Monday, June 15, 2020

ராமராஜ்யம் & பதிவர் சந்திப்பு (பயணத்தொடர் 2020 பகுதி 64)

இன்றைக்கு சனிக்கிழமை.  கோவிலுக்குப் போக வேணாமா?  இதோன்னு காலையில் கிளம்பியாச்சு. ஏழேகாலுக்கு வண்டிக்குச் சொல்லி இருந்தோம்.  லோட்டஸில் ஏழரைக்குத்தான் ப்ரேக்ஃபாஸ்ட்.  ஆனாலும் கொஞ்சம் சீக்கிரமாகவே  காஃபி மட்டும் கிடைச்சது.    எல்லாம் இது போதும்.
இப்போ கேளம்பாக்கம் ராமராஜ்யத்திற்குப் போறோம்.  இன்னும் சீக்கிரம் கிளம்பி இருக்கலாமோன்னு தோணல்தான்.  ஏழு அம்பதுக்கு வாசலில் போய் இறங்கியாச்சு.  நாங்கள் வரும் விஷயத்தை இங்கே முன்கூட்டியே சொல்லிக்கலை. சனிக்கிழமைகளில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைவருக்காகவும்  வாசல் கேட் திறந்தே வைக்கிறதால் நமக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை.  உள்ளே நுழைஞ்சவுடன் வருகைப்பதிவில் பெயர் எழுதிட்டுப் போகணும். ஆச்சு.

பலமுக்கியமான கோவில்களை ஒரே இடத்தில் பார்த்து தரிசனம் செஞ்சுக்கணுமுன்னா  இதைவிட நல்ல ஒரு இடம்  நமக்குக் கிடைக்காது ! ஒவ்வொருமுறை வரும்போதும் சிலபல புதுமைகள், கடவுளர்கள், சந்நிதிகள்னுதான்
எப்பவும் !


மாறிவரும் காலத்துக்கேற்ப ஆன்லைனில் இவுங்க சேவைகளை நாம் பயன்படுத்திக்கலாம். 
இயற்கை எழில் கொஞ்சும் தோட்டத்துக்குள் போறோம்.  காலை ஆறரைக்கே  முக்கிய சந்நிதிகளில் பூஜைகள் ஆரம்பிச்சுடறாங்க.  பலரும் வெளியே ஆஃபீஸ் வேலைகளுக்குப் போறதால்  தினப்படி பூஜைகள் காலையிலேயே முடிஞ்சுரும்.  மாலை நேரத்துக்கு, மக்கள் வேலையில் இருந்து திரும்பினபிறகு ஏழு ஏழரைக்கு ஆரம்பிச்சு இரவு  ஒன்பதுமணி வரை பூஜையும் சத்சங்கமுமாக .... மனநிம்மதியுடன்  இருக்கலாம்.  இன்னொரு முக்கியமான விஷயம்.....  அப்பழுக்கில்லாத சுத்தம் ! 

ராமராஜ்யத்தின் முக்கிய சந்நிதி.... பெரிய கோவில்னு சொல்லும் வகையில்  பூரணப்ரம்மம் இருக்கார்.  தசாவதாரங்களும்  அடங்கிய மூலவர்.  ஆனால் விசேஷநாட்களுக்குத் தகுந்தபடி, சிவன், அம்பாள், மோஹினி, இப்படி  இவரே எல்லாமுமாய் இருப்பார் !   கடவுள் ஒருவரே !  இல்லையோ ? இந்தப்பதிவு எழுதும் நேரம் அங்கிருந்து வந்த சூர்யநாராயணர் ! 
ஸ்ரீ சிவசங்கர் பாபாவின் ஆஸ்ரமம் இது !  பாபா அவர்கள்  ஊரில் இருக்கும்போது  தவறாமல்  கோவில்பூஜைகளில் கலந்துக்குவார். எந்த ஒரு பந்தாவும் கிடையாது. நம் குடும்பத்துலே  அவரும் ஒருவர் என்பதைப்போலத்தான்.

'பெரிய கோவிலுக்குள் ' போறோம். மங்கள இசை ஒலிக்க  தினசரி பூஜைகள் நடந்துக்கிட்டு இருக்கு !  சனிக்கிழமை என்றபடியால்.....  அன்னபூரணி கோவிலுக்கு விஜயம் செய்கிறாள்,  இருபத்தியொரு விதமான தளிகைகளுடன்!

