Monday, July 01, 2019

மதுரகணபதியும் குதிரை சவாரியும் பின்னே ஜூலியட் பால்கனியும் (பயணத்தொடர், பகுதி 111 )

எண்ணி மூணுநாள், அதுக்குள்ளே நாக்கு பழக்கமான சாப்பாட்டுக்கு ஏங்குது.....

லா காட்டேஜ் திரும்பி வந்து, கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் சாப்பிட எங்கே போகலாம்? னு  யோசனை.....    கீழே ரெஸ்ட்டாரண்டுலே சொல்லவான்னால்....   'வர்ற வழியில் ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் பார்த்தேன். அங்கே போகலாமு'ன்னார்.  நான் கவனிக்கலையே....

பக்கத்துலே எதோ கோவில்கூட இருக்கு (கொக்கி?) ஏரிக்கு எதுத்தாப்லெ...
"புள்ளையார் கோவில்னு பார்த்தேனே அதுவா? "

"அதேதான்."

காலையில் அசோகவனம் போன வழியிலேயே பெரிய ஏரி ஒன்னு பார்த்தோம்.  போகும்போது  சாதாரணமா இருந்த இடம், திரும்பி வரும்போது கூட்டமா மக்கள் நடமாட்டம். ஏரியில் அன்னப்படகுகள் எல்லாம் இருக்கு! அதுதானா....

சரி போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ஏரிவரை போகலாமுன்னு கிளம்பினோம்.
'இண்டியன் சம்மர்'  என்று பெயர். பார்க்கிங் இடம் ரொம்பச் சின்னது. நாலு வண்டிக்குமேல் இடம் இல்லை. அதையொட்டி வெளியே சாலையில் வண்டியை நிறுத்தினார் மஞ்சு.  நான் இறங்கும் பக்கம் மதுரகணபதி இருக்கார்!

மணி ஒன்னு. கோவில் மூடி இருக்குமேன்னு முதலில் சாப்பிடப் போயிட்டோம்.  உள்ளே நல்ல கூட்டம்தான்.  ஆனியன் பக்கோடா, ஜீரா ரைஸ், வெஜ் பிரியாணி,  சாஹி பனீர் சொன்னோம். முதலிரண்டும் ஓக்கே. மத்தது காரம்தானாம்.   ஐயோ.....  ஆகாது. மஞ்சு முதல்முறை பனீர் சாப்பிடறாராம். பிடிச்சிருக்குன்னார். அத்தனையும் ப்ரோட்டீன்னு சொல்லி வச்சேன் :-) எப்படி சமைக்கணுமுன்னு கேட்டுக்கிட்டார், என்னிடம்தான்!  சொல்லியாச் :-)

திரும்ப வண்டியாண்டை போனா கணபதி கோவில் பால்கனியில் ஆட்கள் தெரிஞ்சாங்க.  படியேறிப்போகணும். முதல்மாடியில் கோவில், ஏரியைப் பார்த்தபடி!



மாடிக்குப்போய்ச் சேர்ந்தால் ஒரு பக்கம் புத்தர் இருக்கார்.  நடுவாந்திரமாத் தனிச்சந்நிதியில் புள்ளையார்!  எங்கூரில் ஒரு 'பே வாட்ச்' புள்ளையார் இருக்கார். அவரைப்போலவே இவரும்  கடல்போல் இருக்கும் ஏரியைப் பார்த்தபடி உக்கார்ந்துருக்கார் !

சந்நிதியை வலம் வந்து அந்தாண்டை போனால் நவகிரஹங்கள்.   வைரவருக்கு ஒரு மாடம்! போயா தினத்தில் உச்சிகாலபூஜை முடிஞ்சாட்டுக் கோவிலை மூடுவதில்லையாம்!  நல்லவேளை.... இன்றைக்கு நமக்கு போயாவால் எல்லாமே கிடைச்சுக்கிட்டு இருக்கு!
புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு ஏரியாண்டை போனோம். கொஞ்சம் சுத்துவழியில் போனால்தான் கார்பார்க். எதோ கட்டணம் வாங்கினாங்க.

நாலைஞ்சு குதிரைகளுக்கு  மெத்தை 'சேணம்' பூட்டிவச்சுருக்காங்க. சவாரி போகவாம்!
படகுகள் வாடகைக்கு எடுத்துக்கலாமாம்.  வேணுமான்னு ஒரு விநாடி யோசிச்சுட்டு வேணாமுன்னு முடிவு செஞ்சோம்.

தீனிக்கடை, துணிக்கடைன்னு வண்டிகளில் வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க.
ஏரி நல்ல பெருசுதான். 225 ஏக்கர் பரப்பளவில் க்ரிகோரி  ரிஸர்வாயர். இங்கே பிரிட்டிஷாரின் ஆட்சியில் கவர்னரா இருந்த ஸர் வில்லியம் க்ரிகோரியின் முயற்சியால்  சின்னதா சதுப்பு நிலமாக  இருந்த இடத்துலே இந்த நீர்த்தேக்கத்தை , 1873 ஆம் ஆண்டு நிர்மாணிச்சுருக்காங்க.  1913 ஆம்  ஆண்டு முதல் இதிலிருந்து தண்ணீரை  டன்னல்வழியா அனுப்பி மின்சாரம்  தயாரிக்கப் பயன்படுத்தறாங்க..  நாம் நேத்து  நுவரா எலியா  வரும் வழியில் ஒரு ஆஞ்சி கோவிலுக்குப் போனோமே... அங்கிருந்து பார்த்தப்பத் தெரிஞ்ச கொத்மலை அணைக்குத்தான் ( Kothmale Dam)அந்தத் தண்ணீர் போய்ச் சேருதாம்.
வெள்ளையர் காலத்துலே நீர்விளையாட்டு இந்த ஏரியில்தான். இப்ப குதிரை, படகு சவாரிகளுக்கு.....

