Friday, August 29, 2025

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!!!!

இந்த வருஷப் பிள்ளையார் பிறந்தநாள், நம்ம வீட்டில்  ரொம்பச்  சிறிய அளவிலும் (! )   நம்மூரில் இருக்கும் ரெண்டு  பிள்ளையார் கோவில்களில்  சிறப்பாகவும்  நடந்தது.
நம்ம வீட்டில் நானே பிள்ளையார் பிடிக்க ஆரம்பிச்சது 2015 வது வருசத்திலேயிருந்துதான்.  (மேலே உள்ளவர் !) ஆச்சு இது பதினோராவது  வருஷம். நம்ம நியூஸியில் தெற்குத்தீவில் இருக்கும் நெல்சன் என்ற ஊர்தான் களிமண்ணுக்குப் பெயர் போனது. அந்த ஊரில் பாட்டரி செய்யும் சிறுதொழிற்சாலைகளும் ஏகப்பட்டவை உண்டு.  மற்ற ஊர்களிலும் பாட்டரி வகுப்புகள் அங்கங்கே நடத்தறாங்க. நாம் அதில் சேர்ந்து கைவினைப்பொருட்களாக களிமண் சமாச்சாரங்களைச் செய்யக் கத்துக்கலாம். நம்மூரில் ஒரு க்ராஃப்ட் ஷோ போனபோது, இப்படி ஒரு பாட்டரி செய்யும் வகுப்பிலிருந்து  கொஞ்சம் களிமண் வாங்கி வந்துருந்தேன்.  நல்ல வெள்ளைக் களிமண்.  இதை வச்சே நாலு வருஷம் சமாளிச்சாச் ! 

சில வருசங்களுக்கு முன் நம்ம 'ஹிந்து ஸ்வயம் ஸேவக்' குழுவில் ,  பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னே வரும் ஞாயிற்றுக்கிழமையில்  'கணேஷ்  மேக்கிங் வொர்க்‌ஷாப்' னு   ஆரம்பிச்சாங்க. 

களிமண் இலவசமாக் கொடுப்பாங்க.  கணேஷ் செஞ்சு, கடைசியில் ஒரு வரிசை வச்சுட்டு, அவரவர் வீட்டுக்கு எடுத்துப்போய் நம்ம வீட்டுப்பூஜைக்கு வச்சுக்கலாம். 

 இந்த  வருசம்  ஆகஸ்ட் 24க்கு பதினொருமணிமுதல் ஒருமணிவரை பிள்ளையார் செய்ய நேரம் குறிச்சாச்சு. நாங்கள் வழக்கம்போல் போனோம்.  கூடவே பேரனும் மகளும் வந்தாங்க. 

