Monday, July 01, 2013

மலை முகடு என்னும் உலுவாட்டு .......... (பாலி பயணத்தொடர் 8 )

ஒன்னேகால் மணி நேரப் பயணத்தில் சின்னதா ஒரு மலைப்பாதை வழியா வந்து சேர்ந்த இடம் உலுவாட்டு.  நம்ம ந்யோமேன் சொன்னதுபோல  கொஞ்சம் ட்ராஃபிக் அதிகமே. தூரம் என்னவோ ஒரு 29 கி மீதான். கூட்டாவில் இருந்து  கிளம்பி தென்மேற்குக் கடலோரம்  வரணும்.


குன்றின் மேலே இருக்கும் கார் பார்க் பெருசாத்தான் இருக்கு.  உலுவாட்டு கோவில் பார்க்க ஆளுக்கு  இருபதினாயிரம் ரூபாய் கட்டணம்.  டிக்கெட்டைக் கிழிச்சுக் கொடுத்துட்டு ஒரு பர்ப்பிள் கலர் துணியை கோபாலின் இடுப்பில் கட்டிவிட்டாங்க. முழிச்சுப்பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் ஒரு அகலமான மஞ்சள் ரிப்பன் கொடுத்து இடுப்பில் கட்டிக்கச் சொன்னாங்க. கோவிலில் இருக்கும் தெய்வங்களுக்கு நாம்செய்யும் மரியாதையாம் இது!

இந்தக் கோவில் தீய சக்திகளிடம்  இருந்து பாலித்தீவு முழுசையும் பாதுகாப்பதாக ஒரு ஐதீகம். இங்கே நாம் என்ன மாதிரி நடந்துக்கணுமுன்னு எச்சரிக்கை எழுதிப்போட்டுருக்காங்க. புனிதக் கோவில்!

வாசல் கேட்டைக் கடந்து மரங்கள் அடர்ந்த  கல்பாவிய பாதையில் போறோம். கொஞ்ச தூரத்தில் ஒரு இடத்தில்  சின்னக்கூட்டம் இருப்பதைப் பார்த்து 'என்ன ஆடுது'ன்னு கேட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். குரங்கன்ஸ்க்கு  ரெண்டுபேர் தின்னக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அப்பக் கட்டைசுவர்மேலே ஏறி நம்ம பக்கமா வந்த குரங்கை நான் கவனிக்கலை. கண்ணாடி கண்ணாடின்னு ஒரு ஆள்  அதட்டுனார். ஐயோ...எச்சரிக்கையை எப்படி மறந்தேன்! நல்லவேளையா சட்ன்னு இடம்  விட்டேன்.

(ஏய்....கிட்டவராதே..... க்ளிக்கிருவேன்.....)

இன்னும் கொஞ்சதூரம் போனதும்   இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா பெரிய முற்றம் ஒன்னு.முழுசும் கல்பாவிய தரை!  அதுக்குள்ளே ந்யோமேன் வந்து அன்றைக்கு  நாம் பார்க்கப்போகும்  நடனத்துக்கான டிக்கெட்டை வாங்கி  வச்சுடறேன். நீங்க எதிரில் முற்றத்துக்கு அப்பாலே இருக்கும் கோவிலுக்குப் போயிட்டு வந்துருங்கன்னார். நடனம் பார்க்க ஆளுக்கு எழுபதாயிரம் ரூபாய்.


நமக்கிடதுபக்கம் ஆர்ப்பரிக்கும்  கடல்.  கடலை எட்டிப் பார்த்தபடியே  எதிரில் இருக்கும் குன்றின் மேல் ஏறுகிறோம்.  படிகள் அங்கங்கே இருந்தாலும் உடைஞ்சு கிடக்கு.  கட்டைச்சுவருக்கு  அந்தப்பக்கம் வீசி அடிக்கும் அலைகளின் ஓசை.  டேஞ்சர் தான். இதுக்குள்ளே  பாதி வழியில்  அந்தப் படிகளில் நமக்கு எதிரா இறங்கி வரும் நபர்கள், கண்ணாடியைக் கழட்டிருன்னு எச்சரித்தார்கள். அதில் ஒருவர்  கழுத்து செயின், காது தோடு இப்படி மின்னும் சமாச்சாரமெல்லாம் ஆகாதுன்னதும்  கண்ணாடியைக் கழட்டிக் கைப்பையில் போட்டுக்கிட்டு துப்பட்டாவால் மூக்கைவிட்டுட்டு  தலை கழுத்து எல்லாத்தையும்  மூடிக்கெட்டினேன்.  கைப்பை  பத்திரம் என்றார் இன்னொருவர். போச்சுடா.....

