Wednesday, February 06, 2013

தெரியாமப் போச்சே.............


ஊரைவிட்டு வெளியே போகும் சாலையில் பறக்கும் கார்.  இந்தப்பக்கம் எங்கே? தோழி வீட்டுக்கா?  இப்ப வரேன்னு சொல்லலையே...     அங்கே போகலைமா. இந்தப்பக்கமொரு பீச் இருக்காம்.அய்ய....போதுமே பீச் பீச்ச்ன்னு.......  இது கல் பீச்சாம்.  பக்கத்துலேதான் ஒரு பத்து கிலோமீட்டரில்.   பெப்பிள் பீச்சா?  ஆஹா.... அப்பப் போலாம். மகளோடு சேர்ந்து எனக்கும்  கல்லாசை வந்து பல வருசங்களாச்சு. என்ன... அவள் வெறுங்கல்லு. நான்  இடைக்கிடை கொஞ்சம்  ப்ரெஷ்யஸ் கல்லு.


இதோ அதோ ன்னு போய்க்கிட்டே இருக்கோம்.  எங்காவது  சாலை பிரியுமிடத்தில் சைன்போர்டு இல்லாமலா போகும்?  ஊர் ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு. அத்துவானக்காடு வீட்டுவாசலில் அஞ்சாறு சேண்ட்டாக்கள் கைகளையும் தலைகளையும் ஆட்டி னார்கள். வாவான்றாங்களா இல்லை போ போன்றாங்களா?


ரிவர்ட்டன் என்ற ஊருக்குள்ளே நுழைஞ்சோம்.  பெரிய பாவா சிப்பி வரவேற்றது.  இது பத்துகிலோ மீட்டரிலா இருக்கு? ஊஹும்.... நாற்ப(த்)து  கிமீதூரம். ஒரு மெயின் கடைவீதி, கடைசியில் ஒரு  சர்ச்.  நேரெதிரா ஒரு ம்யூஸியம்.  வார் மெமோரியல்,  இடது மூலையில்  ஒரு ஃபயர் ஸ்டேஷன். நேராப்போனால்  பாலம்.  இது ஜேக்கப் நதி கடலுடன் கலக்கும் முகத்துவாரம்.   பாலத்தின் மறுகோடிக்குன்றில் வரவேற்கும் சிலுவை!

ஜேக்கப் ஆறு  ஒரு குளம் கட்டி நிற்கும் வலது பக்கம். அந்தாண்டை  குன்றின் சரிவில் வீடுகள். ஊர் மக்கள் தொகை 1900. இந்த ஊர்  நியூஸியின் பழைய  ஊர்களில் ஒன்னு. இப்போ வயசு 177 வருசம்.

படகுத்துறைதான்  கண்ணை இழுக்குது. அநேகமா படகு இல்லாதகுடும்பம் இருக்கச் சான்ஸே இல்லை போல. மீன்பிடிதான் தொழிலே!




சிலுவையைக் கடந்து போகும்ஹைவேயில் ஒரு மூணு கிலோமீட்டர் போய் வேடிக்கை பார்த்துட்டு, பாலத்துக்குள் நுழையாமல்  இடப்புறம் பிரியும்  சாலையில் போனால் அது கடலுக்கு முன்னால் கொண்டு நிறுத்துச்சு.  கடலைப் பார்த்த வீடுகள் கொஞ்சம். பிள்ளைகள் விளையாட ஒரு சின்ன அமைப்பும் திமிங்கிலமும். எல்லாமே வண்டியை விட்டு இறங்காமல் பார்த்தவையே.


