Monday, July 21, 2008

ஆத்தாடி மாரியம்மா....... உன் பிள்ளை ரொம்ப அழகனம்மா....(ஃபிஜிப் பயணம் பகுதி 3)

நவாத்து மாரியம்மன் கோயில். முந்தி நாங்க குடியிருந்த நவாத்து வீதியின் கடைசியில் இருக்கு. ஆடி மாசம் வருதுன்னு கோவில் முழுக்க வெள்ளையடிச்சு சுத்துப்புறமெல்லாம் சுத்தம் செஞ்சு வச்சுருக்காங்க. முன்னைக்கு இப்போ கோவில் ரொம்ப நல்லா பெருசாக் கட்டி அம்சமா இருக்கு. அப்ப இருந்த 'பூஜாரி நைனா' குப்புசாமி பூவுலகில் இருந்து மறைஞ்சுட்டார். இவரோட பாஸ்போர்ட்டை முந்தி ஒரு சமயம் பார்த்துருக்கேன். Cooppusami ன்னு இருந்துச்சு. கப்பலில் வந்தப்ப வெள்ளைக்காரர்கள் பதிவு செஞ்சுவச்சது இப்படித்தானாம். Cooper என்ற நினைவில் எழுதுனதா இருக்கும். அவரது நினைவா ஒரு பீடம் & நடுகல் வச்சுருந்தாங்க.


அங்கிருக்கும் அரசமரத்தடியில் ஒரு தம்பதியினருக்கு என்னவோ பூசை செஞ்சுவச்சுக்கிட்டு இருந்தார் இன்னொரு பூசாரி. மரத்தைச் சுற்றி நூல் கயிறுகளாக் கட்டி இருந்துச்சு. முந்தி இதெல்லாம் இங்கே இல்லவே இல்லை. புதுசா வந்துருக்கும் வழிபாடுகள். அங்கே முருகன் கோயிலிலும் இப்படி ஒரு மரத்தை நேத்துப் பார்த்தேன்.



கர்ப்பக் கிரகத்தில் எப்போதும்போல 'நைலக்ஸ் புடவை'யில் மாரியம்மாக்கள் அருள் பாலித்துக் கொண்டு இருந்தாங்க. சிலைகள் எல்லாம் முந்தியிருந்ததேதானாம். புதுசா வர்ணம் பூசுனாங்களாம். அங்கே நமக்குத் தெரிஞ்சவங்களைப் பத்திக் கொஞ்சம் விவரம் கிடைச்சது. மயிலக்கா (நான் வச்ச பேர்தான்) கனடாவில் இருக்காங்களாம். வேலா நாய்க்கரின் அம்மா இவுங்க. ஒரு முறை இந்தியா போயிட்டு வரும்போது அங்கிருந்து மயில் முட்டை சிலதை ஜாக்கெட்டில் ஒளிச்சுக் கொண்டுவந்து இங்கே கோழி அடைகாக்கும்போது கூடவே வச்சுட்டாங்களாம். ரெண்டு மயில் குஞ்சு கிடைச்சு அது பெருசா வளர்ந்துருச்சு. வெராந்தாவை அடைச்சு பெரிய கூடாக்கி அதில் வச்சு வளர்த்தாங்க. மகளுக்கு மயில் காமிக்க (எனக்கும்தான் மயில் ஆசை) அங்கே கொண்டு போவோம்.



'மயில் இன்னும் இருக்கா'ன்னு கேட்டேன். இருக்காம். வேலாதான் பார்த்துக்குறாராம். 'வேலா பஹூத் பீமார். ஹாஸ்பித்தால் மே பர்த்திஹை'ன்னார். (அனைவருக்கும் இங்கே போஜ்புரி இந்திதான் பேச்சுமொழி)



இந்தக் கோவிலில் ஆடிமாசம் தீமிதித் திருவிழா 10 நாள் நடக்கும்.
தீ மிதிக்கும் பக்தர்கள் இந்தப் பத்து நாட்களும் கோவிலிலேயே தங்குவாங்க. அலங்கரிச்சக் கரகத்தைத் தலையில் சுமந்துக்கிட்டுக் கொட்டு முழக்கோடு தினமும் ஒவ்வொரு பகுதியா நம்ம மக்கள் இருக்கும் வீடுகளுக்கு வருவாங்க. வீடுகளில் இந்தக் கரகங்களுக்கு கற்பூராதனை செஞ்சு சிறப்பா எதாவது பிரசாதங்கள் செஞ்சு வச்சுருந்து கொடுப்பது வழக்கம்.



(நம்ம அக்கா வீட்டுக்குக் கிரகம் வந்த போது)




நம்ம ஆட்கள் மட்டுமில்லாம குஜராத்திகள் கூட இந்த 'மா(த்)தா மந்திர்'க்கு நிறைய பொருள் உதவி செய்றாங்க. ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். நான் எடுத்த படங்கள் எல்லாம்( அப்பப்பக் கோபாலின் மடிக்கணினியில் போட்டுவச்சுருந்தவை) மாயமாய் மறைஞ்சு போச்சு(-:


ஃபர்ஸ்ட் லேண்டிங் போகணும். இங்கேதான் மகளும்,நண்பரும் தங்கி இருக்காங்க. எப்படியும் அங்கே போக 80 நிமிசம் எடுக்கும். அதுக்குள்ளே நேத்து கோயிலைப் பத்திச் சொன்னதின் மீதியை இப்பப் பார்க்கலாம். ம்ம்ம் எங்கே விட்டேன்? ம்ம்ம்.......... ஒளிச்சுவச்சப் புள்ளையார் சிலை?


தேடுதேடுன்னு தேடியும் கிடைக்கலை. அப்ப அங்கே ஒரு பெண் யாருகிட்டேயோ எப்படித்தான் சிலையை ஒளிச்சுவச்சோமுன்னு பெருமையடிச்சுக்கிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்ட ஒருத்தர் கோயில் ஆட்களுக்குப் போட்டுக் கொடுத்துட்டார். பொம்பளைங்க ரகசியத்தைக் காப்பாத்த மாட்டாங்கன்னு சொல்றதெல்லாம் சில சமயம் சரிதான்போல:-) ராத்திரியோட ராத்திரியா நா(ன்)டி கோவிலைச் சேர்ந்த சிலர் ரெண்டு ஃபிஜியன்களையும் கூட்டிக்கிட்டு அங்கே டாங்கிடாங்கி போய், அங்கே குறிப்பிட்ட ஒரு கிணத்துலே ரெண்டு ஃபிஜியன்களையும்( நம்மைவிட ரெண்டு மடங்கு பலசாலிகள்) இறங்கித் தேடச்சொன்னாங்க. சிலை கிடைச்சுருச்சு. சாக்குப்பைகளை தொட்டில்போலக் கட்டி அதுலே சிலையை வச்சு மெள்ள வெளியில் எடுத்துக்கிட்டு ஓசைப்படாம திரும்ப ஊர் வந்துட்டாங்க. அவரை பிரதிஷ்டை செஞ்சு விழா எடுத்து ஒரே கொண்டாட்டம்தான்.
வருசங்கள் உருண்டன:-)))))


பழைய கொடிமரம் சிதிலமாகி வர்றதாலே கோவிலுக்குப் புது கொடிமரம் சிமெண்டு வச்சுக் கட்டிக்கலாமுன்னு தோணி இருக்கு. அதான் வருசாவருசம் வரும் புயல் மழைக்கு ஈடு கொடுக்கும். இதுக்கும் பொருள் உதவி செய்ய ஒரு பக்தை கிடைச்சார். முத்தம்மா கவுண்டர். கொடிமரம் என்பது மரத்தாலேதான் இருக்கணும் என்பது ஆகமவிதியாம். யாருக்குத் தெரியும்?