ஊனக்கண் இனி இல்லை.எல்லாம் ஞானக்கண்ணேன்னு 'ஹலோ..... நீங்க யார்? எங்கிருக்கீங்க'ன்னதுக்கு  'அதெல்லாம் பயப்படதே நான் இருக்கேன்லெ' என்றுகுரல் கொடுத்தார் கோபால். இனி படிகள் , அபாயம் எதுவும் கண்ணுக்குத்தெரியாது.  ஈஸ்வரோ ரக்ஷிது....  கோபால் கை பிடித்துத் தட்டுத்தடுமாறி மேலேறிப்போனேன். எல்லாம் ஒரு பத்துப்படிகள்தான் இருக்கும்:-)


பத்தாம் நூற்றாண்டு கோவில் இது. அதுக்கேத்தமாதிரி  இடிஞ்சும் உடைஞ்சும்  கிடக்கு. அடுத்த சந்நிதி பார்க்கப்போனால்... தரை  நல்லாவே சமதளமா கல்பாவி இருக்கு. உள்ளே அனுமதி இல்லை. வழிபாட்டுக்கு மட்டுமுன்னு  போர்டு சொல்லுது.  உள்ளே தலைப்பாகை கட்டிய பூஜாரி தெரிஞ்சார். வெளியே நின்ன ரெண்டு தலைப்பாகை மனிதர்களிடம் ' நான்  ஹிந்துதான்.உள்ளே போய் சாமி கும்பிடணும்'  என்றதுக்கு  ஒரு விநாடி யோசிச்சவங்க.... உள்ளே படியேறிப் போங்கன்னார். நம்ம வழக்கப்படி வாசலில் செருப்பைக் கழட்டி விட்டதுக்கு,  செருப்போடே போங்க.  விட்டால் குரங்கு கொண்டு போயிரும் என்றார். மரியாதை, மனசில் இருந்தால் போதும் என்றோ!!!



உள்ளேயும் சிதிலமாகத்தான் இருக்கு.  வாசலுக்கு எதிரா ஒரு மாடத்துலே மர அலமாரி போல ஒன்னு. அதுக்கு  ஊதுபத்தி காமிச்சுட்டு  இருந்த பூஜாரியிடம் , என்ன சாமின்னு கேட்டதுக்கு  'விஸ்னு'  என்றார்.  அட நாராயணா!!!  விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருக்கும்  ரெண்டு மூணு ஸ்லோகம் சொல்லிக் கும்பிட்டோம்.  கண் விரியப் பார்த்த பட்டர் தீர்த்தம் கொண்டு வந்து தந்தார். சடாரி ஒன்னும் இல்லை. பிரசாதமாக் கொஞ்சம் பூ கிடைச்சது. அலமாரிக் கதவை திறந்து காமிங்கன்னு ' கை ஜாடை'  செஞ்சதும்  சந்நிதி கதவு திறந்தது.

உள்ளே..... வெறும் மஞ்சள் துணி. பத்மாசனா என்று பல கோவில்களில்  வீட்டுக்கோவில் உள்பட  வச்சுருக்காங்களே இங்கே அப்படி  மஞ்சளா சாமித்துணி போர்த்த ஒரு வெற்றிடம். பெருமாள் ஆவாஹிச்சு இருப்பதாக  நினைச்சுக்கணும்.

