Thursday, August 09, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 6

14/7 இன்னைக்கு நாள் நல்லா இருக்காம். முஹூர்த்த நாள் வேறே! போதாததுக்கு 'புதன் கிழமை!' பூமி பூஜை செய்யலாம்னு இருக்கோம்.கோபால்தான் பூஜைக்கு இருக்கமாட்டாரு. அதிகாலையிலேயே, ஆஸ்திரேலியா'வுக்குப் போயிருவாரு. இவருகிட்ட ஒரு பழக்கம்' என்னைக்கு ஆள் இங்கே வேணுமோ, அன்னைக்கு ஆப்ஸென்ட் ஆயிடுவார். இன்னிக்கு நடுராத்திரியே திரும்பி வந்துருவார்தான். மறுநாள் வியாழன், நாள் நல்லா இல்லேயாம். மரண யோகமாம். சரி, வெள்ளிகிழமை வச்சுக்கலாமுன்னா 'ஆடி' மாசம் பிறக்குது. அதனாலே வேற வழி இல்லாம இன்னைக்கே செய்யலாம்னு முடிவு.



இவர் காலையிலெ 5 மணிக்கே கிளம்பறதாலே, நானும் சீக்கிரமா எழுந்துட்டேன்! குளிச்சு, சாமி கும்பிட்டு, வழக்கமா செய்யற வேலையெல்லாம் முடிச்சுட்டு, கொஞ்சம் கேசரி மட்டும் சாமி பிரசாதமா செஞ்சிட்டு, முதல் நாளே எடுத்து வச்சிருந்த 'பூஜை' சாமான்களோடு எட்டேமுக்காலுக்கே ரெடியா நிக்கறேன்.பூஜை செய்யற பண்டிதர் ( யாரு, நம்ம கஸ்தூரிதான்) 9 மணிமுதல் 10 வரை நல்ல நேரம்னு சொல்லியிருந்தாங்க.9 மணிக்கு வர்றேன்னும் சொன்னதாலே அவுங்க வரவைப் பார்த்துக் காத்துகிட்டு இருக்கேன்.


மணி பாட்டுக்கு ஓடிகிட்டு இருக்கு,ஆளைக் காணோம். அங்கே ·போன் போட்டா, யாருமே எடுக்கலை. சரி, வந்துகிட்டே இருப்பாங்கன்னு இருக்கேன்.9.40க்கு ஓடி வராங்க! வூட்டுக்காரு 'லேட்' பண்ணிட்டாருன்னாங்க! நல்ல நேரம்தான் 10 வரைக்கும் இருக்கேன்னு, அரக்கப் பரக்கப் போனோம். இன்னும் இடத்தைக் 'க்ளியர்' செஞ்சு முடிக்கலேல்ல. ஃப்ரூஸ்காரர் வேலை செஞ்சிகிட்டு இருக்கார். முதல்லேயெ சொல்லி வச்சிருந்தோம் இப்படி பூஜை செய்ய வருவோம்னு. ஈர மண்ணு மேலெ, 'ப்ளாஸ்டிக் ஷீட்' விரிச்சு, அதும்மேலே கொண்டுபோன சாமி, விளக்கு எல்லாம் வச்சோம். அடிக்கற காத்துலே விளக்கு அணைஞ்சு போச்சு. ஊதுவத்தி மட்டும் நல்லா வாசனையா எரிஞ்சது. புள்ளையார் பூஜையும், ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்திரமும் சொல்லி சின்னதாப் பூஜையை முடிச்சோம். அதுக்குள்ளெ, அங்கே இடிபாடுகளை அள்ளிட்டுப் போறவரும் வந்தார். சரி, கொஞ்சம் ப்ரசாதம் கொடுக்கணும்னு போனா, கேசரியப் பாத்து பயந்துட்டாங்க! பழம் மாத்திரம் எடுத்துக்கோங்கன்னேன். சரின்னுட்டு எடுத்துக்கிட்டாங்க!




