Friday, June 05, 2015

41

பொதுவா சனிக்கிழமைகளில்  ஒரு கோவிலுக்குப் போவோம்.  இதைத்தவிர வேற விசேஷ நாட்கள் என்றால்  வருஷப் பிறப்பு, பொங்கல் இப்படி  வரும் நாட்களில்  கூடியவரை   ஒரு கோவிலுக்குப்போய் வர்றதுதான் வழக்கம். இங்கே நியூஸி வந்தபின்னும் ஒரு கோவில்தான். அந்தக் கோவில் இடிஞ்சு விழுந்தபின் வேறொரு கோவில் புதுசா வந்துச்சு.  ஆகக்கூடி ஊருக்கு ஒரு கோவில்!

இன்றைக்கு வெள்ளிக்கிழமைதான்.  ஆனாலும் சாயங்காலம் கோவிலுக்குப்போறோம்.  என்ன விசேஷமுன்னு  கேட்டீங்கன்னா...........  41 ன்னு சொல்லணும்.

இன்றைக்கு  எங்கள்  வாழ்க்கை ஆரம்பிச்சு 41 வருசங்கள் ஆகுது!

 இதுவரை காப்பாத்தியவன் இனியும் காப்பாத்தாமலா போயிருவான்?
பெருமாளே காப்பாத்து!


உங்கள் அனைவரின் அன்பையும் நட்பையும் வழக்கம்போல் வாழ்த்தி வரவேற்கின்றோம்!

நல்லா இருங்க!




Wednesday, June 03, 2015

பதினெட்டாம்படியேறி பெருமாள் தரிசனம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 55)


செம்பியன் ரெஸ்ட்டாரண்டில்  காலை  உணவு.  சங்கம் கீழ்தளத்தில் விஸ்தாரமா இருக்கு.  சுவர்களில் அழகான ஓவியங்கள். இதோ  குந்தவை, ராஜராஜன். இந்தப்பக்கம் அவுங்க தாய்  பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி! சுற்றிவர  அழகழகான ஓவியங்கள்.  பொன்னியின் செல்வனை மனசுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது:-)

படு நீட்டான டைனிங் ஹால். பதார்த்தங்களையும் சீராக  அங்கங்கே அடுக்கி வச்சுருந்தாங்க.  நமக்கு எப்போதும் வழக்கமானவைதான்.  வடை பார்க்கும்போதே நல்லா  இருக்குமுன்னு தோணுச்சு. அதானால் ரெண்டு!



காஃபிக்கான பால் மட்டும் தவலை  போலுள்ள குடத்தில் காய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஃபில்டர்காஃபி ஸ்டேஷன்!


ஹொட்டேல் பிள்ளையார்  அரிசி ரங்கோலிக்குப்  பின்னால்!

எட்டுமணிக்குக் கிளம்பி  திருவெள்ளறை போறோம். காலையில் மற்ற கோவில்கள்,  மாலை ரெங்கன் என்று பிரித்தாளனும். காலையிலேயே  ரெங்கனைப் பார்க்கப் போனால் அங்கிருந்து  கிளம்பவே மனசு வராது.  ஒரு 28 கிமீதான்.  காவிரி கொள்ளிடம் கடந்து பிச்சாண்டவர் கோவில், மண்ணச்சநல்லூர் தாண்டி திருவெள்ளறை போய்ச்சேர முக்கால் மணி ஆச்சு.  மெயின்ரோடு கடைவீதிகளில் எல்லாம் நல்ல  கூட்டம்! (நியூஸி ஆட்களுக்கு  பத்திருவதுபேர் இருந்தாலே கூட்டம்தான். அதுக்கும்மேலேன்னா... நல்லகூட்டம்!)

கோவிலுக்கான நுழைவு வாயில் நாம் என்னென்ன தரிசனம் செய்யப்போறோமுன்னு ட்ரெய்லர் காட்டுது:-)  அதைக் கடந்து  ரெண்டுபெரிய மதில்களுக்கிடையில் சந்துபோலிருக்கும் வழியில் போய்   கோவிலுக்கு முன் வண்டியை நிறுத்தினோம்.  பாதியில் வேலை நின்னு போன  மொட்டைக் கோபுரம்!   அடடா....   முந்தி ஸ்ரீரங்கத்து  ராஜகோபுரமும் இப்படித்தானே அரைவாசியாக் கிடந்துச்சு!   பின்னாளில் இதை (யும்) கட்டி எழுப்புவாங்களா இருக்குமோ?

