Friday, March 22, 2013

கலைக் கண்களுக்கு ஒரு விருந்து!


ஏராளமான பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கு, அற்புதமான தகவல்கள் அடங்கிய நூலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்.  நம்ம வீடுதிரும்பல் மோகன் குமார் தன் பதிவிலும் ரொம்ப நல்லா விவரம் கொடுத்துருக்கார்.  இதையெல்லாம் வாசிச்சதுமுதல்  குறைஞ்சபட்சம் ஒரு காலடி எடுத்து வச்சுட்டு வரணுமுன்னு தவிப்பா இருந்துச்சு. இதைவிட்டால் வேற சான்ஸ் கிடைக்காதுன்னு  ஓடினேன்.  சரஸ்வதி  மஹால் , பெயர் பொருத்தம்  பேஷ் பேஷ்!



கையெழுத்துப்பிரதிகளும், ஓலைச்சுவடிகளும், தொட்டாலே நொறுங்கிப்போகும் நிலையில் இருப்பவைகளும்  கண்ணாடிக்குப்பின்! கங்கைகரையின்  படித்துறைகள் ஓவியங்களா இருக்கு.  மன்னரே வரைந்தவையாமே!  படம் எடுக்க அனுமதி இல்லைன்ற போர்டு பார்த்து மனம் ஒடிஞ்சது உண்மை.  (நம்ம மோகன்குமார் வலைப்பதிவில் இருந்து சுட்ட ஒன்னு இங்கே. நன்றி மோகன்)

கீழே உள்ள இந்தப்படம்  மருதம்சித்தா என்னும் வலைத்தளத்தில் இருந்து கூகுளாண்டவர் காண்பித்தார். நன்றி.

தஞ்சை மன்னரின் அரண்மனைகளும் நூலகமும் ஒரே வளாகத்துக்குள்தான் இருக்கு. அரண்மனையின் ஒரு பகுதி இப்போதைய கலைக்கூடம். நுழைவுச்சீட்டும் கெமெராச் சீட்டும் வாங்கிக்கிட்டோம்.  பஸ் கண்டக்டர் மாதிரிதான் இங்கே சீட்டு விற்பனை நபரும். எதுக்குமே மீதிச் சில்லறை தரமாட்டார். இல்லையாம்!!!  நல்ல கூட்டம்   மேயுது உள்ளே!  மற்றவர்கள் கொடுத்த ரூபாய்கள் எல்லாம் எங்கே போயிருக்கும்?

பெரியவர்களுக்கு 7 ரூபாய். இதைப்பேசாம பத்து ரூபாய்னு  ஆக்கினால் நமக்கும் சரியான கட்டணம் 'சில்லறை'யாக் கொடுத்த திருப்தி இருக்கும்.  நூல்வெளியீடுகளோ புகைப்பட அட்டைகளோ எதுவுமே  இல்லை(யாம்!)  அப்ப எதுக்கு போர்டு?ப்ச்... என்னவோ போங்க.....

மொத்த வளாகத்திலும் பழுதுபார்க்கும் வேலை நடக்கும் அடையாளம்.  சரி. எப்படியோ நன்னாயால் சரின்னு ஒரு திருப்தி.

கலைக்கூடத்தின் உள்ளே  முன் பகுதியிலும்  புல்தரையும் பூச்செடிகளும்  அழகா அமைச்சுருக்கும் உள்முற்றத்தைச்  சுற்றி இருக்கும் பகுதிகளிலும்  கற்சிலைகள்  தனித்தனி மேடைகளில் ,நின்னு  கவனிச்சுப் பார்க்கும்விதத்தில்  இருப்பது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு.  வலப்பக்கம் தர்பார் ஹால். வாசலில் நம்மாட்கள் ரெண்டு பேர்.  இருங்கடா மேலே போயிட்டு வரேன்னு மாடிக்குப்போனோம்.  திமிங்கிலத்தின்  எலும்புக்கூடு ஒன்னு தொங்குது! இந்த இடத்தில் இதன் தேவை என்ன?  கலைப் பொருளா அது?



