Monday, January 19, 2015

இருக்கு.... ஆனா இல்லை ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 14)

இன்றையப் பகல் சாப்பாடு ருசிராவில். தாலிகள்:-) கொஞ்சம் காரம் அதிகமுன்னார் கோபால். ஆந்திரா சாப்பாடு வேறெப்படியாம்?  எனக்குத்  தயிர் ரொம்ப
நல்லா இருந்துச்சு!

ரெண்டு வருசத்துக்கு முன்னால் வேறெங்கோ எடுத்த  ஒரு புடவை  முந்தானை முடிச்சுல்லாமல் கிடந்திருக்கு.  இதைக் கவனிக்காமல்  அதுக்குண்டான  ப்ளவுஸை மட்டும்  போனவருசம் தைச்சுக்கொண்டு வந்திருந்தேன்.  அந்தப் புடவையை  இந்த தீபாவளிக்கு உடுத்திக்கலாமுன்னு  கூடவே கொண்டு போயிருந்தேன்.

 தீபாவளிக்குப் புதுப்புடவை வாங்கித்தர்றேன்னு சொன்ன கோபாலிடம்,   இதோ இருக்கு ஒன்னு என்று பிரிச்சுக் காமிக்கும் போதுதான்  கவனிக்கறேன்....   முடிச்சு இல்லை! அடராமா............

எனக்குப் புடவை (வாங்கிக்)கொடுக்கணுமுன்னு துடியாத் துடிக்கிறார்  கோபால்.  சலோ காஞ்சீபுரமுன்னு கிளம்பினோம்.  சரியா  25 நிமிசமாச்சுப் போய்ச் சேர!

மயிலை கபாலிஸ்வரரின் சந்நிதித்தெரு.  காஞ்சிபுரம் நெசவாளர்களின் புடவை இல்லம்!  தீபாவளியை முன்னிட்டு  பத்து சதம் கழிவு உண்டாம். கடைக்காரர்  சீதாராம் நமக்கு அஞ்சாறு வருசங்களாகத் தெரிஞ்சவர்தான். கண்களில் வியப்பும், முகத்தில் சிரிப்புமா 'எப்ப வந்தீங்க மேடம்?'ன்னார்.

நேத்து ராத்திரி பத்துன்னேன்:-)

முடிச்சுப்போட புடவையைக் கொடுத்துட்டு , புதுசா என்ன டிசைன் வந்திருக்குன்னு பார்த்து  மகளுக்கும், நாத்தனாருக்கும் ஒவ்வொரு புடவை செலக்‌ஷன் ஆச்சு. நம்ம ஜன்னுவுக்கு ஒரு பட்டுப்பாவாடைத் துணி பச்சையில் மெரூன் பார்டர்.  ரெடிமேட் ப்ளவுஸ்கள் மிக்ஸ் அண்ட் மேட்ச் வகைகள் ஏராளமா  வந்துருக்கு.  ரெண்டு ஸைடுகளிலும் தைக்காம விட்டுருப்பதை  நமக்கேத்தபடி  இணைச்சுக்கலாம். அதுலே எல்லாப் புடவைகளுக்கும்  மேட்ச் ஆவதுபோல்  ஒன்னு ஆப்ட்டது:-)  மகளுக்கு  ஆச்சு.

இப்போ எனக்கான புடவைன்னு  ஒரு நல்ல புடவையை எடுத்து வச்சேன். 'எதுக்கும்மா இவ்ளோ சிம்பிள்? நல்லாதா நான் செலக்ட் செய்யறேன் பாரு'ன்னு கோபால் களத்தில் இறங்கினார்.  மேல் தட்டிலிருந்த புடவைகளை எல்லாம் எடுத்துப்போடவச்சு, இந்தக் கலர்கள் 'எல்லாம்'  உங்கிட்டே  இருக்கேன்னு ஒவ்வொன்னா தள்ளிக்கிட்டே வர்றார்.  விடிஞ்சது போன்னு இருந்தேன்.


