Monday, April 13, 2020

உள்ளூர் சமாச்சாரம்தான் இன்றைக்கு ..... முதலில்.... மசூதி (பயணத்தொடர் 2020 பகுதி 38 )

காலை ஆறரைக்குப் பார்த்தால்  நைல்நதியைக் காணோம்...ஒரே பனிமூட்டம்.....  ஒன்பது மணிக்கு ரெய்னா வருவாங்கன்றதால் நாங்களும் நிதானமாவே எழுந்து கடமைகள் முடிச்சு, லேட்டாக ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம். நேத்துமாதிரி கூட்டத்தில் ஆப்டுக்க வேணாமேன்னுதான்....
அப்படியும் கொஞ்சம் கூட்டம் இருக்கு. பஃபேயில் வேற என்ன இருக்குன்னு சுத்திப் பார்த்தால் ஒரு பக்கம் ப்ளெய்ன் ரைஸ் இருக்கு. ஓட்ஸ், ம்யூஸ்லி இருக்கும்  இன்னொரு பக்கம்  தயிர்  இருக்கு. ஆஹா.... ஹாலில் ஒரே  இடத்தில் வைக்காம இங்கே அங்கேன்னு  பல இடங்களில் வச்சால்  எப்படி ?  தச்சு மம்மு சமாச்சாரம் இவுங்களுக்குத் தெரியாது போல !
வெஜிடபிள் பகுதியில்  உருளைக்கிழங்கு. காய்களை அரைவேக்காடு  சமைக்கறதைப்போல் உருளைக்கிழங்கை செஞ்சு வச்சால் எப்படி? நேத்து லஞ்ச் சாப்பிட்ட இடத்திலும் இப்படித்தான் அரைவேக்காடு....  நறுக் நறுக்குன்னு....ப்ச்....

இதே ரெஸ்ட்டாரண்டு வாசலுக்குப் பக்கம் ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்டும் இருக்கு. மஹாராஜா.  வாசலில் யானை, உள்ளே புள்ளையார், வேணுகோபாலன் எல்லோரும் இருக்காங்க. லஞ்சும் டின்னரும்தான். என்ன ஒன்னு ... ரூம் சர்வீஸ் அனுப்பறதில்லை. இங்கே வந்து சாப்பிட்டுக்கணும். ஒருநாள் வரணும்....
அறைக்குப்போய் தண்ணீர், கேமெரா பேட்டரி, ஷால் இத்யாதிகளை எடுத்துக்கிட்டுக் கீழே வந்தோம். ரெய்னாவும் வந்துட்டாங்க. இன்றைக்கு முதலில் போற இடம் ஒரு கோட்டை.  கோட்டைன்னதும் நம்மவர் முகத்தில் ஒரு பூரிப்பு ! கோட்டைப்ரேமி !

நம்ம ஹொட்டேலில் இருந்து ஒரு அஞ்சு கிமீ தூரம்தான்.  ஒரு குன்றின் மேல் இருக்கும் கோட்டை.  Salah ad-Din என்ற சுல்தான் கட்டுனது.  இவரை Saladinனு ஆக்கிட்டாங்க. இந்தக் கோட்டைக்குப் பெயரும்  Saladin Citadel னுதான் !

வெளியே சாலையையொட்டியே நிறுத்தின வண்டியில் இருந்து இறங்கி பெரிய இரும்பு கேட்டைக் கடந்து போறோம்.  நல்ல ஏத்தம். குன்றின் மேல் இருக்குல்லே....
நல்ல கூட்டம்தான்.  உள்நாட்டுப் பயணிகளே அதிகமா இருக்காங்கன்னு ரெய்னா சொன்னாங்க. வெள்ளிக்கிழமை வேற !  வார விடுமுறை நாள் ! 

 கோட்டையில் கொடி பறக்குது. சட்னு பார்த்தால் இந்தியக்கொடிபோலவே இருந்துச்சா.... என்னன்னு திகைச்சேன்..  கண் மயக்கம்... ப்ச்....
கொஞ்சதூரம் போனதும்  செக்யூரிட்டி செக்  ஹால் தாண்டி அந்தாண்டை  டிக்கெட் ஆஃபீஸ் இருக்கு.

