Tuesday, June 17, 2014

முற்றத்துலே, மண்பானைப் பொங்கல்!!!

திண்ணையில் அலங்காரத் தூண்கள்  வச்ச வீடுகள்.  ஓலைக்கூரையும்,  கோலம் போட்ட  வீட்டு வாசலும், அவிழ்த்துப்போட்ட ரெட்டை மாட்டு வண்டியுமா ஒரு பக்கம்.  நாகரிக வாழ்க்கையில், நம் கண்களில் இருந்து காணாமப்போயிருக்கும் கிணறு!  ஊருக்குப் பொதுவான சின்னக் கோவில். புள்ளையார் இருக்கார்.  பூப்பந்துகளாய் தொடுத்து வச்சுருக்கும் பூக்கடை.  கோவிலையொட்டிய ஊர்ப் பொது மரம். நாட்டாமைகள்   வந்து உக்கார மேடை(யும்)  கட்டி வச்சுருக்கு.

வீட்டு வாசலிலும், கோவில் வாசலிலும்  விறகு அடுப்புகளின் மேல்  மங்கலச்சின்னங்கள் அணிஞ்ச புதுப்பானைகளில் பொங்கிவழியும்  பால்.  பொங்கல்  வெந்துக்கிட்டு இருக்கு.  கரும்புக்கூட்டணியையும் விட்டு வைக்கலை.

கிராமப் போக்குவரத்தில் முதலிடம் வகிச்ச சைக்கிள் ஒரு வீட்டுக்கு முன்னால்.

அடடா.... இப்படி ஒரு காட்சி கண்ணுக்கு முன் வரும் என்று கனவில் கூட நினைக்கலை!  அதிலும் 'ஒரு காலத்தில்  இப்படியெல்லாம் ஒன்னு இருந்தது ' என்று  புதிய தலைமுறைக்கு நாம் சொல்லி இருந்தால்  நகர இளசுகள் நம்பி இருக்குமோ என்னவோ?

இப்பப் பாருங்க...........   இளசுகள் வந்து குமியும் இடத்தில் இதெல்லாம்   எவிடென்ஸ் ஆகிக் கிடக்கு.  

மகளுக்குத் தேவை(!)யான சில  அலங்காரச் சாதனங்கள்  வாங்கிக்கலாமுன்னு  MAC கடையைத் தேடி எக்ஸ்ப்ரெஸ் அவென்யூவுக்குள் நுழைஞ்சவள்  மலைத்து  நின்னேன்!

சும்மா சொல்லக்கூடாது, எல்லாம் நறுவிசா செஞ்சு வச்சுருக்காங்க.  கோவில் மதிலுக்குப் போடும் காவிப்பட்டையும் கூட  அமர்க்களமா இருக்கு.

பண்டிகைகள் கொண்டாடுவதில்  முதல் இடம் மால்களுக்கே!   இங்கே எங்கூரிலும் பாரம்பரிய முறையில் பண்டிகை கொண்டாட மால்தான் முந்திக்கும்.  இவுங்களுக்கு பெரிய கொண்டாட்டமுன்னு சொன்னால் ஒன்னே ஒன்னுதான். கிறிஸ்மஸ்  வர ரெண்டு மாசம் இருக்கும்போதே   மால்களில்  அலங்காரமும் கொண்டாட்டமும்  ஆரம்பமாகிரும்.

மக்கள் கூட்டம் அலைஅலையா உள்ளே வந்துக்கிட்டு இருக்கு.  சென்னையில் இருக்கும்  ஷாப்பிங் செண்டர்கள், மால்கள்  இவற்றில்  கொஞ்சம் நவீனமா பரந்து விரிஞ்சு இருக்கும் இடம் இந்த எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ என்றுதான் நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் வெளிவந்து  கொண்டிருந்த இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழ் இங்கிருந்துதான் இதே இடத்தில்தான் புறப்பட்டது. எக்ஸ்ப்ரெஸ் எஸ்ட்டேட்ன்னு அப்போ பெயர். பத்து ஏக்கர் இடம். அதுலே ஒரு 3.57 ஏக்கர்  எடுத்து இந்த  ஷாப்பிங் மாலைக் கட்டி இருக்காங்க. அது ஆச்சு  நாலு வருசம்.  இதுக்குள்ளே  ஒரு நாலு ஸ்டார் ஹொட்டேல் கூட இருக்கு.