இதோ   உன்னிடம் இல்லாத கலர்ன்னு  ஒரு தங்கக் கலரை எடுத்துக் காமிக்கிறார். பார்டர்தான்  அவ்வளவாப் பிடிக்கலை. மேலும் விலையும் அதிகம்.  வேணுமான்னே யோசிக்கவிடலை இவர். சரசரன்னு  புடவையோடு இணைஞ்சிருக்கும் ப்ளவுஸுக்கான துணியை  வெட்டி எடுத்துட்டு முடிச்சுப்போட ஆரம்பிச்சாங்க கடைப் பணியாளர்கள்.  இப்போ நாலு இளம்பெண்கள் வேலைக்குச் சேர்ந்துருக்காங்க.  இதுக்குள்ளே நான் முதலில் கொடுத்த  புடவையின் முடிச்சு வேலை முடிஞ்சு  பையில் போட்டு கோபாலின் கையில் கொடுத்துட்டார் சீதாராமன்.

நம்ம அண்ணனும் அண்ணியும் வந்து தீபாவளிக்குப் புடவை வாங்கிட்டுப் போனதாகச் சொன்னார்.  முதல்முறை இந்தக் கடைக்கு வந்த போனதை 'நான் பெற்ற இன்பம் வகை'யில் கடையைப் பற்றி நம்ம உறவினர்,  தோழிகள் எல்லோருக்கும் சொல்லியாச்சு. ஆதியில் இந்தக் கடையைப் பற்றி எனக்குச் சொன்னவங்க நம்ம வல்லியம்மாதான்!  

இப்ப கடை வளர்ந்து நாலு  பேர் உதவியாளர்களா இருக்காங்க.

பொதுவா தி நகர் கடைகளில் இல்லாத வகையில் கொஞ்சம்  அபூர்வ டிசைன்களும் இங்கே கிடைக்கும். ஒருமுறை  மகளுக்காக  பார்டரிலும் முந்தானையிலும் ம்யூஸிக்கல்  நோட்ஸ்  இருக்கும்  புடவை(Octave clef, G clef (Treble clef), Crotchet / Quarter note, Flat key signature இப்படி )இங்கே ஆர்டர் கொடுத்து வாங்கினேன். மகள் இங்கே  நியூஸியில் அவுட் ஆஃப் த  ப்ளூ என்னும் இசைக்குழுவில் பாடுகிறாள். விமன்ஸ்   வொர்ல்ட் ம்யூஸிக்  கொயர்.  சிடி எல்லாம் போட்டு விக்கறாங்க. வருசம் ஒன்னு அல்லது இரண்டு முறை கான்ஸர்ட் வைப்பாங்க. அதுக்கு உடுத்திக்கத்தான் இந்த ஸ்பெஷல் புடவை.  இதுக்குத் தீம் கலர் ப்ளூ.





பெருமாளுக்கு சார்த்த ஒரு பட்டு வாங்கிக்கணும். எங்கே  கிடைக்குமுன்னு சீதாராமனிடம் கேட்டால்..... இன்றைக்குக் காலையில்தான்  வந்திருக்கு பாருங்கன்னு  ஒரு  பொதியைப் பிரிக்கிறார்.     மஞ்சளில் ஒன்னும்,  லைட் பிஸ்கெட் கலரிலுமா  ரெண்டும்  பத்தாறு!

நல்ல  அகலமான வெவ்வேறு நிறக்  கரைகளுடன், உயரமான வகை.  நம்ம பெருமாள்,  பீடமும் க்ரீடமும் தவிர்த்தால் அஞ்சே முக்காலடிக்கு  நிக்கிறார்.  பொருத்தமா இருக்கும் என்று தோணுச்சு.  மஞ்சள் எடுத்தோம். முருகனுக்குச் சார்த்த  ஒரு  சிகப்புப் பட்டும் கிடைச்சது.  குட்டி முருகர். அதனால் ஒரு மீட்டர் துணியே அதிகம்!

ஒரு மாதிரி புடவை ஷாப்பிங் முடிஞ்சது. இதோ  நாலெட்டிலே இருக்கும்  கபாலியைக் கண்டுக்கிட்டுப் போகலாமுன்னு  கோவிலுக்குள் நுழைஞ்சோம்.  மணி இப்பத்தான்  நாலே கால்.  கோவில் திறந்திருக்காதேன்னார் கோபால்.  சும்மா ஒரு  சுத்து சுத்திட்டு வந்துறலாமுன்னு   பிள்ளையார், முருகன் சந்நிதிகளில் கும்பிடு போட்டுட்டு வலம்போனால்.....  மேற்கு கோபுரவாசலில் (தெப்பக்குளம் இருக்கும் பக்கம்)  ஏகப்பட்ட கூட்டம்.  எதிரே நந்தியைச் சுற்றி சனம் நிக்குது.  பாலபிஷேகம்!

