Wednesday, July 30, 2025

தியாகப் பெருஞ்சுவர் .....(2025 இந்தியப்பயணம் பகுதி 52 )

பாண்டிச்சேரியில் எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம் ஒன்னு இருக்குன்னா..... அது அந்த Bபீச் ரோடு போக்குவரத்தை சாயங்காலம் ஆறு முதல்  விடிகாலை ஆறு வரை நிறுத்தி வைக்கறதுதான் !   எந்த வண்டி எப்போ வந்து இடிச்சுத்தள்ளுமோன்ற  பயம் இல்லாமக் குழந்தைகுட்டிகளுடன் நடக்கப் போகலாம். விவரம் புரியாத புள்ளைகள் சாலைக்குக் குறுக்கே ஓடினாலும் (அப்படி ஓடவிடாமல்  பெற்றோர்கள் பழக்கணும் என்பதும் இருக்கு ) ஆபத்து இல்லை.   
ஆனால்..... கல்லுபீச்.... நம்ம மெரினாவைப்போல் பரந்து நீண்ட மணற்பரப்பெல்லாம்  இல்லை.  என்ன ஒன்னு.... நாம் அதை சமாதிகளால் அலங்கரிச்சுப் புதைகாடா ஆக்கிப் பெருமைப்பட்டுக்கறோம்.  சமாதிகள் போக பாக்கி இருக்குமிடம்.....  தீனிக்கடைளும், சின்னப்பசங்களைக் கவர்ந்திழுக்கும்  சில்லறை விளையாட்டுப்பொருட்களும்,  இதனால் குவியும் குப்பைகளுமாய்........  ப்ச்.......   

இங்கே பாண்டியில் Bபீச் Bபீச்சாவே இருக்குன்றதும் கவனிக்கவேண்டியது. இவ்ளோ நீண்ட  அழகான Bபீச் மட்டும்.....  வேறொரு நாட்டுக்கு (! ) அமைஞ்சுருந்தால்....  சுற்றுலா வருமானம் பிச்சுக்கிட்டுப்போகும் !  அண்டைநாட்டுக்கு இந்த Bபீச்சுக்காகவே போய்வருவோம்.   அங்கே காலநிலைவேற  அட்டகாசமா இருக்குமே!  இத்தனைக்கும் அந்த  Bபீச்சுக்கு மணல்  வேறெங்கோ இருந்து வருது !!!!  ஹூம்.....
விஜியை வரச் சொல்லிட்டு நாங்க ஒரு ஏழு மணிபோலக் கிளம்பினோம். பார்க்கிங் தேடிக் கொஞ்சம் அலைய வேண்டியதாப் போச்சு. எங்களை  நேரு சிலையாண்டை இறக்கி விட்டுட்டுப்போன விஜி, ஒரு பத்து நிமிஷத்தில் நம்மோடு  வந்து சேர்ந்துக்கிட்டார்.  முதலில்  இந்தாண்டை இருக்கும்    Handicraft Emporium  போனோம்.  பெண்கள் நடந்ததும்  கைவினைப்பொருட்கள் வியாபாரம்..... ரொம்ப வருஷத்துக்கு முன்னே இதை ஆரம்பிச்சக் காலக்கட்டத்தில் போகும் வாய்ப்பு கிடைச்சது. இப்போ... மகளுக்கு ஏதாவது  அலங்கார நகைநட்டு கிடைக்குதான்னு....
முகப்பிலேயே நின்னு வாங்க வாங்கன்னு கூப்பிடுது அழகான டெர்ரகோட்டாக் குதிரை ! ஹைய்யோ !  கொஞ்சநேரம் சுத்திட்டுச் சில பொருட்களை வாங்கியாச்சு.  நல்ல தோல்பொருட்கள் இருக்கும் கடையில்  ஆண்களுக்கான பெல்ட், பர்ஸுன்னு நம்மவர்  தனக்கும், மருமகனுக்கும், விஜிக்குமா வாங்கினார். விஜியும் நம்ம பிள்ளைதான், இல்லையா !

