Friday, December 15, 2017

காணாமப்போன ஜோடி .... (இந்திய மண்ணில் பயணம் 89)

வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமா எழுந்ததால்  முதல் வேலையா பேக்கிங் முடிச்சு, குளிச்சு  ரெடி ஆனதும்  கீழே ரெஸ்ட்டாரண்டில்  காலை உணவுக்குப் போனோம்.  வழக்கமான இட்லி வடையுடன், கொஞ்சம் வெண்பொங்கலும் கிச்சடியும் எனக்கு!

எட்டரைக்கு ஸ்தலம் விட்டாச்.  ஆனாலும் அடுத்த ரெண்டாம் நிமிட் ஒரு ஸ்டாப்பிங் போடச் சொன்னேன்.  நம்மவருக்கு வரதராஜர் தரிசனம் கிடைக்கட்டுமே!   பத்து நிமிட்டில்  ஸேவை சாதிச்சு, எனக்கொரு தாமரை மொட்டும், நம்மவருக்குக் கொஞ்சம் துளசியும் பிரஸாதமாக் கொடுத்தார்  பெருமாள்!
அடுத்த ஸ்டாப் நமக்குக் காஞ்சிபுரம்தான்!  இந்த வரதரை ஸேவிச்ச கையோடு  காஞ்சி வரதரையும் ஸேவிக்கக் கிடைச்சுருக்கு.

 போற வழியில்  இருந்த   ரெண்டு ஆஞ்சி, ஒரு குருபகவான் கோவில் !
கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவா போறோமுன்னதுக்கு,   அது கொஞ்சம்  அதிக தூரம்.  170 கிமீ வரும். நாம் உத்தரமேரூர் வழியாப் போகலாமேன்னார் நம்மவர். ஹைய்யான்னு மனசு துள்ளுச்சு :-)

இங்கே  போனால் ஒன்பது பெருமாளை ஒரே இடத்தில் தரிசனம் செஞ்சுக்கலாம்!

முதல்முறை போனது   இங்கே!

அடுத்த முறையும் லபிச்சது.  விவரம் இங்கே :-)
இப்போ மூணாவது முறை!  ஏற்கெனவே  ரெண்டு முறை எழுதுனதால்.... இப்பவும் வேணாமேன்னு தோணுச்சு.   முதலில்  கோபுரவாசலைப் பார்த்தபடி இருக்கும் ஆஞ்சியையும், அப்புறம் மூலவரையும் ஸேவிச்சுட்டு, பட்டர்ஸ்வாமிகளிடம் அனுமதி வாங்கிக்கிட்டு  மேலே மாடிக்குப் போய் கொஞ்சம் க்ளிக்ஸ்.
எனக்குப் பிடிச்ச கோவில்களில் இதுவும் ஒன்னு!  அழகான மூலவர்கள்!  நாராயணா.... நாராயணா.... நவநாராயணா.....




அடுத்தாப்லே சிவன் கோவில் ஒன்னு இருக்கு. அங்கே போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்து  கீழே வரும்போது  சட்னு மனசில் இருந்து சிவன் ஒளிஞ்சுக்கிட்டார்.  வேளை வரலை. அவர் கூப்பிடும்போதுதான் கிடைக்கும்.
மேலே படம்:  இந்தக்கோவிலாகத்தான் இருக்கும்போல !

ஆளுக்கொரு இளநீர் வாங்கிக் குடிச்சுட்டுக் கிளம்பறோம். சுற்றுச்சூழல் மாசு  அதிகமாவதால்  பட்டாஸ் வெடிப்பதை, இந்த தீபாவளிக்குத்  தடை செய்யணும் என்ற கோரிக்கை பதாகையுடன் பள்ளிக்கூட மாணவர்கள் ஊர்வலம் போறாங்க.  இன்னும் ரெண்டே நாளில் தீபாவளி.   அதுக்குள்ளே   தடை செஞ்சுருவாங்களா என்ன?  ஒரு விழிப்புணர்வு வரட்டுமே...

