Wednesday, March 23, 2016

எனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் இப்போ ஒரு அஞ்சு வருசமா டெர்ம்ஸ் சரி இல்லை. ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 11)

பேச்சு வார்த்தை அவ்வளவாக் கிடையாது.  வழக்கம்போல் அவன் வாயத்திறக்க மாட்டான்.  கல்லுளிமங்கன்!  நான்? சும்மா அப்படி லேசில் விடமுடியுமா? அப்பப்ப அவனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனைதான்...
விவரம் இங்கே மூணு பதிவுகள். முதல்பதிவின் சுட்டி இது. நூல்பிடிச்சுப்போய்ப் பாருங்களேன், நேரம் இருந்தால்!  (முக்கிய சமாச்சாரம் அங்கே இருக்கு!)



அண்ணன் வீட்டுலே பலகாரங்களை உள்ளே தள்ளிக்கிட்டே பயணத்திட்டம் பற்றிப் பேசிக்கிட்டு இருந்தப்ப, மேற்படி சமாச்சாரத்தை நினைவில் வச்சு  (ஹூம்... மறந்தால்தானே  நினைவில் கொண்டுபோய் வைக்க!) இன்னும் கொஞ்சம் அர்ச்சனை செஞ்சுக்கிட்டு இருந்தப்ப, பொறுக்கமுடியாத அண்ணி, 'பேசாம சீனிவாச மங்காபுரம் போயிட்டு வாங்க'ன்னாங்க.

அட! இது என்ன புதுசான்னு  கண்கள் விரியக் கேட்டேன்.  இதுவரைக்கும் போகலையான்னு அண்ணனுக்கு வியப்பு. எப்பவும்  அலமேலுமங்காபுரம் போறது தான் வழக்கம் எனக்கு.  அதுவும் சம்ப்ரதாயப்படி முதலில் தாயாரைப் பார்க்காம  அப்பனை நோக்கியே ஓடுவேன். அதுக்குத்தான் நல்லாக் கொடுக்கறானே நாலு போடு மண்டையில் போட்டு:-(
அதனால்தான் 'பட்டது போதுமுன்னு பொங்கி எழுந்தாச்'. இனி உனக்கும் எனக்கும் சங்காத்தம் இல்லை போ.........

இடவிவரம் கேட்டு வச்சுக்கிட்டேன். காளஹஸ்தியில் இருந்து கிளம்பி  திருப்பதிக்குப் போய்க்கிட்டு இருக்கோம். தூரம் என்னவோ ஒரு  37 KM தான்.  போறவழியில்  புள்ளையார் ஒருவர் லிஃப்ட் கேட்டு ரோடோரம் உக்கார்ந்துருக்கார். பாவமாத்தான் இருக்கு.  நம்ம வண்டியில் இடமில்லை. பத்துநாள் தலையில் தூக்கி வச்சு ஆடவும் வேணாம். அப்புறம் இப்படி ரோடில் கடாசிட்டுப்போகவும் வேணாம் :-( ப்ச்.......
இன்னும் கொஞ்சதூரத்தில் மெயின் ரோடுலே இருந்து பிரியும் கிளைச்சாலையில் ஒரு  ஸ்தூபியும், அலங்கார தோரணவாயிலுமா இருக்கு. என்ன ஏதுன்னு நிதானிக்கறதுக்குள்ளே  நம்மவண்டி நேஷனல் ஹைவேயில் விர்ரிட்டுக்கிட்டுப் போயிருச்சு.  அந்த அவசரத்திலும்  க்ளிக்கி வச்சது இது.
அப்புறம் வேறொரு வரலாற்றுப் பதிவு வாசிக்கும்போது  விவரம் கிடைச்சது.  அடடா... தவறவிட்டுட்டோமேன்னு  மனம் புலம்பியது உண்மை.
தொண்டமநாடு என்ற இடத்துக்கான நுழைவு வாசல் அது.  அதுலே பயணம் செஞ்சு உள்ளே போனால்  சோழமன்னனின் பள்ளிப்படையும், கோதண்டராமேச்வரம் என்ற கோவிலும் இருக்காம்.  சோழமன்னன் ஆதித்யசோழனுக்கும் பல்லவனுக்கும் போர் நடந்த இடமாம்! கூடுதல் விவரங்களுக்கு இங்கே ஒரு சுட்டி.

