ஒரு காலத்தில் இதுதான் சொர்க்கமோன்னு இருந்த இடம், இப்போ நரகமாத் தோணுது. ஆரம்பகாலக் குறிக்கோள் மெய்யாலுமே பாராட்டப்பட வேண்டியதுதான். எத்தனை பேருக்கு ஏகப்பட்டக் காசு செலவு செஞ்சு வெளிநாட்டுக்குப்போய் இதையெல்லாம் பார்க்க முடியும்? உள்ளூர்லே இருக்கறவன் மனுசனே இல்லையா?
கோல்டன் பீச் ஆரம்பிச்சக் காலக் கட்டங்களில் (1975) தமிழ்ச் சினிமாக்கள் கிடைச்ச லொகேஷனை விடாமப் பாய்ஞ்சுப் பாய்ஞ்சுப் படம் எடுத்துப் பெருமைகளைப் பரப்பினாங்க. இடத்தைப் பார்க்காமலேயே மனசுலே அங்கிருந்த அலங்காரங்கள், மண்டபங்கள், சிலைகள் எல்லாம் இடம்பிடிச்சு உக்கார்ந்துருச்சு.
சரியாச் சொன்னால் ஒரு பதினைஞ்சு வருசம் முந்திதான் இங்கே போய்வர வாய்ச்சது. அதுவும் மகாபலிபுரம் பார்த்ததே இல்லைன்னு கோபால் சொன்னதால், குறை ஒன்னும் இல்லாதிருக்கட்டுமுன்னு போனோம். திரும்பி வரும்போது முதலைப் பண்ணையில் ஒரு ஸ்டாப். ஏந்தான் போனோமோன்னு இருந்துச்சு. குட்டிக்குட்டியா முதலைகள் அளவுக்கதிகமா ஒரே தொட்டியில் கிடக்கு. நகர இடமில்லை. அம்பாரமாக் குவிச்சு வச்சுருக்காங்க. பாவம்.....மூச்சுமுட்டிச் சாகாம இருந்தால் பாக்கியம். விலங்கோ மிருகமோ, பிராணிகளோ கால்வைக்க நிலம் ஒன்னு வேணாமா? கொடுமை......
மனம் சலிச்சுப்போய்க் கிளம்புன நாங்கள் போய்ச் சேர்ந்த இடம் தங்கக்கடற்கரை. முன்வாசல்கூடக் கொஞ்சம் சாதாரணmதான். மேளச்சத்தம் காதைப் பிளக்கக் கரகாட்டம் ஆடிக்கிட்டு இருந்தாங்க ஒரு ஜோடி. மருதைக்கார மச்சானுக்கு ஒரே குஷி. என் பொண்ணுக்கு இது என்ன மேக்கப்ன்னு திடுக். (மத்தவங்க என்ன உணர்ந்தோமுன்னு சொன்னால்.....அவ்வளவா நல்லா இருக்காது) எனக்குத்தான் கொஞ்சம் பாவமா இருந்தது அவுங்களைப் பார்த்து. எல்லாம் வயித்துப் பிழைப்பு.
சுமாராச் சுத்திப் பார்த்துட்டு ஆறடி நீளப் ஃபேமிலித் தோசையை எல்லாம் உள்நாட்டுப் ஃபேமிலியை ரசிக்கவிட்டுட்டு, இளநீர் வாங்கிக் குடிச்சுட்டு வந்தோம். அப்போ உள்ளே போகும் டிக்கெட்டில் எதாவது ஒரு உணவு வாங்கிக்கக் கூப்பானும் வச்சுருந்தாங்க. தங்கறதுக்குக் காட்டேஜ், விடுதிகள் எல்லாமும் இருக்குன்னதும் ரெண்டுநாள் தங்கலாமான்னு ஒரு ஆசை. வழக்கம்போல் எல்லாமே......அடுத்தமுறை பார்த்துக்கலாம்.................இந்தமுறை ' தக்ஷிணச் சித்ரா' போனபோது வழியிலேக் கோட்டைவாசலும் யானைகளும் கனகம்பீரமா இருக்கேன்னு பார்த்து வச்சுக்கிட்டேன். ரெண்டுமாசம் முன்னே நேரமும் வாய்ச்சது. முன்வாசலில் அலங்கார மண்டபம், கோட்டைச் சுவர்கள் , படைவீரர்கள் யானைகள், முரசொலி எழுப்பும் வீரன் எல்லாமே சூப்பர். நுழைவுக் கட்டணம் 150 ரூபாய்கள். கொஞ்சம் கூடுதலோ? மக்களுக்குச் செலவ(ழி)ளிக்கும் திறன் கூடி இருக்குன்னு ஏத்தமோ ?
பிளாஸ்டிக் பைகள், உணவுப்பொருட்கள் ஏதும் உள்ளே கொண்டு போகக்கூடாதுன்னு பேருக்கு ஒரு போர்டு. அப்பாடா.... இவுங்களாவது சுற்றுப்புறச் சூழல், மாசு பற்றி எல்லாம் அக்கறை எடுத்துக்கறாங்களேன்னு மனசு நிம்மதியாச்சு. . அங்கங்கே மரங்கள் செடிகள்னு நல்லாவே இருக்கு. கேளிக்கைப் பகுதிகளும் பரவாயில்லை. அங்கங்கே கோட்டைகளும் கொத்தளங்களுமா இருக்கறதெல்லாம் முன்னே நான் பார்த்த ஞாபகமே இல்லை.
