Wednesday, October 16, 2019

கைப்பிடிக்குள் மஹாலக்ஷ்மி !!!! (பயணத்தொடர், பகுதி 156 )

ஏகப்பட்ட சந்நிதிகள் அங்கங்கே..... சிதறிக்கிடக்கும்  சந்நிதிகளில்  முக்கியமானவைகளைப்.... போற போக்கில் பார்த்துக்கிட்டே போறோம்.
ஜலக்ரீட மண்டபம் தாண்டி ரோஹிணி குண்ட்.  தீர்த்தம். பக்கத்துலே பிமலா மந்திர்.  சக்திபீடம். சதியின் இடதுகால் பாதம் விழுந்த இடமாம்.  உள்ளே போய் கும்பிட்டுக்கிட்டோம். நல்ல பெரிய  உருவச்சிலை. நாலடி உயரம் இருக்கலாம். தினமும்  மூலவர் ஜகந்நாத்துக்கு பகல் சாப்பாடு (அதுதான் அந்த 56 வகை! ) விளம்பினபின் அதே ப்ரஸாத  உணவை பிமலாவுக்கும் படைக்கிறாங்க. அதுக்குப்பின்தான் அந்த மஹாப்ரஸாதம்,   ஆனந்தபஸாருக்கு வருது!   முழுக்கோவில் பாதுகாப்புப் பொறுப்பும் பிமலாவுக்குத்தான் !  (லேடி, சீஃப் செக்யூரிட்டி ஆஃபீஸர்! )

உக்ர தேவி என்பதால்  இங்கே மட்டும் வருஷத்துக்கொருமுறை துர்காஷ்டமி இரவு  மிருகபலி (ஆண் மே....மே.... ) கொடுக்கறாங்க.  அந்தக்கால தாந்த்ரிக் முறைப்படி  ராத்ரி வேளையில் யாருக்கும் தெரியாமல் நடக்கும் பூஜையாம்!  மீன் குழம்பும் உண்டாம் !
பொதுவா இந்த ஸ்ரீ ஜகந்நாத் கோவில், காலை அஞ்சு மணிக்குத் திறந்து, இரவு பதினொரு மணிக்குத்தான் மூடறாங்க.   பலி கொடுக்கும் இரவு பூஜைகள் எல்லாம்  இரவு ஒருமணிக்கு ஆரம்பிச்சுக் காலை நாலு மணிக்குள் முடிச்சு, இடத்தை எல்லாம் சுத்தப்படுத்திருவாங்களாம்.  காலை கோவில் நடை அஞ்சு  மணிக்குத் திறக்கும்போது, ராத்ரி நடந்ததின் சுவடுகூடத் தெரியாதாம் !!!!

ஏகப்பட்ட சந்நிதிகள் சின்னதும் , ரொம்பச் சின்னதும், கொஞ்சம் பெருசுமா இறைஞ்சு கிடக்குன்னுதான் சொல்லணும். சில சந்நிதிகள் எல்லாம் தனிக்கோவிலாவே இருக்கு!  பேணுமாதவ், மூலவர் க்ருஷ் மாதிரியே அதே உயரத்தில்  அப்படிக்கப்படியே இருக்கார்.

ருக்மிணி சந்நிதிக்குள் போறோம். பட்டமகிஷி இவள்தான். ஆனாலும் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.....  த்வார்காவில் தனியாளாக பனிரெண்டு வருஷம் அத்வானக்காட்டிலே தவம் செஞ்சதை நினைச்சா எனக்கு இப்பக்கூடக் கண்ணீர் வந்துருது.... ப்ச்...

பட்டர் / பண்டா 'உள்ளே வா'ன்னு கருவறைக்குள் கூப்புட்டார்.  ஒரு விநாடி யோசிக்கப்டாதோ  நான்..... ?  ருக்மிணியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டேன். 'கையை நீட்டு' ன்னார் பண்டா! துளசியாக இருக்கணுமுன்னு கையை நீட்டினேன்.  பச்சைத் துணியில் ஒரு சின்னப் பொதி என் உள்ளங்கையில். நல்ல கனம் வேற ! 'பாஞ்ச் சௌ டாலோ' தட்டைக் காமிக்கிறார்.  பச்சைத்துணிக்குள் தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மி!  ஒரு விநாடி ஆடிப்போயிட்டேன்!  எவ்ளோ அதிர்ஷ்டம் பாருன்னு.....  ஆனால் பலிக்கடா யாருன்னு அவுங்களுக்குச் சட்னு தெரிஞ்சுருது இல்லே ?

