்டால்களில். பாவம்........ஆண்கள்ன்னு ஒரு கதர் ஷர்ட்(ரெடிமேட்) ஸ்டால். சின்னதாக் கொஞ்சமா ஒரு ஷாப்பிங் நமக்கு. விலை கொஞ்சம் மலிவ்வாத்தான் இருக்கு நம்ம சென்னையைவிட. அதுக்காக..... வாரிக்கிட்டு வரமுடியுதா என்ன?தென்றலோடு போகும் வழியில் அங்கே ஹைதையில் இருக்கும் ஏராளமான மேம்பாலங்கள் ஒன்றின் சமீபம் அழகான கோவில் ஒன்னு கண்ணில் பட்டது. நவீனிடம் சொல்லி அங்கே போனோம். கோபுரவாசலுக்கு நேர் எதிரா பிள்ளையார். அவருக்கு இடப்பக்கம் தனிச்சந்நிதியா ரெண்டு மனைவிகளுடன் முருகன், அவருக்கு இடப்பக்கம் உமா மகேஸ்வரன்(லிங்க ரூபம்) அடுத்த சந்நிதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இப்படி தனித்தனியா ஒவ்வொன்னும் ஒரே திசையைப் பார்த்து! சிவலிங்கத்துக்கு எதிர்ப்புறம் பெருசா ஒரு நந்தி. அதுக்குப் பின்னால் ஒரு கொடி மரம். அதுகுப் பின்னால் தெற்கே பார்த்தமாதிரி ஒரு ஹனுமன். அஞ்சு அடி இருக்கலாம். சிவந்த மூக்குடன் சேவை சாதிக்கிறார். அவருக்கு எதிர்ப்புறம் நவகிரக சந்நிதி.
எல்லா சந்நிதிகளிலும் ஒவ்வொரு குருக்கள் இருந்து பக்தர்களுக்கு தீர்த்தமும் சடாரியும் தர்றாங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு. பெருமாள் கோவிலுக்கே உரிய இந்தச் சடங்குகள் இங்கே..... எப்படி? அதிலும் நவகிரக சந்நிதிக்கும் தீர்த்தமும் சடாரியுமுன்னா...... பேஷ் பேஷ்!
கொடிமரத்தின் பக்கத்தில் கொஞ்சநேரம் உக்கார்ந்தோம். கண் எதிரில் ஒரு அறிவிப்பு எழுதி வச்சுருக்கு. இடது பக்கம் முக்கால்வாசி தெலுங்கிலும் வலப்பக்கம் ஆங்கிலத்திலும். கண்ணால் மேய்ஞ்சேன். ஒரே ஜிலேபி. ஊஹூம்..... வேலைக்காகாது. ******* ரூபாய் மட்டும் புரியுது. ஆங்கிலத்தில் அதே விஷயம். அப்பாடா..... இந்த ஆறு சந்நிதிக்கும் மேலே இருக்கும் கோபுரங்களுக்குத் தங்கக் கவசம் போர்த்தணுமாம். ******* செலவாகும். இதுக்குக் கொடுக்கறவங்க கொடுங்க.
ஆமாம்....இந்தக் கோவிலுக்குப் பெயர் என்ன? அறிவிப்பின் தலைப்பிலே ஜிலேபி. எழுத்துக்கூட்டிப் படிக்க 'முயற்சி' செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஸ்ரீ தெரியுது. பாக்கி? படிக்கத் தெரியாததுக்கு வாழ்க்கையில் முதல்முறையா நொந்துக்கிட்டு, மறுபடி வீட்டில் இருக்கும் ஃபைல்களில் கவனம் செலுத்தணுமுன்னு தீர்மானம் செஞ்சுக்கிட்டேன்.
அப்பப் பார்த்து ஒரு பெண்மணி கொடிக்கம்பம் அருகில் வந்து நிக்கறாங்க. ஒரே நொடி.. மானம் அவமானம் பார்த்தா வேலைக்காகாது......
" ஏமண்டி.... நா(க்)கு ச்சதுவேதானிகி (அந்தகா) ராது. அக்கட ஏமி ராஸியுந்தி?"
என்னை ஏற இறங்க (இரக்கமா ) ஒரு பார்வை பார்த்துட்டு 'ஸ்ரீ ஸ்ரிங்கேரி ஷாரதா பீடம் ஸ்ரீ சித்திவிநாயகா தேவஸ்தானம்'.