பாலத்துக்குள் நுழைஞ்சு டவுனுக்கு (!!)வந்தோம். நியூஸியின் பெஸ்ட் ம்யூஸியம் என்ற அறிவிப்பைப் பார்த்ததும்...... உள்ளே நுழைஞ்சோம்.  ஊரூருக்கு  அருங்காட்சியகம் இருக்குன்னாலும் உள்ளூர் சரித்திரத்தைக் கொஞ்சமாவது புரிஞ்சுக்கணும், தெரிஞ்சுக்கணுமுன்னா  கட்டாயம்  இவைகளைத் தவறவிடக்கூடாது

தலைக்கு ஆறு டாலர்.  சிறந்ததுன்னா காசுகூடத்தான் கொடுக்கணும் இல்லையா? கயிறு தடுப்பை நீக்கி உள்ளே போனோம். கண்ணுக்கு நேரா கடைசியில் இருந்த அறையில் ஃப்லிம்ஷோ நடக்குது.  இன்னொரு சின்ன தியேட்டரில் மராமத்து நடக்குதுன்னு  இங்கே காமிக்கிறாங்க.  முக்கால்மணி இதுக்கு ஒதுக்கணும்.  நமக்கேது நேரம்? அஞ்சு நிமிசம் நின்னபடியே பார்த்தேன். வெள்ளையர்களும் மவொரி இனத்தவரும் நேருக்குநேர்  சந்திக்கும் நிகழ்ச்சி.  பார்த்தவரை அருமையாத்தான் இருக்கு  காட்சிகள்.

வலப்பக்கம் இருந்த ஹாலில் தடுப்புகளா வச்சு  டேமிங் த லேண்ட் படங்களும் மாடல்களும். ஆஹா.... இது  நம்ம நியூஸி புத்தகத்தில் ஏற்கெனவே விவரிச்சு இருந்தவை என்பதால் சுவாரஸியம் கூடுச்சு.

 கிபி 1840, ஃபிப்ரவரி 6 தேதி ( இன்னிக்குதான்) மவொரியர்களுக்கும்  ப்ரிட்டிஷ் மஹாராணிக்கும் இடையில் ஒப்பந்தம்  கையெழுத்தாச்சு. வைட்டாங்கி என்ற ஊரில் இது நடந்ததால்  வைட்டாங்கி தினம் என்று எங்களுக்கு அரசு விடுமுறை உண்டு வருசாவருசம்.

நீங்க  எங்களை இங்கே  தங்கவிட்டால் நாங்க உங்களைப் பாதுகாப்போம்.  இப்படிச் சொல்லி எங்களை ஏமாத்தி எங்க நிலத்தையெல்லாம் திருடிக்கிட்டாங்கன்னு  இன்றுவரை ஒவ்வொரு   வைட்டாங்கி தினமும் மவொரியர்கள்  பிணங்குவதும், மன்னிப்பு கேக்கறோமுன்னு அரசு சொல்வதும், அதுக்கு பதிலா இந்த உரிமை எங்களுக்கு வேணுமுன்னு அவுங்க கேப்பதும், கேட்டதுலே பாதியை இவுங்க தருவதுமா  ஒரு நாடகம் இன்னிவரை நடக்குது.  எனக்கே இந்த 25 வருசமாப் பழககிப்போச்சுன்னா பாருங்க.

மவொரியர்களின் சமூகக்கூடமான மராய் என்னும் இடத்துக்கு  (இதுவும் ஊரூருக்கு ஒன்னு இருக்குன்னாலும் வைட்டாங்கியில்  இருக்கும் மராய்க்குத்தான்  புகழ் அதிகம் இன்றைக்கு மட்டும்)  பிரதமரும் மற்ற மவொரி நலம் மந்திரியும்.  மற்ற சில மந்திரிமாரும் போவாங்க. வாசலிலே  நிற்கும்  பாரம்பரிய வீரர்களின்  உடை அணிஞ்ச  சில மவொரி  மக்கள் இவுங்களை உள்ளே காலடி வச்சால் தெரியும் சேதின்னு மிரட்டி, பிடிச்சுத்தள்ளுவதும்,  சிலநிமிச கைகலப்புக்குப்பின்  ஒரு மவொரி தலைவர் வந்து தலையிட்டு, 'சண்டை ஒத்து  நைனா, சமாதானங்கா போதே மஞ்சிதி'ன்னு சமாதானம் செய்ஞ்சதும் எல்லாருக்கும் வரவேற்பு பேச்சு மவொரி வெல்கம் இப்படி  நடக்கும் நிகழ்ச்சிகளை   தொலைக்காட்சியில் நமக்குப் போதும்போதுமுன்னு கதறும்வரை இன்னிக் காட்டுவாங்க. நல்லவேளை இங்கே இருக்கும் மூணு சேனலில்  ஒன்னுக்கு  அரசுரிமை இல்லை:-)))

இந்த ஒப்பந்தம் பற்றி முன்பு ஒரிக்கில் துளசிதளத்தில் எழுதியது இங்கே.


