Friday, May 25, 2018

எல்லாம் (நம்ம )கிரகம்தான் !!! சீனதேசம் - 16

கோட்டைக் கதவை தாண்டி டன்பி(Danbi) பாலத்துலே நிக்கறோம்.  அதோ அங்கே முன்னுத்து அறுபது மீட்டர் தூரத்துலே  அடுத்த பகுதிக்குப் போகும் வாசல் தெரியுது.  இங்கேயும் மூணு  கதவுகள்.  எல்லாத்துலேயும் நடுக்கதவு மூடித்தான் இருக்கு. சாமி வாசல் அது இல்லையோ!
இப்ப நாம் பார்த்துட்டு வந்த  ப்ரேயர் ஹாலையும், இப்போ பார்க்கப்போற  வட்ட மேடு சந்நிதியையும்  (Circular Mound Alter ) இணைக்குது இந்த நல்ல அகலமான பாலம். முப்பது மீட்டர்  அகலம். தரையில் இருந்து நாலு மீட்டர் உயரத்தில் கட்டி இருக்காங்க. அந்தக் காலத்து ஃப்ளை ஓவர்!   கீழே பசும்புல்தரை நீண்டு கிடக்கு!
இந்த டெம்பிள் ஆஃப் ஹெவன் வளாகம்  ரொம்பவே பெருசுன்னு சொன்னேனில்லையா....   இதுக்கு பிரதான  வாசல்கள் ரெண்டு இருக்கு(இப்பதான் தெரிஞ்சது!)நாம் வந்த வாசல் புழக்கடைன்னு வச்சுக்கிட்டால்....    இந்தப் பாலம் கடந்து  அந்தாண்டை ரொம்ப தூரத்துலே இருக்கறதை முன்வாசல்னு சொல்லிக்கலாம்.  இந்த வாசலுக்கும் அந்த வாசலுக்கும் சுமார் ரெண்டு கிமீ தூரம்.
பாலத்தின் ஒரு பக்கம்  கிளைபிரியும் இடத்தில் மஞ்சள் கூரை போட கட்டடம்.  அரசர்கள் காலத்துலே   சாமி சடங்குகள் நடக்கும் சமயம், அரசர் சாஸ்த்திர சம்ப்ரதாயமான உடைகளை மாத்திக்க  இங்கேதான் வருவாராம். இப்போ இந்த  இடத்தில்  நாமும் அரசர குடும்பமா மாறிக்கலாம்.   காஸ்ட்யூம் ஃபொட்டாக்ராஃபி !
அப்பதான்    லானை சந்திச்சோம். நம்மாண்டை ஆசையோடு வந்து பேசுனாங்க.  சின்னப்பொண்ணுதான்.  படிச்சு முடிச்சுட்டு வேலை தேடிக்கிட்டு இருக்கும் நிலை. ஒரு நேர்காணலுக்காக பெய்ஜிங் வந்துருக்காங்களாம். இங்லிஷ் நல்லாவே வருது!  நம்ம கூடப் பேசி....    படிச்சுக் கத்துக்கிட்ட இங்லிஷை  பாலிஷ் பண்ணிக்கும் ஐடியா.... ஹைய்யா.....
கொஞ்ச நேரம் ஊருளவாரம் எல்லாம் பேசிக்கிட்டே  டன்பி பாலத்துலே நடந்து  அந்தாண்டை முற்றத்துக்குப் போறோம். வழியில் முகப்புக் கட்டடத்துலே மூணு வாசல்களும் திறந்தே இருக்கு!  'அகம் ப்ரம்மாஸ்மி'ன்னு  சாமிக்கான நடுவாசலில் போனேன் :-)

இன்னொரு வட்டக்கூரை தெரியுது மதில்சுவருக்கு அப்பால்.
கொஞ்சதூரம் சுத்திக்கிட்டுத்தான் போகணும்.   வலப்பக்கம் திரும்பும் இடத்தில்  ஒரு மரத்தைச் சுத்திக் கம்பித் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. இதுக்குப் பெயர்  நைன் ட்ராகன் ட்ரீ(யாம்!) மரத்தோட  உடல்பகுதியில் ட்ராகன்கள் பின்னிப் பிணைஞ்சுருக்கறதைப்போலத்தான் தெரியுது.  இதுகள் அப்படியே ஏறி சொர்கத்துக்குப் போகுதாம்! மரத்துக்கு வயசு ஐநூறுன்னு தகவல் பலகை சொல்லுது!

