Friday, May 08, 2020

கோயிலுக்குப் போறோம்..... (பயணத்தொடர் 2020 பகுதி 49 )

பூனைக் கடையில் இருந்து கிளம்பிய அடுத்த ஆறாவது நிமிட்டில்  கோவிலாண்டை போயாச்சு !  வழக்கம்போல்  ஒரு விஸிட்டர்ஸ் சென்டர், டிக்கெட் ஆஃபீஸ், அப்புறம் ட்ரெய்ன் (!) டிக்கெட் கவுன்ட்டர்ன்னு  இருக்கு.  ஆளுக்கு நூத்தி நாப்பது  பவுண்ட் . இதிஹாப் போய் டிக்கெட் வாங்கின கையோடு  ரயில் டிக்கெட்டும்  வாங்கியாந்தார்.  ரெண்டாம் வாய்ப்பாடு  போட்டு வச்சுருக்காங்க !  ரொம்ப அநியாயம் இல்லே :-)
 
விஸிட்டர் சென்டரில்   நாம் பார்க்கப்போகும் சமாச்சாரத்தின் மாடல் இருக்கு!


இந்த இடத்துக்குப் பெயர்  Valley of the Queens !
வாவ்!  ராஜாக்களின் சமாதிகளுக்குத் தனி இடம் ஒதுக்கினதைப்போல ராணிகளுக்கும் தனி இடம் ஒதுக்கி இருக்காங்க.  பிடுங்கல் இல்லாம இருக்கணுமுன்னோ என்னவோ.....  ரெண்டு இடங்களுக்கும் இடைவெளி  7.1 கிமீ. இங்கே எம்பது சமாதிகள் இருக்காம். (எப்படி ? பட்டத்து ராணிகளுக்கு மட்டும் போல ..... ) 

என்ன ஒன்னு.... பேரரசர்கள் இருக்குமிடம் சமாதி....   அவர்களுடைய மனைவிகள் இருக்குமிடம் கோவில் !

புருஷன்மாரின் அட்டகாசங்களையெல்லாம் பொறுத்துக்கிட்டு வாழ்க்கை நடத்தும்  மனைவிமார்களுக்குக் கோவில் கட்டறது நியாயம்தான், இல்லையோ !

ட்ரெய்னில் ஏறிக் கோவில் வாசலாண்டை போய்ச் சேர்ந்தோம் :-)

 குகை போல தோண்டாமல், மலையடிவாரத்துலே  மூணுமாடிக்  கட்டடமாக் கட்டி இருக்காங்க.

இந்த நாட்டின் பழைய சரித்திரத்தில்  ஏழு   பேரரசிகள்  இருந்துருக்காங்க. அதுலே முதல் பேரரசி காலத்துலே  கட்டுனது இந்தக் கோவில். அவுங்க பெயர் Pharoah  Hatshepsut . அது ஆச்சு ஒரு மூவாயிரத்து ஐநூறு வருசங்கள். !

(இவுங்கதான் முதல் பேரரசி என்பதில் கொஞ்சம் குழப்பமும் இருக்கு. இவுங்க காலத்துக்கு முன்னூறு வருசங்களுக்கு முன்னே  Pharaoh Sobekneferu ன்ற பெயரில் ஒரு பேரரசி இருந்தாங்கன்னும், அவுங்க நாலே வருசங்கள்தான் ஆட்சி செஞ்சாங்கன்னும்  ஒரு தகவல் இருக்கு!  அது உண்மையா இருந்தால்  Pharoah  Hatshepsut  ரெண்டாவது  பேரரசிதான், இல்லை ?  )