மொட்டை மாடிக்குப்போய் கீழே முற்றம் பார்த்தால் அருமையா இருக்கு. பிரமாண்டமான தூண்களும் வளைவுநெளிவுகளும்  கண்ணை இழுத்தது உண்மை.  நாமிருக்கும் தளத்துக்கு மேல் கோபுரம் போல ஒன்னு. அஞ்சடுக்கு இருக்கு!   குறுகலான மாடிப்படிகள்.   அங்கே போக நமக்குதான்  தயக்கம். மூட்டுவலிக்காரருக்கு  புத்திமுட்டு:(    ஆனால்.... செடிகளுக்கு ஏது தடை?  கவனிச்சு உடனே அகற்றலைன்னா ஆபத்துதான்:(


ஹாலின் நடுவில் ஒருமேடை அமைப்பு. கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாமேன்னு உக்கார்ந்து   தலையை நிமிர்த்திப் பார்த்தால் அழகான விதானம்.  அட்டகாசமான பூ டிஸைன். அதுக்குள்ளே மேலே போய் வந்த ஒரு ஜோடியிடம் என்ன இருக்குன்னு விசாரிச்சால்  அங்கே இருந்து  ஊரைப் பார்க்கலாமாம்.  போகட்டும் வியூ!

அப்போதான் மோகன்குமாருடன்  அலைபேசிப் பேச்சு.   அதுக்குள்ளே நிறைய இடத்தைக் கவர் பண்ணிட்டீங்களேன்னார். காலில் சுடுகஞ்சி இல்லையோ நமக்கு:(

தர்பார் ஹால்  நாயக்கர்களின் காலத்தில் கட்டப்பட்டது.  செப்புப்படிவங்கள் எல்லாம் அருமையா  பெயர், காலக்கட்டம், கண்டெடுத்த  இடம் போன்ற தகவல்களுடன் அழகா  வச்சுருக்காங்க. உலோகச் சிற்பங்கள்  அவைகளுக்கான கண்ணாடி அலமாரிகளில். (படங்கள் எடுக்கும்போது  பிரதிபலிப்பு வர்றதைத் தவிர்க்க முடியலை)  லக்ஷ்மிநரசிம்மர் ஒருத்தர் சூப்பரா இருக்கார்.



இதே ஹாலில்   உயரமான மேடையில் மன்னர் செர்ஃபோஜி(SERFOJI)யின் ஆளுயரச் சிலை. சுற்றிவர இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் பிரமாதம்.  அவர் நிற்கும் மேடையே சிற்பங்களோடு அலங்காரமா இருக்கு!


  தஞ்சை பெருவுடையார் கோவிலின் ஆயிரத்தாவது பொறந்தநாள் விழாவுக்காக விசேஷமா உருவாக்கி இருந்த  மன்னர் ராஜராஜனின் சிலை இங்கே தேமேன்னு ஒரு ஓரத்தில்!!!!

கலைக்கூடம் விட்டு வெளியில் வந்தோம்.  இதுக்குப் பக்கத்தில்தான் வாட்ச் டவர் போல் உள்ள இன்னொரு கட்டிடம் இருக்கு.  அதற்கு எதிரில் கொஞ்ச தூரத்தில்  சின்னச்சின்னக் கும்பல்களா  பலர் உக்கார்ந்து கண்ணும் கருத்துமா  அந்த டவரை வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  கட்டிடக்கலை பயிலும்  மாணவர்களாம்.



எதிரில் இருந்த மற்றொரு  கட்டிடத்தில் கைவினைப்பொருட்கள் என்றதைப் பார்த்து அங்கே போனோம். வரப்போகும் கொலுவுக்குப் புது பொம்மைகள் வந்து இறங்கி இருக்குன்னு அவைகளைப் பிரித்து அடுக்கிக்கிட்டு இருந்தாங்க.  ஹைய்யோ!!!!!  என்ன ஒரு அழகு!  எல்லாம் காகிதக்கூழ்தான். கனமே இல்லை பாருங்கன்னு கோபாலுக்குக் குறிப்பால் உணர்த்தினேன்.

இந்த ஹிம்சையில் இருந்து தப்பிக்க கோபாலுக்கு ஒரு வழி கிடைச்சுருக்கு.  பொம்மை முகத்துலே  களையே இல்லையேம்மான்னுவார்!!!!  ஓஹோ......  அப்படியா?

