Friday, April 11, 2025

மாமா கா நாம், மாமா நஹி ஹை ! (2025 இந்தியப்பயணம் பகுதி 6)

காலையில் கண் திறந்தவுடன் இன்றைக்கு எங்கே போகலாமுன்னு கேட்டவருக்கு, அம்மாஜி மந்திர்தான் முதலில் என்று சொன்னேன். போனமுறை பார்த்த இடங்களை விட்டுட்டுப் பார்க்காதவைகளுக்கு முன்னுரிமை தரணும்.

சரியா ஒரு பதினொரு வருஷங்களுக்கு முன்னே அயோத்யா வந்துருந்தோம்.  நம்ம  திவ்யதேசப் பட்டியலில்  அயோத்யாவும் இருக்கு. மேலும் ஏழு மோக்ஷபுரிகளில் இதுவும் ஒன்னு!  ராமர் கோவிலைக் கட்டப்போவதாகப்பேச்சு பலவருஷங்களா நடந்துக்கிட்டு இருந்தது அப்பெல்லாம்.

நம்ம காசிப்பயணத்தில் அயோத்யாவையும் சேர்க்கலாமுன்னா..... அங்கே தங்கறதுக்கெல்லாம்  அவ்வளவா வசதிகள் இல்லைன்னு தெரிஞ்சதும்,  இலஹாபாத்தில் (இப்ப இதன் பெயர் ப்ரயாக் ராஜ் ) தங்கி, அங்கிருந்து அயோத்யா போயிட்டு  வரலாமுன்னு முடிவாச்சு.  

 பொதுவா யாத்திரைகளில் கூட்டமாகப் போறவங்களுக்கு  அந்தந்த நிர்வாகிகளே தங்குமிடம், உணவு எல்லாம் ஏற்பாடு செஞ்சுருவாங்க. ஆனால் எங்களுக்கு அப்படிப்போக வாய்ப்பே கிடையாது.  எப்போ இந்தியாவுக்கு வர்றமோ அப்போ சில கோவில்கள் என்ற வகையில்தான்  இதுவரை எல்லாமே.

போகவர நவ்வாலு மணி நேரம், ஊர் சுத்த இன்னொரு நாலு மணின்னு பனிரெண்டு மணி நேரத்தில் அயோத்யா போய் வந்தாச்சு.

அப்போ அந்தப் பகுதிகளை எழுதியதன் சுட்டி இது. அப்படியே நூல் பிடிச்சுப்போகணும். பயந்துறாதீங்க..... வெறும் நாலே பதிவுகள்தான். நாலு மணி நேரத்துக்கு நாலு !

 
பாலராமனைச் சரியாப்பார்க்கலையேன்னு  இருந்ததும் உண்மை. கோவில் கட்டினால் ஒரு முறை வந்து தரிசனம் பண்ணிக்கணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டுருந்தேன். போனவருஷம் (2024) ராமர் கோவிலைக் கட்டிமுடிச்சுக் கும்பாபிஷேகமும் ஆச்சுன்னதும் மூளை முடிச்சுப் பிறாண்ட ஆரம்பிச்சது. ஆகஸ்ட்னு முடிவானதும், உடல்நிலை காரணம் ரத்தானதும் எல்லாம் இப்போ பழைய கதை.

திவ்ய தேசக்கோவில்கள் என்றால் ஆழ்வார்கள் வந்து  பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கணும், இல்லையா ? சில இடங்களில்  மனக்கண்களால் தரிசிச்சும் பாடல்கள் பாடி இருக்காங்கதான்.  முக்திநாத் இவைகளில் ஒன்னு ! அதே போல  நைமிஸாரண்யத்திலும்  மரங்கள் நிறைஞ்ச காடுதான் கோவில்னு சொல்வாங்க. (நம்ம நைமிஸாரண்யப் பயணத்தில்  திவ்யதேசக்கோவில் என்ற பெயர்போட்டக் கோவிலில் தரிசனம் செஞ்சோம். )  இங்கே  அயோத்யாவில்  தனிப்பட்ட எந்தக் கோவிலும் திவ்யதரிசனப்பட்டியலில்  இல்லை. மொத்த ஊருமே ராமர் காலடி பட்ட இடம் என்பதால் ஊரேதான் கோவில். நாம் முன்பு அயோத்யா  வந்த  பயணத்தில், அம்மாஜி மந்திர், திவ்யதேசக் கோவில்னு சிலர் சொன்னாங்க. மதியம் கோவில் மூடி இருக்கும் நேரம் என்பதால் நாம் போகலை. மேலும் அந்தக் கோவிலுக்கு வயசே இப்போ 121 தான். ஆழ்வார்கள் காலம்  ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரைதானே ! 