1984 இல் தமிழ்நாடு அரசாங்கத்தின் (அப்போதிருந்த அறநிலைய அமைச்சராக இருந்த திரு வீரப்பன் அவர்களின் பரிந்துரை) மூலமா இங்கே ஒரு குருக்கள் வந்தார். திருவாரூர்க்காரர். மகாலிங்க குருக்கள். அவர் வந்த பிறகு கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் ரொம்ப நல்லா நடக்க ஆரம்பிச்சது. உற்சவங்கள் ஓஹோன்னு நடந்துச்சு. கோயிலில் கூட்டமான கூட்டம் சேர ஆரம்பிச்சது இந்த சமயம்தான். ஏன்னா ஸ்வாமி அலங்காரங்கள் அப்படி திவ்யமா இருக்கும்.


கந்த சஷ்டி ஏற்கெனவே வருசாவருசம் ஒரே நாள் உற்சவமாக் கொண்டாடப்பட்டு இருந்தாலும், இப்போ 7 நாள் கொண்டாட்டமாத் தினம் ஒரு அலங்காரம், உற்சவ மூர்த்தி ஊர்வலம், சூரசம்ஹாரம்னு அமர்க்களம்தான். இவ்வளவு பக்கத்தில் இருந்து அலங்காரம் பூஜைகள் னு நான் பார்த்ததே இல்லை.


என் மகளுக்கு அவர் சாமித் தாத்தா. நாங்கள் ஊர்க்காரர்கள் என்றபடியால் எல்லா இடங்களிலும் விசேஷ அன்பு. சங்கத்தின் கோயில்களுக்கு பூஜை செய்ய முதலில் இளைஞர்களைப் பயிற்றுவிச்சதும் இவர்தான். ஆரம்பகால முறைகளைப் படிச்சுக்கிட்டவங்க, அதுக்குப்பிறகு ஹாவாய்த் தீவுகளில் இருக்கும் ஹிந்து மடம் போய் இன்னும் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தாங்க.


இங்கே 1987 முதல் ராணுவப்புரட்சி வந்ததும் சாமித் தாத்தாத் தமிழ்நாட்டுக்குத் திரும்பும்படியா ஆச்சு(-: சைலேஷ் கவுண்ட்டர், நம்ம குருக்களிடம் விதிமுறைகளைக் கத்துக்கிட்டு அடுத்த பூஜாரி ஆனார். 1991 வது வருசம் இந்தியாவுக்குப் போனவர் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் தங்கி பூஜைமுறைகளைப் படிச்சுத்தேர்ந்து சதாசிவன் என்ற பெயருடன் திரும்பவந்தார்.


இதுவரை அனைத்துச் சாதியினரும் இங்கே அர்ச்சகர்களா இருந்துருக்காங்க. விதிமுறைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கணும் என்பதுதான் நிபந்தனை. வட இந்தியர்களும் (இதிலும் ஜாதிப் பாகுபாடெல்லாம் கிடையாது)
இந்தியாவில் வந்து சாஸ்த்திரப் பிரகாரம் பூஜைகளை, வழிபாடுகளை நடத்தப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்து இங்கே 'பண்டிட்'களாகத் தொழில் செய்கிறார்கள். சத்தியநாராயணா பூஜைகள், நவகிரக ஹோமங்கள், இன்னும் கல்யாணம் கருமாதின்னு எல்லாத்துக்கும் இவுங்க சேவை கிடைக்குது.


கோயிலைப் பெருசு படுத்திக் கட்டறதுக்குச் சங்கம் முயற்சி செய்து வேற ஒரு இடத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தை வாங்கினாங்க. இப்ப இருக்கும் இடம் நதிக்கரையில் தாழ்வா இருப்பதால் அடிக்கடி வெள்ளம் வந்து ஒரு பிரச்சனையா இருந்துச்சு. இந்தப் புது இடத்துக்கு, ஆரம்பகாலத்தில் பூமி பூஜை செஞ்சு அடிக்கல் நடும் விழாவில் அப்போதிருந்த இந்திய ஹை கமிஷனர், ' இந்திய மக்கள் எல்லோரும் ஒன்று பட்டு இருக்கணுமுன்னு' பேசிட்டாராம். உடனே ராணுவ அரசு, 'ஹை கமிஷனையே மூடிக்கிட்டுப் போங்க'ன்னு துரத்திருச்சு.



இந்தப் புதுக்கோவிலுக்கு முதல் முறையா நான் வந்துருக்கேன். . 1994 இல் கட்டி முடிச்சு மஹா கும்பாபிஷேகம் நடந்துச்சாம். 2006 வருசம் 12 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் கும்பாபிஷேகம் நடந்துருக்கு.
கோபால் சில வருசங்களுக்கு முன்னே போயிருந்தார். அப்போ இவர் எடுத்து வந்த சில படங்களை இந்தப் பதிவில் சேர்த்துருக்கேன்


கோயில் வாசலில் நாங்கள் வண்டியை நிறுத்துனப்ப மேளதாளங்கள் முழக்கம். அட்டகாசமா இருக்கு கோபுர தரிசனம். பிள்ளையார் சின்ன மண்டபத்தில் கொடிமரத்தின் பக்கத்தில் இருக்கார். உள்ளே போய்ப் பார்த்தப்ப முன் மண்டபத்தில் ஒரு முப்பதுபேரு சுத்திவர உக்கார்ந்திருக்க ஹோமம் நடக்குது. தனியார் விழாவா இருக்கணுமுன்னு நாங்கள் ஒரு ஓரமாப்போய் உள்ளே மூலவரைத் தரிசித்தோம். பெரிய அளவிலான சிலா ரூபம். ராஜ அலங்காரம். சந்நிதியில் நாங்க ரெண்டே பேர். மனசு நிறைஞ்சு போச்சு.



அதென்னவோ இப்பெல்லாம் முருகனைப் பார்த்ததும் மனசுக்குள்ளே நம்ம ஜீரா வந்து உக்கார்ந்துக்கிறார். சமீபகாலமா அவர்கூடவே உண்மைத் தமிழனும் வர்றார். வரவர இந்தப் பதிவர்கள் தொல்லை தாங்கமுடியலை. எந்த ஒரு விசயத்துக்கும் அது சம்பந்தமான பதிவர்கள் நினைவு மனசோடு வந்து ஒட்டிக்குது. உண்மையைச் சொன்னால் உறவினர்கள் நினைவைவிட இவுங்க ஆக்கிரமிப்பு அதிகம் ! முருகா முருகா.... இன்னும் வலையில் இருக்கும் முருக பக்தர்களுக்கும் சேர்த்து சாமிக்கு ஒரு கும்பிடு போட்டேன். அங்கே நின்னுக்கிட்டு இருந்த ஒரு பூசாரி (இளைஞர்) தரிசனம் செஞ்சு வச்சார். 'பழனி முருகன்' என்று சாமியை அறிமுகம் செஞ்சார். தமிழ்நாடா என்று கேட்டதுக்கு ஆமாவாம். திருத்தணிக்காரராம். என்ன விழா நடக்குதுன்னு கேட்டதுக்கு கலசாபிஷேகம் நடக்கப்போகுது. நீங்க கலந்துக்கலாம்னு சொன்னார்.