காந்தி சிலைப்பக்கம்   நடந்து போய், கொஞ்ச நேரம்  உக்கார்ந்து கடற்காற்றை அனுபவிச்சேன்.  அவ்வளவாக் காத்துகூட இல்லை இன்றைக்கு....  போறவர்ற சனத்தைப் பார்க்கறது நல்ல பொழுதுபோக்கு !
இன்னும் கொஞ்சம் நடக்கலாம்னு(சாலையின் குறுக்கே ! ) போறோம்.  பழைய  கலங்கரைவிளக்கம். இந்தப்பக்கம்  காந்தி நேரு திடலாம்.  ஒரு பக்கம் முழுதும்  தீனிக்கடைகள்.  சின்னச் சின்ன டென்ட் அமைப்பில்  வரிசையாக் கடைகள்.  அங்கங்கே உக்கார்ந்து சாப்பிடும்  வசதிகள். நடுவில் ஓடும் பாதை. நல்ல சுத்தமான இடம்தான். 
இந்தப் பக்கம் கண்ணையோட்டினால்.....  தகதகன்னு  சிங்கங்கள் ! ஆஹா.... இங்கே எப்படின்னு பார்த்தால்.....
நம்ம  முக்கால் நூற்றாண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்குன்னு  புதுசா  அமைச்சுருக்காங்க. தியாகப்பெருஞ்சுவர் !   Tribute Wall !   Azadi Ka Amrit Mahotsav 2022 வருஷம் !  
அந்த வருஷம் நம்ம இந்தியப்பயணம் இருந்ததுதான்..... ஆனால்  வட இந்தியப் பயணம் ( தீபாவளியன்னைக்கு அசல் கங்கா ஸ்நானம் ! ) முடிச்சுட்டுத் தமிழ்நாடு வந்த சில நாட்களில் நம்மவருக்கு உடல்நலமில்லாமல்  ஆஸ்பத்ரி வாசம் ஆகிப்போனதால்.... தெற்கு நோக்கிய பயணம்தான் இல்லாமல் போச்சே..... ப்ச்.... 

நல்ல வெளிச்சத்தில் பார்த்து அனுபவிக்கவேண்டிய இடம்.....   தெரிஞ்சுருந்தால்..... விட்டுருக்கமாட்டேன்......  நாட்டுக்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்த 'உண்மைத் தியாகிகள்' நினைவுக்கான இடம் இல்லையோ !!!!  எத்தனையெத்தனை உயிர்கள் !  சுதந்திரம்  கிடைச்சதோடு போச்சா ? இன்னும்கூடத்தானே  எல்லையிலும்,  அதைக் கடந்து வந்தும் நாசம் விளைவிக்கும்  தீயசக்திகளால்,    உயிரிழப்புகள் நடந்துக்கிட்டே இருக்கு ! ப்ச்....  

(எனக்கு வார் மெமோரியல் பார்த்தால் துக்கம் நெஞ்சை அடைச்சுக்கிட்டுக் கண்ணு பொங்கிரும்..... பெருமாளே.... பெருமாளே...) 
                                கிடைச்சவரை பார்த்துச் சில க்ளிக்ஸும் ஆச்சு.....  
அந்தாண்டை கார் நிறுத்திய இடத்துக்குப் போகும்வழியில் பாரதிப் பூங்கா. மூடியிருக்கு.  அடுத்த பயணத்தில் கட்டாயம் வந்து போகணும்.....  மூளையில் முடிச்சு.

மணி எட்டரை ஆகப்போகுதே.... டின்னரை முடிச்சுக்கலாம் என்ற நம்மவராண்டை, இன்றைக்கு பீட்ஸா ன்னு சொன்னேன்.  முந்தியப்பயணங்களில் ஒரு பேக்கரி ரெஸ்ட்டாரண்டில் அருமையா ஒன்னு கிடைச்சது.  அதைத்தேடி இப்போ அலைய முடியுமான்னு வலையில் பார்த்தால்..... ஒரு சில இடம் காண்பிச்சதுதான். 

இருட்டிவேற போச்சு. தெருக்களின் ஓரங்களில்   திறந்தவெளிச் சாக்கடைகள்.  தெருவிளக்கும் பளிச்ன்னு இல்லை.  கொஞ்ச நேரம் சுத்திட்டு, ஒன்னும் சரியில்லைன்னு அக்கார்டுக்கே போயிட்டோம்.  விஜி வெளியில் சாப்பிட்டுக்கறதாச் சொன்னதால் அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு அறைக்குப் போனோம்.  ரூம் சர்வீஸில்தான்  ஏதாவது வாங்கிக்கணும்....