இன்னும் கொஞ்சதூரத்தில் சின்னதா ஒரு கூட்டம். நாலைஞ்சு காக்கிச்சட்டைகள் வேற! காய்கறி வண்டி ஒன்னு  குடைசாய்ஞ்சு கிடந்தது. சின்ன க்ரேன் வச்சு தூக்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. பாவம்............

கூகுளார் சொன்ன ஒரு மணி நேரத்தில்  திருப்பதிக்கு  வந்துருந்தோம்!  புது ஃபோன் வாங்கினோமுன்னு சொன்னேன் பாருங்க.... அது ரொம்ப வசதியா இருக்கு.  நம்மவரின் நியூஸி ஃபோனிலும் ஜிபிஎஸ் இருக்குன்னாலும் அது ரோமிங் என்பதால்  செலவு அதிகம். இப்போ உள்ளூர் தொடர்பு என்பதால்  நல்லதாப்போச்சு. இதுக்குத்தான் .... பழைய பட்டன் ஃபோனை  விட்டுட்டு ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக்கலாமுன்னு  படுத்தி எடுத்தது.

இந்தப் பயணத்திலும் எங்கேயுமே  முன்கூட்டியே தங்குமிடங்களை புக் செஞ்சுக்கலை. அங்கங்கே பார்த்துக்கலாமுன்னு   ஊருக்குள் போகுமுன்னே  வலையில் இடம் தேடுவதுதான். நம்மவர் ஒரு ஹாலிடே இன் பார்த்து வச்சுருக்கார். தேடிக்கிட்டே போனதும், ஊருக்கு வெளியே ரொம்பத்தள்ளி இருக்கேன்னு எனக்குப் பிடிக்கலை. எதுக்கும் ஊருக்குள்ளே போய்ப் பார்த்துட்டு ஒன்னும் சரிப்படலைன்னா இங்கே வரலாமுன்னு  சொல்லி வச்சேன்.

நம்ம சீனிவாசன் (ட்ரைவர்) இன்னொரு நல்ல இடம் இருக்கு. பாருங்கன்னு  கொண்டுபோய் விட்டது ஹொட்டேல் ப்ளிஸ். உள்ளே போய்  விசாரிச்சதில் ரூம்  கிடைச்சது.
நம்ம பைகளைச் சுமந்து அறைக்குக் கொண்டுபோனவர் அசப்பில் நடிகர் வெங்கடேஷ் மாதிரி இருக்கார். எதோ ஒரு படத்தில் ஹொட்டேல் ரூம்பாயா நடிகரைப் பார்த்த நினைவோ என்னவோ.... நடையும் அதே போல:-)  அவரைத் தொடர்ந்து கூடவே வந்த  இன்னொருவர்  'திருமலை தரிசனத்துக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சு தரேன்.  இன்றைக்கு  மாலையா இல்லே நாளை காலையா?'ன்னார்.

ஒன்னும் வேணாம். மலைக்குப்போற ப்ளான் கிடையாதுன்னதும்  'இதுங்க எதுக்காக திருப்பதிக்கு வந்துருக்கு'ன்ற பார்வை.
ஜன்னல் திரைச்சீலையை விலக்கினால்....   மலை இருக்கே தவிர  பனி மூட்டமா ஒரே மசமச.....  பெருமாளுக்கு மானசீகமா சேதி ஒன்னு அனுப்பினேன்.... 'நான்  வர்றதா இல்லை'ன்னு:-)