நாம் உள்ளே இருப்பதைப் பார்த்து  இன்னும் சிலர் படியேறி வந்து சந்நிதிக்கு முன் நின்னு கையெடுத்துக் கும்பிட்டாங்க.

Empu (Sage) Kuturan, என்ற  சந்நியாசி  ஜாவாத்தீவில் இருந்து பாலிக்கு  பத்தாம் நூற்றாண்டுகளில் (மான்  மேலே ஏறி )வந்திருந்தார்.  அவர் கட்டுன கோவில்தானாம். அதுக்குப்பிறகு பதினைஞ்சாம் நூற்றாண்டுகளில்  பாலித்தீவுக்கு  (பூசணிக்காய் மேலே உக்கார்ந்து  கடலைக் கடந்தாராம்!) வந்த இன்னொரு சந்நியாசி Danghyang Nirartha (இவர்தான் நாம் காலையில் பார்த்த டனா லாட் கோவிலைக் கட்டியவர்) இன்னும் பல சந்நிதிகளைக் கட்டிக் கோவிலை விஸ்தரிச்சார்.  அதானே....கடலும் மலையும் இருந்தால் அங்கே  இவர் கோவில் கட்டாம விட்டால்தான் ஆச்சரியம்!




அடுத்த பகுதியைப் பூட்டியே வச்சுருக்காங்க. அதுக்குள்ளேஆடிப்பாடி ஓடும் குரங்கன்ஸ் . இதுக்கு அடுத்ததா கொஞ்சம் கீழிறங்கின சந்தில் நுழைஞ்சு இன்னொரு  ஓட்டுக்குடிலுக்கு வந்தோம்.  நல்ல கிங் சைஸ்  மரக்கட்டில்கள் ரெண்டு போட்டு வச்சுருக்கு.  கொடுத்து வச்ச சந்நியாசிகள் இல்லே!!!!


நாலடி தூரத்தில்  கட்டைச்சுவர் ஓடுது. எட்டிப் பார்த்தால்..... கிடுகிடு பாதாளமா கடலும் கரையுமா!    அடிச்சு வரும் அலை மலைப்பகுதியில் மோதி வேகம் குறைஞ்சு நிதானமா கரைக்கு வந்து திரும்புது.  அழகான  இளநீல வண்ணத்துலே லேஸ் போட்ட டிஸைன்ஸ்  உள்ள கோலம் வரைஞ்சு போகும்  தண்ணீர் பார்க்கப்பார்க்கப் பரவசம்!  எல்லா அலைகளும் இப்படிக் கோலம் போட்டுத் திரும்புமா?  ஒருவேளை  90 மீட்டர் உசரத்தில் இருந்து  பார்க்கிறோமே  அதான் காரணமா !!!




இங்கே இருந்து சூரிய அஸ்தமனம் பார்க்கன்னே ஏகப்பட்ட கூட்டம் வருது. பாலித்தீவின் தென்மேற்கில் இதுக்குன்னே வாகா அமைஞ்சுருக்கு இந்தக்கோவில்.  உலுவாட்டு என்ற சொல்லுக்கு  பாறை முனையில் என்றுதான் பொருளாம். ரொம்பச்சரி.  சரியான இடம் பார்த்துக் கோவிலைக் கட்டுன புண்ணியாத்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.




வேறெங்கேயோ செஞ்சு ஹெலிகாப்டரில் தூக்கி வந்து அப்படியே இறக்கி வச்சமாதிரி இருக்கு. அந்தக் கட்டைச்சுவர் சொன்னேன் பாருங்க.... அதுலே சாய்ஞ்சு நின்னு கீழே பார்க்கும்போது.......  சுவர் மட்டும் அசைஞ்சா... அம்புட்டுதான்:(   நேரா  ஸ்ரீவைகுண்டம்!

மலை முகட்டின் ஓரமாவே இன்னொரு  பாதை கொஞ்சம் கீழிறங்கிப்போகுது. கொஞ்ச தூரத்தில் லுக் அவுட் பார்க்கவே ஒரு குடில் கட்டுனமாதிரி இங்கிருந்து தெரியுது. அங்கே போய்வர நேரமாகுமுன்னு  இங்கே இருந்தே ஒரு க்ளிக்.

