Showing posts with label ஹனுமான். Show all posts
Showing posts with label ஹனுமான். Show all posts

Wednesday, December 16, 2009

ஹேப்பி பர்த் டே டு யூ.

காற்றிலே பறந்து வந்த ஒரு பூ திரௌபதியின் பக்கத்துலே வந்து விழுந்தது. எடுத்து மோந்து பார்த்தால்....... ஹைய்யோ...மனத்தை மயக்கும் வாசனை. இப்பவே இந்தப் பூ பூத்து நிற்கும் செடியைப் பார்க்கனுமுன்னு மனசு துடிக்குது. அக்கம்பக்கம் தேடிப்பார்க்கிறாள். கண்ணுக்கு இந்தப் பூ இருக்கும் செடி ஒன்னுமே தெரியலை. தடித் தடியா அஞ்சுபேர் அன்பைக் காமிக்க இருக்கும்போது யாரையாவது ஏவினால் ஆச்சு. ஓ.... அஞ்சுன்னு சொல்லிட்டேன் இல்லை.. இப்போதைக்கு நாலு. அர்ஜுனன் தவம் செய்யப்போயிருக்கான்.

அந்த சமயம் பீமன் பக்கத்துலே வந்து நிக்கிறான். இவ்வளவுநாள் கொஞ்சம் வாடிய முகத்துடன் சோகமா இருந்தவள், இப்ப என்னடா ஒரு பூவை கையில் வச்சுக்கிட்டு முகர்ந்து முகர்ந்து பார்த்து பூரிச்சுப் போயிருக்காளேன்னு......

ஏ புள்ளெ.... என்னா இம்பூட்டு சிரிப்பு?

இந்தப் பூவைப் பாருங்க. எப்புடி மணக்கு? மனசை எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது

ஆஹா...அரோமாதெரப்பி.

"இந்தப் பூவு இன்னும் கொஞ்சம் வேணும். இந்தச் செடியை இங்கே வச்சு வளர்த்தால் எப்பவுமே பூ சப்ளை குறையாம இருக்கும்னு மனசுலே ஒரு எண்ணம். இந்தச் செடி ஏது எங்கேன்னு பார்த்து ஒன்னு கொண்டுவாங்க."

இதோன்னு கிளம்புனவன், மணம் புடிச்சுக்கிட்டே போறான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பூச்செடிகள் ஒன்னையும் காணோம். நடந்து நடந்து வந்தவன் ஒரு மலை அடிவாரம் வந்துட்டான். சரி வந்தது வந்தோம்..........மலைமேல் ஏறிப் பார்த்துடலாம். ஒருவேளை இந்தச் செடி அங்கே இருந்தால்....

முள்ளுச்செடியைத் தள்ளிக்கிட்டு ஒரு மலைப்பாதையில் வரும்போது அங்கே ஒரு கிழக்குரங்கு பாதையின் நடுசெண்டர்லே கிடக்குது. எங்கே போறேன்னு பீமனைக் கேட்க (குரங்கு பேசுமான்னு குறுக்குக் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது. எங்க கோகி, கப்பு எல்லாம் பேசுவாங்க எனக்கு அது புரியும்) இந்தப் பூ பூக்கும் செடியைத் தேடிக்கிட்டு வந்தேன். மலைமேலே இருக்குமோன்னு ஒரு சம்சயம். நீ வழியை விடு...... நான் மேலே ஏறிப் பார்த்துட்டு வரேன்னான்.

'இங்கே நரன்களுக்கு தடா. நீ போகப்பிடாது'ன்னு சொல்லுச்சு வாநரன்.. 'நீ என்ன இங்கே நாட்டாமை? நான் அப்படித்தான் போவேன். என்னை யார் என்ன செய்யரான்னு பார்க்கலாமு'ன்னு தன் 'சிக்ஸ் பேக்கை' ஸ்டைலாக் காமிச்சு வீரம் பேசறான் பீமன். 'வல்லவனுக்கு வல்லவன்' உண்டுன்னுச்சு குரங்கு. 'சரி,சரி வீண் பேச்சுப் பேசாதே..... மிருகத்தைத் தாண்டிப் போனால் பாவமுன்னு பாட்டி சொல்லி இருக்கு. ஓரமாத் தள்ளிப்படு. நான் போகணு'முன்னான்.