நாங்களும் ஒரு பக்கமா உக்கார்ந்து ஹோமம் நடப்பதைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். மூணு மேசைகள் போட்டு ஒவ்வொன்னிலும் ஏராளமா நிறைகுடங்கள் அலங்கரிச்சு வச்சுருந்தாங்க. கடைசியில் தீபாராதனை காட்டி அதை குருக்கள் உயர்த்திப் பிடிச்சதும் எல்லாரும் இருந்த இடத்தில் இருந்தே கைகளை நீட்டி மானசீகமாத் தொட்டு வணங்குனாங்க. இது எனக்குப் புதுமையாவும் அதே சமயம் ரொம்ப மகிழ்ச்சியாவும் இருந்துச்சு. நம்மூரில் கூட்டத்தில் சிலசமயம் நாம் கையை நீட்டிக்கிட்டே இருந்தாலும் தீபாரதனையைக் கையில் தொட்டு(??) கண்ணில் ஒத்திக்கக் கிடைக்காது.


இப்ப குருக்கள் ஒவ்வொரு மேசையில் இருக்கும் நிறைகுடக் கலசங்களை ஒவ்வொருத்தர்கிட்டேயும் எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தார். வாங்குனவங்களைத் தனியா மூணு குழுவா நிக்க வச்சார். கோபால் ரகசியமா என்கிட்டே, 'நீயும் போய் ஒன்னு வாங்கிக்கோ'ன்னு சொன்னார். 'சும்மா இருக்க மாட்டீங்களா? அவுங்க எல்லாரும் பூஜைக்கு ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்க போல. நான் உங்களோடு இங்கே நின்னு பார்த்துக்கறேன். அது போதுமு'ன்னு சொல்லி வாய் மூடலை. குருக்கள் என்னப் பார்த்து, 'ஆப் இதர் ஆயியே'ன்னுட்டார். கைப்பையை கோபால் வச்சுருந்த பெரிய துணிப்பையில் போட்டுட்டுப் போனேன். பச்சை நிறப் பட்டுச் சுற்றி இருந்த கலசம் எனக்குக் கிடைச்சது. இன்னும் கலசம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. கடைசியா பெரிய கலசங்கள் சில இருந்த மேசை. அதில் ஒன்னை எடுத்துக் கோபாலைக் கூப்பிட்டுக் கொடுத்தாங்க.



மேளதாளங்கள் ஒலிக்க எல்லாருமாக் கோயிலை வெளியில் சுற்றி வர்றோம். முழங்கையில் பையுடன் கலசம் கொண்டுவரும் இவர் எங்கே கீழே போட்டுருவாரோன்னு கலக்கமா இருக்கு. வலம் வரும் வரிசையில் நாங்கள் கொஞ்சம் பிந்தங்கி மெதுவா நடந்து வர்றோம். ஒரு இடத்தில் நகராமக் கூட்டம் நிக்குது. இன்னும் நான் கோவிலை முழுசாச் சுற்றிப் பார்க்காததால் அங்கே ஏன் வரிசை நிக்குதுன்னு தெரியாம எட்டிப் பார்த்தேன்.


'அடக்கடவுளே' எனக்காகத்தான், அதாவது என் கையில் இருக்கும் கலசத்துக்காகத்தான் வெயிட்டிங். குருக்கள் கை அசைச்சு 'வா வா' ன்றார்.
நவகிரக மேடை. எங்க குழுவில் எல்லாருடைய கலசமும் அந்தந்த தேவனுக்கு முன்னால். என்னோடது புதன் கிரகத்துக்கானது. அட! அதுதான் பச்சை நிறமா? என்ன ஏதுன்னு புரியாமலேயே வாங்கி வச்சுருக்கேன் பாருங்க. ஒவ்வொரு கலசமா எடுத்து அந்தந்த கிரக தேவனுக்கு அபிஷேகம் ஆச்சு. கலசம் சுமந்து வந்தவங்களை அவுங்கவுங்கக் கலசத் தேங்காய்களை எடுத்துவச்சுக்கச் சொன்னாங்க.


கோபாலின் கையில் இருந்த பையை நான் வாங்கிக்கிட்டுக் கலசம் சுமக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து போய்க்கிட்டு இருக்கேன். பயந்தது நடந்துருச்சு. 'டமால்'னு கலசத்தில் இருக்கும் தேங்காய் கீழே உருண்டது.கூடவே அதில் போட்டு வச்சுருந்த பூமாலை, எதோ ஒரு மடிச்சுவச்சத் துண்டுக்காகிதம், மாவிலைகள். ( இந்த இடத்தில் ஒரு தொடரும் போட்டுருக்கலாம்)அடடடா.......கோபால் கையில் சுமக்கும் கலசம் ஒழுங்கா நல்லாவே பத்திரமா இருக்கு. அப்ப இது யாரோடது?



ஒரு இளைஞர் அவசர அவசரமா எல்லாத்தையும் வாரித் திரும்பத் தன் கலசத்தில் வச்சார். ரெண்டே எட்டு இன்னொரு டமால். சரியாப் பார்த்து வைக்கக்கூடாதா?


கோயிலைச் சுத்திவரும்போது கவனிச்சது : ஊர்வலத்துக்கான தேர், காவடித் திருநாளுக்கான காவடிகள் எல்லாம் ஒரு ஷெட்டில் பத்திரமா வச்சுருக்காங்க.


இதுக்குள்ளே கோவிலுக்குள்ளில் வந்துட்டோம். ரெவ்வெண்டு கலசங்கள் பிள்ளையார், மகாலக்ஷ்மி, மதுரை மீனாட்சி, சிவன் சந்நிதிகளில் எடுத்துவச்சார் குருக்கள். அந்தத் துண்டுக்காகிதத்தில்தான் எது எங்கே என்ற விவரம் இருக்கு.
கடைசியா 5 கலசங்கள் பாக்கி. மூலவருக்குப் போவது. அதில் கோபாலோடதும் ஒன்னு........ நாங்கள் எல்லாம் கருவறையை ஒட்டிய மண்டபத்தில் உக்கார வைக்கப்பட்டோம். குருக்கள் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே இருந்து ஒவ்வொன்னா வாங்கி மூலவருக்கு அபிஷேகம். அஞ்சாறடி தூரத்தில் இருந்து கண்குளிரப் பார்க்கின்றோம். மறுபடி கற்பூராதனை. தூக்கிப்பிடிக்கிறார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, பழனி மலை முருகனுக்கு அரோகரான்னு கோஷம் முழங்க இருந்த இடத்தில் இருந்தே மானசீகமா கண்ணுலே ஒத்திக்கிட்டாச்சு.


திரைபோட்டாங்க. அலங்காரம் ஆரம்பம். அதுவரை வெளியே ஹோம குண்டம் இருக்கும் முன்மண்டபத்தில் எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். கோபாலின் கலசத்தில் இருந்த சீட்டில் 'வாயு பகவான்' ன்னு எழுதி இருந்துச்சாம். ஓஹோ....அப்ப அது அஞ்சும் பஞ்ச பூதங்களைக் குறிப்பிட்டதா?
நல்லதுதான். உங்களுக்கு ஹனுமானோட அப்பா வந்தார்'னு சொல்லிவச்சேன்.


