Thursday, July 05, 2007

8க்கால லட்சணத்தின் 8ப்பட்டி பயணம்.

எட்டுப்போடச்சொல்லி இதுவரை எட்டுப்பேர் கூப்புட்டாச்சு. இனியும் ச்சும்மாஇருந்தா............. சரிப்படாதேன்னு பார்த்தா, சொல்லிக்கறமாதிரி ஒண்ணும் அகப்படலை.


என்னையும் பயணத்தையும் பிரிக்கவே முடியாதுன்னு தோணுதில்லே?. பொறந்ததுலே இருந்தே இப்படி ஊரூராப் போய்க்கிட்டுத்தானெ இருக்கேன்.அதனாலே மனசுலே நிக்கும் எட்டுப் பயணத்தைச் சொல்லிறலாமுன்னு துணிஞ்சாச்சு. காலவரிசை(?)யில் இருக்காது.


1. ஹனி மூனுக்குத் தனியாப் போனேன்:-)



மெட்ராஸ்லே இருந்து வால்ட்டேர்க்குப் போறென். ரயில் பயணம். முன்பின் தெரியாத ஊருக்குத் தனியாப் போறதாலே கொஞ்சம் மனசு திக்திக். ஸ்லீப்பர் கிடைக்கலை. நல்லதுதான். ரா முழுசும் தூங்காம உக்காந்தே இருக்கணும். கூடக் கொண்டு போறது, கொஞ்சம் பாத்திரபண்டமுன்னு வீட்டுச்சாமான்கள். கோட்டைவிடாம இருக்கணுமேன்னு கவலை.

காதல்கணவன் வேலை செய்யும் ஊருக்குப் போகும் ஆர்வம், பயம் எல்லாம் கலந்துகட்டியா ஒரு உணர்வு.இவர் அங்கே போய் ஒரு மாசமாகுது. வீடு பார்த்துட்டேன்னு வந்த கடுதாசியைப் பார்த்ததும் கிளம்பிட்டேன்.
என்ன வாங்கிக்கணுமுன்னு தெரியாம, ராத்திரியில் ரயில் பயணத்துலே குளிர் கூடுதலா இருக்குமுன்னு ஒரு ஸ்கார்ஃப் மட்டும் புதுசா வாங்குனேன். எல்லாரும் தூங்க ஆரம்பிக்கும் நேரம், நானும் ஸ்கார்ஃப் எடுத்துக் காதைமூடிக் கட்டிக்கிட்டு இருட்டில் வேடிக்கை(?) பார்த்துக்கிட்டே ஜன்னலோரம் உக்கார்ந்துருக்கேன்.



எப்பத் தூங்கினேன்னு தெரியலை. சத்தம் கேட்டுக் கண்ணு தொறந்தப்ப கிருஷ்ணா நதிமீது பாலத்துலே 'தடக் தடக்'னு ரயில் போகுது. எல்லாரையும் போலவே சில்லறைக் காசை நதியில் விட்டெறிஞ்சேன். ( அதெல்லாம் கண்ணு பார்த்தாக்கை செஞ்சுருமுல்லெ?)



பத்துமணி அளவில் இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்துச்சு. எனக்காகக் காத்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்ததும் என் திக்திக் எல்லாம் பக்னு நின்னுச்சு. வீடு(???) போய்ச் சேர்ந்தோம்.


இப்ப இதை எழுதறப்பதான் நினைவு வருது, என் புது சில்க் ஸ்கார்ஃப். காணொம்(-: (உலகை மறந்து இருந்துருக்கேன் பாருங்க) ஜன்னல் காத்துலெ எங்கே அடிச்சுக்கிட்டுப் போச்சோ! அச்சச்.........


2 .திமிங்கிலத் தாய்.



மகளும் நானுமா, டிஸ்னி லேண்ட் பார்க்கறதுக்குன்னு லாஸ் ஏஞ்சலீஸ்க்குப் போய்க்கிட்டு இருக்கோம். போனோம் வந்தோமுன்னு ஒரே ஒரு வாரம். எனக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிஞ்சு அஞ்சுவாரம்தான் ஆகி இருந்துச்சு. கோபால் இங்கிலாந்துக்குப் போயிருந்தார். அங்கே இருந்து கிளம்பி வந்து எங்களை எல்.ஏ. ஏர்போர்ட்லே சந்திக்கிறதா ஒரு ஏற்பாடு. எல்லாரையும் போல எல்.ஏ. சுத்துனது இருக்கட்டும். இப்பச் சொல்லவந்தது, அங்கிருந்து San Diego வுக்கு ஒரு நாள்போய் வந்தது.


திமிங்கிலத்தைப் பார்க்கப்போறோமுன்னு குஷியில் இருக்கேன். 'ஸீ வொர்ல்ட்' உள்ளே பலவிதமான ஷோ நடக்கறதாலே,சரியாத் திட்டம் போட்டோமுன்னா ஏறக்குறைய எல்லாத்தையுமே பார்த்துறலாம். ஒவ்வொண்ணுக்கும் இடைவெளி ஒரு 10 நிமிஷம், கூடிப்போனா 15 நிமிஷமுன்னு இருக்கு. ஒரு கோடியில் ஒண்ணைப் பார்த்துட்டு, அதுக்குள்ளே மறு கோடியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஓடணும். கையில் அட்டவணையும், மேப்பும் கொடுத்துடறாங்க.