கையில் இருக்கும் மஹாலக்ஷ்மியை வேணாமுன்னு சொல்ல முடியுமா?  சென்டிமென்ட்டாலே அடிச்சுடறாங்க ! 'நம்மவர்'  சட்னு  காசை எடுத்துத் தட்டில் போட்டார்!  பண்டா ஆசிகளை அள்ளி வீசினார்!  ஆச்சு....   இனி  செல்விருந்து ஓம்பி....வருவிருந்து பார்த்திருப்பார், பண்டா :-)
வெளியே யாருடனோ பேசிக்கிட்டு இருந்த  ஹரிஷங்கரிடம்  மஹாலக்ஷ்மியைக் காமிச்சு விவரம் சொன்னபோது.....  'அடடா.... சந்நிதிகளில் இப்படி  ஏதும் கொடுத்தால் வாங்கிக்கவேணாமுன்னு சொல்ல மறந்துட்டேனே'ன்றார்.

காஞ்சி கணேஷ்னு ஒரு பெரிய புள்ளையார் சந்நிதி!  கலிங்க அரசர்,  காஞ்சிபுரத்துப் போரில் (???) ஜெயிச்சு, அங்கிருந்து கொண்டு வந்தாராம்!   (எப்படி..... இப்பக் கையில் வச்சுருக்கும் மஹாலக்ஷ்மி நியூஸிக்குப் போவதைப் போலவா? ஙே..... ) 

இதுக்குள்ளே  ஒரு சந்நிதி முன்னால் இருக்கும் மேடையையொட்டி  மக்கள் கூட்டம் அங்கங்கே பரவலா.... நிக்க,  மேடையில் இருக்கும் சில பண்டாக்களின்  மடிகளிலும், முன்னாலும்  கலர்த் துணிகள் சுருளைகளாச் சுத்தி வச்சுருக்காங்க. சனம் பூராவும் அப்பப்ப அண்ணாந்து ரேகாவைப் பார்க்கறாங்க.  கொடிமாத்தப் போறாங்களாம்!

தினமும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு இந்த வைபவம்.  கோடைக்காலத்தில் மட்டும் ஆறுமணிக்கு நடக்குமாம்.  திரும்பத் துவார்கா கோயில் கொடிமாற்றம் நினைவுக்கு வந்தது.

நாங்க பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  பக்கத்துக்கோவில் ஜகமோஹனாமேலே  தாவிக்குதிச்சு ஏறிப்போறாங்க மூணு பேர். முதுகில்  ஒரு மூட்டை போல கொடிகள்..  எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் சரசரன்னு  பெரிய விமானத்துலே வரிசையா பிஸ்கெட் போல அடுக்கி இருக்கும் அமைப்பைக் கையால் பிடிச்சபடி  போய்க்கிட்டே இருக்காங்க.

பாதுகாப்புக்கு இடுப்பில் ஒரு பெல்ட்டும், சங்கிலி போலக் கயிறுமா சேர்த்துப் போட்டுக்கிட்டுத்தான் நியூஸியில்  'வால் க்ளைம்பிங், மலை க்ளைம்பிங்' எல்லாம் பார்த்துருக்கேன். இங்கே அதெல்லாம் ஒன்னுமே இல்லை....  கரணம் தப்பினால்....  ஐயோ....    க்ருஷ்ணார்ப்பணமுன்னு போய்க்கிட்டே இருக்காங்க.  ரொம்பச் சின்ன வயசுப் பையன்கள் கூட இல்லை.  அநேகமா முப்பதுகளில் இருக்கக்கூடியவர்கள்தான்.

ஆ......ன்னு வாய் பிளந்து பார்த்துக்கிட்டு இருக்கும்போதே இன்னொரு இளைஞர்  மேலே ஏற ஆரம்பிச்சார்.
இந்த ரேகா/ விமானம் 214 அடி உயரம்!  முக்கால் வாசி போனதும் அங்கே ஒரு சந்நிதியில்  விமானப் பாலகர் சந்நிதின்னு நினைக்கிறேன். அங்கே விளக்கேத்தி வச்சுக் கும்பிட்டார் நாலாவதாக ஏறிப்போன இளைஞர்.
இன்னும் மேலேறிப்போக இரும்பு வளையங்கள் தொங்க விட்டுருக்காங்க. அப்புறம் ஏணி போல  ஒரு அமைப்பு.
உச்சியில் ஒரு பெரிய சுதர்சனச் சக்கரம் இருக்கு. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், பாதரசம்,  இரும்பு, துத்தநாகம்னு  எட்டு உலோகக் கலவைகளில் செஞ்சதாம்.