இப்போ சில பகுதிகளைப் புதுப்பிச்சுக்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் கண்மறைவாச் செய்யக்கூடாதா? பெரியபெரிய போர்டுகளையோ தகரங்களையோ வச்சு மறைச்சுட்டு, புதுப்பிக்கும் பணி முடிஞ்சு அதைப் பார்வைக்கு விட்டால் நல்லா இருக்காதா? இப்படித்தானே பெரிய பெரிய தீம் பார்க்குகளில் செய்யறாங்க. காப்பி அடிக்கும்போது அது ஈ அடிச்சால் என்ன?
அங்கங்கே மண் கொட்டிவச்சுப் பள்ளம் தோண்டிப் போட்டு .........ஒருபகுதியில் தாய்த் திருநாட்டின் பெருந்தலைகள் மனம் ஒடிஞ்சு கிடக்குறாங்கன்றதை சிம்பாலிக்காச் சொல்லும் வண்ணம் உருக்குலைஞ்சு நிக்கறாங்க. கை ஒடிஞ்ச பாரதியும், காலிழந்த காந்தியும், கண்ணிழந்த இந்திராவும் ................என்னமோ போங்க.
யானை என்ன பாவம் செஞ்சதோ? காலை ஒடிச்சுப் பக்கத்துலே வச்சுருக்காங்க. நெஞ்சு பொறுக்குதில்லையே............துள்ளி ஓடும் புள்ளிமான்களுக்காக ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. சருகுகளைத் தின்னே இதுகள் உயிர்வாழமுடியும் என்று நிரூபிக்கும் முயற்சியோ? கொஞ்சம் நிழலும் பச்சை இலைகளும் இருந்தா......... நல்லா இருக்காது?
அழுக்கோ குப்பையோ யாரு இதையெல்லாம் கவனிச்சா? என் கடமை இதனினும் பெரிதுன்னு கடலை போட்டுக் கொண்டிருக்கும் ஜோடிகள் அங்கங்கே. பேசணும் .....இப்பப் பேசலைன்னா.....அப்புறம் சான்ஸே கிடைக்காது..............
நீர் அலங்காரமா இருக்கவேண்டிய செயற்கை நீரூற்றுக்கள் எல்லாம் பாசி பிடிச்சு அசிங்கமாக் கிடக்கு. அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் இருக்கும் இறைவனைப்போல .................. சகல இடங்களில் அழுக்கும் குப்பையும் பிளாஸ்டிக் கழிவுகளும். அப்போ நுழைவாசலில் வச்சுருந்த போர்டு? வெறும் போர்டுதானா? யாரும் அதை சட்டை செஞ்சமாதிரித் தெரியலை. ஏம்ப்பா.... கட்டணம் வசூலிக்கிறீங்களே...கொஞ்சம் சுத்தமா வச்சுக்கக்கூடாதா? இன்னும் ஒரு பத்து வேலையாட்களைப் போட்டால் கூட்டிப் பெருக்கமாட்டாங்களா? அப்படியா வேலைக்கு ஆளே கிடைக்காமப்போயிட்டாங்க? இல்லே தமிழ்நாடு ஆட்கள் மொத்தப்பேருக்கும் வேலை கிடைச்சுருச்சா? ( ஒருவேளை இதுதான் காரணமோ.....உணவகங்களில் எல்லாம் மேசையைத் துடைச்சுச் சுத்தம் செய்ய நேபாளியர்கள் இருப்பது! கூடுதல் வசதி..... இவுங்க முகத்துலே வயசு தெரியறதில்லை)கடற்கரைப் பகுதிகளில் கையில் குச்சிவச்சுக்கிட்டு உக்கார்ந்திருக்கும் 'லைஃப் கார்ட்'கள். அலையில் மாட்டிக்கிட்டுப் போறவங்களைக் காப்பாத்திருவாங்களாம். (சம்பளம் ரொம்பக் குறைச்சலுன்னு மூக்காலே அழுதாங்க)
கண்டமானம் ஈ மொய்க்கும் உணவகம். சோழி, சிப்பி எல்லாம் விற்கும் கடைகள் கவனத்தைக் கவரலை. கொஞ்சம் எரிச்சலாக்கூட இருந்தது.எதுக்கும் கவலைப்படாமல் முகத்தில் கொஞ்சம்கூட உணர்ச்சிகளைக் காமிக்காமல் அசைவற்று நிற்கும் வீரரிடம் பயிற்சி எடுத்துக்கலாமுன்னு இருக்கேன்.
ஒரு கோட்டைக்குள் நுழைஞ்சோம். அட்டகாசமான சிலைகள். கலைநயத்தோடுதான் இருக்கு. அவ்வையார், திருவள்ளுவர், கபிலர்ன்னு சங்ககாலப்புலவர்கள். இருக்கட்டும். தமிழுக்கு மரியாதை. அப்படியே பார்த்துக்கிட்டு நகர்ந்தப்ப.................கைக்கெட்டும் உயரத்தில் உள்ள கன்னியர் சிலைகளில் எல்லாம்
கலர் போன மாராப்பு.
பயங்கரப் பட்டினியோ, பசித்த மானிடரே.....................
பின் குறிப்பு: வழக்கம்போல் படங்கள் இங்கே ஆல்பத்தில்.
Showing posts with label VGP. Show all posts
Showing posts with label VGP. Show all posts
Wednesday, September 09, 2009
பசித்த மா..............னிடர் (-:
Posted by
துளசி கோபால்
at
9/09/2009 05:17:00 AM
26
comments
Labels: Golden Beach, VGP, அனுபவம், விஜிபி தங்கக்கடற்கரை
Subscribe to:
Posts (Atom)