Friday, February 07, 2020

ஜெய் பவானி !! ( பயணத்தொடர் 2020 பகுதி 11 )

வளாகத்துக்குள் நுழையும்போதே வாசல்  முகப்பில்  முரசொலி !  நுழைவுக்கட்டணம் அஞ்சே ரூபாய்!  மாநில அரசின் பொறுப்பில் இருக்கு.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.



பின்பக்கம் இருக்கும் தோட்டத்தைச் சுத்தியே இருக்கும் ஹால்களில்  சிவாஜி மஹாராஜ் அவர்களின்  உடை,  வாள், மற்றும்  போரில் பயன் படுத்திய ஆயுதங்கள், பொருட்கள் இப்படி......
நானும் பார்க்கிறேன்.... படம் எடுக்க, வீடியோ எடுக்க அனுமதி இல்லைன்ற இடங்களை  வலையில், இல்லே யூட்யூபில் தேடினால்  கிடைச்சுருது. அவுங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைச்சதுன்னு தெரியலையே....   அஃபிஸியல் வீடியோவோ என்னமோ?  எதாக இருந்தாலும்  வலையேத்தியவருக்கு நம் நன்றிகள் !

இப்பக்கூட சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அவர்களின்  ம்யூஸியம் வீடியோ க்ளிப் ஒன்னு , எட்டரை நிமிட் நம்ம பதிவில் ஷேர் பண்ணி இருக்கேன். விருப்பமும் நேரமும் இருந்தால் பார்க்கலாம்...

ரொம்பப் பெரிய ம்யூஸியம் இல்லை. ஆனால் சரித்திர முக்கியத்வம் உள்ளது.  ஒரு அரை மணி நேரத்தில்  பார்க்க முடிஞ்சது.

வாசலில் ஜிவாஜி மஹாலேவின் சிலை.... நன்றி சொல்லும்  வகையில் வச்சுருக்காங்க. இவர் ஷிவாஜி மஹாராஜாவின் மெய்க்காப்பாளர் !  ப்ரதாப்கர் போரில் அஃப்ஸல்கான் நயவஞ்சகமாக ஷிவாஜி மஹாராஜாவைக் கொல்லத் தீர்மானம்  செஞ்சு,  அவரைக் கட்டிப்பிடிச்சுத் தழுவும்போது, அதுவரை மறைச்சு வச்சுருந்த  நைஸாகப் பிச்சுவாவை எடுத்து ராஜாவைக் குத்தறான். ஏற்கெனவே அஃப்ஸல்கானை நம்ப முடியாது என்றபடியால், சந்திப்புக்குப் போகும்போது  சங்கிலிக் கவசம் போட்டுக்கிட்டு, அதுக்குமேலே உடைகளை அணிஞ்சுக்கிட்டுப்போன ஷிவாஜி மஹாராஜா,  கவசம் காரணம் தப்பியதுடன், தன் கையில் மறைச்சு மாட்டியிருந்த புலிநகத்தால்  அஃப்ஸல்கானின் வயித்தைக் கிழிச்சு அவனை சாமிகிட்டே  அனுப்பிடறார்! (இந்த அஃப்ஸல்கான், ஔரங்கஸேபின் ஆணைப்படி ஏற்கெனவே  அரசரின் மூத்த மகன் சம்பாஜியைச் சித்ரவதை செஞ்சு  கொன்றவன். ) இந்த சம்பவத்துலே  அரசரின்   முக்கிய மெய்க்காப்பாளர்தான் ஜிவாஜி மஹாலே!

சரித்திரத்துக்குள்ளே புகுந்து பார்த்தால்  எல்லாம் ரத்தக்களறிதான். 
டிசம்பர் மாசம் குளிர்காலமுன்னு சொன்னாலும்.....  நல்ல சூடுதான்.   ஊமை வெயில்தானேன்னு இருக்க முடியாது. வேர்த்து விறுவிறுத்துத்தான் போகுது.  இப்படி அலையவேணாம். பேசாம  ஹொட்டேலுக்குப்போய் ரெஸ்ட் எடுக்கலாமுன்னார் 'நம்மவர்'.  அதேபோல  திரும்பிப்போய் ட்ராவல் வண்டியைத் திருப்பி அனுப்பிட்டோம்.
கொஞ்ச நேரம் வலை மேயல், தூக்கம் இப்படிப் போயிருச்சு.  சாயங்காலம்   ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பைப் பார்க்க வேணாமா? சின்னதா ஒரு வாக் போயிட்டு, அப்படியே கீழே தோட்டத்தையும் பார்த்துட்டு வந்தால் ஆச்சுன்னு  நினைக்கும்போதே  கீழே பேண்ட் வாத்ய சத்தம். ஜன்னலில் எட்டிப் பார்த்தால் அலங்காரக்குடைகள் !  மணி ஆறரைதான் ஆகுது. அதுக்குள்ளேயான்னு கீழே போனோம்.

அலங்கரிச்ச வெள்ளைக்குதிரை மேலே மாப்பிள்ளைப்பையர், ஒரு சின்னக்குழந்தையோடு உக்கார்ந்துருக்கார்.  ஜானவாசக்காரில் நண்டும் சிண்டுமா ஏறி மாப்பிள்ளையைச் சூழ்ந்துக்கறாப்போல.....  குதிரையில் ஏறி உக்கார்ந்துக்கறதும் வழக்கம் போல!  மாப்பிள்ளைத் தோழன் :-)

பாண்டு வாத்ய கோஷ்டியிலேயே ஒருத்தர் நடுவிலே நின்னு ஆடிக்கிட்டு இருக்கார். குதிரைக்காரப் பையர்,  வேகவச்ச மக்காச்சோளமோ என்னவோ ஒரு பேஸினில்  வச்சுக் குதிரைக்கு ஊட்டிவிட்டுக்கிட்டு இருக்கார்.  நல்லது. பசியோடு இருக்கவேணாம்.... நடக்கத்தெம்பு வேணாமா அதுக்கும்? தயிர் சேர்த்த மக்காச்சோளமா என்ன...  ஸாலட்  ?

மாப்பிள்ளை ஒரு ஓரமாத்தான் நிக்கறார்.... மத்த சனம்தான் தாளத்துக்குத் தகுந்தாப்ல  ஆடிக்கிட்டு இருக்கு.  மாப்பிள்ளை கையில்  மொய்க்கவர்களைத் திணிச்சுக்கிட்டே இருக்காங்க.  அதை அப்பப்ப, மாப்பிள்ளையின் சொந்தக்கார அம்மா பக்கத்துலே நின்னு வாங்கி வச்சுக்கறாங்க.
மாப்பிள்ளைத் தோழர் ரொம்பக் களைச்சுப் போயிட்டார் போல.... அப்பப்பத் தூங்கி விழறார்.   கூடவே வரும் இன்னொருவர், குழந்தையைத் தூக்கப்போனால். சட்னு முழிப்பு வந்துருது. 'இறங்கமாட்டேன்...போ'......  பாவம்  மாப்பிள்ளை.... குழந்தையை (விழாமல் ) பார்த்துக்கும் பொறுப்பு இப்போவே வந்துருச்சு........  :-)

ஊர்வலம்  இங்கே முன்பக்கத்தோட்டத்தைச் சுத்திதான் வருமாம். நின்னு நின்னு, சனம் ஆடி ஆடி வர எப்படியும் ஒரு ஒன்னரை மணி நேரம் ஆகுமாம்.  அலங்காரக்குடைக்குள்    சரஞ்சரமா குட்டிபல்புகள் மின்னுது.  இதுக்கெல்லாம் பவர் சப்ளைன்னு ஊர்வலத்தின் கடைசியில் ஒரு ட்ரக் மெள்ள ஊர்ந்து வருது.  பெட்ரோமாக்ஸ் லைட்டெல்லாம் போயே போச் !!!!
அவுங்க கிளம்பி வருமுன் நாங்க கொஞ்சம் முன்னாலேயே நடந்துபோய்  ஊர்வலத்தின் ஆரம்பத்தை வேடிக்கைப் பார்த்துட்டு முன்பக்கத்துலே ஹொட்டேல் வாசலுக்கு நேரா இருக்கும் பகுதிக்குள் நுழைஞ்சு திரும்ப வர்றோம். அங்கே தனியா ஒரு நாலுபேர் குழு மேளம் அடிச்சுக்கிட்டு இருக்காங்க.

இந்தக் கல்யாணத்துக்கு இல்லையாம்.... வேறொரு விழாவாம்.  அதுக்குத்தான்னு சொன்னாங்க.
நீரூற்று அலங்காரம் பார்த்துட்டுத் திரும்பி வந்தால்  ஹொட்டேல் வரவேற்பில் திரும்ப ஒரே கூட்டம்.ரெண்டு பொட்டி நிறைய  ரோஸ் கலர்த்துணிகளை வச்சுக்கிட்டு,  வர்ற ஆண்களுக்கெல்லாம் பகடி கட்டிவிட்டுக்கிட்டு இருக்காங்க. விழாநாயகனோ என்னவோ, அவருக்கு மட்டும் ஜிலுஜிலுத் துணியில் !
என்ன விசேஷமுன்னு பார்த்தால் கல்யாணநாள் கொண்டாட்டமாம்.  எத்தனையாவது? நாலாவது !  ஹா............  முகத்தைத் திருப்பி  'நம்மவரை'ப் பார்த்தேன். நாப்பத்தியஞ்சு வருஷம் கடந்து ஆறு மாசம் கூடவே ஆகி இருக்கு.....  இந்த அளவுக்கு இல்லைன்னாலும்  சின்னதா கொண்டாடி இருக்கலாமுல்லே......
கீழ்தளத்தில் அந்தாண்டை இருக்கும் ஹாலில் விழா நடக்குதாம். இவுங்களோட விருந்தினர்களை வரவேற்க தனி மேசை, அலங்காரம், பூக்கள் இப்படி.....   வாவ்.....

நாஞ்சொல்லலை.... இந்த ஹொட்டேலில்  நம்மைப்போல் இருக்கும் மக்கள் தங்கி அதில் வரும் வருமானத்தை விட,  கல்யாணம் காட்சின்னு வாடகைக்கு விடுவதில்தான்  எக்கச்சக்க வருமானம் வருது !
பின்பக்கத்தோட்டத்தில் கல்யாணப்பந்தல் ஜிலுஜிலுன்னு அலங்காரத்தில் மின்னுது. அங்கேயும் விருந்தினர் கூட்டம்தான். பொண்ணு வீட்டுக்காரங்க போல! மாப்பிள்ளை வீட்டு மனுஷாள் எல்லாம்  இன்னும்  பராத்தில் ஆடிக்கிட்டு இருக்காங்க.

அறைக்குத் திரும்பிப்போய் கைவசம் இருந்த பழங்களையும், கொஞ்சம் தீனிகளையும் முடிச்சுட்டு சுமையைக் குறைத்தோம்.  நாளைக்குக் காலை செக்கவுட் செய்யறோமே....

எட்டரை மணி போல கீழே வாத்ய சப்தம் பலமாக் கேட்டதும் ஜன்னல் வழி பார்த்தால்  பராத் முடிஞ்சு திரும்பிட்டார் மாப்பிள்ளை.

கல்யாணவீட்டு சமாச்சாரத்தை விடமுடியலை. நாம் பக்கத்தில் இருந்து பார்த்ததைச் சொல்ல வேணாமோ?

எல்லாம் நல்லபடி நடக்கட்டும். நாம் கொஞ்சம் சீக்கிரம் தூங்கலாம்.  நாளைக்கு ஒரு பயணம் இருக்கே...
பொழுது விடிஞ்சது.  'த சொஸைட்டி' காலையில் ஆறேமுக்காலுக்கே  திறந்துடறாங்க!  இட்லி வடை கிடைச்சது.  முடிச்சுட்டு வந்து  மூட்டைமுடிச்சுக்களை எடுத்துக்கிட்டு அறையைக் காலி பண்ணறோம்.  வரவேற்பில் இருந்த அஷ்வினி, இந்த மூணு நாட்களில் நமக்கு ரொம்பவே ஃப்ரெண்ட் ஆயாச்சு.  தனி செல்நம்பர் கொடுத்து என்ன உதவி வேணுமுன்னாலும் கூப்பிடச் சொன்னாங்க.

இந்த ஹொட்டேலில் மரச்சாமான்கள், மரச்சிற்பங்கள்  எல்லாம் ரொம்பவே அழகு! நம்ம கார்த்திக்ஸ்வாமி கூட இருக்கார்!
ஏழே முக்காலுக்குச் சொன்ன வண்டி கொஞ்சம் லேட்டா வந்து, கிளம்பிப்போறோம். நம்ம நதீம்தான் டிரைவர்.  ஔரங்காபாதில் இருந்து ஒரு நூத்தியொரு கிமீதூரம்தான்.  மூணரை மணி நேரமாகுமுன்னு கூகுள்  சொன்னதால்,  கூட ஒரு மணி நேரம் கூட்டிக்கணும்தான். இந்தியச் சாலைகளும் போக்குவரத்தும் அந்தப்படிக்கு இருக்கே....

போற வழியெல்லாம்   அங்கங்கே  கூம்பு கோபுரத்தோடு சின்னச் சின்னக்கோவில்கள், புத்தர் சிலை, நம்ம ஆஞ்சின்னு  கண்ணில் பட்டுக்கிட்டே வருது.  யோசிச்சு அங்கெ ஒன்னும், இங்கெ ஒன்னுமா க்ளிக்கறேன்.

சிக்கனம் தேவை. ரெண்டு பவர் பேங்க் வச்சுருந்தும்  பயனில்லை. முந்தாநாள் எல்லோரா குகைகளைப் பார்த்து முடிச்சுட்டுக் கிளம்பும்போது  செல்லில் பேட்டரி காலி.  அதான் அந்த எல்லோரா ரிஸார்ட்டில் படங்கள் எடுக்க முடியலை.  பவர்பேங்க்தான் இருக்கேன்னா.... அதை வண்டியில் வச்சுட்டு வந்துருந்தார் 'நம்மவர்'.
புடவைக்கடையில் படம் எடுக்க பவர்பேங்கை இணைச்சால் சுத்தம்.... ரெண்டும் சரி இல்லை...ப்ச்.  என்னவோ போங்க......  புதுசுபுதுசா வாங்கிக்கிட்டே இருக்கணும் போல்....

இதெல்லாம் நாயர் பிடிச்ச புலிவால்......  இப்ப ரெண்டையும் ஃபுல்லா சார்ஜ் பண்ணித்தான் கொண்டு வந்துருக்கோம் என்றாலும்கூட.... நம்பமுடியாது....  அதிலும் இப்போப் போற இடம் என்  வாழ்நாள் ஆசைகளில் ஒன்னு!

தொடரும்......... :-)

7 comments:

said...

சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அவர்களின் ம்யூஸியம் ...


நல்லா இருக்கு மா...

ஆகா நாலு நாள் கல்யாணமா சூப்பர்...

இப்படியே பின்னாடியே போய் மத்த பதிவுகளை வாசித்து விட்டு வரேன்..

said...

அடுத்தெங்கு என்ற
ஆர்வத்துடன்,
இடையில் இன்னும் இரண்டு நாளிருக்கே
என்ற ஏக்கத்துடன்.

said...

நாலு வருடம் கழிந்ததற்கும் கொண்டாட்டம்! :) உங்கள் கேள்வி நல்ல கேள்வி!

சிவாஜி அருங்காட்சியகம் - நன்றி.

வழமை போல படங்கள் சிறப்பு.

அடுத்ததாக போகும் இடம் - என்னவென்று தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

பவர் பேங்க், பேட்டரி - இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்! நிறைய படங்கள் எடுக்கும்போது தீர்ந்து போய்விடுகிறது.

said...

வாங்க அனுப்ரேம்,

ஹாஹா... நாலு நாள் வெவ்வேற கல்யாணங்கள் :-)

said...

வாங்க விஸ்வநாத்,


நன்றி ! ஏக்கம் தீர்ந்துருக்குமே :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பயணத்துலே முக்கியமான நிகழ்வுகளைப் படம் எடுக்கும்போது, சரியா மண்டையைப் போடும் பேட்டரியை என்ன செய்யலாம்..... போனா வராத சமாச்சாரங்கள் இல்லையோ.... லாங் லைஃப்ன்னா அரை மணி நேரமோ என்னவோ....

said...

மியூசியம்,கல்யாணம் களைகட்டுகிறது.