Friday, August 16, 2024

நாம் மீண்டும் சந்திக்கும்வரை .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 29 )

நேத்து கடைசியா வந்த  சுற்றறிக்கையின் தலைப்பு இப்படித்தான் இருந்தது.....   UNTIL WE MEET AGAIN. கப்பல் கேப்டன் செய்தி அனுப்பி இருக்கார். 
கிளம்புமுன் செய்ய வேண்டியவைகளின் பட்டியல்.  
காலை நாலரைக்கே விழிப்பு வந்துருச்சு.  கப்பல் ரொம்ப மெதுவாப்போய்க்கிட்டு இருக்கு. ஒரே மழை. 
எழுந்து என்ன செய்ய ? குட்டித்தூக்கம் போடலாம். ஒரு மணிக்கப்புறம் பார்த்தால்.... வன்கூவர் கடல் எல்லைக்குள் நுழைஞ்சு,   மெள்ள ஊர்ந்து போறோம்.  கொஞ்ச நேரத்தில்  போர்ட் ஆஃப் வன்கூவர் போர்டு. கனடா ப்ளேஸ் வந்துருக்கு ! சரியா ஆறுமணிக்கு கப்பல் நின்னேபோச்சு. 


எட்டரைக்கு மேல்தான்  வெளியே இறங்கவேணும். துறைமுக அதிகாரிகள்  வேலைக்கு வந்தாட்டுத்தானே சம்ப்ரதாய சாங்கியங்கள் எல்லாம் நடக்கணும், இல்லையோ !
ப்ரேக்ஃபாஸ்ட் செஷன் காலை ஆறுக்கே ஆரம்பிசாச்சு. கடல் பயணத்தில் கட்டக்கடைசியா ஓஷன்வ்யூ விஸிட். இண்டியன் டிலைட்டில்  பூரியும்  உருளைக்கிழங்கும்.  ஆனால் பூரிக்கு நாம் செய்யும்  வகையில் இல்லை.  ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ்.   என் கஞ்சியும் இருந்தது. 




வெவ்வேறுவகை டாப்பிங் அலங்காரத்தில் டோநட்ஸ்  & மற்ற பேக்கரி ஐட்டங்கள்.  இந்தக் கிச்சனுக்கு மட்டும் ஓய்வே கிடையாது. காலை ஒன்பதரைக்குப் பயணிகள் அனைவரும் வெளியே இறங்கினதும்,  புதுப்பயணிகள் பத்தரைக்கெல்லாம்  கப்பலுள் வர ஆரம்பிச்சுருவாங்க. நாமும் அப்படித்தானே வந்தோம், இல்லையோ !







ஏழுமணிக்கு அறைக்குத் திரும்பி, மிச்சம் மீதி பேக்கிங் , பாத்ரூமில் எதையாவது மறந்து வச்சுட்டோமான்னு  பார்க்கணும்.  ஷேவிங் செட்தான் எப்பவும்  விட்டுப்போகும். அப்புறம்   முக்கியமா ஸேஃப்டி லாக்கரில் இருந்து பாஸ்போர்ட்களை எடுத்துட்டு, ஒரு முறைக்கு மூணுமுறையா  காலி செஞ்சமான்னு செக் பண்ணிக்கும் வேலை எனக்கானது.  போட்டு வந்த நகைநட்டுகள் எல்லாம்  சரியா இருக்கான்னு பார்க்கறது முக்கியம். வழக்கமா எல்லாப் பயணங்களிலும் செஞ்சுக்கறதுதான். 
ஒருமுறை ஹைதராபாத் ஹொட்டேலில்  ட்ராவில் வச்ச மோதிரங்களை எடுக்க மறந்துட்டேன்.  ஏர்போர்ட்டுக்குப் போகும் வழியில்தான் ஞாபகம் வந்து டாக்ஸியைத் திருப்பச் சொல்லி ஹொட்டேலுக்கு வந்து எடுத்துட்டுப் போனோம். ஒருமுறை அறையைக் காலி செஞ்சபின்  திரும்பத்திறக்க வைப்பதெல்லாம் கொஞ்சம் சல்லியம். அதுக்குப்பின்தான்  நகைகளை இரவில் கழற்றும்போது, கண்ணாடி டம்ப்ளரில் போட்டு வைக்கும் வழக்கத்தை ஆரம்பிச்சேன்.  கண்ணில் பளிச்ன்னு தெரியுமே ! 

