Wednesday, October 18, 2017

மலைப்பாதையில் ரோலர் கோஸ்டர் ரைடு !!!(இந்திய மண்ணில் பயணம் 64)

நம்ம வண்டியை அங்கேயே  வாசலில் நிறுத்திட்டு, நாங்க  மூணு படி ஏறி இந்தாண்டை பார்த்தால் ஜீப் ஒன்னு நிக்குது. ட்ரைவர் டீ குடிச்சுக்கிட்டு இருக்கார். 'குடிச்சுட்டு வண்டியை எடுங்க. அவசரமில்லை'ன்னு சொன்னேன். ஆளுக்கு  முன்னூறுன்னார். எட்டு கிமீ தூரம்தான்.
நான் முன் சீட்டுலே!  ரொம்ப சந்தோஷம். படம் எடுக்க வாகா இருக்கும்!
பின்பக்க  ஸீட்டுலே நம்மவரும் சீனிவாசனுமா பயணம் ஆரம்பிச்சது.

ரொம்ப சாதுவாக் கிளம்பிப்போறது இந்த ஜீப்.  ரெண்டு பக்கமும் வாழையும் தெங்குமாத்   தோட்டங்கள். பசுமையான இடம். பேஷ் பேஷ்!  என்ன ஒரே ஒரு கஷ்டமுன்னா.... வண்டி லொடலொடன்னு ஆட்டமும் சத்தமுமா இருக்கு.

முன்பக்கம் எஞ்சின் பகுதியில் இருந்து வரும் சூடான காத்து என் பாதங்களை வேகவச்சுக்கிட்டு இருக்கு.  ஒரு மூணு கிமீ தூரம் போயிருப்போம்.  களக்காடு சரணாலயம் நம்மை வரவேற்றது!  ஆஹா....  யானை இருக்கு போல!



களக்காடுன்ற பெயரைப் பார்த்ததும் மூளையில் மணி அடிச்சது. பரிச்சயமான பெயர்.... இந்தப்பெயரில் ஒரு வாசக நண்பர் இருக்கார்!
தமிழக அரசு வனத்துறைப் பிரிவு,  பாதுகாக்கும் பகுதி. நம்பி கோவிலுக்குப் போறவங்களுக்கு மட்டும் அனுமதி உண்டாம். ட்ரைவர் போய்  அனுமதி வாங்கிட்டு வந்தார்.  ஜீப்புக்கு என்ன கட்டணமுன்னு தெரியலை....
வண்டி மலைப்பாதையில் போக ஆரம்பிச்சது. போடற ஆட்டத்துலே கெமெராவை ஸ்டடியாப் பிடிக்க முடியலை. கதவு வேற லொடலொடன்னு லூஸாக்கிடக்கு.  குலுக்கலில் நானே வெளியே விழுந்துருவேன் போல..... கீழே விழுந்த என்னை...புலி ஒன்னு வந்து கவ்விக்கிட்டுப் புதருக்குள் இழுத்துப்போகுது..... (என்ன கற்பனையெல்லாம் வருது பாருங்க!)  ஒரு கையால் கம்பியைப் பிடிச்சுக்கிட்டு, அல்மோஸ்ட் தொங்கறேன். ஸீட் பெல்ட் எல்லாம் இல்லாததால் உடல்  அந்தரத்துலே ஆடுது!  அப்புறம் எங்கே படம் எடுக்கறது?

நல்லவேளையா நம்மவர் செல்ஃபோனில் படங்கள் எடுத்துக்கிட்டே வர்றார்!  எப்பவும் ஆடும் கையில் எடுத்த படங்கள் நல்லாவே வந்துருக்கே! ஆஹா... ஆடும் கையும் ஆடும் வண்டியும் சேர்ந்து மைனஸ் ப்ளஸ் மைனஸ் = ப்ளஸ் ஆகிப்போச்சு :-)




பெரிய உடும்பு ஒன்னு மழைத்தண்ணி தேங்கி இருக்கும் குழியில் தாகசாந்தி செஞ்சுக்கிட்டு, வண்டி சத்தம் கேட்டு சரசரன்னு நகர்ந்து போய்  பள்ளத்தில் இறங்குச்சு.  வனவிலங்கு வகையில் இது ஒன்னுதான் இதுவரை  கண்ணில்பட்டது, கேட்டோ!