நாட்டை சீர்படுத்தறோமுன்னு ஆரம்பிச்சு முதலில்  நிலபுலன்களையெல்லாம்  நம்ம  பயனுக்கு உகந்தமாதிரி  சரி செய்ய ஆரம்பிச்சாங்க. சாலைகள் போடுவது, ரயில்பாதை அமைப்பது, விளைச்சல் நிலங்களை  புதுசா  அமைப்பதுன்னு பலதும் இருந்துச்சே! இதுக்கு வேலைக்கு ஆள் வேணுமுன்னு  டச்சு நாடுகளிலும்,  பிரிட்டனின்  (இங்கிலாந்து,  அயர்லாந்து, ஸ்காட்லாந்து) மற்ற பகுதிகளிலும் இருந்து மக்களை  இங்கே  கொண்டுவந்தாங்க.  கடுமையான உடலுழைப்பு.  அதன் பலனைத்தான் இப்போ நாங்கள் நோகாம அனுபவிக்கிறோமுன்னும் சொல்லலாம்

இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்த புல்விதைகளை இங்கே விதைச்சு  மாட்டுத்தீவனத்துக்கான புல்வெளிகளும் தயாராச்சு.  வந்தவங்களும் தங்களுடைய வளர்ப்பு மிருகங்கள், இன்னும் உணவுக்கும் உழைப்புக்கும் தேவையான மற்ற உயிர்களையும் , கொண்டுவந்தாங்கன்னே சொல்லணும்.

மேலே படத்தில் மூன்று சகோதரர்களுடன் அவர்களின் செல்லம்! மரங்களை வெட்டி பலகைகளாக்கி வீடுகள் கட்டினாங்க. இவுங்க வசிப்பு என்னவோ கூடாரத்தில்தான் அப்போது. இப்படி வந்தவர்களில் ஸ்காட்லாந்துக்காரர்கள்தான்  எடுத்த காரியம் முடிப்பதில் கண்ணும் கருத்துமா இருந்தவர்களாம்.  படமும்சேதியுமா விவரம் கொட்டிக்கிடக்கு இங்கே போட்டோ எவிடென்ஸோடு!!



1863 ஆம் ஆண்டு ஹெலன்ஸ்லீ என்ற கப்பல்மூலம் வந்த சில முயல்கள்  ஒரெடி பீச்சுக் கரையில் விடப்பட்டவை, எதிரிகள் எதுவுமே இல்லாத காரணத்தால் பல்கிப்பெருகி ஊரையே தின்னு முடிக்குமளவுக்கு தொல்லையாப் போச்சு/. இப்பவும்  விவசாயிகளின் முதல் எதிரி இவைகளே:( இதை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சியை அன்று மாலையே நம்ம தோழியின் மருமகன் சொன்னார்! 

இரும்பு ஒன்னும் இல்லாமலே மரத் தண்டவாளம் போட்டு வச்சுருக்காங்க பாருங்க!!!!!

பால் கறப்பது கோபன்களும்  வெண்ணை எடுப்பதும் சீஸ் (பால்கட்டி ) உண்டாக்குவதும் கோபியர்களின்  வேலையுமாகவே! பாவம் கடின உழைப்பு:( கூடவே குழந்தை வளர்ப்பு, வீட்டுச்சமையல், மற்ற வீட்டுவேலைகளுமா பெண்டு நிமிர்ந்துதான் போச்சு!!!


மரவெட்டி ஒருவருடன் கோபால்:-))))

சப்பையா ஒரு கண்ணாடி பாட்டில். அதன் பெயரைப்பாருங்க!!!!

சாமிக்கு ஒரு வீடு. ஒருவேளை ஜீஸஸ் என்ற பெயர் கூட இதிலிருந்து மரூவினதாக இருக்குமோ என்னவோ!!!!