வாசலில்  காலணிகளை விட்டுவைக்கப்போனப்பயே  நம்ம நண்பரும், ராமராஜ்யத்தின்/ சம்ரக்ஷணாவின்   அஃபிஸியல் ஃபொட்டாக்ராஃபருமான திரு கோபால் சூடாவும், அவர் மனைவியும் நம்மைப் பார்த்துட்டாங்க.  நலம் விசாரிப்பு ஆச்சு.
எட்டரை மணிக்கு, பாபாவும்  வர்றார். இதுக்குள்ளே பக்தர்கள் கூட்டம்  வந்து  கோவில் முற்றத்தில் கூடியாச்சு. வரும்போதே ஒரு கண்ணோட்டத்தில் பக்தர்களைப் பார்த்து, ஒரு புன்னகை, தலையாட்டல், ஒரு விசாரிப்பு  இப்படி! எல்லோருக்கும்  பரமதிருப்தி.  நம்மைப் பார்த்ததும், 'எப்போ வந்தீங்க ?'  நமக்கும்  மகிழ்ச்சி. 
பதினெட்டுப் படிகளேறி மூலவருக்குத் தீபாராதனை காண்பித்த பாபாஜி, பக்தர்களுக்கு ப்ரஸாதமாக பழங்கள்  தர்றார்.  எல்லோரும்  படிகளேறிப்போய்  பழங்களை வாங்கிக்கறோம்.  யாரையும் விடாமல், கடைசிநபர் வரைக் கூப்பிட்டுத் தன் கைப்பட ப்ரஸாதம் தர்றது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு!
ப்ரசாதம் வாங்கிக்க வரிசையில் போகும்போதும்  பக்தர்களிடம் ஒரு சில விசாரிப்பு.  நம்மிடம் 'அத்திவரதர் வந்துருக்கார்.... பார்த்தீங்களா'ன்னார்!  மூலவர் சந்நிதியாண்டை ஒரிஜினல் அத்திவரதர் மாதிரியே அத்திமரத்தில் செஞ்ச  புது அத்திவரதர் கம்பீரமா அலங்காரங்களுடன் நிற்கிறார்.
'இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க'ன்னு உத்திரவாச்சு!   அதிதி உபச்சாரத்தில் இவரை அடிச்சுக்கவே முடியாது. இவர்  ஒருமுறை தியானத்தில் இருந்த சமயம் என்ன வேணுமுன்னு 'கடவுள்' கேட்க, 'என்னைப் பார்க்கவரும் எல்லோருக்கும் உணவு அளிக்க அருள் செய்'னு விண்ணப்பிச்சாராம்.   ராமராஜ்யம் வரும் எவரும்.... சாப்பிடாமல் திரும்பிப்போகும் சான்ஸே இல்லை, கேட்டோ!  வருபவர்களைக் கவனிக்க அங்கிருக்கும் ராமராஜ்யவாசிகளில்  ஒருவருக்கு அசைன்மென்ட் ஆகிரும்.

சத்சங்கம், பூஜைன்னு எல்லோரும் கோவில் ப்ரகாரம்/ முற்றத்தில் கூடி இருக்கும்போதும் எதாவது ப்ரஸாதங்கள் பழங்கள், சில இனிப்புகள், பொங்கல் வகைகள், சுண்டல், மிட்டாய், சாக்லெட் இப்படி வந்துக்கிட்டே இருக்கும். தின்னு மாளாது  நமக்கு !
ப்ரகாரத்தில் மூலவர் பற்றிய விளக்கங்கள், எளியவருக்கும் புரியும் வகையில் !
பாபாஜியிடம் பிரசாதம் வாங்கினதும்  மூலவரை வலம் வந்து அடுத்த பக்கம் இறங்கினால்....  ஆஞ்சி வந்துருக்கார்.   'என் பிரஸாதம் அவருக்கு'ன்னார்..... ஆகட்டும், செல்லம்.  இங்கே இத்தனை வருஷங்களில் முதல்முறையா ஆஞ்சிகளைப் பார்க்கிறேன். புதிய  வரவு போல ! அதான் காடு போல மரங்கள் மண்டிக்கிடக்குதே!