திமிங்கிலக் குளத்தைத் தாண்டும்போது, என்னமோ ப்ளாஸ்டிக்லே செஞ்ச ராட்சஸ பொம்மை மாதிரி வழுவழுன்னு ஒரு மினுங்கலோடு, ஒரு திமிங்கிலம் நிக்காம படபடன்னு சுத்திச் சுத்தி வந்து தண்ணீரை வாலாலே அடிச்சுக்கிட்டு இருக்கு.ஒரு அஞ்சாறு பேரைத்தவிர அங்கே அப்ப யாரும் இல்லை. அந்தக் குளத்தோட பக்கச்சுவர் எல்லாமே கண்ணாடிச்சுவர் .தண்ணீர் ஒரு கலங்குன அழுக்காத் தெரியுதேன்னு கவனிச்சா............. அந்தத் திமிங்கிலம் குட்டி ஈனப்போகுது.



அதோட அடிவயித்துப் பகுதியிலே இருந்து ரெண்டு/ மூணடி நீளத்துலே குட்டியின் உடல் பகுதி வெளியே வந்து அப்படியே நீட்டிக்கிட்டு இருக்கு. பிரசவ வேதனையில் துடிக்குதுபோல அந்த அம்மா. வலி பொறுக்கமாட்டாமத்தான் வலைத் தூக்கித்தூக்கி அடிச்சுக்கிட்டு இருக்கு. பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு. நேரமாக ஆக குளத்துத் தண்ணீர் முழுசும் ரத்தச்சிகப்பா ஆயிருச்சு. அதுக்குள்ளே நிகழ்ச்சிக்கு நேரமாச்சு இவுங்க அவசரப்படுத்துனதுலே,மனசில்லா மனசோடு அங்கிருந்து ஓட வேண்டியதாப் போச்சு.


ரெண்டு மணி நேரத்துக்குப்பிறகு 'ஷாமு' வின் ஷோ பார்க்க அதே இடத்துக்கு வந்தோம். அதுக்குள்ளே, அங்கே எதுவுமே நடக்காதது போல பளிச்சுன்னு சுத்தம் செஞ்சு,புதுத் தண்ணீர நிரப்பி வச்சுருக்காங்க. வெள்ளையும் கருநீலமும் 'பேட்ச்' போட்டமாதிரி Blue whale ரெண்டு நீந்தி விளையாடிக்கிட்டு இருந்துச்சுங்க. விசாரிச்சதுலே தெரிஞ்சுக்கிட்டது, அம்மாவையும் குழந்தையையும் வேற குளத்துக்கு மாத்திட்டாங்களாம். இருவரும் நலமாம். அப்பாடான்னு இருந்துச்சு.


( இன்னும் கூட எனக்கு ஒரு சந்தேகம்தான். இந்த திமிங்கிலங்கள் ப்ளாஸ்டிக் பொம்மைகளோன்னு)



3. கொதிக்கும் காதல்ச்சின்னம்



தாஜ் மகாலைப் பார்க்கக் குதிச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்காக....? இப்படிக் கொதிக்குற வெயில் காலத்துலேயா போகணும்? என்ன செய்யறதுங்க? அப்பத்தான் ஒரு ச்சான்ஸ் கிடைச்சது. காதல் சின்னமான தாஜ்மஹாலைத் தனியாப்போய்ப் பார்த்துட்டு வந்துறப் போறாரேன்னு இவர்கிட்டே ஒரு சத்தியம்( கைகேயி மாதிரி?) வாங்கி வச்சிருந்தேன். இவர் அப்ப அடிக்கடி வேலை விஷயமா டெல்லிவரை போய்வந்துக்கிட்டு இருந்தார். இப்ப ரெண்டு பேரும்........ இல்லை நாங்கமூணு பேரும் சேர்ந்து போறோம். மகளுக்கு வயசு 10.



ரயில் மேலே இருக்கும் ஆசையாலே டெல்லிக்கு ரயில்னு முடிவாச்சு. ஏறக்குறைய ரெண்டு நாள் பயணம்.ஜாலின்னு இருக்கேன். நம்ம (கூபெ) பெட்டியில் இன்னொரு தம்பதிகளும் இருக்காங்க. அவுங்களோட ரெண்டு பசங்க. அதுலே அந்தப் பசங்க ஓயாமச் சண்டை போட்டுக்கிட்டுப் பயணம் முழுசும் (ராத்திரி கொஞ்ச நேரம் தூங்குனதைத் தவிர) சத்தம் போட்டு அழுதுகிட்டே வந்து.................... சரியான தலைவலி. போதாக்குறைக்கு ஏ.ஸீ. ஸ்லீப்பர் பெட்டின்னு ரெட்டைக்கண்ணாடி ஜன்னல்கள், வெளியே ஒண்ணுமே தெரியலை(-:



இந்த அழுகைச் சத்தத்துக்குப் பயந்துக்கிட்டு நாங்க வெளியே கதவுக்குப் பக்கத்தில் நின்னே பயணிச்சோம். ஆக்ராவிலேன்னா 52 டிகிரி சூடு. திரும்பி வரும் பயணத்து எடுத்த ரயில் டிக்கெட்டை கேன்ஸல் செஞ்சுட்டு, விமானத்துலே சென்னைக்குவந்து சேர்ந்தோம். காதல் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, காதல் உணர்வே இல்லாமக் காதல் ச்சின்னத்தை ஒரு கடமையாப் பார்த்தவங்க நாங்களாத்தான் இருப்போம்(-:




4. வாங்க (?) நினைச்ச நகை.



