சிவனை ஆத்மலிங்க உருவில் இந்திரன் உட்பட எல்லா தேவர்களும் வழிபட்டு என்றுமே அழியாத ஆனந்தமும் புகழும் பெற்று அமோகமா இருக்காங்க. இதைப் பார்த்த(?) இலங்கை மன்னன் ராவணேஸ்வரன், நாமும் போய் ஆத்மலிங்கத்தை வழிபட்டு எல்லாப் புகழுக்கும் ஏற்றவனா மாறணுமுன்னு கயிலைக்குப் போறான்.
கடுந்தவம் இருந்து ஒருமுகமா இறைவனைத் தியானிக்க, ஈசனவன் முன் தோன்றினார். அதுவும் எப்படி? அஞ்சு முகங்களும், மூணு கண்களும், தலையில் கங்கையும் , இளம்பிறையான சந்திரனும் இருக்க, கழுத்தைச் சுற்றிய நல்ல பாம்பும், பாதமளவு நீண்ட கபால மாலையும் ஆட, இடப்பக்கம் மனையாள் பார்வதியுடன் தரிசனம் கொடுத்தார்.
'என்ன வரம் வேண்டுமோ கேள்'னு வேற சொல்லிட்டார். ராவணனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஈசனின் பாதம் பணிஞ்சு பலவகையாகத் துதித்து...................... 'ஆத்மலிங்கம் மட்டும் வேணும். வேறெதுவும் வேணாம்' ன்னு கேட்டதும், 'இது என்னடா வம்பாப்போச்சேன்னு நினைச்சாலும், என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன்னு சொன்னதை வாபஸ் வாங்க முடியாதே'ன்னு கோடி சூர்யப்ரகாசம் உள்ள ஆத்மலிங்கத்தை எடுத்து, கிஃப்ட் ராப் போட்டு நல்லாப் பேக் பண்ணிக் கொடுத்தார். ரெண்டு கைகளையும் நீட்டி பவ்யமா அதை வாங்கினான் இலங்கை வேந்தன்.'இவருக்கு என்ன சொன்னாலும் தலையிலே ஏறாது. ஒரு வார்த்தை...ஒரே வார்த்தை நம்மைக் கேட்டுருக்கலாமுல்லே? சரி, வாயைத்திறந்து பேச வேணாம் அட்லீஸ்ட் ஒரு பார்வை நம்ம பக்கம் அனுப்பி இருந்தால் கூட கண்ணசைவில் வேணாமுன்னு கோடி காட்டி இருக்கலாம். ஆன்னா ஊன்னா 'பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேணுமுன்னாலும் கேள் னு வாயை விட்டுட்டு அப்புறம் அவதிப்படுவார். பஸ்மாசுரன் கிட்டே பட்டதெல்லாம் மனசுலே உறைக்கலை போல. ஆத்மலிங்கம் வேணுமுன்னு கேட்டுட்டான். இப்பப் பேய்முழி முழி'ன்னு மனசுக்குள்ளே பார்வதி குமுறுவது சிவன் மனசுலே நுழையுது.
"ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் இருக்குப்பா. இதை எங்கேயும் தரையில் வைக்காம கையில் ஏந்தியபடி 'நடந்தே' உன் நாட்டுக்குப் போகணும். இது தரை தொட்டுட்டா அப்புறம் நானே வந்தாலும் பெயர்த்தெடுக்க முடியாது"
'எப்படி சமாளிச்சுட்டேன் பார்த்தியா? வேற வழி எதாச்சும் கண்டு பிடிக்கலாம்'னு பார்வதிக்கு டெலிபதியில் ஒரு பதில் அனுப்பி......
பயபக்தியுடன் ஆத்மலிங்கத்தை மார்போடு சேர்த்துப் பிடிச்சு நடையை ஆரம்பிச்சுப் போய்க்கிட்டே இருக்கான் ராவணன்.