அங்கே போனால் இடதுபக்கம் ஒரு பகுதிக்கான நுழைவு (மீண்டும் மூணு) இருக்கு.  வலப்பக்கம்  இன்னொரு திறந்த வெளியில் நிக்கும் பளிங்கு டிசைன்கள். இதுவும் மூணுதான் :-)  லான் அந்தாண்டையும் நாங்க இந்தாண்டையுமா பிரிஞ்சுட்டோம்.


உள்ளே போனால் நேராக் கண்ணுக்கு முன்னால் தெரியும் சந்நிதி Imperial Vault of Heaven என்ற பெயரில். இதுவும் வட்டக்கோவில்தான்.   ஒரே ஒரு கூரையும்  ரெண்டு வாசலும் . நீல நிற  மூங்கில் டிஸைன் ஓடு போட்ட கூரையின் உச்சியில்தங்கக் குமிழ்   !
இங்கேயும் நாம் உள்ளே  போய்ப் பார்க்க அனுமதி இல்லை. வாசலில் இருந்து பார்க்கலாம். சாமி சந்நிதிதான்.  சாமியின் 'டேப்ளெட்ஸ்' இருக்குன்னாங்க. அட சாமியுமான்னு...... நினைச்சதும்,  அட,  இது வேற ன்னு புரிஞ்சது. சாமி சமாச்சார  கல்வெட்டுகள்தான், ஆனால் துணியில் செஞ்சது. சந்நிதிக்கு முன் பீடங்களில் வச்சுருக்கும் பாத்திரங்கள் அட்டகாசம் போங்க!  விதானம்......... ஹைய்யோ.................  அழகு!


நல்ல உயரத்தில் இருக்கு கோவில். இதுவும் மரத்தால் ஆனதுதான். இங்கே ரெண்டு பக்கமும் தனிக் கட்டடங்கள் இருந்தாலும், சுத்திவர வட்டமாப் போட்டுருக்கும் மதில்சுவர்தான் கொஞ்சம் விசேஷமானதாம்.

ஒரு பக்கத்துலே சுவத்தைப் பார்த்து நின்னு மெள்ள சேதியை முணுமுணுத்தால்  எதிர்ப்பக்கம் இருக்கும் நிற்பவருக்குத் தெளிவாக் கேக்குமாம்.   ஆனால் முற்றத்துலே கூட்டம் இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. இது சீனதேசம். கூட்டம் இல்லாமல் இருக்க இது என்ன நியூஸியா?   ஆனாலும் மக்கள் எக்கோ வாலாண்டை நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்கதான். ஒரே கிய்யாமுய்யா சத்தம், போங்க....

  கிழக்கும் மேற்குமா இருக்கும் பக்கவாட்டுக் கட்டடங்களில்  ஒன்னு பகல் சாமிக்கு!  சூரியன்தான்  வேறென்ன?   இவர் நடுவில் இருக்க, நம்ம நவகிரஹங்களில் மூவரை  விட்டுட்டு மத்தவங்க எல்லோருக்கும் கூடவே துருவ நட்சத்திரங்களுக்குமா குட்டிக்குட்டியா சந்நிதிகள் இதுக்குள்ளே!  எல்லாமே இந்த பெரிய ஹாலுக்குள்தான்!
ச்சீனர்களுக்கு நம்ம ராகு, கேது சமாச்சாரம் தெரியலைப்பா.....  ப்ச்....
பகல்சாமிக்கு ஒன்னுன்னா இரவுச்சாமிக்கு ஒன்னும் இருக்கணுமே!  இருக்கு, எதிர்க் கட்டடத்துலே!  ராத்ரி வெளிச்சம் தரும் சந்திரன். இவருக்குத் துணையாக ஒரு  நால்வர். மேகம், இடி, காத்து, மழை !  அட! அட!
ஆஹா.... எல்லாம் விண்ணுலக சமாச்சாரம்!!   எதுவும் நம்ம சொல் கேக்காது!