வெளிநாட்டு வேலை கிடைச்சு, நானும் இவருமா ஃபிஜித்தீவுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். நமக்கு ஹாங்காங்லே ஒரு மூணு நாள் தங்கல். நட்சத்திர ஹொட்டலில் தங்கி இருந்தாலும், சாப்பாட்டுலே என்ன இருக்குமோன்னு பயந்துக்கிட்டு,தெருவோரக் கடைகளில் நம் கண்ணுமுன்னாலே போட்டுத்தரும் ஆம்லெட்டையும் ரொட்டியையுமே தின்னுக்கிட்டு ஊர் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கோம். ஓஷன் பார்க் லே டால்ஃபின் ஷோ அருமையா இருந்துச்சு. கடைவீதிகளில் சுத்துனப்ப, ஒரு நகைக் கடையில் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே இருக்கும் ஜேடு நெக்லேஸ் விலையை விசாரிக்கலாமுன்னு கேட்டா......... அந்த ஆள் அதை எடுத்து என் கையிலே கொடுத்துட்டார். அழகோ அழகுன்னு ஜொலிக்குது. விலை எவ்வளவுன்னு கேட்டா, மொழித் தகராறு. முழிக்கிறார். அப்புறம் கால்குலேட்டரில் படபடன்னு தட்டி நம்மகிட்டேகாமிச்சதைப் பார்த்ததும், அப்படியே நடுங்கிப் போயிட்டேன். ரெண்டரை லட்சம் ஹாங்காங் டாலர். நமக்கு அப்ப இந்திய அரசாங்கம் கொடுத்த ஃபாரின் எக்ஸ்சேஞ்சு காசு எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே 41 அமெரிக்கன் டாலர்!


பேரம் பேசிப் பார்த்திருக்கலாமோ?:-)




5. சொன்ன பேச்சைக் கேக்கணும்.



எடின்பரோ ஏர்ப்போர்ட்டில் இருந்து நாங்க தங்கப்போற ( B & B) வீட்டுக்குத் தொலைபேசுனப்ப, அந்தம்மா படிச்சுப்படிச்சுச் சொன்னாங்க, 'எடின்பரோ ஸ்டேஷன்லெ இருந்து ரயிலைப் புடிச்சு வாங்க'ன்னு. ப்ரெஸ்ட்டன் பான் ஸ்டேஷனில் இறங்கணுமாம். ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் எடுத்துப் போனோம். அங்கே ரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் ரயில்இருக்காம். நாம்தான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களாச்சே. நேரத்தை ஏன் வீணாக்கணும்? பஸ் புடிச்சுப் போய் சாமான்களை வச்சுட்டு, மறுபடி இங்கே வந்து சுத்திப்பார்க்கலாமுன்னு அங்கே இங்கே விசாரிச்சு பஸ்லெயே போறொம்.ஒரு இடத்துலே எங்களை இறக்கிட்டு, வலது பக்கம் நேராப் போங்கன்னு கைகாமிச்சு விட்டார் ஓட்டுனர்.



பகல் மணி 12. ஜாலியா நடக்க ஆரம்பிச்சோம். பத்து நிமிஷத்துக்குள்ளே காலெல்லாம் பின்னுது. கையிலே ஆளுக்கொருபை வேற. ரெண்டு மூணு செட் துணிகள்தான். ஆனாலும் பொணமா கனக்குது. வேர்த்து ஊத்துது. பல்லைக் கடிச்சுக்கிட்டே இன்னும் ஒரு பத்து நிமிஷம் நடந்தோம். உக்கார ஒரு நிழலுமில்லாம மொட்டை ரோடு. தாகம் நாக்கை வறட்டுது. எதோ பாலைவனத்துலெ போறமாதிரி இருக்கு. இன்னும் எவ்வளவு தூரமுன்னு தெரியலை. யார் கிட்டே கேக்கறது? கண்ணுக்கெட்டிய தூரம் ஒரு ஜீவனும் இல்லை. இனி ஒரு எட்டும் வைக்கமுடியாத நிலை. ஆறது ஆட்டுமுன்னு ரோடு ஓரத்துலேயே பையைப் போட்டு அதுமேலே உக்கார்ந்தாச்சு.



ஆபத்பாந்தவனா, அனாதை ரட்சகனா அந்தப் பக்கம் காருலே வந்த ஒரு இளைஞர், வண்டியை நிறுத்தி என்ன ஏதுன்னு விசாரிச்சு,எங்களை ஏத்திக்கிட்டு வந்து ப்ரெஸ்டன் பான் ஸ்டேஷன் வாசலில் விட்டார். கார்லெயே 20 நிமிஷமாச்சு. அவருக்கு பல முறை நன்றியைச் சொல்லிட்டு, நம்மகிட்டே இருந்த விலாசத்தைத் தேடி நடந்தோம். சொன்னா நம்ப மாட்டீங்க......... எண்ணிப் பத்தே எட்டு.


6. இல்லாமல்போன இரட்டையர்கள்




எந்த ஊருக்குப்போனாலும், அங்கே மேலே ஏறிப் பார்க்கும் டவர் மாதிரி எதாவது இருந்தா அங்கே கட்டாயம் போகணுமுன்னு இவர் துடிப்பார். நல்ல வியூ கிடைக்குமாம். நியூயார்க் நகரம். உலக வர்த்தக மையத்து வாசலில் நிக்கறோம். நேத்துதானே எம்பயர் ஸ்டேட் கட்டிடத்துலே ஏறிப் பார்த்தோம். இப்ப எதுக்கு இங்கேன்னு நான் கத்திக்கிட்டு இருக்கேன். சுதந்திர தேவி சிலைக்குப் போற அவசரம் எனக்கு. மகளும் அப்பாவோட கூட்டு சேர்ந்துட்டதாலே ரெட்டை கோபுர உச்சிக்குப் போகவேண்டியதாப் போச்சு. அங்கே இருந்து வ்யூ நல்லாவே இருந்தது. சுதந்திரதேவியும் ஜொலிச்சுக்கிட்டு இருந்தாள்.



அடுத்த ரெண்டாம் வருஷம் இந்த ரெட்டைக்கோபுரங்கள் இல்லாமலேயே போயிருச்சு(-:


நல்ல வாய்ப்பைக் கைவிடப் பார்த்தேனே.



