Friday, May 09, 2014

இவர்தான் இந்தியாவிலேயே உயரமானவராம்!

எத்தனை  அடியாம்?  அதிகமில்லை . எண்பதடிகளே!!!  அழகான முன்வாசல் கடந்து உள்ளே போறோம்.  வழக்கம் போல் வண்டியை விட்டு இறங்குனதும்  ஒரே பாய்ச்சலா  முன்னாடி   ஓடுறார்  நம்ம கோபால்:-)

கண்முன்னால் மூணு கமான்கள்!   தூரக்க....அந்தக் கோடியில் நெடுநெடுன்னு நிக்கறார் நம்ம புத்தர்  . அவருக்கும் கமானுக்கும் நடுவே  செயற்கைக்குளம்.  ப்ரஜாபதி கௌதமி சரோவர்!  ஓ....  ஏரி!


சுத்திவர மேடை. அதுக்கு மேலே தாமரையில் கால்பதிச்சு நிக்கும் புத்தர்.  அவருக்கு  அருகே  போகுமுன் தோட்டத்தை ஒரு நிமிசம் பார்த்துக்கலாம். அதான் எங்கிருந்தாலும்  பளிச்ன்னு காட்சி கொடுக்கறாரே!

'சரோவருக்கு ' ரெண்டு பக்கமும்  அகலமான பாதைகள். பாதைகளை ஒட்டியே நந்தவனம்.  புல்தரைக்கு  பார்டர் கட்டுனதுபோல் பெரிய மரங்களின் வரிசை. ஏரியைச் சுத்தி  செடிச்சட்டிகளில் பசுமை!

அசோகருக்கு, அவர் மகள் சங்கமித்திரைக்கு இப்படித் தனித்தனியா  பெயர்ப்பலகையோடு  குட்டித்தோட்டங்களும்  குட்டி மரங்களும்:-)
கண்ணைப்பிடிச்சு இழுக்கும் சிங்கங்கள் நாலு ஒரு புறம்!!   எங்கேயோ  பார்த்த முகங்களோ? இல்லையா பின்னே!  இந்திய அரசு முத்திரையாச்சே! நாலு திசையிலும் பார்க்கும்  நான்முகம். சிங்கங்கள் நிற்கும் பீடத்தில் யானை, குதிரை, காளை,  சிங்கம் என்று நாலு வகை மிருகங்களும் ஒவ்வொன்னுக்குமிடையே  ஒரு சக்கரமும்  செதுக்கி இருக்காங்க.  நல்லவேளையா நாம் பார்க்கும் பக்கம் நம்ம யானை இருந்துச்சு!!!



(இங்கே எங்கூரிலும் இப்படி நான்முகம் ஒன்னு இருக்கு. ஆனால் மனுச முகம்! திசைச்சிற்பம். Four Winds statue ன்னு  ஊர் சொல்லுது )


இந்த சிங்க இலச்சினை, ஜஸ்ட் ரிப்ளிக்காதான். ஒரிஜனல்,  உள்ளூர் ம்யூஸியத்துக்குள் இருக்கு.  யாரோ சில புண்ணியவான்கள் ஸ்தூபியில் நின்னதை உடைச்சுப்போட்டுப் புண்ணியம் கட்டிக்கிட்டாங்க:(  நல்லவேளையா சிங்கங்களுக்கு ஒன்னும் ஆகலை.  ஸ்தூபிதான் ரெண்டாச்சு:(

புத்தரை நோக்கிப்போறோம். எண்கோண வடிவ மேடையின்   ஒன்னுவிட்டு ஒன்னுன்னு, ஒரு நான்கு பக்கம் விசேஷ இடங்களும்  மற்ற நான்கு பக்கம் அலங்கார டிஸைனுமா  இருக்கு.  மக்கள்ஸ்  ஆர்வமிகுதியால்  ரொம்பக்கிட்டக்கப் போயிடப் போறாங்களேன்னு  வேலியாக  ஒரு  கம்பித்தடை. சக்கரம் இங்கேயும்!


 கம்பிகளில்   ப்ரார்த்தனைக்கான  துணிகளைக் கட்டி விட்டுருக்காங்க.  புத்த கோவில்களில் ஸ்கார்ஃப் போல துணிகளை  கட்டிவிடுவது  வழக்கம்.   நம்ம கழுத்துலே அதுலே ஒன்னை  மாலையாப் போட்டால் அது  ரொம்ப  மரியாதை!  நம்மூர் கோவில்களில்  சாமிக்கு சார்த்துன மாலையை பக்தர்களுக்கு போடுவது போல!