எனக்கும்கூட கண்(ணால்)கண்ட தெய்வம்னு சொன்னால்.....  அது பகல் சாமிதான்.  நியூஸி போல இருக்கும் குளிர்ப்ரதேசத்துக்கு  வந்துட்டால்.... இதுதான் பெரியசாமி! எல்லா உயிருக்கும் இவனே ஆதாரம். இல்லைன்னா ஒரு புல்பூண்டு கூட முளைக்காதில்லையா?

இந்த டெம்பிள் ஆஃப் ஹெவனில் ரொம்பவே முக்கியமான பகுதின்னா இந்த டெம்ப்ள் ஆஃப் வால்ட்னு சொல்லும் விண்ணுலக் பெட்டகம் இருக்குமிடம்தான். கிரகம் கிரகமுன்னு சொல்லிட்டுப்போகாம எல்லாத்தையும் நம்மைப்போலவே  சாமியாக்கி வச்ச ச்சீன சம்ப்ரதாயம் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு, அவுங்க சாப்பாட்டைத் தவிர!
நமக்குப் புரியாத, நம்ம கைக்கு எட்டாத, நம்ம பேச்சைக் கேக்காத  சமாச்சாரம் எல்லாம் சாமிதான் இல்லையோ!  ஆனாலும்   நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுதான் கடவுள்னு நம்பினாங்க  பாருங்க.....   அங்கெ நிக்கறான் ஆதிகால மனுசன் !

இந்த உள்ப்ரகாரத்துலே இருந்து வெளியே வந்தால் எதிரில் வட்டமேடு. ஏற்கெனவே அங்கே போயிட்டுத் திரும்பி வந்துக்கிட்டு இருந்த லானை மீண்டும் நேருக்குநேர் சந்திச்சாச்:-)  நம்ம கூடவே அவுங்களும் வட்டமேட்டுக்குத் திரும்பவும் வந்தாங்க.

வட்டமேட்டுக்கு நுழைவுவாயில் மூணுன்னாலும் டிஸைன் வேற. எனெக்கென்னவோ சாஞ்சி  நினைவுக்கு வந்துச்சு. (இன்னும் சாஞ்சிக்கு நேரில் போகலை !) எல்லாம் பளிங்குக் கல் சமாச்சாரம். வட்டவட்டமா மூணு பிரகாரம் கடந்து  மேலேறிப்போய்ப் பார்த்தால்........  வட்டப்பளிங்குத் தரையின் நடுவில்  ஒரு ரெண்டடி விட்டத்தில் ஒரு பளிங்கு வட்டக்கல்.  இது சமதரையா இல்லாமல்  லேசான  சரிவோடு  இருக்கு.
இது சூரியன்!  அரசர்கள் காலத்துலே நம்ம உத்தராயணம் (winter solstice)ஆரம்பிக்கும்போது  இங்கேதான் படையல் போடுவாங்களாம். மூவாயிரம் வருசத்துக்குமுன்னே முதல் படையல் போட்டாங்கன்னும், கடைசியாப் போட்ட படையல் 1914 ஆம்  வருசத்துலேன்னும் அவுங்க சரித்திரம் சொல்லுது.