7. ஏமாறச் சொன்னது நானா?



முதல் முறையா இந்தியாவுக்கு போறொம். கையில் துறுதுறுன்னு ஒரு வயசு அஞ்சு மாசக் குழந்தை. உற்றார் உறவினருக்குன்னு எக்கச்சக்கமா சிங்கப்பூர்லெ சாமான்களை அளவு தெரியாம வாங்கிக் குவிச்சுட்டோம். ஏர்ப்போர்ட்லே ஓவர் வெயிட்டுன்னு சொல்லித் தீட்டிட்டாங்க.அதுக்குப் பணம் கட்டணும். நான் சிங்கப்பூர் டாலரா மாத்தி எடுக்க மணி எக்ஸ்சேஞ்சுலே, கைப்பையிலே இருந்து காசை எடுத்துக் கொடுத்துட்டு நின்னுக்கிட்டு இருக்கேன். கால் அருகில் நின்ன குழந்தை ஓடி விளையாடிக்கிட்டு அப்படியே ஓடிப்போயிருச்சு.என்ன செய்யறதுன்னு திகைச்சு கவுண்டரில் அவுங்க நீட்டுன காசை எடுக்காம குழந்தை பின்னாலேயே ஓடுறேன். என்னை அலைக்கழிச்சுக் கடைசியில் கையில் அகப்பட்டது.



இப்ப நான் காசை விட்டுட்டு வந்த கவுண்ட்டர் எங்கே இருக்குன்னு தெரியலை. ஒரு வழியாத் தேடித்தேடிக் கண்டுபிடிச்சு, அந்தக் கவுண்டரில் இருந்த ச்சீனப் பெண்கிட்டே மன்றாடிக் காசை வாங்கிட்டு வந்து இவர்கிட்டே கொடுத்தால், கத்தறார். இவ்வளவு நேரம் எங்கே போ(ய்த் தொலைஞ்சே)னேன்னு. இவருக்குப் பின்னாலே வரிசை வளர்ந்துக்கிட்டே போய் மத்த எல்லாருக்கும் கஷ்டமாயிருச்சாம். குழந்தை ஓடிருச்சுன்னு சொன்னதுக்கு, 'நீ பாட்டுக்குக் காசைக் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போய்த் தேடக்கூடாதா? ஏர்ப்போர்ட்டுக்குள்ளெதானெ இருக்கும். எங்கே போயிறப்போது?'


கதையைக் கேட்டீங்களா? பாம்பே வந்து சேரும்வரை ( மறக்காம) மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டே வந்தேன்.


போதாக்குறைக்கு பொன்னம்மான்னு ஏர்ப்போர்ட்லே இருந்து ப்ரீ பெய்ட் டாக்ஸி எடுத்து, தாதர் வந்து பூனா போக வண்டிக்குக் காத்திருக்கோம். பூனா வண்டி காலை அஞ்சு மணிக்குத்தானாம். எங்களை ஏர்ப்போர்ட்லே இருந்து தாதர்லே இறக்குன பஞ்சாபி ட்ரைவர் 500 ரூபாய் இனாம் வேணுமுன்னு தொந்திரவு செஞ்சுக்கிட்டே நிக்கறார். (22 வருசத்துக்கு முன்னாலே 500 ரூபாய்ன்னா அது அதிகம்தானே?) 100 ரூபாய் கொடுத்ததுக்கு வாங்கிக்க மாட்டேன்னு பிடிவாதமா நிக்கறார். பாம்பே ஏர்ப்போர்ட்லேயும் எங்ககிட்டே சாமான்களுக்கு முப்பதாயிரம் ஃபைன் கட்டச் சொல்லி, ஒரு மணி நேரம் வாக்குவாதம் செஞ்சு கடைசியில் பத்தாயிரம் கட்டினோம். அந்தக் கடுப்பு வேற இவருக்கு.



பஞ்சாபி ட்ரைவர் சொல்றார், ' நீதான் விதேசத்துலே நல்லா சம்பாரிப்பியே, கொடுத்தா என்ன? '



முடியவே முடியாது. 100தான் தருவேன். வேணாமுன்னா போன்னு இவர் சொல்றார். பூனா வண்டி வரும்வரை துணையாச்சுன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு நான் இருக்கேன்:-) அப்புறம் பூனா டாக்ஸி எடுத்தபிறகு 200 கொடுத்துஅனுப்புனார். அப்பெல்லாம் மலையிலே ஏறி இறங்கும் பாதைதான். (இப்போ சுரங்கப்பாதை ரொம்ப நல்லா இருக்குன்னு இவர் சொல்லிக்கிட்டு இருக்கார். நான் இதுவரை அதுலே போகலை) ஒரு மணி நேரம் மலை மேலே ஏறி, இறக்கம் வர்றதுக்குமுன்னே ஒரு டீக்கடை இருக்கு. அங்கே குழந்தைக்குப் பாலுக்குக் கொஞ்சம் வெந்நீரும் வாங்கிக்கிட்டு நாமும் ஒரு டீ குடிக்கலாமுன்னு நிறுத்திட்டு, இவர் மூணு டீ வாங்குனார்,ஓட்டுனருக்கும் சேர்த்து. அப்புறம் கீழே இறங்கும் சமயம் இந்தியாவுலெ இந்த மூணு வருசத்துலே எல்லாம் பயங்கரமா விலை ஏறிப்போச்சுன்னு புலம்பறார். ஒரு டீ நாலரை ரூபாயாம்.