இப்ப என்னன்னா....  இந்த ஈவன்ட்க்கு ரொம்பப் புகழ் கிடைச்சு,    கணேஷ் செய்யணுமுன்னா... பெயரை முன்கூட்டியே பதிவு செஞ்சுக்கணுமுன்னு சொல்லும்படி ஆச்சு.  எத்தனை பேர் வர்றாங்கன்னு தெரிஞ்சால்தானே எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் களிமண் வாங்க முடியும் இல்லையோ ?  இந்த வருஷம் 180 பேர் !  ஹாலில் இடப்பற்றாக்குறை என்பதால்  பதிவு செய்வதை இதோடு நிறுத்தும்படி ஆச்சு ! 
.
நான் முதலில் கணபதி வந்தனம்னு சின்னதா ஒரு புள்ளையார் பிடிச்சேன். பேரன் (2 வயசு, 5 மாசம்) பார்த்துட்டு  'எலிஃபன்ட்'னு சொன்னான். வெற்றி வெற்றி !
நம்ம வீட்டுப்பூஜையில் கோபால், மகள் & துல்ஸியின் கைவண்ணத்தில் மூணு புள்ளையார்கள்!  கொஞ்சம் உடம்பு சரியில்லாததால் (எனக்குத்தான்) ரொம்ப மெனெக்கெடாமல் ரெண்டுவித மோதகமும், கேரட் பால் ஹல்வாவும், சுண்டலும் மட்டும் செஞ்சேன்.
முதல் முறையாக அவல் மோதகம் ! நல்லாவே வந்துருச்சு. 
அரைக் கப் அவல் எடுத்து, வெறும் வாணலியில் நல்லா வறுத்து எடுத்துக்கிட்டேன்.  சூடு இருக்கும்போதே அரைக்கப் துருவிய தேங்காய்                 ( டெஸிக்கேட்டட் தான்) சேர்த்து வச்சுட்டுச் சூடு நல்லா ஆறினதும்  அரைக்கப் வெல்லத்தூள், அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நல்லாப் பொடி பண்ணிட்டுக் கடைசியில் ஒரு ஒன்னரை டீஸ்பூன் நெய் சேர்த்து மிக்ஸியில்  ஒரு சுத்து .  கொஞ்சம் ஈரப்பதமா கையில் உருண்டை பிடிக்கும் விதமா ஆச்சா.....  அதை எடுத்து ஒரு தட்டில் போட்டுட்டு,  மோதக அச்சுக்குள்   நிறைச்சு எடுத்துட்டால் போதும். இப்படித் தயாரிச்ச மோதகங்களை  ஸ்டீமரில் ரெண்டு நிமிட்  வச்செடுத்தேன். 

ரெண்டாவது ரகம்   எனர்ஜி மோதக்  (! )இது  மகள் வச்ச பெயர்!!!   
 நட்ஸ் & டேட்ஸ்  மோதகம் 

முந்திரி,  பாதாம், வால்நட்ஸ்  எல்லாம்  நூறு நூறு  கிராம். எடுத்துத் தனித்தனியா வெறும் வாணலியில் நல்ல சூடு வரும்வரை வறுத்து எடுத்துக்கணும்.  நல்லா ஆறினதும்  மிக்ஸியில் பொடி செய்யணும். முதலில் பாதாம்  அரைச்சுட்டு, மற்ற நட்ஸ்களை அப்புறம் சேர்க்கணும். பாதாம் அரைபடக் கொஞ்சம் நேரம் ஆகும். கடைசியில்  நூற்றைம்பது கிராம் பேரீச்சம் பழம் சேத்து  அரைச்சால் போதும்.

அப்புறம்? இருக்கவே இருக்கு மோதக அச்சு ! கடைசியாக் கொஞ்சம் பாக்கி ஆனதைச் சின்னதா சீடைபோல உருட்டி வச்சுட்டேன்.  பேரன், வாயில் அப்படியே போட்டுக்க வசதி !

கேரட் பால் ஹல்வா..... கேரட்டைப் பாலில் வேகவச்சு, ஸ்டிக் ப்ளன்டரால்  மசிச்சுட்டு,  சக்கரை சேர்த்து வாணலியில்  ஹல்வாக் கிளறணும்.  கொஞ்சம் கொஞ்சமா நெய் சேர்த்துக்கிளறிக்கிட்டே இருக்கணும். ஹல்வாப் பதம் (! ) வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷை , ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறினால் ஆச்சு. தட்டில் பரப்பித்  துண்டு போட வேண்டியதில்லை.  சின்னக் கிண்ணத்தில் வச்சு ஸ்பூனால் சாப்பிடும் பதம் போதும்.

சுண்டல்...... நம்ம  எல்லோருக்கும் தெரிஞ்ச வழக்கப்படி ! 

ப்ரசாத சமையலில் பிஸியாக இருந்ததால்  சமைக்கும்போது படம் எடுக்க வாய்ப்பில்லாமல் போயிருச்சு.

நம்ம் வீட்டில் பூஜை ஒருமாதிரி முடிஞ்சது !