சரி எதாக இருந்தாலும்  இன்று முதல் கோவில் அம்மாஜி மந்திர்தான் ! 

 மாமாவை செல்லில் கூப்பிட்டுப் பேசி காலை ஒன்பதரைக்கு வரச் சொன்னோம். 

ஐராவின் ரெஸ்ட்டாரண்டில் மெனுகார்டே கிடையாது!  காலை, மதியம், இரவுன்னு மூணு வேளைக்கும் பஃபேதான். விலைப்பட்டியல்னு கூட ஒன்னும் இல்லை.  எல்லா வேளைக்கும்  ஒரே விலை !  'எல்லாம் செஞ்சு வச்சாச்சு.  எது இஷ்டமோ அதையெல்லாம் நீயே எடுத்துப்போட்டுச் சாப்பிட்டுக்கோ' ! 

எல்லா வகைகளையும் ஒரு நோட்டம் விட்டேன்.  ஜலேபி மட்டும் சுடச் சுடத்தயாராகுது. தோசை வேணுமுன்னால் உடனே செஞ்சு கொடுக்கறாங்க. நமக்கு ரெண்டு இட்லி & ஒரு தோசை வித் மூணு வகைச் சட்னி, கூடவே இனிப்பா ஒரு சாம்பார். (என்னதான் சொல்லுங்க,  நம்ம லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டை அடிச்சுக்க முடியாது கேட்டோ !)
கீழே வந்தாச்சுன்னு மாமா செல்லில் கூப்பிட்டுச் சொன்னார்.  மாமாவைப் பார்த்ததும் என் முதல் கேள்வி........... உங்க பெயர் என்ன ? கொஞ்சம் திடுக்னு பார்த்தவர் தீப் (Deep ) என்றார்.  மாமாவே பழக்கமாகி இருக்கு போல !  அடுத்த கேள்வி, ஏன் எல்லோரும் மாமான் னு குறிப்பிடறாங்க? கூப்பிடறதும் அப்படியேதானே ? 

இந்த ஐரா ஹொட்டேல் முற்றத்தையொட்டியே சின்னதா ஒரு  டீக்கடை  ஒன்னு. யாதவ் ஜி டீ ஸ்டால்.  அதை நடத்தறவர் நம்ம தீப் பின் மருமகன்.  அவர் மாமான்னு கூப்பிடறதால் எல்லோருக்கும் இப்ப தீப்,  மாமா ஆகிட்டார்.

அயோத்யாவில் உள்ள பெரிய ஹொட்டேல்கள் எல்லாமே கோவில் கட்ட ஆரம்பிச்சவுடனே அவசர அவசரமா  ஆரம்பிச்சவைகள்தான்.  அதிலும் இந்த ஐரா ஹொட்டேல்,  ஸ்ரீ ராமஜன்மபூமி புதுக்கோவில் திறப்பு விழா ஆன  மூணுமாசத்துக்குப்பிறகுதான்  2024 ஸ்ரீராமநவமி தினத்தில் திறக்கப்பட்டுருக்கு ! 
தீப்  ஓட்டிவந்த ஆட்டோ, நம்மூர் சென்னை ஆட்டோவைவிட வேறொரு டிசைனில் இருக்கு. சட்னு என்னால் ஏறி உக்கார முடியாதபடி கொஞ்சம் உசரம் கூடுதல். தீப், ஓடிப்போய் ரெண்டு செங்கல் கற்களை எடுத்துவந்தார். (அக்கம்பக்கம் எல்லாம் கட்டட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு !)அதுதான் எனக்குப் படி. ஏறினதும், செங்கற்களும்   ஆட்டோவில் ஏறி என் காலாண்டை உக்கார்ந்தன. இறங்கும்போதும் வேணும்தானே ?        

இங்கெல்லாம் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள்தானாம்.  ஒருமுறை சார்ஜ் செஞ்சால் சுமார் நூறு கிமீ வரை போகலாமாம். 