பொதுவா...... வேண்டாததுக்கெல்லாம் 'என்னம்மா சொல்றே'ன்னு அறிவுரை கேட்கும் நம்மாளு, சிலசமயம் நமக்கு மறுப்பு இருக்குமுன்னு கட்டாயம் தெரிஞ்ச சமயங்களில், நம்மோட ஐ காண்டாக்டை கவனமாத் தவிர்த்து, தனக்கு விருப்பட்ட முறையில் காரியங்கள் நடத்திக்கிடுவதில் கில்லாடி. அப்புறம் மாட்டிக்கிட்டு அவஸ்த்தையும் படுவார். ரங்க்ஸ்களுக்கே உள்ள குணம் போல!
தேவர்களுக்கெல்லாம் விவரம் தெரிஞ்சுபோய் 'குய்யோ முறையோ'ன்னு (வழக்கம்போல்) கூவல். மகாவிஷ்ணுகிட்டே ஓடறாங்க. அவரும் நல்லா 'யோசிச்சு' புள்ளையாரைப்போய் வேண்டிக்கிட்டு, 'உம்மால்தான் ஒரு உதவி ஆகணுமுன்னு பக்காவா தான் போட்ட ப்ளானைச் சொல்றார்.
ராவணன், அனுதினமும் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாக்களை ஒரு போதும் விட்டுவிடாமல் கடைப்பிடிக்கும் குணமுள்ளவன். சந்தியாவந்தனத்தைச் செய்யும் நேரம் வந்தால், தவறாமல் அதை எப்படியாவது செய்து முடிச்சே தீருவான். இந்த குணம்தான் நமக்கு இப்போ நல்லச் சான்ஸ் கொடுக்குது. பிள்ளையாரே, நீர் ஒரு சின்னப் பையனா அந்த நேரத்துக்கு அவன் முன்னால் போகணும். எப்படியும் உம்மிடம் தான் உதவி கேட்பான். செஞ்சுருங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்.
தென்திசை நோக்கி நடக்க ஆரம்பிச்ச ராவணன் அப்போ கோகர்ணம் என்ற இடத்துக்கு வந்துக்கிட்டே இருக்கான். (இந்த இடத்துக்கான கதையை அப்புறம் அடுத்த இடுகைகளில் சொல்றேன். இப்போ ஃப்ளோ தடைப் படவேணாம்) விஷ்ணு தன் கையில் இருக்கும் சக்ராயுதத்தை சூரியனை நோக்கி அனுப்பினார். அவர்போய் சூரியனை மறைச்சதும் கிரஹணசமயம் போல இருட்டிக்கிட்டே வருது. அச்சச்சோ..... பொழுது சாயப்போகுதே. சந்தியா வந்தனம் செய்யணுமே. கையில் உள்ள ஆத்மலிங்கத்தை எங்கேயும் வைக்கக்கூடாதுன்னு கண்டிஷன் இருக்கே. என்ன செய்யலாம். இன்னிக்கு ஒரு பொழுது கடமை தவறிட்டால் என்ன?ன்னு பலவிதமா யோசிக்கிறான். பாழும் மனசு கேக்கமாட்டேங்குது! சமயம் பார்த்து அங்கே ஒரு சின்னப் பையன் வந்துக்கிட்டு இருக்கான்.
"ஏம்ப்பா தம்பி, எனக்கொரு உபகாரம் செய்யுப்பா. இந்த பொதியைக் கொஞ்ச நேரம் கையில் வாங்கி அப்படியே வச்சுக்கோ. நான் பத்தே நிமிசத்துலே சந்தியாவந்தனம் செஞ்சுக்கிட்டு இதைத் திரும்பி வாங்கிக்கிறேன். ரொம்ப டெலிகேட்டான சமாச்சாரம். கீழே தரையில் வைக்கக்கூடாது. பத்தே நிமிசம் ப்ளீஸ்"
"அதெல்லாம் முடியாது. எங்கப்பா தேடுவார். நான் இருட்டுமுன்னே வீட்டுக்குப் போகணும்"
கெஞ்சிக் கூத்தாடிப் பையனைச் சம்மதிக்க வைக்கிறான் ராவணேஸ்வரன். பையன் பதிலுக்கு ஒரு கண்டிஷன் போட்டான்.
"ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருக்க முடியாது. பொதி கனமாவேற இருக்கும்போல! மூணுவாட்டி குரல் கொடுப்பேன். அதுக்குள்ளே நீர் வந்து வாங்கிக்கலைன்னா நான் கீழே வச்சுட்டுப்போயிருவேன். நீர் என்னைக் குத்தம் சொல்லிப் பிரயோசனமில்லை""இந்தாப் பிடி. நீ கண்ணை மூடித் திறக்கும் நேரத்துக்குள்ளே..தோ...வந்தேன்"
ராவணன் அப்படிப் போனதும் ஒப்புக்கு மூணு வாட்டி மெல்லக் குரல் கொடுத்துட்டுப் பொதியைத் தரையிலே வச்சுட்டான் பையன். அவதி அவதியா சந்தியாவந்தனம் பண்ணிப்புட்டு ஓடி வர்றான் அரசன். 'அடப்பாவி, கீழே வச்சுட்டு நிக்கறயே'ன்னு பையன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வச்சான். சொன்ன வேலை முடிஞ்சதுன்னு விஷ்ணுவுக்கு பயங்கர மகிழ்ச்சி. சக்ராயுதத்தை, 'திரும்பி என் கைக்கு வா'ன்னார். அது சூர்யனை விட்டு விலகினதும் பளிச்ன்னு வெய்யில் காயுது. பட்டப் பகல் நேரம்.
விண்ணுலகவாசிகள் சூழ்ச்சி பண்ணி நம்மைக் கவுத்துட்டானுங்கன்னு புரிஞ்சதும் கோபம் தலைக்கேறுச்சு. ஆத்மலிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்யறான். ஊஹூம்..... அசையணுமே! மனம் வெறுத்துப்போய் பொதியைச் சுத்தி இருந்த துணி, கயிறு எல்லாத்தையும் பிரிச்சுக் கடாசுறான். நாலாபக்கமும் போய் விழுந்துச்சு. விழுந்த இடங்களில் அவையெல்லாம் லிங்கமா உருமாறி உக்காந்துருச்சு. ப்ராணலிங்கத்தைத் தொட்டுக்கிட்டு இருந்த பொருட்களுக்கும் அதன் சக்தி கொஞ்சம் பாஸ் ஆகியிருக்கு. அவ்வளவு பவர்ஃபுல் சமாச்சாரம். ( இதைப் பற்றிய கதை பின்வரும் இடுகைகளில் வரும் என்று எச்சரிக்கிறேன்)
சொல்லமுடியாத துக்கத்தோடு இடத்தைவிட்டுப் போகும் ராவணன் நிலையை, வாயு பகவான் பார்த்துக்கிட்டுப் போய் சிவனிடத்தில் சொல்றார். அதுவரை குழப்பத்தில் இருந்த சிவன், 'அப்பாடா..... லிங்கத்தை அவன் கையில் இருந்து காப்பாத்திட்டேன்'னு சந்தோஷப்பட்டுக்கிட்டு, பார்வதியிடம் 'பொழுதன்னிக்கும் குறை சொல்வியே இப்பப் பார். லிங்கம் யார் கைக்கும் போகலையாம். வா போய் எங்கே இருக்குன்னு பார்த்துட்டு வரலாமுன்னு சொல்ல கணங்களும் கூடவே கிளம்ப எல்லோரும் வந்து அந்த அஞ்சு இடங்களையும் பார்த்தாங்க. வழிபட்டாங்க. கோகர்ணத்தோடு சேர்த்து அஞ்சு க்ஷேத்ரங்கள். அந்த அஞ்சுலே ஒன்னுதான் இந்த முருதேஷ்வர் ஆத்மலிங்கம். .