100 அடி உசரமுள்ள வெள்ளைப் பாறை(குன்று?) மேல்  கோவிலைக் கட்டி இருக்காங்க!  ஸ்வேதபுரின்னு கூட ஒரு பெயர் இருக்காம்!  மார்கண்டேய மகரிஷி பெருமாளை தரிசிக்கணுமுன்னு தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். அப்போ  தன்னுடைய படைகளுக்குத் தொந்திரவு கொடுத்துக்கிட்டு இருக்கும் வெள்ளைப்பன்றியைத் துரத்திக்கிட்டு சிபி சக்ரவர்த்தி வர்றார். பன்றி போய் ஒரு குகைக்குள் நுழைஞ்சுருது.  மன்னரும் குகைக்குள் போறார். அங்கேதான்  மார்கண்டேயர்  இருக்கார். முனிவரை வணங்கி, பன்றி விவரம் சொன்னதும்,  'நான் தவம் செய்தும் வராதவர், உன்முன்னே வெள்ளை வராஹமாக வந்து அருள் செய்தார்'னு சொன்னாராம். உடனே  இருவரும்  பெருமாளை தியானிக்க  மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத்தார்னு ஒரு கதை இருக்கு.  அது நடந்த இடம் இதுதான்.


பெரியாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் பாடி மங்களசாஸனம் செஞ்ச  கோவில். 108 திவ்யதேச வரிசையில்  ஆறாவது  இடத்தில் இருக்கு.

நிறையப் படிகள் இருக்கு ஏறிப்போக. என் வழக்கப்படி எண்ணிக்கிட்டே ஏறினேன். 18!    பதினெட்டாம்படி தாண்டி பெருமாள் ஸேவிக்கணும்.பேஷ் பேஷ்!

கோபுரவாசலைக் கடந்து அடுத்து கண்ணெதிரில் நிக்கும் சின்னக்கோபுரம் கடக்கணும்.  நாலு படி இங்கே!  அதையும் தாண்டினால் இன்னொரு பிரகாரம். பிரகாரச் சுவர்களே  கோட்டை மதில்கள்போல் ரொம்ப  உசரமா இருக்கு!
அதென்னமோ முதலில் ப்ரகாரங்களைச்  சுத்தி வந்துட்டுத்தான் மூலவரை ஸேவிக்கணும் என்றொரு விதி இருந்தாலும், இந்த அடங்காப்பிடாரியால் அப்படி இருக்க முடியலை.  பரபரன்னு  பெருமாளைத்தேடி ஓடினேன்.  நம்ம இவர் வழக்கம்போல் எனக்கு முன்னால் ஓடுறார்.  இந்தப்பக்கம் கண்ணைத் திருப்பிட்டு முன்னால் பார்த்தால் இவரைக் காணோம். தக்ஷிணாயணம் என்ற பெயரோடு  ஒரு வாசல். சரி இவர்   உத்தராயணம் போயிருப்பார்னு நினைச்சு அந்தப்பக்கம் சுத்திக்கிட்டுப்போனால் அங்கே வாசல் ஒன்னும் இல்லை.  சுவர் முழுக்க சாமிகள். அதுலே நம்ம புண்டரீகாட்ஷனும் இருக்கார்.

எல்லோரும் சாமிப்பெயரை பிள்ளைகளுக்கு வைப்பாங்கன்னா, பெருமாள் பக்தன் பெயரை வச்சுக்கிட்டார்னு சொல்லணும். புண்டரீகர்னு ஒரு  தவசீலர்  நந்தவனம் ஒன்னு அமைச்சு அதில்  நட்டு வளர்த்த துளசியை மாலையாக்கி தினமும் பெருமாளுக்குச் சார்த்துவார். அவருடைய பக்தியை மெச்சி,  அவருக்குக் காட்சி கொடுத்ததோடு , தனக்கு புண்டரீகாக்ஷன்னு  பெயரும் வச்சுக்கிட்டாராம்!


அதுக்குள்ளே  அங்கே  என்னைத்தேடி வந்த சீனிவாசன்,  வாசல் அங்கே இருக்குன்னதும்  போனவழியே திரும்பினேன்.  பேசாம வலம் வந்துருக்கலாம். இப்ப அப்ரதக்ஷணமா ஆகிப்போச்.  அப்பதான் கவனிக்கிறேன் இங்கே  இதே பக்கத்தில்தான் உத்தராயணம் வாசல் இருக்கு!  தக்ஷிணாயணம் உத்தராயணம் ரெண்டுக்கும் இடையில் சிற்பங்கள்.

தைச்சுப் போட்ட படம் !

'ஸார், தக்ஷிணாயம் பக்கம் போயிருக்கார்'ன்னு  சொல்றார் சீனிவாசன்.  படிகள் இருக்கு மேலே போக.  கொஞ்சம் இருட்டா இருந்தாலும்  எண்ணிக்கிட்டே மெள்ளப் படி ஏறினேன். 21.