இதைக்கேட்ட ஓட்டுனருக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. இல்லியே, நான் தினமும் இதே கடையில்தான் டீ குடிக்கறேன்.ஒன்னரை ரூபாதானேன்னு சொல்றார். அப்புறம் விஷயம் விளங்குச்சு. டீக்குக் காசு கொடுக்கறப்ப நாலரைன்னு கடைக்காரர் சொன்னாராம். இவர் ஒரு டீயா?ன்னு கேட்டுருக்கார். அட! 'ஏமாளி'ன்னு கண்டுக்கிட்ட கடைக்காரர், ஆமாம்னு தலையை ஆட்டுனதும் இவர் பதிமூணரை ரூபா கொடுத்துட்டு வந்துருக்கார்:-)))))


கோபத்தை மறந்து 'பக்'னு சிரிச்சேன்.



8. ஆத்தோடு போகாத ஆத்தா :-)




இது உள்நாட்டுப் பயணம். எனக்கு கங்கை நதியைப் பார்க்கணுமுன்னு ஒரே ஆசை. 'அப்படியே கங்கையில் இறங்கிருவேன்,திரும்ப வரமாட்டேன்'னு சொல்லிக்கிட்டு இருப்பேன். என் மகளும், 'அதெல்லாம் இல்லை, ச்சும்மானாச்சும் சொல்றீங்க' ன்னுவா.


இங்கே 'மில்ஃபோர்டு சவுண்ட்'னு ஒரு இடம் இருக்கு. (அதைப்பத்தி நிறையவே சொல்லணும். அது இன்னொரு சமயம். ) அங்கே ஒரு மூணு மணிநேரப் படகுப் பயணம் இருக்கு. மூணடுக்கு ஃபெர்ரியில் கொண்டு போவாங்க. சுத்தி மலை இருக்கும். அதுலே அங்கங்கே நீர்வீழ்ச்சிகள். அதுலே ஒரு நீர்வீழ்ச்சிக்கு ரொம்பப் பக்கமா இந்தப் படகைக் கொண்டு போவாங்க. மழைக்கோட்டுபோட்டுக்கணும், கேமெரா எல்லாம் உள்ளே வச்சுறணும்னு முதலிலேயே சொல்லிருவாங்க. அதனாலெ ஒரு எதிர்பார்ப்போடுதான் எல்லாரும் மேல் தட்டுலே இருப்போம். அங்கே பக்கத்துலெ படகை நிறுத்துனதும், ரொம்ப உயரத்தில் மலை உச்சியில் இருந்து நம்மையே 'பகீரதன்'னு நினைச்சுக்கிட்டு கீழே இறங்கும் 'ஆகாச கங்கை' !! அதுலே தொப்பலா நனைஞ்சபிறகு என் மனசுக்குள்ளெ ஒரு உணர்வு வந்துச்சு பாருங்க, அதை எப்படி எழுத்துலே சொல்றதுன்னு தெரியாமத் தவிக்கிறேன். கங்கையைநேரில் தரிசிச்சமாதிரி மனசு நிறைஞ்சு போச்சு.



மகளுக்குத்தான் ஏமாத்தம், நான் கங்கையோடு போகலையேன்னு :-)))))))

---------


இந்தத் தொடர் விளையாட்டுக்கு நான் அழைக்க விரும்புவது உங்க எல்லாரையுமேதான். இதுவரை கலந்துக்காதவங்க,வந்து அடிச்சு ஆடுங்க.
ஏற்கெனவே பதிவு நீண்டு போச்சு. இதுலே விளையாட்டின் விதிகள் வேற இங்கே எழுதணுமா?:-))))))


விடு ஜூட்...............

41 comments:

said...

கும்மானிங் டீச்சர்

எட்டு நிமிஷத்துலே படிச்சு முடிச்சுட்டேன்.ஒரு எட்டு வெளியெ போயிட்டு வந்திர்ரேன்.அடுத்த கிளாஸ்குள்ளே....

said...

//எட்டுப்போடச்சொல்லி இதுவரை எட்டுப்பேர் கூப்புட்டாச்சு.//

நானும் எட்டு பேர் கூப்பிடத் தான் காத்திருக்கேன்னு சொல்ல ஆசை தான். ஏற்கனவே நிறைய பேரு கூப்புட்டாச்சு. உங்களையும் கூப்புட்டவங்க கணக்குல சேத்துக்க வேண்டியது தான். ஆனா என்ன தான் எழுதுறதுன்னு தெரியலையே. :-(

said...

1) //என் புது சில்க் ஸ்கார்ஃப். காணொம//

அதுக்கும் உங்க அவருக்குத்தானே திட்டு?!!

2) //இவுங்க அவசரப்படுத்துனதுலே,மனசில்லா மனசோடு அங்கிருந்து ஓட வேண்டியதாப் போச்சு.//

அடப்பாவிகளா? எப்பவும் நடக்குற ஷோவய்யா இதைவிட? என்ன மனுசங்களோன்னு அந்த திமிங்கலம் நினைச்சு இருக்குமோ? (நான் நினைச்சேன். ஹிஹி)

3) //காதல் ச்சின்னத்தை ஒரு கடமையாப் பார்த்தவங்க நாங்களாத்தான் இருப்போம்//

கடமையாப் பார்க்கப் போயி ஒரு ஆச்சரியமா பார்த்த கதை எங்களுது!!

4) //பேரம் பேசிப் பார்த்திருக்கலாமோ?:-)//

பார்த்திருக்கலாம். 41 டாலரில் மிச்சம் இருந்தாலும் இருந்திருக்கும்!!

5)//நாம்தான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களாச்சே.//

இந்த நாம் என்பது நீங்க மட்டும்தானே? :)

6) //நல்ல வாய்ப்பைக் கைவிடப் பார்த்தேனே.//

நான் மிஸ் பண்ணுன ஒரு விஷயம் இதுங்க.