அப்ப புலி, யானை ?  வரும் வரும்.... அப்புறமா வரும்...

பெரிய பெரிய கற்கள் இறைஞ்சு கிடக்கும் பாதையில் வண்டி மெள்ள ஏறுது!  ஒரு இடத்தில்  பாறை மேல் ஏறிய வண்டி  அப்படியே கீழ் நோக்கி நெட்டுக்குத்தா  90 டிகிரி கோணத்துலே நிக்குது!   அடுத்த நொடி வண்டி அப்படியே குடை சாய்ந்து விழப்போகுது. நான் கதவுலெ இடிச்சுக்கிட்டு டமால்னு வெளியே விழறேன்.... புலி வந்து  தலையைக் கவ்வி இழுத்துக்கிட்டு போகப்போகுது.....

நாலு கிலோ மீட்டர் இப்படித் துள்ளத்துடிக்க வைக்கும் பாதை !  மொத்தமே எட்டு கிமீதான் மஹேந்திரகிரி மலைப் பயணம். கூடிவந்தால் அரைமணிக்கூறு!

ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய ட்ரைவர்,  எதிரில் கொஞ்ச தூரத்தில் இருக்கும் கோவிலைக் காமிச்சு  அங்கே போயிட்டு வாங்க. நான் இங்கே காத்திருக்கேன்னார். வண்டி இதுக்கு மேல் போக வழியே இல்லை.
ஒரு  நாலடி அகலப் பாதையில் நடந்து போறோம்.  சின்னதா ஒரு பாலம் கடக்கணும். கீழே பாறைகளுக்கிடையில் ஓடும் நம்பி ஆறு!


அந்தாண்டை  மேலே இருக்கும் கோவிலுக்குப்போக படிகள். நமக்கு ரெண்டு பக்கமும் வச்ச கண் வாங்காம நம்ம நடமாட்டத்தையே கவனிச்சுக்கிட்டு, குடும்பம் குடும்பமா உக்கார்ந்துருக்கும் நம்ம கூட்டம் !
அச்சச்சோ.... என்ன அழகான கண்கள் பாருங்க!
இறக்கமும் ஏத்தமுமா  இருக்கும் படிகளில் ஏறி வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.  ஓரளவுக்குப் பெருசாவும் சுத்தமாவும்  இருக்கு!  கோவிலின் வெளிப்புறம் ரெண்டு பக்கமும் திண்ணைகள். பெருமாளுக்கு செய்யும் நித்ய ஸேவைகளை முடிச்சுட்டு,  பக்தர்களை எதிர்நோக்கி உக்கார்ந்துருக்காங்க பட்டரும், அவருடைய உதவியாளருமா!


நமக்கு உள்ளே தரிசனம் பண்ணி வச்சாங்க. மலைமேல் நம்பி!  அவ்வளவா பெரிய உருவம் இல்லை. ஸேவிச்சுக்கிட்டோம்.  உள் பிரகாரம் சுற்ற  படி இறங்கும்போதே....  ' ஒரு நிமிஷம்... பிரஸாதம் வாங்கிக்குங்கோ'ன்னார் பட்டர்.
நல்ல பெரிய டிஸ்போஸபிள் தட்டில்  ததியன்னம்.  ஒரு சின்ன கவளம் போதாதா என்ன?  இவ்வளவா?  ஒரு ஆளுக்கு தாராளம்!!! அதுவும் எங்க மூணு பேருக்கு மூணு தட்டு நிறைச்சு!  கூடவே சொம்பில் குடிக்கும் தண்ணீர்!

ஒரு குடம் நிறைச்சு தண்ணீர் எடுத்து வந்து பிரகாரமேடையில் வச்சுருக்காங்க. கீழே நம்பி ஆற்றின் தண்ணீராம். மூலிகை வளம் நிறைஞ்சதுன்னார் பட்டர்!

