Monday, March 06, 2017

ஜ்வாலாமுகி என்னும் அணையாத தீ! ( நேபாள் பயணப்பதிவு 14 )

   ஆனானப்பட்ட ஆழ்வாருக்கே  தரிசனம் கொடுக்காம விட்டுட்ட எம்பெருமாளை சந்நிதி முன்பக்கம் வந்து இன்னொருக்காப் பார்த்துக்கலாமுன்னா... சந்நிதியை இழுத்துப் பூட்டிட்டு எல்லோரும் எஸ்கேப்!  மேல்மாடத்தில்  பக்கும் பக்கும்னு  சொல்லிக்கிட்டே  சிகப்புக் கண்ணோடு வெள்ளைப்புறா!

கொஞ்சம் க்ளிக்கிட்டு,  டொனேஷன் கொடுத்துட்டு, முகப்புச்சிற்பம் விசாரிக்கலாமுன்னா யாரையுமே காணோம்!!!  கோவிலைச் சுத்தி நிறைய கட்டிடங்கள் இருக்கு. பட்டர்கள், பணியாட்கள் இருப்பாங்க போல ! சுத்துமுத்தும் கண்களை ஓட்டுனா...  சின்னப்பட்டர்  ஒரு கையால் சாவிக்கொத்தைச் சுழற்றிக்கிட்டே சின்னத்துள்ளல் நடையில்  ஒரு கட்டடத்துக்குள் நுழையறார்.  அது புத்தமடாலயமா இருக்கலாம்.   சின்னவரை சட்னு க்ளிக்கத் தோணலை பாருங்க :-(
இதுக்குள்ளே  நிறைய பக்தர்கள் வந்துருக்காங்க. கோமுகதாரையிலும், வெளியில் இருக்கும் குண்டங்களிலுமா  குளிச்சும், ஈர உடைகளைக் காய வைப்பதிலும் மும்முரமா இருக்காங்க மக்கள்ஸ். தரிசனம் முடிச்சுட்டு வர்றதுக்குள் காய்ஞ்சு போயிரும்!

மூவர் குழுவோடு கொஞ்சம் பேசினோம்.  சிங்காரச்   சென்னை மக்கள்ஸ்தான்.   பெரியவரிடம்  ஃபோன்நம்பர் வாங்கிக்கிட்டார் நம்மவர்:-) துர்கா இருக்க பயம் ஏன்? க்ளிக்ஸ் ஆச்சு.
அடுத்து இங்கே ஜ்வாலாமுகி கோவில் பார்க்கலாமுன்னு கிளம்பறோம்.  மூவர் குழுவுக்கு இது புதுத்தகவலாம். நாங்களும் வரலாமான்னாங்க.  தாராளமான்னு  நாங்கள்  அறுவரானோம்:-) கோவிலில் இருந்து படி இறங்கிக் கீழே வந்து கொஞ்ச தூரத்தில் கிளை பிரியும் பாதையில் கூட்டிப்போறார் துர்கா.




மலைக்குமேலே  மூணு சின்ன பகோடாக்கள், பாழடைஞ்ச நிலையில். இந்தப்பக்கம் கொஞ்சம் கீழே பார்த்தால் ஹெலிபேட்.  ஹெலிகாப்டர் பயணிகள் இங்கேதான் வந்திறங்குவாங்க.
நம்ம கீதா சொன்னது சரிதான்:-)  ஹெலிபேட் கொஞ்சம் பள்ளத்தில் இருக்கு. அங்கிருந்து மேட்டுக்கு ஏறிவர படிக்கட்டுகளும் இருக்கு.


ஒத்தையடிப்பாதையில் போய்க்கிட்டு இருக்கோம். முந்தி பார்த்த புத்தர் சிலைக்குப்  பக்கத்தில் வந்துருக்கோம். புத்தமடாலயம் இருக்காம். சிலை வேலை இன்னும் முடியலை....


வீடு போல இருக்கும் ஒரு வாசலுக்குள் போறோம். புத்தர் கோவில். சந்நிதிகள் இருக்கு. ஒரு சின்ன மாடம் போல இருக்குமிடத்தில் கம்பிவலை   போட்டு ஃபயர்ப்ளேஸ் போல ஒன்னு. அதுக்குள்ளே உத்துப் பார்க்கணும்.  கீழே கொஞ்ச தூரத்தில் நீலநிற ஜ்வாலை!  இதுதான் ஜ்வாலாமுகி! அணையாம எரிஞ்சுக்கிட்டே இருக்கு  பல காலங்களாக!  ப்ராச்சீன்! சக்திபீடமாம்!