நம்மூரில் இப்போ ரெண்டு பிள்ளையார் கோவில்கள்  இருக்கு.  பெரிய பிள்ளையார் வந்து மூணுவருஷம் ஆச்சு.  தனியார் கோவில்னு ஆரம்பிச்சு, இப்போ பொதுக்கோவிலா மாத்தியிருக்காங்க. ரொம்பப்   பெருசா ஒரு கோவில்கட்ட ஏற்பாடுகள் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு. ரொம்பவே அழகான பிள்ளையார் இவர்.  அன்பு விநாயகர் என்று பெயர்.  முகூர்த்தக்கால் பூஜை, என் கையால் ஆரம்பிச்சது!   மூத்த குடிமகள். வயசுக்கு மரியாதை !  நியூஸி தெற்குத்தீவில் முதலில் குடியேறிய தமிழ்க்குடும்பம் நாம்தான் !   நமக்கு இது 38 வது வருசம் நியூஸியில் ! 

கீழே  முதல் மூன்று படங்கள் : கோவில் ஆரம்பகாலம்.
                                     


இங்கே மூணு காலப் பூஜை.  மூன்று வித அலங்காரங்களுடன் !!!!   நாம் நம்ம வீட்டுப்பூஜை முடிஞ்சாட்டு, அங்கே போனோம்.. ரெண்டு கிமீ தூரம்தான் நமக்கு.  உச்சிகால பூஜை முடிஞ்சதும்,  கோவில் போட்ட  சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டுக் கிளம்பியாச்சு.

சாயங்காலம் நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம். இது ஆரம்பத்தில் இருந்தே பப்ளிக் கோவில்தான்.  இடம் வாங்குமுன்  அஞ்சு வருஷம், எங்க சிட்டிக்கவுன்ஸில் ஹாலை, வாடகைக்கு எடுத்து  மாசம் ஒருமுறை சத்சங்கக் கூட்டம் நடத்திக்கிட்டு இருந்தோம்.  அப்புறம் வணிக வளாகத்தில்  ஒரு கட்டடம் விலைக்கு வாங்கினோம்.    மக்கள் கொடுத்த  அன்பளிப்புத் தொகைகள் போக மீதி பணத்துக்கு வங்கிக்கடன் வாங்கியிருக்கோம். 

 வாங்கிய கட்டடத்துக்கு உள்ளே, சிலபல மாற்றங்கள் செய்து , இருந்த அறைகளின் தடுப்புகளையெல்லாம் அகற்றி, ஒரு  ஹால் போல அமைச்சுக்கோவிலாக  மாத்தி,  2022 வருசம் டிசம்பர் 11 ஆம் தேதி  குடியமர்த்தியாச்சு நம்ம 'செல்லப்பிள்ளையாரை' !  இவருக்குப் பெயர் வச்சவள் நாந்தான்.  முதல்முதலில் இங்கே பிள்ளையார் கோவில் கட்டலாம் என்ற எண்ணத்தை எங்கள் மனதில் விதைச்சவர் செல்லா என்ற பெயருடைய மலேசிய இந்தியர்தான்.  நாங்கெல்லாம் அப்புறம் அவர் கூடச் சேர்ந்துக்கிட்டாலும் ஆரம்பிச்சவர் அவரே.   உற்சவமூர்த்திதான் அப்போதைய மூலவர்.

அப்புறம் போனவருஷம் ஏப்ரலில்  மூலவர் (கற்சிலை ) நம்மூருக்கு வந்திறங்கினார். சாஸ்திர சம்ப்ரதாயங்கள் படி, தண்ணீர், தான்யம், ரத்தினம், புஷ்பம் இப்படி  ஒவ்வொரு மண்டலம் அவர் கடந்ததும்,  செப்டம்பர் மாதம் பதினைஞ்சாம் தேதி,  அவரை பிரதிஷ்டை செஞ்சோம்.  மிகவும் கோலாகலமாகக் கும்பாபிஷேக விழா நடந்ததுன்னு சொல்லவும் வேணுமோ !!!! எங்கள் ஏழு வருசக்கனவு நிறைவேறிய நாள் !!!!

நம்ம பிள்ளையாரின் அதிர்ஷ்டம், பூஜை செய்ய ரெண்டு பண்டிட்களும் கிடைச்சுருக்காங்க. 