தொடரும்.......... :-)

Monday, July 28, 2025

முருகனைக் கும்பிட்டு.......(2025 இந்தியப்பயணம் பகுதி 51 )

மணி வேற ரெண்டாகப்போகுதே... திரும்பிப்போக இன்னும் அரைமணியாகுமேன்னு நினைக்கும்போதே....  ரொம்பப் பக்கத்துலே இன்னொரு கோவில் இருக்கு. உங்களை அங்கே கூட்டிக்கிட்டுப்போகணும். சட்னு போயிட்டு வந்துடலாம்.  நீங்க வண்டிக்குள்ளேயே உக்கார்ந்துருங்க. நான் அஞ்சே நிமிசத்துலே  உள்ளே போயிட்டு வந்துருவேன்னு தோழி வற்புறுத்தியதால் சரின்னு தலையாட்டி வச்சேன்.   உச்சிகால பூஜை முடிஞ்சு எல்லாக் கோவில்களிலும் நடை சாத்தியிருக்காதா என்ன?
பக்கத்துலேதான் இருக்குன்னு சொன்னாலுமே போய்ச்சேர அரைமணி ஆச்சு. சுமார் பதினைஞ்சு கிமீதூரம்.  போகும்போதே ஒரு சின்ன மலையைக் காமிச்சாங்க.  அந்த மலையின் அடிவாரத்துக்குத்தான் போறோம்.  நுழையற இடத்துலேயே நாலைஞ்சுபேர் கூட்டமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. கார்பார்க்கிங் டிக்கெட் வாங்கிக்கணும். கோவில்  திறந்திருக்கான்னு தோழி விசாரிச்சப்ப.....  ஆமாம்னு சொன்னதால் பார்க்கிங் சார்ஜ் பத்து ரூபாயோ என்னவோ  கொடுத்துட்டு மலைப்பாதையில் போனோம். அஞ்சே நிமிட்லே மேலே போயாச்சு.  எக்கச்சக்கமான வண்டிகளும், மக்களுமா இடம் ரொம்பவே கலகலன்னு இருக்கு. படிவரிசைகள் பக்கத்துலே போய் வண்டியை நிறுத்துனார் ட்ரைவர்.

'வண்டியிலேயே  இருப்பீங்களா... நான் இதோ போயிட்டு வந்துருவேன்'னாங்க தோழி.  பரவாயில்லை... நானே மெதுவா வர்றேன்னு இறங்கிட்டேன். கோவில்கடைகள்னு படிவரிசைகளையொட்டியே  நிறைய.... ஒரு படம் க்ளிக்கிட்டு  இன்றைக்கு என்ன விசேஷம்னு கேட்டால் கிருத்திகையாம் !

 ஆஹா.....
மயிலம் முருகன், கேள்விப்பட்டுருக்கேனே தவிர வந்ததில்லை.   இடதுபக்கம் இருந்த ரெய்லிங் கம்பியை ஒரு ஆதரவாப் பிடிச்சுக்கிட்டு மெதுவாப் படி ஏறினேன்.  படிகளெல்லாம்  மக்கள் அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. முன்னோர்கள் வேற இங்கேயும் அங்கேயுமா தாவிக்குதிச்சுக்கிட்டு இருக்காங்க. 