1877 இல்பெரிய கம்பெனிகள் இங்கே  வந்து சேர்ந்துச்சாம். தங்கம் இருக்கும் விவரம்  தெரிஞ்சுருச்சு பாருங்க. சுரங்கம் தோண்ட ஆரம்பிச்சாங்க.
ரெண்டு சுரங்கத்தொழிலாளிகள் விபத்தில் மாட்டிக்கிட்டு மரணம் அடைஞ்சதை வாசிச்சபோது ஐயோன்னு இருந்துச்சு:( நண்பர்களாம்!!!

சைனீஸ் ட்ராகனைப்பார்த்ததும் இது எப்படி இங்கேன்னு வியப்பு. ஆஹா... தங்கச்சுரங்க சேதி இவுங்களுக்கும் போயிருந்துச்சே!

தொடக்கத்தில்  சீனர்களை  இங்கே  அனுமதிச்சு வேலைக்கு சேர்த்துக்கிட்டு இருந்தவர்கள்  கொஞ்ச நாளில்  சீனர்களை எப்படி விரட்டுவதுன்னு  யோசிக்க ஆரம்பிச்சாங்க. அரசாங்கத்துக்கு நெருக்கடிகொடுக்க ஆரம்பிச்சதும் சீனர்கள் வருகையை நிறுத்த, குறைஞ்சபட்சம்  குறைக்க ஒரு திட்டம் உருவாச்சு. அதுதான்  போல் டாக்ஸ் என்னும் வரிவிதிப்பு.

1881 இல் இங்கே குடியேற வரும் சீனர் தலைக்கு பத்து  ப்ரிட்டிஷ் பவுண்டு வரி கட்டணுமுன்னு  ஆரம்பிச்சது, அப்பவும் வருகை  எதிர்பார்த்தபடி நிற்காததால்  1896 இல் ஆளுக்கு 100 பவுண்டுன்னு  வரிவிதிப்பு உயர்ந்துச்சு. ஆனால் சீனர்கள் இதுக்கெல்லாமா  அசந்துருவாங்க?  நூறு பவுண்ட் என்பது பெரும்தொகைதான் அப்போ என்றாலும் அசரலையே? கடனை உடனை வாங்கிக்கிட்டு வரத்தான் செஞ்சாங்க.

கடன் வாங்க முடியாதவர்கள் தங்களை கொத்தடிமை லெவலுக்கு ஆளாக்கிக்கிட்டு  வரி கட்டவும் பயணச்செலவுக்கும்  ஒப்பந்தக்காரர்களிடமும்  தரகர்களிடம்  சரணடைஞ்சாங்க. பத்துவருசம்  அடிமை சாஸனம்.

அப்போ இங்கே வந்து குடியேறிய சீனர்களுக்கும் இப்போ சமீபமா முக்கியமா ஹாங்காங் பிரிட்டனிடம் இருந்து சீன அரசுக்குக் கைமாறிய சமயம் (1997)  இங்கே வந்து குடியேறிய  சீனர்களுக்கும்  நிறைய  வேறுபாடுகள் இருக்கு. எல்லாம்  யாரு உசத்தி யாரு தாழ்த்தின்ற  கதைதான்!

நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று சொல்வேனே...அதுலே  இப்போ நாலில் மூணு சில சமயம் நாலுமே சீனர்களா  இருக்காங்க!   எங்கூரில் ஒரு குறிப்பிட்ட ஏரியா சைனாடவுன் போலவே அவர்களது கடைகள்மட்டுமே உள்ள பகுதியா மாறிக்கிட்டு இருக்கு.  இவர்கள் இடம்பிடிக்க ஆரம்பிச்சதும் அங்கிருந்த வெள்ளைக்காரக் கடைகள் ஒவ்வொன்னா காலிபண்ணிக்கிட்டு போயிருச்சு. இன்னும் பத்தே வருசத்தில்  ஒரு சீனர் பிரதமராக வந்துருவார்!!!

நியூஸியின் முதல் பெண் அரசியல்வாதி க்றிஸ்டினா. 1903 ஆண்டு இங்கே சௌத்லேண்ட் பகுதிக்கு வந்திறங்கிய முதல் மோட்டர்காரின் சொந்தக்காரர்!  இவர் காரோட்டிக்கிட்டு போனதைப்பார்த்து ஊரே அதிசயிச்சது!  இவ்ங்க குதிரை சவாரியிலும் பலேகெட்டி!  ஷம்ராக்ஹொட்டேல் நடத்துனாங்க.