புரியாம முழிச்சவருக்குக் கொஞ்சமா ஹனுமன் கதை. ( சான்ஸ் கிடைக்கும்போது விடலாமா?) கையில் உள்ள தேங்காயை என்ன செய்யணுமுன்னு அங்கிருந்த தர்மகர்த்தாவிடம் கேட்டேன். இன்னுமா உடைக்கலைன்னு கேட்டுக்கிட்டே வெளியே தேங்காய் உடைக்க ஒரு இடம் இருக்குன்னு காமிச்சார். அங்கே நல்ல பாறாங்கல்லைப் புதைச்சுவச்சுத் தொட்டிபோலக் கட்டி விட்டுருக்காங்க. பேஷ் பேஷ். சிதறு தேங்காய் போட்டார் கோபால். உள்ளேயே தெறிச்சு விழுந்துச்சு. பேஷ் பேஷ்.


திரும்ப மண்டபத்தில் வந்து உட்கார்ந்தப்ப அந்த சின்ன குருக்கள் வந்து எங்க பக்கத்தில் உக்கார்ந்து குசலம் விசாரிச்சார். நாங்களும்தான். திருத்தணியில் இருந்து இங்கே வந்து USP யுனிவர்சிட்டி ஆஃப் சௌத் பஸிஃபிக்லே பி.காம் 3வது வருசம் படிக்கிறார். முதல் செமிஸ்ட்டர் முடிஞ்சு லீவு ஆரம்பிச்சுருக்கு. அக்கா வீட்டுக்கு வந்துருக்கார். அக்காவின் கணவர்தான் இப்போதைய (பெரிய)குருக்கள். ஊர் திருத்தணி. அஞ்சு வருசமா அக்கா & கணவர் இங்கே இருக்காங்க. கோவிலுக்குப் பின்பக்கம் தோட்டத்தில் வசிக்க வீடு (குவாட்டர்ஸ்) கொடுத்துருக்காங்க. அடுத்த வருசம் மேற்படிப்புக்கு ஆஸி போக விருப்பம். பெயர் கார்த்திக்.


அலங்காரம் முடிஞ்சது. எல்லாரும் மறுபடி உள்ளே கருவறை அருகில் உட்கார வைக்கப்பட்டோம். கம்பீரமான மகாராஜாவா இருக்கார் முருகர்.


பதினாறு உபசாரங்கள் நடந்துச்சு. நான்


பழனி மலை முருகா
பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்குத் தா.....
ஞானப் பழமொன்று எந்தனுக்குத் தா
முருகா ...


இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலமொன்றும் தாராது
நிலமை இதுவாக தலைமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்கு தா ... முருகா ...


உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சிலநாள் வாழ்ந்தாலும் செம்மையையே தேடி
செந்தமிழே அன்பே நீயும் நானும் கூடி
மகிழ்ந்திட வரம் ஒன்று தா
மனம் மகிழ்ந்திட வரம் ஒன்று தா
முருகா ...
பாடினேன்( மனசுக்குள்ளேதான்)


வெற்றிவேல் முருகா, வேல்வேல் முருகான்னு அரோகரா கோஷம்.
தீபாராதனை முடிஞ்சதும் மானசீகமாத் தொட்டுக் கும்பிட்டோம்.சாமிக்கு முன்பாக இருந்த உள்புற மேடையில் நெய்விளக்கும் தட்டில் விபூதியும் கொண்டுவந்து வச்சார். அவுங்கவுங்களே எடுத்துக்கலாம். 'காசு போடு, இந்தப் பக்கம் வா, போ'ன்னு ஒரு உத்தரவும் இல்லை:-))))) அருமையான ஏற்பாடு. சாமிக்கு முன்னே எல்லோரும் சரிசமம். எனக்கு ரொம்பத் திருப்தியா இருக்கு.


வெளியே வந்ததும் கார்த்திக், பெரிய குருக்களை அறிமுகப்படுத்தினார். அஞ்சு நிமிசம் பேசிட்டுக் கிளம்பலாமுன்னா சாப்பாடு ஏற்பாடாகி இருக்கு. கட்டாயம் சாப்பிட்டுட்டுத்தான் போகணுமுன்னு முருகனின் கட்டளை.. ...ஆஹா..............
இன்னிக்கு என்னதான் விசேஷமாம்?


கோவிலுக்குப் பொறந்த நாள். ஜூலை ஒன்னுதான் முதல் முதல் மகா கும்பாபிஷேகம் நடந்த நாளாம். அதனால் ஒவ்வொரு வருசமும் இதுக்கு முதல்நாள் & மறுநாளைச் சேர்த்து 3 நாள் உற்சவமாம். அந்தக் கணக்கில் இன்னிக்குக் கடைசி நாள். கொஞ்சம்கூட எதிர்பாராமல் கிடைச்ச ஒவ்வொன்னையும் நினைச்சு நினைச்சு மனசு பொங்கி வழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. இன்னிக்குன்னு பார்த்து வரத்தோணுச்சேன்னு .............

சாப்பாட்டுக்காக தனியா நிரந்தரமான அமைப்போட ஒரு ஷெட் போட்டுவச்சுருக்காங்க.. ஹல்வா( நிறமில்லாத கேசரிதான். அம்பியை நினைச்சுக்கிட்டேன்) கொண்டைக்கடலை சுண்டல், தக்காளிச் சட்டினி, ஸாலட், பருப்பு, ஆலு பைங்கன், சோறு. இன்னைக்கானக் கட்டளைதாரர் பெயர் அங்கிருந்த கரும்பலகையில் எழுதி இருக்கு.



கடை வீதியின் கட்டக் கடைசியில் கோவில். அக்கம்பக்கத்துக் கடைகளில் வேலை செய்யும் ஆட்கள் எல்லாம் (அதான் எல்லாருக்கும் இப்ப யூனிஃபார்ம் கொடுத்துருக்கே) சாப்பாட்டு வரிசையில் நின்னு வாங்கிச் சாப்பிட்டுப் போனாங்க. தட்டுகள்தான் டிஸ்போஸபிளா இல்லாம அலுமினியமா இருந்துச்சு.


இந்தப் புதுக் கோயிலுக்குள் படம் எடுக்கத் தடை போட்டுருக்காங்க.
கோயில் வர்ணனையை அப்புறமா ஒரு நாள் சொல்றேன். முருகன் என்னை மூணு முறை வரவச்சுட்டார்:-)


அதுக்கப்புறம் இங்கே கடை வச்சுருக்கும் நெருங்கிய தோழிக்கு ஒரு சர்ப்ரைஸ் விஸிட். ஒன்னரை மணி நேரம் சம்சாரிச்சு:-)))) கண்டுட்டு கொல்லங்களாயில்லே?. 20 வருசம் 4 மாசத்துக்கப்புறம் சந்திக்கறோமே!!!


கல்யாண வீட்டு விஷயங்கள்:


மூன்றாம் நாள்.


இன்னிக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியாது. காலையில் பூஜை செய்துட்டு மண்குடங்களுக்கு வர்ணம் தீட்டுனாங்களாம். பர்ஃபி செஞ்சு வச்சாங்களாம்.

வழக்கம்போல 100/150 மக்களுக்கு ரெண்டு வேளையும் சாப்பாடு.