என்ன விசேஷமுன்னு தெரியலையேன்னு பக்கத்தில் இருந்த ஒரு அம்மாவிடம் கேட்டேன்.  பக்தை....  தெரியாதுன்னு சொன்னாங்க!  போகட்டுமுன்னு  கொஞ்ச நேரம் இருந்து பார்த்துட்டு, பிரகாரத்தை வலம் வந்ததைத் தொடர்ந்து,  புன்னைமரத்தடியில் இருக்கும் மாடுபாப்பாக்களைத் தடவிக்கொடுத்துட்டு சனீஸ்வரன் சந்நிதிக்குப் போகும்போது,  சட்னு  மனசுக்குள்  தோணுச்சு.... நாளைக்குத் தீபாவளி.  அமாவாசை. அப்போ இன்னிக்குப் பிரதோஷம். அதான் நந்திக்கு அமர்க்களமா பூஜையும் அபிஷேகமும்!

எப்படியோ  இதுவரை  பார்க்காத சம்பவம் பார்த்தோமேன்னு மகிழ்ச்சியோடு பதிவர் சந்திப்புக்குப் போனோம்.  அவுங்க வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திட்டு செல்லில் கூப்பிட்டு வீட்டுலே ஆள் இருக்கான்னு  கேட்ட அடுத்த நொடி கதவு திறந்தது!

பதிவர் நைன்வெஸ்ட் நானானி!  போனவருசப் பயணத்தில் அவுங்களை சந்திக்கமுடியலை. உடல்நலக்குறைவில்  மகள் வீட்டிலிருந்தாங்க.  இப்போ எல்லாம் நலமே நலம்! பதிவுகள் ஒன்னும் போடாம ஃபேஸ்புக்கில் பூந்து  ஆடிக்கிட்டு இருக்காங்க. அதுமட்டுமா.................

அலங்கார வேலையில் கில்லாடி.  சாட்சி?   இதோ இந்தப்பிள்ளையார்:-)




தீபாவளிப் பலகாரமா  ரவாலாடு, முறுக்கு!  வேணாம் வேணாமுன்னு முறுக்கிக்கிட்டே தின்னுட்டு ஊர்க்கதைகளைப் பேசிட்டுக் கிளம்பினோம்.  குங்குமம் தரும்போது வச்சுக் கொடுக்கும் ஐதீகம் ஒன்னு இருக்குல்லே?  அந்தக் கணக்கில்  பச்சை விளக்கு கிடைச்சது.  ஆனால் உண்மையான பரிசாக  ஒரு கிலோ இருட்டுக்கடை அல்வா தி (க)ம்முன்னு  தட்டுலே உக்கார்ந்திருப்பதைக் கவனிச்சீங்களோ?

 நம்ம வீட்டுலே  பெருமாளுக்கும்  பச்சை பிடிச்சிருக்கு:-)

அங்கிருந்து கிளம்பி நம்ம அனந்த பதுமனை தரிசிக்கப்போறோம்.  சாயரட்சை பூஜை தொடங்கவும் நாம் போய்ச் சேரவும்  சரியா இருக்கு!  ஹப்பா..... எவ்ளோ நாளாச்சு இங்கே பூஜை பார்த்துன்னு   பூஜை முடியும்வரை கருவறைக்கு நேரெதிரா போட்டுருக்கும் மேடையில் இடம்பிடிச்சு உட்கார்ந்து  அனுபவித்தோம்.
கோவில்தளத்தில் சுட்டபடம் மேலே!  பெருமாளுக்கு நன்றி

  வலம் வந்தபோது தெரிந்த  சிலமுகங்களில் வியப்பு. எப்போ வந்தே என்ற கேள்வி கண்களில்.  இப்பதான் என்ற பதில் என் புன்னகையில்!