நம்ம பதிவுலக நண்பர்களிடமிருந்து, (துளசிதளம் பயணக்கதை(!)களை வாசிக்கும் அன்பர்கள்)  சில சமயம் தனிமடலில் நாம் தங்கும் இடங்கள்,  மற்ற சமாச்சாரங்கள், குறிப்பா நாம் பயன்படுத்தும் ட்ராவல் சர்வீஸ், அதுலேயும்  முக்கியமா நம்ம சீனிவாசன் பத்தியெல்லாம்  விசாரிப்பாங்க. எனக்குத் தெரிஞ்ச விவரங்களை அனுப்பி வைப்பேன்.  நாலு பேருக்குப் பயன்படுதுன்னா நமக்கும் நல்லது இல்லையோ!

அப்படித்தான் ஒரு தோழி,  காஞ்சிபுரம் சமாச்சாரங்களைக் கேட்டுருந்தாங்க. நம்ம சீனிவாசனே ஓட்டுனராக் கிடைச்சா நல்லதுன்னும்....   தகவல் அனுப்பி அதே போல  ஆச்சு. அவுங்க ஒரு முக்கியமான இடத்தைப் பற்றிச் சொல்லி  அங்கே போனதாகவும்,  நம்ம சீனிவாசன் நாம் ஏற்கெனவே போன கோவில்களுக்கு  நல்லமுறையில் கூட்டிப்போய் வந்ததாவும் மடல் அனுப்பி இருந்தாங்க.  மனசுக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு.

அவுங்க போன அந்த முக்கியமான கோவிலுக்கு நாங்க இன்னும் போகலை. இப்ப அங்கேதான் போறோம்.  ஏற்கெனவே  தோழி குடும்பத்தை அங்கே கூட்டிப்போன அனுபவத்தால் அடுத்த அரைமணி நேரத்துலே 'டான்'ன்னு நம்மை அங்கே கொண்டுபோயிட்டார் சீனிவாசன்.

சாலைக்கிணறு!
நம்ம ராமானுஜர் இருக்காரு பாருங்க.... அவருக்கு இங்கே ஒரு கோவில்/சந்நிதி இருக்கு!  அப்படி என்ன விசேஷம் இங்கே?
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து வளர்ந்த நம்ம ராமானுஜருக்கு அந்தக் கால வழக்கம்போல் பதினாறு வயசில் கல்யாணம். ரொம்பவே சந்தோஷப்பட்டுக்க முடியாம ஒரு சம்பவம் இதுக்கடுத்த மாசமே நடந்துருது.  ராமானுஜரின் தந்தை பெருமாள்கிட்டே போயிடறார்.  ப்ச்....

மனசு கஷ்டமா இருக்கேன்னு,  அடுத்தாப்லே  இருவது சொச்சம் மைல் தூரத்தில் இருக்கும் ஊரான  காஞ்சிபுரத்துக்கு ஜாகை மாத்திக்கிட்டு  (35 கிமீ) போறாங்க.  அங்கே  யாதவப்ரகாசர்னு   கல்விகேள்விகளில் சிறந்த ஒரு  அறிஞர் இருக்கார். அவர்கிட்டே மாணவராப் போய்ச் சேர்ந்துக்கிட்டார் ராமானுஜர்.

கற்பூரபுத்தி!  எதையும்   ஒரு முறை சொல்லித்தந்தால் போதும்! சரசரன்னு பத்திக்கும் அறிவு!  குருவுக்கு மிஞ்சின ஞானம் வேற!   என்ன இருந்தாலும் ஆதிசேஷனின் அவதாரம் ஆச்சே!  குரு தப்பான விளக்கம் சொல்லும்போது,  அதைத் திருத்திச் சொல்லும் சுபாவம்.  இதையெல்லாம் கவனிச்சு வந்த குருவுக்கு, லேசா மாணவன் மீது பொறாமை ஆரம்பிச்சு, நாளா வட்டத்தில் பத்தியெரியுது.  தனக்கு மிஞ்சுனவனைத் தீர்த்துக்கட்டணுமுன்ற ஆவேசம் வந்துருது.  பொறாமை வந்துட்டால்.... சொந்த புத்தி எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு  போயிருதுல்லே.....ப்ச்.