இந்தப்பக்கம் இன்னொரு அறைக்குள் நுழைஞ்சப்ப 'நோ ஃபொட்டொக்ராஃப்' அறிவிப்பு பார்த்ததும்கெமெராவைச் சுருட்டி வச்சேன். உள்ளே பழையகால மவொரி மக்களின் வாழ்க்கை,  சமையலறை,  குடிசைன்னு ஒரு டிஸ்ப்ளே! எல்லாம்  லைஃப் சைஸ் உருவங்கள்.  ஒரு வீட்டின் கணப்படுப்பின் முன் ஒரு ஆள்  அடுப்புக்குள்ளே ஒரு காலை நீட்டுனதுப்போல வச்சுக்கிட்டு  எதிரில் இருந்த இருக்கையில் மயங்கிக்கிடந்தார். ஆஹா...இவர்தான் 'அந்த  ஓவன் மெக்‌ஷேன்!!!!


சௌத்லேண்ட்  சேண்டிபாய்ண்ட் கிட்டே வேலிங் ஸ்டேஷன் ஆரம்பிச்ச சமயம் (1863) திமிங்கில வேட்டைக்காரர் வேலைக்கு  வந்திருந்த வெள்ளையர் இவர்.  ஓய்வா இருந்த சமயம் உக்காந்து யோசிச்சு, இந்தப்பக்கங்களில் ஏராளமா வளந்து கிடக்கும் கேபேஜ் மரங்களின் வேரில் இருந்து ஒரு வகை மதுவைத் தயாரிச்சுப் புகழடைஞ்சுட்டார். கேபேஜ் ட்ரீ ரம், விஸ்கி.

இந்தப்பேட்டையில்  இருக்கும்  மவொரி மக்களின் தலைவருக்கு நண்பராகவும் ஆனார். குடியோ குடி.  லின்க்ஸ் என்ற கப்பல்   தரைதட்டிப்போய் உடைஞ்சு மூழ்கினதுக்கு  அந்தக்கப்பலில் இருந்த மாலுமிகள்  இந்தக்குடியைக் குடிச்சு  மயங்கிக்கிடந்ததே காரணமுன்னு இன்னிவரை சரித்திரம் நம்புவது. உண்மைதான் போல!

இந்த  ஓவன் மெக்‌ஷேன்  அவருடைய தயாரிப்பை அளவுக்கு மீறி அருந்தி, காலை நீட்டிக்  கணப்படுப்புக்குமுன்னால் மயங்கிக்கிடந்ததில்  ஒரு காலில் தீப்பிடிச்சு  கருகியே போச்சு. கரிகாலனுக்கு  அப்படி ஒரு மயக்கம்.  கடைசியில் உணர்வு வந்து பார்த்தால்  வெந்தக் கால்.:(

அது அழுக ஆரம்பிச்சதும் ஏற்பட்ட வலியைத் தாங்கமுடியாமல் போக, மரம் அறுக்கும் வேலைக்கு வந்திருந்த ஒரு மருத்துவர்,  மரம் அறுக்கும் ரம்பத்தால் காலை வெட்டினார். மயக்க மருந்தெல்லாம் ஒன்னும் இல்லை. ஒருவேளை இன்னும் கொஞ்சம் அதிகமாக மதுவை  உள்ளே தள்ளி இருக்கலாம்.

எப்படியோ  வெட்டுப்பட்ட கால் குணமானதும் மரக்கால் ஒன்னை செஞ்சு பொருத்திக்கிட்டாராம் மெக்‌ஷேன். அப்படியும் குடியை விட்டபாடில்லை.  குடி குடியைக் கெடுக்கும் என்ற போர்டு ஒன்னு  வச்சுருக்கலாம் .   நேத்துதான்  ஸ்டெவர்ட் தீவு ம்யூஸியத்தில்  இவருடைய மரக்காலைப் பார்த்தேன்! ஜெய்ப்பூர் காலுக்கு  முன்னோடி!!!!