ஆஹா......
ரெண்டு எட்டு எடுத்து உள்ளே போனவங்க மறுபடி எங்ககிட்டே வந்தாங்க. அப்பத்தான் முகத்தைக் கவனிக்கிறேன். மனசு முழுசும் சந்தோஷம் பொங்கித் தளும்பி முகத்தில் வந்து நிக்குது. அச்சச்சோ.... எனக்குப் படிக்கத் தெரியலைன்னா அதுக்கு இவ்வளோ சந்தோஷப்படுவானேன்?
(பதிவர் நலம் கருதி நடந்த உரையாடலைத் தமிழில் கொடுத்துருக்கேன்)
எங்கே இருந்து வந்துருக்கீங்க? இங்கே சொந்தக்காரர்கள் இருக்காங்களா?
சென்னையில் இருந்து. (பதிவர் குடும்பத்தைப் பத்தி என்னன்னு விளக்குவது?) முதல்முறையா இங்கே வந்துருக்கோம்.
இந்தக் கோயிலைப் பார்க்கவா?
ஊரைச் சுத்திப் பார்க்கலாமுன்னுதான்.
எங்கே தங்கி இருக்கீங்க?
ஹொட்டேலில்தான்.
என்னென்ன பார்த்தீங்க?
அட ராமா..... சார்மினார் கோல்கொண்டா, ம்யூஸியம் எல்லாம் ஆச்சு.
எனக்கு ரெண்டு பசங்க. உங்களுக்கு?
ஒரு பொண்ணு.
ரெண்டு பையன்களில் பெரியவன், அவுங்க அப்பாகூடவே இங்கே பிஸினஸ் பார்த்துக்கறான். ரெண்டாவது பையன் அமெரிக்காவிலே. நாளன்னைக்கு வரான். இப்பதான் கொஞ்ச நேரமுன்னே ஃபோன் செஞ்சு சொன்னான்.
ஆஹா.... அப்படிப்போகுதா சேதி..... மகன் வரும் நல்ல சேதியைப் பகிர்ந்துக்கச் சாமியைத்தேடி வந்துருக்காங்க!
இன்னிக்கு 'ஆண்டியையும் அங்கிளையும்' இங்கே பார்க்கணுமுன்னே அந்த ஆண்டவன் என்னைக் கோவிலுக்கு வரவழைச்சுருக்கான், பாருங்க ஆண்ட்டி.'
தாயாரும் பெருமாளுமா வந்துட்டோம் போல! உங்க பெயர் என்னங்க?
புண்ணீயவதி.
ஆஹா....ரொம்பப் புண்ணியம் பண்ணவங்கதான். என் பெயர் துளசி.
நான் தினமும் துளசி பூஜை பண்ணுவேன் 'ஆண்ட்டி'.
அந்தப் புண்ணியம்தான் துளசியை நேரில் பார்த்துட்டீங்க. சாமிக்கு ஒரு எக்ஸ்ட்ரா நமஸ்காரம் பண்ணிக்குங்க. அப்புறம் பார்க்கலாம். வரட்டா?
இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் இருந்துருந்தா வீட்டுக்கேக் கூப்புட்டுட்டு போயிருப்பாங்க போல. முன்பின் அறிமுகம் இல்லாத ஆட்களிடம் எப்படி ரெண்டே நிமிசத்தில் குடும்ப விஷயம் எல்லாம் பகிர்ந்துக்கத் தோணுது? ஒருவேளை...வெளியூர்க்காரரா இருப்பதே ஒரு இணக்கத்தைத் தந்து அணுக வைக்குதோ?
மனிதமனமே விசித்திரங்கள் நிறைஞ்சது. சிலரைப் பார்த்தவுடனே மனசுக்கு வெறுப்பும், சிலரிடம் அன்பும், சிலரிடம் மரியாதையுமா என்னென்னவோ தோணிப்போகுது. இத்தனைக்கும் அவுங்களை நம்ம வாழ்வில் முதல்முறையாச் சந்திச்சு இருப்போம்!
அறைக்கு வந்து மூட்டை கட்டும் சமாச்சாரங்களை முடிச்சுட்டு காலையில் எழுப்பறதுக்கு ஒரு அலார்ம் கால் புக் பண்ணினோம். க்வாட்டர் டு ஸிக்ஸ்.
