Friday, October 20, 2017

உண்மையாவே தேவுடு காக்க வச்சுட்டான்! (இந்திய மண்ணில் பயணம் 65)

இவ்ளோ கிட்டேன்னு தெரியாமப்போச்சே.....    ஒன்னே முக்காலுக்குக் கிளம்பி  அம்பதே நிமிட்லெ கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்துருந்தோம்.  இன்னும் கொஞ்சம் லேட்டாக் கிளம்பி இருக்கலாம், இல்லே?

அங்கேயும்தான் கோவில் மூடியாச்சு.  ராமானுஜம் வீட்டுலேயே உக்கார்ந்துருக்க முடியுமா?   அங்கே உக்கார்றதுக்குப் பதிலா இங்கே உக்கார்ந்தால் ஆச்சுன்னு நம்மவர்  ஒரு கட்டைச் சுவர் மேல் உக்காந்தார்.

  வர்ற  வழியில் எருவாடி தாண்டித்தான் வரணும். பச்சபிள்ளை அம்மா தற்காகூட ஒன்னு பார்த்தேன்.
மனநிலை சரி இல்லாதவங்களை இங்கிருக்கும் ஒரு  பெரிய தர்காவுக்குக் கூட்டி வந்து மந்திரிப்பாங்கதானேன்னதுக்கு அது கீழக்கரையாண்டை இருக்கும் ஏர்வாடி, இது நெல்லை எருவாடின்னு  பதில் கிடைச்சது. பெயர் குழப்பம் வந்துருச்சே....
தோழியின் பெயர் கூட ஒரு இடத்தில் பார்த்தேன்!  வள்ளியூர் கடக்கும்போது எங்கே பார்த்தாலும் காற்றாலைகள் !  காத்தே இல்லாததால் எல்லாம் ச்சும்மா நின்னுக்கிட்டு இருக்கு.
ஆரல்வாய்மொழி  பெயர்ப்பலகை பார்த்ததும்.... ஹைய்யோ  எவ்ளோ அழகான பெயர்னு  இப்பவும் ஆச்சரியம்தான்!

திருவண்பரிசாரம் என்ற திருப்பதிசாரம் கோவிலுக்குத்தான்  வந்துருக்கோம்.
கோவிலுக்கான  அலங்கார வாசல் அழகு! கடந்து போய் கோவில் வாசலுக்குப் பக்கம் வண்டியை நிறுத்தினார் சீனிவாசன்.
எதிரில் ஒரு பெரிய குளம்! கோவில் புஷ்கரணி.  உள்ளே போக சின்னதா ஒரு மண்டபம். கருங்கல் இருக்கையும் கட்டைச்சுவருமா இருக்கு! மரத்தடியில் புள்ளையாரும் நாகர்களும் ஒரு பக்கம்.
நாலு மணிக்குக் கோவில் திறந்தவுடன்,  சாமி தரிசனம் முடிச்சுக்கிட்டு கிளம்பிடலாம்னு நினைப்பு.  ஆனால்....
குளம் நல்ல ஆழமாம். அறிவிப்பு போட்டுருக்காங்க.   சோமலெஷ்மி தீர்த்தம் ! திருவாழ்மார்பன் திருக்கோவில். லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பு!  நெஞ்சாங்கூட்டில்  வச்சுருக்கான்!!!
கோவிலின் வெளிப்பக்கத்தையும் குளத்தையும் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன்.  கோவில் மதில் கட்டுனது  1111 வது வருஷமாம்!  ஹைய்யோ!!!!
அப்போ ஏது இங்லிஷ் வருசக் கணக்கெல்லாம்?   ஹிந்து கேலண்டர் கணக்கோ?  ரேடியோவில் அந்தக் காலத்துலே சக வருஷம்னு ஆரம்பிப்பாங்களே   அப்படி இருக்குமோ......

கோவில் முகப்பு வாசல் கதவு நல்லா டிசைனா இருக்கே!

ஆடுகள் வந்து நம்மைக் கண்டுக்கிட்டுப் போச்சு :-)  ரொம்பநேரம் ஆனாப்லெ இருக்கேன்னு பார்த்தால் நாம் வந்து இன்னும் அரைமணிக்கூர் ஆகலையாக்கும்!

'நாகர்கோவில் போயிட்டு வரலாமா'ன்னார் நம்மவர்.