Qing Dynasty அதுக்கப்புறம்  மெள்ள மெள்ளக் கரைஞ்சே போயிருச்சு. எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு   கிங் என்ற பெயரை சனம் தங்களுக்கு வச்சுக்க ஆரம்பிச்சது அப்போதானாம். (நம்ம வீட்டு  அடுக்களையைச் செஞ்சு கொடுத்தவர்கூட கிங் என்ற பெயருடைய சீனர்தான். இவரை கிச்சன் கிங்ன்னு நான் குறிப்பிடுவேன் :-)

 இந்த சூரியக் கல்லைச் சுத்தி  வட்டமா ஒன்பது  பளிங்குப்பலகை (மார்பிள் ஸ்லாப்) போட்டுருக்காங்க. இந்த வட்டத்தைச் சுத்தி ரெண்டாவது வட்டத்துலே பதினெட்டு கல். இப்படியே வட்டம் வளர்ந்துக்கிட்டே போய் ஒன்பதாவது வட்டத்துலே முடியுது எம்பத்தியொரு  கல்லோடு!

ஒன்பது என்பது சீனர்களுக்கும்   மிகவும் முக்கியமான எண். தெய்வீக எண்!  ஒவ்வொரு பிரகாரத்துக்கும் ஒன்பது படிகள் கணக்கில் இருபத்தியேழு படிகள். (2+7=9)

நாம் ஏறிவர்ற முதல் ப்ரகாரம் எழுபது மீட்டர் விட்டம், ரெண்டாவது  அம்பது மீட்டர், மூணாவது முப்பது மீட்டர்னு விட்டக்கணக்கு வேற சொல்றாங்க. ஒவ்வொரு ப்ரகாரத்திலும் சுத்திவர ஒன்பது வரிசையில் பளிங்குப் பலகை. (நல்ல அகலம்தான்!)
ஆக மொத்தம் மூவாயிரத்து நானூத்தி ரெண்டு மார்பிள் ஸ்லாப்! (நான் எண்ணிப் பார்க்கலை, கேட்டோ !  )
சூரியன் மேலே நின்னு படம் எடுத்துக்கறது ரொம்பவே விசேஷமுன்னு யார் கிளப்பி விட்டாங்களோ தெரியலை.....  சனம் காத்திருந்து போய் அதுலே நின்னு படம் எடுத்துக்குது. இதுலே செல்ஃபி வேற!  இந்த விசேஷத்தை நாம்  மட்டும் எப்படி வேணாமுன்னு விட்டுட்டுப்போறது... சொல்லுங்க?
லானையும் கல்லுலே ஏத்திவிட்டு க்ளிக்கினேன் :-) நன்மை உண்டாகட்டும் !

கிளம்பலாமுன்னு இறங்கி வர்றோம்....   இண்டுவுக்கு மறுபடி ஒரு  டிமாண்ட் :-) அய்க்கோட்டே.....
நம்ம லானும் சொல்லிக்கிட்டுக் கிளம்புனாங்க. மெயில் ஐடி பரிமாறிக்க மறக்கலை :-) இப்பவும் தொடர்பில் இருக்காங்க. படங்களை அனுப்பி வச்சேன். இன்னும் வேலை கிடைக்கலையாம்....   ப்ச்....
மேலே: சுட்டபடம். நன்றி!
நாங்க நடந்து நடந்து தெற்கு வாசல் முகப்புக்கு வந்துருந்தோம். இன்னும்  சுமார்  அரைகிலோ மீட்டர் நடந்தாத்தான் வெளியே போய்ச் சேருவோம்.  இங்கேயும்   பாதிவழியில்  டிக்கெட் கவுன்ட்டர்கள் வச்சுருக்காங்க. கூட்டங்கூட்டமாக் குழுக்குழுவா மக்கள் வெள்ளம் வந்துக்கிட்டே இருக்கு!
இனி தோட்டத்தைச் சுத்திப் பார்க்கத் தெம்பு இல்லை. ஏற்கெனவே நாலரை மணி நேரம் நடையா நடந்து கோவிலைப் பார்த்தாச்சு. எல்லாம் அது போதும். கொஞ்ச நேரம் தோட்டத்துக்குப் பக்கம் போட்டு வச்சுருக்கும் பெஞ்சு வரிசையில் உக்கார்ந்து  மூச்சு வாங்கி ஆசுவாசப் படுத்திக்கிட்டேன்.