திட்டம் தீட்டறார் குரு.  மாணவர்களிடம் நாமெல்லாம் சுற்றுலா போறோம், கங்கைக் கரைக்குன்னார். (ஸ்கூல் எக்ஸ்கர்ஷன்!) ஐடியா என்னன்னா.... போற வழியில் கொன்னு போட்டுறணும். அந்தப் பாவம் போக, கங்கைதான் இருக்கே.... அதுலே முங்கி பாவத்தைக் கரைச்சுக்கணும்.  ரொம்ப ஸிம்பிள். டு இன் ஒன் !

நல்லாப் படிக்கிற புள்ளைகளைப் பார்த்தா.... வகுப்பிலேயே சிலருக்குப் பிடிக்காது. அதுக்கும் பொறாமைதான் காரணம்.  டீச்சருக்கு ஜால்ரா போடும்  பசங்களும் வகுப்புலே இருப்பதும் வழக்கம்தான்.  (இதெல்லாம் நீங்களும் பள்ளிக்கூட நாட்களில் பார்த்துருப்பீங்கதானே?)

ஸ்டடி டூர்னு  காசிக்குக் கிளம்பிப் போறாங்க.  அந்தக் காலத்தில் எல்லாம் நடராஜா சர்வீஸ்தான்.  காட்டு வழியில்   போகணும்.  திரும்பி வர்றது அவரவர் ஆயுஸைப் பொறுத்து.  அப்பெல்லாம் காசி போய் வந்தவங்களை  ஊரே காலில் விழுந்து கும்பிடும் காலமா இருந்துருக்கு!

விந்தியமலையைக் கடந்து போக வேணும்.  மலையாண்டை போகும் போது, திட்டம் நிறைவேத்த சரியான இடம் அதுன்னு குரு நினைக்கிறார்.  அதை பக்காவா முடிப்பதைப் பத்தி, அவருக்குன்னு நம்பிக்கையா  இருக்கும் சிலரிடம் பேசும்போது,  ராமானுஜனின் சிநேகித/உறவுக்காரப் பையனுக்கு  அரசல்புரசலா விஷயம் காதுலே விழுந்துருது.  ஓடிப்போய்  ராமானுஜன் காதுலே போட்டு வைக்கிறான்.  "பேசாம நீ திரும்பிப்போயிரு. எங்ககூட வரவேணாம். வந்தால் உன் உயிருக்கு ஆபத்து "

நம்ம ராமானுஜரும் அப்போ ஒரு சின்னப்பையந்தானே....  பயம் வந்துருது.  காட்டுக்குள்ளே  கால்போன போக்கிலே ஓட ஆரம்பிச்சுட்டார். வழி தவறிப்போச்சு. பயம் அதிகம் ஆச்சு.

அப்போ ஒரு வேடுவ தம்பதிகள்  அங்கே வர்றாங்க. சின்னப்பையனிடம் என்ன ஏதுன்னு விசாரிக்க,  தனக்குக் காஞ்சிபுரம் போகணுமுன்னு  சொல்றார்.  "அடடா.... இது சரியான வழி இல்லையே....  எங்ககூட வா....நாங்க அந்தப் பக்கம்தான் போறோம்".

அவுங்க கூடவே நடந்து போகும்போது, பொழுது சாஞ்சு இருட்டாகிருது.  தண்ணிதாகம் வேற....    வேடர் சொல்றார், இங்கே ஒரு கிணறு இருக்கு. இப்ப இருட்டிப்போச்சு. பொழுது விடிஞ்சதும் அந்தக் கிணத்துத் தண்ணியை மொண்டு குடிக்கலாம்.  ராத்திரியில் கிணத்தாண்டை போகக்கூடாதுன்னு  சாஸ்த்திரம்  சொல்லுது.     ராத்ரி பொழுது  இங்கே தங்கிக்கலாமுன்னதும்  ஒரு  மரத்தாண்டை படுத்துத் தூங்கிடறாங்க. காலையில் கண்ணைத் தொறந்து பார்த்தா....  அந்தக் காடே ஏதோ ஊர் போல இருக்கு!