"நாகர்கோவிலா? எதுக்கு  அவ்ளோ தூரம்? "

'தூரமெல்லாம் இல்லை ஆறே கிமீதான்.  இங்கே ச்சும்மா உக்கார்ந்துருக்காம போயிட்டு வரலாமே'ன்னார்.

தேவுடு, நம்மை தேவுடு காக்க வைக்குதே!

"அங்கேயும் கோவில் மூடி இருக்காதா?  "

"நாலு மணிக்குத் திறந்தவுடன்,  தரிசனம் பண்ணிக்கிட்டு இங்கே வந்துடலாம்.... ஏற்கெனவே போன இடம்தான். "

அடுத்த காமணியில் நாகராஜா கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.
சட்னு என்னமோ விரிச்சோன்னு இருக்கேன்னு பார்த்தால்..... நிறைய மரங்களைக் காணோம். புதுசா ஒரு கட்டடம் முளைச்சுருக்கு.  கோவில் வாசலுக்குமுன்னால் இருக்கும் அரசமரத்தின் அடர்ந்த கிளைகளையும் இலைகளையும் காணோம்.  என்ன ஆச்சு?  அரசமரத்தடி புள்ளையாரும், நாகர்களும்  வெயில் காய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க....
அரசமர இலைகள்  பழுத்து நான் பார்த்ததே இல்லை.... பழுக்க ஆரம்பிச்சதுன்னு  கிளைகளைத் தரிச்சுப் போட்டுருக்காங்களாம். ஆனால் மரத்துக்கு உயிர் இருக்குன்னார் நம்மைப்போல் வெளித்திண்ணையில் உக்கார்ந்துருந்த  உள்ளூர்கார பக்தர்!
கோவில் நீளம் எவ்வளவோ  அதே நீளத்துக்கு நீண்டு கிடக்கும் திண்ணையில் அங்கங்கே மக்கள்ஸ் ஓய்வா கிடந்தும் அமர்ந்தும் காட்சி கொடுக்கறாங்க.
நானும் நானும்னு ஒரு சேவலும்!
கோவிலுக்கு பிரதான வாசலா ரெண்டு இருக்கு. ஒன்னு அனந்த க்ருஷ்ணன் சந்நிதிக்கும், இன்னொன்னு நாகராஜா  சந்நிதிக்குமா!  திண்ணை பொது :-)
வேடிக்கையும் , க்ளிக்ஸும், பேச்சுமாக் கொஞ்சம் நேரத்தைக் கடத்திட்டு,  '  திண்ணை  பக்தரிடம்'  கோவில் எத்தனை மணிக்குத் திறப்பாங்கன்னு (சின்னப்பேச்சு)கேட்டு வச்சால் அஞ்சு மணிக்காம்!

போச்சுரா....   இப்ப மணி மூணரை கூட ஆகலை. ஒன்னரை மணி நேரம் காக்க இயலாது.....

நம்மவரும், 'ஏற்கெனவே 'பார்த்த' கோவில்தானே.......   எழுதப்போறியா என்ன?'ன்னார்!  இல்லைன்னேன்.

அப்போ எழுதுனது போதும்தானே?  



 அப்ப  அந்தப் பக்கம் என்னன்னு போய்ப் பார்த்துட்டுக் கிளம்பிடலாம்.  அங்கே நாலுமணிக்குக் கோவில் திறந்துருவாங்கன்னார்.

அதுவுஞ்சரித்தான்னு,  திண்ணையில் இருந்த ஜன்னல்வழியா உள்ளே நாலு க்ளிக்ஸ்.  சாமிக்கும் நாம் வந்து போனது  தெரிஞ்சுரும் :-)
நாகராஜா சந்நிதி வாசலுக்கு முன்னால் படுசுத்தமா இருக்கும் நாகதீர்த்தத்தையொட்டி இன்னொரு வாசல் இருக்கு.... ஆனால் போன முறை அதுக்குள்ளே போன நினைவு இல்லைன்னு திறந்துருந்த  அந்த கேட்டுக்குள்   நுழைஞ்சோம்.

முகப்பு வளைவில் சிவன் குடும்பத்தினர் எல்லோரும் காட்சி கொடுக்கறாங்க!  அந்தப்பக்கம் விஷ்ணு, இந்தப் பக்கம் சிவன். நடுவிலே ரெண்டு பேருக்கும் பொதுவா  இருக்கும் நாகராஜன்! 