தோட்டத்தில் முக்கால்வாசி  சைப்ரஸ் மரங்கள். என்னதான் எவர்க்ரீன் ட்ரீன்னாலும் தோட்டமுன்னு சொன்னால் இலை தழை விழாமல் இருக்குமா? உடனுக்குடன் வாரிப்போடத் துப்புரவுப் பணியாட்கள் சுத்திக்கிட்டே இருக்காங்க.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் கட்டடங்களில்  சொர்கக்கோவிலை சேர்த்துருக்காங்கன்னு  ஒரு கல்வெட்டு சொல்லுது.  ரொம்ப நல்லது!
இன்னும் கொஞ்சம் நடந்து  சாலைக்குப் பக்கம் இருக்கும் வாசல் வழியா வெளியே வந்தால் சாலையைக் காணோம்!

இன்னும் ஒரு நூறு மீட்டர் நடக்கணும்.

அட ராமா............

தொடரும்.......... :-)

14 comments:

said...

நடுவாசல் மூடி, பக்கவாசல்கள் திறந்து... இது புதிய பாணி!

ஏன் மூன்று மூன்று வாசல்கள் வைக்கிறார்கள்? உள்ளே போக வெளிநாட்டவருக்கு அனுமதி இஇல்லையா? இல்லை யாருக்குமே அனுமதி இல்லையா? லான் அழகா இருக்காங்க.. நம்மூர்ல பார்த்தா சூர்யாவுக்கு ஜோடியாய் போட்டுடுவாங்க! அய்க்கோட்டே என்றால்?

அழகிய இடங்கள். சுவாரஸ்யமான படங்கள்.

said...

மிக அருமை. நன்றி.

// ஒரு பக்கத்துலே சுவத்தைப் பார்த்து நின்னு மெள்ள சேதியை முணுமுணுத்தால் எதிர்ப்பக்கம் இருக்கும் நிற்பவருக்குத் தெளிவாக் கேக்குமாம். // ஹிஹிஹி. இதெல்லாம் பழசு. இப்போல்லா மனசுல நினைச்சாலே மனைவிக்கு தெரிஞ்சிபோகுதே ... ம்ம்ம்

said...

பதிவு போட்டு இவ்ளோ நேரமாகியும் பின்னூட்டம் ஒன்னுமே வரலையேன்னு நம்ம 'பின்னூட்டப்ரேமி' தவிச்சுப்போயிட்டார்.

எழுதறதோடு என் கடமை முடிஞ்சுருதுன்னு நான் சொல்லிக்கிட்டு இருந்தேன் :-)

இன்றைக்கு மறுபடியும் உன் பின்னூட்டப் பெட்டி திறந்துருக்கான்னு பாருன்னதும் சரின்னு போய்ப் பார்த்தால்..... இந்தப் பதிவுக்கான ரெண்டு பின்னூட்டங்கள் மாடரேஷனுக்காக வெயிட்டிங்னு சொல்லுச்சு. உடனே பப்ளிஷ் செஞ்சேன். ஏன் மெயில் பாக்ஸ்லே வரலைன்னு புரியலை. செட்டிங்ஸ் எல்லாம் சரியாத்தான் இருக்கு!

இது போக அங்கே இன்னொரு சுவாரஸியம் என்னன்னா.... 478 கமென்ட்ஸ் வெயிட்டிங்லே இருக்குன்னு காமிக்குது! வாவ்!.....

said...

வாங்க ஸ்ரீராம்.

நடுவாசல் சாமிக்கு!

சில இடங்களில் நடுவாசல் மன்னருக்கு! ஆக மொத்தம் முக்கியமானவுங்க நடுவிலே!

அய்க்கோட்டே = ஆகட்டும் (மலையாளம்) :-)

லானுக்கு உங்க பின்னூட்டத்தை மொழி பெயர்த்து அனுப்பணும் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

சவுண்ட் ட்ராவல்ஸ் :-)

சகபாதிக்கு மனசுலேயும் பாதி இடம் இருக்கே! அதான்..... நான் பேச நினைப்பதெல்லாம்..... ஹாஹா

said...

