Sunday, May 01, 2005

முதியோரும் இளையோரும்!!!! தொடர்ச்சி

நாங்க கொஞ்ச நேரம் டீச்சரோட பேசிக்கிட்டே இருந்தோம். இப்ப எங்கே போய் பியானோ படிக்கிறான்னு கேட்டாங்க.
இது இன்னொரு பாட்டி டீச்சர்கிட்டேன்னு சொன்னேன்! அவுங்களுக்கு ஒரே சிரிப்பு! சந்தோஷமா இருந்துச்சு.

நாங்க வெளியே வந்தப்ப, அவுங்களும் எங்க கூடவே வெளி வாசல் வரைக்கும் வந்தாங்க. அப்ப அங்கே தோட்டத்துலே
இருந்த மத்த தாத்தா, பாட்டிங்கெல்லாம் ரொம்ப ஆவலா எங்களைப் பார்த்தமாதிரி இருந்துச்சு! என்ன சொன்னாலும்
நாம் வேற நாடு இல்லையா? நம்ம உருவமே நம்மை இனங்காட்டிடுமே!


'என்னோட மாணவி'ன்னு மகளை அறிமுகப்படுத்துனாங்க நம்ம டீச்சர். மரியாதைக்கு ரெண்டு வார்த்தை பேசிட்டு
நாங்க வந்துட்டோம்.

நானும் நினைச்சேன், 'இப்ப நம்ம டீச்சருக்கு நல்லாப் பொழுது போகும். வீட்டுலே ஒண்டிக்கட்டையா உக்காந்துக்கிட்டுப்
பேச்சுத்துணைகூட இல்லாம விக்விக்குன்னு இருந்ததுக்கு இப்போ விடிவு வந்துச்சு'ன்னு!

நான் இந்த ஊருக்கு வந்தப்ப என் மனசுலே பளிச்சுன்னு பட்டது என்னன்னா, இந்த பாட்டிங்க தான்! தாத்தாங்களை
யாரு கவனிச்சா? மகளுக்கு அப்ப அஞ்சு வயசு. ஸ்கூல் போக ஆரம்பிச்சிருந்தா. அவளைக் கொண்டு போய் ஸ்கூல்லே
விட்டுட்டு, அங்கேயே 'பேரண்ட் ஹெல்ப்'ன்ற பேருலே கொஞ்ச நேரம் ( ஒரு பத்துமணிவரை) இருப்பேன். எல்லாம்
மனசுக்குள்ளெ இருக்கற பயத்தாலேதான். அப்ப மொத்த ஸ்கூலிலும் இந்திய மாணவர்கள் ரெண்டே பேருதான்.
அதுலே ஒருத்தன் பையன். ஏதாவது இன சம்பந்தமா நடந்துடுமோன்ற பயத்துலே முக்காவாசி நேரம் நான் அங்கேயே
இருப்பேன். அதுக்குத்தோதா அங்கே இருக்கற லைப்ரரியில், வாலண்டியரா வேலை செஞ்சேன். அது ஒரு தனிக் கதை!

அதுக்கப்புறம் அப்படியே ஷாப்பிங் மாலுக்குப் போயிட்டு, வாங்கறதை வாங்கிக்கிட்டு, வீட்டுக்கு வருவேன். அந்த
நேரங்களிலே, நிறைய பாட்டிமாரை மால்களிலே பாக்கறதுதான். ரொம்ப நல்லா உடை உடுத்திக்கிட்டு வருவாங்க.
அளவான மேக்கப், குளிருக்கு நல்ல பேண்டிஹோஸ், ட்ரெஸ்ஸுக்கு மேட்ச்சா கழுத்துலே மணிமாலைங்க, காதுலே
கம்மல்! அதுவும் ஆட்டுக் கம்மல்( ட்ராப்ஸ்)இதெல்லாம் வெறும் காஸ்ட்யூம் நகைங்கதான். ஆனா கை விரலிலே
மட்டும், மின்னுற வைர மோதிரங்கள்!!! தலைமுடியெல்லாம் அளவா வெட்டி, பெர்ம் செஞ்சுக்கிட்டு, நீட்டா இருப்பாங்க.
நல்ல நிதானமா நேரம் எடுத்துக்கிட்டு, அலங்கரிச்சுக்கிட்டு வர்றாங்க போல! ஆனா, நானு? காலையிலே எழுந்ததுலே
இருந்து ஓடிக்கிட்டு இருக்கறதுலே, தலைமுடியெல்லாம் கலைஞ்சு, 'பரக்காவெட்டி'யாட்டம் இருப்பேன்!