ஒருத்தர்  படுக்கையாப் பயன்படுத்தறார். இன்னொருத்தர்  கழுத்து, காலு, இடுப்புன்னு  நகைநட்டாக !  இவருடைய புள்ளைகளும் நாகத்தை வச்சு விளையாட்டுதான் :-)  இடுப்பு பெல்ட் கூட  பா......ம்.....பு   தான்   !!!!


(நல்ல நகை!  ஒருத்தனும் திருடமாட்டான் !!  கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறாங்களே....  திருட்டு எண்ணத்தோடு தொட்டதும் நாகமா மாறினால் எப்படி இருக்கும் !!) 



உள்ளே  கோவில் மண்டபம் போல் இல்லாம எதோ ஷெட் போட்டாப்லெ இருக்கு.  அங்கங்கே சில சந்நிதிகள்.
முதலில் புள்ளையார்! அவர்கூடவே  காவடி தூக்கிக்கிட்டு நிக்கும்....  முருகனா என்ன?

பாலமுருகனுக்கு ஒரு தனிச்சந்நிதி!

சுவரில் ராம லக்ஷ்மண சீதை!  தொட்டடுத்து 'வேண்டுதல் மாலை'யுடன் நம்ம ஆஞ்சி!  இவர் மட்டும் ஸ்பெஷல் போல.... கண்ணாடிப்பொட்டிக்குள் இருந்து காட்சி கொடுக்கறார்!

துர்கை சந்நிதி இருக்கு! இவள் தீர்த்த துர்கையாம்!  எதிரில் இருக்கும் நாகதீர்த்தக்குளத்தில் இருந்து ஆப்ட்ட சிலைன்னு கூடுதலா ஒரு தகவல்.  அம்மச்சின்னு உள்ளூர் மக்கள்ஸ்  பெயர் வச்சுருக்காங்க!   அம்மச்சி.... மாதா.... லோக மாதா....
சந்நிதிக்கு  முன்னால் ஒரு தீபஸ்தம்பம்!  சூப்பர்!
குழலூதும்  'வேணு கோபாலன்' சந்நிதி!

சுவத்துலே சிவப்புராணம் எழுதி வச்சுருக்காங்க.  நம்ம மாணிக்கவாசகர் அருளிச் செய்த பகுதிகள்!
திரும்பத் திண்ணைக்கு வந்து உக்கார்ந்தேன். என் தனிமையைப் பொறுக்கமாட்டாமல் துணைக்கு வந்த  சேவல்.  கையெட்டும் தூரத்தில்  உக்கார்ந்து அதுவும் வேடிக்கை பார்க்குது:-)
வேணுங்கற சமயம் இறக்கை இல்லாமலேயே பறக்கும் நேரம், இப்ப வேணாங்கறபோது அப்படியே கிணத்துலே போட்ட கல்லாட்டம் உக்கார்ந்துருக்கு....

நம்மவர் ஒரு தூணாண்டை இடம் பிடிச்சவர்,  சரிம்மா... கிளம்பலாம். மூணே முக்கால் ஆச்சு. அங்கே போய் நாலு மணிக்குக் கோவில் திறந்ததும் கும்பிட்டுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்ன்னார்.

இன்றைக்கு ராத்தங்கல் எங்கேன்னு ஒரு சின்ன யோசனை.  தின்னேலிக்கே போகலாமா.... இல்லை... கன்யாகுமரியா?

கன்யாகுமரிக்கே என் ஓட்டு:-)  வெறும் இருபத்தியொரு கிமீதான். ரொம்பக் கிட்டக்கத்தான் இருக்கு!

தின்னேலி போகணுமுன்னா ஒன்னரை மணி நேரம் ஆகுமே..... அதுவுமில்லாம நான் கன்யாகுமரியை மறந்துட்டேன்.... அவளைப் பார்க்கணும்....  இன்னொருக்கா....

அதே ஹொட்டேல் ஸீ வ்யூ. கடல் பார்க்கும் அறை !   செல்லில் கூப்பிட்டு  ரூம் புக் பண்ணியாச்.