அப்பத்தான் ஞாபகம் வருது, நம்ம 'ஜர்னல்'க்கு போட்டோ எடுக்கலேன்னு. அதுக்குள்ளெ கஸ்தூரி பாதி சாமான்களை எடுத்துட்டாங்க. அப்புறம் திரும்ப எடுத்து ஒரு மாதிரி வச்சு, சில படங்களை எடுத்தேன். இவர் ஒரு பத்தேகாலுக்கு ஃபோன் செய்றாரு, 'மெல்பெர்ன்'ல இருந்து. பூஜை முடிஞ்சதான்னு கேக்கறதுக்கு! அப்பத்தான் 'ட்ரைவ்' பண்ணிகிட்டு இருக்கேன். அப்புறம் பேசறேன்னு சொன்னேன்.



என் மனசுக்கு திருப்தியா இல்லை, இந்த பூஜை. ஆனா எல்லாத்துக்கும் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? நல்லா உக்காந்து சாமி கும்பிட சரியான இடமா வேண்டாமா? ஒரு பக்கம் வேலை நடந்துகிட்டே இருக்கு. இடம் சமதளமா இல்லை. குண்டும் குழியுமா இருக்கு! ஈரமா வேறெ இருக்கு. இப்போ மிட் விண்டர் சீஸன். குளிர் ஒரு பக்கம் கொல்லுது. இவரும் ஊருலே இல்லை. வீடு கொஞ்சம் எழும்பட்டும். ஒரு நாள் நானும், இவருமா வந்து மறுபடி சாமி கும்பிடணும்னு முடிவு செஞ்சுகிட்டேன். நம்ம வீடு நல்லா வரணும்னு நமக்கு ஒரு பதைப்பு!


மறுநாள் வியாழக்கிழமை இவர் மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வர்றபோது, அங்கெ ஏதாவது வேலை நடக்குதான்னு பாக்கப் போயிருக்காரு.இப்பல்லாம், நமக்கு எங்கே போறதா இருந்தாலும், இந்த வீட்டு வழியாதான் போறதும் வாறதும்! 'ஷார்ட் கட்'னு நினைக்கறீங்களா? அதுதான் இல்லே! இப்ப நாம இருக்கற வீட்டுக்கு மேற்காலதான் புது வீடு இருக்கு. நம்ம வீட்டுலெ இருந்து ஒரு 2.2 கிலோமீட்டர் தூரம் போகணும். கிழக்கால போகணும்னாக்கூட, நாம இங்கிருந்து, மேற்கால போய், அந்த இடத்தைச் சுத்திக்கிட்டுத்தான் மறுபடி கிழக்கால போவோம். நாங்க போலேன்னாக்கூட, வண்டி தானா அங்கே திரும்பிடும்! கோபாலோட ஆஃபீஸுலே இருந்து வீடு பக்கம்தான். 650 மீட்டர் தூரம் வரும்.






இவரு போய் பாத்தாரா, அங்கெ 'பில்டரும்,அவுங்க ஆள் ஒருத்தரும் பலகை வச்சு,நீளம், அகலம் அளந்து 'பிங்க கலர் ஸ்ப்ரே' அடிச்சு 'மார்க்' பண்ணி வச்சிகிட்டிருக்காங்க! அப்ப 'பில்டர்' சொன்னாராம், தெக்குப் பக்கமா கொஞ்சம் தள்ளித்தான் வச்சிருக்கேன். பக்கத்து வீட்டுக்காரங்க எப்பவாவது அவுங்க இடத்துலே கட்டடம் வந்திருச்சுன்னு நினைச்சு ஏதாவது புகார் ஆயிடுச்சின்னா அப்புறம் கட்டுனதை இடிக்கணும்லே! 'சிடி கவுன்சில்' ஆளுங்களும் ஒவ்வொரு 'ஸ்டேஜ்' ஆனதும் வந்து பாப்பாங்க. அவுங்க பார்த்துச் செக் பண்ணி சரின்னு கையெழுத்துப் போட்டாத்தான் அடுத்தகட்ட வேலையைத் தொடங்க முடியும். இந்த இன்ஸ்பெக்ஷன்கள் அஞ்சாறு முறை இருக்கும். இதுக்கெல்லாம் சேர்த்துதான் நம்ம ப்ளான் அப்ரூவ் செஞ்சு பர்மிட் கொடுக்கன்னு ஒரு கட்டணம் நாம் கட்டணும்!