மழை வர்றதுபோல இருக்கவே நாங்களும் கிளம்பி  அறைக்கு வந்துட்டோம்.  வர்ற வழியிலேயே சின்னதா ஒரு  ஊர் சுத்தல். பிரிட்டிஷ் ஸ்டைல்  கட்டடங்கள் இன்னும் நிறையவே இருக்கு!  கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமுன்னு கண்ணை மூடுனது தப்பாப் போயிருச்சு. நல்ல பகல் தூக்கம்.

சாயங்காலமா ஒரு அஞ்சரை மணி போல விழிப்பு வந்ததும்,  டீ கொண்டுவரச்சொல்லிக் குடிச்சுட்டு வெளியே ஊர் சுத்திப் பார்க்கலாமுன்னா எங்கே....   இருட்டாகிருச்சு. ஆனால் மழை இல்லை.
ஒரு எட்டுமணி போல கீழே போய் வரவேற்பில் இருந்தவரிடம் (நேற்றுப் பார்த்த அதே இளைஞர்தான்) எதாவது வெஜிடேரியன் ரெஸ்ட்டாரண்ட் இருக்கான்னு விசாரிச்சால்,  நியூ பஸாரில் அம்பாள்ஸ் நல்லா இருக்குமுன்னு சொன்னார்.



கிளம்பிப் போனோம்.  முன்பக்கம் ஜெனரல் ஸ்டோர்ஸ் & இனிப்புக்கடைசேர்ந்து இருக்கற மாதிரி....  அதுக்கு அந்தாண்டை ஒரு ஏழெட்டு  மேஜை போட்டு வச்சுருக்காங்க.  மக்கள் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
கல்லாவில் இருந்தவர் மாடிக்குப் போகச் சொன்னார். ஜூலியட் பால்கனிபோல  சின்ன உயரத்தில் மாடி. ஒரு  பத்துப்படிகள்தான்.  அங்கே ஒரு மூணு மேஜை!   தலை உயர்த்தாமல் கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்கணும்.
 தோசையும் வடையும் கிடைச்சது. சாம்பார் வாளியும் சட்னி வாளியும் நம்ம மேஜையில் :-)

தயிர் வாங்கினோம். கூடவே சின்னப் பாக்கெட்டில் தேன் வந்தது! இதை அதோடு கலந்து சாப்பிடணுமாம் !  ஆச்சு :-)

இந்த ரெஸ்ட்டாரண்டுக்கு (!) எதிர்வாடையில் இதே பெயரோடு இன்னொன்னும் இருக்கு. இவுங்க கடைதானாம்!  ரெண்டு இடத்திலும் நல்ல கூட்டம்தான்.

ஒன்பது மணிக்கெல்லாம் அறைக்கு வந்துட்டோம்.  படுத்த பிறகுதான் நினைவுக்கு வந்தது இன்றைக்கு பவுர்ணமி ஆச்சே. நிலவைப் பார்க்கலையேன்னு....

இங்கே நியூஸியில் அதுவும் எங்க ஊரில் பவுர்ணமி நிலவைப் பார்ப்பதே அபூர்வம்.  எப்பப் பார்த்தாலும்  மேகமூட்டம்தான். இங்கேயாவது நிலவைப் பார்க்கலாமுன்னு சோம்பல் இல்லாம எழுந்து வெளியே வந்து பார்த்தால்....  சுத்தம்.  ரொம்ப சுமாராக இருந்தது.
சரி. போய்த்தூங்குங்க. நாளைக்கு வேற ஊருக்குப் போறோம்.

தொடரும்.......  :-)


10 comments:

said...

அருமையான இடங்கள். தொடர்கிறேன். (ஆனா தோசைதான் சரியாக இல்லை மாதிரி படத்துல தோணுது)

said...

//நாலைஞ்சு குதிரைகளுக்கு மெத்தை 'சேணம்' பூட்டிவச்சுருக்காங்க. சவாரி போகவாம்!//

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் …….

said...

wow என்ன அழகான ஏரியும் , பிள்ளையாரும் ...

அந்த அன்னம் போன்ற படகுகள் கவர்கின்றன ...

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

தோசை ரொம்பவே சுமார்தான். வேற வழி இல்லை.... ப்ச்....

said...

வாங்க விஸ்வநாத்,


பாட்டெல்லாம் வரலையாக்கும் ... :-)

குதிரைகள் செழிப்பா இல்லை..... ப்ச்...

said...

வாங்க அனுப்ரேம்,

ஏரி அழகுதான். அதுவும் செயற்கை ஏரி. அதுலே யாரும் கழிவுகளையும் கொட்டலை, ப்ளாட் போட்டு வீடும் கட்டிக்கலை.....

ஏரியை ஏரியாகவே வச்சுருக்காங்க.

சின்னச் சின்ன நாடுகளில் இருக்கும் பல நல்ல சமாச்சாரங்களைத் தமிழ்நாட்டில் பார்க்க முடியாது.....

said...

இயற்கை எழில் கொஞ்சும் இடம் நுவரெலியா. எனக்கு மிகவும் பிடித்த இடம். இந்த இடங்கள்,அம்பாள் ரெஸ்ரோரண்ட் என போயிருக்கோம். அழகான பதிவு,படங்கள்

said...

கிரகோரி லேக் குதிரைசவாரி அழகிய இடம்.

said...

வாங்க பிரியசகி,

நன்றிப்பா !

said...

வாங்க மாதேவி,

குதிரைகள்தான் பார்க்கப் பாவமா இருக்குதுகள் !