ஃபிஜித்தீவின் அரசாங்க விதிகளின் படி திருமணங்கள் எல்லாமே பதிவுத் திருமணங்கள்தான். கல்யாணம் செஞ்சுக்கப்போறவங்க, அரசாங்கத்தின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கணும். ஒரு ரெண்டு மூணு வாரத்துலே அனுமதி கிடைக்கும். அதுக்கான காவல்துறை விசாரிப்புகள் எல்லாம் நடத்த இந்த மூணுவாரம் பிடிக்குமாம். முக்கிய நிபந்தனை வயசு.
ஆணுக்கு 18, பெண்ணுக்கு 16 முடிஞ்சுருக்கணும்.


அதுக்குப்பிறகு நமக்கு அனுமதி கிடைச்சவுடன், பொண்ணு, பையன் தங்களது அப்பா, அம்மா நெர்ங்கிய உறவினரோடு அங்கே அலுவலகத்தில் போய் பதிவுத் திருமணம் செஞ்சுக்கணும். இதுக்கு மேரீட் ஃபார்ம் போட்டோம். ரெஜிஸ்த்தர் ஆயிருச்சுன்னு சொல்றாங்க.



இது முடிஞ்சபின் சட்டப்படி அவுங்க கணவன் மனைவி. ஆனாலும் அவுங்கவுங்க தங்கள் பெற்றோர் வீட்டுலேயே இருந்துக்குவாங்க. ரெண்டு குடும்பமும் சேர்ந்து நல்ல நாள் பார்த்து சாஸ்த்திரப்படி
அவுங்கவுங்க மத ஆச்சாரத்தின் படி சக்திக்கேற்ற அளவில் உறவினர் நண்பர்களுடன் பிள்ளைகள் கல்யாணத்தை நடத்தி வைக்கிறாங்க.



இந்தக் கல்யாணத்துக்கு வந்திருக்கும் உறவினர் குடும்பத்துலே அவுங்க மகனுக்கு அடுத்தவாரம் நிச்சயதார்த்தம். அந்தப் பிள்ளையை பார்த்தாப் பள்ளிக்கூடத்துப் பையன் மாதிரி இருக்கு. என்ன இவ்வளோ சீக்கிரம்முன்னு பையனோட அம்மாவைக் கேட்டால்...............



முந்தியெல்லாம் இப்படி 21/22 வயசுலே கட்டிவைக்கற பழக்கம்தானாம். சில வருசங்களுக்கு முன் அதை 28/30ன்னு மாத்தி வச்சுப் பார்த்தாங்களாம். ஒன்னும் சரிப்படலை. பசங்க காதல் அது இதுன்னு விவகாரத்துலே மாட்டிக்கிதுங்க. குடும்பத்துக்கு பேஜாரா ஆயிருது சில சமயம். அதான் பழைய மாதிரியே 21 இல்லை 22க்கு மாத்திட்டோம்.



இளமையான மாமியார்களும் பாட்டிகளுமா இருக்காங்க 40, 42 வயசுகளில்:-)))))


மாலையிலும் பார்ட்டியோ பார்ட்டி.


தொடரும்..........................:-)


சோதனை

இப்படி ஒரு சோதனை போடவேண்டிய வேதனையில் நான்.....

Wednesday, July 16, 2008

பழனி மலை முருகா பழம் நீ திருக்குமரா (ஃபிஜிப் பயணம் பகுதி 2)

நேத்துச் சொல்லி வச்சுருந்த வாடகைக்கார் இன்னிக்குக் கிடைச்சது. சுதந்திரமா அங்கே இங்கே சுத்தணுமுன்னா போக்குவரத்துச் சாதனம் எவ்வளோ அவசியமுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? கிளம்பிப் போகுமுன் ஏர்ப்போர்ட்லே விட்டுறலாமுன்னு பேசி(?) முடிச்சோம். பட்ஜெட் ரெண்டல் கார். ஏஸி இருக்கான்னு பார்த்துக்கிட்டோம். நம்ம கம்பெனிக்குத்தான் வண்டியைக் கொண்டுவரச் சொல்லி இருந்துச்சு.


அது என்ன இவ்வளோ உரிமையோட நம்ம கம்பெனி'ன்னு சொல்றேன்? இதை ஆரம்பிக்கத்தானே இந்தியாவிலிருந்து கிளம்பி வந்தோம்:-) போன பகுதியில் குறிப்பிட்டிருந்த தீபக் (அண்ணன்) பைய்யாதான் பூனாவில் நம்ம வீட்டுக்கே வந்து கோபாலை இண்ட்டர்வியூ செஞ்சவர். அப்ப, அவர் இங்கே தலைநகரில் சிட்டிக் கவுன்ஸிலில் சீஃப் எஞ்சிநீயரா இருந்தார். இப்ப ஒரு பத்து வருசமாச்சாம் ஓய்வு வாங்கி. ஆனால் இப்பத்தான் இவர் ரொம்ப பிஸின்னு அண்ணி சொன்னாங்க. ஃபிஜியின் தலைநகரான சுவா(Suva City)வில் இருக்கும் இவர்கள் சமூக சங்கத்துக்கு கடந்த மூணு வருசங்களாத் தலைவர் பதவியில் இருக்கார். இவர்கள் சங்கம் அங்கே மட்டும் 4 பள்ளிக்கூடம் நடத்தறாங்க. எல்லாமே இலவசப் பாடசாலைகள்தான். (கல்வியில் பணம் கறக்க இன்னும் கத்துக்கலை) அரசாங்க உதவியும், இவர்கள் சமூகத்தினர் கொடுக்கும் நன்கொடைகளும் போதுமானதாக இருக்காம். பள்ளிக்கூடத்துக்கான கட்டிடங்கள் கட்டுவது, சங்க வேலைகள்னு வாழ்க்கை ஓடுதாம்.



காரை எடுத்துக்கிட்டு நா(ன்)டி வரை போய் வரலாமுன்னு கிளம்பிட்டோம். அங்கேதான் ஸ்ரீ சிவ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் இருக்கு. ரோடு இருக்கும் அழகில் நமக்கு அங்கே போய்ச் சேர எப்படியும் 105 நிமிஷம் ஆகும். அதுவரை தலப்புராணம்' சொல்றேன். ' இது பரிட்சைக்கு வரும் பகுதி:-)


ராமசாமிப் பிள்ளை. வயசு 38. மனைவியுடன் வந்துருக்கார். வருசம் 1906, ஏப்ரல் 28. சேலம் ராசிபுரம் பக்கத்தில் சிங்கராந்தபுரம் ஆளு. ( இந்த ஊர்ப்பெயர் சரியான்னு தெரியலை. இவர் சொன்னதைப் புரிஞ்சு வெள்ளைக்காரர் யாரோ எழுதிவச்ச ரெக்கார்ட்.) இதைத்தவிர வேற குறிப்பு ஒன்னும் இல்லை பதிவேடுகளில். வெள்ளைக்காரன் செஞ்ச அக்கிரமமுன்னு சொல்லணுமுன்னா இப்படி, எங்கே எவ்வளோ தூரமுன்னு ஒன்னும் சொல்லாம ஆட்களைப் பிfடிச்சுக் கொண்டுவந்து இங்கே கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய விட்டதுதான். ( இதை பற்றி விரிவா கரும்புத்தோட்டத்திலே என்னும் தொடரில் சில வருசங்களுக்கு முன் எழுதி இருக்கேன்)



இப்ப நாமெல்லாமும்தான் வெளிநாட்டில் வேலைக்குன்னு போறோம். இது நம்முடைய சொந்த விருப்பம். போற இடத்தில் நமக்கு எதாவது உதவின்னா நம்ம அரசாங்கத்து ஹை கமிஷன் இருக்கு. அப்ப அந்தக் காலத்தில் இதெல்லாம் ஏது?