நம்ம ஊர்ப் பாட்டிங்களை மனசு தானா நினைச்சுக்கும். நம்ம கலாச்சாரத்துலே அலங்காரமே வயசுக்குத் தகுந்தாப்பலதானே?
அதுவும், பொண்ணு வளர்ந்துட்டா, அந்தத் தாய்கூட தன்னை அலங்கரிச்சுக்கறதிலே ரொம்பக் கவனமா இருக்கணும்.
இல்லேன்னா 'நாலுபேர்' வாயிலே விழுந்து வைக்கும்படி ஆகிடும்! எங்க பெரியக்காவுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து
எங்க அம்மா தலைமுடியை பின்னிக்காம, அப்படியே முறுக்கிக் கொண்டை போட்டுக்கிட்டது இன்னும் நல்லாவே
நினைவிலிருக்கு!

அதுமட்டுமில்லை. நம்ம ஊர்லே சில வீடுகளிலே வயது போன ஆட்களை நடத்தற விதம் இருக்கே, அப்பப்பா......
எனக்குத் தெரிஞ்சே,பக்கத்து வீட்டுப் பாட்டி சதா திண்ணையிலே உக்காந்துக்கிட்டு வெத்தலை பாக்கை ச்சின்ன உரல்லே
இடிச்சுக்கிட்டு கண்ணைச் சுருக்கிப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. வீட்டுக்குள்ளே என்ன நடந்தாலும், இவுங்களுக்கு அங்கே
அனுமதி இல்லையாம். சாப்பாட்டையும் கும்பாவுலே போட்டுக் கொண்டுவந்து தர்றவரைக்கும் இந்த வெத்தலை பாக்குதான்
துணை! நான் சிலசமயம் அவுங்க வீட்டுத் திண்ணையிலே ஏறிப் போய் வெத்தலை இடிச்சுக் கொடுத்திருக்கேன். எப்பவாவது
சில நேரம் நம்ம வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே என்னவோ சொல்லி அழுதுகிட்டு இருப்பாங்க. அப்ப நான் ரொம்பச் சின்னவ.
என்ன நடந்திருக்குமுன்னு புரிஞ்சுக்கமுடியாத வயசு.

'வயசாச்சுல்லே. குடுக்கறதைத் தின்னுட்டு கிருஷ்ணா ராமான்னு இருக்கணும்' இந்த டயலாக்கை அடிக்கடி கேட்டிருக்கேன்.
ஆனா, இந்த நாட்டுலே பாருங்க,யாரு தயவும் இல்லாம சுதந்திரமா இருக்காங்க,வயது போனவுங்க! பொருளாதார
சுதந்திரம் இருக்கு! உண்மையைச் சொன்னா அதுதான் நிஜமான சுதந்திரம். யாரு கையையும் எதிர் பார்க்காம வாழறது.
இங்கே அரசாங்கம், வயது போன ஜனங்களுக்கு வாழ்க்கை உதவி பணம் கொடுக்குது. அதனாலே அவுங்க, பணத்துக்காக
புள்ளைங்களைச் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட வயசு ( இப்போ அது 65) ஆனவுடன்,
இது கிடைக்குது. முந்தியெல்லாம் அவுங்க கிட்டே ஏற்கெனவே எவ்வளவு சொத்து இருக்கு என்ற கணக்கெல்லாம்
இல்லாம இருக்கறவனுக்கும், இல்லாதவனுக்கும் ஒண்ணுபோல 60 வயசானவுடனே கொடுத்துக்கிட்டு இருந்தது.
ஆனா, இப்ப முதியோர்கள் எண்ணிக்கைகூடிவர்றதாலே, வயது வரம்பையும் 65 ஆக்கிட்டங்க. இப்ப சொத்து விவரமெல்லாம்
கேட்டு, அதுக்கேத்தாமாதிரி உதவித் தொகை கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அது மட்டுமில்லாம, இப்ப அரசாங்கம்
சொல்லுது, 'சேமியுங்க உங்க ஓய்வு காலத்துக்கு'ன்னு! நமக்கு ஓய்வு வரும்போதுதான் தெரியும் அப்பத்து நிலமை என்னன்னு!
ஜனத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக் கூடிக்கிட்டே வருதில்லையா?