நாங்க போய் முற்றத்தில் இருக்கும் படிகளில் உக்கார்ந்தோம். அங்கிருந்து  கண்ணெதிரே தெரியும் கருவறையையும், சுற்றிவர நடப்பவைகளையும்  பார்த்துக்கிட்டே இருக்கும்போது மனசுக்குள்ளே ஒரு நிம்மதி பரவும். இப்பவும் அதே அதே!
பூஜை முடிஞ்சு  தளிகை ப்ரஸாத விநியோகம் (சனிக்கிழமை ஸ்பெஷல் )ஆரம்பிச்சது.  பக்தர்கள் வரிசையில் போய் வாங்கிக்கலாம். நம்ம கோபால் சூடாவும் அவர் மனைவியும் நமக்கான பிரஸாதத் தட்டுகளைக் கொண்டுவந்து உபசரிச்சாங்க. 

அதுக்குள்ளே பாபாஜியும்  யாகமண்டபத்தில் வந்து உக்கார்ந்துட்டார்.  நாங்கள் போய் வணக்கம் சொல்லிட்டுக் கொஞ்சநேரம் பேசினோம். குடும்பத்தைப் பற்றி விசாரிச்சார். ஆசிகளை அள்ளிக்கிட்டு, அவரிடம் விடை வாங்கிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.




 புது வரவாக, க்ருஷ்ணருக்கு  ஒரு சந்நிதியும், சுத்திவர அழகான  தோட்டமுமா இருக்கு!  எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  அப்புறம் நேராப்போனது நம்ம துர்கை சந்நிதிக்கு!  தனிக்கோவில் அமைப்பு!  மூக்கும் முழியுமா, வாய் நிறைஞ்ச சிரிப்போடு நிகுநிகுன்னு  என்ன அழகு தெரியுமா இவள் ? எனக்கு ரொம்பவே பிடிச்ச 'அம்மா' ! 

எதிரில் இருக்கும் காயத்ரி மண்டபத்துக்குள் கும்பிட்டு வந்தோம்.
ஒரு இடத்தில் மாலையும் கழுத்துமா......

ஆன்மிகம் கலந்த அம்யூஸ்மென்ட் பார்க் மாதிரிதான்  ஒவ்வொரு இடமும்.....   இங்கேயே  நர்ஸரி ஸ்கூல் முதல் ப்ளஸ் 2 படிக்கும்வரை பள்ளிக்கூடங்கள் இருக்கு.  ஹாஸ்டல் வசதிகளும் உண்டு. பிள்ளைகள் நல்ல சூழலில் வளர்ந்தும், படித்தும் வர்றாங்க.  அநேகமா எல்லா இடங்களிலும் பிள்ளைகளின் கைவண்ணத்தில் சித்திரங்களைப் பார்க்கலாம், பிள்ளைகளின்  பெயரோடும், வகுப்பு விவரங்களோடும் !

முக்கியமா ராமராஜ்யத்தலைவர் பாபாஜி, தன்னைச் சுத்தி  பூனை, யானைப் படைகளை வச்சுக்கலை. காட்சிக்கு எளியவர்.   தனியாகத்தான்  ஆஸ்ரமத்தில்  சுத்தி வர்றார். எதிரில்  கண்டால்  நின்னு பேசறார். நாமும்  அவரைக் கண்டால்  போய்ப் பேசலாம். எனக்குத்தெரிஞ்சு இவ்ளோ எளிமையா இருக்கற   ஆன்மிகத்தலைவர் இவர் மட்டும்தான் !  நல்லது கெட்டதுக்கு இமெயிலில் கூட  தொடர்பு உண்டு.  நாம் அனுப்பும் மெயிலுக்குப் பதிலும் அனுப்பறார்ன்னா பாருங்க !