காலையில் எழுந்து பீச்சுக்கு ஒரு நடை போகணுமுன்னு நினைச்சது ஒன்னும் நடக்கலை. கோவிலுக்கு இன்னொரு முறை போகணும். நேத்து இருட்டிட்டதால் அங்கே இருக்கும் தீர்த்தங்களை காலையில் வந்து பார்க்கலாமுன்னு தள்ளிப்போட்டதும் நடக்கலை. கிளம்ப நேரமாயிருச்சுன்னு கீழே ரெஸ்டாரண்டுக்குப்போய் ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டோம். அருமையான இடம். பயணம் ப்ரோக்ராம் ஒன்னும் வச்சுக்காம ஒரு வாரம் வந்து அக்கடான்னு தங்கணும். பார்க்கலாம். வாய்க்குதான்னு!மனசில்லா மனச்சோட கிளம்பி கேட்டுக்கு வெளியே இருக்கும் மலைப்பாதையில் (காரில்) போய் ப்ரமாண்டமா உக்கார்ந்துருக்கும் சிவனையும் சுற்றுப் புற அலங்காரங்களையும் ரசிச்சுட்டு அப்படியே கண்டபடி க்ளிக்கிட்டு, அங்கே சுந்தர் ராமேஷ்வர் என்ற பெயரில் இருக்கும் சிவனை வணங்கிட்டுப் புறப்பட்டோம். (சுடச்சுட புளிசாதம் ப்ரஸாதமாக் கிடைச்சது) நேஷனல் ஹைவே 17 இல் மறுபடி வந்து கலந்துக்கிட்டு வடக்கு நோக்கி நம்ம பயணம் ஆரம்பிச்சது.
கட்டடத்துலே வரிசை கட்டி நிற்கும் தங்க யானைகள்!!!!
சுந்தர் ராமேஷ்வர் என்ற பெயருக்குத் தகுந்தபடி இங்கே மூணு பக்கச் சுவர்களிலும் கைலாச ஸீன் அழகா வரைஞ்சு வச்சுருக்காங்க. படங்கள் ஆல்பத்தில். நேத்துப்போட்ட இடுகையில்ச் சுட்டி இருக்கு
ஷராவதி நதிப் பாலம் பராமரிப்பு வேலைகள் தொடங்கி இருக்கு. அதைக் கடந்து போகும் வண்டிகள், டோல் சார்ஜ் அஞ்சு ரூபாய் தரணும். இதே வழியாத்தான் நாம் திரும்பி வரப்போறோம் என்றதால் அதுக்கும் சேர்த்து பணம் கட்டிட்டு ரசீது வாங்கிக்கிட்டோம். ரொம்பவே அகலமான நதி. பாலம் நீண்டு கிடக்கு! ஷிமோகாலே இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சிக்குத் தண்ணீர் சப்ளை இந்த நதிதான்
Friday, April 23, 2010
மீட்பு மிஷன் ஃபார் ஆத்மலிங்கம்
Posted by
துளசி கோபால்
at
4/23/2010 04:16:00 AM
29
comments
Labels: Gokarna, murudeshwar, uttar Kannada, அனுபவம்
Tuesday, April 20, 2010
விண்ணைத்தாண்டி வரவா?
ம்ம்ம்ம்ம்ம்ம் வாங்க. நேத்து எங்கெ விட்டேன்? ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரைப் பற்றி நிறைய பாடல்கள் ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் இயற்றி அவைகளைப்பாடி வழிபட்டுக்கிட்டு இருந்தார். நைவேத்தியம் செய்ய இவர் கடலைகளை வேகவச்சுத் தலையில் தூக்கிவச்சுக் கொண்டு போகும்போது நைஸாப் பின்னால் வந்து அந்த ஹயக்ரீவரே அபேஸ் பண்ணிருவாராம். இப்படியாக ஹயக்ரீவருக்கு கடலைன்னு போட்டுருக்கு.பொதுவாச் சொன்னால் கொள்ளுதான் குதிரைக்கு உணவு. இங்கே கடலைன்னு ஆனது ஒருவேளை 'நம்ம வசதி'க்காக இருக்கலாமோ? கடலையிலும் கொத்துக்கடலை, நிலக்கடலைன்னு ஆகி இருக்கலாம். அதானே...என்னதான் கோவில் ப்ரஸாதமுன்னாலும் நொச்சு நொச்சுன்னு கொள்ளை யாராலே தின்ன முடியும் வாயெல்லாம் வலிக்காதா? ஃபாலோயர்ஸ் ஆஃப் சம்ப்ரதாயம் கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.. கொஞ்சம் மாத்தி யோசிச்சால் தப்பா?