காமணியில் திருப்பதிசாரம் வந்துட்டோம்.  கோவில் இன்னும் திறக்கலை.
அப்ப ஒரு பெரியவர் வந்து கோவில் வாசலாண்டை இருக்கும் கல்லில் உக்கார்ந்தார். உள்ளூர்க்காரர்.... அவரிடம் விசாரிக்கலாம்னு கேட்டால்  அஞ்சு மணிக்குத்தான்  கோவில் திறப்பாங்களாம்!
நமக்குத்தான் நேரங்காலம் தெரியாம  ஊருக்கு முன்னாலே வந்துருக்கோம். உள்ளூர்க்காரர் எதுக்கு  நாலே காலுக்கே வந்து தேவுடு காக்கறாராம்?

வீட்டுலே போரடிக்குதுன்னு  வந்துருப்பார். நம்மவர் 'டான்'னு பதில் கொடுத்தார்:-)

ஹூம்... ஆம்பளையா இருந்தா  எவ்ளோ சௌகரியம் பாருங்க.... போரடிச்சா வெளியே போய் சுத்தலாம்.  பொம்நாட்டிகளுக்கு  ஆகுமோ?  எப்பப் பார்த்தாலும் எதாவது வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.... செஞ்சு செஞ்சே வாழ்க்கை போயிருது....  (என் புலம்பல்!)

சின்ன உலாப்போன சீனிவாசன்,  டீ நல்லா இருக்குன்னு  சேதி  சொன்னார். பஜ்ஜி போடறாங்களாம்.  ஓ....    சரி டீயாவது குடிச்சுட்டு வரலாமேன்னு  புறப்பட்டு, பெரியவரையும் நம்மோடு ஒரு டீ குடிக்க  வாங்கன்னு அழைப்பு விட்டேன்.

இல்லம்மா.... நீங்க போயிட்டு வாங்கோன்னார். மலையாளம் கலந்த  தமிழ்!
நாங்க  ஒன்னரைநிமிச நடையில் டீக்கடையில் இருந்தோம்.    அஞ்சு ரூ சமாச்சாரம் நிறைஞ்ச    ஸ்ரீஐயப்பா டிபன் சென்டர்.  கூடவே வந்த சீனிவாசன்,  'இது இல்லை...அடுத்த கடை'ன்னார்!

பெண்கள் சுயதொழில் நடத்தறாங்க. சுப்பம்மா டீ போட்டுத்தர்றாங்க.

மீனா... பஜ்ஜி இன்சார்ஜ்!  வடையும் செஞ்சு வச்சுருக்காங்க. இப்போ வேகறது பஜ்ஜி !
கோவில் திறக்க அஞ்சுக்கு மேலே ஆயிருமுன்னு  கூடுதல் தகவலும் சொன்னாங்க.  அட ராமா.....
பொடிநடையில்  வந்து திரும்பவும் குளத்து மண்டபத்துலே  அவுங்கவுங்க   கல்லைப் பிடிச்சோம். கண் என்னவோ  கோவில் கதவையே பார்க்குது.... தாழ் திறவாய் மணிக் கதவே....

பெருசா அரை முழ நீளம் இருக்கும் சாவிக்கொத்தோடு ஒருத்தர் வந்து கோவில்கதவைத் திறந்து உள்ளே போய் சாத்திக்கிட்டார்.

ஒருவழியா அஞ்சடிக்க அஞ்சு  நிமிட் ஆனதும் கதவு திறந்தது.  வலதுகாலைத் தூக்கி வச்சு உள்ளே நுழைஞ்சேன்.  கொஞ்சம் இருளோன்னு இருக்கு.
அரைமுழ சாவிக்காரர்,  நீங்க போய் சுத்திட்டு வாங்கன்னு கை காமிச்சார்.  படம் எடுத்துக்கலாமான்னு கேட்டேன். பிரச்சனை இல்லையாம்.

ஆஹா... அது போதும்!!

தொடரும்......:-)

12 comments:

said...

படங்களுடன் பதிவு சுவாரஸ்யம். சேவலையும் பூனையையும் கண்டா கண்கள் என் நாலுகால் நண்பர் படமும் இருக்கும் என்று தேடித்தேடி ஏமாந்தன!!!!

said...