இவரைப்பற்றி முந்தியே கணினியுகத்துக் கடவுள்னு ஒரு பதிவு எழுதி இருக்கேன். விருப்பம் இருந்தால் க்ளிக்கலாம் :-)

மனநிறைவோடு அங்கிருந்து கிளம்பி பதினொரு மணிக்கு லோட்டஸ் வந்துட்டோம்.  அப்புறமும் கடைசி நிமிட் ஷாப்பிங் கொஞ்சம் ஆச்சு.  சென்னை ஸில்க்தான்.  க்றிஸ்மஸ் அலங்காரம் இருக்கு!   நான் எனக்கொன்னும் வாங்கிக்கலை என்று சொல்லிக்கொண்டு.....  சும்மா..... விண்டோ ஷாப்பிங்தான்.

 எனக்கு ஒன்னும் வேணாமுன்னதும் முகத்தில் சந்தோஷத்தைப் பாருங்க.....
அரசியல் வியாதிகளுக்கான கடை !  எனக்கென்னமோ நம்ம அபி அப்பாவும் , நம்ம அப்துல்லாவும்  நினைவுக்கு வந்தாங்க :-)
எனக்கு ஒரு மிக்ஸி ஜார் மட்டும் வாங்கிக்கணும்.  தண்டபாணித் தெருவில் அதுவும் ஆச்சு.


மணி ரெண்டேகால் . நம்ம ட்ரைவர் அருண் சாப்பிடவேணாமா?  வெங்கடநாராயணா ரோடு ஸ்ரீக்ருஷ்ணா பவனில் வாழை இலை சாப்பாடு. சிம்பிளா நல்லாவே இருக்கு !  வழக்கம்போல் வடக்கத்துப் பசங்க வேலை  செய்யறாங்க. சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாம் நல்லாவே வாயில் வருது :-)

லோட்டஸ் திரும்பினால் வாசலில் செல்வி உக்கார்ந்துருக்காள். பிஸ்கெட்ஸ் இப்பெல்லாம் சாப்பிடறதை விட்டுட்டாளாம். சிக்கன் மதியாம். நான் என்ன செய்ய ? மன்னிப்பு கேட்டுக்கிட்டு, போயிட்டு வரேன். அடுத்த பயணத்தில் வாங்கித்தரேன்னு வாக்கு கொடுத்தேன் !
கொஞ்சநேரம் ஓய்வுக்குப்பிறகு நாலுமணிக்குக் கிளம்பி திரு அல்லிக்கேணி போறோம். ஒரே கோவிலில் அஞ்சு பெருமாளை ஸேவிக்கலாம்.  தள்ளுமுள்ளு கிடையாது.  பார்த்தனின் ஸாரதி, (ஒரோருத்தர் போல )கருவறையில் இருட்டில் ஒளிஞ்சு நிக்கமாட்டார் !   அவர் கண்களைப்போலவே பளிச்ன்னு விளக்கு வெளிச்சத்தில்  ஜொலிப்பார்.  மண்டபக் கம்பிக் கதவுவழியாகக்கூட தரிசிக்கலாம் ! வழக்கம்போல் நல்ல தரிசனம்!  கோவில் மிய்யூஸுடன் கொஞ்சம் பேசிட்டுக் கிளம்பினோம்.

அஞ்சரைக்கு லோட்டஸ் வந்துட்டோம்.  நம்ம அருண், கல்லூரி மாணவர். சனி ஞாயிறுகளில்  நம்ம சதீஷ் ட்ராவல்ஸில் ட்ரைவரா இருக்கார்.  நல்லாப் படிக்கிறார்னு சதீஷ் சொல்லி இருந்தார். நல்லா இருக்கட்டும் ! 
ஆறரைக்கு பதிவர் சந்திப்பு.  லோட்டஸுக்கு வந்தார் நம்ம உண்மைத்தமிழன். கொஞ்சம் கவலை படிஞ்ச முகம். முருகன் ரொம்பவே சோதிக்கிறானாம் !  வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜம் என்றாலும் ,  இப்படி எப்பப் பார்த்தாலும் சோதனையிலேயே வச்சுருந்தால் நல்லாவா இருக்கும்?