இந்தக் களேபரமான சூழலில்,  படிக்கட்டு, கம்பி வரிசைன்னு கண்ணில் பட்டதெல்லாம் எண்ணும் என் குணம் எங்கே போச்சுன்னு தெரியலை. ஒரு அம்பதறுவது படிகள் இருக்கணும்.  தோழி வேற கால் வலின்னு அஞ்சு நிமிஷம் உக்கார்ந்துட்டுப் போகலாம்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. 
அஞ்சாறு படிகளுக்கொருமுறை கொஞ்சம் நின்னு,  கொஞ்சம் நின்னுன்னு படிகள் முடியும் இடத்துக்குப் போயிட்டேன்.  எதிரில் ஒரு பெரிய மண்டபம்.  மக்கள் கூட்டம் !  ட்ரெஸ் கோட் அறிவிப்பு போட்டு வச்சுருக்காங்க. 'அடுத்த கிருத்திகை பங்குனி மாசம்/ ஏப்ரல் முதல் தேதி ' நோட்டீஸ் ஒட்டிவச்சுருக்காங்க. 
விசேஷநாட்களிலும்  கிருத்திகை நாட்களிலும் கோவிலைப் பகலில் மூடுவதில்லையாம் ! இன்றைக்கு  ரெட்டை விசேஷம் வேற !  கிருத்திகை  & சஷ்டி சேர்ந்து வந்துருக்கு !  பாருங்க..... நாள் கிழமை ஒன்னும் தெரியாம நல்ல நாளிலே வந்துருக்கோம்.  வரவச்சுட்டான் முருகன் !  இந்த மண்டபத்துக்கு அந்தாண்டை நம் வலப்பக்கம்  கோவில் ராஜகோபுரம் தெரியுது ! அஞ்சு நிலை !
சிறப்புதரிசனத்தில் போகலாமுன்னு அந்த வழியாக் கூட்டிப்போனாங்க தோழி.  வெறும் இருபது ரூதான்.  கம்பித்தடுப்புக்குள் நுழைஞ்சு முன்னால் போகும் தோழியைப் பின் தொடர்ந்து போறேன்.  அப்புறம் கொஞ்சதூரத்துலே ஒரு கம்பி ஏணி போல படிகள்.  அதுலே ஏறி  ஒரு  திருப்பத்தில்  திரும்பி நீளமாப்போகும் கம்பிப்பாதையில் போறோம்.  இப்படி ரெண்டு திருப்பம் ஆனதும் பார்த்தால்.... ஒரு பெரிய மண்டபத்தில்  இருக்கும் கம்பித்தடுப்புக்குள்ளில் வரிசைவரிசையா சனம்......
நம்ம படிகள் இப்போக் கீழ்நோக்கி இறங்குது.... அதுலே இறங்கி சமதரைக்கு வந்து நின்னுட்டுத் தலையைத் தூக்கிப்பார்த்தால்......... அட ! முருகன் !  கொள்ளை அலங்காரத்தில் கம்பீரமா  ஒரு கையில் வேலும், இன்னொரு கையில் சேவல் கொடி (இதுவும்  உலோகக் கொடிதான்) பிடிச்சுக்கிட்டு ரெண்டும்  பெருக்கல் குறி போல  இடது வலது தோளுக்கருகில் நிக்க.....  கம்பீரமா முகத்துடன்....  ஹைய்யோ ! நல்ல உயரமான சிலை.  கீழே நிக்கற நம்ம  ஐ லெவலில் பாததரிசனம்.  எப்படியும் அஞ்சரை அடிக்குக் குறையாத  உயரம். ஏறக்கொறைய ஏகாந்த தரிசனம் போலத்தான் ! ஒரு அர்ச்சகர் மட்டும் இருந்தார்.  விபூதிப்ரஸாதம் கிடைச்சது. 

வலையில் சுட்ட படம் இவை. அன்னாருக்கு நன்றி !


மேலே கம்பித்தடுப்பில் வர்ற சனம்...... நம்ம  தலைக்குப்பின்புறம்  உயரத்தில் நின்னு மூலவரை தரிசனம் செய்யறாங்க.

திருத்தணி முருகன் கோவிலுக்குச் சிலமுறை போயிருக்கோம்.  அங்கேயும் சிறப்புதரிசனமுன்னு போகும்போது  இப்படிக் கம்பிப்பாதையில்  (ஏணிப்பாலம்/ அந்தரத்துலே போறதுதான்)சுத்தி சுத்திப்போய்  மூலவரை தரிசனம் செஞ்சுருக்கோம்.  அங்கே  மூலவர் ஒரு மூணடி உயரம்தான் இருப்பார்.   இங்கே.... சராசரி ஆள் உயரம் ! 

தரிசனம் முடிச்சதும்,  திரும்பப்படியேறாம..... கீழேயே இருக்கும் கம்பிக்கதவைத் திறந்து அந்தாண்டை நாம் படி ஏறின இடத்துக்குப்பக்கம் வந்துட்டோம்.  அப்ப.... எந்தப்படியும் ஏறாமலேயே  ஸ்வாமிதரிசனத்துக்கு வழி இருக்கு...... க்ரௌடு மேனேஜ்மென்ட் ஐடியா போல...... மொத்தம் பனிரெண்டு நிமிட் லே தரிசனம் ஆச்சு.  இங்கே நாம் வந்த நேரம் சிறப்புதரிசனக் கூட்டம் இல்லைன்றது நம்ம பாக்கியம்! 


 முருகனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்குன்னு நினைக்கிறேன்.  ஒருவேளை நான் விசாக நக்ஷத்திரம் என்பதாலா ?   நான்பாட்டுக்கு வேறெங்கேயாவது  போனால்கூடக் கூப்பிட்டுத் தரிசனம் கொடுத்துருவான். 

  நம்ம அஹோபிலம் பயணம் முடிச்சுத் திருப்பதியில் இரவு தங்கிட்டு, மறுநாள்  திருத்தணி வழியாக வர்றோம். அன்றைக்குத் தைப்பூசம் வேற !  போறவழியில் முருகனைப் பார்த்துட்டுப்போலாமான்றார் நம்மவர்.  அவருக்கு இஷ்டதெய்வம் முருகன்தான்.  தைப்பூசம் கூட்டம் அதிகமா இருக்கும். போறபோக்கில் கீழே இருந்தே கும்பிடு போட்டுக்கலாமுன்னு சொன்னேன். 