அஞ்சே முக்கால்ன்னும் ஒருதடவை அழுத்திச் சொல்லியாச்சு.
ஒம்பொது நாற்பதுக்கு ப்ளைட்.அப்படியே பின்னாலே கணக்குப் போட்டுக்கிட்டே போனால் ஏழரைக்குக் கிளம்புனாச் சரியா இருக்கும்................(ஃப்ரேமுக்குள்ளே அடங்கமாட்டேன்னா எப்படி?)
தொடரும்....:-)
Saturday, November 21, 2009
வாங்கலாம்.... வாங்களேன்
Posted by
துளசி கோபால்
at
11/21/2009 05:33:00 PM
43
comments
Sunday, November 15, 2009
தென்றலுடன் உறவாடு
எங்கியாவது ஒரு ஊருக்குக் கிளம்பலாமுன்னா, மனசுக்குள்ளெ முந்திக்கிட்டு வந்து நிக்கும் முதல் கேள்வி..... 'அங்கே நம்ம 'மக்கள்ஸ்' யாராவது இருக்காங்களா?'
போகலாமுன்னு முடிவானதும் மயிலைத் தூதுவிட்டேன். மூணுநாள் போதுமா? பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் பளிச்ன்னு மயிலில் வந்தது. கூடவே, 'எங்க வீட்டில் வந்து தங்குங்க' என்ற விசேஷ வரிகளுடன்! ஆஹா......
இந்திய வழக்கப்படி ஒன்னேகால் மணி நேரம் தாமதமாப் புறப்பட்ட விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். ஒரு மணி நேரப் பயணம். ஆனால் அங்கே இருந்து நகருக்குள் போக ஒரு மணி நேரம் ஆச்சு. அட்டகாசமான விமான நிலையம். எல்லாமே பளிச் பளிச். அசப்புலே ப்ரிஸ்பேனை நினைவுபடுத்தியது, ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம். பூக்களும், செடிகளும் பச்சைப்பசேல்களுமா இருந்த பகுதியைக் கடந்து வெளியே போய்க்கிட்டு இருந்த வண்டி,( தோழி ஏற்பாடுதான் இதுவும்) சின்னதா இருந்த சில பேட்டைகளைக் கடந்து (இதெல்லாம் இன்னும் சில வருசங்களில் ஜகஜகன்னு ஆகப்போகும் அறிகுறிகள் ஏற்கெனவே தெரிய ஆரம்பிச்சு இருக்கு)ஒரு மேம்பாலம் மீது ஏறுச்சு. அவ்ளோதான். போய்க்கிட்டே இருக்கோம். ஆசியாவிலேயே மிகவும் நீண்ட மேம்பாலமாம். 11.6 கிலோமீட்டர்கள். பளிச்சுன்னு அப்படி ஒரு சுத்தம். நல்ல அகலமா நாலு லேன். ஊர் எல்லைவரை கொண்டுவந்து விட்டுருது. ஊருக்குள் நுழைஞ்சதும் கண் போன இடங்களில் எல்லாம் பச்சையும் வெண்மையுமான நிறங்களில் மசூதிகளின் மினாராக்கள். பழைய ஊர் என்பது பார்த்ததும் தெரியுது. இந்திய நகரங்களுக்கே சொந்தமான ஒழுங்கீனமான போக்குவரத்து, தெருவோரக்குப்பை இதுக்கெல்லாம் ஒரு குறைவும் இல்லாமல் எல்லாம் பரிபூரணம்.
இந்த ஊரை நிர்மாணிச்சப்ப இதன் பெயர் பாக்யநகர். 1592 வது வருசம் நிர்மாணம். சின்ன வீட்டைப் பெருமைப்படுத்த அரசர் Mohammed Quli வச்ச பெயர். இவரோட ஹிந்து மனைவி பாக்மதி. (மனைவிக்காக ஒரு ஊரையே கட்டிக் கொடுத்துருக்கார். என்ன இருந்தாலும் ராஜான்னா ராஜாதான்)இதைப்பற்றி அப்புறம் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம். இப்போதைய 'கதை'க்கு வர்றேன்.