சூரியன் கடல்வாயில் விழும் சமயம் நெருங்குதே!  இன்னிக்குன்னு பார்த்து மேகக்கூட்டம் சூரியனைக் காபந்து பண்ணிக்கிட்டு இருக்கு.  ஆறுமணிக்கு நடன நிகழ்ச்சி ஆரம்பமாகுமேன்னு  கிளம்பி எதிர்குன்றுக்குப் போக வழி தேடுனால்....  இங்கிருந்து கீழிறங்க அட்டகாசமான படிவரிசை இருக்கு.  அட நாராயணா..... இது தெரியாமல்  சறுக்குப் பாதையில் போனோமே:(



இங்கிருக்கும் குரங்குகளை  கண்ணாடி, கைப்பைகளைத் திருட பழக்கி வச்சுருக்காங்களாம்  சிலர். கண்ணாடியை அது தூக்கிட்டு ஓடுனதும் உதவி செய்ய வர்றதுபோல் வந்து   இருபதாயிரம்,  முப்பதாயிரமுன்னு  பேரம் பேசி  குரங்கைத் துரத்திப்போய்  பொருளை மீட்டு வந்து  தருவாங்களாம்.  பாவம்...திருட்டுக்குரங்குன்னு  பேர்  என்னவோ   குரங்குகளுக்குத்தான்:(


குரங்கை ஓட்ட ஒரு குச்சி கிடைச்சதுன்னு அதையும் சுமந்துக்கிட்டுப் படி இறங்கி  முற்றத்துக்கு வந்தால் நமக்கான  டிக்கெட்டுகளோடு ந்யோமேன் காத்திருந்தார்.  கூடவே  நடனத்தைப் பற்றிய  ஆங்கிலக் குறிப்பு ஒன்னு.


 தொடரும்.........:-)





24 comments:

said...

பத்தாம் நூற்றாண்டு கோவில் உட்பட சுவாரஸ்யமான (சிறிது பயமான) இடங்கள்...

குரங்குகளை நல்லாவே பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் திருட்டுக்குரங்குகள்...

தொடர வாழ்த்துக்கள்...

said...

படமும், கட்டுரையும் கூடவே வந்த உணர்வு...

said...

கதகளி ஆட்டம் கண்டோ துளசி?கடைசி படம்:)த்கில் மலை. அழகு அலை. பாலி காஸ்ட்யும்ல கோபால். என்னப்பா இப்படி இளைச்சுட்டார்!!

said...

மலாய் மக்கள் தலைவர் கட்டியிருக்கின்ற மாதிரி தான் உடைகள் போடுவார்கள். சமீபத்தில் முதல் முறையாக தென்மாவட்டம் (உங்க ஊரும் அங்கே தானே?) போயிருந்தேன். பல சமயம் உங்கள் பதிவுகளும் படமும் தான் என் நினைவில் வந்து போனது.

said...

படங்கள் எல்லாம் அழகு...

பயணத்தொடர் ஆரம்பத்திலிருந்து படிக்கணும்...:) அப்புறம் வரேன்.

said...

//ஊனக்கண் இனி இல்லை.எல்லாம் ஞானக்கண்ணேன்னு 'ஹலோ..... நீங்க யார்? எங்கிருக்கீங்க'//

நீங்க ஏன் காண்டாக்ட் லென்சும் உபயோகப்படுத்தக்கூடாது துள்சிக்கா?.

கடலும் மலையும் நிறைய தமிழ்ப்படங்களில் பார்த்த மாதிரியே இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டா இருக்குமோ!!

நம்மூர்களிலும் சுவாமிக்கு முன்னாடி நிக்கிறப்ப தோள்ல கிடக்கிற துண்டையெடுத்து இடுப்பில் கட்டிக்குவாங்க. மஞ்சமஞ்சேர்ன்னு மின்னும் உங்க ஒட்டியாணம் அதை நினைவுபடுத்துது :-)

கடைசிப்போட்டோவில் அருள் பாலிக்கும் தேவதையை எந்தக்கோயிலில் பார்க்கலாம்:-)))))

said...