அங்கே போனபிறகு அவங்களைக் கூட்டி வச்சு அஞ்சுவருசம் வேலை செஞ்சுட்டா விட்டுருவோமுன்னு அக்ரிமெண்ட் போட்டுருவாங்களாம். மாட்டேன்னு சொல்ல முடியாது. வேணாமுன்னாலும் எப்படித் திரும்பி வரமுடியும்? 8000 மைல்கள் நீந்தியா?



பிள்ளைக்கும் அஞ்சு வருச ஒப்பந்தம், நடந்து முடிஞ்சது. அதுக்குப்பிறகு திரும்பி இந்தியா வர பயணத்துக்கு ஏற்பாடு ஒன்னுமே இல்லையே. ஒப்பந்தக் கூலியா இல்லாம சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சுக்கிட்டு அங்கே இருந்தார். ஊர் நினைவுகள் கொசுவத்தியாச் சுத்திக்கிட்டு இருந்துருக்கு. ரொம்ப தெய்வபக்தி உள்ள மனுசர் என்றதால் கோயில்னு ஒன்னு இங்கே இல்லையேன்னு கவலைப்பட்டுருக்கார். கையில் இருந்தக் கொஞ்சம் காசை வச்சு, நதிக்கரையில் இருக்கும் ஒரு ஏக்கருக்குக் கொஞ்சம் கூடுதலா இருந்த ஒரு இடத்தை லீஸ் (15 ஷில்லிங் வருசத்துக்குன்னு) எடுத்துருக்கார். இங்கே எல்லா நிலங்களும் ஃபிஜியன்களுக்குச் சொந்தம். அதுவும் தனிப்பட்ட ஃபிஜியன் இல்லை. அந்தந்த கிராமக் குழுக்களுக்குச் சொந்தம். 99 வருச ஒப்பந்தம் போட்டுக்கலாம். இதைப் பத்தி அப்புறமாச் சொல்றேன். (1987 புரட்சி நடந்த பிறகு ஒரு சில இடத்தை மட்டும், முக்கியமா கம்யூனிட்டிக்கு பயனா இருக்கும் இடங்களைப் போனாப்போகுதுன்னு ஃப்ரீ ஹோல்டா ஆக்குனாங்களாம். அதுலே புதுக் கோவில் இருக்கும் இடம் ஒன்னு.)

மேற்கே பார்த்த ஒரு குடிசைதான் கோவில். அதுக்குள்ளே எந்த மாதிரி சாமி சிலை இருந்துச்சு என்றதுக்கெல்லாம் குறிப்புகள் ஏதும் கிடைக்கலை. ஃபிஜித்தீவுகளில் வருசாவருசம் புயல் திருவிழா வந்துரும். இந்த கூரைக்குடிசை என்னன்னு தாங்கும்?



அங்கே இருக்கும் இன்னும் சில தென்னிந்தியர்கள்கிட்டே பேசுனப்ப எல்லாருமா சின்னச்சின்னதா காசு உதவி இருக்காங்க. குறிப்பா ஏன் தென்னிந்தியர்ன்னு சொல்றேன்னா....... அங்கே வேலைக்காகக் கொண்டுவரப்பட்ட இந்திய மக்களில் முதன்முதலா வந்தவங்க(1879 வருசம்) உத்திரப் பிரதேசம், போஜ்புரி, பீஹார், ஒரிஸ்ஸான்னு வடக்கத்து மக்கள். (அதான் ஹிந்தி அங்கே அங்கீகரிச்ச அரசு மொழியா இடம் வாங்கிருச்சு). அவுங்களுக்கு தென்னிந்திய மக்கள்ன்னா கொஞ்சம் மதிப்புக் குறைவுதான். யேத் தோ மந்த்ராஜி (மதராஸி)ஹை.............



இந்த மாதிரி இந்தியாவிலே இருந்து ஆள் புடிச்சுக்கிட்டு வந்த கொடுமை 1916 வருசம் நின்னுபோச்சு. ஆனா இந்த 37 வருசங்களில் சுமார் 61 ஆயிரம் பேரைக் கொண்டுவந்துட்டாங்க.



பாவம் நம்ம ஜனங்க பொறுமையா இருந்துருக்காங்க. வேற என்ன செய்ய முடியும் சொல்லுங்க. போக்குவரத்துக்கு ஒன்னும் இல்லாத காலம். எல்லாருமே ஏழைகள். வச்சுக்கிட்டா வஞ்சனை? அந்தக் காசை வாங்கவே பத்து நடை நடக்கணுமாம்.



சிலபேர் சேர்ந்துக் கோயிலைக் கட்டச் செங்கல் செய்யலாமுன்னு தீர்மானிச்சு களிமண்ணுலே செங்கல் செஞ்சு 'சூளை' மாதிரி ஒன்னு தயாராக்கிச் சுட்டு எடுத்து ஒரு வழியா சின்ன அறைபோல ஒன்னு கட்டிட்டாங்க. முன் மண்டபமா ஒரு வராந்தாவில் மேற்கூரையா தகரம் போட்டுக் கோயில் வந்துருச்சு. இது நடந்த காலக்கட்டம் 1914/1915 ஆக இருக்கலாமுன்னு கோவில் குறிப்புகள் சொல்லுது.


படம்: நாங்கள் அங்கிருந்தப்ப (1982)கோயில் இப்படி இருந்துச்சு.



கோவிலுக்குக் கொடிமரம் வேணுமுன்னு வேற ஒரு இடத்துலே இருந்து 40 அடி நீள மரத்தைக் கொண்டுவந்தாங்க. எப்படி? அதான் கரும்பு ஆலைக்கு கரும்பு ஏத்திவரும் ரயில் வருதே. வேற எந்த விதமான போக்குவரத்து வாகனமும் இல்லாததால் வெள்ளைக்காரங்க போட்டுக் கொடுத்த ரயில் வண்டி காலியாப் போகும்போது அதுலே ஓசியாத் தொத்திக்கிட்டுப் போறதுதான். இது எந்த மாதிரி ரயில்?



நம்மூர் குழந்தைகள் பூங்காவிலே புள்ளைகளுக்காக ஓடும் பொம்மை ரயில்தான். ரெண்டு தண்டவாளத்துக்கும் இடையில் ரெண்டடிதான் இருக்கும். பயங்கர வேகத்தில்(!) போகும். எப்ப வேணுமுன்னாலும் ஏறலாம் இறங்கலாம்.
ரோடுகளில் குறுக்கும் நெடுக்குமா போய்க்கிட்டு இருக்கும். கரும்பில்லாமக் காலியா இருந்தா இந்தப் பக்கம் ஏறி அந்தப் பக்கம் இறங்கிக்கலாம். இதுக்குப்பெயர் ஷுகர் கேன் எக்ஸ்ப்ரெஸ் (Sugarcane Express).குதிரைகள் இழுத்துக்கிட்டுப் போகுமாம்.




படம்: இப்ப டீஸலில் ஓடும் ரயில்.



இந்த ரயிலில் மூணு பெட்டிகளைக் கெஞ்சிக்கேட்டு அதுலே மரத்தை நீட்டிவச்சுக் கொண்டு வந்தாங்க. ஒரு வளைவில் ரயில் திரும்பும்போது மரம் உருண்டு விழுந்து ரெண்டா உடைஞ்சுருச்சு(-: அதே மரத்தை, ரெண்டு துண்டுகளையும் சேர்த்துக் கொஞ்சம் ரிப்பேர் செஞ்சு கொடிமரமும் நட்டாச்சு. இது நடந்தது 1917ல்.