மணி ஏழரை ஆகப்போகுது. பேசாம  பக்கத்துலே இருக்கும் க்ராண்ட் ஸ்வீட்ஸில் எதாவது  தீபாவளி இனிப்புகள் வாங்கிக்கலாமுன்னு போனால்.... புதுசா  சில சமாச்சாரங்கள்.  அங்கே  உக்கார்ந்து சாப்பிட ஏஸி ரூம் ஒன்னு போட்டுருக்காங்க.  அஞ்சாறு மேஜைகள்.  என்ன கிடைக்குமுன்னு பார்த்தால்  மெனுகார்டை ஒப்பிக்கிறார் பையர்.

ராச்சாப்பாடு இங்கேயே இருக்கட்டுமேன்னு ஒரு ப்ளேட் பணியாரமும்,  ஆளுக்கொரு  ஸ்பெஷல் ரோஸ்ட் (தோசைதான்) சொன்னோம்.  சுடசுடப் பணியாரம், மூணே மூணு.  தோசை பரவாயில்லை. ஆனால்  சட்னி   வாயில் வைக்க வழங்கலை எனக்கு:(

நம்ம  தேனுக்காக  போட்ட தோசை:-)


தீபாவளி இனிப்பு காரம் என்று சில பாக்கெட்டுகளை வாங்கிக்கிட்டோம்.  கூடவே பாதாம் ஹல்வா, அதிரசம்.

லோட்டஸ்க்குத் திரும்பினோம். ரங்கநாதன் தான் ட்யூட்டியில்.  அஞ்சு நிமிட் பேச்சு.  சீனிவாசனை  மறுநாள்  ஒன்பதரை மணிக்கு வரச்சொல்லிட்டு அறைக்குப் போகும் வழியில் தோழியோடு  கொஞ்சம் அரட்டை.  நம்ம தீபாவளி பர்ச்சேஸ் பார்க்கக் கையோடு அறைக்குக் கூட்டி வந்தேன்.

புடவைகளைப் பார்த்து பலே பேஷ் பேஷ் எல்லாம் ஆனதும், நாளைக்கு என்ன கட்டிக்கப் போறேன்னாங்க.  அதெல்லாம் புதுப்புடவை வாங்கியாச்சுல்லெ என்றார் கோபால்.  சரியாப்போச்சு. ப்ளவுஸ் தைக்கக் கொடுத்தாத்தானே புதுப்புடவை கட்டமுடியும்?

ஏற்கெனவே ஒரு புடவை இருக்கு.இப்பத்தான் அதுக்கு முந்தானைமுடிச்சுப் போட்டோம். அதுதான் நாளைக்குன்னு  புடவை பைகளைத் துழாவினால்.... காணோம்:(  வண்டியிலேயே விட்டுட்டோமோன்னு  சீனிவாசனுக்குப் போன்  செஞ்சால்..... வண்டியிலே பைகள் ஒன்னும் இல்லையேன்றார்.

அட ராமா....பை எங்கே போச்சு? நல்லா யோசிச்சுப் பாருங்க..... காஞ்சீபுரத்தில் இருந்து  வெளியே வரும்போது  பை இருந்ததா?  நாலைஞ்சு பை இருந்துச்சே.  ஆனால்   'அந்தப்பை'இருந்ததான்னு ஞாபகமில்லை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

 ஆ.......  ஆப்டுடுத்து!   சீதாராமனிடம் பேசிக்கிட்டே பையை வாங்கி  நாற்காலிக்கு இடப்புறம் சுவரில் சாய்ச்சு வச்சேன்.   அப்புறம் அதை எடுத்த நினைவில்லை.

போடு ஃபோனை சீதாராமனுக்கு!   மணி ஒன்பதரைதான் ஆகுது. கடையை அடைச்சிருக்க மாட்டாங்கன்னு .....

நல்லவேளை கடையை இன்னும் மூடலை.  மறுநாள் தீபாவளிக்கு லீவு என்பதால்  இன்னிக்குக் கூடக்கொஞ்ச நேரமாம். பை இருக்கான்னு பாருங்க!   தேடிப்பார்க்க ஒரு நிமிசம்.  "இருக்கு. இருக்கு."