பேரரசி Pharoah  Hatshepsut  தன்னுடைய பனிரெண்டாவது வயசுலே பட்டத்துக்கு வந்து, பதினைஞ்சு வருசம் நல்ல ஆட்சி கொடுத்துருக்காங்க. வாணிபம், விவசாயம் எல்லாம் செழிப்பா வளர்ந்தது  அந்தக் காலக்கட்டத்தில்தான்.  ஆண்கள் ஆட்சி மட்டும்தான் நல்லா இருக்கும் என்ற கருத்தைப் பொய்யாக்கினவங்க, தானும் ஆண் வேஷத்தில் இருந்தால்தான் மதிப்புன்னு நினைச்சுப் பொய்த்தாடி வச்சுக்கிட்டாங்களாம்.  இவுங்க சிலையைத்தான் நேத்து கய்ரோ ம்யூஸியத்தில்  காமிச்ச நம்ம ரெய்னா, இது ஆணா பெண்ணான்னு கேட்டாங்க.  முக லக்ஷணம் பெண்ணு, ஆனால் தாடி இருப்பதால் ஆணுன்னு சொன்னது நினைவுக்கு வருது.

வாட் எவர் இட் இஸ், மோஸ்ட் பவர்ஃபுல் க்வீனாகத்தான் இவுங்க இருந்துருக்காங்க.  இந்த  வேலி ஆஃப் த   க்வீன்ஸ்  என்ற இடம் கூட,  இவுங்க ஐடியா என்பதால் இந்தப் பெயர் வந்துருக்கலாம். இவுங்களுக்கு முன் பேரரசரா  இருந்த சிலரின் கல்லறை இங்கே இருக்கு. எல்லாம்  இவுங்க ஏற்பாடுதான்.... வேற இடத்தில் இருந்து இடம் மாத்தினவைகள்.

இவ்ளோ  'சக்தி' வாய்ஞ்ச மஹாராணியை, சனம் கடவுளாகவே பார்த்தும், கும்பிட்டும் கடைசியில்  மரணத்துக்குப்பின் கோவில் கட்டியும் வச்சதுலே என்ன அதிசயம் ?

இவுங்க மரணம் சம்பவிச்சதுக்கு ஒரு காரணமும் 'கண்டு பிடிச்சுருக்காங்க ' இந்த ஆராய்ச்சியாளர்கள்.  ராணியம்மாவுக்கு உடம்பில் எதோ சொறிச்சல். அதுக்கு ஒரு களிம்பு தடவிக்கிட்டு இருந்தாங்களாம். அதுலேதான் எதோ விஷத்தன்மை இருந்துருக்குன்னு....   ப்ச்....  இப்படி சொறி சொறி முவ்வா ஆகிப்போச்சே.....

இவுங்க மம்மியை சிடி ஸ்கேன் செஞ்சப்ப சில உண்மைகள் தெரிய வந்ததாம்....   மஹாராணி சுமார் அம்பது வயசுலே சாமிகிட்டே போயிட்டாங்க.  எலும்பு புத்து நோய் இருந்துருக்கு. ஏற்கெனவே சக்கரை நோய், ஆர்த்தரைட்டீஸ் எல்லாம் குடி இருந்த உடம்பு வேற ....  ப்ச்....
(நானும் நம்ம ஈஜிப்ட் கலெக்‌ஷனுக்கு Pharoah  Hatshepsut  பொம்மை ஒன்னு வாங்கியாந்தேன்!  ஏற்கெனவே  க்ளியோ, ஸ்பிங்க்ஸ், Sekhmut ,  நைல்நதியில் படகில் போகும் க்ளியோ ன்னு வச்சுருக்கேன். இந்தப் பயணத்துலே இன்னும் ஒரு மூணு கிடைச்சது. )

வாங்க 'கோவிலுக்குள்' போகலாம். நிறையப் படிகள் வரிசை ஏறிப்போகணும்.