நல்ல பெரிய கோட்டை வளாகம்தான். Saladin  அவர்கள்தான் ஈஜிப்ட், சிரியா நாடுகளின் முதல்  சுல்தான்.  1137 இன் ஜனனம். சுல்தானாகி ஆட்சிக்கு வந்தது 1174 இல். மன்னர் ஆகிட்டதால்  நாட்டின் பாதுகாப்புக்குக் கட்டின கோட்டைதான் இது. இடம் தேர்வு பண்ணி ஏற்பாடு செய்யவே  ரெண்டு வருஷம் ஆகி, 1176 இல் கோட்டை கட்ட ஆரம்பிச்சு 1183 இல் முடிச்சுட்டாங்க.
அரச குடும்பத்துக்கான தங்குமிடம், அரண்மனை அலுவல் பார்க்க தர்பார், தொழுகைக்கான மசூதி, படைவீரர்கள் தங்க இடம் இப்படி  எல்லாமும்  கோட்டைக்குள்ளே அங்கங்கே அமைச்சாச்சு.

அரசன் ஆனதும் அடுத்த  வேலையா அக்கம்பக்கம் நாடுகள் மேல் படையெடுக்கறது ஆரம்பிச்சது. ஒரு சமயம் ஜெரூஸலேம் பகுதியும் பிடிச்சுக்கிட்டாங்க. ஐயோ அது எங்க சாமியோட இடம்னு இன்னொரு மதத்துப் பெருந்தலைகள்  குய்யோ முறையோன்னதும்....   இதுதான்  சமயமுன்னு நாட்டாமைகள் புகுந்து ஒப்பந்தம் போட்டதெல்லாம் தனிக்கதை.

சரித்திரமுன்னாலே சண்டையும் ரத்தமும்தான்.... அந்தக் காலத்துலே இருந்து இந்தக் காலம் வரையிலும் இப்படியேதான் போகுது. அப்போ கத்தியைக் கையில் எடுத்தால் இப்போ  ஏவுகணை.  ரத்தம் ரத்தம்தானே?

இந்தக்  கோட்டையில்  ஆரம்பிச்ச  Saladin அரசு...  இவர் மறைவுக்குப்பின்  (1193 )இவர் மகனின் தலைமையில் ஆட்சின்னு  தொடர்ந்து நடந்துருக்கு.   அரசவம்சமும்  இதே கோட்டையில்தான் இருக்காங்க. இப்படியே சிலபல தலைமுறைகள் வரை எல்லோரும் இங்கேதான். 1848 வரை கோட்டையில் குடியிருப்பு.  அந்தந்த காலக்கட்டங்களில்  கொஞ்சம் கொஞ்சமா புதுப்பிக்கறதும், புதுக்கட்டடங்கள் கட்டிக்கிறதுமாவும் இருந்துருக்கு.

என்னமோ உதவி, உபகாரம் செய்யறதைப்போல ஓசைப்படாம உள்ளே நுழைஞ்ச ப்ரிட்டிஷ்காரன், மெள்ள மெள்ள  நாட்டின் ஆட்சியைத் தன்வசப்படுத்திக்கிட்டான். இதேதான் வழக்கம் இல்லையோ.....   அப்படியே வந்து பிடிச்சுக்கிட்டு உக்கார்ந்துடறதுதான். அதிகாரப்பூர்வமா ஒன்னும் இல்லை.  ஊசி முனை இடம் கேட்டுக் கூடாரத்துக்குள் தலையை விட்ட ஒட்டகத்தின் கதை . 

வியாபாரத்துக்குச் சுலபம்னு  பிரிட்டிஷாரும் ஃப்ரெஞ்சுக்காரர்களும் சேர்ந்து சூயஸ்கால்வாய் கம்பெனின்னு ஆரம்பிச்சு   சூயஸ் கால்வாய் வெட்ட ஆரம்பிச்சு பத்து வருச வேலை முடிஞ்சது 1869 லே. இந்தியாவுக்கு வர்றது அப்போ ரொம்பவே ஈஸியாப் போயிருச்சு.