ஒரு கூடம் போல இருக்குமிடத்தில் போய்ச் சேருது படி.  இடதுபக்கம் கருவறை. உள்ளே பெருமாள்  செந்தாமரைக் கண்ணன் நின்ற கோலத்தில். அதென்னவோ கூட்டமா நிக்கறாரேன்னு பார்த்தால்  சந்த்ர சூரியர்களுடன்   ஆதிசேஷனும் நின்ற கோலத்தில். ஆஹா.... நாலு பேர்.  அப்ப கூட்டம்தான்:-))))
இந்தப்பக்கம் மார்கண்டேயர்! பங்கஜவல்லி என்ற பெயருடன் தாயார் உற்சவமூர்த்தியாக! இங்கே நம்ம தாயாருக்கு  வீட்டுப்பெயர் செண்பகவல்லி. ஆனால் வெளியே போகும்போது   பங்கஜவல்லி:-)

ஒருநாள் தாயாரிடம்  'உனக்கு என்ன வேணுமுன்னு' கேட்டுருக்கார் பெருமாள்.  முதலில் ஒன்னும் வேணாமுன்னு  (என்னப்போல்!) சொன்ன தாயார்.  கொஞ்சம் யோசிச்சு 'என் பிறந்த வீடான இந்தப் பாற்கடலில் எனக்கு  முன்னுரிமை வேணுமுன்னு சொல்லவும்,  'அடடா....  பார்யா வீடு பரம சுகமல்லோ!  இதை விட்டுத்தரச் சொல்றாளே'ன்னு  ஒருவிநாடி யோசிச்சவர் இதை விட பேஷான  இடம் ஒன்னு இருக்கு!  அங்கே உனக்கே முன்னுரிமைன்னு சொல்லி இருக்கார்!. அந்த இடம் இந்த திருவெள்ளறைதானாம்!  அதனால் இங்கே பங்கஜவல்லிக்கு புறப்பாடுகளில்  முன்னுரிமை!  ஜாம் ஜாமென்று  முன்னால் போகும்  நம்ம  பங்கஜத்துக்குப் பின்னேதான் பெருமாள் போவாராம்!

நல்லபடி தரிசனம் ஆச்சு. நாங்க மூணு பேர்தான் அங்கே பட்டர்களைத் தவிர்த்து!

திரும்ப கீழே இறங்க கூடத்தின் பக்கம் வந்தபோது  கோபாலின் கழுத்தில் விழுந்தது துளசி மாலை!  பெருமாளுக்குச் சாத்துனதாம்! அவருடைய கையில் இன்னொரு மாலையைத் திணிச்சு  மனைவிக்குப் போடச் சொன்னாங்க.  துளசிக்கே துளசி மாலை!  கழட்டினதும் சடார்னு கைநீட்டி வாங்கி வச்சுக்கிட்டார் பட்டர். அப்ப அடுத்து  வரும் பக்தர்களுக்கு  துளசி சூடிய  துளசி மாலையோ! நல்லா இல்லையே.........    ப்ச்....:(  தினப்படி  கைச்செலவுக்கு இப்படி ஒரு கைங்கர்யம். ஆனால் இவ்ளோ அவ்ளோன்னு ஒன்னும் கேட்கலை.  வாயைத் திறக்குமுன் கோபாலே  கொடுத்துட்டார்.

கிழக்கு பார்த்து நிற்கும் பெருமாளின்  இடது கைப் பக்கம் தக்ஷிணாயணம், அவருக்கு  வலது கைப் பக்கம் உத்த்ராயணம் என்று  வாசப்படிகள்  வந்து முடியுது.  உத்தராயணத்தை ஆறு மாசத்துக்கு மூடி வைக்கிறாங்க, ஆடி முதல்  மார்கழி வரை. அப்ப தக்ஷிணாயணம் திறந்துருக்கு! தை மாசம் முதல் ஆனி வரை  தக்ஷிணாயணம் மூடி இருக்கும். ஆறாறு மாசத்துக்கொரு வாசல் திறப்பு!

சூரியனின் சுற்றுதான் கணக்கு. பூமத்திய ரேகையில் இருந்து ஆறுமாசம் வடக்கு, ஆறுமாசம்  தெற்குன்னு சூரியன்  சஞ்சாரம் செய்யறான்னு  சொல்வாங்க. (சூரியன் என்னவோ ஒரே இடத்தில்தான் இருக்கான்.  பூமிதான் தன்னைத்தானே சுத்திக்கிட்டுச் சூரியனையும் சுத்துது என்பது   பின்னாட்களில்  கண்டுபிடிக்கப்பட்டது என்பதை கொஞ்சம்  தள்ளி  வச்சுட்டு எழுதறேன்.சரியா?)


வடக்கு வாசல் குபேரனுக்கு உரியது. தென்திசையோ  எமன் வடிவில்  இருக்கும் தர்மராஜனுக்கு !

குபேரன்னா குஷியாகும் மனசு எமன் என்றால் சோர்ந்து போகாதோ? அதனால்  எமனுக்குப் பதிலா கோவிந்தரா இருக்காராம் பெருமாள். ரெண்டும் ஒன்றுதான் ! கோவிந்தா..... கோவிந்தா ....:-)

கீழே வந்தப்ப,   பெருக்கு மாறால் பிரகாரத்தைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தவங்க ரேவதி!  கொஞ்சநேரம் பேசிட்டு, என்னோட நெருங்கிய தோழியின் பெயரும் உங்க பேர்தான்னு  சொல்லிட்டு க்ளிக்கினேன்.
தாயார் செண்பகவல்லிக்குத் தனிச் சந்நிதி. ராமானுஜருக்கும்  தனியா ஒரு சந்நிதி  உண்டு.