                                      


இன்றைக்குப் பிள்ளையார் சதுர்த்தி என்பதால் காலை ஆறு முதல் விசேஷ அபிஷேகம், பூஜை எல்லாம் நடந்து பகல்  ஒன்னரை மணி போலதான்  முற்பகல் நிகழ்ச்சிகள் முடிந்தன. நமக்குக் காலையில்  கோவிலுக்குப்போக நேரமில்லாததால்..... (கோவில் பக்தர் சபை, வாட்ஸப்பில்  அனுப்பும் லைவ் வீடியோவில் ஒரு கண் வச்சுருந்தேன்)  மாலைநேரப் பூஜையில் பங்கெடுத்தோம்.

நல்ல கூட்டம்...... கால் வைக்க இடமில்லாமல் போச்சு !  பூஜைகள் முடிஞ்சதும், அன்னதானம் ஆரம்பம். நம்மவருக்குப் பிடிச்ச சேவை, பந்தி விளம்பல் என்பதால்  அதில் ஈடுபட்டார்.  கால்வலி காரணம், இங்கே அங்கேன்னு  வழக்கம்போல் ஓடமுடியாமல் நான் ஒரு பக்கமாக உக்கார்ந்திருந்தேன். 
இன்னும் கொஞ்சம் பெரிய இடமாக இருந்தால் நல்லது.  அதுக்கான ஏற்பாட்டை அந்தப் புள்ளையாரே நடத்திக்கணும்னு வேண்டுகோள் வச்சுட்டு , விழா எல்லாம் நல்லபடியாக  முடிஞ்சதுன்னு ஒன்பதரைக்குக்  கிளம்பி  வீடு வந்தோம்.

இந்த வருசப் பிறந்தநாள் இப்படி நடந்தது !

ஹேப்பி பர்த்டே புள்ளையாரே !

PIN குறிப்பு : நம் வீட்டில் செய்யும் 'சொந்தப்பிள்ளையார்'களை, நம் சொந்தப் பிள்ளைகளாகவே நினைப்பதால்...  விஸர்ஜன் என்ற பெயரில் தண்ணீரில் கொண்டுபோய் கரைப்பதில்லை. எல்லோரும் பச்சைமண்ணுங்கப்பா !  நம்ம சாமி அறையில் ஒரு இடம் பிடிச்சு உக்கார்ந்துருக்காங்க. 

Monday, August 25, 2025

பை பை இந்தியா, பை பை சென்னை ....... (2025 இந்தியப்பயணம் பகுதி 61 ) நிறைவுப்பகுதி

காலை ஆறரைக்குத் தயாராகிட்டோம்.  நம்ம விஜியும்  ட்ராவல் ஓனர் சதீஷும் பெரிய வண்டியுடன் வந்துட்டாங்க. வழக்கமா சதீஷ் மட்டும்தான் வருவார். இந்த முறை விஜியும் வழியனுப்ப வந்துருக்கார்..

நேத்து ரெஸ்ட்டாரண்ட் மேனேஜர்,  காலையில் உங்களுக்காக டிஃபன் ஏதாவது ரெடி பண்ணிடரேன்னார்தான்.  லோட்டஸில் பொதுவா,  ப்ரேக்ஃபாஸ்ட் நேரம் காலை ஏழரைக்கு ஆரம்பம். நாங்களும் சிரமப்படவேணாம்னு சொல்லிட்டோம்.
 
