Thursday, June 08, 2023

நல்லவர்களைக் காண்பதும் நன்றே !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 57

உடம்பு சரியில்லைன்னா  முகமே மாறிடுது இல்லை..... எனக்கே பார்க்கப் பாவமா இருக்கு.  ஏறக்குறைய  செத்துப்பிழைச்ச மாதிரிதான்.  தப்பிச்சார் என்ற நிம்மதியில் ஒரு பரிசு வாங்கிக்கொடுக்கலாமுன்னு ப்ரின்ஸ் நகைக்கடைக்குக் கூட்டிப்போனேன்.  இன்றைக்கும் நம்ம விஜிதான் டிரைவர்.  சுமாரான எடையில்  ஒரு ப்ரேஸ்லெட்.  கடையின் விற்பனையாளர் நல்ல உதவி செஞ்சு கனம் கூடாமல் பார்த்துக்கிட்டாங்க :-)

லோட்டஸுக்கு வந்து ஆஞ்சிக்கு மாலையாப் போட்டுக் கும்பிட்டேன்.

'எப்படியும்  நீங்க  கிளம்புமுன் வந்துருவேன்மா'ன்னு  சொன்ன   நம்ம மகள் சங்கீதா ராமசாமி, ஊரைவிட்டுக் கிளம்பியாச்சுன்னு சேதி அனுப்பினாங்க. சென்னை வந்து சேர குறைஞ்சது அஞ்சாறு மணி நேரமாகுமாம்.  பஸ்ஸுலே வர்றாங்க என்பதால் கோயம்பேடுக்கு வண்டியை அனுப்பவான்னு கேட்டதுக்கு,  தோழி வந்து கூப்புட்டுக்குவாங்கன்னுட்டாங்க. 

 இந்தக் கணக்கில் எப்படியும்  சாயந்திரம் நாலு மணி ஆகிரும்தான்.  அதுவரை இங்கே அக்கம்பக்கம் போய் வரலாமுன்னா.... எடை எடை....
சரி. ஊர்ப்போய்ச் சேர்ந்ததும்  அன்றைக்கே நம்ம குடும்ப மருத்துவரைப் பார்க்கணும் னு  ஃபோன் செஞ்சு அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கியாச்சு.  இனி லைஃப் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தியமைச்சுக்கணுமுன்னு பேசிக்கிட்டு இருந்தோம்.

அப்பப்ப ஒரு வேகத்தில் தீர்மானம்  எடுப்போம் பாருங்க..... அதேதான். இன்றையத் தீர்மானம் ஊருக்குப்போய்ச் சேர்ந்ததும்  தினமும் கொஞ்சமாவது  வெளியில் நடக்கணும்.  டிசம்பர் முதல் நம்ம கோடைகாலம் ஆரம்பிக்குதே....

அப்புறம் தினமும் நடந்தீங்களான்னு கேக்கப்டாது.....   இந்தியாவில் இருந்து நியூஸி வரும்வழியில்  நேற்றுப்போட்ட தீர்மானம்  காத்தோடு போயாச்சு. என்ன சம்மரோ....... குளிர்கால உடுப்பெல்லாம் போட்டுக்கிட்டுத்தான்  வெளியே காலடி வைக்கணும்.  யாராலெ ஆகுதுன்னு சொல்லுங்க சுமை தூக்கி நடக்க.... ப்ச்..... குனிஞ்சு ஷூ போட்டுக்கறதும் ஒரு தொல்லை...

நம்ம நண்பர் கார்த்திக் (கீதாப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன் ) Decathlon shoes  கனமும் இல்லை, லேஸும் கட்ட வேணாம். சுலபமாப் பாதத்தை நுழைச்சுக்கலாம் என்றதால்  இங்கேயே வாங்கிக்கலாமுன்னு கடையைத் தேடிப்போனோம்.  Decathlon Sports India, Ramee Mall . வாசலில் புள்ளையார் இருக்கார்.



இந்த மால் இப்போ காலி மால். ஜிலோன்னு  இருக்கு.  கடைக்குள்ளே போய் ஷூ போட்டுப் பார்த்துட்டு வேணாமுன்னுட்டார். இத்தனைக்கும் கனம் கூட இல்லை. காத்தாத்தான் இருக்கு. நம்மவர் பெரிய தியாகி!   இதைப்போல் தனக்குன்னு வாங்கிக்கணுமுன்னா.... (தங்கம் விதிவிலக்கு ! )வேணாம் வேணாமுன்னுவார்.  நம்முர் காசுலே மாத்திப்பார்த்தால் விலை மலிவோ மலிவு.  இங்கே கத்தரிக்காய்  கிலோ 15$.  சொன்னாக் கேக்கணுமே.....
தனக்கு ஒரு  BP Monitor  வாங்கிக்கணுமாம்.  'அதான் ஊருலே ஒன்னுக்கு ரெண்டா இருக்கே !   எதுக்கு இப்போ'ன்னு சொல்ல நினைச்சாலும் சொல்லலை.  நாம் ஒன்னு சாதாரணமாச் சொல்லப்போக.... அதனாலேயே பிபி எகிறிப்போச்சுன்னா..... ச்சும்மா இருப்பதே உத்தமம்னு  அப்பொல்லோ பார்மஸிக்குப் போனோம். ஹபிபுல்லா ரோடுன்னு நினைக்கிறேன். அப்பொல்லோ பேருலேயே ஒன்னு கிடைச்சது. வாங்கினதும்  லோட்டஸுக்கு வந்து ,  நம்ம மருத்துவர் தோழி சொன்னதைப்போல்  மூணு நிலைகளில்  கிடந்தும் இருந்தும் நின்றும் பார்த்தால்  இருக்க வேண்டிய அளவில்தான் இருக்கு. அப்பாடா....