அம்மாஜி  மந்திர் ஒரு ஒன்பதரை கிமீ தூரத்தில் ஊருக்குள் இருக்கு.  சில இடங்களில் நல்ல சாலைகள் இருந்தாலும் பல இடங்களில் சந்துகளில் புகுந்து போய்க்கிட்டு இருந்தோம். ஆனால்  ஊர்முழுக்க சனக்கூட்டம். ப்ரயாக் ராஜில் நடக்கும் மஹாகும்பமேளாவுக்கு வந்த சனம், அப்படியே அயோத்யா, காசின்னு  ஒரு சுத்துப்போயிட்டுதான் போறாங்களாம். 
முக்காமணி நேரமாச்சுக் கோவிலுக்குப் போய்ச் சேர !  ஒன்பதரைக்  கிமீ தூரம்தான். வெளிவாசல் சுவரில் போர்டு ! 

 உள்வாசலாண்டை ரெண்டுபேர் உக்கார்ந்துருந்தாங்க. ஒருவர் செக்யூரிட்டி, மற்றவர் கோவில் பட்டர் ஸ்வாமிகள்.   வாசலுக்கு நேரக் கொடிமரமும் பலிபீடமும் கண்ணில் பட்டன. நம்மைப் பார்த்துட்டுப் பட்டர் ஸ்வாமிகள் எழுந்து உள்ளே வந்தார். 

தெலுங்கான்னார்.  இல்லை. தமிழ் என்றேன்.  பூட்டி இருந்த சந்நிதிக்கதவைத் திறந்ததும், 

" உள்ளே வாங்கோ .  இன்றைக்கு நீங்கள்தான் முதல் பக்தர்கள். யாரும் வரலையேன்னு கொஞ்ச நேரம் வெளியிலே வெயிலில் உட்கார்ந்துருந்தேன்"
'அட  ராமா....  ஏகாந்த தரிசனம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்'னு  மூலவரிடம் சொன்னேன். ஆரத்தி, சடாரி, துளசித்தீர்த்தம் எல்லாம் லபிச்சது !

எங்கிருந்து வந்துருக்கோம், என்ன ஏது விவரங்கள் எல்லாம்  சட்னு ஒரு  விசாரிப்பில் ஆச்சு ! 

"பாலராமர் தரிசனம் ஆச்சோ? "

"இல்லை. நாளைக்கு மத்யானம் ."
'படம் எடுத்துக்கவா'ன்னு கேட்டதுக்கு  எடுத்துக்குங்கோன்னார் ஜகந்நாத பட்டர்.  மனம் நிறைஞ்சது.  கருவறையில் ராமர், சீதை, லக்ஷ்மணர்,ஆஞ்சு , கருடாழ்வார் எல்லாம் கற்சிலைகள். ஆனால் எல்லோருக்கும் வெள்ளிக்கவசம் சார்த்தியிருக்கு.  மற்றவர்கள் எல்லாம் விக்ரஹங்கள்.  நல்ல கூட்டம்தான் !
அடுத்த சந்நிதியில் ஸ்ரீ ரங்கநாதர் ! 
இன்னொரு சந்நிதி ஆழ்வார்களுக்கு !
வெளியிலே ஜயவிஜயர்கள் அருமை !  

தொன்னையில் ப்ரஸாதம் கிடைச்சது. புளியோதரைன்னு நினைக்கிறேன். 
இப்போ ஒரு ரெண்டு வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீ ராமானுஜர் சிலை (பளிங்கு )  ஸ்தாபிதம் ஆகி இருக்கு !  நல்ல அழகா இருக்கார் ! 
 சுற்றும்பொதுதான்  தென்னிந்தியக் கலையழகோடுள்ள கோபுரத்தைக் கவனிச்சேன். லக்ஷ்மி நரஸிம்ஹர். . இது கருவறை விமானம்!

 நல்ல பெரிய இடம்தான்.  வளாகம் முழுசும் நிறையக் கட்டடங்கள் ! யாத்ரீகர் வந்தால் தங்குவதற்கோ என்னவோ ?      



இதுவரை ராஜகோபுரம் எல்லாம் இல்லை.  வருங்காலத்தில் வர வாய்ப்புண்டு !

நம்ம ஆஞ்சு, குளிர்காரணம் கம்பளிச் சொக்கா, குல்லா எல்லாம் போட்டுருந்தது. சந்நிதி இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்துருக்கலாம்.......