 பக்கத்துக்கு நாலா  எட்டுக் கைகள் போன்ற அலங்கார விளிம்புகளுடன் இருக்கும் இதன் உயரம் பதினோரு அடியும் எட்டு அங்குலமும்!  எடை அதிகமொன்னுமில்லை..... ரெண்டாயிரத்து இருநூறு கிலோ !  வெளிப்புற சுற்றளவு முப்பத்தியாறு அடி.  வட்டத்துக்குள் வட்டமுன்னு உள்ளே இன்னும் ஒரு சின்ன வட்டம் இருக்கு. அதன் சுற்றளவு மட்டும் இருபத்தியாறு அடி! ரொம்ப உயரத்தில் இருப்பதால் நமக்குச் சின்னதாத் தெரியுது.
நீலச்சக்ரம் என்று இதுக்குப் பெயர். கருவறையில் நாம் தரிசிக்கும் மூணு மூர்த்திகளோடு இந்த நீலச்சக்ர சுதர்ஸனரும் நாலாவது மூர்த்தியாக இருக்கார் என்ற ஐதீகம்.  உள்ளே இருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணரின் கையில் இருக்க வேண்டியவர் இவர், பிரமாண்டமான அளவில்  வெளியே கோபுர உச்சியில் நின்னு  ஊரையே பார்த்துக்கிட்டு இருக்கார். (உள்ளே ஸ்ரீ கிருஷ்ணரின் மேற்கையில்  ஒரு மரக்கட்டைதான் சுதர்ஸனரா இருக்கு. அதான்  பிடிச்சுக்கறதுக்கு எந்த மூர்த்திகளுக்கும் விரல்கள் ஒன்னும் இல்லையே   )
நீலச்சக்ர சுதர்ஸனரில் ஒரு முப்பத்தியெட்டு அடி மூங்கில் கழி கட்டி விட்டுருக்காங்க.  இதில் பறக்கும் கொடியை உருவி  எடுத்துட்டுப் புதுக்கொடியை மாட்டி விடணும்.  இந்தக் கழியைக் கீழே இறக்கும் விதமா அமைச்சு இருப்பதால் சக்கரத்தில் நின்னபடியே கீழே இறக்கி கொடி மாத்திட்டுத் திரும்பவும் உயர உயர்த்திப் பொருத்தணும்.  சக்கரத்தின் மேல் முனையில் இருந்து இருபத்தியஞ்சடி உயரத்தில் பறக்குது முக்கோணக் கொடி. இதன் நீளம் பனிரெண்டு முழமாம் !  இருபது அடி!  அவ்ளோ உயரத்தில் வீசும் காத்துக்குப் படபடன்னு நீளமாப் பறக்குது !   கட்டி முடிச்சதும்  நின்னு கும்பிட்டுட்டுக் கீழே இறங்கி வர்றாங்க.

இந்தக் கொடி மட்டுமில்லாமல்  தோரணம் போல் இருக்கும்  கொடிகளையும்  விமானத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் கட்டித் தொங்க விடறாங்க. பக்தர்கள்  வேண்டுகோளுக்காக கோவில் ஆஃபீஸில் பணம் அடைச்சுட்டால் போதும்.
கீழே கொண்டு வரும் பழைய கொடிகளை பக்தர்கள்  விரும்பினால் ஒரு பெரிய தொகை கொடுத்துட்டு  வாங்கிக்கலாமாம். கோவிலே வித்துருது.  இதுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.  கிடைப்பதே அபூர்வம் என்றார் ஹரிஷங்கர்.

இப்படி மேலே ஏறிப்போய் கொடி மாத்தும்  நபர்களை கருட சேவார்த்தின்னு சொல்றாங்க. சின்னப் பையனா இருக்கும்போதே இதுக்கான  பயிற்சி கொடுப்பாங்களாம். ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள்தான் இதைச் செஞ்சு வர்றாங்களாம்.  இதெல்லாம் ஆரம்பிச்சு ஒரு எட்டு நூற்றாண்டுகளா நடக்குதுன்னதும்  அதிசயிச்சுத்தான் போனேன்!

கோவில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் பண்டாக்கள்  மட்டும் ஆறாயிரம் பேராம்!  இவுங்களும் ஒரு குறிப்பிட்ட இனமக்களே!    ஆதிகாலத்துலே  நீலமாதவரை  வச்சுக் கும்பிட்டக் காட்டு ஜனங்களின் வழித்தோன்றல்கள்தானாம். நீலமாதவரைக் கண்டுபிடிக்கப்போன உளவாளி, அந்தக் காட்டுத்தலைவனின் மகளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, மனைவி மூலமாக ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிட்டு வந்துதான்  உத்கல அரசர் இந்த்ரத்யும்னனுக்கு சேதி சொன்னதாக ஒரு சேதி.  அவரின் வழித்தோன்றல்கள்தான் இந்தக் கோவில் பூஜைக்குப் பாத்யப்பட்டவர்கள்.

கெமெராவுக்கு அனுமதி இல்லைன்னதும் எப்படித் துடிச்சுப்போயிருப்பேன் என்றதை உங்கள்  அனுமானத்துக்கு விட்டுட்டேன்.....