கோவில் புஷ்கரணியில் திவ்ய கந்த, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணிகர்ணிகான்னு ஏழு தீர்த்தங்கள் ஒன்று சேர்வதா ஐதீகம்.

மண்டபத்துக்குள்ளே  தசாவதார சந்நிதின்னு  ஒன்னு இருக்கு!
காலையில் மழை பேய்ஞ்சதோ இல்லை கோவிலை   அலம்பி விட்டார்களோ.....ப்ரகாரங்களில் எல்லாம் ஈரத்தரை.  அப்படியே நடந்து அடுத்துள்ள சக்ரத்தாழ்வார் சந்நிதிக்குப்போய் கும்பிட்டோம். கம்பிவழி தரிசனம்தான்.




ஆஞ்சிக்கும்  தனியாக   ஒரு  சந்நிதி. இவர் காரியசித்தி ஆஞ்சநேயர்!  லக்ஷ்மிநரசிம்மர், பெரியாழ்வார், ஆண்டாள் எல்லோரையும் வணங்கி, நம்ம ஆண்டாளுக்கு 'தூமணி மாடத்து....' பாடிட்டுத்தான்  வெளியே வந்தேன்.


பெருமாள் தளிகைக்கு  உருளியில்  நைவேத்யம்  கொண்டு போறாங்க.

எல்லோருக்கும் கைகாட்டி  முடிக்க நேரமாகும்தான்.  அதுவரை....    போகட்டும்....பெருமாளே!

நல்ல பெரிய கோவில்தான்.  கோட்டைபோலவே சுற்றுச்சுவர் டிஸைன் இருக்கு. வெளிப்ரகாரத்தில்  காடு போல் வளந்துருக்கும் புல்தரைக்கு அந்தாண்டை  ஆதிசேஷனுக்கு தனியா ஒரு சந்நிதி. கதவு சார்த்தி  இருக்கு.

 மூலவரைத்தவிர எல்லா சந்நிதிகளும் சாத்திதான் வச்சுருக்காங்க.  சொன்னால்   பட்டர் வந்து திறந்து தரிசனம் செஞ்சு வைப்பார் போல!  ஆனால்கம்பி  வழி போதுமுன்னு  இருந்துட்டேன்.  சேஷனுக்கு கம்பி தரிசனம் கிடையாது!

நாம் இங்கே அங்கேன்னு சுத்திக்கிட்டு இருந்தப்ப கோஷ்டி சொல்ல வந்தவர்கள் கிளம்பிப்போறதைப் பார்த்தேன்.  மிஸ் பண்ணிட்டேனே......
ஆ'லை'ய நிர்வாக அறிவிப்பும் அதனருகில் ஆட்டோக்ராஃபும்:(

காலை   ஏழு மணி முதல் பகல் ஒன்னேகால் வரையிலும், மதியம் மூணரை மணி முதல்  இரவு  எட்டுவரையில் கோவில் திறந்து வைக்கிறாங்க.
கோவிலுக்கு வெளியே   எதிர்வாடையில்  மடம் இருக்கு!  ஸ்ரீராமானுஜர்னு நினைக்கிறேன்.

 திருவெள்ளறைதான்  உய்யக்கொண்டான், அவதார ஸ்தலம்.  இவர் நாதமுனிகளின்   ப்ரதம சீடர்  என்ற  நினைவு.  எங்களாழ்வானின் அவதார ஸ்தலமும். இதுதானாம்.

எங்கே பார்த்தாலும் பெருமாள் சின்னங்கள்தான்!

பதினெட்டாம்படிக்குப் பக்கத்தில் பஸ் டைமிங்ஸ் போட்டு வச்சுருப்பது நல்லசெயல்!

பத்துமணி ஆச்சு. நல்ல தரிசனமுன்னு பேசிக்கிட்டே கிளம்பி அதே மதில்களுக்கிடையில் உள்ள தெருவில் வந்து   திரும்புமிடத்தில் பயங்கரக்கூட்டம்.  எதோ கல்யாண விழா. பெரிய பெரிய  வண்டிகள்  அடைச்சு நின்னு ஒவ்வொன்னா கிளம்புது. கட்சிக் கல்யாணம் போல!  அம்மா படம் போட்ட  வண்டியை  வழி அனுப்பறாங்க.  மாவட்ட கவுன்சிலர் மூக்கன்  வண்டி!  அதுவரை பொண்ணு மாப்பிள்ளையை யாரும் சட்டை செஞ்சுருக்கமாட்டாங்க. இனிமேத்தான்.....



கோவில்  அலங்கார நுழைவு வாசலுக்குப் பின்னாடி தசாவதார சிலைகள் நல்லாவே இருக்கு.


அதே மண்ணச்ச நல்லூர் வழியா  திரும்பிப்போறோம்.  அண்ணனுக்கு செல்லில்   திருவெள்ளறை தரிசனம் ஆச்சுன்னு  தகவல் சொன்னேன்.  அப்ப அண்ணி, 'ஸ்வஸ்திக் டிசைனில் இருக்கும்   மாமியார் மருமகள் குளத்தைப் பார்த்தேதானே?'ன்னாங்க!