படிகளுக்கு வர்ற வழியிலேயே  நமக்கிரண்டு பக்கங்களிலும்  ஸ்பிங்க்ஸ். பேரரசியின் முகத்துடன் !
இப்படி வேலிபோட்டு ஒரு மரத்துண்டு உள்ளே உக்கார்ந்துருக்கு.  இதுக்கு ஒரு விளக்கம் வேற வச்சுருக்காங்க.  ஒரு வகை பிசின் வரும் மரமாம்.  Myrrh   வெள்ளைப்போளம்னு தமிழில்....   இதை வாசனை திரவியம் செய்யவும், போதை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவாங்களாம்.  சாம்பிராணியா இருக்குமோ ?
(நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை....  போகட்டும்.... எல்லாத்தையுமா தெரிஞ்சு வச்சுருக்கோம் ? )  

யேசு கிறிஸ்து ஜெனிச்ச சமயம், மூன்று அரசர்கள்  பரிசுப்பொருட்களோடு வந்து  பார்த்தாங்கன்னு பைபிளில் இருக்கு பாருங்க.... அதில் ஒரு அரசர் கொண்டுவந்தது இந்த  வாசனை திரவியம் (பிசின்)  தானாம்.  இப்பவும்   சர்ச்சுகளில்   தூபம் காமிக்கிறாங்களே !

நல்ல கூட்டம்தான் இங்கேயும். ஒரு செட் படிகள் முடிஞ்சதும் ஒரு பெரிய முற்றம். இங்கே இன்னொரு படி வரிசை. படிகளின் முகப்பில்......... அட! நம்ம பெரிய திருவடி !


மேலே ஏறிப்போனதும்  தூண் வரிசைகளுக்குப்பின்னால் சுவர்களில்  சித்திர எழுத்துகள்.




கோவிலுக்குள் போகுமுன் வெளியே சுத்திப் பார்த்தோம்.  இங்கேயும் பழுது பார்த்துச் சீரமைக்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.
மேல்தளத்தின் முகப்பில் வரிசையா பெரிய சிலைகள்.


இந்தாண்டைப்பக்கம் என்னமோ வேலை பூர்த்தியாகாமல் நிற்கும் தூண் பகுதிகள்.

இன்னொரு வாசல் வழியா அடுத்த முற்றத்துக்குள் போறோம்.
 பள்ளிக்கூடப்பிள்ளைகளை எக்ஸ்கர்ஷன் கூட்டி வந்துருக்காங்க....

கோவிலுக்குள் நுழைஞ்சால்  நாம் அஜந்தா, எல்லோராவில் பார்த்த மாதிரியே சந்நிதிகள். குகைக்கோவில்கள் எல்லாத்துக்கும் ஒரே டிசைன்தான் போல !
உண்மையில் இது மலைக்குள் குடைஞ்ச குகை. இதுவரை வெளியில் பார்த்தது எல்லாம் ஒவ்வொரு பிரகாரம்னு வச்சுக்கலாம்.
 சுவர்சிற்பங்களைப் பழுது பார்த்ததும்  வண்ணம் பூசுவாங்க போல....


Amun Re  கோவிலை எப்படிக் கண்டுபிடிச்சாங்க, பழுது பார்க்குமுன் எப்படி இருந்ததுன்னு  விளக்கம்  போட்டுருக்கு! சூரியக்கடவுள் கோவில் இது !
இவ்ளோ பெரிய கட்டடத்துக்குள் போக இத்தனை சின்னதா வாசல்
எங்கே பார்த்தாலும் தூண்  வரிசைகள்தான்


எவ்ளோ தூரம் திரும்பிப்போகணும் பாருங்க....
இங்கே சுமார் எண்பது  சமாதிகள் இருக்குன்னு  சொல்றாங்க  அதுக்கெல்லாம் நாம் போகலை. தனியா டிக்கெட் வாங்கணுமாம்.

 புகழ்வாய்ந்ததா ரெண்டு சமாதிகள் இருக்கு. Rameses II வின் பட்டத்தரசி Nefertari  ஒன்னு. அப்புறம்  Seti I  (son of Rameses I )இது ரெண்டும் பார்க்கணுமுன்னா  ரெண்டாயிரம் பவுண்ட் தரணும். அதுவுமில்லாம.... தினம் நூத்தியம்பது பேருக்கு மட்டுமே அனுமதியாம்!  இது எல்லாத்தையும் விட  உள்ளே போய் பார்த்துட்டு வர பத்து நிமிட் மட்டும்தான் தருவாங்களாம்.  பத்தே நிமிட்லே என்னன்னு பார்க்க ?
 ( பேசாம கூகுளாரைக் கேட்டால் அவர் இப்படி இருக்குன்னு காமிக்கிறாரே !)  
இந்த  Seti I  தான்  பைபிளில் வரும் மோசஸ் என்றும் சொல்றாங்க.   இந்த விவரம் எல்லாம் அப்போ நமக்குத் தெரியாது பாருங்க... டூர் கைடு கூட்டிப்போகும் இடங்களை மட்டும்தான் பார்த்தோம். போகட்டும்... போங்க.
 இங்கேயும் செல்லம் ஒன்னு....