வேடுவத்தம்பதிகளைக் காணோம்.  'ஐயா, அம்மா எங்கே இருக்கீங்க?'ன்னு  கூப்புட்டுப் பார்க்கறார்.  எங்கே போயிட்டாங்கன்னு  தெரியலையே...    ராத்ரி வேடர் கை காமிச்ச திசையில் பார்த்தால் கிணறு ஒன்னு இருக்கு. அங்கே  போய்ப் பார்த்தால்  தளும்பி நிக்குது தண்ணீர்.  குடிச்சுப் பார்த்தால் அப்படி ஒரு ருசி!

அப்ப அங்கே குடத்தோடு  வந்த பெண்களிடம், இது என்ன ஊர்னு கேட்டதும்,  காஞ்சிபுரம்னு  சொல்றாங்க.  இவருக்கு ஒரே ஆச்சரியம்!  நேத்து மதியம் விந்தியமலையாண்டை இருந்தோம். அங்கே போய்ச் சேரவே  ரொம்பநாள் ஆச்சு!  (ஒரு மாசம்?  நடை இல்லையோ?) இப்பப் பார்த்தா காஞ்சிபுரத்துக்கே வந்துட்டோமுன்னா எப்படி?   நம்மை இங்கே கூட்டி வந்த அந்த வேடுவத்         தம்பதிகள் எங்கே?  மெள்ளப் புரியுது....   பெருமாளும் தாயாருமே இப்படி  நம்மைக் கூட்டி வந்துருக்காங்கன்னு....  ஹைய்யோ  என் பெருமாளே!

சட்னு அங்கிருந்த குடம் ஒன்னில் அந்தக் கிணத்துத் தண்ணீரை மொண்டு எடுத்துக்கிட்டுக் கோவிலுக்கு ஓடறார்.  வரதராஜன் அங்கே சிரிச்சுக்கிட்டு நிக்கறார்.....   பார்த்தா... அதே  வேடுவனின் முகம்! (மச்சம் வச்சுக்கலை போல!) குடத்துத் தண்ணீரால் திருமஞ்சனம் செய்ததும் பெருமாள் முகத்தில் புன்னகை!

அப்போ முதல் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ய இந்தக் கிணத்துத் தண்ணிதானாம்!    இப்பவும் கூட....

விந்தியமலையடிவாரத்துலே இருந்த யாதவப்ரகாசரும்  மற்ற மாணவர்களும் ராமானுஜனைத் தேடிப் பார்த்துட்டு (கொல்லணுமே!)   'காணோம். காட்டு மிருகம் எதாவது அடிச்சுத் தின்னுருக்கும். நல்லவேளை கொலைப்பழி நமக்கில்லை'ன்னு  காசியாத்திரையைத் தொடர்ந்து கங்கைக்குப்போய், கர்மா எல்லாம் முடிச்சுப் பழையபடி பொடி நடையில்  காஞ்சிக்குத் திரும்பி வர்றாங்க.

இதுக்கே நிறைய  மாசங்கள் ஆகி இருக்கும். சில வருசங்களோ?

வந்து பார்த்தால் 'மிருகம் கொன்னு போட்ட'  ராமானுஜன்  முன்னைக் காட்டிலும் தேஜஸோடும், அறிவோடும் பெருமாளுக்கு உகந்தவரா இருக்கார்!
யாதவப்ரகாசர், தன் தப்பை உணர்ந்து  ராமானுஜர் காலடியில் விழுந்து கும்பிட்டு, அவருக்கு சீடனானது தனிக் கதை!