இது என்னடா வம்பாப் போச்சு! வடக்கே இன்னொரு வீட்டு வேலி இருக்குல்லே. அங்கே 3 மீட்டர் இடம் விடணும்னு நம்ம வீட்டுப் ப்ளான் வரைஞ்ச 'ஆர்கிடெக்ட் டிஸைனர்' சொன்னது இவருக்கு நல்லா நினைவு இருக்கு! வீட்டுக்கு ஓடிவந்து, ஃபோனிலே 'ஆர்கிடெக்ட் டிஸைனர்'கிட்டே பேசுனாரு. நினைச்சது சரியாப் போச்சு! முதல்லே அந்த மூணு மீட்டர்தான் ரொம்ப முக்கியமாம்! திரும்ப அங்கெ ஓடுனோம்.'பில்டர்' கிட்ட விஷயத்தை விலாவரியாச் சொல்லி, தெற்கால இருந்து ஆரம்பிச்சு வராம, வடக்காலெ 3 மீட்டர் விட்டு ஆரம்பிச்சுப் போகச் சொன்னோம். நல்ல வேளை. உடனே பார்த்து சரி பண்ணியாச்சு. 'சாமி'தான் சமயத்துக்கு அங்கெ நம்மளை அனுப்புச்சுன்னு ஒரு சந்தோசம்!


அன்னைக்குச் சாயந்திரமா ஒரு 'ட்ரிப்' போய் அளந்துப் பார்த்தோம். வண்டிலேயே ஒரு 'மெஷரிங் டேப்' வச்சிருக்கம்ல! அளந்து பாத்தா, சரியா 3 மீட்டர் விட்டு ஆரம்பிச்சு, முதல்லெ பண்ண 'மார்க்'கை அழிச்சிட்டு( அழிக்கறது என்ன கம்ப சூத்திரமா?, மண்ணைக் கிளறிட்டா போச்சு) புதுசா, 'பிங்க கலர் ஸ்ப்ரே' அடிச்சு வச்சிருந்தாங்க!


அடுத்தநாள், வெள்ளிக்கிழமை என்ன ஆச்சுன்னு பார்க்கப்போனா, அங்கே வேலை ஒண்ணும் நடக்கலே! என்ன சிஸ்டமுன்னு தெரியலை. ' ஒருநாள் போவார், ஒருநாள் வருவார்'ன்னு போகுதே!


தொடரும்................

18 comments:

said...

அப்பாடீ..இன்னைக்கு ஒங்க வலைப்பூ என்னையப் பின்னூட்டம் போட விடுது. :)

அந்தக் கையெழுத்து ஒங்களோடதா நல்லாருக்கே...பூஜைத்தட்டுல என்னெல்லாம் இருக்கு?

said...

வாங்க ராகவன்.

என் கையெழுத்தை மெச்சுன முத ஆளு நீங்கதான். நன்றி. ரெண்டாவது வரியிலேயே 'கோழி'
ஆரம்பிச்சுரும்:-))))

பூஜைத்தட்டுலே பிரமாதமா ஒண்ணும் இல்லை. விளக்கு, ஊதுவத்தி ஸ்டேண்டு, குங்குமம், சந்தனம்,
பஞ்சபாத்திரம்& உத்தரணி அவ்ளோதான். பூ கூட இல்லை. மிட்விண்டர்லே பூக்கள் ஏது?

சின்ன டிபன் பாக்ஸ்லே கேசரி.

Anonymous said...

டீச்சர் கேசரி சாப்பட என்னக்கூப்பிடலயே. பரவாயில்ல. குரியர்ல அனுப்பிச்சுருங்க புதுசாப்பண்ணி. எல்லாரும் சாப்பட்ட ஞாபகப்படுத்தீட்டாங்க. கண்ணபிரான் ஆசை தோசைங்கரார், நீங்க கேசரிங்கறீங்க. ஜிரா,வலைப்பூ ரொம்ப சதி பண்ணுது. நான் போட்ட பதிவு பின்னூட்டம் எதையும் காமிக்கமாட்டெங்குது. ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான் போலைருக்கு

said...

வாங்க ச்சின்னாம்மிணி.

அதென்ன தோசையோட நிறுத்திட்டீங்க? நூறு தடா அக்காரவடிசில்?
வேணாமா?

பின்னூட்டப்பெட்டிதான் கொஞ்சம் பாடாய் படுத்துது.
சங்கத்துலெ நானும் அங்கமாகிக்கிறேன்.