இங்கேயும் வாசலில் ஸோலார்குக்கர் சமையல் நடக்குது.  புத்தமடாலயங்களில்  தால்பாத் தான் முக்கிய சமையலாமே!

இன்னொரு ஒத்தையடிப்பாதையில் வர்றோம். கலர்கலர்த்துணிகளை வரிசையாத் துணி காயப்போடுறதைப்போல் கட்டி விட்டுருக்காங்க. இதுலே  பிரார்த்தனைகள் அச்சிட்டு இருக்காங்க. இதை வாங்கிக் கோவில்களில் கட்டி விடுவதும்  ஒருவகையான வழிபாடுதானாம்!
புத்தமடாலயத்தை அடுத்து.  சுவர்களில் ப்ரேயர் வீல்ஸ்.  சுத்திக்கிட்டே நடந்து அது முடியும்போது,  முக்திநாத் கோவில் மெயின் கேட்டுக்கு உள்புறம்  வந்துருந்தோம். ஏகப்பட்ட சாமியார்கள்.


அதில் ஒருவர்,  'அங்கிருக்கும்  தபஸ்விகளுக்கு ஒருநாள் உணவு தரமுடியுமா'ன்னு கேட்டார். அதுக்கென்ன? தந்தாலாச்சு. எவ்ளோ ஆகுமுன்னு கேட்டுட்டு, அவுங்க சொன்ன தொகையைக் கொடுத்தார் நம்மவர்.

கேட்டைக் கடந்து வெளியில் வந்தாச்சு.  முக்திநாத் தரிசனம் கிடைச்ச திருப்தி எல்லா முகங்களிலும்.  இதுக்குள்ளே நாங்க மூவர் குழுவோடு நண்பர்களா ஆகி இருந்தோம். எல்லோருமா  கொஞ்சம் நிதானமாவே கீழே இறங்கி வர்றோம். இறக்கம் எனக்குப்  பிரச்சனை இல்லை. குழுவில் இருக்கும் ஜெயந்தி, எனக்குச் சரியான ஜோடி!   அவுங்களும் ஆஸ்த்துமா. அப்போ.... அவுங்களை மேலே கொண்டுவிட்ட பஸந்திதான்  திரும்பி வரும்போது பாதிவழியில்  என்னை மீட் பண்ணி இருக்காள் போல!  :-)

குழுவில் இருக்கும் பாலாஜி இவருடைய அண்ணன்.  பெரியவர் சங்கர், உறவுக்காரர்.  இவர் தேவி உபாசகர்.    தோரணவாயில் கடந்ததும்  வழியில் சாளக்ராம் வாங்கணுமுன்னு  அங்கங்கே நின்னோம்.  ஒரு 'கடை'யில் நான்  நமக்கு ஒன்னு வாங்கினேன். கொஞ்சம் பெருசு.  உடைச்சுப் பார்த்து தரம் பிரிச்சு  வகைப்படுத்தி வச்சுருக்காங்க. இது மஹாவிஷ்ணு! சக்கரம் இருக்கு உள்ளே. ஒரு ரப்பர் பேண்ட் போட்டு ரெண்டு பகுதியையும் சேர்த்து வச்சுருக்காங்க.
பெரியவர் சங்கரும் ஒரு கடையில்  சாளக்ராம் பார்த்துக்கிட்டு இருந்தார்.  நாம் வாங்குனதைப் பார்த்துட்டு இந்தக் கடைக்கு வந்தவர் நம்ம சாளக்ராமை கையில் வாங்கிப் பார்த்துக் கண்ணை மூடி நின்னவர்... அதுலே பாஸிடிவ் எனெர்ஜி இருக்குன்னு சொன்னார். யாருக்கு இதெல்லாம் தெரியும்?  சக்தி உபாசகர் சொல்றது சரியாகவே இருக்கட்டும். நம்பணும்னு தோணுச்சு. அதான் ஏற்கெனவே வாங்கிட்டோமே....:-)
பகல் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாமுன்னு மந்த்ராலோசனை நடந்தது. நல்ல இடம் ஒன்னு இருக்குன்னு சொன்னார் துர்கா. என்னைப் பொறுத்தவரை நல்ல இடம் என்றால் ரெஸ்ட் ரூம் நல்லா இருக்கணும்.  இங்கே நல்லா இருக்குமுன்னு  போனது  யூரேகா இன்.  நீட் அன்ட் டைடி.  மூவர் குழுவும் இப்போ நம்முடன்.
அவரவருக்குத் தேவையானதைச் சொல்லிட்டுக் காத்திருந்தோம். தக்காளி அடுக்களையாம்.  அச்சச்சோ.... தக்காளி வேணாமுன்னு சொன்னோம்!  இங்கே தக்காளின்னா  நம்ம தக்காளி இல்லையாக்கும்!  ஒருவித அசைவ சமையல் முறை!