எனக்கு ஒரு மாதிரி 'வின்' கிடைச்சது. தஞ்சாவூர் ஸ்பெஷலான தலையாட்டி பொம்மையைக் காணோம்.   ' வருத்தப்படாதே.   நான் இருக்கேனே'ன்னார் கோபால்.  அப்பப்ப ஆஃபீஸ் போயிடறாரேன்னு  இங்கே நம்மூரில் இதே கான்ஸப்ட்லே கிடைச்ச  விளக்கு ஒன்னை வாங்கினேன்:-))))) குழந்தைகள் தட்டிவிட்டாலும்  ஆபத்து இல்லாமல் எழுந்து உக்கார்ந்துக்குமாம்! பேட்டரி  லைட்தான்.

 நம்ம ஜீரா ஆசைப்படறாரேன்னு  நம்ம கொலுவுக்கு முருகனைத் தேடுனதில் ஒரு மாட்டுக்காரன் அகப்பட்டான்.   ஆண்டாள் ரங்கமன்னார் செட் ஒன்னு தோழிக்கு வாங்கினேன். இனி கொலுவில்  என்னை நினைச்சே ஆகணும்:-)


கலைக்கூடப் படங்களையெல்லாம் ஆல்பத்துலே போட்டுருக்கேன். பாருங்க.


 சீனிவாசனை சாப்பிட அனுப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தப்ப  மணி ஏறக்குறைய ரெண்டு. நல்லவேளையா காலையில் லேட் செக்கவுட் கேட்டதில்  பகல் மூணுவரை கிடைச்சது.  அப்பவே  இதே ஹொட்டேலின்  வேற ஊர் கிளையில்  அறைக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம்.

பகல் சாப்பாட்டுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் 'தாலி' மீல்ஸ் ஒன்னும்  ரெண்டு லஸ்ஸியும் ரூம் சர்வீஸா  கொண்டு வரச்சொன்னதும்  பத்து நிமிசத்தில் வந்தது. சோழநாடு சோறுடைத்து. தஞ்சைதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் நாலாப்புலே வாசிச்சது நினைவுக்கு வந்துச்சு.  ஒரு அஞ்சு ஆள் தின்னும் அளவுக்கு குண்டான் நிறையச் சோறு!!!!

சரியா மூணு மணிக்குக் கிளம்பினோம்.  ஒன்னேகால்மணி நேரம். நேராத் திருச்சிதான்.  தங்கல் இதே சங்கம் ஹொட்டேலின் கிளை.

 அறைக்குப்போய்ச் சேர்ந்ததும் என்ன ப்ரோக்ராம் என்று கேட்ட கோபாலிடம்.....

வேறென்ன?  ஸ்ரீரங்கம் என்றேன்.



தொடரும்.............:-)))))





Wednesday, March 20, 2013

தஞ்சைப் பெருவுடையார் .........

நல்ல பிஸியான போக்குவரத்து  இருக்கும் சாலைக்கு அந்தாண்டை  கோவில் வளாகம்  கண்ணுக்குத் தெரியுது. இடையில்  காங்க்ரீட் ஸ்லாபுகளை வரிசையா நிக்கவச்சதொரு தடுப்பு.  கடந்து போகும்போதே  தண்ணி இல்லாத அகழியும் மதிலுமா ....

கோபுரவாசலுக்கு நேரெதிரா பொதுமக்கள் கடந்து போகும்  ஸீப்ரா க்ராஸிங், போக்குவரத்துச் சட்டப்படி இருக்கு.  ஆனால் அதெல்லாம் எங்களுக்கில்லை என்பதுபோல்  வாகனங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும்.  நீ பாட்டுக்கு நின்னா...நின்னுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்னு என் கையைப் பிடிச்சு கோபால் விருவிருன்னு  சாலையைக் கடக்க, கூடவே நான் ஓடுறேன்.