இங்கேயே லஞ்சு எடுத்துக்கிட்டு கொஞ்சம் பெட்டிகளை அடுக்கி வைத்தோம்.  அப்போ நம்ம சித்ரா, செல்லில் கூப்பிட்டு எப்படி இருக்கோமுன்னு கேட்டாங்க.  நம்ம ஏரியாவாண்டைதான்  வந்துருக்காங்களாம்.  நேரம் இருந்தால் வந்துட்டுப்போங்கன்னதும்  'ஒரு அரைமணி நேரத்தில் வந்த வேலை முடிஞ்சுரும்.  அதுக்கு அப்புறம் வர்றேன்'னாங்க. 

அதே போல் வந்ததும்...  பயணம் உறுதியானதைச் சொன்னேன்.  இந்த மிளகு வைத்தியத்தால் எளிய முறையில் வலிகளைப் போக்கிக்கலாம். அக்குப்ரெஷர் முறைதான் இது. உங்க கை கால் வலிக்கானதை எப்படின்னு செஞ்சு காமிக்கிறேன். அதை வீடியோ க்ளிப்பா எடுத்து வச்சுக்குங்க.  ரொம்ப வலி இருக்கும்போது இதே போல் செஞ்சால் வலி குறையும்னு  சொன்னதும் சின்னதா ஒரு வீடியோ க்ளிப் எடுத்தேன்.
கொஞ்ச நேரத்துலே  மகள், லாபியில் இருந்து கூப்பிட்டு வந்துட்டேன்னதும், சித்ராவே , கீழே போய்க் கூட்டிவந்தாங்க. மகளுடன், அவுங்க தோழி மஹாலக்ஷ்மியும் வந்துருந்தாங்க. நல்ல ஜமா சேர்ந்துருச்சு. பேச்சும் சிரிப்புமா நேரம் போனதே தெரியலை. 
சித்ராவை எங்களுக்கெல்லாம் பிடிச்சுப்போச்சு.  எளிய சுபாவம். வீடு பல்லாவரம் தாண்டிப் போகணும் என்பதால்  கிளம்பிட்டாங்க. 
மகளின் நீண்டநாள் தோழி மஹாலக்ஷ்மி இப்போ எங்களுக்கும் தோழி ஆகிட்டாங்க.  இருவரும் செல்ஃபி எடுப்பதில் கில்லாடிகள்:-)






ஏழு மணி நெருங்கும்போது,  இவுங்களும் கிளம்பியாச்சு.  நாளைக் காலை  பஸ்ஸில் ஊர் திரும்புவாங்களாம். இத்தனை தூரம் பயணப்பட்டு வந்து பார்த்துப்போகும் அன்பை நினைச்சு மனம் இளகினது உண்மை. பொண்கள் நல்லா இருக்கட்டும் !

அவுங்கெல்லாம் போனதும் கொஞ்சம் வெறுமையாக உணர்ந்தது உண்மை.  ஏதோ போனஜன்மத்துப் புண்ணியம், நல்லவர்கள் நட்பு கிடைச்சுக்கிட்டே இருக்கு !

டின்னருக்கு எங்கியாவது போய்வரலாமுன்னு பார்த்தால்  தி நகர் ஏரியாவில்  நல்ல தரமான வெஜிடேரியன் ரெஸ்ட்டாரண்ட் இல்லைன்னுதான் சொல்லணும். திரும்பத்திரும்ப பாண்டி பஸார் வேணாமேன்னு அடுத்த தெருவுக்குப் போனோம் :-)  முருகன் இட்லிக்கடை.  எல்லோரும் புகழ்ந்தாலும் எனக்கென்னவோ சுமாராத்தான் தோணுது.  ரொம்ப வருசங்களுக்குமுன் இங்கே முதல்முறை வந்ததே... 'நம்ம சுஜாதா'  எழுதினதைப் பார்த்துத்தான் ! 




எனக்கு வழக்கம் போல் இட்லி,  நம்மவருக்கு ரவாதோசை, விஜிக்கு நெய் ரோஸ்ட்.  இங்கே எனக்குப் பிடிக்காதது என்னன்னா.... இலையில் சட்னி சாம்பாரெல்லாம் ஓடும் வகையில் இருக்குன்றதுதான்.  நான் சாப்பிடுவேனா இல்லை அணை கட்டுவேனா ? 
மதுரையில் ஆரம்பிச்ச இந்தக் கடைக்கு இப்போ சென்னையிலேயே பத்து கிளைகளும், சிங்கப்பூரில் ரெண்டு கிளைகளும் இருக்காம்.  முருகன் காஃபி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிச்ச பெற்றோர்களின் படம் மாலையோடு இருக்கு. 

டின்னர் முடிஞ்சதும் லோட்டஸுக்குத் திரும்பிட்டோம்.  விஜியையும் வீட்டுக்கு அனுப்பியாச்சு.

தொடரும்............ :-)


4 comments:

said...

முருகன் இட்லி கடையில் முதலில் இருந்த சுவை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும்.  அதுசரி, உங்கள் அபிமான கீதா கேஃப் என்னாச்சாம்?

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

முருகன் மட்டுமில்லை.... எல்லா கடைகளும் இப்படித்தான் கெட்டுக்கிடக்கு.....யாரும் புகார் சொல்றதில்லைபோல.... அங்கே இருக்கும் ஜனத்தொகைக்கு 1% மக்கள் வந்து போனாலும் கடைக்காரருக்கு லாபம்தான்.

கீதாவில் மாடிக்குப்போனால் கொஞ்சம் நீட்டா நல்லா இருக்கும். மாடிக்குப் படி ஏறணும். லிஃப்ட் இல்லை. அதான் பிரச்சனையாப்போச்சு நம்மவருக்கு.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !