Thursday, March 14, 2024

தீபாவளி ஓட்டம்!

சிவாலய ஓட்டம்னு நாரோயில் கன்யாகுமரி பக்கங்களில் கேட்டுருப்பீங்கல்லெ ? தீபாவளி ஓட்டம் கேட்டதுண்டா ?  இப்ப இடும்பியின் தீபாவளி ஓட்டம் கேட்கப்போறீங்க :-)
முந்தியெல்லாம் சத்சங்கம், இல்லே உள்ளூர் ஆன்மிகக்குழுக்கள், க்ளப்கள் இப்படி தீவாலிதானே இருந்துச்சு. இப்ப நம்மூரில் கோவில்கள் வந்துருச்சு. எல்லாக் கோவில்களிலும் பண்டிகைகள் நாட்களிலேயே   சம்பந்தப்பட்டப் பண்டிகைகள் கொண்டாடத்தான் வேணும் இல்லையா ?  வீக்கெண்டுக்கு ஒத்திப்போட முடியுமா ?  அந்தக் கணக்கில்  நம்ம கோவில்களில் எல்லாம் இன்றைக்குத் தீபாவளிக்கான சிறப்புப்பூஜைகள்! எல்லாக் கோவில்களில் இருந்தும் அழைப்பும் அனுப்பிட்டாங்க. நம்ம கோவில்களுக்கு நாமே ஆதரவு தரலைன்னா எப்படி ? அதுவும் இந்த வருஷம் (2023 ) எல்லா முக்கிய பண்டிகைகளும் சொல்லி வச்சாப்லெ ஞாயித்துக்கிழமைகளில் வந்துருக்கு !

காலையில் 'கங்கா ஸ்நானம்' முடிச்சு, ஒரே ஒரு இனிப்பு (பால்பாயஸம் ) மட்டும் செஞ்சு நம்ம பெருமாளுக்கு அம்சி பண்ணிட்டுக் கிளம்பினோம்.  மணி பதினொன்னுக்குப் பக்கம். வீட்டாண்டை இருக்கும் அன்பு விநாயகர் தரிசனம் முதலில் ! 

அங்கே கூட்டமான கூட்டம்.  வீட்டு வளாகம் என்றபடியால்   சின்னக்கூட்டமே, பெருசாத் தெரியும்.  ஆனால்  இன்றைக்கு உண்மையிலேயே  கூட்டம் அதிகம். ஞாயிறு என்பதும் ஒரு காரணமே !  புள்ளையாரைக் கிட்டக்கப்போய்க்கூடப் பார்க்க முடியலை.  ஆரத்தி முடிஞ்சதும்..... மஹாப்ரஸாத விநியோகம்,  வளாகத்தின் மறுபக்கம் இருக்கும் டான்ஸ் ஸ்டூடியோவில். கூட்டம் எல்லாம் அங்கே போனதும் நான் போய்  ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிக்கிட்டேன். 



அலங்காரம் அட்டகாசமா இருக்கு ! புது ப்ரபையில் ஜொலிக்கிறார் !
நம்ம நண்பரின் கேட்டரிங்தான் ஸ்பான்ஸார் செஞ்சுருந்தாங்க. எல்லோரும் உக்கார்ந்து சாப்பிட இடம் போதாது என்பதால் ஸ்டைரோஃபோம் பேக்கில்  பார்ஸல் பண்ணித்தரும் ஏற்பாடு. நம்மால் ஆன சிறு உதவின்னு நாங்களும்  கொஞ்சநேரம் விளம்பினோம்.  நம்மவருக்குப் பிடிச்ச உதவி.  உச்சிகால பூஜை முடிஞ்சு ஆரத்தி தரிசனம் ஆனதும் கோவிலை மதிய நேரத்துக்கு மூடிட்டுச் சாயந்திரம் 6 மணிக்குத் திறப்பாங்க.
 