"எனக்கோ உடம்பு ரொம்ப பலவீனமாக் கிடக்கு. நகர முடியலை. நீயே என்னைத் தூக்கி அந்தப் பக்கம் ஓரமா விட்டுட்டுப் போயேன். இந்தப் பேச்சு பேசறே?"

"நீ படு கிழமா இருக்கே. என் பலமான கையாலே தொட்டுத் தூக்கினாலே நீ கூழாயிருவே. என் இரும்புப்பிடி எனக்கே பயமா இருக்கு, நான் தொட்டால் சங்குதான். "

"சரி. அப்ப ஒன்னு செய். என் வாலை மட்டும் நகத்தி வச்சுட்டுப் போ. பாட்டி சொல்லைத் தட்டாதே. சாஸ்திரம் மீறாம இருக்கும்"

சுண்டுவிரலால் லேசா வாலைத் தூக்கலாமுன்னா என்னவோ ஆணி அடிச்சு வச்ச மாதிரி அசைக்க முடியலை. என்னடா இது வம்பா இருக்கேன்னு அசைச்சுப் பார்க்கிறான். ஊஹூம். தன் பலத்தையெல்லாம் சேர்த்து அந்த சின்ன வாலைத் தூக்குனாலும் போதுமுன்னு பார்த்தால்...... ஒன்னும் நடக்கலை.

ஆஹா..... இதுதான் அந்த வல்லவனுக்கு வல்லவன். நம்ம கணக்கு எங்கியோ மிஸ்டேக் ஆகிப்போச்சு......

"ஐயா, கிழ வாநரரே..... நீங்க யார்? என்னாலே உங்க வாலை ஒரு மில்லிகூட (இது மீட்டர்) அசைக்க முடியலை. மன்னிக்கணும். தயவு செஞ்சு நீங்க யார்ன்னு சொல்லுங்க. தயவாக் கேக்கறேன்."

"நாந்தாய்யா உன் அண்ணன்."

"ஐயோ! எப்படி? நீ குரங்காச்சே?"

"எதுக்குய்யா இப்படி பதட்டப் படறே? நான் உன் ஹாஃப் ப்ரதர். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அப்பா.

எங்க அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. அவுங்க ஒரு நாள் மலையில் உலாத்தும்போது நம்ம அப்பா, (அப்ப அவர் நம்ம அப்பா இல்லேப்பா) அவர்தான் வாயு பகவான் அம்மாவைப் பார்த்தார். (அப்ப அது அம்மா இல்லை. ஒரு பொண்ணு.) கண்டேன் காதலை ன்னு ஆகிப்போச்சு. அதுக்கப்புறம்தான் நான் பொறந்தேன்."

"அட தேவுடா..... எனக்கு வேற கதை இருக்கு. அதை அப்புறம் ஒரு நாள் விலாவரியாச் சொல்றென். ஆனா எனக்கும் அப்பா அதே வாயுதான். ஆமா உம்பேரு என்ன?"

"அனுமான்"

"அடக் கடவுளே.....அண்ணாத்தே, ராமாயண காலத்துலே பகவான் ஸ்ரீ ராமருக்கு எல்லா வகையிலும் உதவுன ஹனுமான் நீர்தானா?"

"ஆமாம். தம்பி. அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார் எனக்கு ஒரு(?) தம்பி இருக்கான்னு. அது நீதான்னும் எனக்குத் தெரியும். எப்படித் தெரியுமுன்னு கேக்காதே. நான் இப்ப சாமி. எனக்கு எல்லாம் தெரியும்."

"அருமை அண்ணா...."

"ஆசைத் தம்பி.................."

'பாய் பாய்'ன்னு கட்டித் தழுவினாங்க ரெண்டு பேரும். பீமனுக்கு உடம்பில் இன்னும் பலமும் தேஜஸும் கூடுச்சு. ஹனுமனின் ஆசியோடு மலை உச்சிக்குப் போன பீமன், அங்கே பூத்துக் குலுங்கும் செடியில் இருந்து பூக்களைப் பறிச்சுக்கிட்டு, கையோடு ஒரு இளம்செடியையும் தோண்டி எடுத்துக்கிட்டு கீழே இறங்கினான்.

அண்ணாத்தே...இனி யாரும் வரமாட்டாங்க. நீ நல்லா ஆர அமரப் படுத்துத் தூங்குன்னு சொல்லி, கையோடு கொண்டுவந்த பூக்களைப் பாதி எடுத்து மெத்தையா அடுக்கிவச்சான். இன்னும் கொஞ்சம் பூக்களை எடுத்து ஒரு தலையணையும் செஞ்சு கொடுத்துட்டு வந்தான்.