ஈஸ்ட் இண்டியா கம்பெனின்னு ஆரம்பிச்சு இந்தியாவுக்கு வியாபாரம் பண்ண வந்த ப்ரிட்டிஷார்....  நைஸா நாட்டையே பிடிச்சுக்கிட்டு இருந்தாங்கதானே....  1858 லே ப்ரிட்டிஷ்ராஜ்னு இந்தியாவை அதிகாரப்பூர்வமா ஆள ஆரம்பிச்சாங்க.  அடுத்து அடுத்த வருஷமே  குறுக்கு வழிக்காக சூயஸ் கால்வாய் வெட்ட ஆரம்பிக்கறாங்க. வேலை முடிஞ்சது. வரப்போக சுலபம். கடைசியில் நமக்கு சுதந்திரம் கிடைச்சது (கொடுத்தது) 1947 இல்.  அதே கால்வாய் மூலம்தான் திரும்பிப்போனதும் கூட :-)

இதெல்லாம் நடக்கும்போது ஈஜிப்ட்  வெள்ளையர் ஆட்சிதான்.  அரசியல்வாதிகள் சும்மா இருப்பாங்களா? அப்புறம்  அங்கேயும்  மக்கள் முழிச்சுக்கிட்டாங்க. 1953 லே சுதந்திரம் கிடைச்சது. எல்லாம்  சொல்லப்போனால்....   சொல்லிக்கிட்டேதான் இருக்கணும்... அவ்ளோ ராமாயணம்....

இப்ப கோட்டைக்கு வரலாம். ப்ரிட்டிஷார் புடிச்சுக்கிட்டவுடன், கோட்டையில்  அவுங்க ராணுவப்பிரிவு குடி வந்துருச்சு. சுதந்திரத்துக்குப்பின் அவுங்க கோட்டையைக் காலி பண்ணிட்டு போனாங்க.  அவுங்க போனாட்டு, ஈஜிப்ட் ஆர்மி அங்கே இடம் புடிச்சது.  உலகப்பாரம்பரிய கட்டடங்கள் இடங்கள்னு யுனெஸ்கோ இதை அறிவிச்சது 1976 இல்.
எல்லாத்தையும் சீர்படுத்தி, பொதுமக்களும் பார்க்கும் வகையில்  செஞ்சது 1983 லேதான். அங்கெதான் இப்போ நாம்  நிக்கறோம்.  வாங்க உள்ளே போய்ப் பார்க்கலாம்.  உள்ளே போக கட்டணம் 180 ஈஜிப்ஷியன் பவுண்ட்.
டிக்கெட்டைக் காமிச்சுட்டு  உள்ளே போனால்... பாதை இன்னும் உசரமாப் போகுது.  ஏறணுமான்னு மலைக்கும்போதே..... பேட்டரி கார் இருக்கு. அதுலே போகலாமுன்னு சொல்லி  இன்னொரு டிக்கெட்டோட வந்தாங்க ரெய்னா. ஆளுக்குப் பத்து.




ஒரு நாலைஞ்சு நிமிட்டுலே மேலே வந்துட்டோம். ஒரு பெரிய கட்டட வாசலில் வண்டி நின்னதும் இறங்கிப்போறோம்.   நீண்டு போகும் வெராந்தாவில் இருக்கும்  வாசலுக்குள் நுழைஞ்சால்...... பிரமாண்டமான முற்றம்.

உள்ளே போகுமுன் காலணிகளைக் கழட்டிடணும். நான் வேற லேஸ் முடிச்சு ஷூஸ் போட்டுருக்கேனா.... கழட்டணுமுன்னா எங்கியாவது  உக்காரணும்.... வாசலில் இருந்த காவல்காரர், அவருடைய  நாற்காலியில் உக்கார்ந்துக்கச் சொன்னாரா.... அதுக்குள்ளே  நம்ம காலணிக்கு மேலேயே போட்டும் உறைகளைக் கொண்டுவந்து கொடுத்தாங்க ரெய்னா. ஸோ ஸ்வீட்.  எனக்கொரு கஷ்டமான வேலை மிச்சம் !

முற்றத்துக்குள் அடி எடுத்து வச்சால்...  நடுவிலே இன்னொரு சின்ன மண்டபம். சுத்திவர ஏகப்பட்டத்தூண்களுடன் வெராந்தா. இடதுபக்க வாசலுக்குள் நுழையறோம்.  இது மசூதி ! ( ஓ ... அதுதான் காலணி கழட்டும்படியாச்சு !)

ரொம்பவே பெரூசா, ஏகப்பட்ட தொங்கும் விளக்குகளோடு இருக்கு!  மேலே விதானங்களின் கிண்ணக்கூரைக்குள்ளே  அழகான டிஸைன்களில் வரைஞ்சுருக்காங்க.  அதுலே  அரபிக் எழுத்துகளிலும்  என்னவோ எழுதி இருக்காங்க. ரொம்ப உயரத்தில் இருந்ததால் படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு.