கட்ரியா வரவேற்புக் கூடம். இதுமட்டும்தான் ஜோர். மத்த புலம்பல்களை அப்புறம் வச்சுக்கறேன்
கட்ரியா ஹோட்டேலில் ரூம் போட்டுருந்தோம். அறைக்குள் நுழைஞ்சப்ப ரெண்டரை மணி. மூணரைக்கு ரெஸ்டாரண்ட் மூடிருவாங்களாம். 'குச்சிப்புடி' ஆடலாமுன்னு போனோம். செட்டிநாடு ரெஸ்டாரண்டுகளை நினைவுபடுத்தும் தூண்களும் உள் அலங்காரங்களும். சப்பாத்தி சாப்பிட்டவர் தப்பிச்சுக்கிட்டார். ஆப்பம் கேட்ட நாந்தான் நொந்து போயிட்டேன். திக்கா ஒரு தோசை, ஆப்பம் என்ற பெயரில் வந்துச்சு. அதைத் திருப்பி அனுப்பிட்டு ஆப்பம் என்றால் எப்படி இருக்கணுமுன்னு ஒரு லெக்சர் கொடுத்தேன். அதே புளிச்ச மாவில் கொஞ்சம் மெத்துன்னு ஒன்னு வந்துச்சு. போகட்டும். கறுப்புப் பட்டியலில் சேர்த்தேன். குச்சிப்புடியில், உங்க டீச்சரை இப்படிக் குச்சியைக் கையில் எடுக்க வச்சுட்டாங்களே(-:தென்றலைக் கூப்பிட்டேன். மகன் பேசுனார். (பயந்துட்டாராம். 'டீச்சர்'ன்னு செல்லில் பெயர் வந்துருக்கு!) ராச் சாப்பாட்டுக்குச் சந்திக்கலாமேன்னு நேரம் குறிக்கப்பட்டது. அதுக்குள்ளேயே, கொஞ்ச நேரத்துலே தென்றலில் ரங்க்ஸ் தொலைபேசினார். அவரே வந்து நம்மைக் கூட்டிட்டுப் போவாராம். உடனே வந்துட்டார். தில்லக்கேணிக்கார'ராம்'
அரசர்கள் காலத்துலே முத்திரை மோதிரம் காமிக்கும் வழக்கம், இப்போ இப்படி:-)
ஹைதராபாத், சிக்கந்தராபாத் இப்படி ரெண்டு ஊர்களுக்கு நடுவிலே பிரமாண்டமான பெரிய ஏரி. புத்தர் நின்னுக்கிட்டு இருக்கார். சுற்றிக்கிட்டு வீடு போய்ச்சேர்ந்தோம். "ஹை...நான் துளசி". "ஹலோ நான் புதுகைத்தென்றல்" என்னதான் இணையத்தொடர்புன்னாலும் 'அரி' முகம் செஞ்சுக்கணுமுல்லே. சிரிச்ச முகத்துடன் வந்து வரவேற்றார்கள் ஆஷிஷ் & அம்ருதா.
காலங்காலமா தினம்வந்துபோய்க்கிட்டு இருப்பவர்களை நீங்க பார்த்துருக்கீங்களா? இல்லையா!!! அடடா மிஸ் செஞ்சுட்டீங்களே..... அப்போ, அங்கே வந்துருக்கணும்:-)தென்றலின் கைவேலைப்பாட்டில் நம்மவர்:-)
முக்கியமாக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு.' பிள்ளைகளைச் சான்றோர் எனக் கேட்ட தாய்' என்பதைவிட 'பிள்ளைகள் நல்ல பழக்கவழக்கம் உள்ளவர்களா இருப்பது'தான் உண்மையிலேயே ஒரு தாய்க்குப் பெருமை தரும் விஷயம். வெறும் கல்வியில் மட்டும் கெட்டிக்காரர்களா இருந்துக்கிட்டு, மரியாதை கொஞ்சம்கூட இல்லாமல் கெட்டுக் கிடக்கும் பிள்ளைகளை இங்கே, சென்னை வாழ்க்கையில் சமீபத்தில் கொஞ்சம் நிறையவே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சதில் மனம் நொந்து போய் இருந்தேன். அதுவும் பொது இடங்களில் இவர்கள் நடந்துகொள்ளும் விதம் இருக்கே...... அப்பப்பப்பா...(-:
சும்மாச் சொல்லக்கூடாது இந்த பேரண்ட்ஸ் க்ளப் உரிமையாளரை. பிள்ளைகள் இருவரும் 'வெல் மேனர்டு கிட்ஸ்'. இன்னும் கொஞ்சநேரம் அவர்களோடு இருக்கலாமேன்னு ஆசை வந்ததென்னவோ நிஜம்.