ஆமாம், இந்த ஹயக்ரீவருக்கு அப்படி என்ன விசேஷம்? அச்சச்சோ... கன்னத்துலெ போட்டுக்குங்க. இவர்தான் கல்வி அறிவுக்கான கடவுள். அது எப்படி? அதான் இதுக்குன்னே கலைமகள் ஒருத்தர் கையில் வீணையும், ஓலைச்சுவடியுமா இருக்காங்க. அவுங்களைக் கும்பிட்டு பொரிகடலை(ஹா...மறுபடியும் கடலை!) நம்ம புஸ்தகம் எல்லாம் வச்சுக் கும்புடறோமே. அதுவும் ரொம்பச் சரி. கல்விக்கான தேவியின் குருதான் இந்தப் பரிமுகர். இவரைக் கும்பிட்டா, டைரக்ட்டா சரஸ்வதியின் அருள் கிட்டும். பரிட்சை சமயத்தில் பார்க்கணுமே இவர் கோவிலில் இருக்கும் கூட்டத்தை:-)
அது இருக்கட்டும். இந்த வாதிராஜர் கடந்து போன ஒரு ஜென்மத்துலே நம்ம ருக்மிணிக்கு உதவி செஞ்சுருக்காராம். ருக்குவின் அண்ணன் ருக்மன், தன்னுடைய தங்கை ருக்குவை, சேதி தேசத்து ராஜாவான சிசுபாலனுக்குக் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் செஞ்சுட்டான். ருக்குவோ, நம்ம க்ருஷ்ணனின் புகழைக் கேட்டு, அவனை மனதால் வரிச்சுக் கல்யாணமுன்னா அது அந்தக் கண்ணனோடுதான்னு முடிவு செஞ்சுட்டாள். ஒருதலைக்காதல். இங்கேயோ கல்யாண ஏற்பாடுகள் மும்முரமா நடக்குது. எப்படிக் கண்ணனை 'காண்டாக்ட்' செஞ்சுக் காதலைச் சொல்லலாமுன்னு ருக்குவுக்குப் புரியலை. ரொம்ப யோசனைக்குப்பிறகு ஒரு கடிதம் எழுதி அதை நம்பிக்கையான ஒருத்தர்மூலம் கொடுத்தனுப்புனாள். க்ருஷ்ணாவுக்கு அதைக் கொண்டுபோய்க் கொடுத்தார் அந்த ஒருத்தர். ஆஹா.... நம் மேல் இப்படி ஒருத்தி உயிரை வச்சுருக்காளேன்னு க்ருஷ்ணனுக்குப் புல்லரிச்சுப் போயிருச்சு. தேரை ஓட்டிக்கிட்டு வந்து, கல்யாணப்பொண்ணு சாமி கும்பிடக் கோவிலுக்கு வந்தப்பக் கடத்திக்கிட்டுப்போய் தானே கண்ணாலம் கட்டிக்கிட்டான். இதெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சுதான் இருக்கும். இப்ப எதுக்கு இதைக் கோடி காட்டுறேன்னா.... அந்த கடிதம் கொண்டு போன 'அந்த' ஒருத்தர் இந்த வாதிராஜர்தானாம்!