பாட்டிங்களைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தேனே, இதெல்லாம் வயசானாலும், ஆரோக்கியமா இருக்கறவங்களைத்தான்.
இப்ப இவுங்களுக்கே முடியாமப் போச்சுன்னா, சமையல் வேலை, மத்த உதவிங்க செஞ்சு கொடுக்கன்னு 'ஹோம் ஹெல்ப்'
கிடைக்குது. 'மீல்ஸ் ஆன் வீல்ஸ் சர்வீஸ்' கூட இருக்கு. இதை முழுக்க முழுக்க வாலண்டியர்களைக் கொண்டே நடத்தறாங்க.
இந்த வகையிலே இல்லாம அதாவது எல்லாத்துக்கும் உதவி எதிர்பாக்கறவங்களா இருந்தா முதியோர்கள் இல்லத்துக்குத்தான்
போகணும்.

இங்கே குடும்பம் என்ற அமைப்புலே புள்ளைங்க பதினெட்டு வயசு வரைக்கும்தான் வளர்றாங்க. அப்புறம் அதுங்க
படிக்கறதுக்கு, வேலை செய்யறதுக்குன்னு போயிடுதுங்க. அதைத்தான் பெற்றோரும் எதிர்பார்க்கறாங்க. மிஞ்சிமிஞ்சிப்
போனா இருவது வயசு. அதுக்கப்புறமும் பிள்ளைங்க தாய் தகப்பன் கூட இருக்கற குடும்பத்தை விரல் விட்டு எண்ணிரலாம்.

அவுங்கவுங்க தன்னுடைய வாழ்க்கையைப் பாத்துக்கிட்டு இருந்துடறாங்க. இதுலே வயசான பெற்றோரை யார்
பாத்துக்கறாங்க?

அன்னையர்கள் தினம், தந்தையர்கள் தினம், கிறிஸ்மஸ் இந்த நாட்களிலேதான் முதியோர்கள் இல்லத்திலே ஆட்கள் குறைவாம்.
அன்னைக்கு மட்டும் அவுங்கவுங்க புள்ளைங்களோட வீடுங்களுக்கு போயிட்டு வராங்க! உள்ளூருலே புள்ளைங்க
இல்லைன்னா அதுவும் இல்லை!

நானும் மகளும் டீச்சரை ரெண்டு வாரத்து ஒருதபான்னு போய்ப் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்படி பாத்துக்கிட்டு
இருக்கறப்பவே, அவுங்க நிலமை மோசமாக ஆரம்பிச்சிருச்சு. அறையை விட்டு வெளியே வர்றதேயில்லை!
சுத்தமும், சுகாதாரமும் குறைஞ்சது போல இருந்துச்சு! படுக்கை விரிப்புங்க மாத்தாம இருந்ததையும் ஒருக்கா கவனிச்சேன்.
இதைப் பத்தி நான் கேக்கமுடியுமான்னு தெரியலை. மனசுக்குள்ளே ஒரு பாரம் வந்தமாதிரி இருந்துச்சு! டீச்சரும்
ஏதோ வலியிலே இருக்கறது போல முகத்துலே சந்தோஷமே இல்லாம இருந்தாங்க. கேட்டதுக்கு ஒண்ணும் இல்லைன்னு
சொன்னாங்க.