//அழகான இளநீல வண்ணத்துலே லேஸ் போட்ட டிஸைன்ஸ் உள்ள கோலம் வரைஞ்சு போகும் தண்ணீர் பார்க்கப்பார்க்கப் பரவசம்//

திருச்-சீர்-அலை-வாய்!

திருச்செந்தூரைத் தான் இப்பிடிச் சொல்லுறது வழக்கம்!
சங்கத் தமிழ்ச் சொல்லழகு! சீர்-அலை-வாய்!

பல சீராக, அலைகள் வந்து வந்து வாய்க்கும் வாய்(ப்புறம்)
= சீர்-அலை-வாய்!

அந்தப் படங்கள் மிக்க அழகு!
அதுவும் கடலோரம் உள்ள மலை-ன்னாலே தனி அழகு தான்!
பச்சையும் நீலமும் கலக்கும் இடம்! அதில் அலையாய் நுரைக்கும் வெண்மை!

வாழ்க பாலி!
எப்பவாச்சும் போவேன்; முருகன் கூட்டிப் போவான்!

said...

//பட்டர் தீர்த்தம் கொண்டு வந்து தந்தார். சடாரி ஒன்னும் இல்லை//

சடாரி = சட+ஆரி = நம்மாழ்வார் அல்லவா?
பாலி தீவு வரைக்குமெல்லாம் அவரு famous இல்ல:)

இது தென்னிந்திய பெருமாள் கோயில்களோடு சரி;
வடக்கில் சிற்சில இடங்கள், நேபாளத்தில் உண்டு! ஆனால் அவை இராமானுசர் பயணம் சென்ற இடங்கள்; அதனால் நேபாளத்திலும் தமிழ்ப் பாசுரம் + சடாரி உண்டு:)

மற்றபடி, சடாரி (எ) இறைவன் திருவடிகளைத் தலைமேல் வைப்பது, ஒரு தெக்கத்திப் பழக்கம் மட்டுமே!
------

//இங்கிருந்து கீழிறங்க அட்டகாசமான படிவரிசை இருக்கு. அட நாராயணா..... இது தெரியாமல் சறுக்குப் பாதையில் போனோமே:(//

ஹிஹி!

பழனி மலையிலும் இதே போலத் தான்! முட்டி வலி உள்ளவர்கள், படிகளில் ஏறாமல், சறுக்குப் பாதை/ யானைப் பாதையில் நடந்து போகலாம்!

ஆனா, படிகளில் நடந்தாத் தான் இயற்கைக் காட்சிகள், பழனி சூழ் வயல்கள் எல்லாம் தெரியும்!
தமிழில், பழனம் -ன்னாலே வயல்! அதான் பழனி! இயற்கை முருகன்! பழம் நீ எல்லாம் சும்மா புராணக் கதை:)

Rope Car-இல் நிறைய பேர் போயிடறாங்க!
Atleast, இறங்கும் போதாச்சும், படிகளில் இறங்கினாத் தான், அந்தக் குளுகுளு காத்தும், இயற்கையும், முருகனும் நம்ம கிட்ட வந்து மோதும்:)

said...

மகிழ்சியாக சுற்றிவந்தோம்.

கடலும் மலையும் என அழகிய காட்சிகள்.

said...

எல்லா இடமும் விஸ்தாரமா இருக்கு .கடல், அதை ஒட்டி மலை பச்சை பசேல்னு கண்ணுக்கு, மனசுக்கு குளிர்ச்சியா இதமா , மனச அள்ளுது படங்கள் .
மஞ்சள் துணி விஸ்ணு புதுசு !! குடையும் கம்பமா துளசி, அட்டகாசம் :))

said...

உங்கள் புண்ணியத்தில் நானும் பல இடங்களைச் சுற்றிப் பார்த்து விடுகிறேன்....