'ரயில்' ஏறி முகப்பு வாசலுக்கு வந்தோம். வழக்கம்போல கடைகள். ஒன்னும் வாங்கிக்கலை.
அங்கிருந்து கிளம்பின   கிளம்பின ஆறாவது நிமிட்  ரெண்டு பெரிய சிலைகள் கண்ணில் பட்டன.  நம்மூர் ஐயனார் சிலை போல உக்கார்ந்துருக்கு! ஒவ்வொன்னும் இருவது மீட்டர் உசரம். தலைப்பகுதி பழுதாகிக்கிடப்பதால், ஒரு மீட்டர் உசரம் குறைஞ்சு போயிருக்குன்னு ஒரு தகவல்.  Colossi of Memnon னுபெயர் !
பேரரசர்  Amenhotep III காலத்து சமாச்சாரம்.  அதென்னவோ இந்த மாதிரி சிலைகள், ஸ்பிங்க்ஸ் எல்லாம் கட்டும்போது அந்தந்தக் கால அரசர்/அரசிகளின்  முகத்தையே  வச்சுடறாங்க.  இங்கேயும் அப்படியே!

 Pharoah Amenhotep III தன்னுடைய பனிரெண்டாம் வயசுலே பட்டத்துக்கு வந்தார்.  ஆட்சி ரொம்ப நல்லதாம்.  மற்ற நாடுகளுடன் நல்ல தொடர்பில் இருந்துருக்கார். வேட்டைப்ரியர்!   அந்தக் காலத்து ப்ளொகர்னு சொல்லலாம். அவருடைய பயணம், வேட்டை அனுபவங்களை எல்லாம் எழுதி வச்சுருக்கார். அதே சித்திர எழுத்துகளால்தான். வேறொன்னும்   ஃபான்ட் வகைகள் அப்போ இல்லையே...

இந்த அரசகுடும்பத்தினரின் சுத்தரத்தப் பழக்கமா உடம்பொறந்தாக்களைக் கல்யாணம் கட்டாமல்,  வெளியே சாதாரண சனத்துலே இருந்து பொண் எடுத்துருக்கார் !  பட்டத்துராணி, அவருடைய அரசசபையின் உத்யோகஸ்தர் ஒருவரின் மகள் !