கோவிலுக்குள்ளே யோகி பார்த்தசாரதி ஐயங்கார், யோகி சிங்கம்மாள் புகைப்படங்கள் ! இந்தக் கோவில் இங்கே இருப்பதற்கான காரணகர்த்தாக்கள் !

நம்ம திருவல்லிக்கேணியில் இருந்து வட தேசங்களுக்கு யாத்திரை வந்த தம்பதிகளான திரு பார்த்தசாரதி அய்யங்காரும், அவர் மனைவி திருமதி சிங்கம்மாளும் அயோத்யா வந்து சிலநாட்கள் தங்குனப்ப, இங்கே ராமனுக்கு ஒரு கோவில் கட்டச் சொல்லி கனவில் உத்திரவாயிருக்கு. ஆர்டர் போட்டவர் நம்ம தில்லக்கேணி மீசைக்காரரே! ஸோ இது பார்த்தஸாரதி சொல்ல, பார்த்தஸாரதி கட்டுன கோவில். அப்புறம் சில வருசங்கள் கழிச்சு ஐயா பார்த்தஸாரதி சாமிகிட்டே போகவும், அம்மா(ள்) சிங்கம்மாள் கோவிலைப் பொறுப்பேத்து நடத்தறாங்க. அம்மாளின் சேவை பிரபலமாகி,கோவிலுக்கே அம்மாஜி மந்திர்னு பேரு கிடைச்சுருச்சு. வடக்கர்களுக்கு அம்மா அம்மா என்னும் சொல் பழகிப்போயிருக்கு. அம்மான்னா சும்மா இல்லை கேட்டோ!!!

அம்மாவும் கணவர் மறைவுக்குப்பின் முப்பது வருசம் அயோத்யாவில் தங்கி பூஜைகள் நடத்தி கோவிலை நல்லபடி கவனிச்சப்பிறகு சாமிகிட்டே போயிட்டாங்க.

இன்னொருமுறை கருவறை ராமரைக் கும்பிட்டுக்கலாமுன்னு பார்த்தால் பட்டர் ஸ்வாமிகள் கதவைப் பூட்டிக்கிட்டு, வெளியே வெயில்காயப் போயிட்டார்.  அங்கே பேச்சுத்துணைக்கு வாட்ச்மேன் இருக்காரே !  பாவம் அவரும்தான் ஆளில்லாத இடத்தில் எத்தனைநேரம் மூலவரை மட்டுமே பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருப்பது ?  

பட்டர்ஸ்வாமிகளிடம் சொல்லிக்கிட்டுக் கிளம்பினோம்.  ஆட்டோபக்கத்தில் ஆஞ்சி இருந்தார். ஒரு தொன்னை ப்ரஸாதம் அவருக்கு.  இன்னொன்னுக்கு நம்ம தீப் !   


இதோ கிளம்பியாச்சு,  அடுத்த இடத்துக்கு !

தொடரும்...... :-)








Wednesday, April 09, 2025

மக்கள் சேவையில் முக்தாமணி ஜி ! ( 2025 இந்தியப்பயணம் பகுதி 5 )



நல்ல விஸ்தாரமான  முன்பக்கத்தோடு (நீரூற்று எல்லாம் இருக்கு !)கொஞ்சம் உள்ளே தள்ளிதான்  கொஞ்சம் உயரத்தில் ஹொட்டேல் கட்டி இருக்காங்க. ஒரு பத்துப்படியேறி மேலே போகணும். படிகளைப் பார்த்து கொஞ்சம் யோசனை வந்ததுதான், ஆனால் பக்கவாட்டில்  சின்னதா ஒரு லிஃப்ட் வசதி இருக்கு.  முன் வாசலுக்கு நேரா மேம்பாலம் போகுது.  அந்தப் பாலத்தின் வழியாத்தான் நாம் வந்திறங்கினோம்.  அயோத்யா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலை !       
இது என்னடா.... ஐரான்னு பெயர்னு விசாரிச்சதில், இது பூலோகத்துக்கான சமஸ்க்ரதப் பெயர், கலைவாணி சரஸ்வதியின் அறிவு, ஞானம், கலை, சங்கீதம் எல்லாத்தையும்  போற்றும்   சொல்னு சொன்னாங்க. சரின்னு கேட்டுக்கிட்டேன். 
\
அறை நல்ல வசதியாகத்தான் இருக்கு. நாலு நக்ஷத்திரத்துக்குள்ளவை.  நமக்கு உதவியாளரா வந்தவர் ராகவ் என்பவர். பொதுவான சில விசாரிப்புகளுடன், மறுநாளைக்கு எங்கெல்லாம் போகறீங்க. வண்டி ஏற்பாடாச்சான்னார்.   