அரைமணி போல  ஓய்வு. அதில் சின்னக்குளியல்னு முடிச்சுட்டு கிளம்பி  சீனிவாசமங்காபுரம் போறோம்.  நாம் தங்கி இருக்கும்  ஹொட்டேல் ப்ளிஸ்லே இருந்து ஒரு 15 கிமீ தூரம்.   திருப்பதி- அனந்தபூர் ஹைவே.
ஒரு இடத்துலே  சாலை மேலேறிப்போகுது. தார் ரோடு  மாறி இப்ப மண்சாலை! ஆனால் நமக்குப்பின்னால் வர்றவங்க  லெஃப்ட் சைட் ஓவர் டேக் பண்ணி கீழிறங்கும் பகுதியில் போறாங்க. குழப்பமா இருக்கேன்னு வண்டியை நிறுத்திட்டு மண்சாலையில்  மேலேறிப்போய் பார்த்துட்டு வந்த சீனிவாசன் மேம்பாலம் போடறாங்க. மேட்டுக்கு அப்புறம் ஒன்னுமே இல்லைன்னார்.
ஆமாம்... அங்கே  தடைகளோ, எச்சரிக்கையோ வைக்க வேணாமா?

நாங்களும்  இடதுபக்கம் எல்லோரும் போன கீழே போகும் பாதையில் போனால்  பாலம் வரும் இடம்  பாதி முடிஞ்ச நிலையில் அம்போன்னு நிக்குது. எதிரில் இடம் வலமாப்போகும்  சாலையில் போய் சேர்ந்துக்கிட்டோம்.

அப்புறம்  சாலையில் நின்னுக்கிட்டு இருந்த சிலரிடம் வழி கேட்டு கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். நம்ம சீனிவாசன் இங்கே வந்ததே இல்லையாமே!  இத்தனைக்கும் ட்ராவல்ஸ் வண்டி ஓட்டியா பொழுதன்னிக்கும் திருப்பதி ட்ரிப் அடிக்கிறவர் இவர்!

உள்ளே நுழையும்போதே படு சுத்தமான குளம் பளிச்ன்னு கண்ணைப் பறிக்குது! வெள்ளை நிறத்தில் அஞ்சடுக்கு  ராஜகோபுரம் கம்பீரமா  நிக்குது! ஏதோ உற்சவம் நடந்து முடிஞ்சுருக்கு போல. பந்தல்கள் எல்லாம் பிரிச்செடுத்து சவுக்குக் கட்டைகளும் கயிறுமா  போட்டு வச்சுருக்காங்க.

வளாகம் முழுசும் இப்படி சுத்தமா இருக்கேன்னு பார்த்தால்.... கோவில் இருப்பது தொல்லியல் துறையின் கவனிப்பில்! பூஜை புனஸ்கார சமாச்சாரங்களை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் ஏற்று நடத்துது. இதுகூட 1967 இல் இருந்துதானாம்.
வாசலில் உள்ளே இருக்கும் சந்நிதிகளைப் பற்றி விளக்கமான ரெண்டு தகவல் பலகைகளை வச்சுருக்கு தொல்லியல்துறை!
காலையில் 5மணி முதல் இரவு 8வரை கோவில் திறந்தே இருக்கு.  இப்படி எல்லாக் கோவில்களும் இருந்தால்  கோவில் யாத்திரை போகும் பக்தர்களுக்கு  சுலபமா இருக்கும்.  பகல் நேரத்தில்  கோவிலை மூடி வைப்பதால் மக்களுக்கு அலைச்சல்தான்  அதிகம்.

உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு  போர்டு. வாசலில்  காவல்துறை மக்கள் சிலர் ஒரு ஓரமா நாற்காலி போட்டு உக்கார்ந்துருக்காங்க.  தேவையில்லாத அதிகார கெடுபிடி ஒன்னுமில்லை. அவுங்க பாட்டுக்கு அவுங்க, சனம் பாட்டுக்கு சனம்னு  மக்கள் போய் வந்துக்கிட்டு இருக்காங்க.

