ஏராளமான பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கு, அற்புதமான தகவல்கள் அடங்கிய நூலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். நம்ம வீடுதிரும்பல் மோகன் குமார் தன் பதிவிலும் ரொம்ப நல்லா விவரம் கொடுத்துருக்கார். இதையெல்லாம் வாசிச்சதுமுதல் குறைஞ்சபட்சம் ஒரு காலடி எடுத்து வச்சுட்டு வரணுமுன்னு தவிப்பா இருந்துச்சு. இதைவிட்டால் வேற சான்ஸ் கிடைக்காதுன்னு ஓடினேன். சரஸ்வதி மஹால் , பெயர் பொருத்தம் பேஷ் பேஷ்!
கையெழுத்துப்பிரதிகளும், ஓலைச்சுவடிகளும், தொட்டாலே நொறுங்கிப்போகும் நிலையில் இருப்பவைகளும் கண்ணாடிக்குப்பின்! கங்கைகரையின் படித்துறைகள் ஓவியங்களா இருக்கு. மன்னரே வரைந்தவையாமே! படம் எடுக்க அனுமதி இல்லைன்ற போர்டு பார்த்து மனம் ஒடிஞ்சது உண்மை. (நம்ம மோகன்குமார் வலைப்பதிவில் இருந்து சுட்ட ஒன்னு இங்கே. நன்றி மோகன்)
கீழே உள்ள இந்தப்படம் மருதம்சித்தா என்னும் வலைத்தளத்தில் இருந்து கூகுளாண்டவர் காண்பித்தார். நன்றி.
தஞ்சை மன்னரின் அரண்மனைகளும் நூலகமும் ஒரே வளாகத்துக்குள்தான் இருக்கு. அரண்மனையின் ஒரு பகுதி இப்போதைய கலைக்கூடம். நுழைவுச்சீட்டும் கெமெராச் சீட்டும் வாங்கிக்கிட்டோம். பஸ் கண்டக்டர் மாதிரிதான் இங்கே சீட்டு விற்பனை நபரும். எதுக்குமே மீதிச் சில்லறை தரமாட்டார். இல்லையாம்!!! நல்ல கூட்டம் மேயுது உள்ளே! மற்றவர்கள் கொடுத்த ரூபாய்கள் எல்லாம் எங்கே போயிருக்கும்?
பெரியவர்களுக்கு 7 ரூபாய். இதைப்பேசாம பத்து ரூபாய்னு ஆக்கினால் நமக்கும் சரியான கட்டணம் 'சில்லறை'யாக் கொடுத்த திருப்தி இருக்கும். நூல்வெளியீடுகளோ புகைப்பட அட்டைகளோ எதுவுமே இல்லை(யாம்!) அப்ப எதுக்கு போர்டு?ப்ச்... என்னவோ போங்க.....
மொத்த வளாகத்திலும் பழுதுபார்க்கும் வேலை நடக்கும் அடையாளம். சரி. எப்படியோ நன்னாயால் சரின்னு ஒரு திருப்தி.
கலைக்கூடத்தின் உள்ளே முன் பகுதியிலும் புல்தரையும் பூச்செடிகளும் அழகா அமைச்சுருக்கும் உள்முற்றத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளிலும் கற்சிலைகள் தனித்தனி மேடைகளில் ,நின்னு கவனிச்சுப் பார்க்கும்விதத்தில் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. வலப்பக்கம் தர்பார் ஹால். வாசலில் நம்மாட்கள் ரெண்டு பேர். இருங்கடா மேலே போயிட்டு வரேன்னு மாடிக்குப்போனோம். திமிங்கிலத்தின் எலும்புக்கூடு ஒன்னு தொங்குது! இந்த இடத்தில் இதன் தேவை என்ன? கலைப் பொருளா அது?
மொட்டை மாடிக்குப்போய் கீழே முற்றம் பார்த்தால் அருமையா இருக்கு. பிரமாண்டமான தூண்களும் வளைவுநெளிவுகளும் கண்ணை இழுத்தது உண்மை. நாமிருக்கும் தளத்துக்கு மேல் கோபுரம் போல ஒன்னு. அஞ்சடுக்கு இருக்கு! குறுகலான மாடிப்படிகள். அங்கே போக நமக்குதான் தயக்கம். மூட்டுவலிக்காரருக்கு புத்திமுட்டு:( ஆனால்.... செடிகளுக்கு ஏது தடை? கவனிச்சு உடனே அகற்றலைன்னா ஆபத்துதான்:(
ஹாலின் நடுவில் ஒருமேடை அமைப்பு. கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாமேன்னு உக்கார்ந்து தலையை நிமிர்த்திப் பார்த்தால் அழகான விதானம். அட்டகாசமான பூ டிஸைன். அதுக்குள்ளே மேலே போய் வந்த ஒரு ஜோடியிடம் என்ன இருக்குன்னு விசாரிச்சால் அங்கே இருந்து ஊரைப் பார்க்கலாமாம். போகட்டும் வியூ!