 'சரோவரை' பார்த்தபடி இருக்கும் மேடைப்பக்கம்தான் வாசலுக்கு நேரெதிரா. இதுலே  அசோகர் கட்டுன ஸ்தூபி (வர்றப்ப  கண்ணில் பட்ட விசித்திரமான கல்கட்டிடம்!  Dhammekh Stupa) பின்னணியில் இருக்க, இப்ப ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னால் பார்த்தமே  மூலகந்தகுடீர் விஹார் புத்தர் , அவருடைய உருவம்!   கைகளில் தர்மச் சக்ர முத்திரை  காண்பித்தபடி,  முதல்  ப்ரசங்கம்  நடத்துனது ( Damma Chakkra Mudra ! ) இங்கே 'இருந்தார்'  நிலையில் .

வலம் போகிறோம். ஒரு அலங்கார பேனலை அடுத்து  இன்னொரு சிற்பம். வலது கையை  கன்னத்துக்கு அண்டைக் கொடுத்துக் கிடக்கிறார் புஜங்க சயனத்தில்.  குஷிநகர் ஸ்தூபி பின்னணியில் இருக்கு.   இங்கேதான் புத்தர் பூவுலகை விட்டுப் போனார்.  இந்த ஊர் நம்ம சாரநாத்தில் இருந்து  266 கிமீ தொலைவு.

வலத்தில் மூணாவது,  லும்பினி, அசோகர் தூண்  பின்னணியில்  ( நம்மூர் அரசியல் வியாதிகளைப்போல் வலது கை ஆள்காட்டி விரலை உயரத் தூக்கியபடி) நிக்கறார். இந்த லும்பினி என்னும் ஊர்தான் சித்தார்த்தரின் பிறந்த ஊர்.  இப்போ இந்த இடம் நேபாள நாடு. அசோகர் , புத்த மதத்தை தழுவுனதும் அங்கே போய் புத்தருக்கு  மரியாதை செஞ்சு  தூண் எழுப்பி இருக்கார்.

 (ஆமாம்.... இந்த அசோகர்  கோவிலாக  ஒன்னும் கட்டாமல்  தூண் தூணா, ஸ்தூபி ஸ்தூபியா கட்டிவிட்டதன்  காரணம் என்னவோ?  ஒருவேளை அவர் காலத்துலே இதுதான்  ஸ்டைலோ?)


வலத்தில்  கட்டக் கடைசியாக, மஹாபோதி கோவில் பின்னணியில்   அமர்ந்த நிலையில்  போதி மரத்தடியில் தவம் செய்யும் கோலம்!  ஞானம்  லபிச்ச  இடம்!  புத்தகயா.  இது சாரநாத்தில் இருந்து 270  கிமீ தொலைவில்!   நாலு சந்நிதிகளிலும்  தினசரி வழிபாடாக, பூமாலைகள்,  பூச்செடிகள்  அலங்காரங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

தாய் புத்த விஹார் கோவில் என்று  சொல்றாங்க. நிர்வாகம் இவுங்களோடதே!  (ஓ... அதனா தாய் ஏர்வேஸ் வந்து போகுது!)  தாய்லாந்துலே நாம் தடுக்கி விழுந்தா அது புத்தர் கோவிலாகத்தான் இருக்கும். இங்கே இந்தியாவில் புத்தர் 80 அடின்னா, தாய்லாந்துலே   தரிசிச்சவர்  32 மீட்டர்!
 தரிசனம் இங்கே:-)


தங்க ரேக் வாங்கி, புத்தரின் சிலைகளில் அங்கங்கே ஒட்டி வச்சுட்டுப் போறாங்க புத்த பக்தர்கள். ரெண்டு கண்களுக்கும் கூட ரேக் ஒட்டிட்டாங்க பக்திப்பரவசத்தால்!  பாவம் புத்தர். ஆசையை ஒழின்னு சொன்னவருக்கு...........