சின்னதா அஞ்சுநிலைக் கோபுர வாசல் வழியாக உள்ளே நுழையறோம்.  இதுதான் ராஜகோபுரமா இருக்கணும்.  பெரிய கோவில் கட்டி முடிச்சபிறகு எட்டு வருசம் கழிச்சு இதைக் கட்டியிருக்காங்க. ராஜராஜனின் கேரள வெற்றிக்கு அடையாளமாக் கட்டுனதாம். கேரளாந்தகன் திருவாசல் என்ற அறிவிப்பும் கோவில் அமைப்பு பற்றிய தகவல்களும்  சரித்திரச் சுருக்கமுமா  வச்சுருக்காங்க.

 மனசுக்குள்ளே பூதம் பிராண்டத் தொடங்குச்சு.... அப்போ கேரளநாடுன்னா இருந்துச்சு? சேரநாடுன்னுதானே குறிப்பிடுவாங்க. 1956 இல்தானே  தனித்தனி சமஸ்த்தானங்களா இருந்த திருவாங்கூர், கொச்சி ,மலபார் பகுதி  எல்லாம் சேர்ந்து கேரளான்னு மாநிலமா உருவானதில்லையோ?  இதைத்தானே கேரளாப்பிறவின்னு  இப்பவும் நவம்பர் முதல்தேதி கொண்டாடுறோம்! அதுவுமில்லாம.... ராஜராஜன் பதவியில் இருந்ததே 1014 வரைதானே?  நம்ம பங்குக்கு ஆராயலாமா? 

அதைக் கடந்தால்  வாம்மா என்று அழைக்கும் போஸில் வெள்ளையம்மாள்.  62 வயசுக்காரி. அவளை மறைச்சு நின்னு படம் எடுத்துக்கும் குடும்பம் ஒன்னு.  இவளை நான் '89இல் பார்த்திருக்கேன்.  தஞ்சைக்கோவிலைப் பார்க்கவில்லையே என்ற  என் குறை தீர்க்க  கோவையில் இருந்து  பஸ் பிடிச்சு வந்து  பெருவுடையாரைக் கண்டுக்கிட்டு அடுத்த  பஸ் பிடிச்சு திருச்சிக்கு ஓடுனது  எல்லாம்  .... கனவு மாதிரி இருக்கு!  அப்போ வெள்ளையம்மாள்  இளவயசுக்காரி!

வலது பக்கம் காலணிகள் வைக்கும் இடம்.  டோக்கன் கொடுத்துக்கிட்டு, அங்கேயே  நினைவுப்பொருட்கள், புத்தகம்,சிடின்னு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். இராஜராஜேஸ்வரம் ஒரு செய்தி மாலை.  நாம் அறிந்த- அறியாத  பல சுவையான தகவல்கள்.  விலை ரூ 100. ஒன்னு வாங்கினோம்.


 அடுத்து மூணுநிலை கோபுரம். ஸ்ரீராஜராஜன் திருவாயில் கோபுரவாசலுக்கு ரெண்டு பக்கமும் 18 அடி  துவாரபாலகர்கள். உள்ப்ரகாரத்தின்  மதில்மேல் வரிசையா நந்திகள். நுண்ணிய அழகோடு செதுக்கி இருக்கும் சிற்பங்கள் நிறைஞ்ச அழகான கோபுரம். வண்ணம் ஏதும் பூசாமல்  கல்லின் வண்ணத்திலேயே இயற்கையா இருப்பது(ம்) அழகே!  உட்புறச் சுவரில்   முழுசும் தகவல்கள் கல்வெட்டுகளா செதுக்கி வச்சுருக்கு.  கல்வெட்டு மொழி  ஆராய்ச்சியாளர்களுக்கு சக்கரைப்பொங்கல்.

கோவில் முழுசுமே அங்கங்கே ஏகப்பட்ட சமாச்சாரங்கள்  நிறைஞ்ச கல்லெழுத்துக்கள் இருக்கு.  ராஜராஜன் கோவிலுக்குக் கொடுத்த நகைநட்டு பட்டியல் பார்த்தால் அதிர்ந்து போய்விடலாம்.  நிறைய ஆபரணங்களின் பெயரே புதுமையா இருக்கு. அதெல்லாம் என்னவா இருக்குமோ?   எடுத்துக்காட்டா...  லசுநி,பொத்தி, கிம்பிரி, குருவிந்தம்,சோனகச் சிடுக்கி, ஹளஹளமுங்,கொக்கு, நிம்பொளம் இப்படி 55  இருக்கு அந்தப் பட்டியலில்!