7) //நீ பாட்டுக்குக் காசைக் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போய்த் தேடக்கூடாதா? ஏர்ப்போர்ட்டுக்குள்ளெதானெ இருக்கும். எங்கே போயிறப்போது?//
அடப்பாவின்னு சொன்னேன்னு உங்க அவருகிட்ட சொன்னேன்னு சொல்லுங்க.

//நீதான் விதேசத்துலே நல்லா சம்பாரிப்பியே, கொடுத்தா என்ன? //
நாம சம்பாரிச்சா இவருக்கு குடுக்கணுமா? அது எந்த ஊரு நியாயம்? குடுக்கணமுன்னு சொல்லவும் ஆள் இருக்கு இங்க! :))

//கோபத்தை மறந்து 'பக்'னு சிரிச்சேன்.//
கோபமே இல்லாம நானும் 'பக்'னு சிரிச்சேன்.

8) //மகளுக்குத்தான் ஏமாத்தம், நான் கங்கையோடு போகலையேன்னு :-))//
அது சரி. எங்களுக்கு இல்ல டீச்சர் இல்லாம போய் இருப்பாங்க.

அப்புறம் இந்த நயாகராவில் Cave of the winds போன பொழுது இந்த மாதிரி அனுபவிச்சு நனைஞ்ச நேரம். அடுத்த முறை இங்க வரும் பொழுது போகலாம் என்ன.

said...

//கதையைக் கேட்டீங்களா? பாம்பே வந்து சேரும்வரை ( மறக்காம) மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டே வந்தேன்.
//
நீங்களாவது பரவாயில்ல. தப்பு நாந்தான் பண்ணியிருந்தாலும் முஞ்சியத்தூக்கி வச்சு காரியத்த சாதிக்கர ஆளுங்க நானு

பாவம் ரங்கமணி!!!

said...

அந்த ஸ்கார்ப் காணாமல் போனதை கொஞ்சம் சினிமாட்டிக்காக நினைத்துப்பார்த்த போது உங்கள் மறுபாதி இந்த பாட்டைத்தான் பாடிருப்பாரோ என்று தோனியது
"உந்தன் ஸ்கார்பை (கைகுட்டையை) யார் எடுத்தது? நீயா? நீயா?" :-))))
வர வர இ.கொத்தனார் பின்னூட்டம் எல்லாம் ஓவரா படிப்பதால் நான் மாறிக்கொண்டு வருகிறேன் என்று நினைக்கிறேன்.:-))
ஆமாம் ஆர்டிக்/அன்டார்டிக் எல்லாம் எப்போ?

said...

//கதையைக் கேட்டீங்களா? பாம்பே வந்து சேரும்வரை ( மறக்காம) மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டே வந்தேன்.//

அம்மாக்கள் மானத்த காப்பாத்டீங்க.....

சூப்பர் எட்டுங்க....நான் இன்னும் தாஜ் மஹால பாத்தது இல்ல ரொம்ப நாள் ப்ளான்...அடுத்த தடவையாவது பாத்துரணும்......ம்ம்

said...

வாங்க பெருசு.

எட்டுநாளா நான் யோசிச்சு எழுதுனதை எட்டு நிமிசத்துலே படிச்சாச்சா?

சரி சரி. போனேன் வந்தென்னு வந்து சேருங்க வகுப்புக்கு:-))))

said...

வாங்க குமரன்.
நம்மைப்பத்தி நாமே எழுதணுங்கறதுதான் கொஞ்சம் பிரச்சனை. இந்த கொத்ஸ்,
நம்மைப்பத்தி இன்னொருத்தர் சொல்ற எட்டு, இல்லேன்னா எட்டுப்பேர் நம்மைப்பத்தி
என்ன சொல்றங்கன்னு, இந்த விளையாட்டை வச்சுருக்கலாம்.

said...

வாங்க கொத்ஸ்.

1. நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க.

2. அதானே? முழுசும் பார்க்கக் கொடுத்துவைக்கலை.(-:

3. கடமை + ஆச்சரியம்? அதை இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க.
மூணு பக்கத்துக்குக் குறையாமல் இருக்கணும்.

4. இதுக்குப் பதிலா பேரம்பேசி ஒரு மோதிரம் வாங்கிட்டேன். ( மும்பை க்ராஃபோர்டு
மார்கெட்டில் 100 டாலர் (அதிகவிலைக்கு) வாங்கிட்டுப்போனோம்)

5. இதுலே நாம் என்றது 'நான்' இல்லை:-))))

6. இனிமே எங்கே? அம்மான்னா வருமா அய்யான்னா வருமா?

7. சொல்லிட்டேன்

8. நிம்மதியா இருந்துருப்பீங்க:-)

கட்டாயம் போகலாம்.

ஆமாம்.......... நான் என்னாத்துக்கு இப்படிப் பரிட்சை எழுதிக்கிட்டு இருக்கேன்? :-)))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நான் கொஞ்சம் நியாயஸ்தி :-)))))

said...

வாங்க குமார்.

அண்டார்ட்டிக்கா.பிரச்சனையில்லை. நம்மூட்டுப்பக்கம்தான்.
ஆர்டிக்தான் கொஞ்சம் யோசனையா இருக்கு:-)))))

said...

வாங்க ராதா.

ஜூன் லெ மட்டும் போயிராதீங்க. நவம்பர் டிசம்பர் நல்லா இருக்கும்.
அப்படியே தில்லி அக்ஷர்தாம் ஞாபகம் இருக்கட்டும்.

said...

சூப்பர் எட்டு டீச்சர்!!!
கலக்கி இருக்கீங்க போங்க!! :-)

said...