அங்கே போயிட்டு வர்ற, ஒவ்வொரு முறையும் எனக்கு மன அழுத்தம் கூடிக்கிட்டே வருது. காலும் கையும்
நல்லா இருக்கற வரைக்கும்தான் வாழ்க்கைன்னு தோணிப் போச்சு. என்னுடைய நிலையையும் புலம்பலையும்
பார்த்துட்டு, எங்க இவர் கொஞ்ச நாள் சமாதானமா என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார்.

ஒருமுறை, நானும் இவருமாப் போனோம். அன்னைக்கு அங்கே இருந்த நிலமை... ஐய்யோன்னு ஆயிருச்சு.
ரொம்ப அழுக்கான அறை. உடுப்பு கூட மாத்திவிடலை. மடிச்சுப் போட்டமாதிரி கட்டிலிலே அலங்கோலமா
விழுந்து கிடந்தாங்க. (என்னை அங்கே எல்லாருக்கும் பார்த்துப் பழக்கமானதாலே முந்தி மாதிரி யாரும் டீச்சர்
அறைக்குக் கொண்டு போறதில்லை) கூப்பிட்டுப் பாத்தும் கண்ணைத் திறந்து எங்களைப் பார்த்தாங்களே தவிர,
எங்களைத் தெரிஞ்சுக்கிட்ட அடையாளம் முகத்திலே வரலை!

நான் உடனே அங்கிருந்த 'பட்டனை' அமுக்கி உதவியாளரைக் கூப்பிட்டேன். அவுங்க ரொம்ப நேரம் கழிச்சுதான்
வந்தாங்க. என்ன இப்படி இருக்கேன்னு கேட்டதுக்கும் சரியாப் பதில் சொல்லலை. ஏனோதானோன்னு பாத்துக்கற
மாதிரி உணர்ந்தேன். போச்சு, என் மன நிம்மதி! எங்க இவருக்கும் அன்னைக்குதான் முதல் முதலா நிலைமையோட
விவரம் புரிபட்டிருக்கு.

நான் படற மனக்கஷ்டத்தைப் பார்த்துட்டு என்னை இனிமே அங்கே போகவேணாமுன்னு இவரு கேட்டுக்கிட்டார்.
என்னென்னவோ முயற்சி செஞ்சும் அங்கே டீச்சர் இருந்த நிலமையை என்னாலே மறக்க முடியலை! ஒரு மாசம்
போயிருச்சு.

பேப்பர் வாங்கறப்பெல்லாம்,( நாங்க சனிக்கிழமை மட்டுமே பேப்பர் வாங்கறது வழக்கம்) 'ஃப்யூனரல் நோட்டீஸ்'
பக்கத்தை என்னையறியாமலெயே பாக்கற வழக்கம் வந்துருச்சு. 'என்னத்தைத் தேடறென்'னு நினைச்சப்ப நான்
க்ரூரமா இருக்கறதுபோல இருந்துச்சு!

ஒரு நாள் மனசைத் திடப்படுத்திக்கிட்டுப் 'ஃபோன்லேயாவது விசாரிக்கலாம், டீச்சர் எப்படி இருக்காங்கன்னு' ஃபோன்
போட்டேன். இங்கே 'ப்ரைவஸி ஆக்ட்' இருக்கறதாலே அவ்வளவு சட்டுன்னு விவரம் கொடுக்க மாட்டாங்க. விவரம் சொன்னப்ப
எனக்கு வந்த பதில் 'அந்தப் பேருலே இப்ப அங்க யாரும் இல்லை'

இப்ப யாரும் இல்லைன்னா என்ன அர்த்தம்? வேற இடத்துக்குப் போயாச்சா? இல்லை, இந்த உலகை விட்டே
போயாச்சா? ஒண்ணும் புரியாமலேயே இப்ப மூணு வருசம் ஓடிப்போச்சு!

இது எனக்கு ஏற்பட்ட அனுபவம். ஆனா இப்படித்தான் எல்லா இடமும் இருக்குமுன்னு சொல்ல முடியாதில்லையா?