ஙே..............


பல்பு வாங்கினபிறகு  வலையில் தேடியதில் ஆப்ட்டது! பட உரிமையாளருக்கு நன்றிகள்.


தொடரும்:-)


Monday, June 01, 2015

போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சுட்டோம் !

நாள் குறிச்சிட்டாங்க.  நாலு வருசக் காத்திருப்புக்கு முடிவு கட்டநாளும் நேரமும்  குறிச்சிட்டாங்க.  இந்த 28 வருசத்துலே  எத்தனை முறை பார்த்துருக்கேன்.   இப்படி ஆகுமுன்னு கனவிலும்  நினைச்சதில்லை.

நமக்கு இன்று முதல் அஃபீஸியல் விண்ட்டர்.  நேத்தோடு Autumn காலம் க்ளோஸ்.  அப்படியே இதுவும் க்ளோஸ்:(  கடைசியா முகம் பார்க்கலாமுன்னு  பகல் மூணரைக்குப்போய்ச் சேர்ந்தோம். நாலுமணி முதல்  அக்கம்பக்கம் நாலு தெருக்களை மூடறாங்க. ஏழுவரை அந்தப்பக்கம்  போகக்கூடாது.

  காவல்துறையும்,  முடிவுக்குப் பொறுப்பு ஏத்துக்கிட்ட கம்பெனியும் (Ceres Environmental New Zealand, LTD ) நகரத்துக்குள்ளே வராதீங்க. நடக்கப்போகும் சம்பவத்தை அப்படியே நேரடி ஒளிபரப்பாக் காட்டறோம்.  உங்களுக்காகவே  Drone ஒன்னு மேலே அனுப்பறோம்.  அது எல்லாத்தையும்  அருமையாச் சுட்டுத் தள்ளிக்கிட்டே இருக்கும்.  நீங்க  இருக்குமிடத்துலேயே பார்த்துக்கலாம்.  இது தவிர 20 மீட்டர் உசரத்துலே இன்னொரு  பவர்ஃபுல் கெமெரா வைக்கிறோம்.  அதுவும் காட்சிகளை அனுப்பும் என்று  உரக்கச் சொல்லித் தலையைத்தலையை அடிச்சுக்கிட்டாலும் யாரு கேக்கறா?  எல்லாம் ஓடுதுங்க நம்மைப்போல!

பதிமூணு மாடி!    50 மீட்டர் உசரம்! வயசு அதிகமொன்னும் இல்லை.  1968இல்  டிஸைன் செஞ்சு கட்ட ஆரம்பிச்சு  1973 இல் திறந்து  வச்சுருக்காங்க.  2011  ஃபிப்ரவரி  22 வரை  இயங்கியிருக்கு.  நிலநடுக்கம் வந்ததால்  அழியவேண்டிய நிர்பந்தத்தில்  மாட்டிக்கிச்சு. வெளியே பார்க்கும்போது  பர்ஃபெக்ட்டா இருக்கும் இதுக்கு,   உள்ளே  ஸ்ட்ரக்ச்சரல் டேமேஜ் ஆகிப்போச்சாம்:(  உள்ளூர் ஏவொன் நதிக்குப் பக்கம். நட்ட நடு நகரமையம். ரெண்டு தெரு தள்ளி கிடைச்ச இடத்தில் வண்டியை நிறுத்திட்டு ஓட்டமும் நடையுமாப் போனபோதே.... ஒரு ப்ளாக் தள்ளி  கேமெரா ஸ்டேண்டு எல்லாம் போட்டுத் தயாரா இருக்காங்க சிலர்.  நதியின் அக்கரையில் அங்கங்கே சிலர்.  வீட்டில் இருந்தே  இருக்கைகள் கொண்டு வந்து போட்டுக்கிட்டு நேர்பார்வையில்  கட்டிடத்தைப் பார்த்தபடி.


செக்யூரிட்டி அம்மா வந்து  இங்கே இருக்கக்கூடாது. இன்னும் தள்ளி பின்னால் இருக்கும் சாலைக்கு அந்தப்பக்கம் போகணுமுன்னு  சொல்லி,  'நான் சொன்னது உங்களுக்குக் கேட்டுச்சா'ன்னு கேட்டாங்க. சனம் மறுபேச்சு பேசாம  இருக்கைகளை வாரிக்கிட்டு அந்தாண்டை போகுது.

படம் எடுத்தாச்சா?  இன்னும்  நாலைஞ்சு . இந்தப்பக்கம் பின்புலத்தில் கட்டிடம்வர்றமாதிரி நில்லுங்க. க்ளிக் க்ளிக்.  நீயும் நில்லு.  க்ளிக்.   ஊருக்குள் மீண்டும் ட்ராம் வண்டி  இப்பஓட ஆரம்பிச்சுருக்கு.  நிலநடுக்கத்தில் நின்னுபோயிருந்த  சமாச்சாரத்தில் இது ஒன்னு.