Thak Khola valley இல் இருந்து வந்த மக்கள் தக்காளிகள். Thakali people. அன்னபூர்ணா மலைப் பள்ளத்தாக்கு மக்கள். அவுங்க சமையல் முறைதான் இது. நேபாளத்தின்  சமையல் வகைகளில் ஒன்னு! நிறைய இடங்களில் தக்காளி கிச்சன் என்ற போர்டு பார்த்துருந்தோம்.  அந்தத் தக்காளி இந்தத் தக்காளின்னு இப்போ புரிஞ்சது:-)

மற்ற அஞ்சு பேரும் சாப்பிட்டது  ஒருவகை வெஜிடேரியன்  தாலி மீல்ஸ்.  எனக்கு வழக்கம்போல்  காரமே இல்லாத சாப்பாடு :-) சமைச்சுக் கொடுக்க முக்கால்மணி நேரம் எடுத்துக்கிட்டாங்க. அதுவரை, தேவி உபாசகர்  நம்ம துர்காவுக்குக் கைரேகை பார்த்துக்கிட்டு இருந்தார்.
ஒன்னு கவனிச்சீங்களா?  எங்கேயாவது கூட்டத்தில்  இருக்கும்போது, கைரேகை பார்க்கத்தெரியுமுன்னு சொல்லிப் பாருங்கள்.  உங்களை நோக்கி    எத்தனை கைகள் நீளுமுன்னு   உங்களுக்கே தெரியாது :-)

நான் ஜன்னல் வழியா வேடிக்கை. ரொம்ப உயரத்தில் மலைமேல் இருந்த புத்தரை டைனிங் ஹாலுக்குக்  கொண்டுவந்தேன்:-)

நம்மவர், துளசிதளத்தின் கொ ப செ யாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்தார் :-)  சாம்பிள்  எடுத்துக் காமிச்சதும் ,  எல்லோரும்  நம்ம  உரலை எழுதி வச்சுக்கிட்டாங்க.  படிச்சதும் உலக்கையைத் தூக்கி வராமல் இருக்கணுமேடா   பெருமாளே  :-)

சாப்பாடு ஆனதும்  கீழே இறங்கிப்போய்  மற்ற வசதிகளைப் பார்த்தோம்.  இங்கே கூட தங்கி , நிதானமாப் பெருமாளை ஸேவிச்சுருக்கலாமோன்னு .....


பெரிய உள்முற்றத்தில் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. மேலே  கண்ணாடிக்கூரை. அற்புதமா இருக்கு. இப்படி ஒன்னு நியூஸியில் போட்டால் அட்டகாசமா இருக்கும். ஆனால்...  ஆசைக்குத்தான் அளவேது....

அடுக்களைக்காரர் வெளியில் வந்தார்.  சமையல் நல்லா இருந்துச்சுன்னு பாராட்டி ஒரு சின்ன அன்பளிப்பு கொடுத்தோம். பெயர் என்னன்னு கேட்டதுக்கு, இன்னொரு இளைஞர் வந்து  இவர் பெயரைச் சொன்னார். கிஷன். அட! க்ருஷ்ணன் சமைச்ச சாப்பாடா!!!   ஆமா....  இவர் பெயரை அவர் ஏன் சொன்னாராம்?      கிஷனுக்குப் பேச்சு வராது..............  ப்ச்....  :-(
மணி இப்பவே ரெண்டரை. மதியம் மூணு மணிக்குள் திரும்பிப்போனால் நல்லதுன்னார் நம்ம துர்கா. பல நாட்களில்  மழை வந்துருமாம். ஜீப் போகும் பாதையில் சறுக்கலும் ஏற்படும் அபாயமும் உண்டுன்னதும் சட்னு கிளம்பிட்டோம்.