ஜொலிக்கும் கொடிமரத்தைப் பார்த்தபடி கோபுரவாசலுக்குள் நுழையறோம். இங்கேயும்  பிரிச்சுப்போட்ட பந்தல் கட்டைகள். மூலவரை தரிசிக்க உள்ளே போறோம்.  கூட்டம் இருந்தாலும் அவ்வளவா கூட்டம் இல்லைன்னுதான் சொல்லணும். நிம்மதியா மூச்சு விட்டு நடக்க இடம் இருக்கு!
திருப்பதி மலை மீது இருக்கும் கோவிலைவிட  வயசில் மூத்தது இந்தக் கோவில். ஆதிகோவில் ரெண்டாயிரம் வருசங்களா இருக்குன்னு சொல்றாங்க. ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சு திருமலைக்கு (வேங்கிடமலை) கிளம்பி வர்றாங்க. புருஷன் வீடு அங்கேதானே!  வர்றவழியில்  அகத்தியரின் ஆஸ்ரமம்.  புதுமணமக்களுக்கு அங்கே விருந்து.  போய் அகத்தியரை வணங்கி, விருந்து சாப்பிட்டு முடிச்சு திரும்பவும் வேங்கிடம் நோக்கிக் கிளம்பும் சமயம்,  புதுமணமக்கள்  கல்யாணம் ஆனவுடன் முதல் ஆறு மாசத்துக்கு மலைஏறக்கூடாதுன்னு ஒரு சம்ப்ரதாயம் இருப்பதாக அகத்தியர் சொல்ல, அதன்படியே அங்கேயே பக்கத்தில் ஒரு  குடில் அமைச்சு அதுலே தங்கிடறாங்க ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்.

இந்த ஆறுமாசம் நீண்ட தேன்நிலவு கொண்டாடிய இடத்தில் பிற்காலத்தில் கோவில் அமைஞ்சதாம். (அப்புறமும் பத்மாவதி ஏன் மலை ஏறிப்போய் பெருமாளுடன் இருக்காமல் கீழேயே  இன்னொரு இடத்தில் தனிக்கோவிலில் இருக்காங்கன்னு தெரியலையே?  ஆறுமாசமே பிடுங்கல் போதும் போதுமுன்னு ஆகி இருக்குமோ?)

நல்ல உயரமா நெடுநெடுன்னு இருக்கார் மூலவர். திருமலை  ஸ்ரீநிவாசனைப்போல் கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு  உசரம். கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் என்றாலும் ஸ்ரீநிவாஸன்னு நாமம்.

இந்தப்பக்கம் லக்ஷ்மிநாராயணரும், அந்தப்பக்கம்  பள்ளிகொண்டவனுமா நின்ற, அமர்ந்த கிடந்தன்னு மூணு கோலங்களிலும் சேவை சாதிக்கிறார்.  முன்மண்டபத்தில் இருந்து மூலவரை தரிசிக்க  ஒரு இருபதுபேர்வரை  ஒரு சமயத்தில் அனுமதிக்கறாங்க. அவுங்க வெளிவரும்வரையில் நாம் காத்திருக்கும்போதும்  கண்நிறைய தரிசனம் செஞ்சுக்கிட்டே நிக்கலாம் . அதான் ஓங்கி உசரமா இருக்காரே!

ரொம்ப அருமையான அலங்காரம்!  கண்ணும் மனமும் நிறைய தரிசிச்சேன்.  கூடவே டெலிபதியில் மேலே இருக்கும் ஆளோடு  ஒரு பேச்சு நடந்துக்கிட்டே இருந்துச்சு.

"பார்த்தியா... ஒரு அலட்டல், அட்டகாசம், கையை இழுத்து வெளியே கடாசுதல் எல்லாம் இல்லாமல் நிம்மதியா சேவிக்கிறோம்.  மனசு முழுசும் அன்பு பெருகி வருது இங்கே!  ஆனால் அங்கே?  போதுண்டா சாமி.  காசு காசுன்னு அலையும் பேய்களிடம் மாட்டிக்கிட்டு நீ சுகமா அங்கேயே இரு. நாங்க நிம்மதியா இனி இங்கேயே வந்து கும்பிட்டுக்கிட்டுப் போறோம்.  இங்கேயும் காலப்போக்கில்  பணப்பேய் பிசாசுகளை அனுப்பி வச்சுடாதே! "
மனம் நிறைஞ்ச தரிசனம் கிடைச்சதில் வேறெதையுமே கவனிக்காமல்  அப்படியே நடந்து கோவிலுக்கு வெளியே வந்திருந்தோம். ராஜகோபுரத்தில் நம்மாட்கள் இங்கிட்டும் அங்கிட்டுமா தாவிக்கிட்டு இருந்தாங்க.