வழக்கம்போல்  கிளம்பும் நாள் ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு கீதாவில்தான்.  எப்பவோ ஒரு சமயம்....  சட்னி ரெடியாகலைன்னு பாலாஜியில் சாப்பிட்டுருக்கோம். 
நம்ம ஃப்ளைட் காலை பத்துமணிக்கு.  ப்ரேக்ஃபாஸ்ட் விளம்ப எப்படியும் பதினொரு மணி ஆகிரும். வெறும் வயத்தில் அவ்ளோ நேரம் இருப்பது கஷ்டம் இல்லையோ ? 
நாங்க நாலுபேரும் கிளம்பி கீதாவுக்குப் போனோம்.  போறதுக்கு முன்னால், லோட்டஸ் வரவேற்பில் பில் ரெடியாக்கச் சொல்லிட்டுப் போனோம்.  கூட்டமே இல்லாத காலை நேரத்து பாண்டிபஸார் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.  
இட்லி வடை காஃபி முடிச்சுட்டு லோட்டஸ் திரும்பி பில் அடைச்சுட்டு, ஏழரைக்குக் கிளம்பியாச்சு.  எட்டுமணிக்குT2 புது டெர்மினல். உண்மையில் விஜியைப் பிரிவதுதான்..... ஏதோ சொந்தப்பிள்ளையைப் பிரிவதுபோல இருந்தது....
உள்ளே போய் செக்கின் ஆச்சு. அம்பது கிலோதான் . நிம்மதி! எனக்கு வீல்ச்சேர் சொல்லியிருந்தார். அவுங்க வந்து என்னை உக்காரவச்சாச்!  ச்சும்மாச் சொல்லக்கூடாது..... உள்ளே அட்டகாசமா இருக்கு.  ஓடியோடிப் படம் எடுக்க ஆசைதான். ஆனால் எங்கே.... பரபரன்னு சேரைத் தள்ளிக்கிட்டுப்போகும்போது கிடைச்சவரைதான் க்ளிக்ஸ்.  உண்மையில் எனக்கெல்லாம்  இந்த வீல்ச்சேர்  சல்யம்தான்.   கட்டிப்போட்டாப்ல இருக்கும்.  நம்மவர்தான் விடாப்பிடியா அதுலே போயே ஆகணும் என்கிறார். 




வீல்ச்சேர் மக்களுக்கு முதலில் அனுமதி என்பதால்...  ஒன்பதே காலுக்கு  உள்ளே போயிட்டோம்.  பத்துமணிக்குக் கிளம்பி, நாலுமணி நேரம் பறக்கணும். அப்பதான் ரிமைண்டர் அனுப்புது ஏர்லைன்ஸ்.  க்ரிஸ் ஷாப்லே உனக்கு $75க்கு ஏதாவது வாங்கிக்கோன்னு !  நம்மவருக்கும் ஒரு $75. இதை நான் மறந்தே போயிருந்தேன்.  இப்பப் பார்த்து வச்சுக்கிட்டு,  நியூஸி ஃப்ளைட்லே வாங்கிக்கணும்.  ஆமாம்.... எதுக்கு நமக்கு கிஃப்ட்  கொடுக்கறான் ப்ளேன்காரன்? ஙே.....    
ப்ளேன் கிளம்பும்போதே லேட்.  போற போக்கில் சரியாகிருமுன்னு பார்த்தால் இல்லை.  அதே இருபத்தியஞ்சு நிமிட்டை மெயின்டைன் பண்ணிக்கிட்டாங்க.  ஆனால் அதுக்கப்புறமும்  மேலே சுத்திக்கிட்டே இருக்காங்க.  தரை தொடும்போது  நாலே முக்கால்.  போகட்டும்.... நமக்கு நியூஸி ஃப்ளைட்டுக்கு நேரம் இருக்கு.  ஓட வேணாம்.  
வெளியே வந்தால் வீல்ச்சேர் மக்களையெல்லாம்  சேர்த்து ஒரு வண்டியில் (Buggy )ஏத்திக்கிட்டுப்போய்  ஸ்கை ட்ரெய்னாண்டைக் கொண்டுபோய் இறக்கிட்டாங்க. இப்ப இருப்பது   T3.  இங்கிருந்து  T2 போகணும்.  போனோம்.  அங்கே போய் இறங்கினதும், இன்னொரு வண்டியில் நம்மை ஏத்தி நம்ம கேட்டாண்டை கொண்டுபோய் இறக்கிவிட்டாச். 