 இந்த நிலநடுக்கத்தால் வந்த வினைதான் இன்றைய நிலைக்குக் காரணம்.  ஆச்சு நாலு வருசம் என்றாலுமே  முழுசுமா  மீண்டு வர  இன்னும் பத்து வருசமாகுமாம்.

உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன். கம்பீரமான கட்டிடம். எங்கூர் லேண்ட்மார்க்கில் ஒன்னு.  ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரென்ஸ்க்கு இந்தாண்டை இப்படியெல்லாம் இருக்கும் இது இன்னைக்குக் காணாமப் போகப்போகுது.    அஞ்சு மணிக்கு  ச்சூ மந்திரக்காளி!

சரி. கிளம்பலாமுன்னு  ஆரம்பிச்சார். அதுக்குள்ளே கூட்டம்கொஞ்சம் சேர ஆரம்பிச்சது.  இல்லே... இருந்து பார்த்துட்டுப்போகலாம் என்றதும், அதுதான்  லைவா காமிக்கறோமுன்னு சொல்றாங்களே. அது போதும்ன்னார்.

 போலீஸ் போறதைப் பார்க்க வரவேணாமுன்னு போலீஸே சொல்லுது!

'முடியாது. நீங்க வீட்டுப்போய்ப் பாருங்க. நான் இங்கே இருக்கேன்.  அப்புறம் அஞ்சரைக்கு வந்து என்னை பிக் பண்ணிக்குங்க'ன்னு அஸ்திரம் விட்டேன். ராமபாணம்.  இலக்கு தப்பினதா சரித்திரமே இல்லை:-)

'சரிசரி.  இந்தக்குளிரில் நடுங்கிக்கிட்டே வெளியே உக்காரணுமா? நல்ல ஜாக்கெட் கூட நீ போட்டுக்கலை.  ஆஸ்த்மா வேற இழுக்குது. சரியான இடத்துலே கொண்டுபோய் நிறுத்தறேன்.  காருக்குள்ளே இருந்தே பார்க்கிறமாதிரி'ன்னு  வேறு வழியாக்கொஞ்சம் சுத்தி  செக்யூரிட்டி  காமிச்ச சாலைக்கு அந்தப்பக்கம் இருந்த கார்பார்க்கில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினார்.  ஏகப்பட்ட மரங்களுக்கிடையில்  கட்டிடம் தெரியுது.  வியூ சரி இல்லைன்னதும் 'அஞ்சு நிமிட் இருக்கும்போது கீழே இறங்கிப்போய் பார்க்கலாம். அதுவரை குளிரில்லாம  வண்டிக்குள்ளே இருக்கலாம்.'  ஓக்கே ஓக்கே.

மூணு டாலரை மெஷீனில் போட்டு  பார்க்கிங் அனுமதி வாங்கிக்கிட்டோம்.  கண் முன்னே குழந்தையும் குட்டிகளுமா சனம் மெள்ளமெள்ள சேர்ந்துக்க்கிட்டே போகுது.  போய் தின்ன எதாவது வாங்கிவரவான்னார்!   அதெல்லாமொன்னும் வேணாம். அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கப்போறோம்.  அதுக்குள்ளே தீனியா?  மெரினாவில் தீனிக்கடைகளும் குப்பையுமாக் கிடப்பது மனசில் வந்து போச்சு. டைம்பாஸ் டைம்பாஸ்ன்னு கடலை விக்கறவங்க  இங்கே மிஸ்ஸிங்.

சனம்  காபியும், சாண்ட்விச்சும்மாத் தின்னுக்கிட்டே காத்திருக்கு கண் எதிரில்.  தின்னு முடிச்சதும் குப்பைக்கூடைக்குப் போயிருது குப்பை!   சின்ன ஃப்ளாஸ்க்லே  என்னமோ வச்சுக் குடிக்குது ஒரு சின்னப்பொண்.  சீனர்.

இந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே  நானும் ரெண்டு முறை போயிருக்கேன்!  முதல்முறை கண்டெடுத்த பாஸ்போர்ட்டைக் கொண்டு கொடுத்தது. அப்ப நடந்ததை அப்பவே எழுதி இருக்கேன்.

ஒரு நாள் எங்கள் கடை வாசலில் ஒரு நியூஸிலாந்து 'பாஸ்போர்ட்' கீழே விழுந்திருந்தது. அது இன்னும் 9 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் நிலையிலும் இருந்தது. குடிமக்களின் கடமையின்படி, நான் பொலீஸுக்கு ஃபோன் மூலம் தெரிவித்தேன். போலீஸ் கிட்டே பேசுனது இப்படி!

" ஒரு பாஸ்போர்ட்டைக் கண்டெடுத்தேன். நான் என்ன செய்ய வேண்டும்?"

" இங்கே கொண்டுவந்து ஒப்படைத்துவிடுங்கள்"

" பொலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?"

" நீங்கள் எங்கேயிருகின்றீர்கள்? நாளை, நீங்கள் கடை திறக்கப் போகும்போது கொடுத்துவிட்டுப் போகலாமே "

(இடம் சொல்லப்பட்டதும், எந்தக்காவல் நிலையம் அருகிலுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது.)