நிம்மதியா ஒரு தூக்கம் போடணுமுன்னு ஒய்யாரமாப் படுத்து, வாலைத் தன் தொடைகளுக்கிடையில் கொடுத்துவாங்கி, ஒருகையால் முகத்துக்கு அண்டை கொடுத்து, மறுகையால் தன் கதாயுதத்தைப் பிடிச்சுக்கிட்டு, உள்ளங்கால் தெரியப் பாதத்தைத் திருப்பிப்போட்டு அசந்து தூங்கிட்டார் வாநர சிரேஷ்டர் ஹனுமான்.

எப்படி இருந்துருக்கும் அந்தக் காட்சி?


இப்படித்தான்.

சொல்ல மறந்துட்டேனே.... இந்தப் பூவின் பெயர் சௌகந்தி(யாம்)

அனைவருக்கும் ஹனுமத் ஜெயந்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Tuesday, May 26, 2009

புருசனை அடையாளம் தெரியலையே(-: .........(2009 பயணம் : பகுதி 29)

அத்ரி முனிவரின் மனைவி அனுசூயா. பிரமாதமான அழகி. குணநலன்களைச் சொல்லி மாளாது. மூவுலகிலும் அனுசூயாவைப் பத்தின பேச்சுகள் (எல்லாம் நல்ல விஷயங்கள்) பரவிக்கிட்டே போகுது. சேதி கேட்ட மற்ற பொண்ணுங்க எல்லாம் ஆ....ஊ..... பெருமூச்சு விட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னொருத்தரை அழகின்னும், அதுவும் ரொம்பவே நல்லவள்ன்னும் கேட்டா எப்படி வயிறு எரியும்? இவதான் பெரிய ஆளா? நாம் மட்டும் என்ன மட்டமா? பெண்ணுங்க சும்மாவே இருக்கமாட்டாங்களாமே..... அது சாமிகளாவே இருந்தாலும் கூட.

ஒரு நாள் பகல் சாப்பாடெல்லாம் ஆனபிறகு பார்வதியும், லக்ஷ்மியும், சரஸ்வதியுமா வம்பளந்துக்கிட்டு இருக்காங்க. 'நாம் மூணுபேரும் எவ்வளோ அழகு, எவ்வளோ அறிவுன்னு இருக்கோம். சாமிகளின் மனைவிகள் என்ற பெத்த பேர் இருக்கு. ஆனாலும் ஒரு மானிடப் பொண்ணைப்படியெல்லாம் மூணு உலகிலும் புகழ்வதைக் கேட்டுக்கேட்டுக் காதெல்லாம் நொந்துபோச்சு. எப்படியாவது அனுசூயாவின் கவுரவத்துக்கு ஒரு இழுக்கு உண்டாக்கியே தீரணும். என்ன செய்யலாமுன்னு ஆளாளுக்கு ஒரு ஐடியாக் கொடுங்க. எது ஒர்க் அவுட் ஆகுமுன்னு யோசிச்சு முடிவு செய்யலாம்.'

மூளையைக் கசக்குனதில் ஐடியா கிடைச்சது. தேவலோகத்துலே அப்சரஸ்களின் நாட்டியம் பார்த்துக்கிட்டு வெட்டிப்பொழுது போக்கும் வூட்டுக்காரர்களுக்கு ஒரு வேலையும் கொடுத்தாப்லெ ஆச்சு.

அவுங்கவுங்க வூட்டாம்பளைக் கூப்ட்டாங்க. 'ஒரு வேலை ஆகணும் உங்களாலே. நீங்க மூணுபேரும் ஒன்னாப் போய் அனுசுயா வீட்டுலே விருந்து சாப்பிட்டுட்டு வரணும்'. ஆஹா.... கரும்பு தின்னக் கூலியா?
'விருந்து பரிமாறும்போது அந்த அனுசூயா, ஒரு பொட்டுத் துணி இல்லாம உங்களுக்கு சாப்பாடு போடணும். போடுவாங்க ......போட்டே ஆகணும். ஏன்னா நீங்க போடும் கண்டிஷன் அப்படித்தான். போயிட்டு வாங்க. (அடிப் பாவிகளா...அனுசூயா மேலே என்ன ஒரு அசூயை பாருங்க.....)