அட ராமா......    தலையிடிக்கு ஒரு காஃபி/ டீ குடிச்சாத்தேவலை. ஆனால் இங்கே ?  மெயின் ஏரியாவுக்குப் போனால்தானே......   நான் சொல்லலை..... வீல்ச்சேர் ஒரு சல்யம்னு..... 

கொஞ்ச தூரத்துலே இருக்கும் ட்ராவலேட்டரில் போய் பாடாவதியா ஒரு டீ குடிச்சுட்டு வந்தோம்.  ஷோல்டர் பேகில் குழந்தையும் நம்மோடு இங்கே அங்கேன்னு அலையறான்..... 
சிங்கை நேரம் 7.50க்கு நியூஸி ஃப்ளைட். வீல்ச்சேர் மக்களை ஏழுக்கே உள்ளே அனுப்பிட்டாங்க.  ராத்ரி ஃப்ளைட் என்பதால் வேடிக்கை ஒன்னும் கிடையாது.  சாப்பாடு வந்தாட்டு, முடிச்சுட்டுத் தூங்கிடணும்.    நல்ல வேளையா இப்பெல்லாம் ஃப்ளைட்டில் முழு நேரத்துக்கும்  ஃப்ரீ  வைஃபை கிடைக்குது. போன பயணத்தில் எல்லாம் ஒரு செக்டருக்கு ரெண்டு மணி நேரம் மட்டும். அதுவும் லாக்கின் செஞ்சால்  ஒரேடியா ரெண்டுமணி நேரத்தைத் தொடர்ச்சியா பயன்படுத்திக்கணும். நடுவிலே நிறுத்திட்டு அப்புறம் பார்க்கலாமுன்னா நோ நோ தான் ! 

நூத்தியம்பதுக்கு என்ன வாங்கலாம்னு கொஞ்சம்  மண்டையிடி.  பாண்டா பொம்மை கேட்டால்  இல்லையாம்.  சின்ன காஃபி ஃப்ளாஸ்க், ஷாப்பிங் பேக்,  நம்ம ஜன்னுவுக்கு ஒரு நகை செட் இப்படி நாலைஞ்சு ஐட்டம். ஒரு அஞ்சு சிங்கப்பூர் டாலர் கூடுதலாக் கொடுக்கவேண்டியதாப் போச்சு.  பையை அப்படியே வாங்கிவச்சுட்டோம்.  அப்பவே செக் பண்ணியிருக்கணும். வீட்டுக்கு வந்து பார்க்கும்போதுதான் ஏர்ஹோஸ்டஸ் செஞ்ச குழப்பம் தெரிஞ்சது. காஃபி ஃப்ளாஸ்க் மூணு இருக்கு.  ஓசிக்காசுதானே.... போனாப்போகட்டும்னு இருந்துட்டேன்.

காலை ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எழுப்பினதும் ,  நமக்கு  வடையாம்ப்பா !!!!!
சதர்ன் ஆல்ப்ஸ்  மலைத்தொடர்கள் பார்த்ததும்.....  ஊர் வருதுன்னு ஒரு மகிழ்ச்சி.  சம்மர் முடிஞ்சு இப்போ இலையுதிர்கால ஆரம்பம்.   ஐயோ..... வீட்டுத்தோட்டம் என்ன கதியில் இருக்கோ ?

தரை தொட்டு, வெளியில் வந்ததும்..... வீல்ச்சேர் காத்திருக்கு.  எல்லா ஃபார்மாலிட்டீஸும்  காமணியில்......  பாலராமன்..... பளிங்குக்கல் என்றதும்  ஓக்கேன்னுட்டுத் திறக்கச் சொல்லலை.

வெளியே வந்தால்  மகள் குடும்பம் !  பேரன் தாத்தாகிட்டே தாவிக்கிட்டு வர்றான்.  ஆறுவாரப் பிரிவு ! 

https://www.facebook.com/share/v/1M5KtvAHQY/

வீட்டுக்கு வந்து சேர்ந்து, கதவைத்திறந்ததும்  சாமி அறைக்கு ஓடிப்போய் தாத்தாவுக்கு விபூதி வச்சுவிட்டார் பக்திமான் !
சட்னு குளிச்சுட்டு சாதம், பருப்பு தயாராக்கி குழந்தைகளுக்கு பப்பு மம்மு !
நம் பயணம் முடிஞ்சது.
பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ,  கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....