தரைத்தளம் இல்லாமல் மேலே இன்னும் ரெண்டுமூணு மாடி இருக்காம்.  மாடிக்குப்போகும் படிகட்டு கூட அழகு!  ஆனால்  அங்கெல்லாம் ஏறிப்போக யாருக்கும் அனுமதி இல்லையாம்.
தொழுகை சமயத்தில்  மசூதியின் தலைவர்  (இமாம் ? ) பக்தர்களிடம் பேச ஒரு அமைப்பு!
இந்தக் கோட்டையில் இருந்து அரசாட்சி செஞ்ச கடைசி மன்னரான Muhammad Ali Pashaவின் காலத்தில்  (1805 - 1848) கோட்டையின் பல பகுதிகளை இடிச்சு, வேற மாதிரி (இப்ப நாம் பார்க்கிறது) கட்டுனாராம். Ottoman Style Architecture !அல்பேனியாப் பகுதியில் இவர் கவர்னரா இருந்துருக்கார். அதான் அந்த ஸ்டைல் பிடிச்சுப்போச்சு போல !

 


இவருக்கு பனிரெண்டு மனைவிகள் என்பது கூடுதல் தகவல் !
மசூதியை விட்டு வேற வாசல் வழியா வெளியே போனால்.... இஸ்லாமிக் புத்தகங்கள்  வச்சுருக்காங்க. இலவசம்தான் !  கொஞ்சம் இந்தாண்டை நினைவுப்பொருட்கள் கடைகள் ஒரு ஏழெட்டு.   இன்னும் கொஞ்சம் அந்தாண்டை போனால் கய்ரோ நகரைப் பார்க்கலாம்.  பனிமூட்டம் இன்னும் விலகலை. பளிச்னு வெயில் இருந்தால் பெரிய பிரமிட்Giza தலை தெரியுமாம்!




 இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு, மசூதியின் முன்பக்கத்துக்கு வந்துருந்தோம்.
இன்னும் மூணு  மசூதிகளும் இதே வளாகத்தில் இருக்கு.  ஆனால் நாம் போகலை.


கோட்டை வளாகத்தில்  பொலீஸ், ஆர்மி,  Royal Carriage, Palace னு நாலு ம்யூஸியம் இருக்கு.  இதுலே ரெண்டு திறந்துருக்குதான். நாம்தான் போகலை. அங்கங்கே பழுதுபார்க்கும் வேலைகள் நடப்பதால்  நிறைய இடங்கள் மூடித்தான் இருந்துச்சு.




கோட்டை ம்யாவ்ஸ் நிறைய. அதுலே ஒருத்தர் நமக்கு வழி காமிச்சுக்கிட்டுப் போனார் :-)

இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தால் மற்ற இடங்களைக் 'கோட்டை' விட்டுருவோம் என்பதால் கிளம்பி வெளியே வந்தோம்.

தொடரும்........ :-)


11 comments:

said...

கோட்டை... டிபிகல் கோட்டை மற்றும் இஸ்லாமியசூதி மாதிரி இருக்கு.

சுட்டாடல் பெயரைப் பார்த்ததும் சிட்டாடல் ஸ்டூடியோ நினைவுக்கு வந்தது.

காலணியைச் சுற்றி கவர் போடும் வழக்கம், அதற்கான கவர் தாஜ்மஹல்லயும் உண்டு

said...

கோட்டை ரொம்பவே அழகா இருக்கு.

மியாவ்! அழகு!

படங்கள் அனைத்தும் சிறப்பு.

said...

அருமை நன்றி

said...

Excellent

said...

பிரமாண்டமும் அழகும் ஓரிடத்தில்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

தாஜ் பார்க்க 1994 ஜூன்லே போனபோது காலணியைக் கழட்டி வச்சதும் துணி உறை ஒன்னு கொடுத்தாங்க. 2010 இல் ஒன்னும் கொடுக்கலை. நல்லவேளை டிசம்பர் மாசமா இருந்ததால் தப்பிச்சேன் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மை. அழகை அழகுன்னுதான் சொல்லணும்....ம்யாவ்.....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நாகராஜா,

முதல்வருகையோ ? வணக்கம். நலமா ?

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !

said...

அடேங்கப்பா ... கோட்டை எவ்ளோ பெருசா இருக்கு ... ஆனா எங்க ஊர்ல ஒன்றிரண்டு கொட்டகைகளை எல்லாம் கோட்டைன்னு சொல்லி நம்மள நம்ப வைக்கிறானுக .ம் ... ம் .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<