Wednesday, January 05, 2005

திரும்பிப் பார்!!!!!

( போன வருசக் கடைசியிலே எழுதினது)


இந்த வருஷம் முடியப்போகுது. நல்லதும் கெட்டதுமா பலதும் நடந்திருக்கு. வருச முடிவுக்குக் கணக்கு
எடுக்கறது உலகத்துலே எல்லா இடத்துலெயும் வழக்கமா நடக்கறதுதானே?


நம்ம கணக்குக்கு என்ன வருதுன்னு பாக்கணுமில்லே. இப்படிச் சொல்லிகிட்டே இருந்தா எப்படி?
வேலையைக் கவனிக்கலாம்.

நல்லதா? கெட்டதா? எது மொதல்லே வரும்?

நல்லதையே மொதல்லே பார்க்கலாம்!

போன வருச வைகுண்ட ஏகாதசிக்கு இங்கே இருக்கற கோயிலுக்கு ( இந்த ஊர்லே ஒரு 'ஹரே க்ருஷ்ணா'
கோயில்தான் இருக்கு. மத்தபடி முக்குக்கு முக்கு சர்ச்சுங்கதான். சொல்ல மறந்துட்டேனே, ஒரு 'பள்ளிவாசல்'
கூட இருக்கு!)போயிருந்தோம். இந்தக் கோயிலிலே ஞாயிற்றுக் கிழமைதான் கூட்டம் நிறைய இருக்கும்.
அன்னைக்கு அங்கெ பூஜை முடிஞ்சவுடன் சாப்பாடும் தருவாங்க! நாங்களும் எப்பவாவது ஞாயிற்றுக் கிழமை
போவோம். சில சமயம் ஞாயிறு மத்தியானம் போய், சமையலறையிலே உதவியும் செய்வோம்.

அந்த வைகுண்ட ஏகாதசியன்னைக்கு ஒரு சனிக்கிழமையா இருந்துச்சு. அங்கே சாயந்திரம் போனா,
அட்டகாசமான அலங்காரத்துடன் 'சாமி' இருக்கார்! இங்கே ஒரு விஷயத்தைக் கண்டிப்பாச் சொல்லணும்.
இந்தச் சாமி சிலைகளுக்கு எப்படித்தான் அலங்காரம் செய்யறாங்களோ? ஒவ்வொரு நாளும் வித விதமா உடை!
அதுமட்டுமா வேற வேற நகை அலங்காரம்! எல்லாம் படு 'மேட்ச்சிங்'கா இருக்கும். அந்த அலங்காரத்தைப்
பாக்கறப்பவே, அந்த 'டெடிகேஷன்' அப்பட்டமாத் தெரியும்! அதுமட்டுமா... நாங்கெல்லாம் இந்தக் குளிருக்குப்
பயந்து ஷர்ட்டும் பேண்ட்ஸ்சும் கோட்டும் போட்டுக்கிட்டு இருக்கறப்ப, அவுங்கெல்லாம் பஞ்சக் கச்சம் வச்ச வேஷ்டி,
புடவைன்னு இருப்பாங்க! அதுவும் அந்தப் புடவைங்களைப் பார்த்தா அழுகையே வந்துரும். அரதப் பழசாவும்,ஐய்யோன்னும்
இருக்கும்! உண்மையைச் சொன்னா, நம்ம ஊர்லே வீட்டுவேலைகளிலே உதவி செய்யறவங்ககூட இதைக் கொடுத்தா
நம்ம மூஞ்சியிலேயே விசிறியடிச்சிருவாங்க! ஆனா அவுங்க முகங்களிலெ ஆரத்தி சமயத்துலே ஒரு மகிழ்ச்சி தெரியும் பாருங்க!
அதை விவரிச்சுச் சொல்லத் தெரியலெ. நேர்லே பார்த்தாத்தான் விளங்கும்!