ததியன்னத்துக்குத் தொட்டுக்க அதன் மேல் தூவுன மொளகாய்ப்பொடி வேற.  (நார்த்தை இலைப் பொடின்னு நினைக்கிறேன்)

தட்டைக் கையில் வாங்கும்போதே நல்ல சூடா இருக்கு!  இப்பதான் தளிகை முடிஞ்சு நைவேத்யம் ஆச்சாம்!  எங்க ரெண்டு பேருக்கு ஒரு தட்டு போறுமுன்னு சொன்னாலும், பட்டர், ' பரவாயில்லை. பிரஸாதம்தானே... எடுத்துக்குங்கோ'ன்னுட்டார்.

 அப்புறம் நான் ஒன்னும் சொல்லலை.  இவ்ளோ என்னால் சாப்பிட முடியாது. உறைப்பும் ஆகாது....  மத்த ரெண்டு பேருக்கும் பகிர்ந்து கொடுத்துட்டுக் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். அதுக்கு முன்னே க்ளிக்ஸ் மறக்கலை கேட்டோ :-)
'நடமாட்டம்' அதிகம் என்பதால் உள்பிரகாரம் முழுசும் மேலே கம்பியழி.

மஞ்சளைக் கொண்டு சுவத்தில் நாமம் போடாதேன்னு  அறிவிப்பு பார்த்த சனம், 'அட.... இப்படியும் போடலாமா'ன்னு போட்டுப் பார்த்துருக்கு :-(

வயிறும் மனமும் நிறைஞ்சு போனதில்,  செல் விருந்தோம்பி வருவிருந்து பார்த்து   வாசத்திண்ணையில் உக்கார்ந்துருக்கும் பட்டர் ஸ்வாமிகளிடம் நிதானமாப் பேச்சுக்கொடுத்தோம்.

மாசம் பத்து நாள்  மேலே ட்யூட்டியாம்.  பட்டரும் அவருக்கு உதவியா  இன்னொரு கோவில் ஊழியருமா  வந்து போவாங்களாம்.  ஜீப் எல்லாம் கிடையாது. நடராஜா சர்வீஸ்தான்.  காலை ஆறு, ஆறரைக்குக் கிளம்பி மேலே வந்துட்டு, நம்பி ஆற்றில் இருந்து  தண்ணீர் கொண்டு வந்து திருமஞ்சனம்    (அபிஷேகம் அலங்காரம்)  எல்லாம் ஆனதும் உஷத் காலப் பூஜையை முடிச்சுட்டு,  பெருமாளுக்குத் தளிகை செய்து கண்டருளப் பண்ணனும்.

பெருமாளின் களைந்த வஸ்த்ரங்களை ஆற்றில் கொண்டு போய் துவைச்சுக் கொண்டு வந்து  இங்கே காயவச்சு மடிச்சு வைக்கணும். கோவிலை உள்ளும் புறமுமாப் பெருக்கி சுத்தம் செஞ்சுக்கணும். இதுக்கே ஒரு பத்து பதினொரு மணி ஆகிடும். பகலில் கோவிலை மூடறதில்லை. சந்நிதிக் கதவை மட்டும்  தரிசனம் ஆனதும் மூடி வைக்கவேண்டி இருக்கு. நடமாட்டம் அதிகம் இல்லையோ....  கண் அசந்த சமயம் நைஸா உள்ளே  வந்து போறதுண்டாமே!


சாயங்காலம் ஆறு மணிக்கு முன்னாலே கீழே போயிடணும் என்பதால் அஞ்சு மணிவாக்கில் சாயரக்ஷை பூஜையை முடிச்சுக்கிட்டு மடமடன்னு கிளம்பிப் போயிடறதுதானாம்.
சனிக்கிழமைகளில் கொஞ்சம் மக்கள் கூட்டம் இருக்குமாம்.  மார்கழி, புரட்டாசிகளிலும், உத்ஸவ சமயங்களிலும்   நல்ல கூட்டம் வருதாம். உற்சவர் கீழே  கோவிலில் இருக்கார்.  உத்ஸவ காலங்களில் இந்த அஞ்சு நம்பிகளின் உற்சவர்களின் புறப்பாடு கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்!

