அதோ அங்கேன்னு கை காமிச்சுட்டு நம்மை இறக்கிவிட்டார் பெருமாள். சாலையைக் கடந்து அந்தாண்டை போகணும். நல்லவேளை இந்த சாலை அ என்ப்படியொன்னும் பெரூசாவும், ட்ராஃபிக் கூடுதலாகவும் இல்லை.
பார்க்கிங் ஏற்பாடுகள் இருந்தாலும் கூட, அந்தக் கட்டணத்தைத் தவிர்க்க, சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி நம்மை இறக்கிவிடுவதே டாக்ஸி ட்ரைவர்கள் பலருக்கும் வாடிக்கையாக இருக்கு. ஒரு சிலர், உள்ளே கொண்டுபோய் நம்மை இறக்கிவிட்டுட்டு, வெளியில் எங்கேயாவது போய் வண்டியை நிறுத்திக்கறாங்க. நமக்குத் தேவைப்படும்போது, அவர்களை செல்ஃபோன் வழி கூப்பிட்டால் வந்து பிக்கப் செஞ்சுக்கறாங்க.
தூரத்தில் இருக்கார் பெரிய திருவடி! குட்டி ஸ்டீல் தடுப்பு வழியா உள்ளே போனோம். வலப்பக்கம் ஒரு அல்லிக்குளம். என் கண்ணு என்னவோ தூரத்தில் இருக்கும் பறவை மீதுதான்.

கீழே தரையில் புதிய டைல்ஸ் பதிக்கும் வேலை நடந்துக்கிட்டு இருப்பதால் பக்கவாட்டுப் பாதையில் போகணும். வெல்கம் டு லங்காவி, ஜியோ பார்க் னு போட்ட ஒரு உயரம் குறைஞ்ச, நீள மேடை. க்ளிக் க்ளிக் ஆச்சு.
இன்னொரு பக்கம் Dataran Langனு இன்னொரு அமைப்பு. மலாய் மொழிப்பெயர். டடாரன் னு சொன்னால் சதுக்கம். அந்த லேங் என்பது கழுகு. கழுகுச் சதுக்கம். Eagle Square.
பறவையை நோக்கிப் போகும்போது நமக்கிரண்டு பக்கங்களிலும் பெரிய பெரிய கட்டடங்கள். பறவை என்னவோ நமக்கு முதுகு காட்டித்தான் நிக்குது. முகம் பார்க்க முன்னால் போகணும்.
வலையில் சுட்ட படம். அன்னாருக்கு நன்றி !கடல்தண்ணீரில் கொஞ்சம்தூரம் வரை நீண்டு போகும் அஞ்சு கோண நக்ஷத்திரவடிவின் ஒரு பக்கம் மேடையில் நிற்கும் பெரிய திருவடி தரிசனம் எனக்கு !
கழுத்தில் வெள்ளை நிறம் இருப்பதால் இது க்ருஷ்ணப்பருந்துன்னு நான் நினைக்கிறேன். ஆனால் உள்ளுர் வழக்கத்தில் ஊரின் பெயரே கழுகுன்னு இருப்பதால் இது கழுகு ! ஒரு காலத்தில் மனிதர்களே இல்லாத இந்தத்தீவில் கழுகுகள் மட்டுமே இருந்ததாகச் சொல்றாங்க.
கழுகுச்சிலையின் உயரம் பனிரெண்டு மீட்டர்னு தகவல். இது அந்த மேடையுடன் சேர்த்தியா என்னன்னு தெரியலை. அங்கே எல்லோரும் டூரிஸ்டுகள்தான். யார்கிட்டே கேக்கறது.... கூகுளாண்டவரிடம் கேட்டுக்கலாமுன்னு இருந்துட்டேன். ஆண்டவரும் பனிரெண்டுன்னே மொட்டையாச் சொல்றார். ப்ச்....
ஆனால் நமக்கொரு கதை கிடைச்சது ! இந்த லங்காவித்தீவுக்குச் சாபம் கிடைச்ச கதை. மாசூரி என்னும் பெயருடைய இளம்பெண் இங்கே இருந்துருக்காள். அழகின்னா அப்படி க் ஒரு அழகி ! இளவட்டப் பசங்களுக்கெல்லாம் இவமேலே ஒரு கண்ணு. யாருக்குக் கொடுத்துவச்சுருக்கோன்ற மனத்தவிப்பு.