முதியோர் இல்லத்துலே இருக்கறவங்க 100 வது பிறந்த நாள் கொண்டாடினாங்கன்னு அப்பப்ப டி.விலே நியூஸ்
வர்றதுண்டு. இவுங்களுக்கு 'இங்கிலாந்து அரசியோட கையொப்பமிட்ட பிறந்த நாள் வாழ்த்து' அதிகாரபூர்வமா
'பக்கிங்ஹாம் அரண்மனையிலே இருந்து வந்துருது!

சில முதியவர்கள் அங்கேயே சந்திச்சு, காதலிச்சுக் கல்யாணமும் செஞ்சுக்கறாங்க. ரெண்டு பேருடைய கொள்ளு,
எள்ளுப் பேரன் பேத்திங்களொட 'மணமக்கள்' படங்களும் பேப்பருலே வந்துக்கிட்டுத்தான் இருக்கு! அதுக்கப்புறமும்
அங்கேயேதான் வசிக்கறாங்க. தினமும் 'டீ' முடிஞ்சபிறகு, அநேகமா எல்லோரும் ஒண்ணாக்கூடி கொஞ்ச நேரம்
பேசிக்கிட்டு இருப்பாங்களாம். சில நாட்களிலே நேத்துவரைக்கும் வந்தவுங்களிலே ஒருத்தர் 'காணாம' போயிடுவாங்க.
அன்னைக்கு மத்தவங்க அதைப் புரிஞ்சுக்கிட்டு, கொஞ்சம் அமைதியா, மெதுவாப் பேசிக்கிட்டு இருப்பாங்களாம். எல்லாம்
ஒரு ரெண்டு நாளைக்குத்தானாம். அப்புறம் பழையபடி பேச்சு, சிரிப்புன்னு இருப்பாங்களாம்.

'கடவுளுக்காகக் காத்திருப்பது' ன்னு சொல்றது இதைத்தானோ?




5 comments:

said...

துளசி
மிக ஆர்வமாக எழுதியிருக்கிறீர்கள். இஙகேயும் முதியோர் இல்லத்திற்கு குழந்தைகளை பள்ளியிலேயே அழைத்துப் போவதுண்டு. மருத்துவ துறையில் படிக்க விழையும் மாணவி/வர்கள் தன்னார்வ தொண்டும் செய்வதுண்டு.நிறைய முதியோர்கள் வீடிலிருந்தால் அரசின் பேருந்து அழைத்துக்கொண்டு கடைகள் என்று சுற்றி காட்டுவதுடன், பொழுதுபோக விளையா இசை கேட்க என்று ஏற்பாடு செய்கிரோம். ஆனால், இது பற்றி தெரிந்த இந்தியர்கள் மிக குறைவு.பணிக்கு சென்றபின், வீட்டில் தனியே இருக்காமல் மற்றவருடன் பழக பேச இது நல்ல வாய்ப்பு. நாம் இதை அவ்வளவாக பயன் படுத்துவதில்லை.
நன்றிகள்

said...

நன்றி பத்மா.

இப்பொழுது இங்கே இந்தியர்களின் ஜனத்தொகை கூடி வருவதால். இந்தியமக்களுக்காகவே
சில முதியோர் இல்லங்கள் ஆக்லேண்டில் நடந்து வருகிறதாம். இது நல்லது. குறைந்த
பட்சம், இவர்களுக்கு நம் சாப்பாடு கிடைக்குமல்லவா?

நானும் ஒன்று கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்கலாமா என்று யோசிக்கிறேன்.

said...

துளசி,

பியானொ பாட்டியின் கதை படிக்க வேதனையாக இருந்தது. நனறாக விவரித்து எழுதியிருந்தீர்கள்.

அன்புடன்,
தாரா.

said...

அன்புள்ள தாரா,

நன்றி!!!!

said...

Hi thulasi madam
I am crying.. you conveyed the core in deep sentences. Those final lines gave me fear about our future. Excellent writting.

M. Padmapriya