மேற்படி சமாச்சாரமெல்லாம் சமீபத்துலே டிவியில் வந்த ராமானுஜரில் இருந்துருக்குமுன்னு நினைக்கிறேன். எனக்குப் பார்க்க இங்கே ச்சான்ஸ் இல்லை.
பெருமாளும் தாயாருமே கூட்டி வந்து காமிச்ச கிணத்தாண்டை ராமானுஜருக்கு  ஒரு கோவில் கட்டிட்டாங்க. இங்கேதான் நாம் வந்துருக்கோம். இங்கிருந்து பார்த்தால் காஞ்சி வரதனின்  கோவில் கோபுரம் தெரியுமாம். நமக்கு அதிர்ஷ்டம் இல்லை.... ஒரே மேகமூட்டம்....  :-(

 கோவிலுக்கு முன்னால்  கொஞ்சதூரத்தில் ஒரு குளம். தாமரைக்குளம். இலைகள் மண்டிக்கிடக்கு. பூவைக் காணோம். கிட்டக்கப்போய் பார்த்திருந்தால் கண்ணில் பட்டுருக்குமோ?
 சின்ன சுத்துச்சுவரோடு இருக்கு இந்தக் கோவில். கம்பி கேட்   ஒன்னும் காணோம்.  வளாகத்தின் நடுவில்   முன் பக்கம் ஒரு பதினாறுகால் மண்டபத்தோடு  கூடிய சந்நிதி.  மண்டபத்துலே  ரெண்டு பக்கமும் சுவர் எழுப்பி இருக்காங்க. ஆதியில் இல்லைன்னு நினைக்கிறேன்.  அந்த சுவர்கள்தான் இப்போ  நோட்டீஸ் போர்டாவும் இருக்கு :-)



கருவறையில் நம்ம  குரு  ஸ்ரீ ராமானுஜர் !  கும்பிட்டுக்கிட்டோம்.

  கோவிலுக்கு எதிர்வாடையில்  அந்தக் கிணறு!  அதுக்கும் உயரமா சுவர் எழுப்பிக் கட்டி இருக்காங்க.  சாலைக்கிணறு!  அதுக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டுக் கிளம்பினோம்.


'ஸ்ரீராமானுஜர் ஆயிரம்'னு  இவருடைய ஆயிரத்தாவது  வருஷத்தைக்  கொண்டாடிக்கிட்டு இருக்கும் இந்த சமயம், இங்கே வர்றதுக்கு  நமக்கொரு கொடுப்பினை இருந்துருக்கு, பாருங்க!


தொடரும்.......  :-)


10 comments:

said...

தகுந்த நேரத்தில் நமக்கு உதவும் நிறைய பேர்களை கடவுள் என்று நாம் நினைப்பதில்லை / உணர்வதில்லை!

said...

இராமானுசரையும் சாலைக்கிணறையும் தரிசனம் செய்துகொண்டேன். காலை 11:30 மணிக்கு உங்கள் தரிசனம் ஆச்சா? தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

நான் செல்லாத கோயில்கள். அடுத்தடுத்து செல்லும்போது அவசியம் இப்பகுதிக்குச் செல்வேன்.

said...

உடன் பயணித்தமாதிரி இருக்கு. சர்க்கரை பொங்கல் போட்டோ மிஸ்ஸிங்க்

said...

வாங்க ஸ்ரீராம்.

தெய்வம் மனுஷ்ய ரூபேணே என்பது உண்மை! மனுஷ்யர்கள் மூலமா உதவி செய்வது உண்டு. ஆனால் நம்ம ராமானுஜருக்கு அந்த தெய்வமே மனுஷ்ய ரூபம் எடுத்து வந்து உதவியது... அற்புதம் இல்லையோ!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ராமானுஜர் அங்கே கடிகாரம் வச்சுருக்கார் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ராஜி.


சக்கரைப்பொங்கல் இல்லைப்பா. வெறும் வெண் பொங்கல்தான் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

காஞ்சி செல்லும்போது நினைவில் வச்சுக்குங்க !