தேர் நிறுத்தும் ஷெட்கூட நீட்டா இருக்கு. எல்லாம் மனநிறைவே!  இதே மகிழ்ச்சியோடு   அலமேலுமங்காபுரம் போகலாமா? சலோ.....
நம் உள்ள நிறைவு சூரியனுக்கும்:-)

தொடரும்.....:-)

PIN குறிப்பு: நம்ம கெமெராவுக்கும்  மகிழ்ச்சியில் தலைகால் புரியலைபோல ஒவ்வொரு க்ளிக்கையும்  அஞ்சஞ்சா எடுத்துத் தள்ளிருச்சு. நம்ம சீனிவாசனிடம் கொடுத்து நம்மைக் க்ளிக் செய்யச்சொன்னபோது  குமிழில் கைபட்டு  மாறி இருக்கணும்:-)

22 comments:

said...

இதுவரை இத்தலம் வணிகமயமாகாமல் இருப்பதறிந்து மகிழ்ச்சி. தங்களின் ஆதங்கத்தை அறிந்தேன்.

said...

அலுமேலு மங்காபுரம் போல இது பிரபலம் அல்ல என்றாலும் நான் கேள்விப்பட்ட கோவில் - திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் இங்கே இருக்கிறதே - அதில் இருக்கும் ஊழியர்கள் தகவல்!

நிம்மதியாக தரிசனம் செய்து வந்தது உங்கள் பதிவில் தெரிகிறது! நான் திருப்பதி போய் கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.....

said...

//அப்புறமும் பத்மாவதி ஏன் மலை ஏறிப்போய் பெருமாளுடன் இருக்காமல் கீழேயே இன்னொரு இடத்தில் தனிக்கோவிலில் இருக்காங்கன்னு தெரியலையே? ஆறுமாசமே பிடுங்கல் போதும் போதுமுன்னு ஆகி இருக்குமோ?)//

இந்தக் காலத்துலேயும் வேலை பார்க்கிற பல பெண்கள் கல்யனத்துக்கப்புரம் ஹஸ்பெண்ட் இருக்கிற ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்காம, அதே இடத்துலேயே இருக்கிறாங்க.

நான் பர்சானல் மேனேஜரா இருந்தப்போ என்னோட பாஸ் சொல்வாரு: இங்க பாரு, பட்சிகளை பிரிக்காதேங்க அப்படின்னு.
அதுனாலே
திருமணம் ஆன அடுத்த நாளே டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்துடுவேன்.

கீழே வருவது இல்லத்தரசி பதில்.

போதும் தான். ஆனா வந்து தான் தீரணும் அப்படின்னு வீம்பு புடிக்கிறவரா வேங்கடவான் இல்லை போல.

சுப்பு தாத்தா.

said...

வழக்கம்போலவே கைப்பிடித்துக் கூடவே அழைத்துச்செல்லும் எழுத்து. எங்களுக்கும் நிறைவே..

said...

மேட்டுக்கு அப்புறம் ஒன்னுமே இல்லைன்னார். ஹா! ஹா! அதான் நம்மூரு.

said...

தங்கள் தயவில் தரிசித்தோம்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கும் பயணம் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

பிள்ளையாரால் வருமானம் ஏதும் இருந்திருக்காது அதுதான் வீதியில் கடாசி விட்டார்களோ என்னவோ

said...

கல்யாண உத்சவம் இங்கயே செய்யலாம். நாங்க இங்க போயும் 20 வருஷம்
ஆச்சு. அப்போ இன்னும் விஸ்ராந்தியா இருந்தது. நீங்க கோவிந்தராஜன் சன்னிதியிலும் தரிசனம் செய்யலாம். கோவிந்தனுக்கு அண்ணன் அவர். கோதை நாச்சியாருக்குத் தனி சன்னிதி. மிக அழகு.

தனிப் பதிவையும் படித்தேன்

said...

Lovely.. Felt i travelled with you and had dharshan.

said...

'அங்கே' வந்து நீங்க அவஸ்தைப்பட வேண்டாம், இங்கேயாவது நல்லா தரிசனம் கிடைக்கட்டும்ன்னுதான் சீனிவாச மங்காபுரத்தைக் காமிச்சிருக்கானோ என்னவோ!!

said...