மசாலா டீ ரெடியாகும்போதே இந்த ஜென்மத்துப் பேச்சுகளில் முக்கால்வாசி முடிஞ்சுருச்சு. பிள்ளைகள் படபடன்னு 'ஹோம் ஒர்க்' முடிக்கும் அவசரத்தில். ரெண்டு ரங்ஸ்களும் ட்ராவல் வண்டி ஏற்பாட்டில். அதுவும் தென்றலின் ரங்க்ஸ் அதிவேகமாக நமக்காக ஒரு ஐட்டினரியைப் பக்கவாப் போட்டுக் கொடுத்துட்டார்.வீட்டை அட்டகாசமா அலங்கரிச்சு 'பளிச்' ன்னு வச்சுருக்காங்க. இலங்கை நினைவுகளில் இருந்து இன்னும் மீளப்போவதில்லைன்னு அங்கங்கே குறிப்பால் உணர்த்தியிருப்பது(ம்) அருமை.
வெளியே டின்னருக்கு எங்கே போகலாமுன்னு கொஞ்சநேரம் ஆலோசனை. நாங்க ரெண்டு பேரும் எதைக் கொடுத்தாலும் சரி என்ற பாவனையில் இருந்தோம். ஊருக்குப் புதுசு! கிளம்பினோம். ஹைதராபாதில் ஆளுக்கொரு நெக்லேஸ் கிடைக்கும். ஏரியைச் சுற்றிப்போகும்வழிக்கு நெக்லேஸ் ரோடுன்னு பெயர். 'சட்னி'க்குப் போய்ச் சேர்ந்தோம். ஒரு கொத்துத்தூக்கில் நாலுவகைச் சட்னிகள் முதலில் மேசைக்கு வந்துருது. மெனுவை மேய்ஞ்சபிறகு இட்லி, ஸ்டீம்தோசை, எம் எல் ஏ பெசரட்டு, ஊத்தப்பம்னு வரவழைச்சு ஒரே வெட்டு:-)
மிருதுவான இட்லி வெண்ணையுடன் வருது. சினிமா நடிகர் சிரஞ்சீவியின் கண்டுபிடிப்பான ஸ்டீம்தோசை. (ரெஸிபி ரொம்ப ரகசியமாம், நம்ம 'KFC போல '! ) எம் எல் ஏ.க்கள் சட்டசபையில்போய் நாட்டுநன்மைக்குன்னு ஒன்னும் பேசாம வாய் அடைச்சுக்கிடப்பதை சிம்பாலிக்காச் சொல்றது போல பெசரட்டுக்கு(பயத்தம் பருப்பு தோசை) உள்ளே உப்புமா!
மூடி போட்ட கண்ணாடி ஜக்கில் சுடச்சுடச் சாம்பார் கொண்டுவந்து, நமக்கு முன்னேச் சின்னக் கிண்ணங்களில் ஊத்திவைக்கிறாங்க. மீதமிருந்த கால்வாசிப் பேச்சையும் முடிச்சுட்டுக் கீழே வந்ததும் தெருமுனையில் கல்கத்தா இனிப்பு பீடா. ஹோட்டேலுக்குக் கொண்டுவந்து விட்டுட்டுப் போனாங்க. இனிய தம்பதிகள் & இனிய குடும்பம். இருபதுவருசத்துக்கு முன்னால் என்னையே மீண்டும் ஒருமுறை பார்த்துக்கிட்டதுபோல!!!
நாளைக்குக் கதையை நாளைக்கு பார்க்கலாமா?
தொடரும்:-)
பி.கு: ஒரு க்விஸ்:-)
ஹைதை போகும் பதிவர்கள், வசதியாக இருக்கணுமுன்னா உடனே தொடர்பு கொள்ளவேண்டிவர்கள் யார்?
Posted by
துளசி கோபால்
at
11/15/2009 05:50:00 PM
39
comments
Labels: அனுபவம், புதுகைத்தென்றல், ஹைதராபாத்