இந்தக் கொடி மாற்றுவதை யாரோ வேறே ஒரு உயரமான இடத்தில் இருந்து வீடியோ எடுத்து யூட்யூபில்  போட்டுருக்கார்.  இங்கே  நான்  அதைப் போட்டுருக்கேன். அன்னாருக்கு என் மனம் நிறைந்த நன்றி !  கொஞ்சம் பெரிய வீடியோ க்ளிப்தான். ஆனால் காணக்கிடைச்சது நம்  கண்கள் செஞ்ச புண்ணியமுன்னு நினைச்சுக்கணும்.

ஒருவேளை  இந்த வீடியோ க்ளிப் வேலை செய்யலைன்னா.... இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=NcjN_96jKIM

இறங்கி நம் பக்கம் இருந்த மேடைக்கு வந்து சேர்ந்த கருட சேவார்த்திகளைக் கைதட்டி வரவேற்று, யாரும் கேக்காமலேயே பக்தர்கள் அவரவர்  அன்பளிப்பை வாரி வழங்கியது பிடிச்சுருந்தது!

முக்கியமான நிகழ்ச்சியை நமக்குக் காண்பிச்சதோடு  ஹரிஷங்கரின்  கைடு வேலை முடிஞ்சுருச்சு. நாமும் அவரைத் தொடர்ந்து பிஷ்ணு லாட்ஜுக்குப் போனோம்.
இவருக்கு  கைடு சர்வீஸுக்கான பணம் எவ்வளவுன்னு கேட்டதுக்கு, உங்க இஷ்டமுன்னுட்டார்.  அப்படியே ஆச்சு :-) பிஷ்ணு லாட்ஜ் வாசலில் இருந்து ரேகாவை க்ளிக்கினேன்.  கொடி படபடன்னு பறக்குது !
நம்ம செல்ஃபோன்கள், பர்ஸ், குடை, தண்ணீர்பாட்டில் எல்லாம்  இருக்கும் பையை எடுத்துக்கிட்டு நன்றி சொல்லிட்டு நாங்கள் கிளம்பினோம். வாசலில் இருந்து இடப்புறம் நோக்கி ஒரு க்ளிக்.
இப்பதான் நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அதான் கையில் செல் கெமெரா இருக்கே.... ஒரு பத்தடி இடப்புறமா நடந்துபோய் மேற்குவாசலை நல்லபடி நாலு படம் எடுத்துருக்கலாம் இல்லையா?  கோட்டை விட்டுட்டு, வலப்புறம் திரும்பி நடக்க ஆரம்பிச்சோம்.... ப்ச்....

(மேலே படம்: ஆண்டவர் அருளியது)

தொடரும்.......:-)

10 comments:

said...

என்னது, பாண்டாக்கள் மட்டும் ஆறாயிரம் பேரா? இவர்களுக்குச் சம்பளம் கொடுத்தே மாயாதே? அப்புறம் எங்கே சாமிக்கு?

said...

அருமை சிறப்பு.

வீடியோ - பார்க்கும்போதே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்பிருந்து இவர்கள் வம்சம் பெருகி இருக்காதா? குடும்ப பாத்யதை இருக்கும். கோவில் சம்பளம் அதிகம் இருக்காது. தவிர தக்ஷிணை வாங்குவதும் அதிகம் தான் என்பதால் அவுங்களுக்குப் போதும். ஆனால் பேராசை தான் படுத்துது...

said...

வாங்க விஸ்வநாத்.

எனக்கு நேரில் பார்க்கும்போது, அவுங்க இறங்கிவரும்வரை மனசு திக் திக்தான் !

said...

பண்டாக்கள் அடாவடியாக பணம் கேட்பது மட்டும்தான் உறுத்துது.

said...

மகாலஷ்மியும் வந்துவிட்டா பூஜை அறையை அலங்கரிக்க.

அவர்கள் ஏறுவது என்ன ஒரு விரைவு. பயத்துடன் ஆச்சரியமும் வருகிறது.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அவுங்க கேட்பதில் பாதியாவது கிடைக்குமேன்னுதான் அடாவடி பண்ணுறாங்க போல.....

said...

வாங்க மாதேவி,

ஆமாம்ப்பா.... எல்லாம் ஒரு இருபது நிமிட்டுலே முடிஞ்சுருது..... கீழே வரும்வரை எனக்குத்தான் கிலி பிடிச்சுருந்தது..... இன்னொருக்காப் பார்த்தால் பழகிப்போயிரும் :-)

said...

i am already visited here ...but the you tube video mmmm..horrible ...hare jegannatha

said...

தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மி! ...அழகு

விமானம் 214 அடி உயரம்! ..அம்மாடி


நீலச்சக்ர சுதர்ஸனரும் நாலாவது மூர்த்தி..புது தகவல் மா

வீடியோ காட்சி ...அப்பா என்னா வேகம் ...பிரம்மிப்பு