ஒருமுறை சிங்கப்பூர் முஸ்தாஃபா ஹொட்டேலில் தொங்கும் சரவிளக்கை விட்டுட்டு ஏர்போர்ட்டுக்கே போயாச்சு.  மகளுடைய பையில் போகவேண்டிய சமாச்சாரம்.  அவளிடம் 'எல்லாத்தையும் ட்ராவிலிருந்து  எடுத்தியா'ன்னு கேட்டால் 'விளக்கை மறந்துட்டேன்'னாள்.  நல்லவேளை இன்னும் லவுஞ்சில்தான் இருக்கோம். நண்பருக்கு உடனே ஃபோன்போட்டு சமாச்சாரம் சொன்னதும், அவர்போய் எடுத்துவந்துட்டு சேதி சொன்னார்.  அடுத்த பயணம் போய்த் திரும்பும்போது அவர் வீட்டுக்குப்போய் எடுத்தாந்தோம். 
நாம் ஒரு ஏழரைக்குள்  அறையைக் காலி செஞ்சுடணும். வெவ்வேற மாடியில்  இருக்கும் பொது இடங்களில் போய்  இருக்கலாம்.  அப்பதான் கப்பலில் ஒலிபரப்பும் சேதி நமக்குக் கேட்கும். நம்ம லக்கேஜ்  டேக் நம்பரைக் கூப்பிட்டவுடன் நாம் அஞ்சாம் மாடிக்குப்போய்,  அங்கிருந்து வெளியேறலாம். பால்கனியில் இருந்து கடைசி க்ளிக்ஸ் எல்லாம் ஆச்சு.
அஞ்சாம் மாடி வாட்ச் கடையாண்டை போய்க் காத்திருந்தோம்.  வாட்ச் ப்ரேமி நண்பரின்  ஞாபகம் வந்தது உண்மை.   ரோலக்ஸ் வாட்ச், செகண்ட்ஹேண்ட் கூட விலை மதிப்புன்னுத் தெரிஞ்சது ! நகைக்கடையில் ஒரு ப்ரேஸ்லெட் சூப்பர்.  எந்தக் கடையுமே திறக்கலை. எல்லாம் கண்ணாடி வழியாப் பார்த்ததுதான்.



நம்ம நம்பரைக்கூப்பிட்டவுடன்  வெளியே போய்  இமிக்ரேஷன் ,கஸ்டம்ஸ் எல்லாம் க்ளியர் செஞ்சு ஏற்கெனவே  ஸ்கேன் செஞ்ச செக்கின்பெட்டிகளையும்  எடுத்துக்கிட்டு டாக்ஸி க்யூவுக்குப் போனோம்.  ஒரே நேரத்தில் நிறையக் கப்பல்கள் திரும்பிவர்றதால்  டாக்ஸி கிடைக்க ரொம்பநேரம் காத்திருக்கவேணும் என்ற சேதியும் நேற்றைய நியூஸ்லெட்டரில் இருந்தது.  


அரைமணி நேரக் காத்திருப்பில் டாக்ஸி கிடைச்சது.  ஏழே நிமிட்டில் ஷெராட்டன் வந்துட்டோம். வெறும் ஒன்னரை கிமீ தூரம்தான் !   செக்கின் செஞ்சு அறைக்குப் போயாச்சு. இந்த முறை மூணாம் மாடி. ஒரே மழை !
நம்ம க்ரூய்ஸ்  பயணம் முடிஞ்சது. கொஞ்சம் விஸ்தாரமாகத்தான் எழுதியிருக்கேன்.  ரொம்ப நாள் காத்திருந்து கிடைச்ச அனுபவம்.  யாருக்காவது பயனாக இருக்கட்டுமே !  வாழ்க்கையில் ஒரு முறை இதை அனுபவிக்கத்தான் வேணும். முக்கியமாகப் பெண்கள் !