அப்பு நாயர் என்றவர் முருகனுக்குக் காவடி எடுத்து 60 மைல்தூரம் நடந்துவந்து வழிபாடு செஞ்சாராம் 1920இல். இதுதான் முதல் காவடி வழிபாடு அங்கே.



சில வருசங்களுக்குப் பிறகு தென்காசிக்காரர் ஒருத்தர்( எம் என் நாயுடு) அங்கே எதாவது வியாபாரம் செய்யலாமுன்னு வந்துருக்கார். இருக்கற நாட்டையெல்லாம் விட்டுட்டு அங்கே ஏன் வந்தாருன்னு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவர் 1924 லே ஊருக்கு வந்து போகத் திட்டம் போட்டப்ப, கோயிலுக்கு சாமி சிலை ஒன்னு ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்டுருக்கார் பிள்ளை.




மூலவரும் சாமித் தாத்தாவும்(1984) பழைய கோவிலில்( இவரைப்பற்றி அடுத்த பகுதியில்)



நாயுடு தென்காசியில் ஒரு தண்டாயுதபாணி சிலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டார். கற்சிலை தயாராகி நாயுடுவின் உறவினர்கள் மூலமா கப்பலில் பயணப் பட்டுருக்கு. சிலை வந்து சேர்ந்தது 1926. பயணம் முருகனுக்கு ஆகலை. சாமிக்கு வலது காலில் பாதத்துக்கு மேல் விரிசல் விட்டுருந்துச்சு. கையில் பிடிச்சிருந்த தண்டம் உடைஞ்சு போய் இருந்துச்சு. என்ன செய்யறதுன்னு குழப்பமா இருந்தாலும் வேற சிலை இனி எப்படி எங்கே எப்போ வாங்குவதுன்னு தெரியாததால் அந்தச் சிலையையே பிரதிஷ்டை செஞ்சாங்க. இதெல்லாம் ஆகம விதிகளின்படி சரியில்லை என்ற விவரமெல்லாம் (அப்போது) யாரு கண்டா?


கால் உடைஞ்ச மூலவருக்கும், இடுப்பு உடைஞ்ச கொடிமரத்துக்கும் ஒரே மாதிரிக் கணக்கு சரி ஆச்சு. இதே வருசம் 1926 இல் சாது குப்புசாமி என்றவர் (அவரைப்பத்தி முந்தி எழுதுனது இங்கே இருக்கு) தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ( TISIS)




இவர் ஒரு போலீஸ்காரரா மெட்ராஸ் ராஜதானியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர் அதை விட்டுட்டு இங்கே ஃப்ரான்ஸிஸ் என்ற வெள்ளைக்காரரின்
உதவியாளரா 1912 லே ஃபிஜி வந்து சேர்ந்துருக்கார். இந்த சங்கம் நம்ம பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் எல்லாம் கட்டுனாங்க. மொழி இல்லாமப்போனா பிள்ளைகளுக்கு நம்ம பாரம்பரியம், கலை கலாச்சாரம் தெரியாமப் போயிருமேன்னு இந்தப் பள்ளிக்கூடங்களில் தமிழும் தெலுங்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சது அப்போதான். (இப்போ 21 ஆரம்பப் பள்ளிக்கூடங்களும் 5 உயர்நிலைப்பள்ளிகளும் இருக்கு. இங்கே எல்லாருக்கும் ஃபிஜியன் மொழிகூடச் சொல்லித் தர்றாங்க. ஆனா.... தமிழ்?)



இதுலே பெண்களையும் இளைஞர்களையும் சேர்த்துப் பொது சேவை செய்யத் திட்டம் போட்டு ஒரு மாதர் சங்கமும், வாலிபர் சங்கமும் உருவாக்கினாங்க.
இன்னும் ஒரு 5 வருசம் கழிச்சு 1931 லே உற்சவ மூர்த்திகள் ஐம்பொன் சிலைகளா வந்து சேர்ந்தாங்க. குமாரசாமி, சின்னய்யா, குப்புசாமி, வேலாயுதன் கவுண்டர்களும், வெங்கட், கிருஷ்ணா, கோபால் ரெட்டிகளுமாச் சேர்ந்துக் காசைப்போட்டு, அந்தக் காலக்கட்டத்தில் ஊருக்குப்போன ஏகம்பர ரெட்டி மூலமா வரழைச்சாங்களாம். சிலை வந்த நாள் இங்கே திருக்கல்யாண உற்சவம் நடத்துனாங்களாம்.



எல்லாரும் இங்கே தங்கள் சாதிகளைச் 'சர் நேம்' ஆக வச்சுக்கிட்டாலும் ஒன்னுமண்ணாத்தான் இருக்காங்க. ஜாதிச் சண்டைகள் ஒன்னும் இதுவரை இல்லை. கலியாணம் காட்சின்னு எல்லாரும் எல்லாச் சாதிகளிலும் பொண்ணு எடுத்துக்கறாங்க. உசத்தி, மட்டமுன்னு ஒன்னும் கிடையாது. ஆனா தென்னிந்தியா, வட இந்தியான்னு பிரிவுகள் சம்பந்தம் வச்சுக்கறதில்லை. அதிலும் காதல் கல்யாணங்கள் சில நடந்துருது. 'வோ (த்) தோ ஹிந்துஸ்தானி. மகர் ஹம் மந்த்ராஜி' னு பொண்ணுங்க சொல்றதைக் கேட்டுருக்கேன்:-)



பிள்ளைக்கு ஊரோடு போய்ச் சேரணுமுன்னு மனசுலே எண்ணம் வந்துச்சு. ( நாமும் இப்படித்தானே பல சமயங்களில் நினைக்கிறோம். பேசாம மூட்டையைக் கட்டலாமான்னு) கோயில் இருந்த இடத்தை பக்கத்து நிலத்தை ஒப்பந்தம் செஞ்சுருந்த ' ஜஹூர் கான்' என்றவர், தானே இந்த இடத்தையும் வாங்கிக்கறேன்னு சொல்லி இருக்கார். கோயிலும் போயிருமேன்ற பயத்துலே அய்யாக்கண்ணு என்பவர் நான் வாங்கி நடத்தறேன்னதும், சில பல பக்தர்கள் ஒன்னு சேர்ந்து விவாதிச்சு, கோவில் ஒருத்தரின் தனிப்பட்ட இடமா இருந்தா பிற்காலத்துலே கஷ்டம். பேசாம எல்லாருமாச் சேர்ந்து வாங்கிறலாமுன்னு முடிவாச்சு. ஆசை இருக்கு. ஆனால் காசு? போலா மகாஜன் என்ற வட இந்தியர் (ஹிந்துஸ்த்தானி) காசு கடன் கொடுக்கறேன்னு சொன்னதும் அப்படியே வாங்கினாங்க. காசு வாங்குனதால் அவரையே கோவிலுக்கு ட்ரஸ்டியா ஆக்கினாங்க. இவர்தான் முதல் ட்ரஸ்டி.