திருத்தணி ஊருக்குள் வந்ததும்,  கூட்டமான கூட்டம். நாம் மெதுவா ஊர்ந்து ஊருக்குள் போகும்போது.... மேலே மலைக்குப்போகும் கார்களுக்கு அனுமதி இல்லைன்னு ஆரம்பத்துலேயே  காவல்துறை சொல்லிருச்சு.  

திருத்தணி ரோடு முழுக்கப்  பூமாலைகள் தொங்கும் பூக்கடைகளும் வாழைபழக்குலைகளும் வெத்தலைக்கூடைகளுமா ஜேஜேன்னு இருக்கு. இதுலே ட்ராஃபிக் ஜாம் வேற.   நம்ம வண்டியை நாலைஞ்சு போலீஸ் நிறுத்துச்சு.
என்னவோ ஏதோன்னு  நிறுத்தினா......   "மேலே போறீங்கதானே?  இவுங்களையும் அங்கே ட்ராப்  பண்ணிடறீங்களா?"  அதுக்கென்ன முன் ஸீட் எப்பவும் காலியாத்தானே கிடக்கு.  போலீஸ் ஆஃபீஸரம்மாவை வண்டியில் ஏத்திக்கிட்டோம்.  இப்பதான் நம்ம வண்டிக்கு ஒரு கெத்து வந்துருக்கு.

மலைமேலே போகும் பாதையில் தடுப்பு வச்சு, வர்ற வண்டிகளைத் திருப்பி விட்டுக்கிட்டு இருக்காங்க.  மேலே இடம் இல்லையாம். ஆனா  நமக்கு? ஸல்யூட் அடிச்சு வழிவிட்டது  தடுப்புக் காவல்.  பாருங்க.... கூட்டமா இருந்தா கீழே இருந்தே  போறபோக்குலே கும்பிட்டுக்கலாமுன்னு நினைச்சால்  இந்த முருகன் 'வந்து பார்த்துட்டுத்தான் போகணுமு'ன்னு விடாப்பிடியா  வழி செஞ்சு கொடுத்துட்டான்!

எனக்கு என்ன ஒரே ஒரு  மனக்குறைன்னா.... வண்டியின் தலையிலே சிகப்பு விளக்கு மிஸ்ஸிங் ஆனதுதான்.  ஜெகஜெகன்னு விளக்கு சுத்த  உய்ங் உய்ங்குன்னு  ஸைரன் கத்த  மலை ஏறி இருந்தா எம்பூட்டு நல்லா இருந்துருக்கும்! 

அப்புறம் என்ன ஆச்சு ?  நேரம் இருந்தால் இங்கே இந்தச் சுட்டியில் பாருங்க.  இதுவே பத்து வருஷத்துக்கு முன்னே கிடைச்ச தரிசனம்தான் ! 

https://thulasidhalam.blogspot.com/2016/05/28.html

 வெளியே வந்ததும் கொஞ்சம் க்ளிக்ஸ் ! முன்னோர்கள்  நிம்மதியா உலா வர்றாங்க. தாகம் எடுத்தால்,  தானே குழாயைத் திறந்து தண்ணீர் குடிச்சுட்டுக் குழாயை மூடிவச்சுட்டுப்போகும் அளவு  விவரம்தான் ! 
திரும்பப் படிவரிசைகளில் மெதுவா இறங்கினோம்.  பாதிவழியில் ஒரு  குடும்பம். பையனுக்கு மொட்டைபோட வந்துருக்காங்களாம். 
மொட்டையடிக்கும் இடம் எல்லாம் அந்தாண்டை இருக்கணும். நாங்கதான் வேறெந்த சந்நிதிகளையும் சுத்திப்பார்க்காம இறங்கிட்டோமே......
அடுத்த முறை நம்மவரைக் கூட்டிவரணும்....  சாதாரண நாளில் வந்தால் நிதானமாச் சுத்திப்பார்க்கலாம். 

மூணு மணியாகப்போதேன்னு அரக்கப்பரக்கக் கிளம்பி தோழி வீட்டுக்கு வரும்போது....  மணி  மூணரை.  இருபத்திநாலு கிமீ. தூரத்தை  நாப்பது நிமிட்லே கடந்துருக்கார் ட்ரைவர். கொஞ்சம் வேகம்தான். அவருக்கும் பசி வேளை இல்லையோ ???