ஜீப் ஸ்டேண்ட் வரை இப்போ நடந்து போகணும். ஜெயந்தி என்னுடன் நல்லாவே பழக ஆரம்பிச்சவர்.... பேசிக்கிட்டு வரும்போதே  மனசுடைஞ்சு அழுதுட்டாங்க. என்ன மன அழுத்தமோ..... எல்லோருக்கும் மனசுக்குள் ஏதோதோ கஷ்டங்கள். நான் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினதும் இன்னும் கூடுதல் நட்பானாங்க. உங்களைப் பார்த்ததும் சொல்லணுமுன்னு தோணுச்சுன்னு  சொன்னது  உண்மையிலேயே ரொம்பச்சரி. நமக்கும் சிலரைப் பார்த்தால்  மனசில் இருப்பதையெல்லாம் கொட்டத் தோணுது இல்லையோ....  ஊருக்குள் புதுப்பாதை வரப்போகும் நுழைவு வாசலுக்கு வந்துருந்தோம். இப்போ இன்னும் கொஞ்சம் கீழே இறங்கணும். ரொம்ப சரிவா இருக்கும் பகுதி. அதோ... தூரத்தில்  குதிரை ஸ்டேண்ட்  தெரியுது.

இனி எப்போ பார்க்கப்போறோமோன்னு.... க்ளிக்ஸ் ஆச்சு.  பகல் சாப்பாட்டுக்குக் காத்திருந்த நேரத்தில்  செல்ஃபோன் நம்பர்களை  கொடுத்து வாங்கி வச்சாச்சு.  சென்னைக்கு வந்தபின் கட்டாயம் சந்திக்கணுமுன்னு  பேச்சுறுதியும்:-)

கீழே  சறுக்காமல் இறங்கணுமேன்னு கவனமாக் காலெடுத்து வச்சு ஜீப் ஸ்டேண்ட் போனோம்.  ஜொம்ஸொம் போகணும் இல்லையா!

உங்க வண்டியில் வரலாமா? அதுக்குண்டான காசைத் தர்றோமுன்னு  சொன்னார் சங்கர்.  அப்படி இங்கே முடியாது. பர்மிட் கொடுக்கும்போது படிவத்தில் பெயர் இருக்கும் நபர்கள்  மட்டுமே ஒரு வண்டியில் இருக்கணும். எதுக்கும் கேட்டுப் பார்க்கிறேன்னு போன துர்கா, திரும்பி வந்து அனுமதி இல்லை. உங்க பெயரைச் சொல்லி புக் பண்ணிக்கணுமுன்னு அவுங்களுக்கு வழி காட்டினார்.

முந்தியே குறிப்பிட்டது போல எதாவது அசம்பாவிதம் ஆனா.... நம்மைக் கண்டுபிடிக்க இது மட்டும்தான் வழி! இவுங்க மேலே வரும்போது எப்படி வந்தாங்கன்னு நான் கேக்க மறந்துட்டேன்.

நமக்கும் வண்டி அலாட் ஆனதும் கிளம்பிட்டோம். அப்பதான்  நம்மவர் கேட்டார், 'அது என்ன அவுங்க என்னமோ அழுதுக்கிட்டு  கண்ணைத் தொடைச்சுக்கிட்டே உங்கிட்டே பேசுனாங்க. நீ கட்டிப்பிடிச்சு முதுகைத் தட்டி என்னவோ சொல்லிக்கிட்டு இருந்தே?'

"எதோ பொம்மநாட்டிகள் கஷ்டம்... அதைக் கேக்காதிங்கோ.  கோவிலுக்கு வந்துட்டுப் பொய் சொன்னால் பாவம் "

தொடரும்.................  :-)



15 comments:

said...

புதிய நண்பர்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறார்களா? எவ்வளவு புராதனமான இடங்கள். நன்றாக இருக்கின்றன.

said...

அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம்.. அவங்களுக்கு பாவம் என்ன கஷ்டமோ...

தொடர்கிறேன்.

said...

மேலே (முக்திநாத்துக்கு 30 அடி மேல்) நரசிம்மர் கோவில் எழுதலை. தபஸ்விகளை முக்திநாத்திலேயே பார்த்தீர்களா? ஜொம்சொம் வரை நடந்துவர சுலபமாக இருந்ததா? (பேச்சுத்துணை இருந்ததால் சுலபமாகத்தான் இருந்திருக்கும்). படத்தில் கண்ணாடிக்கூரையைக் காணோமே.