 



இல்லை. ஹொட்டேல் ட்ராவல் டெஸ்க்லே டாக்ஸிக்குச் சொல்லணும் என்றதும், பொதுவா  உள்ளூர்லே சுத்திப்பார்க்க டாக்ஸி வேலைக்காகாது. ஆட்டோ ரிக்‌ஷாதான் நல்லதுன்னார்.  தெரிஞ்ச ஆட்டோக்கார் இருக்கார். அவர் ஃபோன் நம்பர்னு ஒன்னு தந்தவரிடம், ஆட்டோக்காரர் பெயர் என்னன்னு கேட்டேன்.  'மாமா' ன்னு பதில் வந்தது.
 
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு,  அறையிலேயே  டீ போட்டுக் குடிச்சோம்.  வைஃபை இருந்ததால் கொஞ்சம் வலை மேயலும் ஒரு குட்டித் தூக்கமும் ஆச்சு.  

எனக்கு ஃபேஸ்புக் மூலம்  அயோத்யாவிலிருந்து ஒரு ஆன்மிக நட்பு கிடைச்சுருக்கு.  தினசரி பூஜைபுனஸ்காரச் செய்திகளை  அனுப்புவார். ஏதோ ஆஸ்ரமம் நடத்தறார்னு மேலோட்டமாத் தெரியும்.  நான் வேற 'அயோத்யா அயோத்யா'ன்னு ஸ்மரணை பண்ணிக்கிட்டே இருந்தேனா.....  அயோத்யாவாசின்னதும் சட்னு பிடிச்சுப்போச்சு. முக்தாமணி சாஸ்த்ரின்னு பெயர்.

போன இந்தியப்பயணத்தில் (கேன்ஸல் ஆச்சே.... அது ) அயோத்யா போறோமுன்னதும் ரொம்பவே உற்சாகமா, அயோத்யாவுக்கு வர்றேன்னு தகவல் சொல்லி இருந்தேன்.  ப்ச்.... அப்புறம்தான் அது இல்லாமப்போச்சே..... ஹூம்.....

இந்தமுறை அயோத்யாவுக்கு வரும் எண்ணம் இருக்குன்னு சேதி அனுப்பி இருந்தேனா.... எப்போ வர்றீங்க ? எங்க கூடத் தங்குங்கன்னு பதில் அனுப்பி இருந்தார். ரொம்ப நன்றி.  வரும்போது சொல்றேன்னு சொல்லியிருந்தேன். 
இந்தியா வந்ததும்..... (நம்ம பேஸ்புக் பக்கத்தில் பார்த்திருப்பாரில்ல ! ) எப்ப அயோத்யான்னு கேட்டுக்கிட்டே இருந்தார். நம்ம நிலமைதான்  சட்னு சொல்லிக்கறமாதிரி இல்லையே.....  வந்து இறங்கினதும் உங்களைத் தொடர்பு கொள்வோமுன்னு சொன்னேன்.

இன்றைக்கு அங்கே போய் இறங்கிட்டோமில்லையா.....  சாஸ்த்ரி ஜிக்குத் தகவல் அனுப்பினேன்.  'எப்போ உங்களைப் பார்ப்பது ? இன்றைக்கு வேற ஒரு திட்டமும் இல்லைன்னா.....  விஸிட்  வர்றீங்களா ?  வண்டியை அனுப்பறேன்'னு  சொன்னார்.

நம்மவரிடம் போய் வரலாமான்னதும் சரின்னுட்டார்.  ஆறு மணிக்கு வண்டி வரும். வந்தது. நாங்களும் தயாரா இருந்தோம். ஒரு ஏழரைக்கிமீ தூரம்தான் என்றாலும்  கிட்டத்தட்ட முக்கால்மணி நேரமாயிருச்சு. பகவத் க்ருபா  ஸேவா ஆஷ்ரம்னு பெயர் போட்ட கட்டடம்.   இருட்டிப்போனதால் படம் எடுக்கலை.
மேலே படம்: வலையில் இருந்து. 