திருவாழ்மங்கையூராகிய ஸ்ரீனிவாசமங்காபுரத்துக்கும் போனதில்லை. இன்னைக்குப் போயாச்சு.

திருச்சானூர்ல இருக்குறது பத்மாவதி இல்லை திருமகள்னு எங்கயோ படிச்ச ஞாபகம். திருச்சானூர் போனீங்களா?

ஆதித்தசோழனின் பள்ளிப்படையா.. இந்தச் சம்பவத்தைப் பத்தி பொன்னியின் செல்வன்ல எழுதியிருக்காருன்னு நெனைக்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இன்னும் வணிகமயம் ஆகலையேன்னு இப்போதைக்கு மகிழ்ச்சிதான். ஆனால் சொல்லமுடியாது..... மேலே நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு கொதிக்கும் மக்கள் டைவர்ஷன் எடுக்க ஆரம்பிச்சால்.... அவ்ளோதான் :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க ஊரில் ஒரு சமயம் திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்குப் போயிருந்தபோது கிடைச்ச தரிசனம் அருமை. நிம்மதியா உக்கார்ந்து ஸேவித்து மகிழ்ந்தேன். தை மாசம் குளிர்தான் கொஞ்சம் கூடுதல். வெளியூர்களில் இருக்கும் தேவஸ்தானக் கோவில்களில் (சென்னை தவிர) எந்த நாட்டாமையும் இல்லாமல் நல்ல தரிசனம் கிடைச்சுருது!

said...

வாங்க அக்கா & அத்திம்பேர்!

ஜோடியாப் பெருமாளும் தாயாருமா விஸிட் செஞ்சதுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

பட்சிகளைப் பிரிக்காதிருந்ததால் கூடுதல் புண்ணியம் உங்க கணக்கில்:-)

அக்கா,

இப்ப அவர்தான் ராத்திரியில் இங்கே வந்துட்டுப் போறாராம், (அம்மாவுக்குத் தெரியாமல்!) இதுக்கு அப்பவே வகுளாதேவியிடம் சொல்லி இருக்கலாம், 'கருவேப்பிலை இல்லைன்னா போறதும்மா. இப்ப என்ன தாளிச்சுக் கொட்டிண்டே இருக்கணுமா'ன்னு!

said...

வாங்க கீத மஞ்சரி.

நன்றிப்பா!

said...

வாங்க குமார்.

டேஞ்சர் இல்லையோ? உயிர்களுக்கு மதிப்புன்னு ஒன்னு இருந்தால்தானே?

said...

வாங்க ரமணி.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பத்துநாள் கொண்டாட்டம் ஓவர். அதுதான்..... ஆனாலும் இப்படிக் கடாசி இருக்க வேண்டாம் :-(

said...

வாங்க வல்லி.

நாளொருமேனி பொழுதொருவண்ணமுன்னு கூட்டம்கூடக்கூட கோவில்களும் மாறிக்கிட்டே வருதேப்பா:-(

இனிமே ஒருக்கிலும் நோ விஸ்ராந்தி :-(

said...

வாங்க கீதா.

கூடவே வந்தது எனக்கும் மகிழ்ச்சிதான்.

தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி.

said...

வாங்க சாந்தி.

இவனை நம்பமுடியாதுப்பா. நைஸாக் கூப்பிட்டுப் பழி வாங்கிருவான். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும் :-)))))

said...

வாங்க ஜிரா.

அடுத்து எதாவது சந்தர்ப்பம் கிடைச்சால் போயிட்டு வாங்க. இப்போதைக்கு நல்ல அமைதியான இடமாகத்தான் இருக்கு சீனிவாசமங்காபுரம்!

மஹாலக்ஷ்மியின் அம்சம் பத்மாவதின்னு ஆரம்பிச்சு இப்போ மஹாலக்ஷ்மியாகவே காட்சி கொடுக்கறாங்களோ!!!

இன்னொருக்கா பொன்னியின் செல்வன் படிக்கணும்:-)