சாளக்ராமத்தைப் பற்றி இனிமேல்தான் எழுதப்போறீங்கன்னு நினைக்கறேன்.

கைரேகை பார்ப்பதைப் பற்றிச் சொன்னது உண்மைதான். உண்மையோ பொய்யோ, அந்த சமயத்துல கேட்க நல்லாருக்கும்.

தொடர்கிறேன்

said...

அருமை. நன்றி டீச்சர்.

said...

சாமியார்களின் வாழ்க்கையே வினோதம். சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா டீச்சர். எப்படி அவங்க வாழ்க்கை ஓடுது, எப்படி அந்தக் குளிர்ல இருக்காங்க.. இவங்களோட ஆரம்பம் என்ன...

said...

ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு கதை இருக்கும் சாமியார்கள் ஆனாலும் அவர்களுக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறதே முக்திநாத் தரிசனத்தால் முக்தி கிடைக்க வேண்டுகிறேன்

said...

ரொம்ப உயரத்தில் மலைமேல் இருந்த புத்தர்...அழகா இருக்கார்..

said...

ஊர்பேர் தெரியாத எடத்துல பயணம் போறப்போ நம்மாளுகளைச் சந்திக்கிறதும் ஒரு மகிழ்ச்சிதான்.

ஜ்வாலாமுகி தொடர்ந்து எரிய முந்தியெல்லாம் விறகு போட்டிருப்பாங்க. இப்ப எதுல எரிக்கிறாங்க? எரிவாயு சிலிண்டர்? எத்தனை நூற்றாண்டுகளா எரிஞ்சிக்கிட்டிருக்கோ இந்தச் சுவாலை.

வாய் பேசாட்டி என்ன... கிஷனுக்கு கை பேசுதே. எல்லாருக்கும் படி அளக்குற புண்ணியம். நல்லா இருக்கட்டும் பையன்.

படங்களையெல்லாம் பாக்க சுவாரசியமா இருக்கு டீச்சர்.

said...

வாங்க ஸ்ரீராம்.

புதிய நண்பர்கள் இப்போ பழைய நண்பர்களாக ஆகிட்டாங்க. மூவரில் ஒருவர் வீட்டுக்கும் போய் வந்தாச். இப்ப நம்ம துளசிதளத்தின் வாசகர்களாக்கும், கேட்டோ ! :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதான்.... கஷ்டமே இல்லாத ஜீவன் இந்த உலகில் உண்டோ?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மேலே கோவிலுக்குப் போகலை. தபஸ்விகளை இங்கேயேதான் பார்த்தோம். ஜொம்ஸொம்வரை நடப்பதா? மொத்தம் 25 கிமீ. ஐயோ.....

ஜீப் நம்மை இறக்கிவிட்ட கிராமத்துக்கு நடந்துவந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஜீப் சவாரிதான்.

சாமியார்கள் வாழ்க்கை .... எதுக்கு பயந்து சாமியாராகப் போனாங்கன்னுதான் ஆராய்ச்சி செய்யணும். எங்க வீட்டுலேயே ஒரு சாமியார் இருந்தாரே..... இமயமலை வரை போகலை.... கர்நாடகாவோடு முடிச்சுக்கிட்டார் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

இந்த ஜ்வாலா முகி.... இயற்கையாவே பாறைக்கிடையில் கசிந்துவரும் எரிவாயு. அப்படியே பத்திக்கிட்டுக் காலங்காலமா எரிஞ்சுக்கிட்டே இருக்கு.

இந்த நூத்தியெட்டு பித்துப் பிடிச்சதால்தான் நம்மவர் கூட்டம் இந்தப் பக்கங்களில் மொய்க்குது!! ஆழ்வார்கள் நல்லாத்தான் ப்ளான் பண்ணி நம்மை பாரதத்தின் குறுக்கும் நெடுக்குமாப் போகவச்சுட்டாங்க :-)

உங்க இலங்கைப் பயணம் ரொம்ப நல்லா இருக்கு. படிச்சுக்கிட்டுதான் இருக்கேன். பயணத்தில் இருந்ததால் பின்னூட்ட முடியலை.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ரொம்பச் சரி.

ஒவ்வொருத்தருக்கும் தனிக்கதை இருக்கத்தான் வேணும்! அவர்கள் வேண்டும் மனநிம்மதி கிடைக்க அந்த முக்திநாதரே அருள் புரிந்து அனுகிரகிக்கணும்.