அவ்வளவுதூரம் என்னால் வரமுடியாது.நான் கடைக்குப் போகும் வழி அதுவல்ல. நீங்களே யாரையாவது அனுப்ப முடியுமா?

"இங்கே ஆட்கள் மிகவும் குறைவு. உங்களால் எப்போது முடியுமோ அப்போது கொண்டுவந்தால் போதும்"

"தொலைத்தவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படாதா?"

"அப்படியா? ஒன்று செய்யுங்கள். அதிலுள்ள எண்களைச் சொல்லுங்கள்.
யாராவது, தொலைத்துவிட்டதாக காவலரை அணுகினால் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். அப்போது கொண்டுவரலாமே"

இது சரிப்படாது என்று, ஒரு வாரம் கழித்து வந்த வார இறுதியில், காவல் நிலையம் சென்றேன்.

வரவேற்பில், வந்த காரணம் சொல்லப்பட்டதும், ஒரு அதிகாரி, ஆசனத்தில் அமரச்செய்து, குடிக்க ஏதாவதுகா·பி, டீ வேண்டுமா என்று கேட்டு உபசரித்துவிட்டு, ஒரு படிமத்தில் விவரங்களைப் பதிந்து கொண்டார்.அந்தப் பாஸ்போர்ட் உரிமையாளருக்கு உங்கள் விலாசம் தரலாமா என்றும் கேட்டார். காரணம் ,அவர்கள் நமக்கு, நன்றிக் கடிதமோ, மலர்களோ அனுப்புவார்களாம். அவையெல்லாம் தேவையில்லை என்று சொன்னேன்.

அதன் பின் ஒரு வாரம் சென்றபின், காவல் நிலையத்திலிருந்து, நன்றி தெரிவித்து ஒரு கடிதமும், உரிமையாளர்அந்த 'பாஸ்போர்ட்'டைப் பெற்றுக் கொண்ட விவரமும் இருந்தது.

ரெண்டாம் முறை போலீஸ் செல்லில் இருக்குபடி ஆச்சு!    க்ளிக்கிப்  பாருங்கப்பா!


ஆகாயத்தில் ஒரு வண்டு வந்ததைப் பார்த்து அதுதான் ட்ரோன் என்றேன்.  கரெக்ட் அதுவேதான்.  கட்டிடத்துக்கு முன்னால் அப்படியே நின்னு பறந்துச்சு. பக்கவாட்டில் முன்னே பின்னேன்னு எல்லா திசைகளிலும்  நிற்பதும்  பறப்பதும் நகர்வதுமாக   இருக்கு! பாரதியார் சொன்னதே. எங்கோ ஒருவன்  இயக்குகின்றான்!


அஞ்சு நிமிட் இருக்கும்போது வண்டியில் இருந்து இறங்கி ஜோதியில் கலந்தோம்.


Drone  & Jet  ரெண்டும்  ஒரே ஃப்ரேமில் வருமான்னு பார்த்துக் க்ளிக்கும்போது  டமார்னு ஒரு சத்தம்.  அப்படித் தூக்கிப்போடும் அளவுக்கு இல்லை. ஒரு பத்து லக்ஷ்மிவெடியை கொளுத்திப்போட்டாப்லெ! சடசடன்னு சின்னப் பட்டாஸ் சத்தம் தொடந்து இன்னொரு டமார்.   வானத்துக்காக அதிகபட்சம் Zoom பண்ணிட்டதால் ............  அதுக்குள்ளே கெமராக்கண்ணைக் கட்டிடம் நோக்கித் திருப்புவதில் கொஞ்சம் கடுபடு பண்ணிட்டேன்.  சப்தம்  வந்த நொடி  ரெக்கார்ட் ஆகலை:(

 அதிர்ச்சியில் உறைஞ்சுருந்த கட்டிடம்  0.1 விநாடி லேசா முன்பக்கம் சரிஞ்சு பார்ப்பதுபோல் தோற்றம் காமிச்சு அப்படியே பின்பக்கமா முழங்காலை மடிச்சு நமஸ்காரம் செய்வதுபோல் சரிஞ்சு விழுந்துச்சு.  பெருமாளே காப்பாத்துன்னு வாய் தன்னிச்சையா சொன்னதே தவிர  தொண்டையை அடைச்சுக்கிட்டு ஒரு துக்கப்பந்து. கண்களில் கண்ணீர்.

ஒருவிநாடி திகைச்சு நின்ன கூட்டம், நிசப்தத்தை உடைச்சு ஒருத்தர் கை தட்டுனதும் கூடச்சேர்ந்து கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துச்சு. யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல்  திட்டப்படி நடந்து முடிஞ்சதாம். இன்னிக்கு இரவு பார்ட்டின்னு சொன்னார்  திட்டத் தலைவர்!

அதென்னமோ  போனமுறை  இடிச்ச ரேடியோ நியூஸிலேண்ட் மாதிரி  முழுசுமா இடிஞ்சு விழாமல்  நாலு மாடி அளவுக்கு மேலே மட்டும் விழுந்துருக்கு.  அரை வேலையோன்னு நினைச்சேன்.