நாங்களும் வீட்டுக்கு வந்துட்டு, ரெண்டே முக்காலுக்குக் கிளம்பி ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவிலுக்குப் போனோம்.  பொதுவா தீபாவளிக்கு மறுநாள் நடக்கும் அன்னக்கூட் விழாவை, ஞாயிறு ஆனதால் அன்றைக்கே வச்சுருக்காங்க.



அன்னக்கூட் தரிசனம் ஆச்சு.  புதுசா ஸ்ரீ நாராயண் &  நீல்கண்ட்  மஹராஜ் விக்ரஹங்கள்  அங்கங்கே வச்சுருக்காங்க. சூப்பர் !  எங்கே கிடைக்குதுன்னு விசாரிக்கணும். மூளையில் முடிச்சு ! 
ஒரு பக்கம் சின்ன மேடையில் பஜனைப்பாடல்கள் பாடிக்கிட்டு இருக்காங்க.  பாடகர் நமக்கு நெருங்கிய நண்பர்.  ! கொஞ்ச நேரம் இருந்து கேட்டுட்டுக் கிளம்பினோம்.   ரெண்டாம் நாள்  கோவில் நண்பர் மூலம் ப்ரஸாதம் & கேலண்டர்  கொடுத்தனுப்பினாங்க.
வீட்டுக்கு வந்து, நம்மவனுக்கு சாப்பாடு விளம்பிட்டு, நாங்களும் ஒரு டீ போட்டுக் குடிச்சுட்டு, நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு ஓடினோம். கோவர்தன பூஜா !


அர்ச்சகர் ட்யூட்டியில் நம்ம நண்பர்!  சேலத்துக்காரர்.  பொதுவா விசேஷ தின அபிஷேகம், ஆரத்தியெல்லாம் இவர் பொறுப்பில்தான் நடக்குது.  (இவருடைய கல்யாணம் இங்கே கோவிலில் நடந்தபோது, அம்மா அப்பா ஸ்தானத்துலே இருந்தது நாங்கதான் ! )

கோவர்தன கிரிக்கு முந்தியெல்லாம்  எல்லா பக்தர்களுமே  இனிப்ப வகைகளை சமர்ப்பிப்பதுபோல் இல்லாமல் இந்த வருஷம்,  கோவில் மக்களில் சிலர் மட்டும் படைச்சாங்க. ஆரத்தி பூஜை ஆச்சு ! 
அதுக்குப்பிறகு ஒரு நாடகம். இந்திரனுக்குப் பூஜை செய்யாமல், கோவர்தன மலைக்குப் பூஜை செய்யும்படி, கண்ணன் சொல்ல, அப்படியே ஆச்சு. கோபம் கொண்ட இந்திரன், கடும் மழையைப் பொழியச் செய்தது, ஊரே வெள்ளத்தில் மூழ்க, கோவர்தன மலையை அப்படியே கண்ணன் தன் சுண்டுவிரலால் தூக்கிப்பிடிச்சதும், அதனடியில் மக்களும், மாக்களும்,   ஆ நிரைகளும் கூடி நின்னு மழைக்கொடுமையில் இருந்து தப்பிச்சதும், கடைசியில்  இந்திரன் தோற்றுப்போய் கண்ணனிடன் மன்னிப்பு கேட்டு மழையை நிறுத்தியதும் நாடகமாய் நம் கண்முன். சும்மாச் சொல்லக்கூடாது....   பிள்ளைகள் நல்லாவே நடிச்சாங்க. கண்ணன், நம்ம தோழியின் இளைய மகன்தான் !

நாடகம் ஒரு  13 மினிட்தான். ஃபேஸ்புக்கில் ஒரே பதிவில் மூணு வீடியோ க்ளிப்ஸ் போட்டுருக்கேன். , நேரம் இருந்தால் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்


https://www.facebook.com/1309695969/videos/366982562338600/

https://www.facebook.com/1309695969/videos/366982562338600/

https://www.facebook.com/1309695969/videos/991020755302400/

நாடகம் முடிஞ்சதும்  மூலவர் சந்நிதியில் தாமோதர மாசத்துக்கான நெய்விளக்கு ஏற்றிட்டுப் ப்ரஸாதம் மட்டும் வாங்கிட்டுக் கிளம்பினோம்.  விருந்துக்குக் காத்திருக்க நேரமில்லை.!