அந்த கிராமத்துக்குத் தலைவனா இருக்கறவன், தன்னுடைய தம்பிக்கு இவளைப் பொண்ணு கேட்டுக் கல்யாணமும் ஆச்சு. சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கும் போது..... நாட்டில் போர் வந்துருச்சு. போர்வீரனான இவன், சண்டைக்குப் புறப்பட்டுப்போயிட்டான். சம்பவம் நடந்தது 18 ஆம் நூற்றாண்டில். (கெடா - ஸயாம் போர் 1821இல்) இந்தக் Kedah தானே கடாரம்னு சொன்னாங்க. ஸயாம் நாடுதான் இப்போதைய தாய்லாந்து. 1939லேதான் ஸயாம் என்ற பெயரைத் தாய்லாந்துன்னு மாத்துனாங்களாம். ) லங்காவியில் இருந்து தாய்லாந்து வெறும் முப்பது கிமீதான் !
மாசூரியின் அழகைப் பார்த்து கிராமத்தலைவன் மனைவிக்கு ஒரே பொறாமை. உள்ளுக்குள் குமுறிக்கிட்டே இருக்காள். ஓர்ப்படிகள் ஒத்துமையா இருப்பது அபூர்வம்தான் !
இங்கே மாசூரித் தனியா இருக்காள். அந்தக் காலக்கட்டத்தில் கிராமத்துக்குள் வந்த ஒரு நாடோடி பாட்டுக்காரனோடு நட்பா இருக்காள். இதைக் கவனிச்ச ஓர்ப்படி, இதுதான் சாக்குன்னு, மாசூரிக்கும், பாட்டுக்காரனுக்கும் கள்ளக்காதல்னு அபாண்டமாச் சொல்லி மாசூரியை நடத்தை கெட்டவள்னு ஊருக்குள் செய்தியைப் பரப்பிவிட்டுட்டாள். கிராமத்துச் சனம் கொதிச்சுப்போச்சு. கிராமத்தலைவனும் இதை நம்பி, மாசூரியை ஒரு மரத்தில் கட்டிப்போட்டுடறான். இவளைக் கத்தியால் குத்திக் கொல்லணுமுன்னு தீர்ப்பு.
விதவிதமான கத்திகளால் இவளைக் குத்தினாலும் இவள் சாகவே இல்லை. தான் எந்தத் தப்பும் செய்யாதவள்னு சொன்னாலும் சனம் நம்பமாட்டேங்குது. தினம் கத்திக்குத்துதான். சோறுதண்ணி இல்லாம மரத்தில் கட்டிப்போடப்பட்டவளுக்கு ஒரு சமயம் வெறுத்துப்போய், எங்க குடும்பத்தில் பரம்பரையா ஒரு கத்தி இருக்கு. எங்க அப்பாவாண்டைபோய், அதை வாங்கிட்டு வந்து என்னைக் கொல்லுங்கன்னுட்டாள். சனம் அப்படியே செஞ்சது. கத்தியால் குத்துனதும்.... குபுகுபுன்னு ரத்தம் வருது. அந்த ரத்தத்தின் நிறம் சிகப்பில்லை. ஒரே வெளுப்பு ! வெள்ளைரத்தம் பார்த்ததும் சனம் அரண்டுபோச்சு. மாசூரி மரணவாயிலில் இருக்காள்.
மரத்திலிருந்து கட்டை அவுத்து, இவளைத் தரையில் கிடத்துனாங்க. அரை மயக்கத்தோடுக் கண்களைத் திறந்தவள், 'நான் நிரபராதின்னு எவ்வளவோ கதறினேன். நீங்க நம்பலை. இப்போ என் உயிர் போகப்போகுது. என்னை தண்டிச்ச பாவத்துக்கு இந்த ஊருக்கும் மக்களுக்கும் ஒரு சாபம் விடறேன். ஏழுதலைமுறைக்கு உங்களுக்கெல்லாம் நல்லதே நடக்காது. படாத கஷ்டம் படப்போறீங்க'ன்னுட்டு உயிரை விட்டாள். மாசூரியின் அப்பாவும், குடும்பமும் இங்கேயே இருக்க விரும்பாம, ஸயாமுக்கே போயிடறாங்க.
பத்தினி சாபம் பலிச்சுருச்சு. போரில் ஸயாம் ஜெயிச்சுக் கெடாவைப் பிடிச்சுருச்சு. தீவச்சு விட்டதில் பயிர்பச்சை எல்லாம் போச்சு. உண்மையிலேயே இருபதாம் நூற்றாண்டுவரைக் கஷ்டப்பட்டுருந்தாங்க மக்கள். இப்போ மாசூரியின் சமாதியாண்டை உள்ளூர் கலைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் காட்சிக்கு வச்சு லிவிங் ம்யூஸியமா நடத்தறாங்க. Makam Mahsuri ன்னு டூரிஸ்ட்கள் வந்துபோகும் இடமா இருக்கு! (நாம் போகலை. ப்ச்.....)