இப்பதான் ஆணி பிடுங்கலில் இருந்து ஒய்வுன்னு சொன்னீங்களே. பேசாம,
இங்கே வந்து சேருங்க. ச்சுடச்சுட கேசரி. ஜமாய்ச்சுப்புடலாம். அது ஒண்ணுதான்
நான் நல்லாச் செய்ய வருதுன்னு நினைக்காதீங்க. சக்கரைப்பொங்கல், லட்டு எல்லாம்
தூள் கிளப்பிறலாம்.

said...

நாங்க படிச்சு செய்கிற வேலையை,நீங்க படிக்காம செய்கிறீர்கள்.
போட்டாவில் கேசரியை காணும்? நாங்க பயப்படமாட்டோம்!!
இரண்டு பேர் கூடினாலே கூட்டம் என்று சொல்லும் ஊரில :-))் வேண்டுமானால் வீடு கட்டுவதற்குள் 5/6 முறை வந்து பார்க்க முடியும்,வேறு எங்கும் இந்த மாதிரி முடியாது.
உங்க கையெழுத்துப்படம் :-))))))

said...

வாங்க குமார்.

கேசரியை ஒரேதா மூடித்தான் வச்சது. சுத்துப்புறம் ஒரே புழுதிமண்.

அதென்ன ரெண்டுபேருன்னு சொல்லி இன்னும் 50% குறைக்கிறீங்க?
அது நாலுங்க:-))))

இங்கே சிட்டிக்கவுன்ஸில் எஞ்சிநீயர்களுக்கு இது முக்கிய வேலை. கட்டிடத்துக்கு
எதாவது பழுதுவந்தால் கவுன்ஸிலோட கவனக்குறைவுன்னு அவுங்கதான் நஷ்டஈடு
கொடுக்கணும்.

எல்லா வீடுகளுடோட ப்ளான், நில அளவு இன்னபிற சமாச்சாரங்கள் பப்ளிக் ஆக்ஸெஸ் உண்டு.
நாம ஒரு பழைய வீடு வாங்குனாலும், வாங்குமுன்பு அங்கே போய், அவுங்க
கட்டும்போது கொடுத்து ப்ளானைப் பார்க்கலாம். அதெபோல வீட்டுலே எதாவது ஆல்ட்டரேஷன் செய்யணும்,
இல்லே விரிவுபடுத்தணுமுன்னாலும் கவுன்ஸில் பர்மிட் வாங்கணும்.

வெயிட்பேரிங் சுவரை இடிச்சுட்டோமுன்னா? எல்லா ஏரியாவிலும் சிட்டிக்கவுன்ஸிலோட கிளைகள் இருக்கு.
நம்மூர் ஸ்டேட் கவர்மெண்ட்க்குள்ள எல்லா பவரும் இங்கே சிட்டிக்கவுன்ஸிலுக்குத்தான்.

லஞ்சலாவண்யம் இல்லாததால் வேலைகள் ஒழுங்கா நடந்துருது.( டச் வுட்!!)


கையெழுத்துப்படம்.......... ச்சும்மா கிழக்கு மேற்குன்னே சொல்லிக்கிட்டு இருந்தா?
அதான் 'வகுப்புலே டீச்சரா' வரைஞ்சு காட்டியாச்சு:-))))

said...

உங்க வீட்டில் வேலை செய்யுற ஆளுங்க மாதிரி அப்பப்போ வரா மாதிரி ஆயிருச்சே நம்ம நிலமை. :((

இனிமே ஒழுங்கா கிளாஸ் வரேன் டீச்சர்.

said...

டீச்சர்,

ஒரே சக்கர ஐட்டமா சொல்ரீங்களே, பயமா இருக்கு. என் வூட்டுக்காரம்மாவுக்கும் எனக்கும் ஒரு போரே நடக்கும் எவ்வளவு சக்கர கேசரியில போடனும்னு!

எப்பிடியும் நைசா, நான் அசந்து இருக்குறப்போ அள்ளிக் கொட்டிடுவாங்க..

எனக்கும் சக்கரனா ரொம்ப ஆசைதான், ஆனா எறும்புக்கு ரொம்ப அக்கற வந்துடுமே!

சரி, அது என்ன வீடு கோபால் வேலையிடத்துக்கு மட்டும் பக்கமா இருக்கனுமா என்ன?

said...

வாங்க கொத்ஸ்.

லீடர் இல்லாம கிளாஸ் ( class) எப்படித் தவிக்குது பாருங்க!