ஓடு..... நம்ம புள்ளையார் கோவிலுக்கு.....



சின்ன அகல்கள் ஏற்றி வரிசையாக வச்சு (தீப வளி)பூஜை ஆரம்பிக்கும்போது  நேரம் நாம் ஆஜர்!  ஆரத்தி தரிசனம் ஆனதும்  கொஞ்சம் ப்ரஸாதவகைகளை ஸ்வீகரிச்சதும் கிளம்பி நேரா வீடுதான். 

தீபாவளிக்குக் கொஞ்சம் பட்டாசு கொளுத்தினால்தானே பண்டிகை பூர்த்தியாகும் இல்லையா ? 

மூணு வருஷத்துக்கு முன்னே வாங்கி வச்ச பட்டாஸ் பொட்டியில் இருந்து கொஞ்சமா ஒரு நாலண்ணம் மட்டும் எடுத்துக் கொளுத்தியாச்சு. இந்த வருஷம் பட்டாஸ் விற்பனை  யாரோ தனியார் மூலமாக.  நாம் வாங்கிக்கலை. 

முந்தியெல்லாம் ஐ ஃபாக்ஸ் டேன்னு நவம்பர் 5 ஆம் தேதி விழா சமயம், முதல் ஐந்து நாட்களுக்குப் பட்டாஸ் விற்பனை உண்டு.  அதுவும் பயங்கர சப்தத்தோடு வெடிக்கும் வெடிகளுக்கெல்லாம் இங்கே அனுமதி இல்லை. நோ ஓசை. ஒளி மட்டுமே ! இப்போ ரெண்டு வருஷமா, இந்த  Guy Fawkes Day கொண்டாட்டமா  சிட்டிக்கவுன்ஸில் நடத்தும்  Fireworks display நிறுத்திட்டாங்க.  அதனால் பட்டாஸ் விற்பனை முன்புபோல் இல்லை !

யாராக்கும் இந்த கைஃபாக்ஸ் ? வெள்ளையர்களின் நரகாசுரன் !  விவரம் தெரிஞ்சுக்கணுமுன்னா..... உங்கள் துளசிதளத்தில் பாருங்க. இதோ சுட்டி !

https://thulasidhalam.blogspot.com/2012/11/blog-post_5.html

ஆ.....  தீபாவளி ஓட்டத்தோடு, இடும்பியின் தீபாவளி முடிஞ்சதுன்னு யாரும் நினைச்சுறாதீங்க..... நம்ம வீட்டுலே  தீபாவளி அடுத்த வாரம்தான் ! 
முக்கிய புள்ளி, ஊருக்குப்போயிருக்கு, கேட்டோ !



8 comments:

said...

கொண்டாட்டம் அருமை.

said...

அருமை சிறப்பு அற்புதம்
தங்களின் தீவாளி கொண்டாட்டம் ப்ரமாதம்

said...

ஓட்டமும் கொண்டாட்டங்களும் நன்று. தீபாவளி - ஒலியில்லாமல் ஒளியுடன்! நல்லது.

தொடரட்டும் உங்கள் கொண்ட்டாட்டம்.

said...

வாங்க ஸ்ரீராம்,

நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

வகைவகையாக் கொண்டாடியாச் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஒலியால் செல்லங்களுக்குக் கஷ்டம் என்பதே காரணம் !

பார்த்து அனுபவிக்க ஒளி போதாதா என்ன ?

இன்னும் கொண்டாட்டம் முடியவில்லை என்று தெரிவித்துக்கொண்டு..... :-)

said...

தீபாவளி கொண்டாட்டம், இறை வழிபாடு, பட்டாசு என அமர்க்களம்.

said...

வாங்க மாதேவி,

அட்டகாசம் பண்ணிட்டோம், இல்லை :-)