நாளைக்குப் புதுவருசம் 2026 பொறக்குதுல்லே..... அந்தக்கணக்கில் பார்த்தால் 'இந்தக் கழுகு'குக்கு வயசு முப்பது. 1996 இல் கட்டியிருக்காங்க. ஊர்ப் பெயருக்கான அடையாளமாம்.
பனிரெண்டு மீட்டர்னா கிட்டத்தட்ட நாலுமாடி உயரம். அந்த ப்ரமாண்டத்துக்கு ஏத்தாப்போல பெரிய சிறகுகள். 'இதோ அடுத்த நொடி பறந்துபோயிருவேன்'னு சொல்றாப்போல இறகுகளை விரித்துப் புறப்படத் தயாரா இருக்கு!
முழுசாப் பார்க்கணுமுன்னா ட்ரோனில் படம் எடுக்கணுமாம். யாரோ புண்ணியவான் போட்டுருக்கும் வீடியோ க்ளிப் , யூ ட்யூபில் கிடைச்சது. சுட்டி கீழே ! ரெண்டு நிமிட்தான். பார்த்து ரசிக்கலாம்!
https://youtu.be/PNc2alF-WYA
மற்ற ஆட்கள் ஃப்ரேமுக்குள் வராமல் படம் எடுக்கறது ஒரு சவால்தான் ! செல்ஃபீ எடுக்கலாமுன்னா...... ஃப்ரேமுக்குள் அடங்காது. பயணி ஒருவர் உதவினார். அப்படியும் சிலர் பின்னாலே இருந்தாங்கதான். அவுங்களை மகள் கிளப்பிவிட்டாள்!!!!
கழுகின் நக்ஷத்திர ப்ளாட்ஃபார்முக்குக் கொஞ்ச தூரம்(3.2 கிமீ) தள்ளி இன்னொரு அழகான அமைப்பு ! சமீபத்தில் கட்டிவிட்டுருக்கும் டூரிஸ்ட் அட்ராக்ஷன். மஹா டவர்னு பெயர். அந்தமான் கடலை நோக்கி நிற்கும் இதன் மேலே ஏறிப்போய் சுத்துப்புறத்து அழகை ரசிக்கலாம். (Sky lounge & Observation deck. போயிருக்கலாமுன்னு இப்போத் தோணுது ) மேற்படி விவரம் தெரியாமல் கோட்டை விட்டுட்டோம். ப்ச்....
ஒரு அரைமணிநேரம்போல நம் பெரியதிருவடியாண்டை இருந்துட்டு அங்கிருக்கும் கட்டடங்களைப் போய்ப் பார்த்தோம். நினைவுப்பரிசுகள், சிறுதீனிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள், பொம்மை ரயில் இப்படிக் கொஞ்சம். நிறையப் பகுதிகள் ச்சும்மாத்தான் இருக்கு. வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கலை போல !


கேட்டாண்டை வந்து அல்லிக்குளத்தைப் பார்த்துட்டு, பெருமாளை செல்லில் கூப்பிட்டதும் அஞ்சு நிமிட்டில் வந்துட்டார். வேறெங்காவது போகலாமுன்னா.....எல்லாமே அரைமணி முக்கால் மணி தூரம். நாம் திரும்பிக் கப்பலுக்குப்போகவும் அரைமணி நேரம் ஒதுக்கணும். ஏதாவது கோவிலுக்குப்போகலாமுன்னா.... இப்போ மூடியிருக்கும். ரெண்டுங்கெட்டானா இருக்கேன்னு........ கப்பலுக்கே போயிடலாமுன்னு பெருமாள் கிட்டே சொன்னோம். அடுத்த முக்கால் மணி நேரத்தில் க்ரூயிஸ் போர்ட் கார்பார்க் வந்துட்டோம். திரும்பக் கப்பலுக்குப்போக நடக்கணுமேன்னு ஆயாசமா இருக்கு எனக்கு. அப்ப அங்கே ஒரு பத்தடி தூரத்தில் நின்னுருந்த வண்டியைப் பார்த்துட்டு ஓடிப்போய் அதைக் காத்திருக்கச் சொல்லிட்டு வந்தார் பெருமாள். ஷட்டில் சர்வீஸாம். அட! நமக்குத் தெரியாமல் போச்சே.....
பெருமாளோடு ஒரு க்ளிக் ஆச்சு. நன்றி சொல்லிக் கொஞ்சம் டிப்ஸ் கொடுத்துட்டு, ஷட்டிலில் கப்பலாண்டை வந்து சேர்ந்தோம்.