மனக்கண்ணால் பார்த்துட்டு, வலைக்கண்ணாலும் பார்த்தேன் !

இப்ப அங்கே இருந்த பட்டர் ஸ்வாமிகள், கீழே நம்ம ராமானுஜம் அவர்களின் ஷட்டகர் என்ற மேல்விவரமும்  கிடைச்சது :-)  அங்கேதான் நமக்கு லஞ்சு என்ற தகவலையும் பரிமாறிக்கிட்டேன். மனைவி அங்கேதான் இருப்பாங்கன்னார்.  சந்திக்கறேன்னேன்.

வெளிப்ரகாரம் ஒருமுறை சுற்றி வந்தோம்.  போரடிக்குதேன்னு  பெருமாள் வேஷ்டியோடு  விளையாடிக்கிட்டு இருந்தான் ஒரு பையன் :-)


எல்லாம் ஒரு முக்கால்மணி நேரம்தான் கோவிலில் இருந்தோம்.
பொடிநடையா வண்டி நிறுத்துன இடத்துக்குத் திரும்பும்போதுதான்  இங்கத்து காவல் தெய்வமான சங்கிலி பூதத்தார் சந்நிதியைப் பார்த்தேன்.

கொஞ்சம் கீழே இறங்கிப் போகணும். இங்கிருந்தே கும்பிட்டாச்சு.  படிகள் இருக்கு. இறங்கிப்போனால் கீழே நம்பி ஆறு வரை போய்வரலாம்.  மூலிகைத் தண்ணி. முங்கி எழுந்தால் உடம்புக்கு நல்லது.
நிறைய மரங்களோடு  காடு நல்லாதான் இருக்கு.  சித்தர்கள் இருக்குமிடமாம்! அதனால்  அவர்களுக்கு இடைஞ்சலா இல்லாம, அதிகமா அமளிதுமளி ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாம  அடங்கி இருப்பது  நல்லது!  பொதுவா நம்ம கண்ணுக்குப் புலப்படமாட்டாங்களே தவிர  புண்ணியம் செய்தவங்களுக்கு  தரிசனம் கொடுத்துருக்காங்களாம்.

அனுபவப்பட்டோரின்  கதைகள் சுவாரசியமா இருக்கும், இல்லே!

ட்ரைவர் மருது(அப்படித்தான் பெயர் சொன்ன நினைவு.  அந்த ஏரியா மக்கள்  யாராவது  சரியான்னு சொல்லுங்க) நமக்காகக் காத்துருந்தார்.  அதுக்குள்ளே இன்னொரு ஜீப் வந்துருந்தது.

அதே பாறைகள் நிறைஞ்ச கரடுமுரடு ரோடில் திரும்பிப் போறோம். இறக்கம் என்றதால் ஒரு இருபத்தியஞ்சு நிமிட்லே  களக்காடு செக்போஸ்ட் போயாச்சு.

ப்ரேக்லே  வச்ச காலை எடுக்கலை... அப்புறம் பார்க்கறேன்.... அந்த ப்ரேக் சமாச்சாரத்துக்கு  pad கூட இல்லை. வெறுங்கம்பி....
அம்யூஸ்மென்ட் பார்க்கில்  ரைடு எல்லாம் போறோமே... அதெல்லாம் இந்த  ஜீப் வண்டி கொடுக்கும் த்ரில்லுக்கு முன்னாடி ஒன்னுமே இல்லை...  ஜூஜுபிதான்!

முக்கியமா சொல்லவேண்டியது.....  நம்ம ட்ரைவர் மருது வெறுங்காலோடு வண்டி ஓட்டுறார். அப்பதான் ப்ரேக் பிடிமானம்  இருக்குமாம். ஐயோன்னு இருந்துச்சு எனக்கு.  என் பாதம் வெந்து போனமாதிரிதானே அவருக்கும் ஆகும்.... ஐயோ... பெருமாளே.... நமக்காவது ஒரே ஒருநாள். இவர் தினம்தினம்  இதை அனுபவிக்கணுமே....  ப்ச்....