 ஒன்பது லக்ஷம் சதுர அடிகள் பரப்பு, 210 கடைகள்,  சினிமா தியேட்டர்கள்  இப்படி ஒரு  நகரம் உள்ளே! மனுசர் நடக்க தாராளமா இடம் விட்டு நாலு மாடிகள் அழகாக் கட்டி இருக்காங்க.

மீதி இருக்கும்  இடத்தில்  இப்பவும் 'ப்ரெஸ்' இருக்கான்னு தெரியலை. அநேகமா  அச்சகம் வேற இடத்துக்குப் போயிருக்கலாம்.



நாம் தேடிப்போன பொருள் கிடைக்கலை. ஆனால்  இன்னொரு புதுமாலில்  இதே நிறுவனத்தின் கிளை இருக்கு சொல்லி அங்கே  ஃபோன் போட்டு , சாதனம் இருக்கான்னு உறுதிப்படுத்தினார்  இந்தக் கடைக்காரர்.  அது ராமி மால்.  கட்டிடம் கட்டப்படுவதை  தொடந்து சில பயணங்களில் பார்த்ததே.  இப்ப முடிஞ்சு கடைகளும் வந்தாச்சாமே!  இது  நம்ம  கெஸ்ட் ஹவுஸ்ஸுக்கு   (தி நகர்) ரொம்பப் பக்கம்.  அண்ணாசாலையில்தான் இருக்கு.

மால் கண்ணுக்குப் புலப்படுமுன் விஸ்வரூபம் எடுத்து நிக்குது  ஹொட்டேல் Hyatt Regency. 18 மாடிக் கட்டிடம். கீழே உள்ள மூணு மாடிகள் மட்டும் மால். மற்றவை எல்லாம்  ஹொட்டேலுக்கே.  இப்ப 2012தான் திறந்துருக்காங்க.  Ramee groupக்கு  துபாய் முதலாளியாம். பகட்டுக்குக் கேட்பானேன்!

கொஞ்சமா சுத்திப் பார்த்துட்டு மகளுக்கு வாங்கவேண்டிய ஐட்டம் தேடினோம்.  பெரிய கடையா இருந்தாலும் ஸ்டாக்  வைக்கமாட்டாங்க போல:(    நமக்கு வேண்டியது,  ரெண்டே ரெண்டுதான்  இருக்காம்.  சரின்னு வாங்கிக்கிட்டு எனக்கொரு  கைப்பை வாங்கித்தரேன்னு கோபால் அடம் பிடிச்சதால் வாங்கிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.

சென்னையின் மாறிவரும் முகங்களில் எக்கச்சக்கமான  நட்சத்திர  ஹொட்டேல்கள்  முளைச்சு  இடம் பிடிச்சுருக்கு.  மக்கள் தொகைக்கு ஏத்தாப்போல் மால்களின் எண்ணிக்கையும்.  அதுக்கேத்த மாதிரி  ஒவ்வொன்னும்  ஏகப்பட்ட  விலை வேற!   நம்மூரில் விலை மலிவுன்னு சொன்ன காலம் எல்லாம் மலையேறிப் போச்சு.  

இத்தனை ஆடம்பரங்களையும் விட்டு வெளிவந்தால் முகத்தில் அறையும் அழுக்குகளுக்கும்  குப்பைகளுக்கும் குறைவில்லை.  எப்போ எல்லாம் சமனாகப் போகுதோ?