தங்கப்பாத்திரங்கள்183 கிலோ, வெள்ளிப்பாத்திரங்கள் 62 கிலோ, செப்புத்திருமேனி 65, கிராமங்கள் 40,  நிலபுலன்களின் இருந்து  வரும் நெல் 1,16,000  கலம், திருவிளக்கு 158, அது எரிய தேவைப்படும் நெய் 158 உழக்கு,  இவைகளை வழங்கும்  பசுக்களும் ஆடுகளும்...

எல்லாம் வாங்குன புத்தகத்தில் இருக்கும் விவரங்கள்தான். வேதவல்லி கண்ணன்,என் தம்பைய்யா ன்னு ரெண்டுபேர் நூலாசிரியர். அவர்களுக்கு என் நன்றிகள்.  தகவல்கள் நம்பிக்கையானதான்னு  கேள்வி வந்தால் நம்பக்கூடியதேன்னு சொல்லலாம்.  புத்தகத்தைத் திறந்தவுடன்  கட்டம்போட்ட இடத்தில் விமானத்தின் நிழல் கீழே விழுமா? விழாதா?  விழும். காலை மாலை ஆகிய வேளைகளில் விமானத்தின் நிழல் முழுவதுமாக விழும். என்று போட்டுருக்காங்க.  ஒரு பானை சோத்துக்கு ஒரு பருக்கைன்னு நினைச்சேன்.

ராஜராஜன் திருவாசல் கடந்து உள்ளே காலடி எடுத்து வச்சால் கண்முன்னே  நந்தி மண்டபமும் பின்னணியில்  பாதி மறைந்து மேல்பாதி மட்டும் தெரியும் விமானமும். சிவசிவ....

கெமெராவுக்கு ஓயாத வேலைதான் இனி!

அஞ்சடி உயர நந்தி மண்டபத்தில் ஏறி அருகில் போய்ப் பார்க்கலாம். 12 அடி உயரம் இருக்கார். போதும்போதாமல் ஒரு வேஷ்டியைச் சுத்திக்கட்டி இருக்கார். அவரைச்சுத்தி ஒரு கம்பி வேலி.அவர் கண்போகும் பாதையில் நேரெதிரா  கொடிமரம்.  சின்ன மேடையில் நாலுபுறமும் நந்திகள் அமர்ந்திருக்க , நாலு பூதகணங்களும்  நாலு யானைகளும் தாங்கிப்பிடிக்க நர்த்தன கணபதி  ஆடும் மண்டபத்தின்மேல் ஓங்கி உயர்ந்து நிக்கும் கொடிமரம். கொடிமரம் நோக்கிக் கைகூப்பும் ராஜராஜன் தனியொரு கற்றூணில்.

இந்தப்பெரிய நந்தியும் மண்டபமும் செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர் காலத்துலே கட்டியவை.  ஒரிஜனல் நந்தி ஆஃப் ராஜராஜன் அளவிலே சின்னவர்.  தனியாக   சின்ன மண்டபம்  ஒன்னில் கோவில் கொண்டு எட்டிப்பார்க்கிறார்.  பெரிய நந்திக்கு இடப்பக்கம் முற்றத்தில் இவரைப்பார்க்கலாம்

திறந்தவெளி முற்றம் கடந்தால் பெருவுடையார் கோவில் முன்மண்டபம். 15 படிகள் ஏறணும். கெமெராவைச் சுருட்டி வச்சுடணும். முகமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் எல்லாம் கடந்து  கருவறைமுன்னே நிக்கறோம்.  சதுர வடிவ அறையில் லிங்கவடிவில்  13 அடி  பரமசாமி. ஆவுடையாருடன் இருக்கார்.  எல்லாம் பெரிய கோவில் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல பெரிய சைஸ்!