ரெண்டு சிறுவர்கள் நம்மை வரவேற்று உள்ளே  கூட்டிப்போனாங்க.  சாஸ்த்ரி ஜி, மேடையில் ராமாயணப் பிரசங்கம் செஞ்சுக்கிட்டு இருந்தார்.  தலையசைத்துக் கைகூப்பினார். நாமும் வணக்கம் சொல்லிட்டு இருக்கைகளில் போய் உக்கார்ந்து ராமாயணச் சொற்பொழிவைக்கேட்டோம். 
 பெரிய மாடத்தில் இருந்த ராமர் & கோ  சிலைகளுக்கு எல்லோரும் வரிசையில் நின்னு ஆரத்தி எடுத்தோம். எங்களுக்கு ஒன்னும் வித்யாசமாகவே இல்லை. நம்ம ஊரில் ஃபிஜி சநாதன Dதரம் சபாவுக்கு, ராமாயண வாசிப்புக்குப் போவேமே.... அதே ஸ்டைல்தான். 
ப்ரஸாதம் ஆனதும்,  சாஸ்த்ரி ஜி, நம்மை மாடிக்குக் கூப்பிட்டுப்போனார்.  படிகளைப் பார்த்து 'திடுக்' ஆச்சு என்றாலும், மனசுக்குள் ராமா ராமான்னு சொல்லிக்கிட்டே ரெய்லிங் பிடிச்சு ஒரு வழியா மாடிக்குப் போயிட்டேன்.  அங்கே ஒரு பெரிய அறை ! குசலப்ரசன்னம் எல்லாம் ஆச்சு. நம்ம லோட்டஸாண்டை இருக்கும் சுஸ்வாதில் இருந்து வாங்கிப்போன சில இனிப்பு & காரம் வகைகளைக் கொடுத்தோம். 
நமக்கு நாமம் போட்டுவிட்டாங்க சிஷ்யப்பசங்க. கீழே இறங்கிப்போய் மற்ற பக்தர்களுடனும் சாஸ்த்ரி ஜி யின்  மனைவியுடனும் கொஞ்ச நேரம் பேசிட்டு,  சாப்பிடச் சொன்னதும், இன்னொரு சமயம் வர்றோமுன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.  திரும்ப வரும்போது அரைமணி நேரம்தான் ஆச்சு. இவருக்கு உலகம் பூராவும் பக்தர்கள் நட்பு இருக்கு. நாம் போனபோது கனடா பக்தர்கள் வந்துருந்தாங்க.   
\
அயோத்யாவில் இருக்கும்வரை, என்ன உதவி வேணுமுன்னாலும் தயங்காமல் கேட்கச் சொல்லி சேதி அனுப்பிக்கிட்டே இருந்தார்.  சாஸ்த்ரி ஜி யின் உதவும் மனசுக்கும், நம்மிடம் காண்பித்த அன்புக்கும் இங்கே மீண்டும் ஒருமுறை நம்ம நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்!


ஐரா திரும்பியதும்,  ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டில் போய் டின்னரை முடிச்சுக்கிட்டோம். 

நாளைக்குக் காலையில் 'மாமா'வுக்கு ஃபோன் போடணும்.

தொடரும்........... :-)


Monday, April 07, 2025

ராமனைத்தேடி............... (2025 இந்தியப்பயணம் பகுதி 4 )

பகல் பனிரெண்டரைக்கு சந்திக்கச் சொன்னேன்.  யாரை ? எங்கே ?  சாந்தோம் சர்ச்சுலே !  இங்கே நியூஸியில் நம்ம நெடுநாள் தோழியின் மகளின் செய்தி நேத்து இரவு கிடைச்சது. 
பெங்களூரில் ஆர்ட் ஆஃப் லிவிங்  வகுப்புகளுக்காக (!)வந்திருந்ததாகவும், அதை முடிச்சதும்  தன்னுடைய கஸின்களோடு கேரளா சுற்றுலா போயிட்டுச் சென்னை வந்துருக்காங்களாம்.  நேத்து ED Sheeran  Concertக்கு எல்லோரும் போயிருக்காங்க. 