பில்டர் வேலை ஆரம்பிக்கறேன்னு சொன்னது ஜூலை 26தான். அதான் பொறுமை
காக்கிறோம். இல்லேன்னா மட்டும்?..........:-))))))

said...

வாங்க தஞ்சாவூரான்.

என்னங்க ஒரு கேசரிக்கே இப்படிச் சொல்லிட்டீங்க. அங்கங்கே பாருங்க நூறு தடா அக்காரவடிசில்,
வெண்ணைன்னு எழுதறாங்க.


கேசரிக்கு ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சக்கரைதான் போடறேன்.

//சரி, அது என்ன வீடு கோபால் வேலையிடத்துக்கு மட்டும் பக்கமா இருக்கனுமா என்ன? //

அவர்தாங்க ரொட்டியை ஜெயிச்சுக்கிட்டு இருக்கார்:-)


பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டுப்போறது ஒரு லக்ஸரி இல்லையா? :-))))
அதுவுமில்லாம காரை எடுக்காம நடந்தே வேலைக்குப் போறது நல்லா இருக்குல்லே?
(டாக்டர் வேற தினமும் நடக்கணுமுன்னு சொல்லி இருக்காரு.)
ஒரு நாளைக்கு நாலு நடை:-)

said...

//கேசரிக்கு ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சக்கரைதான் போடறேன். //

சக்கர கப் பெருசுதானே?? அப்ப நீங்களும் நடங்க நாலு நடை..

//அவர்தாங்க ரொட்டியை ஜெயிச்சுக்கிட்டு இருக்கார்:-)//

நல்ல மொழிபெயர்ப்பு :)

said...

SVe சேகர் நாடகத்தை கேட்டுக்கொண்டே இந்த பதிவை படிச்சா எதுக்கா சிரிக்கிறது தெரியா சிரிச்சுக்கிட்டு இருக்கேன்.
நீங்களும் சிரிக்கனுமா?

said...

குமார்,

?????????

Why this much sirippu?

said...

வணக்கம் மேடம், ஒரு மாத லீவுக்கு பின் மீண்டும் வலைக்கும் வந்து உங்களுடைய எல்லா போஸ்ட்டுகளையும் படிச்சாசு. ஒன்னொண்ணுக்கும் தனித்தனியா கமெண்ட் எழுத டயம் இல்லை
வீடு மற்றும் பூஜை போஸ்ட்டுகள் அருமை. நேரம் கிடைத்தால் என்னனுடைய வலைக்கும் வந்து போகவும்.

said...

வாங்க மணிப்பயல்.

ஊர்ப்பயணம் நல்லபடி நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

பேருக்கேத்தாப்புலே ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சு, அர்ரியர்ஸ் வைக்காம
இருந்ததுக்கே பாராட்டணும். இதுலே பதிவுலகில் வந்து சரியா ஒரு வருஷம் வேற
ஆயிருக்கு. அதுக்கும் சேர்த்து வாழ்த்து(க்)கள்.

said...

\\இவருகிட்ட ஒரு பழக்கம்' என்னைக்கு ஆள் இங்கே வேணுமோ, அன்னைக்கு ஆப்ஸென்ட் ஆயிடுவார்.//

அங்கயும் இதே கதைதானா? :))

\\அப்பத்தான் ஞாபகம் வருது, நம்ம 'ஜர்னல்'க்கு போட்டோ எடுக்கலேன்னு./

அது சரி எப்பவும் கவனமாத்தான் இருக்கீங்க...இல்லன்னா எங்களுக்கு எப்படி கதை கிடைக்கும்..

உங்க வரைபடமும் நல்லாருக்கு...

said...

வாங்க முத்துலெட்சுமி.

//அங்கயும் இதே கதைதானா? :))//

அதைத்தானே , 'வீட்டு வீட்டுக்கு வாசப்படி', ன்னு சொல்லிவச்சுருக்காங்க:-))))

said...

மேப் சூப்பர்..

அந்த இடைவெளிங்கிரது இங்கே மலேசியாவிலும் விடணும்ன்னு சட்டம் இருக்கு.. ஆனா, ஒரு பக்கம்தான். இன்னொரு பக்கம் வேலி வரைக்கும் கூட கட்டலாம். பக்கத்து வீட்டு காரங்க அந்த இடைவெளி விட்டுக்குவாங்க. ;-)