(நானும் லேசுப்பட்ட ஆளில்லையாக்கும்!  புத்தர், மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில்  ஒருவர் என்று  பலர் சொல்வதைக் கேட்டுருந்ததால், அவரையும்  பெருமாளாகி வச்சுருக்கேன் நம்மூட்டில்.  நம்ம வீட்டில்  நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான்.  போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-) கீழே படம். நம்ம வீட்டு புத்தர் பெருமா(ள்)ன். ப்ரிஸ்பேனில் இருந்து  வந்தவர்.  கொஞ்சம் புஷ்டி:-)  ஆசையை ஒழிக்கச் சொன்னவரை.....

வலம் முடிச்சு மீண்டும்  தோட்டப்பகுதிக்கு வந்தேன்.  தாமரைக்குளம் இரும்பில். ஐடியா சூப்பர்.  பரீக்ஷித்துப் பார்க்கணும் என்றபோது, நம்மூட்டு  பழையகால மெட்டல் பாத்டப் ஏற்கெனவே தாமரைக்குளமால்லே இருக்குன்றது  நினைவுக்கு வந்துச்சு.

இப்போ கொஞ்சம் பிஹைண்ட் த ஸீன்  பார்க்கலாமா?

வருசம் 1970 : புத்தர் சிலை ஒன்னு   இந்தியாவில் நிறுவலாம் என்ற எண்ணம்  வந்துருக்கு.  புத்தர் பிறந்த நாட்டுக்குன்னு ஒரு பெருமை வேணாமா?  தாய்லாந்து புத்த மத சங்கங்களின் துணையுடன்  அவுங்களே பொறுப்பெடுத்து   கோவில்கட்டி சிலை எழுப்ப முன்வந்தாங்க.  இந்தியாவில் இருக்கும்  புத்த சங்கமும்  (ம்ருகதயா மஹாவிஹார் சொஸைட்டி) கூட்டு சேர்ந்துச்சு.

ரெண்டரை ஏக்கர் நிலம்  கோவிலுக்குன்னு  ஏற்பாடாச்சு.  1997 இல்  சிலை வேலைகள் ஆரம்பம். மொத்தம் 850 கற்கள். எல்லாமே 'ஸேண்ட் ஸ்டோன் (sand stone) எனப்படும்  வகை.  ஒவ்வொன்னும் பெரிய கற்கள்தான். தேவையான  அளவு, டிஸைனில் வெட்டி பாலிஷ் போட்டு மெருகுபடுத்தவே ஆச்சு,  அஞ்சு வருசம்!

ஆறு வருசம் கடந்த நிலையில் (2003)  தடங்கல்கள்!  வேலை நின்னு போய் மறுபடி 2006-இல் மீண்டும் வேலையைத் தொடர்ந்தாங்க.  பரபரப்பா  வேலைகள் முடிஞ்சு  2011  மார்ச் மாதம் , சிலைதிறப்பு விழா ப்ரமாண்டமா நடந்துருக்கு.  ராமன் வனவாச காலம் போல  இதுக்கும்  சிலை வேலைகளுக்கு  மட்டுமே 14 வருசம் ஆகி இருக்கு பாருங்களேன். சிலைக்கான  செலவு  அப்போ ரெண்டு கோடி !

மொத்தத்தில் கனவை நனவாக்க ஆன காலம் 41 வருசங்கள்!!!

தாய்லாந்து  பழைய ப்ரதமர் வந்து  சிலைத்திறப்பு விழாவில்  கலந்துகொண்டு  அவுங்க அரசு சார்பா சிலையைத் திறந்து வச்சுருக்கார்.  உலகின் பலபாகங்களில் இருந்து புத்த பிட்சுக்களும், பக்தர்களும் வந்து சிறப்பிச்சு  இருக்காங்க. யூ ட்யூபில் விழா நிகழ்ச்சிகள் இருக்கு!

பராமரிப்புக்கோ, இல்லை அபிஷேகத்துக்கோ  புத்தர் முதுகில் ஏறிப்போக ஏணிப் படிகளை அவர் முதுகிலேயே நிரந்தரமாப் பதிச்சு வச்சுட்டாங்களே:(  புத்தர்  பாவம்........  இல்லையோ ! என்னதான் ப்ராக்ட்டிகலா இருந்தாலும் இப்படியா???

எங்கே பார்த்தாலும் சக்கரங்கள்.  24  ஆரங்கள்.  (நம்ம தேசியக்கொடியில் எத்தனை இருக்கு?)   தோட்டத்தின்  சுத்துப்புற   கம்பி வேலியின் தலைகளிலும்  அரைச் சக்கரங்களே!