தரிசனம் முடிஞ்சதும் இடப்பக்கம் இருக்கும் வாசல்வழியா வெளியே  வர்றோம். கயிறு கட்டி கைடு பண்ணியிருக்கு. வெளிப்புறம் முழுசும்  சிற்பங்களும் கோஷ்ட தேவதைகளுமா காணக்கண் கோடி மட்டுமல்ல, நேரமும் நிறைய வேணும் அனுபவிக்க.



படிகள்விட்டுக்கீழே இறங்கி உட்பிரகாரத்தில் இருக்கும் மற்ற சந்நிதிகளுக்குப் போகலை. பிள்ளையாருக்கும் முருகனுக்கும் கருவூர்தேவருக்கும்  சந்நிதிகள்  இருக்கு.  கருவூர்தேவர் ஆலோசனைகளைக்கேட்டு அதன்படி கோவிலைக் கட்டினான் ராஜராஜன் என்கிறார்கள். நேராப்போய் படி ஏறுனது உள்பிரகாரத்தின்  மதில்சுவரை ஒட்டியே ரெண்டடுக்கில் கட்டி இருக்கும் திருச்சுற்று மாளிகையில். கவிழ்த்துப்போட்ட 'ப' வடிவில் வலம் வரும்போதே  வலதுபக்கம் கருவறை விமானத்தில் ஒரு கண் வச்சுக்கலாம்.

எதுக்கு? ஓடியாப் போகப்போகுது?   எந்தப்பக்கம் பார்த்தாலும்  அழகா இருக்கேன்னு தான். மத்தபடி  கோவிலின் நீள அகலத்தையோ விமானத்தின் உயர அளவையோ  சொல்லப்போறதில்லை.  இது உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கோவில் அம்புட்டுதான்!  ராஜராஜேச்வரம்!   ராஜராஜனின் கனவு!





என்ன ஒரு கம்பீரம்!  ஏழே வருசத்தில் கட்டி முடிச்சுருக்காங்கன்னா எப்பேர்ப்பட்ட அசுர உழைப்பு!  கட்டி முடிச்ச வருசம் 1010 கிபி.  ஆயிரத்தாவது பொறந்த நாளை அமர்க்களமாக் கொண்டாடிட்டாங்க. தொல்லியல் துறையின் பொறுப்பில் கோவிலிருக்கு. பராமரிப்பு  ஓக்கே!  ஆனாலும் நம்மாட்கள் அங்கங்கே எண்ணெய்  வழிய விளக்கு ஏத்துவதையும் கற்பூரப்புகையை பரப்புவதையும்  விடலை. அம்மன் சந்நிதியில்  கோஷ்டத்தில்(மகிஷாசுரமர்த்தினி) கரி பிடிச்சு.....  இப்படி அழுக்குப்பண்ணா அருள் கிடையாதுன்னு  சாமியே நேரில்  வந்து சொன்னாலும்  கேப்பாங்களான்னு சந்தேகம்தான்:(  போதாக்குறைக்கு  ஆட்டோக்ராஃப் போட்டு வச்சுட்டுப் போயிருக்கு சனம்:(

உலகின் பாரம்பரியக் கட்டிடங்கள் பட்டியலில் கோவிலை சேர்த்துருக்காங்க.  திருச்சுற்று முழுசும் இடதுபக்க சுவரில் அருமையான பழங்கால ஓவியங்கள்.  தஞ்சாவூர் பாணி? சிதிலமாக ஆரம்பிச்சுருக்கு. இதில் விஷமிகளின் கைவண்ணம் வேற:(  கொஞ்சம் கூடுதல் கவனிப்பு கிடைச்சால் கொள்ளாம்.








ஏகப்பட்ட சிவலிங்கங்கள். அக்னிமூலையில் சின்னதா தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு. தீ இருந்தால் புகை. புகை இருந்தால்  கரிபிடிச்சுரும்.... பிடிச்சிருக்கு:(

ஒரு மணிநேரம் போதாதுதான். ஆனால் ........ இன்னும் ஒரு இடம் கட்டாயம் போகவேண்டியது பாக்கி.




மனசில்லா மனசோடுதான் கிளம்பினேன் என்பதே உண்மை. வாசலில் வருவிருந்து பார்த்து காத்திருந்தாள், வெள்ளையம்மாள்.



தொடரும் ...........:-)