எங்க வழக்கப்படி மூணு/ நாலு நாட்களுக்கு முன்பே ஆரம்பிச்சுட்டோம் !
முதலில் வீடு என்றதாலும்.....எங்கள் யோகா வகுப்பு தினம் என்றதாலும் வீட்டிலிருந்து கொடிகளைக்கொண்டுபோய் தேசியகீதம் பாடிச் சின்னதாக ஒரு கொண்டாட்டம். நம்மூரில் ஒரு காலத்தில் பள்ளிக்கூடபிள்ளைகளுக்குக் கொடியேற்றி முடிச்சதும் ஆரஞ்சு மிட்டாய் கிடைக்குமில்லையா.... அதையே கொஞ்சம் மேம்படுத்தியது போல ஆரஞ்சு பர்ஃபி விநியோகம் ! வகுப்புத் தோழி ஒருவரின் தங்கை நியூஸி அக்கா வீட்டிற்கு நாக்பூரிலிருந்து வந்துள்ளார்.

ஆகஸ்ட் 15 பொழுது விடியுமுன்னே (இங்கே குளிர்காலம் என்பதால் சூரிய உதயம் அதிகாலை ஏழரைக்கு ! அப்போது குளிர் 2 டிகிரி.) கிளம்பிக் கொடியேற்றும் வைபவத்திற்குப் போனோம்.
ஒரு பதினைஞ்சு வருஷங்களாக நண்பர் அவருடைய பொறுப்பில் கொடியேற்றும் விழாவை நடத்திக்கிட்டு இருக்கார்.
ஒரு மூணு வருஷங்களாக, இந்திய ராணுவத்தில் லெஃப். கர்னலாக இருந்தவர், இப்போ எங்கூரில் வசிக்கிறார். கொடி ஏற்றும் கௌரவத்தை அவருக்குக் கொடுத்தாச்சு !
இந்தமுறை இந்தியக் கடற்படையில் கமாண்டராக இருந்தவர் ( எங்கூரில் வசிக்கும் மகன் வீட்டுக்கு வருகை ) எங்கள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டது சிறப்பு !
மேலே படத்தில், முதலில் நிற்பவர் எங்கூர் மல்ட்டிகல்ச்சுரல் கவுன்ஸிலின் தலைவர், அடுத்து நேவி அப்புறம் ஆர்மி !
(ஆர்மி & நேவி வந்தாச்சு. இன்னும் ஏர்ஃபோர்ஸ்தான் வரலை. பேசாம நானே ஏர்ஃபோர்ஸ் பதவியை எடுத்துக்கலாமான்னு தோணுச்சு)
கொடியேற்றி முடிச்சு, நம் தேசியகீதம் பாடியதும் ஒரு மனநிறைவு வந்தது உண்மை !
பாரத் மாதா கி ஜெய் ! வந்தே மாத்ரம் ! ஜெய் ஹிந்த் !

0 comments:
Post a Comment