இப்பெல்லாம் பதிவுகள் நிறைய எழுதறது இல்லை...  தமிழ்மணம் காலத்தில் எப்படி இருந்தோம் ! (ஆமாம்.... தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு ? பேச்சு மூச்சில்லாமல் கிடக்குதே!)  நம்ம  உண்மைத்தமிழன், பெயருக்கேத்தபடி, பாசாங்குப் பேச்செல்லாம் இல்லாமல் உண்மையா, உள்ளத்தில் இருந்து பேசுவார். இப்பவும் அப்படியே!  இதற்கு முந்திய பயணங்களில் சந்திக்க முடியாமல் போயிருச்சு. பார்த்தே ஒரு  ஏழேகால் வருஷம் ஆச்சு.  பழங்கதைகளும் புதுக்கதைகளுமா நேரம் போனதே தெரியலை.

கீழே இருக்கும் க்ரீன்வேஸ் ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் டின்னர் சாப்பிடும்போதே இன்னும்  கொஞ்சம் பேசினோம். உண்மையான  அன்புக்கு ஏது எல்லை? 
 ராத்ரி  எல்லா பேக்கிங்கும் முடிச்சுட்டுத்தான் தூங்கினோம். இதுதான் இந்தப் பயணத்தில்  கடைசி இரவு!

தொடரும்......... :-)


14 comments:

said...

துல்லியமான படங்கள் அருமை...

said...

ஆனால்...

said...

சந்திப்பு சிறப்பு.

ராமராஜ்யம் - அழகான சூழல்.

said...

ராம ராஜ்யம் படிக்கும் போதே சென்ற பதிவும் நினைவில் வந்தது. புதிது புதிதாக செய்திருப்பது காண்பதற்கு இனிதாக இருந்தது.

திருவல்லிக்கேணி பெருமாள் தரிசனம் .உண்மைத் தமிழன் அவர்களின் சந்திப்பு என மகிழ்ச்சியான நிகழ்வுகள்.

said...

நம்ம சொந்தகாரங்க இன்னிக்கு பதிவில் இருப்பாங்கன்னு நினைச்சிட்டே வந்தேன்க்கா :) முதலில் ஆஞ்சி அப்புறம்  செல்வி அப்புறம் மியூஸ் ஹஹ்ஹா வந்தேன் பார்த்தேன் ரசித்தேன் 
இந்த பாபா  கோயில் இருப்பது கேளம்பாக்கம் அதான் நல்லா இயற்கை சூழல் .அழகா ரம்யமா இருக்கு . மரங்கள் நன்கு வளர்ந்து செழிக்கட்டும்  நாலு ஜீவன்கள் நல்லா இருக்கும் .இக்கோயில் அமைஞ்ச இடம் அழகான அமைதியான சூழல் எது காரணம்னு  தெரில  ஆனா உங்க இருவர் முகத்திலும் அலாதி சந்தோஷம் தெரியுது 

said...

தமிழ் மணம் இன்ட்லி தமிலிஷ்  இல்லேன்னா எனக்கு பதிவுலகில் யாருமே தெரிஞ்சிருக்க மாட்டாங்க .உண்மைத்தமிழன் அவரின்  சினிமா விமர்சனம் படிப்பேன் முன்பு .

said...

அருமை நன்றி

said...

ராமராஜ்யம்.... எப்போதும் நீங்க அங்க போக மறப்பதில்லை. (அடையார் பத்மநாபன் கோவிலும்)

பதிவர் சந்திப்பு - மகிழ்ச்சி

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,

வருகைக்கு நன்றி. அதென்ன ..... ஆனால்.... ? சொல்ல வந்ததைச் சொல்லலாமே...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


இந்த அழகான சூழலுக்காகவே ஒருமுறை போய் வரலாம் !

said...

வாங்க மாதேவி,


எப்பப்போனாலும் புதுசு புதுசா சந்நிதிகள் கட்டிக்கிட்டே இருக்காங்க ! ஒவ்வொன்னும் அழகோ அழகு !

சந்திப்புகள், அவை சாமியோ இல்லை ஆசாமியோ..... அருமைதான் இல்லையோ !

said...

வாங்க ஏஞ்சலீன்,

பசங்களுக்கும் உங்களுக்கும் ஜென்மாந்திர உறவு !

ஆஸ்ரமம், நல்லா இருக்குப்பா !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இங்கெல்லாம் போகாமல் பயணம் நிறைவுள்ளதாக இருக்க எனக்குத் தோணலை :-)