இன்றைக்கு மற்றவர்கள் எல்லாம்  திரும்பிப்போயிருவதாகவும்,  தன்னுடைய ஃப்ளைட் சாயங்காலம் என்பதால் ,  நம்மை வந்து பார்த்துட்டுப் போக விரும்புவதாகவும் தகவல்.  
சென்னையில் ஏதாவது குறிப்பிட்ட இடம் போகும் எண்ணம் இருக்கான்னதுக்குக் கபாலியும், சாந்தோம் சர்ச்சுமாம் ! 

நம்ம கோவில்கள் எல்லாம் பகல் பனிரெண்டரைக்கு மூடிருவாங்க என்றதால்.... முதலில் கபாலீஸ்வரரை தரிசனம் பண்ணிக்கச் சொன்னேன்.  அங்கிருந்து கிளம்பி சாந்தோம் சர்ச். அப்ப நாம் போய் சேர்ந்துக்குவோம். லஞ்ச் நம்மோடன்னு சொன்னேன்.



ரொம்ப பக்திப்பரவசத்தோடு கோவில் தரிசனம் ரொம்ப நல்லா இருந்ததுன்னு சொன்னதும், அந்தக்கோவில் ஆதிகாலத்தில் இந்த சர்ச் இருக்குமிடத்தில்தான்  இருந்தது. வெள்ளையர் கைவரிசை காட்டியதால் கோவில் அங்கே போயிருச்சுன்னு 'சரித்திரக்கொடுமை'யைக் கோடி காமிச்சேன்.



மெரினா பீச் பார்க்கணுமாம். மொட்டை வெயிலில் என்னத்தைப் பார்க்கறது ?  இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா ஒரு ரைடு ஆச்சு.
லஞ்சுக்கு அடையாரில் கைலாஷ் பர்பத் போனோம். சிங்கையில் இருக்கும் தரமும் ஒழுங்கும் இல்லைதான்.  ப்ச்.....  சாப்பிட்டதும்  லோட்டஸுக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். 
மருத்துவக்கல்லூரி மாணவி. ஊர் திரும்பியதும், கல்லூரி ஹாஸ்டல் வாசம்தான்.  நம்ம பேட்டையைச் சுத்திக் காட்டலாமுன்னு பாண்டிபஸாரில் ஒரு சுத்து, நம்ம கீதா கஃபேவில் ஒரு டீ.   திரும்பக் கொண்டுபோய்  அவுங்க ஹொட்டேலில் விட்டுட்டு,  பக்கத்தில் எக்ஸ்ப்ரெஸ் மாலுக்குப் போயிட்டு வந்தோம். ஒன்னும் வாங்கிக்கலை கேட்டோ !
நம்ம லோட்டஸில் குறிப்பிடத்தக்க ஒரு வசதி என்னன்னா..... நாம் இந்தியப்பயணத்துக்குக் கொண்டுபோகும் பெரிய பெட்டிகளை, உள்ளூர் பயணத்தில் கட்டிவலிக்க வேணாம்.  உள்ளுர் பயணத்திலும் செக்கின் பெட்டிகள் பதினைஞ்சு கிலோ மட்டுமே அனுமதி என்பதால் பெரிய பெட்டிகள் ஸல்யம்தான். உள்ளுர் பயணம் போகும்போது, பெருசையெல்லாம்  இங்கேயே ஸ்டோரேஜில் போட்டுட்டுப் போகலாம். இதுக்குன்னு கூடுதல் சார்ஜ் ஒன்னும்  இதுவரை இல்லை. (டச் வுட்)

நமக்கு ஒரு வாரத்துக்குத் தேவையானவைகளை கேபின் பேகில் எடுத்துவச்சுட்டு, மற்றவைகளைக் கீழே ஸ்டோரேஜுக்கு அனுப்பிட்டு  ஞாயிறு காலை  அஞ்சேமுக்காலுக்குக் கிளம்பி மீனம்பாக்கம் போனோம்.  நம்ம ட்ராவல் கம்பெனி முதலாளி  சதீஷ் வந்து  கூட்டிப்போனார். 

முதலில் ஏர்டிக்கெட் புக் பண்ணும்போது..... சென்னை -அயோத்யா ஃப்ளைட் நிறுத்தியாச்சு. தேவையான கூட்டம் வர்றதில்லைன்னு காரணம் சொன்னாங்க. அதனால் சென்னையிலிருந்து பெங்களூர் போய் அங்கிருந்து அயோத்யான்னு டிக்கெட் எடுத்திருந்தோம். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க.....  பெங்களூரில் நாம் பயணிக்கும் நாளில் ஏர்ஷோ நடக்கப்போகுதாம்.  அதனால் பெங்களூர் வழியாகப்போகாமல் ஹைதராபாத் வழி போகணுமுன்னு  டிக்கெட்டை மாத்திக் கொடுத்தாங்க. 