கார்பார்க்கில் நம்ம வண்டியைக் காணோம். விஜி போயாச்சு போல.  நம்மைப் பார்த்துட்டு, நம்மவர் வந்து....  சீக்கிரம் போய் சாப்பிடுங்கன்னார்.  தோழியின் மகர் வந்துருந்தார்.  அவரிடம் கொஞ்ச நேரம் பேசினோம். க்ரிக்கெட் அணித் தலைவர். Pondicherry cricket team
சாப்பாடு ஆனதும் நாங்க  அம்மாவுடன் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.  நம்மவரும் நண்பரும் அஞ்சே முக்காலுக்கு ஃபேக்டரியில் இருந்து வந்தாங்க.          

'எனக்கு ராத்ரி டின்னருக்கு  இருக்கவேணாம்.  நாளைக்கு  ஊரைவிட்டுக் கிளம்புவதால்... கொஞ்சநேரம் கடற்கரைக்குப் போகணும் 'என்றேன்.  எல்லோரும் வர்றதா இருந்தது, கடைசியில்  மகரோடு கொஞ்ச நேரம் அவுங்க இருக்கட்டுமுன்னு  நம்மவர்  சொன்னதால்..... தோழியும் நண்பருமா நம்மைக்கொண்டுவந்து அக்கார்டில் விட்டுட்டுப்போனாங்க. 

தொடரும்.........:-)

Friday, July 25, 2025

குலம்தரும்.... செல்வம் தந்திடும்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 50 )

நாம் இன்னும் திருவக்கரை கோவிலில்தான் இருக்கோம். இப்பவே மணி பகல் ஒன்னு.  சந்நிதிகள்  மூடி இருக்குமோ ?  கோவில் வாசலில் ஒரு அனக்கமும் இல்லை.  இப்பவே உள்ளே போகலாமா.... இல்லை வலம் வந்தபின் போகலாமான்னு யோசிக்கறதுக்குள்ளேயே கண்ணில்  பட்டது ஒரு தகவல் !
ஹா......     இங்கே எப்படி ? ஏன் ? எதுக்கு ?
நம்ம சிவன் இருக்காரு பாருங்க..... இவரைவிட ஒரு அப்பாவியை வேறெங்கேயுமே பார்க்க முடியாது.  அமுதம் வேண்டி பாற்கடலைக் கடையும்போது...  அமுதத்துக்கு முன்,  முதலில் வந்தது ஆலகாலவிஷம்.  லேசா அந்த மணம் மூக்காண்டை வந்தாலே எல்லாம் முடிஞ்சுரும். உலக நன்மைக்காக.... யாராவது அதை அப்புறப்படுத்தினால் நல்லது...... மற்ற கடவுளர்களும் தேவர்களும்  ஏற்கெனவே  பாற்கடலில் இருந்து கிளம்பிவந்த செல்வங்களையெல்லாம் பங்குபோட்டுக்கும் பிஸியில் இருக்காங்க.....   ஆபத்து இதோ இதோன்னு   காத்திருக்கு....    இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த சிவனால்..... ச்சும்மா இருக்க முடியலை.  தன்னைப்பற்றிய ஒரு எண்ணம்கூட இல்லாமல் எல்லோரும் நல்லா இருந்தாப்போதும் என்ற பெரியமனசோடு சட்னு அந்த விஷத்தையெடுத்து வாயில் போட்டுக்கறார்.  இது ஒன்னுபோதாதா.... அப்பாவின்றதுக்கு.....