சங்கத்தில் இருந்த மாரப்ப கவுண்டர், சுப்பா நாயுடு, மாதவன் நாயர், எம்.என் நாயுடுன்னு வியாபாரிகள் சிலர் ஆளாளுக்குக் கைக்காசு போட்டு போலா மகாஜன் கிட்டே வாங்குன 150$ கடனை அடைச்சுட்டுக் கோவிலை சங்கத்துச் சொத்தா ஆக்கிட்டாங்க. இதெல்லாம் நடந்தது 1934 வது வருசம்.




ரெண்டு வருசம் கழிச்சு(1936) மெட்ராஸ்லே இருந்து இங்கே வந்துருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷினைச்சேர்ந்த ஸ்ரீ அவிநாஷ் ஆனந்தாஜி என்ற சாமியார்
சங்கத்துக்கு மூணு விதிமுறைகளையும் உண்டாக்கிக் கொடுத்தார்.



1. பிடி அரிசித் திட்டம்



2. சங்கத்துக்கு உறுப்பினரா ஆகணுமுன்னா நாலணா கட்டணும்.



3. எல்லாக் கல்யாணங்களையும் கோவிலில் வச்சு நடத்தணும்.



பள்ளிக்கூடத்துலே படிக்கறதுக்காக அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து வந்து இங்கேயே தங்கிப் படிக்கும் பசங்களுக்கு இந்த பிடி அரிசித் திட்டத்தில் கிடைச்சதை வச்சு இலவசமா சோறு போட்டாங்க. வாரம் ஒரு நாள் ஒரு ஏரியான்னு கணக்கு வச்சு மாதர் சங்கம் பெண்கள் வீடுவீடாப்போய் அரிசியை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம்.


இதுவரை இந்தக் கோவிலுக்குப் பிள்ளையார் இல்லாம இருந்தார். சாமியார் வருகையைக் கொண்டாடும் விதமா சம்பூர்ணம்மாள் என்ற பக்தை ஒரு பிள்ளையார் சந்நிதியைக் கட்டிக்கொடுத்தார். இதுக்குப் பிள்ளையார் சிலை வேணுமுல்லே? கொடிமரத்துக்கு மரம் எடுத்த அதே டாங்கி டாங்கி(Tagi Tagi) என்ற கிராமத்துலே ( அங்கேயும் இதுக்குள்ளே ஒரு கோயில் வந்துருச்சு)கிடைச்சக் கருங்கல்லுலே செதுக்கித் தர்றோமுன்னு ஒருத்தர் சொல்லி இருந்தார். சிலை வடிவு அருமையா அமைஞ்சதுலே அங்கே இருக்கும் ஜனங்களுக்கு இதை நாமே வச்சுக்கணுமுன்னு தோணிப்போயிருக்கு.

புள்ளையாரை ஒளிச்சு வச்சுட்டாங்க.

அப்புறம்?





அடடே ((புதுக்) கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டோம். 12 மணிக்குக் கோவிலை அடைச்சுருவாங்க. இப்பவே 11.45 ஆயிருச்சு. சாமி கும்பிட்டுட்டு வந்து மீதியைச் சொல்றேன்.


கல்யாண வீட்டு விஷயங்கள்:


இரண்டாம் நாள்.


காலை நிகழ்ச்சிகள் என்ன நடந்ததுன்னு தெரியாது. நாம்தான் நா(ன்)டி கோயிலுக்குப் போயிட்டோமே.


இவுங்க குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கத்ரி ( Khatri) சமூகத்தினர். க்ஷத்ரியர்கள் என்பதுதான் மருவி கத்ரின்னு ஆகி இருக்கு. குஜராத்தில் இருக்கும் நௌஸாரி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். யாரைக்கேட்டாலும் சொந்த ஊர்னு இதைத்தான் சொல்றாங்க. ஒரே ஊர்க்காரங்களா மொத்தமா வந்துட்டாங்க போல இருக்கு.


வந்த புதுசுலே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் இருக்காங்க. யாரும் கரும்புத் தோட்ட வேலைக்கு வரலை. வியாபாரம், துணிக்கடை, தையல்கடைன்னு சின்ன அளவில் ஆரம்பிச்சதுதான். முக்கியமான ஒவ்வொரு டவுனிலும் இவுங்கதான் இப்பவும் கடைகள் நிறைய வச்சுருக்காங்க. ஹார்ட்வேர், சூப்பர் மார்கெட், மருந்துக்கடை, எலெக்ட்ரிக் & எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஜவுளிக்கடைன்னு எக்கச் சக்கம். எல்லாம் ஜப்பானில் இருந்து நேரடி இறக்குமதி. தரமான பொருட்கள். அழகழகான புடவைகள் ஜப்பான்காரன் செஞ்சு அனுப்பறான். இது இல்லாமல் நிறைய தொழிற்சாலைகள் ஆரம்பிச்சதும் வளமான வாழ்க்கை இவுங்களுக்கு மட்டுமில்லாம மற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைச்சு நாடும் நல்லா ஆகி இருக்கு.
அதிலும் தீவின் மேற்கில் இருக்கும் இந்த ஊர் MBA பா தான் நாட்டின் பொருளாதரத்தின் முதுகெலும்பு. அழகான பிரமாண்டமான வீடுகள் இங்கேதான் அதிகம்.


எல்லா முக்கிய டவுன்களிலும் கத்ரி ஹால் கட்டிவச்சுருக்காங்க. ஊர் முழுசுக்கும் சமைக்கப் பாத்திரங்கள், சாப்பாடு பரிமாறும் பாத்திரங்கள்,
பந்தி போட நீண்ட மேசை, இருக்கைகள்ன்னு அவுங்களுக்குள்ளேயே வசூல் செஞ்சு அமர்க்களமா வச்சுருக்காங்க. இவுங்க சமூகத்தின் பயனுக்குப்போக மற்றவர்களுக்கு வாடகைக்கும் விட்டு, அதுலே வரும் வருமானத்தில் ஹால் பராமரிப்பு. தன்னிறைவான சமூகமுன்னா இந்தக் கத்ரிகளைத்தான் சொல்லணும். ஊர் ஊருக்கு ராதாகிருஷ்ணா கோயிலும் (மார்பிள் சிலை) கட்டிவச்சுருக்கறதும் இவுங்கதான். (அம்பானிகளும் இந்த சமூகத்தினர் என்பது ஒரு கூடுதல் தகவல்)



மாலையில் வீட்டில் ஒரு பார்ட்டி. முன்புறம் விசாலமான பந்தல் போட்டு கலர் லைட்ஸ் எல்லாம் பளிச் பளிச்ன்னு ஜொலிச்சுக்கிட்டு இருக்கு. ஆண்கள் எல்லாரும் பாரில். வெளியே ஒரு 'சில்லர்' வச்சு தீர்த்தங்கள், ஜில்லுன்னு பரிமாறிக்கிட்டு இருக்காங்க. பெண்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே ஹாலில், நொறுக்ஸும் ஜூஸுமா அமர்க்களப்படுது.



அப்புறம் சாப்பாட்டு பந்தி. கல்யாணவீட்டுச் சாப்பாடு எல்லாம் தினம் ஒரு வகையான மீன் ஐட்டங்கள். வெஜிடேரியன்களுக்கு ரெண்டு வகைக் கறிகள். ருமால் ரோட்லி, சோறு, கொஞ்சமா இனிப்புச் சேர்த்த (பருப்பு)தால்.


ஒரு நூத்தம்பது பேருக்கு ரெண்டு வேளையும் மெல்லிசா ருமாலி ரொட்டி செய்யணுமுன்னா.................


தொடரும்............:-)))))