இப்பெல்லாம் நான் சின்னதா ஒரு பொய் சொல்ல ஆரம்பிச்சுருக்கேன், நம்ம டெய்லரிடம்.  ஊருக்குக் கிளம்பும் உண்மையான தேதிக்கு ரெண்டு நாள் முன்னால் உள்ள  நாள்தான்  கடைசி.  'போயிருவேன்'  என்று சொல்ல ஆரம்பிச்சது முதல்  டென்ஷன் இல்லாம பேக் பண்ண முடியுது.  பழைய அனுபவங்களில் கடைசி நாள் வரை அலைக்கழிப்பு :(

கடைக்கு ஃபோன் செஞ்சு  துணிகள்  ரெடியா இருக்கான்னு கேட்டால் (வழக்கம்போல்) இன்னும்  ஒரு மணி நேரத்தில் ரெடி ஆகிரும். இப்போதான் அயர்ன் செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னார்.  கோபாலுக்குத் தைக்கக்கொடுத்த இடத்துக்குப் போனால்..... இன்னும் ரெடியாகலையாம்.  முதல்நாளே கொடுக்கறேன்னு  சொல்லி இருந்த இடம்.   ஓக்கே...  இனி   என் வழிக்குக் கோபாலைத் திருப்பணும்.

கட்டாயம் இன்னிக்கு வேணுமுன்னு உதார் விட்டுட்டு,  பொங்கல் ஷாப்பர்ஸ் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.  லலிதா ஜூவல்லரி பக்கம் கால் வைக்க இடமில்லை:-)

கொஞ்சம் சுத்தியடிச்சுட்டு  எட்டரை மணிக்குத் திரும்பப்போய்  அவரவர் துணிகளை வாங்கிக்கிட்டு அறைக்கு வந்தாச்சு.

பொழுது விடிஞ்சால் போகி பண்டிகை.

தொடரும்...........:-)



12 comments:

said...

பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்னு திருவள்ளுவரே சொல்லியிருக்காரும்மா. தப்பில்ல. :)

சென்னைல மால்கள் பண்ற அட்டூழியங்கள் இருக்கே. குறிப்பா ஒரு மாலைச் சொல்லனும். அதுக்குப் பேர் பீனிக்ஸ் மால். டூவீலர் நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூவா. சினிமாவுக்குப் போனா வண்டி நிறுத்த மட்டும் 200 ரூவா குடுக்கனும். படத்துக்கே 120 ரூவாதான். அப்போ கார்ல போனா எவ்வளவு குடுக்க வேண்டியிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. இத்தனைக்கும் ஒரே குழப்ப மால் அது.

எக்ஸ்பிரஸ் அவென்யுதான் உள்ளதுல நல்லது. பார்க்கிங்கும் வசதியா இருக்கும். எக்ஸ்பிரஸ் அவென்யூல நான் ஸ்பெஷல் கார் பார்க்கிங்கில் கொடுத்த காசை பீனிக்ஸ் மாலில் டூவிலருக்குக் கொடுத்தேன். இனி பீனிக்ஸ் மாலுக்குப் போகவே கூடாதுன்னு முடிவு. போனாலும் ஆட்டோல போயிட்டு ஆட்டோல வந்துறனும். மால்காரனுக்குக் குடுக்குறதுக்கு பதில் ஆட்டோக்காரனுக்குக் குடுக்கலாம்.

ரேமி மாலை மால்னே சொல்றது கஷ்டம். ரெண்டு மூனு கடைகள். மத்தபடி பெருசாச் சொல்ல ஒன்னுமில்லை. ராஜாராணி படத்துல வந்தபிறகுதான் போய்ப் பாத்தேன்.

said...

பழமைகளை காட்சிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

said...

ஏன் ரீச்சர், அதான் ex-press mallந்னு சொல்லியாச்சே. அப்புறம் அங்க அச்சகம் இருக்கான்னு கேட்கறது எந்த விதத்துல 'ஞாயம்'? :)

said...