ஆதலினால் பயணம் செய்வீர்!

Friday, August 22, 2025

ஏறக்கொறைய 'இன்றே இப்படம் கடைசி'ன்னுதான் சொல்லணும்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 61 )

காலையில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமா ப்ரேக்ஃபாஸ்டுக்கு போனோம். வழக்கமான உணவு வகைகள் ஆனால்....  மகள் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சி!
ரெஸ்ட்டாரண்ட் மேனேஜர் எப்பவும்போல நட்பாக இருந்தார். அவருடனும் ஒரு க்ளிக் ஆச்சு. இதுதான் லோட்டஸில் நமது கடைசி ப்ரேக்ஃபாஸ்ட்... ப்ச்....
மகளும் மருமகனும் கிளம்பறாங்க. இன்னும் ஒரு பதினொரு மணி நேரப்பயணமோ!!!  எதோ சில பொருட்கள் வாங்கிக்கணுமாம். மகளின் அணிகலன்கள்  செய்யத்தேவையான பொருட்கள் என்பதால்.... மொத்தவியாபாரம் என்றால் நல்லது.   நம்ம விஜி,  சௌகார்பேட்டையில் கொண்டு போய் விட்டுட்டு வந்தார். அந்தக்கூட்டத்தில் ரொம்ப நேரம் ஆகுமோன்னு நினைச்சால்.....  ஒரு மணி நேரத்தில் திரும்பிவந்துட்டார். நாம் ஒரு முறை குங்குமப்பூ வாங்க அங்கே போனோமில்லையா ?  அந்த அனுபவம் !!!
ராத்திரி ஒன்பதுக்கு,  வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததா சேதி அனுப்பினாங்க. 

நம்ம அடையார் அநந்தபதுமன் கோவிலில் ப்ரம்மோத்ஸவம்  நாளை நிறைவு.   அதுக்கடுத்தநாள்   காலை உற்சவருக்கு  சாந்தி அபிஷேகம். தினமும் காலை நேரங்களில் திருவீதி உலா உண்டு.  தினம் தினம் ஒவ்வொரு அலங்காரமாய் ஊர்வலம் போய் வந்தவனுக்கு திருஷ்டி பட்டுருக்காதா என்ன ?  இன்றைக்குக் காலை ஆலிலைக் கிருஷ்ணன் !!!!  நமக்குத்தான்  ஒருநாளும் காலை ஏழுமணிக்குக் கோவிலில் இருக்க முடியலை.... ப்ச்... போகட்டும்.... இந்த முறை இப்படி....


நாம் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப.... பெருமாள்,  வழக்கம்போல் தாய்ச்சுண்டு,  விஸ்ராந்தியா இருந்தார்.  இனி மதியம்  மூணுமணிக்குத் திருக்கல்யாணம்.  அதுவரை காத்திருக்க முடியாதே.....   மணி இப்பத்தானே காலை பதினொன்னே முக்கால்.   போயிட்டு வரறோமுன்னு விடை வாங்கிக்கிட்டு ஒரு பத்து நிமிட் போல உக்கார்ந்துட்டுக் கிளம்பினோம்.