இது காலை 7.55க்குக் கிளம்புது. குறைஞ்சபட்சம் ஆறரைக்காவது ஏர்ப்போர்ட்டில் இருக்கவேண்டியதாகப்போனதால்  காலையில்  வெறும்வயித்தோடு கிளம்பிப்போய்க்கிட்டு இருக்கோம். வெறும் ஒன்னேகால் மணி நேரம்தானே?  அங்கே போய் ஏதாவது சாப்பிட்டுக்கலாம்.   இதுலே எனக்காக வீல்சேர் வேற  ஏற்பாடு செஞ்சுருக்கார் நம்மவர். வேண்டாம், மெதுவா நடந்து வர்றேன்னா கேட்டால்தானே ? 

ஒரு வேடிக்கையும் பார்க்க முடியாமல் சேரில் கட்டிப்போட்டாப்போல  இருக்கு. ப்ச்..... ஜான்ராஜ் என்பவர்தான் உதவி.  ஃப்ளைட்டில் ஏறுமுன் கொஞ்சம் அன்பளிப்பு கொடுக்கலாமுன்னா.....  வேணாமுன்னு சட்னு போயிட்டார். 
ஹைதை போய்  இறங்கினால்..... வீல்சேருக்கு பதிலா ஒரு பெரிய Buggy யில் எல்லா வீல்சேர் பயணிகளையும் வாரிப்போட்டுக்கிட்டுக் கொண்டுபோய் இறக்கினாங்க.  செக்யூரிட்டி செக்கிங்   முடிச்சு உள்ளே போயிட்டோம்.  சாப்பிடக் கடை தேடினால் ஒன்னும் சரியா இல்லை. நமக்கு அடுத்த ஃப்ளைட் பகல் ஒரு மணிக்குத்தான். நிறைய நேரம் இருந்தது. பேசாம வெளியே போய் சாப்பிட்டு வந்துருக்கலாம், இல்லே ? ப்ச்....

ஒரு பீட்ஸா கடையில் வெஜ் பீட்ஸாவுக்கும் காஃபிக்கும்  ஆர்டர் செஞ்சு காத்திருந்தோம்.  அரை மணி போச்சு. பீட்ஸா பார்க்க நல்லா இருக்கே தவிர தேஸலா இருக்கு. ச்சீஸ் என்னும் சமாச்சாரத்தையே காணோம்!  ப்ச்.....
இன்டிகோ  தொடங்கி 18 வருஷம் ஆச்சாம் ! How time flies ? னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க !  
பனிரெண்டரை வரை தேவுடு காத்துருந்து (  உண்மையில் தேவுடு தரிசனத்துக்குத்தான் போறோம், இல்லை!!!) அடுத்த ஃப்ளைட் ஏறியாச்சு. ரெண்டு மணிநேரமும் அஞ்சு நிமிட்டும் பறக்கணும்.  மேகமூட்டத்தில் காட்சிகள் ஒன்னும் தெரியலை. அயோத்யா நெருங்கும்போது சரயூ கண்ணில் பட்டது.  நல்லா பரந்து விரிஞ்ச நதி. தண்ணீரைத்தான் காணோம்.....


சின்ன ஏர்ப்போர்ட்தான்.  மஹரிஷி வால்மீகி இன்டெர்நேஷனல் ஏர்ப்போர்ட் !  
செக்கின் செய்த பெட்டி வந்து சேரக் காத்திருக்கவேண்டியதாப் போச்சு. 



உள்ளே ராமன் சம்பந்தப்பட்ட ராமாயணக்காட்சிகள்  அருமை ! சிலபல க்ளிக்ஸ் ஆச்சு. டாக்ஸியைத் தேடுனதில் ஒரு தனியார் வண்டி ஆப்ட்டது. 

IRA வில் தங்கறோம்.  ஏர்போர்ட்டில் இருந்து சுமார் எட்டரை கிமீ தூரம். வரவேற்பில் நல்ல வரவேற்பு ! 

தொடரும்............ :-)