இதுக்குதான் நான் 8 போட மாட்டேன்ன்னு அடம்புடிச்சேன்! நான் எங்க மாயவரம் அத விட்டா துபாய் நடுவ எந்த ஊர் வருதுன்னு கூட தெரியாது தூங்கிடுவேன்! டீச்சர் எடின்பரோ,அமரிக்கா, ன்னு என்னன்னவோ சொல்றாங்க! இப்ப பாருங்க மக்கா என் 8 சொதப்பிகிட்டு போயிடுச்சு!!:-))))

said...

//
ஆமாம்.......... நான் என்னாத்துக்கு இப்படிப் பரிட்சை எழுதிக்கிட்டு இருக்கேன்? :-)))))//

இப்படி 7பி, 7சி சாய்சில் விட்டுட்டீங்களே.இல்லைன்னா முழு மதிப்பெண் போட்டு இருக்கலாம். :))

டீச்சரை பரிட்சை எழுத வைக்கும் ஒரே வகுப்பு நம்ம வகுப்புதான்யா!!! :)))

said...

'ஊரு சுத்தும் துளசிக்கு' னு பாடுனது
சரிதான்..

said...

அதென்ன 8க்கால லட்சணம்?

said...

இது எட்டிய கால் லட்சணம். கால் எட்டும் எட்டு திசைகளில் பயணம் சேஞ்சதினாலே எட்டுக் கால லட்சணம, இல்லையா துளசி.

திமிங்கலத்தைப் பெத்துப் பிழச்சியானு ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்ம்ம்ம்

தாஜ்மகால் ல காவியமா இல்லை ஓவியமானு பாடி இருக்கலாம். கோபாலும் நீங்களும் அந்த மாதிரி ராஜாராணி போஸ்ல படம் எடுத்து இருக்கலாம்.
13 அரை ரூபாய்க்கு இங்கே டீ குடிச்சோம்னு ஒரு போர்ட் நட்டிருக்கலாம்.
இப்படித் தொலஞ்சி போற குழந்தை,கணவன் மனைவிக்காகவே ஒரு குடும்பப்பாட்டை எழுதி வச்சுகலாம். சூப்பாரோ சூப்பர். லேட் ஆனலும் பெஸ்டஸ்ட் பா.:)))))

said...

\\மனசுலே நிக்கும் எட்டுப் பயணத்தைச் சொல்லிறலாமுன்னு துணிஞ்சாச்சு.//

எதிலயும் உங்களோட தனித்தன்மையை காண்பிச்சிருரீங்க...

\\இவர்கிட்டே ஒரு சத்தியம்( கைகேயி மாதிரி?) வாங்கி வச்சிருந்தேன்//

ஆகாகா...அருமை..இப்படித்தானிருக்கணும்.

நாலரை ரூபாய் டீ...சிரிப்போ சிரிப்பு..இப்படி கால வாரரீங்களே அவங்களைப்போய்.

said...

துளசி ... எல்லோருக்கும் அனுபங்கள் ஏற்படும். அதெப்படிங்க உங்களுக்கு மட்டும் அனுபவங்கள் தேடிப் பிடிச்சு வந்து உங்ககிட்ட நிற்கிறது ? ! :-):-) பயணக் கதைகளும் அனுபவங்களையும் எழுதறதுலே எப்பவுமே அசத்துவீங்க... இப்போ எட்டு போடச் சொன்னா, சும்மா விடுவீங்களா! ரசிச்சுப் படிச்சேன் துளசி.

said...

வாங்க CVR.

என்ன கலக்கல்? எல்லாம் 'கலங்குன' நினைவுகள்தான்:-))))

said...

வாங்க அபி அப்பா.

எதோ உ.கு. இருக்கா இதுலே?

மாயவரத்துலே இப்ப இண்டர்நேஷனல் ஏர்போர்ட் வந்துட்டதை நல்லவேளை
நீங்க சொல்லலீன்னா எனக்குத் தெரியாமப் போயிருக்கும்:-))))

said...

கொத்ஸ்,

டீச்சரும் , மாணவர்தான்யா. இந்தப் பரிட்சை இல்லேன்னா வேறொண்ணு:-)

said...

வாங்க சிஜி.

உங்க பாட்டு........ பொய்யாகுமா? :-)))))

அடுத்ததுக்கு, நம்ம வல்லியே உங்களுக்கு விளக்கிட்டாங்க பாருங்க.

எட்டேகால் லட்சணமே எமனேறும் வாகனமேன்னு தலைப்பு வைக்கலாமுன்னு
இருந்தேன். அது கடைசிப் பயணமா இருக்கட்டுமுன்னு. எட்டு காலக்கட்டத்துலே
நடந்ததா மாத்தியாச்சு.:-))))

said...

வாங்க வல்லி.

சிஜிக்கு பதில் சொன்னதுக்கு தேங்ஸ்ப்பா.

திமிங்கிலம்மாவை, லேபர் வார்டுலே இருந்து மாத்தி,
வேற வார்டுக்குக் கொண்டு போயிட்டாங்கப்பா. பார்க்க ச்சான்ஸ் இல்லை(-:

காவியமா இல்லை ஓவியமா சூப்பர் பாட்டு. சிஎஸ் ஜெயராமன் தான் அப்பெல்லாம்
சிவாஜிக்குக் குரல்(-:

நம்ம ராதாகிட்டே சொல்லணும். டிசம்பரில் போகும்போது பாடச்ச் சொல்லி.

(பி.கு: பாவை விளக்கு படம் வாங்கியாந்தேன் போனமுறை)

குடும்பப்பாட்டுக்கு இனிமேத்தான் மெட்டுப்போடணும்:-))))

said...

வாங்க முத்துலெட்சுமி.

என்னன்னுங்க சொல்றது? ஒரு அஞ்சுநிமிஷம் பார்த்த டீக்கடைக்காரருக்குக்கூட
நம்மைப்பத்தித் தெரிஞ்சுருதுங்க :-)

said...