சென்னைப்பயணங்களில் இந்த ஏரியாவில் எப்பவும் ஒரு சந்திப்பு உண்டு. அம்மாவை சந்திக்கணும்.  நம்ம சிங்கை சித்ராவின் பெற்றோர். எல்லாம் நம் மரத்தடி மக்கள்தான் !  ஏற்கெனவே சிலமுறை ஃபோன் செஞ்சப்ப பதில் இல்லை.  ஊரில் இல்லையோன்னு தோணுச்சு. நம்மவர்தான் சொன்னார், 'இவ்வளவுப் பக்கம் வந்துட்டோம்.... நேரில் போய் ஒரு ஹை & பை சொல்லலாம்'.  போனால் வீடு பூட்டி இருக்கு.  பக்கத்து ஃப்ளாட் பெண்மணி, கீழே கார்ப்பார்க்கில் இருக்கார். இப்போ  வந்துருவார்னு சொன்னதும் லிஃப்ட்க்கு முன்னால் போய் நின்னோம்.  லிஃப்ட் கதவு திறந்ததும் வெளியே வந்தவருக்கு நம்மைப் பார்த்துத் திகைப்பு !
வீட்டுக்குள் போனதும் முதல் கேள்வி, மாமி எங்கே ?  உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்து நேற்றுதான் வெளியே வந்துருக்காங்க. அதனால் மகன் வீட்டு வாசம் கொஞ்சநாளைக்கு !  அங்கே  போகலாமான்னார்..... உத்தண்டிவரை போய் வர நேரமில்லை என்பதால் ... கொஞ்சநேரம் மாமாவுடன் பேசிட்டுக் கிளம்பினோம். 
பெசன்ட் நகர் வழியா வரும்போது.... அங்கே லஞ்சு முடிச்சுக்கலாமுன்னு போனது தாஜ் ப்ளாசாவுக்கு !  ஃபைன் டைனிங் வெஜ் ரெஸ்ட்டாரண்ட்.  நேபாள நாட்டு மக்கள் நடத்தறாங்க.  யாருமே இல்லாததால் நமக்கு ஸ்பெஷல் கவனிப்பு.  மூணு தாலி மீல் சொன்னதுக்கு, ரெண்டு போதும் உங்களுக்குன்னார் ஓனர் !  உண்மைதான். என்னால் அவ்வளவும் சாப்பிட முடியாது !
தட்டு டிஸைன் பார்த்தீங்களா ? எதாவது அழுக்கு ஒட்டி இருந்தாலும் தெரியாது.... ஹாஹா


ஒவ்வொன்னா சமைச்சுக் கொண்டுவந்து  விளம்பி, சாப்பிட்டு முடிக்கவே ரெண்டு மணி ஆச்சு !
திரும்ப லோட்டஸுக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட்.  நாலரைக்குக் கிளம்பி நம்ம காப்பிக்கடையில் கடைசி டீ !
                     
அப்புறம் தில்லக்கேணிக் கிளம்பியாச்சு. கோவிலில் வழக்கம்போல்  சுமாரான கூட்டம்தான். அஞ்சு பெருமாளையும், ஆண்டாளையும், ஆஞ்சியையும் வணங்கி 'விடை' வாங்கியாச்சு.  பட்டர், சாமந்திப்பூச் சரத்தை நம்மவர் கழுத்தில் போட்டார் ! க்ளிக் க்ளிக்....
              

              
பீச் ரோடு வழியா லோட்டஸ் திரும்பல்.  ராத்ரி டின்னர் எடுக்க யாருக்குமே பசி இல்லை. லேட் லஞ்ச் இல்லையோ ?  அப்படி வேணுமுன்னா....கீழே ரெஸ்ட்டாரண்டில் ரூம் சர்வீஸில் ஏதாவது வாங்கிக்கலாம்தானே ?

விஜியை அனுப்பிட்டு, பெட்டிகளை அடுக்க உக்கார்ந்தோம்.  மறுநாளைக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வச்சுட்டு அடுக்கி முடிக்கும்போது மணி பத்தே முக்கால். நம்ம பாலராமரைத் தனியா பபுள்ராப் சுத்தி, கேபின் பேகில் வச்சுட்டோம்.  இனி நியூஸி போனதும்தான் வெளியே வருவார். 

வெறும் வயித்தில் மருந்து எடுத்துக்கமுடியாதுன்னு ஆளுக்கு ரெண்டு இட்லி கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து. 
நாளைக்குக் காலை சீக்கிரமா எழுந்து ரெடி ஆகணும். குட் நைட் !

தொடரும்........... :-)