ஒரு விஷயம் பாருங்க..... பொதுவா எந்தக்கூட்டத்தில் தம்பதிகள் இருந்தாலும்..... கணவர் மேல் ஒரு கண் எப்போதும் மனைவிக்கு இருக்கும்.    ( காரணம் ? என்னத்தைச் சொல்ல.... ஒன்னா ரெண்டா ...ஹிஹி... ) பார்வதி உடனே பாய்ஞ்சு போய் சிவனின் மென்னியைப் பிடிச்சுடறாங்க.  இவ்வளவு கடுமையான விஷம், உள்ளே இறங்கினால் சிவன் காலி !  ஆலகாலம் அங்கேயே நின்னுபோச்சு.  விஷக்கலர் நீலம் என்பதால்..... ( விஷம் இறங்கி, நீலம் பாரிச்சுப்போச்சுன்னு  சொல்றோமே ) கண்டத்தில் நீலம் இருக்கும் நீலகண்டனானது இப்படித்தான்.  அப்புறம் குய்யோ முறையோன்ற சப்தம் கேட்டு, மற்றெல்லோரும் ஓடிவந்து பார்த்துட்டு,   உடம்புலே விஷம் இருந்தால் தூங்கவிடக்கூடாது (ஊர்லே பாம்பு கடிச்சால் தூங்கவிடமாட்டாங்க.  சட்னு ரத்த ஓட்டத்தில் கலந்து உடலெங்கும் பரவிடும் ) என்றபடியால்  எல்லோருமாச் சேர்ந்து தாளவாத்யங்கள் பலமா  அடிச்சு, ராத்ரி முழுசும் அவரையும் தூங்கவிடாமல், தாங்களும் தூங்காமல் இருந்து 'சிவராத்ரி ' ஆக்கினது பெரிய சமாச்சாரம் ! 
மேலே படம். நம்மதுதான். காசி சங்கரமடம் கோவிலில் எடுத்தது.

இந்த அப்பாவி குணத்துக்கு எல்லையே இல்லை.  எம்பெருமாள் அலங்காரப்ரியனா.... நகையும் நட்டும் பட்டுமா தினமும் ஜொலிக்கும்போது.... எனக்கு ஒரு சொம்பு தண்ணீர் தலையில் விட்டால் போதும்....  நான் அபிஷேகப்ரியன்னு இருக்கார். பக்தனுக்குச் செலவே இல்லை....  தண்ணியை மொண்டுத் தலையில் ஊத்து....

போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு.............   யார் தன்னை நினைத்துத் தவம் செஞ்சாலும்... அவன் யாரு, எதுக்காக தவம் இருக்கான்ன்னு எல்லாம் ஆராய்ஞ்சு பார்க்காமல்.... 'பக்தா... உன் தவத்தை மெச்சினேன். என்ன வரம் வேண்டுமோ கேள்'னு ஒரு டயலாக் விட்டுருவார். ரொம்ப நல்லவனா இருந்தால்  மற்றவர்கள் நன்மைக்காக எதாவது வரம் கேப்பான். பொல்லாதவனா இருந்துட்டால்? கதை கந்தல்..... இதுலே சாய்ஸ் வேற.... என்ன வரம் வேண்டுமோ....  ன்னு ....

இப்படித்தான் வக்ராசுரனுக்கு வரம் கொடுத்ததும், அவன் தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிச்சுட்டான். தேவர்கள் உட்பட யாரையும் விட்டுவைக்கலை.  கொடுமையின் எல்லைவரை போகிறான். அக்ரமத்தைப் பார்த்த சிவன்........ திகைச்சுப்போய்  வாயடைச்சு நிக்கறார். தானே வரம் கொடுத்துட்டு, அவனை தானே சம்ஹாரம் செய்ய முடியுமா ?  

ஆபத்பாந்தவா.....ன்னு எல்லோரும்  ஸ்ரீவைகுண்டம் போய், மஹாவிஷ்ணுவிடம் வேண்டிக்கறாங்க.....  ( இப்படித்தான்  எதையாவது ஆபத்தை உண்டாக்கிட்டுக் குய்யோ முறையோன்னு  மச்சானிடம் ஓடிப்போய் உதவி கேட்கிறதே வழக்கமாப் போச்சு.... ) 

கையில் ப்ரயோகச் சக்ரம் தாங்கி வந்தார், அசுரனைக் கொன்றார். அண்ணனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு, அசுரனின்  தங்கை  துன்முகி ஓடி வர்றாள்.    மஹாவிஷ்ணுவின் தங்கை   விஷ்ணுதுர்கை/ மஹாகாளி, ' அண்ணா....   இவளுக்காக எல்லாம் ப்ரயோகச் சக்ரத்தைப் ப்ரயோகிக்கவேணாம்... நானே போதும் இவளை அழிக்க' ன்னு கிளம்பிப்போய்  துன்முகியை அழிக்கும்போதுதான் தெரியுது.... அவள் கர்பிணின்னு.....  உடனே குழந்தையை மட்டும் எடுத்துத்  தன் காதில் குண்டலமாப் போட்டுக்கிட்டு, அரக்கியை அழித்தாள் காளி ! (ரெட்டைக் குழந்தைகளா இருந்துருந்தால் நல்லா இருக்குமுன்னு எனக்குத் தோணுது....  )