துளசி ,இத்தனை அழகா அலங்காரமா. வெளியூரெல்லாம் தோத்துப் போயிடும் போல இருக்கே. நம்ம ஊரில இப்ப எத்தனை மால்கள் வந்திருக்குன்னு உங்களைத்தான் கேட்கணும்.கோபால் ரொம்ப அடிச்சு சொன்னதால கைப்பை வாங்கினீங்களா. சரி சரி நம்பிட்டேன்.

said...

g .Ragavan அவர்கள் சொல்வது போல் தான் நாங்களும் ஆட்டோவில் போய் வந்து விடுவோம் . பார்கிங் செலவும் மிச்சம் ,டிராபிக் அவதியும் இல்லை .அப்புறம் இன்னொரு மால் கலாச்சாரம் பற்றி தெரியுமா உங்களுக்கு . இங்குள்ள youngsters hangout places இந்த மால்கள் . ஆககூடி கலாச்சார சீரழிவும் வளர்கிறது இந்த மால்களில் . வாங்க வருபவர் கூட்டம் வெகு குறைவே . என்னவோ .... பழைய சென்னை மறைந்து விட்டது :(

said...

வாங்க ஜிரா.

மால் பார்க்கிங் நெஜமாவே கொள்ளைதான். ஆனால் நம்மாட்களும் அங்கே வாங்கவா போறாங்க? ஃப்ரீ இடமுன்னு சுத்தியடிச்சு கடலை வறுத்துட்டு வர்றாங்க பாருங்க. அப்புறம் அங்கே வாங்கும் விலையிலா பொருட்கள் இருக்குன்றது வேறு விஷயம்:(

மால்திறந்த புதுசில் நாங்க 150 ரூ பார்க்கிங் கொடுத்தோம். அது மணிக்கு அம்பது என்ற கணக்கில் மூணு மணிக்கானது. ஆனால் மினிமம் நேரமே மூணுமணிதானாம்.

அதுக்குப்பின் அங்கே எப்பவாவது போனாலும் நம்ம ட்ரைவரை எங்களை இறக்கிவிட்டுட்டு அவர் வேலை எதாவுதுன்னா போயிட்டு வரச்சொல்றதுதான். நம்ம வேலை முடிஞ்சாட்டு செல்லில் கூப்புட்டால் ஆச்சு.

said...

வாங்க மாதேவி.

எனக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சுப்பா.

said...

வாங்க கொத்ஸ்.

என்ன ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு.

நீங்க சொல்ற ஞாயம் சரிதான். ஆனாலும் தினசரிக்கு ரயிலாட்டம் பெயரை வச்சாங்க பாருங்க அந்தக் காலத்தில், எக்ஸ்ப்ரெஸ், மெயில்ன்னு.

பாஸெஞ்சர்ன்னு ஏன் பெயர் வைக்கலைன்னு .........

said...

வாங்க வல்லி.

அட ஆமாம்ப்பா...கோபால் தொல்லை தாங்கமுடியலைப்பா:-)

இதே மனிதர் ஒரு காலத்துலே 'ஹேண்ட் பேக்' எதிரி தெரியுமோ?

கலி முத்திண்டு வர்றது:-))))

said...

வாங்க சசி கலா,


உண்மை. அங்கங்கே பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். கல்ச்சர் ஷாக் இப்ப எனக்கு வரும்போல!

said...

தில்லியில் இருக்கும் மால்களைப் பார்த்து வெறுத்துப் போனதால் சென்னை மால்களைப் பார்க்கும் எண்ணமே தோன்றவில்லை!

உங்கள் பதிவு வழியாக அவற்றையும் பார்த்தாயிற்று....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சென்னையில் மால் கலாச்சாரம் தீ போல விரைவாகப் பெருகி வருது.

நல்லதுக்கா கெட்டதுக்கான்னு இன்னும் புரியலை:(