 அடுத்து நாம்  புத்த மடம் நடத்தும்  நெசவு நெய்யுமிடம் போய்  துணிகள் தயாரிப்பை பார்க்கலாம் என்றார்  ஜமுனா. ஊஹூம்.... வேணவே வேணாமுன்னு   கண்டிப்பாச் சொன்னதும், அவருக்கு நம்மில் இருந்த ஆர்வம் சட்னு  காணாமப் போச்சு:-)



 (நம்ம கோபாலும்   நம்ம கைடு ஜமுனா பாண்டேவும்) 

இன்னும்  சில இடங்கள்தானே..... நீங்களே  போய்ப் பார்க்கலாமுன்னு நழுவினார்.   நானும் ஓக்கேன்னுட்டேன்.  கைடு வச்சோமுன்னா, யாருக்கு தகவல் தேவை இல்லையோ அவுங்க காதுலேதான் ஓதிக்கிட்டே வர்றாங்க. அப்பப்ப.... ஓடிப்போய் என்ன சொல்றாரு என்ன சொல்றாருன்னு கேட்டுக்கிட்டே க்ளிக்கும் 'வேலை'யைப் பார்க்கும்படியாகுது.   சரி. நம்மவர் கேட்டு வச்சுட்டு நமக்குச் சொல்வாருன்னு பார்த்தால்....................  'ஙே'

ஜமுனாவுக்குக் கணக்கு தீர்த்துட்டு,  அடுத்த இடம் போனோம்.

தொடரும்...........:-)





PINகுறிப்பு:  புத்தர் சிலைகளில் இந்தியாவில் உயரமானவர் இவர். பொதுவா உயரமான கடவுள்சிலை என்ற கணக்கில்  ஷிம்லாவில் நாம் பார்த்த  ஆஞ்சிதான்  நம்பர் ஒன். 108 அடி! 

22 comments:

said...

உயர்ந்து நிற்கும் புத்தரை பல கோணங்களில் அழகாகப் படமாக்கியிருக்கிறீர்கள். உங்கள் வீட்டு புத்தர் பெருமாளுக்கு அலங்காரம் அருமை. கருப்பு வண்ண சிலைக்கு தாமரைப் பதக்கம் எடுப்பாக இருக்கிறது:)!

said...

அதானே...? ஆசையே அவஸ்தை என்று சொன்னவருக்கு... மக்களுக்கு சிறப்பிக்க வேண்டும் எனும் ஆசை...!

said...

அசத்தலான படங்கள். குறிப்பாக புத்தரின் படங்கள்.....

said...

நம்மூட்டில். நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)

சரிதான். டெஸ்ட் பன்னிவிடலாமே என்று நானும்
உங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன்.

ஒரு காபித்தண்ணி வாயிலே ஊத்திக் கொள்வதற்கு முன்னாடியே
இப்படியா !!!

இங்கே வந்து பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=PyprFZE6lms

www.menakasury.blogspot.com

சுப்பு தாத்தா.

said...

நாமம் போடும் நாயகியா நீங்கள். இதென்னப்பா அவர்தான் சாதுன்னால் இப்படியா முதுகில் ஏறுவாங்க. சாதுவா இருக்கக் கூடதுன்னு சொல்லப் போறார் பாருங்க. உங்கவீட்டுப் புத்தரை இளவரசன் சித்தார்த்னு வச்சுக்கலாம். தோட்டமெல்லாம் கலையழகு. ஜமுனாவுக்குத் துணிக்கடையில ஏதாவது இண்டர்ஸ்ட் இருந்திருக்கும்>}}}

said...

படங்கள் அனைத்தும் அழகோ அழகு ஐயா

said...

புத்தருக்கு நாமம் அம்சமா இருக்கு !!

கடைசி படம் சூப்பர் !!

said...

உங்கள் தயவால் புத்தபிரானை வலம் வந்து வணங்கினோம். போதாதென்று புத்தரின் நாமதரிசனம் போனஸ்! அருமை டீச்சர்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வசிஷ்டர் வாயால்.............

ரொம்பவே மகிழ்ச்சியா இருக்குப்பா.

நன்றீஸ்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' நமக்கல்ல:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசனைக்கு நன்றீஸ்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

உங்களுக்கு நாமம் படு பொருத்தம் கேட்டோ:-)))))

அக்கா போட்டுவிட்டதா????

said...