'ஜமாய் ராஜா..... இப்படி நமக்கு ஒரு அதிர்ஷ்டமா'ன்னு சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் குதியாட்டத்தோடு மாறுவேசங்கட்டிக்கிட்டு அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தாங்க. முனிவர் வெளியில் எங்கியோ போயிருக்கார். அதிதிகள் வந்து சேர்ந்ததும் முப்பெரும் தெய்வங்கள் நம்ம வீட்டுக்குச் சாப்புட ஒன்னா வந்தாங்களேன்னு அனுசூயா ரொம்ப மகிழ்ச்சியா சமையல் செஞ்சு, இலை போட்டு மூவரையும் சாப்புடக் கூப்புட்டாங்க. (என்னதான் வேசங்கட்டுனாலும் அனுசூயா அம்மா கண்டுபிடிக்காம இருப்பாங்களா? கண்டுபுடிச்சுட்டாங்க. அவுங்க சக்தி அப்படி)

பொண்டாட்டிங்க சொன்னச் சொல்லைத் தட்டாம, நிபந்தனையை எடுத்துச் சொன்னாங்க மூவரும். ஐயோ..... இப்படி ஒன்னா? கவலையே படலை அனுசூயா. தன்னுடைய கற்பின் வலிமையால் மூணு சாமிகளையும் கைக்குழந்தையா ஆக்கிட்டாங்க. பொறந்த பிஞ்சுகளுக்கு நிர்வாணம் என்னன்னு தெரியுமா? அதுகளும் ஜாலியா வயிறு நிரம்பப் பாலைக் குடிச்சுட்டு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க.

போன புருசன்மாரைக் காணோமே...... எப்படியெல்லாம் அனுசூயாவுக்கு வெட்கக்கேடு ஆகி இருக்கும்! சீக்கிரமா வந்து விலாவரியாச் சொல்லக்கூடாதான்னு இங்கே முப்பெரும் தேவியர் வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து புலம்பறாங்க. பொறுமை எல்லை மீறுது. போனேன் வந்தேன்னு வராம எம்மா........ நேரம்? சரி....வாங்க நாம் மூணு பேரும் போய் அங்கே என்ன ஆச்சுன்னு பார்க்கலாமுன்னு அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தாங்க. அனுசூயா தாம் பாட்டுக்கு வீட்டு வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க (துணிமணியோடதான்). வாசத்திண்ணையில் மூணு குழந்தைகளும் சிரிச்ச முகத்தோடு பாயில் படுத்து உருண்டு விளையாடுதுங்க. 'அட! அனுசூயாவுக்கு ட்ரிப்லெட்ஸ் பொறந்துருக்கா? தெரியாமப்போச்சே'ன்னு பேசிக்கிட்டே வீட்டுக்குள்ளே எட்டிப் பார்த்தாங்க.

வாங்கம்மா தேவிகளான்னு சிரிச்ச முகத்தோட உள்ளே கூப்புட்டாங்க அனுசூயா. எங்க வீட்டாம்பளைங்க இங்கே வந்தாங்களான்னு ஒன்னும் தெரியாதமாதிரி கேக்கவும், ஆமாம். வந்தாங்க. இதோ பாருங்க இவுங்கதான்னு அந்த மூணுக் குழந்தைகளையும் காமிச்சாங்க. அவுங்கவுங்க புருசனை அவுங்கவுங்கத் தூக்கிட்டுப் போங்கன்னாங்க. அடக் கடவுளே..... இதென்னடா அநியாயமா இருக்கு..... அச்சுலே வார்த்து எடுத்தாப்லெ மூணும் ஒரே மாதிரி.... யாரு யாருன்னு தெரியாம யாரைத் தூக்கிட்டுப் போறது? அப்புறம் இதுகளை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ளே நம்ம தாவு தீர்ந்துறாதா?

அவசியமுன்னு வந்தபின்னே.... கௌரவம் பார்த்துக்கிட்டு நின்னா முடியுமா? காரியம் பெருசா வீரியம் பெருசா?
மூணு தேவிகளுக்கும் சட்னு ஒரே யோசனை தோணுச்சு. வாயை மூடிக்கிட்டு அனுசூயாம்மாகிட்டே 'மன்னிப்பு'ன்னு சரண்டர் ஆனாங்க.