வாங்க அருணா.

நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளாச்சுப் பார்த்து.

இந்த அனுபவம்னு சொல்றமே, இதுலே எங்களோடு 18 நாள் யூரோப் டூர்
வந்த ஒரு குடும்பத்தைப்பத்தி ஒரு 100 பதிவு போடலாம். எனக்கு நடந்ததெல்லாம்,
அதுக்கு முன்னாலே ஜுஜுபி:-)))))

சிலருக்கு அப்படி வாய்ச்சுருதுங்க:-)

said...

'இதயம் பேசுகிறது' ஆசிரியருக்குப் பின்னால் உலகம் சுற்றிய ஆசிரியர் நீங்கள்தான் ;)
Super 8 video பார்த்ததுபோல இருக்கிறது.

மிகுதி நாடுகளையும் வாகைசூடி எங்களுக்கு அருமையான பயணக்கட்டுரைகளை தருவீராக !

said...

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊருக்கு போயிட்டு வந்தா மாதிரி இருந்துச்சு. அந்த திமிங்கிலத்தை படமெடுக்கலையா? இந்த மாதிரி காட்சியெல்லாம் காண கிடைக்குமா? பெட்டில படம் பிடிச்சி வச்சியிருந்தா வலையேற்றுங்க.

said...

இதுக்குத்தான் என்ன எழுதறதுன்னு பேசினீங்களா? அருணா சொன்னமாதிரி அபூர்வமான அனுபவங்கள்.

கொத்தனார் : பின்னூட்டமேதை ன்னு உங்களுக்கு ஒரு பட்டம் தரலையா இன்னும்?

said...

அருமையாக இருந்தது உங்க எட்டு.

said...

டீச்சர், நானும் படிச்சேனே. என் மானத்தை காப்பாத்திட்டீங்க, நான் தான் எம்பூபூபூட்ட்ட்டு நீளமான 8 எழுதினேன்னு நினைச்சேன் - நீங்களும் எழுதி கொஞ்சம் என் மேல் இருந்த சூட்டை குறைச்சுட்டீங்க.

அனுபவித்த மகா'ராசி நீங்க. நான் சொல்ல என்ன இருக்கு :-))

said...

நல்லா இருக்கு...எட்டு பதிவுல போட வேண்டிய தகவல்களை ஒரு பதிவுல போட்டு அசத்தீட்டீங்க. :)

அந்த டீக்கு நாலரை ரூவா கொடுத்த கதை சூப்பரு.

திமிங்கீலம் குட்டி போடுறதா...இருந்து பாத்திருக்கலாமே...

said...

//மணியன் said...

'இதயம் பேசுகிறது' ஆசிரியருக்குப் பின்னால் உலகம் சுற்றிய ஆசிரியர் நீங்கள்தான் ;)
Super 8 video பார்த்ததுபோல இருக்கிறது.//

அதாருங்கோ, மணியந்தானுங்களே!!

said...

வாங்க மணியன்.

உங்க பேரைச் சொல்லிக்கவே அப்படி ஒரு அடக்கமா? :-))))

அவரு எங்கே நான் எங்கே?
நானெல்லாம் கத்துக்குட்டிதாங்க(-:

(பி.கு: மணியன் நியூஸி பயணம் வந்தப்ப நம்ம வீட்டுலேதான் தங்குனாருங்க.
அப்ப அவரோட பயண அனுபவம் எழுதும் கலையில் ஒரு துளி நம்ம வீட்டுலே
தங்கிருச்சு போல)

நல்ல இனிய மனிதர்தான்.

said...

வாங்க ஜெஸிலா.

அப்ப ஏதுங்க டிஜிடல் கெமெரா நம்மகிட்டே? பழைய ஆல்பத்துலேதான் தேடணும்,
படம் ஏதும் எடுத்துருக்கோமான்னு. ஆனா வீடியோ எடுத்தது நினைவிருக்கு.
அதையும் ஒரு நாள் உக்காந்து தேடணும்.

ப.மு. காலமாச்சே.............. (-:

said...

வாங்க பத்மா.

சொல்லிக்கறமாதிரி சரக்கு இல்லை. அதான் பயணத்தையே எழுதிட்டேன்:-)

கொத்ஸ் எப்பப் படிக்கப்போறாரோ இந்த 'பட்ட' விவகாரத்தைன்னு இருக்கு:-)

said...

வாங்க J.K.

நல்லா இருக்கீங்களா? மொதமுறையா வந்துருக்கீங்க போல!
அடிக்கடி வந்துபோங்க.

said...

வாங்க தெ.கா.

விட்டா அப்படியே இழுத்துக்கிட்டுப் போயிருதுன்னு நீங்க சாமர்த்தியமா
ரெண்டா வகுந்துட்டீங்க:-)))) ( பதிவைத்தான் சொல்றேன்)

உங்க காடாறுமாசம் அனுபவத்துக்கு முன்னே இதெல்லாம்............ வெ.வே:-)

said...

வாங்க ராகவன்.

சுருக்கறதுக்குள்ளெ படா பேஜாராப்போச்சு:-))))

ப.மு.ன்றதாலே ச்சும்மா அப்படியே பார்த்ததுதான். இப்ப, ப.பி. ஆனதும் எதைப்
பார்த்தாலும் உங்ககிட்டேயெல்லாம் ஓடிவந்து உடனே சொல்லிப்போடணுமுன்னு
கொதிக்கறேன்:-)

said...

கொத்ஸ்.


//அதாருங்கோ, மணியந்தானுங்களே!!//
அவர் தன்னடக்கமா இருக்கார். அவரைப்போய் இப்படி...............
படுத்தணுமா? :-)