அந்த மலைமுகட்டிலிருந்து கடல் கோலம் போடும் படங்கள் அற்புதம்....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அழகாய் இருக்கிறாய், பயமாக இருக்கிறது வகைதான் இங்கே எல்லாமே:-)

திருட்டு மனுஷ்யர்கள் என்றுதான் சொல்லணும்:(

said...

வாங்க சங்கவி.

நான்பெற்ற இன்பம் வகையில் இது உங்களுக்கும் பிடிச்சுருக்கு என்பது எனக்கு மகிழ்ச்சியே!

said...

வாங்க வல்லி.

தொப்பை மட்டும் இளைக்கலையேப்பா:-)

கதையும் களியும் கண்டேன் கண்டேன்!

said...

வாங்க ஜோதிஜி.
இங்கே பாலி பாஷாவில் நிறைய மலாய் சொற்கள் இருக்கு!

இது இங்கே 'ஆன்மீக உடுப்பு'!

தென் தேசத்தில் எங்கெல்லாம் போனீர்கள்?

உங்க ஊர் சாயப்பட்டறைகள் அந்தப் பக்கம் இடம் மாறி ஆற்றை மாசு படுத்துதுன்னு உறவினர் சொன்னார்:(

said...

வாங்க கோவை 2 தில்லி.

அதிகம் இல்லைப்பா.இப்பதான் எட்டு.

நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கத் தோணலையேப்பா:(

எப்படியும் கண் அறுவை சிகிச்சை நடக்கும்போது..... 'பார்க்க'ணும்.

ஷூட்டிங் ஸ்பாட்டா இருந்தால்....கேமெராவை குரங்கு எடுத்துப் போயிடாதா?

பயபக்தியாத்தான் நானும் இடுப்பில் கட்டிக்கிட்டேன்.

ஒட்டியாணம்...ஆஹா எனக்குத் தோணலையே! டாங்கீஸ் டாங்கீஸ்.

கடைசிப்பட( ஈவில்) தேவதை கிறைஸ்ட்சர்ச் கோவிலில் இருக்கு:-)


said...

வாங்க கே ஆர் எஸ்.

திருச்சீரலைவாயில் தண்ணீர் கரைக்கு வந்து அப்படியே 'பின்' வாங்குது. கோலம் பார்த்த நினைவில்லை:(

அந்த சறுக்குப்பாதை.... என் கால்கள் சறுக்கும் பாதை. உடைந்த படிகளின் ஓரத்தில் கால் வைத்தால் மண் சரிஞ்சு கால்கள் சறுக்கும் பாதையாக்கும் கேட்டோ:(

அதுவும் படிகள் ஒவ்வொன்னும் ரொம்பவே உயரம்வேற:(

சீக்கிரம் பாலி பலிக்கட்டும்.ஆசிகள்!

said...

வாங்க மாதேவி.

கூட வருவதற்கு நன்றிகள்ப்பா.

said...

வாங்க சசி கலா.

ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.

கோலெடுக்க வேண்டியதாப்போச்சு:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்களுக்கு இன்னும் வயசிருக்கு உலகம் சுற்ற.

ஆனால் ஒன்னு கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது. எனக்கு 60+ இல் கிடைச்சது.

விரைவில் நேரில் காண வாழ்த்துகின்றேன்.

said...

குன்றில் பழம் கோயில். பெங்களூர் நந்தி ஹில்ஸை நினைவு படுத்துகிறது. அங்கும் கோவில் முன் குரங்குகள் அதிகம். கோவில் அருகே செல்லும் போதே காரில் 10,15 ஏறிவிடும்.

வாயில்லாப் பிராணிகளை, பாவம் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள்!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நந்தி ஹில்ஸ் கொசுவத்தி ஏத்துனதுக்கு நன்றிப்பா.

மனுசனைப்போல் சுயநலமிகள் வேறுண்டோ:(

said...

உலுவத்து, மற்றும் பாலி தீவைப் பற்றிய உங்கள் பதிவு அருமை. என் வலைப்பூவிற்கு மாதிரியாக எடுத்துக் கொள்கிறேன். நன்றி