வாங்க வல்லி.

இருக்க இடம் கொடுத்தா.... தலைக்கு மேலே ஏறுவாங்களாமே, நம்ம ரஜ்ஜுவைப்போல்:-)

ஜமுனாவுக்கு துணிக்கடை கமிஷன் ஒருவேளை அதிகமா இருக்கலாம். அதான்......

நாம் ஏற்கெனவே...... சூடு பட்ட ம்யாவ்ஸ் இல்லையோ:-)))

said...

வாங்க கரந்தை ஜெயக்குமார்.

நன்றி.

said...

வாங்க சசி கலா.

பத்துலே ஒன்னுன்னால் இப்படித்தான் இருக்கணும்:-))))

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க கீத மஞ்சரி.

புத்தம் சரணம் கச்சாமி வரிசையில் தமிழ்மணம் சரணம் என்று பாடாத குறை எனக்கு:-)

வருகைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க புலவர் ஐயா.

'தாய்லாந்திலே எங்கெங்கு காணினும் புத்தரடா'ன்னு பாரதி பாடி இருப்பாரோ:-)

வருகைக்கு நன்றி.

said...

புலவர் இராமாநுசம் has left a new comment on your post "இவர்தான் இந்தியாவிலேயே உயரமானவராம்!":

படங்கள் அருமை!புத்த கயாவிலும், தாய்லந்தில் உள்ள தங்க புத்தரையும்
நானும் நேரில் பார்த்திருக்கிறேன்!
நன்றி சகோதரி!

said...

புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி

புத்தர் ஒருவகையில் புரட்சியாளர்தான். ஒரு மனித வாழ்வில் நாமள்ளாம் நம்மளக் கூட ஒழுங்காப் பாத்துக்காம இருக்கோம். ஆனா அவர் ஒரு கருத்தியலையே உருவாக்கியிருக்காரு. Great. ஏசுவும் அப்படித்தானே.

தவம் (meditate) பண்றப்போ புத்தரை நினைச்சுக்கிட்டா தவம் ரொம்ப அமைதியா ஆழமா இருக்கும். சிவனுக்கும் அதேதான். ரெண்டு பேருக்கும் தவநாட்டம் அதிகம்.

பெருமாளையோ முருகனையோ நெனைச்சு தவம் செஞ்சா மகிழ்ச்சி பொங்கும். நிம்மதி நிறையும். அம்மனை நினைச்சு தவம் செஞ்சா அன்பு பொங்கும். ஏசுநாதரை நினைச்சு தவம் செஞ்சா கருணை பெருகும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு.

சங்கமித்திரைங்குற பேரைத் தமிழாக்குனா மன்றத் தோழின்னு வருது. புத்த மன்றங்களுக்குத் துணையாக இருப்பார்னு அப்படிப் பேர் வெச்சிருப்பாரு போல அசோகர்.

புத்தர் மேல தங்கத்தாட்கள். ஒன்னும் பண்ண முடியாது. கடவுள்னா காசு குடுக்குறவர்னு ஆகிப் போச்சு. அது மாறி காசு குடுக்குறவன்லாம் கடவுள்ங்குற நிலமைக்கு வந்துட்டோம். தேர்தல்லயே பாக்குறோமே.

புத்தருக்கு நாமம் அழகு. பூஜையறைல மேரிமாதா குழந்தையோட இருக்கும் சின்னச் சிலை இருக்கு. ஸ்பெயின்ல பிளாக் மடோனா கோயில்ல வாங்குனது. முருகனுக்கும் மத்த சாமிகளுக்கும் வைக்கிற பூ மேரியம்மாவுக்கும் வைக்கப்படுது. எல்லாம் ஒன்னுதான். நம்மதான் அடிச்சிக்கிறோம் :)

said...

வாங்க ஜிரா.

சொன்னது அத்தனையும் சத்தியமான உண்மை.

நாம்தான் வீணா அடிச்சுக்கறோம்:(

நம்ம வீட்டிலும் ஒரு மேரி இருக்காங்க.

ஃபாதிமா ! Our Lady of Fatima (Portugal)

said...

படங்கள் அழகு. தகவல்களும் அறிந்தோம்.

said...

புஷ்டியா புத்தர் அழகு நடையும், பின்னே புத்தரும்