இன்னொண்ணும் சொல்லணும், அவுங்க பிள்ளைங்க எல்லாரும் அழகா நெற்றியிலே கோபிச் சந்தனம் வச்சுக்கிட்டு, நம்ம
இந்தியவகை ஆடை அலங்காரங்களோட பவனி வர்றதைப் பார்க்கணுமே! இதுலே ஆம்புளைப் பசங்க ச்சின்ன குடுமி வேற
வச்சிக்கிட்டு இருக்கும்!

சரியா 7 மணிக்குப் பூஜை ஆரம்பிச்சுடுவாங்க எப்போதும்! அன்னைக்கு நாங்க மட்டும்தான் அங்கே இருக்கோம்!
யாருமே வரலை! நாங்களும், பூஜை பண்ணின பெண்ணும்! ஏகாந்த சேவை! எனக்குத் த்ருப்திலே
மனசு நிறைவா இருந்தது! பூஜை முடிஞ்சதும், அந்தப் பொண்ணும், இன்னோரு பொண்ணும் கொஞ்ச
நேரம் எங்ககிட்டே பேசிக்கிட்டு இருந்தாங்க.

அவுங்க ரெண்டு பெரும் ஃபிஜித்தீவு ஆளுங்களாம்! இவுங்களுக்கு சனிக்கிழமை 'ட்யூட்டி'யாம்! ஞாயித்துக்கிழமை
சாயந்திரம் வாங்க. பூஜை முடிஞ்சப்புறம் சாப்பாடும் இருக்குன்னு சொன்னாங்க. நான் சொன்னேன்,
சில நாட்கள் தான் ஞாயிற்றுக்கிழமை வரமுடியுது. முடிஞ்சா வர்றோம்ன்னு சொன்னோம்.மறுநாள் வேற
வேலை வந்துருச்சு! என்ன பெரிய வேலை? என் மகள் இங்கே 'ஃப்ளாட்டிங்' செய்யறாளே. அங்கே என்ன
சமைக்கிறாங்களோ? என்னத்தைச் சாப்பிடறாளோன்னு எங்களுக்கு ஒரே கவலை! அதனாலே நாங்க
கேட்டுகிட்டதுக்காக, மகள் வாரத்துலே ரெண்டு நாளு சாயந்திரமா வீட்டுக்கு சாப்பிடறதுக்குன்னே வருவா. அது
புதனும் ஞாயிறும்!

ஆனா, இந்த சனிக்கிழமை பூஜைக்குப் போறது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு! ஞாயிறு தவிர மற்ற நாளெல்லாம்
பூஜை சமயம் பெரும்பாலும் யாருமே இருக்கமாட்டாங்களாம்! அங்கே கோயிலிலேயே கொஞ்சம் 'ப்ரம்மச்சாரி'ங்க
தங்கியிருக்காங்க. ஆனா அவுங்களும் அந்த நேரத்துலே வர்றதில்லே! வேலை நாளுலே நமக்கோ பல வேலைங்க.
சனிக் கிழமை ஓக்கே! அப்படியும் சில சனிக்கிழமைகளிலே சாயந்திரம் வேற ஏதாவது அத்தியாவசியமா(!) போற விழாங்க
வந்துட்டா, அன்னைக்குக் காலையிலேயே கோயில் விஸிட் ஆயிரும். எப்படியோ வாரத்துலெ ஒரு நாளு கோயில்ன்னு
வச்சிருக்கோம். இந்த வைகுண்ட ஏகாதசியோட வெற்றிகரமா ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சு!

இந்த வருசம் ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சோம். முழுசா வேலை இன்னும் முடியலே. இன்னும் கொஞ்சம் போல பாக்கி இருக்கு.
தைமாசம் பிறந்தவுடனே அங்கெ குடிபோயிறலாம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். எல்லாம் நம்ம சொந்த டிஸைன்.ஆறு மாசமா
இந்த வேலையிலே நாள் ஓடிக்கிட்டு இருக்கு!