"ஓக்கே... இப்ப நம் ட்ரைவரை அனுப்பறோம். பையைக் கொடுத்துவிடுங்க. "

 சீனிவாசனைக் கூப்பிட்டு,  ட்ராவல்ஸ்லே  வண்டியை விட்டாச்சான்னால்....
"இல்லே  இப்பத்தான் அந்தத் தெருமுனையில் திரும்பறேன்."

 "உடனே போய் காஞ்சிபுரத்தில் புடவையை  வாங்கி வச்சுக்குங்க.  காலையில் வரும்போது  கொண்டு வந்தால் போதும்"

ஸோ.... இருக்கும் புடவைக்கு ப்ளவுஸ் இல்லை.   இன்னொன்னு ப்ளவுஸ் இருக்கு. புடவை இல்லை!

கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

"உன்னிடம் கறுப்பு ப்ளவுஸ் இருக்கா?  இப்ப வாங்கிவந்த புடவைக்கு அதைப் போட்டுக்கலாமே!"

'வெள்ளையும்  கறுப்பும் இருந்தா எல்லாத்துக்கும் போட்டுக்கலாம்'  மாமியாரின் குரல் மனசில் வந்து போச்சு.  (அப்படியே  அவுங்க அம்மா குணம்!)

நற நற.....  (நான்  பற்களைக் கடிக்கும் சத்தம்தான்)

தொடரும்...........:-)




15 comments:

said...

'வெள்ளையும் கறுப்பும் இருந்தா எல்லாத்துக்கும் போட்டுக்கலாம்' மாமியாரின் குரல் மனசில் வந்து போச்சு. (அப்படியே அவுங்க அம்மா குணம்!)//

அந்த காலத்தில் இப்படி தான் வெள்ளை சட்டையே எல்லா புடவைக்கும் மாமியார் போடுவார்கள். மருமகள் எல்லாம் வந்து கலர் சட்டைக்கு மாற்றி இப்போது நாம்கூட சில பொருந்தா கலர் சட்டை போடுவோம், ஆனால் அத்தை புடவைக்கு பொருத்தமான சட்டை தான் போடுவார்கள்.

பதிவர் சந்திப்பு, புடவைகடை, ஓட்டல் என்று பதிவு அருமை.
படங்கள் எல்லாம் அருமை.

said...

இனி புடவைகள் எடுக்க வேண்டும் என்றால், எங்க ஊருக்கு வாங்க... தமிழ்நாடு முழுவதற்கும் பல தரப்பட்ட புடவைகள் அனுப்புவது எங்க ஊர் தானாக்கும்... கேட்டோ... ஹிஹி...

விரைவில் வாங்க...

விலை = பல வியப்புகள் காத்திருக்கிறது...!

said...

ஹையோ..ஹையோ!உங்க அன்பில் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா தொண்டையில் வழுக்கி விழுவதுபோல் விழுந்துட்டேன்..துள்சி! கோபால்,மகள் நலமா?

said...

வாங்க கோமதி அரசு.

உண்மைதான். இப்பவும் நம்ம தாம்பரம் அத்தை வெள்ளை ப்ளவுஸ்தான் எல்லாப் புடவைகளுக்கும்.

அதனால் ப்ளவுஸ் துணி புடவையின் ரன்னிங்லே இருக்கற மாதிரி அவுங்களுக்குப் புடவை வாங்குவேன். கூட ரெண்டு ப்ளீட்ஸ் வரட்டுமேன்னு.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கட்டாயம் ஒருக்கா உங்க ஊருக்கு வந்தே ஆகணும் போல!

வந்துடறேன், கேட்டோ:-)

said...

வாங்க நானானி.

வச்சுக்கொடுக்கும் தட்டுலே இருந்த இருட்டுக்கடை, மறுநாள் தீபாவளி ஸ்பெஷல்லா எத்தனை இடத்துக்குப் போச்சுன்னு அடுத்த பதிவில் சொல்லணும்:-)

மனசுலே நினைச்சுக்கிட்டே இருந்து , படம் சேர்த்தப்பவும் இருந்து, கடைசியில் எழுதும்போது கைக்கு வராமல் நேராத் தொண்டையில் வழுக்கி வயிற்றில் விழுந்துருச்சே! ஹைய்யோ!!!!!

said...