கப்பல் முடிச்சுத் திரும்பிவந்து ரெண்டு நாட்கள் வன்கூவரில் இருந்துட்டு நியூஸி போகணும் என்ற திட்டத்தில்  ஒரு மாற்றம் ஏற்பட்டுப்போச்சு.  நாம் கேட்டுருந்த நாளில்  டைரக்ட் ஃப்ளைட்  இல்லையாம். ரத்து செஞ்சுட்டாங்களாம்.  அதனால் இன்னும் ரெண்டு நாள் கூடுதலாக இருக்கவேண்டியிருக்குமாம்.

ஆஹா.... இது வேலைக்காகாது. அவ்ளோ நாட்கள் எல்லாம் இருக்க முடியாது.  வேற ஆப்ஷன் இருக்கான்னு பார்த்தால்  நாளைக்கு டைரக்ட் ஃப்ளைட் இருக்குன்னு தெரிஞ்சது.  உடனே அதுக்கு மாத்திக்கிட்டோம்.   

இப்பக் கையில் இருப்பது  ஒருநாள்தான். அதில் ஏதாவது  பார்க்கணுமுன்னா பார்த்துக்கலாம்.   விஸிட்டர்ஸ்  கைடில் தேடித்தேடிப் பார்த்ததில் எனக்கு  ஒரு பார்க், சுவாரஸியமா இருப்பதாகப் பட்டது.  மழை வேற இருக்கே.... நாளைக் காலையில் போய்வரலாமான்னால்.... மறுநாளும் மழையேதானாம்.
சரி இன்றைக்கே போகலாமுன்னு  முடிவு. கொஞ்ச நேரத்தில் கிளம்பலாம்.  கையில் குடையோடு ரெடியா இருங்க.             

தொடரும்....:-)

6 comments:

said...

ஆமாம்.. பெண்களுக்கு மாத்திரம் இத்தகைய பயணம் என்ன ஸ்பெஷல்? தினம் தினம் சமையலறைக்குப் பதில் இந்த மாதிரி பயணம் உற்சாகமாக வைத்திருக்கும் என்பதாலா

said...

கண்ணாடி டம்ளரில் நகை போட்டு வைக்கும் ஐடியா நல்ல ஐடியா.


அத்தனைநாள் பயணத்தில்  வராத வீட்டு ஏக்கம், பயணம் முடிவுக்கு வருகிறது என்று தெரியந்தவுடன் அவசரமாக உடனே வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்கிற ஒரு அர்ஜ் மனதில் வந்து விடும், இல்லையா?!

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

தினம் தினம் சமையல் செய்வதைவிட ரொம்பவே கஷ்டமானது சமையல் திட்டம்தான். என்ன இருக்கு, வீட்டு மக்களுக்குப் பிடித்தமாதிரி அதில் என்ன சமைக்கலாம் ..... இப்படி. அதுவும் தினமும் ப்ரெஷ் காய்கறிகள் கிடைக்காத ஊரில்... ப்ச்.....

அதான் இந்த நினைப்பே வராமல் ஒரு வாரமாவது இருக்கமுடிஞ்சால் அது பெரிய வரமல்லவா எங்களுக்கு !

said...

வாங்க ஸ்ரீராம்,

எல்லாம் பளிச் பளிச் !

திரும்பி வரும் பயணத்தில் ஊரைப்பிரியும் ஏக்கம் எல்லாம் இமிக்ரேஷன் முடியும்வரைதான். இதைக் கடந்து உள்ளே போனவுடன், ஊர்ப்போய்ச் சேர்ந்தவுடன் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் வரிசையா மனசுக்குள் வந்துரும்.

said...

கப்பல் பயணம் முடிந்தது. இப்படியான ஒரு பயணம் எல்லோருக்கும் தேவை - ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்! விஸ்ராந்தியாக இருக்கலாம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மைதான். நாந்தான் என் கண்ணோட்டத்தில் அப்படிச் சொல்லிட்டேன். நம்மவருக்கும் குறிப்பிட்ட சில வீட்டு வேலைகளில் இருந்து எஸ்கேப்தான் !!!