களைத்துப் போய்த் திரும்பி வரும் பயணிகளுக்காக சின்ன கூடாரத்தில் சின்ன ஐஸ் டவலும், ஐஸ் வாட்டரும் வெறும் வாட்டருமாக் காத்திருக்காங்க கப்பல் ஊழியர் சிலர். இந்த சூட்டுக்கு வேண்டித்தான் இருந்தது.
ஏழரை மணிவரை கப்பலுக்குத் திரும்பலாம் என்றாலும் மக்கள் திரும்பிவரத் தொடங்கியிருக்காங்க. கேங்வே வழியாப் படியேறி கப்பலுக்குள் நுழைஞ்சதும், நம்ம செல்ஃபோன் கெமெரா உட்பட ஸ்கேன் மெஷினுக்குள் போய் வந்துச்சு. நாமும் எலெக்ட்ரானிக் கேட் வழியாப் போகணும். செக்யூரிட்டி செக் முடிஞ்சதும் அறைக்குப் போனப்ப மணி நாலே முக்கால்தான். பார்க்க நிறைய சுவாரஸியமான இடங்கள் இருந்தாலும் போக்குவரத்துலேயே நேரப்பத்தாக்குறை ஆகிருது. ஒரு ரெண்டு நாள் லங்காவியில் தங்கினால் போதும்.
நம்ம பால்கனியில் நின்னு கண்களை ஓட்டினால் அதோ தூரத்தே நாம் பார்த்த அழகான மஹா டவர்! ஸூம் எதுக்கு இருக்குன்னு கிட்டக்கக் கொண்டு வந்தால் நம்ம 'கழுகார்' தெரியறார் !
சாயா குடிக்கப்போனோம். குக்கீஸ் கிடைச்சது. கப்பலில் டின்னர் டைம் , சாயங்காலம் அஞ்சரைக்கே ஆரம்பிச்சுருது. மக்கள் வந்து சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டாங்க. நமக்கு இப்போ பசி இல்லை. இண்டியன் வகைகளில் ஏதாவது இருக்கான்னு ச்சும்மாப் பார்க்கப்போனேன். இருந்தது அதே 'லாங்க் பீன்ஸ்'! அதுவும் அதே பாத்திரத்தில், அதே வகையில் ! நேத்து பாக்கி!!
கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் சூரிய அஸ்தமனம் பார்க்க மேல்தளத்துக்குப்போய் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு. முதல் நாள் பார்த்த அழகில்லை.............
கீழே தியேட்டரில் பாட்டுக்கச்சேரி. கொஞ்சம் கூட்டம் இருந்ததுதான். என்னால் இந்த இசையை ரசிக்கமுடியலை.
கஸீனோவுக்குப் போய் ஜஸ்ட் கொஞ்சநேரம் விளையாடணும். நான் இதுலே ரொம்பக் கருமி. அதிகப்பட்சமா பத்துடாலர் வரைதான், எப்போதும். ஒரு சென்ட் கேம் போதும். இதுலே ஜெயிச்சு மில்லியனர் ஆகும் எண்ணமெல்லாம் இல்லை. போரடிக்கும்போது ஜஸ்ட் டைம் பாஸ். ஒரு மெஷீனுக்குப்போய் ஒரு டாலரை அனுப்பிட்டு நம்மவர் காமிச்ச ஒன் சென்ட் பட்டனைத் தட்டினால் ஒன்னும் ஜெயிக்கலை. ரெண்டாம் முறையும் அதே. மூணாம் முறை தட்டினால்....' உன் காசு தீர்ந்துபோச்'னு சொல்லுது மெஷீன். அம்பது பெட் என்பதை இவர் கவனிக்கலையாம். அடுத்த டாலரைப் போடலை. போதும் போன்னு எழுந்து வெளியே வந்தாச்.
ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் அங்கங்கே நடக்குதுன்னாலும் எதுவும் என் டேஸ்ட்டுக்கு இல்லை.
எட்டுமணிக்குக் கப்பல் கிளம்பிருச்சு. நமக்கு அடுத்த ஸ்டாப் பெனாங்.
டின்னருக்குப் போனோம். கவனமா 'லாங்பீன்ஸ்' செக்ஷனைத் தவிர்த்துட்டு ஸாலட் பக்கம் போனோம். டிஸ்ஸர்ட்க்குப் பழங்கள். ஃப்ளாஸ்க்கில் வெந்நீர் எடுத்துக்கிட்டு அறைக்குப் போயாச். மருந்து, மாத்திரை, கால்வலிக்குத் தைலம் தேய்ச்சுக்கறது, இதுக்கிடையில் டிவியில் நேவிகேஷன் பாத், இப்படி இதெல்லாம் தான் எனக்கு மெயின் பொழுது போக்கு.

தொடரும்............ :-)





























0 comments:
Post a Comment