அப்புறம்தான்   இந்த இடிக்கும் வேலைக்குப் பொறுப்பெடுத்துக்கிட்ட  Ceres Environmental New Zealand, LTD (  2011  ஃபிப்ரவரி நிலநடுக்கத்துக்குப் பிறகு முளைச்ச புது கம்பெனி) அதிகாரி,  'இவ்வளவுதான் இடிக்கணுமுன்னுதான் திட்டமே போட்டோம்.  முதல் கட்டிடம் மாதிரி இல்லாமல் இது கொஞ்சம் நெருக்கமான தெருவின் மூலையில் (கார்னர்) இருக்கு. மேலும் 13 மாடி உயரம். எதிர்வாடையில்  மாநகர  சிட்டிக்கவுன்ஸிலின் புதுக் கட்டிடம்  வேற இருக்கு.   போலீஸுக்கு வலதுபக்கம்  நகரின் முக்கிய சாலை.  கொஞ்சம்  பிழையாப்போனால்  முன்னால் இருக்கும் தெருவில் சாய்ஞ்சு அப்படியே போய் எதிர்க் கட்டிடத்தின் மேல் விழுந்துரும். வலப்பக்கம்  சாய்ஞ்சால்  சாலை முழுசும் காலி.அதனால் அக்கம் பக்கம் இருக்கும் மற்ற இடங்களுக்குப் பரவாமல் கவனமாத்தான்  வெடிமருந்துகளைக் குறைந்த அளவில் பயன்படுத்தினோம்' என்றார்.   More than 500 metres of detonating cord and 55kg of explosives have reduced Christchurch's old police station to rubble in a matter of 8 seconds.

'கீழே விழாமல்  தங்கிய பகுதியை சாதாரண புல்டோஸர் வச்சு இடிச்சு எடுத்துடலாம். பெரிய பெரிய க்ரேன்கள்  இந்தக் குறுகலான தெருவுக்குள் வரவேண்டிய அவசியமில்லை' என்றதும் சரியான பாய்ண்ட்தான்.

புது கம்பெனி ஆக  இருந்தாலும்  இடி ஸ்பெஷலிஸ்ட்டா ஆகிட்டாங்க. இடிப்புக்குமுன்   ஓசைப்படாமல் பல நாட்கள் தயாரிப்பு வேலைகள் இருந்திருக்கு. கட்டிடத்தில் இருக்கும்   வெளிப்புற உட்புறக் கண்ணாடிகளை ஒன்னு விடாமல் கழட்டி அப்புறப்படுத்திட்டாங்க. இல்லேன்னா இடிஞ்சு விழும்போது கண்ணாடிச் சில்லுகள் தெறிச்சு ஊர்  முழுசும்  விழுந்துருக்கும்!   இந்தக் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் பரவலா பல இடங்களில்  ஆஸ்பெஸ்ட்டாஸ்  பயன் படுத்தி இருந்துருக்காங்க. அதையெல்லாம் கூட ஸ்ட்ரிப் செஞ்சுட்டாங்க.  மரக்கதவுகள்   உள்ளே போட்டுருந்த  மரச்சாமான்கள்  எல்லாமே  அகற்றப்பட்டிருக்கு.  காங்க்ரீட்டும் கம்பிகளும் மட்டுமே  இந்த ஷெல்லில் பாக்கி!

கிளம்பின  சிமெண்ட்த்தூள் புகை அடங்க  குறைஞ்சது  ரெண்டு  மணி நேரம் ஆகுமாம்.  அதுவரை அந்தப்பக்கங்களில் போக்குவரத்து நிறுத்தி இருக்காங்க.
இது ஒன்னையும் கண்டுக்காம எங்க ஏவொன் நதி வாத்துகளும் பறவைகளும்  ஜாலியா வானத்தில் கூட்டங்கூட்டமா வட்டம் போட்டுக்கிட்டே இருந்தாங்க. இது தினசரி  ஜிம் ஒர்க்கவுட்தான் அவைகளுக்கு!

நாலு வருசக் காத்திருப்பு முடிஞ்சது.  அப்ப  போலீஸ் ஸ்டேஷனே கிடையாதா?  ஏன் இல்லை? 2012, மார்ச் மாதத்தில்   22  மில்லியன் டாலர் செலவில் ஒரு சாதாரண கட்டிடம் கட்டி அங்கே இடம் மாத்திக்கிட்டாங்க. இது தாற்காலிகம் தான்.  ஆறு வருசத்துக்குப் பயன்படுத்துவாங்களாம்.

அதுக்குள்ளே  வேறெங்கேயாவது  நிரந்தரமான  வசதிகளுடன்  புதுசு கட்டிக்க திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க.

பொறுத்திருந்து பார்க்கலாம்,  இதே இடத்தில் வேறென்ன  கட்டடம் வரப்போகுதுன்னு.

கண் முன்னே காணாமப் போனதை நினைச்சாத்தான் மனசில்கொஞ்சம் வலி.