அருங்குணங்கள் நிறைந்த அனுசூயா, 'என்னமா ஒரு விபரீத விளையாட்டு விளையாடிட்டீங்க....போனாப்போகட்டும்'னு பெரியமனசு பண்ணி மன்னிச்சு மூணு குழந்தைகளையும் பழைய உருவத்துக்கு மாத்துனாங்க.
தாணு(அரன்), (திரு)மால், அயன் மூணுபேரும் ஒன்னா வந்ததைக் காமிக்க இந்த சுசீந்திரம் கோயிலில் ஒரே சிவலிங்கத்தில் இந்த மூணு தெய்வங்களும் இருக்காங்க. தாணுமாலயன் கோவில். இந்திரன் பெண்ணாசை பிடிச்சுச் செய்யக்கூடாத அக்கிரமங்களையெல்லாம் செஞ்சுட்டு இங்கே வந்து தாணுமாலயனை வணங்கி மீண்டும் சுத்தமாயிட்டானாம். அதான் இந்திரன் சுசி அடைந்த இடமுன்னு இந்த ஊருக்கு சுசி இந்திரன் னு பேர் வந்து சுசி இந்திரமுன்னு ஆகி இப்போ சுசீந்திரம்.
அட்டகாசமான அழகான வெள்ளைக்கோபுரத்தோட கம்பீரமா நிக்குது கோயில். கோயிலுக்குள்ளே கெமெரா அனுமதி இல்லை. மூணு ரூபாய் வாங்கிக்கிட்டு அவுங்களே பாதுகாப்பா வச்சிருந்துத் திருப்பிக்கொடுத்தாங்க.
முதலில் ஸ்ரீதாணுமால்யனைத் தரிசிச்சோம். வலதுபக்கச் சுவரில் அனுசூயா கதையைச் சுருக்கமா(?) எழுதிப் படமாவும் வரைஞ்சு வச்சுருக்காங்க. இப்பவும் இரவு நடுநிசியில் தேவர்கள், தேவர்கோன் எல்லாம் வந்து இவரைப் பூஜிச்சுட்டுப் போறாங்களாம்.( அப்ப ...இந்திரனின் அக்கிரமங்கள் இன்னும் ஓயலை போல!!!) தினமும் இரவு அவுங்க பூஜிக்கத் தேவையான பூஜைப்பொருட்களை கர்ப்பக்கிரகத்தில் வச்சுட்டுக் கோவிலைச் சாத்துவாங்களாம். காலையில் பார்த்தால் இரவு பூசிச்ச அடையாளம் இருக்குமாம். இதுலே என்னன்னா...... ராத்திரி பூஜைப்பொருட்கள் வச்சுட்டுப்போற நம்பூதிரிகள்/ போத்திகள் காலையில் கோவில் திறக்க வருவதில்லையாம். ஷிஃப்ட் போட்டுக்கிட்டு வேற ஒருத்தர் வந்து பூஜை சாமான்களை அகற்றுவாங்களாம். வச்சவரே வந்தால் பூஜை நடந்துச்சா இல்லையா என்ற விவரம் வெளி வந்துருமுல்லே?

மக்கள் மனசுலே உண்டாக்குன நம்பிக்கையை நீட்டிவைக்க இப்படியும் ஒரு வழி கண்டுபிடிச்சவங்களைச் சொல்லணும்:-)))) போகட்டும்...நம்புனாத்தானே சாமியே. இல்லையா? ஆனா ஒன்னு இந்திரனையே மன்னிச்சுச் சுத்தம் பண்ணவர் 'நம்மையும் மன்னிச்சு விட்டுருவார்' ன்னு மக்கள் நினைச்சுக்கப்பிடாது, ஆமாம்.

பொதுவா சிவன் கோவில்களில் நவகிரக சந்நிதிகள் இருக்கும் பாருங்க. இங்கே நவகிரக மண்டபம் இருக்கு. மண்டபத்தின் உட்புறமா இருக்கும் மேற்கூரையில் ஒன்பது கட்டங்களில் நவகிரக நாயகர்களைச் செதுக்கி வச்சுருக்காங்க. அண்ணாந்து பார்த்துக் கும்பிட்டுக்கணும். மண்டபத்தைச் சுத்திவந்துட்டு மேடையில் விளக்குகளை ஏற்றிவச்சு வழிபடும் வழக்கம். மேடை பூராவும் கார்த்திகை தீப விளக்குகள் போல ஜொலிப்பான ஜொலிப்பு. கூடவே எண்ணெய் சிந்திக் கருப்பாவும் இருக்கு(-: சின்னத் தட்டுகளில், சின்னதா ஒன்பது அகல்களை வச்சுத் திரிபோட்டு விக்கறாங்க. வாங்கிக் கொளுத்துது சனம்.