தனக்கான 'கோவிலையும்' இங்கே கட்டி வச்சுருந்தார். அதுக்குப் போகும் நுழைவு வாசலில்தான் இந்த ரெட்டைச் சிலைகள். த்வாரபாலகரா வச்சுக்கணும் !  கோவில் ஒன்னும் குட்டியூண்டு இல்லை. வளாகம்  மூணரை லக்ஷம் சதுர மீட்டர் அளவு. இவர் இருக்கும்போதும் சரி, இறந்தபிறகும்  சரி, இவர்தான் இந்தக் கோவிலின் மூலவர் !
என்ன ஒரு கஷ்டமுன்னா.... இவர் தனக்கான கோவிலைக் கட்டுன இடம் சரி இல்லை. நைல்நதி வெள்ளம் வரும்போதெல்லாம்  கோவில் தண்ணியில் மூழ்கிருமாம்.   வெள்ளம் வடிஞ்சாட்டுப் பார்த்தால் நதிக்கடவுளே வந்து கும்பிட்டுப்போன மாதிரி ! இப்படியே  வெள்ளம் வந்து போய் வந்து போய் கொஞ்சம் பழுதாகி இருந்துருக்கு .  போதாக்குறைக்கு அந்தக் காலக்கட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம், கோவிலையே தரைமட்டமாக்கிருச்சு.
ரெட்டைச் சிலைகளும் கொஞ்சம் இடிஞ்சு விழுந்தது அப்போதான்.
அதுக்கப்புறம்தான்  காலையில் சூரியன் உதிக்கும் சமயம்,  ஒரு சிலைக்குள்ளில் இருந்து ஒரு சத்தம் வர ஆரம்பிச்சுருக்கு. சூரியனோடு பேசுதுன்னு ஐதீகம். பாட்டுச் சத்தம் கேட்குமாம். சிலைக்கற்களின் இடைவெளியில் காத்துப் புகுந்து வர்றதால் ஏற்பட்ட சத்தம்னு அப்புறம் தெரிஞ்சது. பழுதான சிலையைக் கொஞ்சம் சரி செஞ்சப்பப் பாட்டே நின்னு போச்சு!
வண்டியை நிறுத்திட்டு இறங்கிப் போனோம். சிலை இருக்கும் வளாகமே ரொம்பப் பெருசு. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம். அவ்ளோ தூரம் போய்ப் பார்க்கலை. நின்ன இடத்துலேயே சில க்ளிக்ஸ்.  நமக்குதான் சோம்பல், சனம் போய் வந்துக்கிட்டுதான் இருக்கு! த்வாரபாலகர்களுக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் இடிஞ்சு போன கோவிலும் அங்கே இன்னும் ரெண்டு சிலைகளும்.....  கோவில் இருந்த அடையாளமே இல்லை....   அங்கே இருந்த கற்களையெல்லாம் வேற இடத்துக்  கொண்டு போயிட்டாங்களாம்......  மிச்சம் மீதி மட்டுமே இப்போ....

சுற்றுலாப்பயணிகள் வர்றதால் ஒன்னுரெண்டு  நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள். நான் ஒன்னும் வாங்கலை என்று சொல்லிக்கொண்டு..............   :-)

தொடரும்......... :-)

11 comments:

said...

அருமை சிறப்பு நன்றி

said...

அரசிமார்களுக்கு கோவில் அட...டா அந்தக்காலத்திலேயே இப்படி எல்லாம் கட்ட அனுமதித்து இருக்கிறார்கள்.

said...

நிறைய தகவல்கள், இடங்கள். ஆமாம்... அந்த இரண்டு அரசர்கள் சமாதியில் (2000 பவுண்ட்ஸ்) அவர்களின் மம்மிகள், ஆபரணங்கள் இருக்கிறதோ?

said...

அரசிகளுக்கு கோவில்! :)

நல்ல விஷயம் தான்.

சிறப்பான படஙக்ள். தகவல்களும் நன்று.

said...

நேரில் ரசித்த உணர்வு நன்றி ..

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

ஆதி காலத்தில் பெண்கள்தான் அனைத்து நிர்வாகமும் செஞ்சாங்க. எப்படியோ ஆண்கள் தங்கள் உடல்வலிமையைப் பயன்படுத்திக்கிட்டு, பெண்களை அடிமைகளா ஆக்கிட்டாங்கப்பா.....

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

ஆபரணம் எல்லாம் இல்லை.... அதையெல்லாம் கொண்டுபோய் ம்யூஸியத்தில் வச்சாச்சு.

இங்கே இருக்கும் பெயின்டிங்லே தங்கப்பூச்சு இருக்காம். டிமாண்ட் க்ரியேட் பண்ணினால் வருமானம் கூடுமே....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கோவில்கட்டிக் கும்பிடும் அளவுக்கு ரொம்பவே நல்லவங்களா இருந்துருப்பாங்களோ ! :-)

said...

வாங்க பனித்துளி சங்கர்,

அட... நீங்களா ? எத்தனையோ வருஷங்களாச்சே உங்களை இங்கே பார்த்து !!!!

நலம்தானே ?

said...

மிக்க நலம் . ஆமாம் நீண்ட இடைவேளைக்கு பிறகுதான் ..