மகள் இப்போ முழுநேர வேலைக்குப் போறாள். ஒரு ஆஃபீஸ் நிர்வாகம் செய்யறதுக்குத் தெரிஞ்சுக்கிட்டாள். ரொம்பத்
தன்னம்பிக்கையாவும் இருக்காள். கொஞ்சம் பொறுப்பும் வந்திருக்கு! இந்தியச் சமையல்வேற செய்யறாளாம்!

நம்ம வீட்டுப் பூனைங்க ( இதுங்கதான் இந்த வீட்டின் உண்மையான எஜமானர்கள்!) பொதுவா நலமா இருக்காங்க.
பாவம் அதுங்க. வயசும் ஆயிருச்சே! 16 வயசும் 11 வயசுமா இருக்காங்க!

இந்த வருசம்தான் நான்'மரத்தடி'யிலே சேர்ந்தேன். தமிழிலே படிக்கறதுக்கு, இணையத்துலே ஆனந்தவிகடன், குமுதம்
மட்டும்தான் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒருநாளு தற்செயலா, என்னமோ படிக்கப்போய், எப்படியோ
மரத்தடி.காம்லே நுழைஞ்சிட்டேன். அங்கே பார்த்தா, தமிழிலே கதையும், கட்டுரைகளுமாக் கொட்டிக் கிடக்குது!
ஹைய்யோடா...ன்னு ஆயிருச்சு! அதுலே 'முறுக்கு'ன்னு ஒரு கதையை பிரபு என்றவர் ரொம்ப சிலாகித்து எழுதியிருந்தார்.
உடனே அந்த முறுக்கைத் 'தின்னு'பார்க்கணும்ன்னு தோணிப்போச்சு. அந்தப் பிரபுகிட்டவே கேக்கலாம்ன்னு அவருக்கு ஒரு
மெயிலைத் தட்டிவிட்டேன்.

என்ன ஆச்சரியம்! உடனே அவருகிட்டேயிருந்து பதில் வந்தது,அதைத் தேடி அனுப்பறதா! அதேமாதிரி அந்த முறுக்கை
அனுப்பியும் வச்சார். அப்புறம் நானும் அந்த மரத்தடியிலெ ஐக்கியமாயிட்டேன். ச்சும்மாப் படிக்கமட்டுமே தெரிஞ்சிருந்த எனக்கு,
என்னாலேயும் ஏதோ எழுதமுடியும்ன்ற நம்பிக்கையும் வந்தது மரத்தடியிலேதான்! புத்தருக்கும் ஞானம் வந்தது மரத்தடியிலே
தானாமே! அப்ப மரத்தடிக்குன்னு ஏதோ ஒரு விசேஷ சக்தி இருக்கு!

மெதுமெதுவா எதையோ கிறுக்கி, இப்ப உங்ககிட்டே இந்த கதைகளையெல்லாம் சொல்ற அளவுக்கு வந்துட்டேன்.
அதுமட்டுமா, இந்த வலைப்பதிவுங்களும், மரத்தடியும் எனக்கு நிறைய நண்பர்களையும், தம்பி, தங்கச்சிங்களையும்
கொடுத்திருக்கு! 'துளசியக்கா'ன்னு கூப்பிட்டு வர்ற கடிதங்களைப் பாக்கறப்ப சிலசமயம் என் கண்ணுலே தண்ணி
வந்துரும்! எத்தனை எத்தனை சொந்தங்கள்!

இனி கெட்டது என்னன்னு பார்த்தா..... என்னன்னு சொல்றது? கடல் செஞ்ச அநியாயம்தான் கண்ணுலே நிக்குது.
கெட்டது எனக்குன்னு நடக்கணுமா? நாட்டுகாரங்களுக்கு ஆனது நமக்கு நடந்த மாதிரிதானே? சின்னச் சின்னதா சில
கெட்டதுங்க நடந்திருக்கலாம். ஆனா அது எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடறமாதிரி இப்படி ஒரு அழிவு நடந்துருச்சே!






1 comments:

said...

//எத்தனை எத்தனை சொந்தங்கள்!//

உண்மை தான் துளசி !