பேசுன சார்ஜை விடக் கொஞ்சம் கூடுதலாவே ஒரு அன்பளிப்பு கொடுக்கத்தான் வேணும்.  நம்மவருக்கு  கண்ணால் சேதி அனுப்பினேன். புரிஞ்சுக்கிட்டு அப்படியே செஞ்சார் :-)

ராமானுஜம் அவர்கள் வீட்டுக்குள் நுழையறோம்.  உள்ளே கூடத்தில் இலை போட்டுப் பரிமாறிக்கிட்டு இருக்கார் ஒரு அம்பி.  இலைக்கு முன்  ரெண்டு பேர்.

நம்மைப் பார்த்ததும் உள்ளே இருந்து  வந்த ராமானுஜம்,  நமக்கும் இலைகளைக் கொண்டு வந்து போட்டார்.

நாங்களும் பின்பக்கம் போய் கைகாலை சுத்தம் செஞ்சுக்கிட்டு வந்தோம். கீழே உக்கார்ந்து சாப்பிடறது எனக்குக் கஷ்டம் என்பதால் கொஞ்சம் யோசனை. அங்கிருந்த ஒரு சின்ன மேஜையில் ஒரு அம்மாள் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கும் என்னைப்போல் மூட்டு  வலி இருக்கும்போல...   இன்னொரு இலைக்கு அங்கே இடம் போறாது.

என் கஷ்டத்தை நொடியில் புரிஞ்சுக்கிட்ட ராமானுஜம்,  'தட்டுலே விளம்பித்தரட்டுமா' ன்னார்!  ஹைய்யோ!   ப்ராப்லம் ஸால்வ்டு :-)


நாற்காலியும் தட்டுமா நான் ஒரு பக்கம். நம்மவரும் சீனிவாசனும் பந்தியில் கலந்தாங்க.  பக்கத்துலே உக்கார்ந்து சாப்புடறவர் அறிமுகம் ஆச்சு. சுந்தரி ஸில்க் ஓனர்.
சட்னு என் பார்வை மேஜையடியில் உக்கார்ந்து சாப்பிடும் அம்மாளின் புடவைக்குப் பாய்ஞ்சது உண்மை. கடை  ஓனர்கள் வேற கடைகளில் புடவை வாங்குவாங்களா இருக்கும் :-)

இங்கே   சாப்பிடறதுக்கு வேற இடங்கள் இல்லாததால்  ராமானுஜம் இதை ஒரு தொழிலாக மட்டுமில்லாமல் ஸேவையாகவும் செய்யறார். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே என்பது சத்தியம்!
அவர் ஸேவையைப் பாராட்டி  கொஞ்சம் தாராளமாக பணம் கொடுத்து,  நம்மைப்போல் ஸ்வாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுன்னு வச்சுக்குங்கோன்னேன்!  அவரே ஒரு விஸிட்டர்ஸ் புக் வச்சுருக்கார். அதுலே ஒரு நாலு வரி நல்லமாதிரி எழுதியாச்.  (பதிவு   போடற கைக்கு மகிழ்ச்சி!)

நான் ஒன்னுமே சரியா சாப்பிடலைன்னு அவருக்கு ஒரு குறை. அதைச் சொல்லவும் செஞ்சார்.  கலத்துக்கு இட்ட பருப்பும் நெய்யுமே எனக்கு தாராளம், இல்லையோ!

சமையலுக்குன்னு தனியா ஆள் கிடையாது.  திருமதி ராமானுஜமும் அவுங்க தங்கையுமா சேர்ந்தே  சமைச்சுடறாங்களாம்.  ரெண்டு பேரையும் பார்த்து, சமையல் நல்லா இருந்ததுன்னு சொல்லி,  நன்றியும் தெரிவிச்சுக்கிட்டேன்.  தங்கையின் ரங்க்ஸை மலைமேல் சந்திச்சதையும், சொல்லியாச் :-)
அப்பதான் உள்ளே இருந்து வேகமா வந்தார் கருப்பர்!  குழந்தையா இருந்தப்பயே இங்கே வந்துட்டாராம்.  பிஸ்கெட் வாங்கி தர்றவங்களை ரொம்பவே பிடிக்குமாம்.  சீனிவாசன் பிஸ்கெட் வாங்க அடுத்துள்ள பொட்டிக்கடைக்குப் போறதைப் பார்த்துட்டு ஜம்முன்னு போஸ் கொடுத்தார் :-)