// ஏன் மெயில் பாக்ஸ்லே வரலைன்னு புரியலை. செட்டிங்ஸ் எல்லாம் சரியாத்தான் இருக்கு!//

ஆம், நேற்று முதல் எனக்கும் இதே நிலை. நானும் செட்டிங்ஸ் எல்லாம் போய்ப்பார்த்தேன். சரியாத்தான் இருக்கு. உங்களுக்கு சரியானா எப்படி சரி செய்தீர்கள் என்று எனக்கும் சொல்லுங்கள். என் ப்ளாக்குக்கு நானே 'பின் தொடரும் ஆப்ஷன்' க்ளிக் செய்ய வேண்டிய நிலைமை!

said...

@ஸ்ரீராம்,

நானே ஒரு ககைநா :-)

காமென்ட்ஸ் இருக்கான்னு இப்ப வெயிட்டிங் ஃபார் மாடரேஷனில் போய்ப் பார்த்துதான் பப்ளிஷ் பண்ணினேன் உங்க ரெண்டாவது காமன்ட்ஸ் கூட !

பார்க்கலாம்.... தானே கொஞ்ச நாளில் சரியாகலாம்.... டச் வுட் !

said...

நட்புகள் எப்படியெல்லாம் உருவாகுது. லானுக்கு விரைவிலேயே மனசுக்குப் பிடிச்ச நல்ல வேலை கிடைக்க முருகனை வேண்டிக்கிறேன்.

டீச்சருக்கு சீனால நல்ல டிமாண்ட். எல்லாரும் வந்து வந்து போட்டோ எடுத்துக்கிறாங்களே.

டீச்சர்... நீங்களும் கோபால்சாரும் ஒன்னு செஞ்சிருக்கலாம். அந்த மஞ்சக்கூரை கட்டிடத்துல போய் சீன அரசர் உடையணிஞ்சும் படம் எடுத்திருக்கலாம். அந்த உடையெல்லாம் நாம எப்ப போடப்போறோம்.

கோயில் வளாகம் ரொம்பவே பெருசுதான். இதுல நீங்க நடந்து பாத்ததுலயே அன்னைக்கு வாக்கிங் கோட்டாவை விட நிறைய நடந்திருப்பீங்க போல.

said...

எனக்கென்னவோ ரொம்ப Dry ஆன இடம் போல தோன்றுகிறது.

said...

சில கோயில்கள் கேரளாவினை நினைவூட்டுகின்றன.

said...

வாங்க ஜிரா.

நல்ல பொண்ணு லானுக்காக வேண்டிக்கிட்டதுக்கு நன்றி!

அரச உடை.... அட.... ஆமால்லே.... வடை போச்சே.....

இன்டுவின் புகழ் பரவி இருக்கே :-)

நல்ல நடைதான்.... பயணம் முடிஞ்சாட்டுப் பார்க்கணும் எதாவது கொஞ்சமாவது
இளைச்சுருக்கேனான்னு ...

said...

வாங்க குமார்.

சாமி கும்பிடும் இடத்துலே என்ன ஜிலுஜிலு குளுகுளு வேண்டியிருக்குன்னுதான்.... :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அந்த சிகப்பு ஓடுபோட்ட கூரைகளால்கூட இருக்கலாம். நம்மூர்க் கோவில்கள் போல பக்தர்கள் வர வர தீபம் காட்டுறதெல்லாம் கேரளக் கோவில்களில் இல்லை. அதே போலத்தான் இங்கும். காலையில் கோவில் திறக்கும்போது பூஜை செய்வாங்க போல... அதுக்கப்புறம் ஒன்னும் இல்லை.

said...

அட..எல்லாம் மூணு மூணா தெரியுதே...

ரொம்ப நல்ல பராமரிப்பு...இங்க நம்ம ஊர்லயும் இப்படி இருந்தா எப்படி இருக்கும் ன்னு ஆசை வருது..