  அந்த அறையில் இருந்து வெளியேறி கயிறுத் தடுப்புக்கருகில் வந்து  சுவரில் இருந்த படங்களை க்ளிக்கினப்ப.... அங்கே வந்த மியூஸியம் பணியில் இருக்கும் பெண்மணி  அப்பதான் உள்ளே நுழைஞ்சவங்க.... இங்கே ஃபொட்டோ எடுக்கக்கூடாதேன்னு  சொன்னங்க.

அப்படியா? அந்த அறை வாசலில்  கூடாதுன்னு அறிவிப்பு இருந்தது .அங்கே எடுக்கலைன்னு சொன்னேன்.  இங்கே எல்லா இடத்திலும்தான் என்றவுடன்.......... எனக்கு  ...........

தொடரும்............:-)



15 comments:

said...

//வீட்டுவாசலில் அஞ்சாறு சேண்ட்டாக்கள் கைகளையும் தலைகளையும் ஆட்டி னார்கள். வாவான்றாங்களா இல்லை போ போன்றாங்களா?//

நல்ல வேடிக்கை ....

said...

//அநேகமா படகு இல்லாதகுடும்பம் இருக்கச் சான்ஸே இல்லை போல. மீன்பிடிதான் தொழிலே!//

இங்கே கார்.. பைக் இல்லாம ஒரு வீடு இருக்குமா... அப்படி அங்கே போல....

said...

// பிள்ளைகள் விளையாட ஒரு சின்ன அமைப்பும் திமிங்கிலமும். எல்லாமே வண்டியை விட்டு இறங்காமல் பார்த்தவையே.//

திமிங்கலம் நல்ல நைசா , மளுமளுன்னு இருக்கு.. ஒரு மாதிரி பாசமா முகத்தை வைச்சுருக்குன்னு நினைக்கின்றேன்.

said...

அங்கே வெய்யிலே வெளியே வராதோ,...?

said...

http://jayarajanpr.blogspot.in/2013/02/40.html

said...

எவ்வளவு தகவல்கள். சுவாரசியமாக இருக்கு படிப்பதற்கு.படங்கள் அனைத்தும் மிக அழகு.
//இங்கே எல்லா இடத்திலும்தான் என்றவுடன்.......... எனக்கு ...........//

ம்ம்.. என்னாச்சு??

said...

Interesting...waiting for the next turn of events:)

said...

சீனா வியக்கவைக்கிறது ...

said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

said...

எத்தனை எத்தனை விவரங்கள்....

அசத்தறீங்க டீச்சர்.

said...

வேலை ரொம்பக் கடினமா இருக்குது போலிருக்கு. பாவம்... உழைச்சுக்களைச்சு உக்காந்துட்டே தூங்கறார்.

said...

எப்படியோ வெட்டுப்பட்ட கால் குணமானதும் மரக்கால் ஒன்னை செஞ்சு பொருத்திக்கிட்டாராம் மெக்‌ஷேன். //
வாழ வேண்டுமே வலிகளோடு என்ன செய்ய!

said...

http://jaghamani.blogspot.com/2013/02/blog-post_6.html

சர்வதேச யானைகள் திருவிழா....
தங்களை வரவேற்கிறது ...

said...

நிறைந்த தகவல்கள் படங்களுடன் பலதும் அறிந்துகொண்டோம்.

படம் எடுக்க அனுமதி இல்லை. நாங்கள் பார்த்துவிட்டோமே :) பின்னாடி தெரிந்ததில் நாங்கள் அதிஷ்டமானோம். நன்றி.

said...

வரலாறு சிறுசோ பெருசோ... அதை நேர்மையாக நியாயமாக முறையாக சிதைக்காமல் ஆவணப்படுத்தி வைப்பதில்தான் நாகரிகத்தின் முதற்படி தொடங்குகிறது.

நம்மூரில் ஆவணப்படுத்துதல் என்பது ஆணவத்தோடு தமக்குப் பிடித்த வகையில் திருத்திப் படுத்துதல் என்று பொருள்.

ஒரு கேள்வி. அந்தச் சிப்பி உண்மையான சிப்பியா? செயற்கையா செஞ்சு வெச்ச சிப்பியா?