ஹரிஹரனைச் சேவிச்சுக்கிட்டு வெளியே படியேறி வந்தால் லக்ஷ்மிநாராயணனுக்கு ஒரு சந்நிதி வெளிமண்டபத்துலே இருக்கு. கொஞ்சம் தள்ளி சூர்யநாராயணன் கோவிலுக்குப் போகும் வழின்னு அம்பு சொல்லுது. அச்சச்சோ.....நாம் இங்கே வந்ததே அதைப் பார்க்கத்தானேன்னு ஓடுனேன். மண்பாதையா ஒரு ஏத்தம் போகுது. ரொம்ப தூரம் ஏறணுமோன்னு தயக்கம். போகத்தான் வேணுமான்னு ஒரு எண்ணம் எட்டிப் பார்த்துச்சு. கொஞ்சம் 1 ஏறிப்பார்க்கலாம். முடியலைனா.....விட்டுறவேண்டியதுதான். முயற்சி செய்யலைன்னு அவப்பெயர் வந்துறக்கூடாது பாருங்க!
அஞ்சு நிமிசம் ஏறுனதும் முன்னே போய்க்கிட்டு இருந்த கோபால் என் காதில் தேன் ஊத்துனார்.
"இதோ இருக்கு கோவில்"எதிர்பார்த்தமாதிரி இல்லை. ஆனா அழகா சின்னதா ஒரு சந்நிதி. முன்னால் ஒரு மண்டபம். கோவிலைப் பெருக்கிக்கிட்டு இருந்தாங்க. எட்டிப் பார்த்துச் சேவிச்சுக்கிட்டு வந்தோம்
நேரம் ஆகிக்கிட்டே போகுது. எங்கேயும் நிக்காம நேராப் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே குந்தபுரா (குந்தவர்மா ஆண்ட தேசம்) என்ற ஊரைக் கடந்து 'விர்'னு போனோம். அரபிக் கடலை ஒட்டிப்போகும் சாலையில் ஒரு இடத்தில் நமக்கு இடது பக்கம் கடற்கரை ( கல்லு போட்டு வச்சுருக்கும் பீச்) வலது பக்கம் நதி! சூப்பரா இருக்கு.கடற்கரையில் ரெண்டு மூணு இடத்துலே பொட்டிக்கடைகள். தண்ணீரில் கால் நனைக்கும் பத்துப்பதினைஞ்சு மக்கள். அம்புட்டுதான். இந்தப் பொட்டிக்கடைகளை அப்புறப்படுத்தினா வருங்காலத்துக்கு நல்லது. வரும்வழியில் இதுக்குள்ளே ஏழெட்டு நதிகளைக் கடந்து வந்துருந்தோம். பாலங்களின் ரெண்டு பக்கமும் அசோகர் ஸ்தூபியில் இருக்கும் சிங்கங்கள் சிரிச்ச முகத்தோடு நிக்குதுகள். நெடுஞ்சாலைத் துறை உபயம்.
நினைச்சது போல நடக்குதா என்ன?
"ப்ரஷாந்த், ஸ்டாப் ஸ் டாப் ஸ்டாப்"'நிறுத்து'ன்னதும் சுமார் கால்கிலோ மீட்டர் போய்த்தான் நிறுத்தும் வழக்கம் இங்கே நம்ம ப்ரஷாந்துக்கு. இதுக்கெல்லாம் கலங்கினால் ஆகுமா? யூ டர்ன் எடுத்து மெதுவா கீழே போகும் மண்பாதையில் போனோம்.
உசரமா இருக்கும் சாலைக்கு இந்தப் பக்கம் கீழே ஒரு கோவிலும் கொடிமரமும். லக்ஷ்மி வெங்கடேஷ்ன்னு பெயர் இருக்கு. எட்டிப் பார்த்துட்டே போகலாம். சாலையில் இருந்து இறங்கிவர படிகளும் இருக்கு. ஊருக்கு பெயர் ஷிராலி. பங்களா டைப்லே கோவில். சும்மா ஒரு பத்து நிமிஷம் ஏகாந்த தரிசனம் செஞ்சுட்டுக் கிளம்பினோம். பெருமாள் நிற்க, அவருக்கு முன்னால் உக்கார்ந்துருக்கும் லக்ஷ்மி. பொதுவா வாசலுக்கு நேரா முன்னாலே மூலவர் இருப்பதால் அங்கங்கே எடுத்த படங்களில் மூலவர் மசமசன்னு தெரியறார்.