அப்ப வந்த  மஹாவிஷ்ணுதான் இங்கே  தனிச்சநிதியில் தங்கிட்டார்,  வரதராஜப்பெருமாள்  என்ற பெயருடன்.   நல்லவேளை....    வக்ரகாளியம்மன் சந்நிதிக்கு முன்னால்  அசுரன் பூஜித்துவந்த சிவன், வக்ரலிங்கம் என்ற பெயர் பெற்றதைப்போல்,   இவரை வக்ரவரதர் னு யாரும்  சொல்லலை....
வரதரைத் தேடி அம்பு காட்டிய வழியில் போனால்.... ஒரு  முன்மண்டபத்தோடு இருக்கும்  சந்நிதியில் சிவன் , லிங்க ரூபத்தில் !  சோழப்பேரரசின் செம்பியன் மாதேவி கட்டிய கோவில் !  ஆஹா.... சரித்திரத்துக்குள் நுழைஞ்சுட்டோம்.... 
வலம் தொடர்ந்தால் அதோ அங்கே எட்டடி உயரத்தில் அட்டகாசமா நிக்கறார் எம்பெருமாள் !  எதிரில் பெரிய & சிறிய திருவடிகளுக்கு சம அந்தஸ்து ! ஜயவிஜயர்களும் ஸிம்பிள் & ஸ்வீட் ! 


கருவறையில் சுவரில்  திருமங்கையின் பாசுரம்   'குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்'  எழுதி வச்சுருக்காங்க.
நாராயணா   நாராயணா    நாராயணா

'ப்ராப்தம், புண்ணியம் பாக்கியம் இருந்தால்தான்  இங்கு வரலாம் வரமுடியும் ' னு இருப்பதால்  உங்க எல்லோருக்கும்  இவையெல்லாம் இருக்கு.  துளசிதளத்தின் வழியே இங்கே வந்துட்டீங்க !  (நேரில் போகும் வாய்ப்பு கிடைத்தால் விட்டுடாதீங்க ) 

எனக்கு மனம் நிறைஞ்சு போச்சுன்னுத் தனியாச் சொல்லவேணாம்தானே.....
வலம் தொடந்தால் கோவில் தலவிருட்சத்தில் தொட்டில்கள்..... அந்தாண்டை  நவக்ரகங்கள்.  வக்ரசனியாம் !  வாகனம்  திரும்பி உக்கார்ந்துருக்கு !
புள்ளையார்,  தேவியருடன் சண்முகசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளை வணங்கி மூலவரை தரிசித்தோம். சந்திரமௌளீஸ்வரர் !  எதிரில் சின்னதா ஒரு நந்திதேவர் பாவமா உக்கார்ந்திருக்கார்.  உள்ப்ரகாரத்தில் சுவரில் புடைப்புச் சிலையாக  வக்ரகாளியம்மனும்  இருக்காள். 


ஏழுநிலை ராஜகோபுரம் அழகாகத்தான் இருக்கு. பாடல் பெற்ற தலம்  ! வெளிமுற்றம் முழுசும் பக்தர்களை வரிசையில் வரவைக்கக் கட்டங்கட்டமாக்  கம்பித்தடுப்பு ஏற்பாடு. அவ்ளோ கூட்டம் இங்கே வருமா என்ன ?  காளி சந்நிதிக்கும் நாகர் சந்நிதிக்கும்தான் கூட்டம் அம்முது.....  நாம் போன நேரத்தில்......

வக்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை பகல் பனிரெண்டு மணிக்கும், பௌர்ணமி இரவு பனிரெண்டுமணிக்கும் ஜோதிதரிசனம் ரொம்பவே விசேஷமாம் !  இந்த தரிசனத்துக்குப் பக்தர்கள் வருகை ஏராளம் என்பதால்  பாண்டிச்சேரி, திண்டிவனம் ஊர்களில் இருந்து ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு இருக்குன்னாங்க.
வெளி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தப்பதான் ..... மேலே உச்சியில் இருக்கும் தகவல்களைப் பார்த்தேன். மூலவருக்கு மூன்று முகங்கள் இருக்காமே !  ஆஹா......  விசாரிக்க விட்டுப்போச்சுல்லே..... அப்புறம்  அம்மன் சந்நிதியைப் பார்த்த நினைவும் இல்லை..... எப்படியும்  நான் மட்டும் தரிசனம் செய்த கோவில்களுக்கு, நம்மவரையும் கூட்டிவரணும்தான். இல்லைன்னா எனக்கு மனசே ஆறாது..... அப்ப நல்லா விசாரிக்கணுமுன்னு மூளையில் முடிச்சு !   

தொடரும்........ :-)