மணிக்கதவே தாழ் திறவாய்னு பதிவு முடிஞ்சுடுத்தே... தரிசனம் அடுத்ததுல்தானா? 2005ல் இந்தக் கோவிலுக்குச் சென்றுள்ளேன். தொடர்கிறேன்.

said...

//கோவில் மதில் கட்டுனது 1111 வது வருஷமாம்! // இது கொல்ல வருஷம். தற்போது கொல்ல வருஷம் 1193 நடக்கிறது.

--
Jayakumar

said...

மதில் கட்டிய ஆண்டு பற்றிய தெளிவு கிடைத்தது. கோயில் உலா அருமை.

said...

நாகர்கோயிலுக்கு பலவாட்டி போயிருக்கேன். ஆனா நாகராஜா கோயில் போனதில்ல. அடுத்து போனால் போகனும். நாகர்கோயில்ல ஒரு பிரச்சனை என்னன்னா, சாப்பிட நல்ல கடைகள் மிகக்குறைவு. அதுவே திருநெல்வேலின்னா தாராளமா இடங்கள் உண்டு.

திருவாழ்மார்பன் கோயில் குளம் நல்ல அகலமா துப்புரவா இருக்கு. ஆழமா இருக்குன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. அது அப்படியே தொடர்ந்து இருக்கட்டும்.

1111ம் ஆண்டு இந்த எண்கள் பயன்படுத்தப்படல. 19ம் நூற்றாண்டுலதான் வெள்ளைக்காரனைப் பாத்து நம்மாட்களும் வீடு/கட்டடத்துல இந்த மாதிரி எழுதத் தொடங்கினாங்க. அப்போ 1111ன்னு நம்பிக்கையின் அடிப்படையில் எழுதியிருக்கலாம்னு தோணுது.

பிள்ளையார் பக்கம் காவடி தூக்குறது இடும்பனா இருக்கும்.

ஆஞ்சனேயருக்கு கண்ணாடி அறை கொடுத்தது அவர் மேல பக்தர்கள் பூசி அப்பிய வெண்ணெய்யோ செந்தூரமோ காரணமாக இருக்கலாம்.

பஜ்ஜி வடைகளோட நிறத்தைப் பாத்தா நல்ல எண்ணெய்ல செய்த நல்ல பலகாரங்களாத் தெரியுது.

said...

இப்போதான் திருப்பியும் கோவில் அர்ச்சகர் படம் பார்த்தேன். தெரியாம அவரையும் டீ குடிக்க கூப்பிட்டிருக்கீங்க. நல்ல எண்ணம்தானே. நேரம் தவறாமையைப் பின்பற்றுவது (கோவில் திறப்பதில்) பாராட்டுக்குரியதுதான்.

said...

வாங்க ஸ்ரீராம்.

நண்பர் கண்ணுலேயே படலையே..... இருந்துருந்தா விடுவேனோ?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பதிவுக்கான படங்களையும் சேர்க்கணும் என்பதால் கதவு திறந்த உள்ளே போனதுக்குத் தனிப்பதிவு. தரிசனமும் ஆச்சே!

said...

வாங்க jk22384

ஆஹா..... கொல்ல வருஷமா? தகவல்களுக்கு நன்றி.

கோவில் மதில் கட்டின கொல்லமா அது! 82 கொல்லம் கழிஞ்ஞு!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பின்னூட்டங்களில் பல அருமையான கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைச்சுருது பாருங்க!

said...

வாங்க ஜிரா.

நாகர்கோவில் போயும்கூட தவற விட்டுட்டீங்களே.... நாகராஜா கோவில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்களில் ஒன்னு!

முந்தி ஒரு காலத்தில் சமணக்கோவிலாக இருந்துருக்கலாமுன்னு கூட ஒரு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு!

அந்த மதில் சமாச்சாரம்.... மலையாள வருஷத்தைச் சொல்லுதுன்னு இங்கே வாசக நண்பர் சொல்லி இருக்காரு பாருங்க!

ரொம்ப லாபம் எல்லாம் எதிர்பார்க்காமல் வீட்டுக்கு தயாரிப்பதுபோல் கவனமா பஜ்ஜி வடை எல்லாம் செஞ்சு தர்றாங்க அந்த பெண்கள். பாராட்டத்தான் வேணும்!

said...

//காவடி தூக்கிக்கிட்டு நிக்கும்.... // Idumban :) Sollavae illa