பொழுதோடு போய்ச் சேரணும். இன்னிக்கு ஏராளமான இடங்களைப் பார்த்தாச்சு. 'திடுக் திடுக்' ன்னு போகும் வழியில் முளைச்சுருக்கும் கோபுரங்களுக்கு வண்டிக்குள் இருந்தே ஒரு 'ஹை' சொல்லிட்டே போகவேண்டியதுதான். தேசிய நெடுஞ்சாலை 17 இல் சரேல்னு இடது பக்கம் பிரிந்த மண் சாலையில் வண்டி நுழைஞ்சது.. ஒரு ஒன்னேகால் கிலோமீட்டர் வந்துருப்போம்.
அட! இது யாரு நம்ம எல் ஐ சி பில்டிங்கை எடுத்து இங்கே கொண்டுவந்து நட்டது? கோபுரமா? உசரத்துக்குத் தகுந்த அகலம் இல்லையே!!! கோவிலை ஒட்டியே நாம் தங்கப்போகும் ஹொட்டேல் இருக்கு. கடலைப் பார்த்தபடி நிற்கும் கட்டடம்.
"ரூம் வித் அ வ்யூதானே?"
"ஆமாம். "பால்கனி கதவைத் திறந்ததும் காற்று பிச்சுக்கிட்டுப் போகுது. சின்னச்சின்ன படகுகளை கடலில் அங்கங்கே தூவி வச்சுருக்காங்க. கரை ஓரம் இடுப்பளவு தண்ணீரில் நின்னு உற்சாகத்தால் கூச்சலிடும் கூட்டம். கடலுக்குள் ஒரு ரவுண்ட் போய்வர ஆட்களை ஏத்தும் பெரிய படகு, தண்ணீருக்கு எதிர்ப்புறம் கோட்டைச்சுவர் போல அடர்த்தியா நிற்கும் தெங்கின் கூட்டம். தூரக்கே வெள்ளையா ஒரு கோவில் கோபுரம். பின்புலத்தில் ஓடும் மலைத்தொடர்! வலது பக்கம் தலையைத் திருப்புனால் அந்த எல் ஐ சி.
இன்னும் சீசன் ஆரம்பிக்காததால் ஒரு நாலைஞ்சு அறைகளில் மட்டுமே பயணிகள். இன்னிக்குப் பயணம் செஞ்சது கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர்தான். ஆனாலும் பத்து மணி நேரம் எடுத்துக்கிட்டுச் சுத்தி இருக்கோம். ( ஒரு பத்து இடுகைகள் வேற!) கொஞ்சம் ஃப்ரெஷ்அப் பண்ணிக்கிட்டு கீழே போனோம். நம்ம ப்ரஷாந்திடம் போய் சாப்பிட்டுட்டு வந்து நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லிட்டு அந்த எல் ஐ சியை நோக்கி நடந்தோம். அட்டகாசமான ரெண்டு கொம்பன் யானைகள் வாசலில் நின்னு வரவேற்க முருதேஷ்வரர் கோவிலுக்குள் நுழைஞ்சோம்..
நெடுநெடு வானத்துக்குன்னுப் போகும் ஏணிபோல 249 அடி உயர ராஜகோபுரம். விண்ணைத்தாண்டி வரட்டுமான்னு 'தேவர்களை'க் கேக்குதோ!!!!
Posted by
துளசி கோபால்
at
4/20/2010 08:32:00 PM
25
comments
Labels: kumbashi sun temple, murudeshwar, அனுபவம்