மணி ரெண்டாகப் போகுது, கிளம்புனா சரியா இருக்குமுன்னு நம்மவர்  சொன்னாலும்,  கோவிலை இன்னொருக்கா நல்லாப் பார்த்தால் தேவலைன்னு  எனக்கு ஆசை.  அதான் கோவிலை மூடியாச்சே. இனி சாயங்காலம் நாலரைக்குத்தான்  நடை திறப்பு என்பதால் மனசில்லா மனசோடு கிளம்பும்படியா ஆச்சு.  கோவில் நேரம் காலை 6.30 முதல் பகல் 12. மாலை 4.30 முதல் இரவு 8.

அடுத்துப் போகும் கோவிலுக்குக் கிளம்பலாமா?

தொடரும்.......:-)

நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்! 
நம்பியின் அருளால் அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்! 

12 comments:

said...

சுவாரஸ்யமான இடம் பற்றிய விவரங்கள். நாலுகால் நண்பரைப் பார்த்ததில் மகிழ்ச்சி. வனத்தில் 'அந்த ஒரே ஒரு பயங்கர விலங்கை' மட்டும் காண்பித்ததில் மகிழ்ச்சி!

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.​

said...

நம்பி தரிசனம் நலமுடன் நிறைந்தது. மலைமேல் நம்பி கோவிலுக்குச் செல்வது கஷ்டம் என்று சொல்வார்கள்.

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

said...

பார்த்திராத இடமான களக்காடு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. இனிய தீபாவளி வாழ்த்துகள்.

said...

தீபாவளி அதுமா சிறப்பான தரிசனம்..

உங்கள் அனைவரின் கவலைகளும் வெடியாய் வெடித்து சிதற...
மகிழ்ச்சி மத்தாப்பூவாய் மலர....
வாழ்க்கை ராக்கெட்டாய் உயர...
குடும்பம் கல்பட்டாசாய் கலகலத்து மகிழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்

said...

belated diwali wishes அக்கா குடும்பத்தாருக்கு ..

ஒவ்வொரு பதிவையும் வாசிச்சிட்டு வரேன் :)
கொஞ்சம் அரியர்ஸ் இருக்கு ஆனாலும் முடிச்சிடுவேனே :)
கருப்பன் அழகா இருக்கான் .

said...

உளங்கனிந்த தீபவொளித் திருநாள் வாழ்த்துகள்.

அருமையான இடங்களை அழகான படங்களோடு அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். போகும் ஆசையைத் தூண்டுகிறீர்கள்.

said...

வாங்க ஸ்ரீராம்..


காட்டு விலங்கைப் பார்த்து பயந்துட்டோம் :-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சனிக்கிழமைகளிலோ இல்லை புரட்டாசி மாதத்திலோ போயிருந்தால் நிதானமா நடந்தே போயிருக்கலாம். துணைக்கு மக்கள் நடமாட்டம் இருக்கும் சமயம் !

ஜீப் பில் போய் வர்றதுதான் கஷ்டமான பயணமா இருந்தது :-)

நம்பிப் போறவங்களை நம்பி காப்பாத்திடுவார் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அந்தக் களக்காடு.... நானும் எதிர்பாராத ஒன்றுதான். பயணம் அதன்வழின்னு அதுவரை தெரியாது!

said...

வாங்க ராஜி.

இனிமையான வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஏஞ்சலீன்.

ரொம்ப நாளாக் காணோமே.... அப்பப்ப ஜெஸ்ஸியை நினைச்சுக்குவேன். எல்லோரும் நலம்தானே?

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !

said...

வாங்க ஜிரா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீங்க. அருமையான இடம்!