டி.நகர் ருசிராவா? போனதில்ல. அப்பளம் நல்லாப் பெருசா ஆனையடி அப்பளம் மாதிரி இருக்கு.

கோபாலே எடுத்துக் கொடுத்திருக்காருன்னா சேலை நல்லாதான் இருக்கும். கட்டும் போது பாராட்டுகள் குவியும். :)

நந்திக்கு அபிஷேகம்னா பிரதோஷமா இருக்குமோ?

ரவாலட்டு முறுக்கு சூப்பர். நானும் ரவாலட்டு ஸ்பெஷலிஸ்ட். பிடிச்சு வெச்சா மாசமானாலும் கெடாது. இறுகாது. வாயில் கரையும். :)

தோசைக்குத் தொப்பி சூப்பர்.

கிராண்ட் ஸ்விட்சில் பாதாம் அல்வா நல்லாருக்கும். இப்பல்லாம் எது கிராண்டுல நல்லாருக்கும். எது அடையாறுல நல்லாருக்கும்னு தெளிவாத் தெரிஞ்சு போச்சு. அங்கங்க அதத வாங்கீருவோம்.

ஆகா. கடைசியில் சேல வந்ததா இல்லையா... அடுத்த பதிவுல தெரிஞ்சிரும். :)

said...

ரசித்தேன். புடவை சமாச்சாரம். நான் இதில ஜீரோ.

said...

ருசிரா.... எங்க இருக்கு? ஒருமுறை சென்று பார்க்கலாம்! மற்றபடி முழுக்க முழுக்க பெண்களுக்கான பதிவு போல!

:)))))

said...

வாங்க ஜிரா.

அப்ப்ளம் அவ்ளோ பெருசில்லை. க்ளோஸப் அப்படிக் காமிக்குது:-)

//கோபாலே எடுத்துக் கொடுத்திருக்காருன்னா சேலை நல்லாதான் இருக்கும். கட்டும் போது பாராட்டுகள் குவியும். :)//

ஆமாமாம்.அவர்தான் பாராட்டணும்.அவருமே பாராட்டலைன்னா எப்படி:-)))))

சரவண பவனில் சீடை & அதிரசம், அடையார் ஆனந்த பவன் &க்ருஷ்ணா ஸ்வீட்ஸில் மிக்சர் இப்படி நாக்கு ரொம்பதான் வளர்ந்து போச்சு:-)))

புடவை..... அடுத்த பதிவில்:-)
இன்றைக்குத் தோட்டம்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இப்படி ஜீரோன்னா எப்படி? புடவைக் கடையில் வேஷ்டிகளும் கிடைக்குதே!

said...

வாங்க ஸ்ரீராம்.

// முழுக்க முழுக்க பெண்களுக்கான பதிவு போல!//

இப்படிச் சொன்னால் எப்படி?

உண்மையைச் சொன்னால் இது ஆண்களுக்கான பதிவுதான்!

இப்படியும் நல்ல புடவைக்கடை இருக்குன்ற சமாச்சாரத்தை ரங்க்ஸ்கள் எல்லாம் தங்க்ஸ்களுக்குச் சொல்லி கூட்டிக்கிட்டுப்போய் வாங்கித்தந்து பாருங்க.

உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளுக்கு நான் கேரண்ட்டீ:-)

said...

சொல்ல விட்டுப்போச்சு ஸ்ரீராம்.

பாண்டிபஸார் ரத்னா ஸ்டோர்ஸ்க்கு எதிர்வாடையில் இருக்கு ருசிரா.

said...

அன்பு துளசிமா உங்க பதிவு வழியா நானானி, ஜிரா எல்லாரையும் பார்க்க முடிந்தது. ஜிரா நலமாப்பா.
புடைவைகள் பார்த்தபோட்தெ கண்ணைப் பறித்தன. நல்ல சாய்ஸ். நாங்கள் அன்று எங்கும் போகவில்லைன்னு நினைக்கிறேன்.லோட்டசில் சாப்பாடு

said...

வெள்ளையும் கருப்பும் இருந்தா எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும்! :)

அதானே... சரியாத் தான் சொல்லி இருக்காரு! :)