அப்போதான் மோகன்குமாருடன் அலைபேசிப் பேச்சு. அதுக்குள்ளே நிறைய இடத்தைக் கவர் பண்ணிட்டீங்களேன்னார். காலில் சுடுகஞ்சி இல்லையோ நமக்கு:(
தர்பார் ஹால் நாயக்கர்களின் காலத்தில் கட்டப்பட்டது. செப்புப்படிவங்கள் எல்லாம் அருமையா பெயர், காலக்கட்டம், கண்டெடுத்த இடம் போன்ற தகவல்களுடன் அழகா வச்சுருக்காங்க. உலோகச் சிற்பங்கள் அவைகளுக்கான கண்ணாடி அலமாரிகளில். (படங்கள் எடுக்கும்போது பிரதிபலிப்பு வர்றதைத் தவிர்க்க முடியலை) லக்ஷ்மிநரசிம்மர் ஒருத்தர் சூப்பரா இருக்கார்.
இதே ஹாலில் உயரமான மேடையில் மன்னர் செர்ஃபோஜி(SERFOJI)யின் ஆளுயரச் சிலை. சுற்றிவர இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் பிரமாதம். அவர் நிற்கும் மேடையே சிற்பங்களோடு அலங்காரமா இருக்கு!
கலைக்கூடம் விட்டு வெளியில் வந்தோம். இதுக்குப் பக்கத்தில்தான் வாட்ச் டவர் போல் உள்ள இன்னொரு கட்டிடம் இருக்கு. அதற்கு எதிரில் கொஞ்ச தூரத்தில் சின்னச்சின்னக் கும்பல்களா பலர் உக்கார்ந்து கண்ணும் கருத்துமா அந்த டவரை வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கட்டிடக்கலை பயிலும் மாணவர்களாம்.
எதிரில் இருந்த மற்றொரு கட்டிடத்தில் கைவினைப்பொருட்கள் என்றதைப் பார்த்து அங்கே போனோம். வரப்போகும் கொலுவுக்குப் புது பொம்மைகள் வந்து இறங்கி இருக்குன்னு அவைகளைப் பிரித்து அடுக்கிக்கிட்டு இருந்தாங்க. ஹைய்யோ!!!!! என்ன ஒரு அழகு! எல்லாம் காகிதக்கூழ்தான். கனமே இல்லை பாருங்கன்னு கோபாலுக்குக் குறிப்பால் உணர்த்தினேன்.
இந்த ஹிம்சையில் இருந்து தப்பிக்க கோபாலுக்கு ஒரு வழி கிடைச்சுருக்கு. பொம்மை முகத்துலே களையே இல்லையேம்மான்னுவார்!!!! ஓஹோ...... அப்படியா?
எனக்கு ஒரு மாதிரி 'வின்' கிடைச்சது. தஞ்சாவூர் ஸ்பெஷலான தலையாட்டி பொம்மையைக் காணோம். ' வருத்தப்படாதே. நான் இருக்கேனே'ன்னார் கோபால். அப்பப்ப ஆஃபீஸ் போயிடறாரேன்னு இங்கே நம்மூரில் இதே கான்ஸப்ட்லே கிடைச்ச விளக்கு ஒன்னை வாங்கினேன்:-))))) குழந்தைகள் தட்டிவிட்டாலும் ஆபத்து இல்லாமல் எழுந்து உக்கார்ந்துக்குமாம்! பேட்டரி லைட்தான்.
நம்ம ஜீரா ஆசைப்படறாரேன்னு நம்ம கொலுவுக்கு முருகனைத் தேடுனதில் ஒரு மாட்டுக்காரன் அகப்பட்டான். ஆண்டாள் ரங்கமன்னார் செட் ஒன்னு தோழிக்கு வாங்கினேன். இனி கொலுவில் என்னை நினைச்சே ஆகணும்:-)
கலைக்கூடப் படங்களையெல்லாம் ஆல்பத்துலே போட்டுருக்கேன். பாருங்க.
சீனிவாசனை சாப்பிட அனுப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தப்ப மணி ஏறக்குறைய ரெண்டு. நல்லவேளையா காலையில் லேட் செக்கவுட் கேட்டதில் பகல் மூணுவரை கிடைச்சது. அப்பவே இதே ஹொட்டேலின் வேற ஊர் கிளையில் அறைக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம்.
பகல் சாப்பாட்டுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் 'தாலி' மீல்ஸ் ஒன்னும் ரெண்டு லஸ்ஸியும் ரூம் சர்வீஸா கொண்டு வரச்சொன்னதும் பத்து நிமிசத்தில் வந்தது. சோழநாடு சோறுடைத்து. தஞ்சைதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் நாலாப்புலே வாசிச்சது நினைவுக்கு வந்துச்சு. ஒரு அஞ்சு ஆள் தின்னும் அளவுக்கு குண்டான் நிறையச் சோறு!!!!
சரியா மூணு மணிக்குக் கிளம்பினோம். ஒன்னேகால்மணி நேரம். நேராத் திருச்சிதான். தங்கல் இதே சங்கம் ஹொட்டேலின் கிளை.
அறைக்குப்போய்ச் சேர்ந்ததும் என்ன ப்ரோக்ராம் என்று கேட்ட கோபாலிடம்.....
வேறென்ன? ஸ்ரீரங்கம் என்றேன்.
தொடரும்.............:-)))))