அநேகமா இப்பெல்லாக் கோவில்களிலும் எண்ணெய்/நெய் விளக்குகள் விக்கறாங்க. அப்படியே வாங்கிக் கொளுத்திட்டு வந்துடலாம். முந்தி ஒரு காலத்துலே கோவிலுக்குப் போகும்போது ஒரு சின்னக் கிண்ணத்துலே எண்ணெய் எடுத்துக்கிட்டுப் போவோம் அது நினைவுக்கு வந்துச்சு. இப்ப இதெல்லாம் ஒன்னும் மெனெக்கெட வேணாம். காசை மட்டும் கொண்டுபோனால் எல்லாம் கிடைச்சுருது. காலம் மாறித்தான் போச்சு.

மூலவர் இங்கே சிவன்தான். லிங்க ரூபத்தில் இருக்கார். அந்த லிங்கத்துலேயே பிரம்மா, விஷ்ணு செத்துக்கி இருக்கு. இந்தத் தாணுமால்ய சுவாமியைக் கலியாணம் செஞ்சுக்கத்தான் பகவதி காத்துருந்தாங்க.(மூணு பேரையும் இல்லை. சிவனை மட்டும்) அந்தக் கல்யாணம் நடக்காமப்போனதால்தான் இன்னும் பகவதி, கன்னியாகவேக் குமரி முனையில் காத்து நிற்கிறாங்கன்னும் ஒரு கதை இருக்கு. கன்யாகுமரி பெயர் வந்த காரணம் இதுதான். (குறுக்கே புகுந்து கல்யாணத்தை நடக்கவிடாமச் செஞ்சப் 'புண்ணியம்' கட்டிக்கிட்டவர் நாரதர். நடக்கபோகும் நல்ல காரியத்தைக் கெடுக்கும் மனுசங்க இவர்கிட்டேதான் ட்யூஷன் படிக்கறாங்க போல)
புள்ளையாருக்குப் பொண் வேஷம் போட்டு விக்னேஸ்வரின்னு சொல்றாங்க. இருக்கட்டும், கடவுள்கள் ஆணாவும் பெண்ணாவும் எல்லாமாவுமா இருக்கணும்தானே? கோயில் பரவாயில்லாமல் சுத்தமாவே இருக்கு. சிற்பங்கள் அற்புதம்தான். இங்கே இருக்கும் ஹனுமான் ரொம்ப விசேஷம். பதினெட்டு அடி உயரத்தில் லேசா வளைஞ்ச முதுகோடு நிக்கிறார். கோயில்வேலைகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது கிடைச்ச சிலையாம். கொஞ்சம் முறைச்சுப் பார்த்துப் பல்லை எல்லாம் காமிக்கிறார்.
(எதிரில் கண்முன்னால் நடப்பதைப் பார்த்து வந்த எரிச்சலோ என்னவோ)
சுட்டபடம்:-)

இருபது ரூபாய்க்கு அஞ்சு பாட்டில் பன்னீரும், வாழை இலையில் கட்டுன வெண்ணையுமா ஒரு செட் அங்கே அவர் முன்னாலேயே கனஜோரா விறபனை ஆகுது. நாமும் ஒரு செட் வாங்கினோம். அனுமார் சிலையில் முகம் எல்லாம் வெண்ணையா ஈஷி வச்சுருக்கு. வெண்ணெய் சாத்தறாங்களாம். அவருக்கு முன்னால் வலது பக்கம் ஸ்டேண்டு போல அடிச்சுருக்கும் பலகையில் நாம் வாங்குனதை வச்சுடணும். தடுப்புக்கு அந்தப் பக்கம் இருந்து ஒருத்தர் பாட்டில்களைத் திறந்து பரபரன்னு 'பன்னீரை' ஒரு பாத்திரத்தில் ஊத்தறார். பாத்திரம் நிறைய நிறைய, அது மறுபக்கத்துக்கு போகுது. சில சமயம் திறக்காத பாட்டில்களுமே அந்தப் பக்கம் போயிருது. அதேபோல வெண்ணை வாழை இலைப்பொதியும் திறக்காமலேயே போய்க்கிட்டு இருக்கு.
ரீசைக்கிளிங் முறை ரொம்பவே விறுவிறுப்பா, ஒரு சுறுசுறுப்போட நடக்குறதைப் பார்த்துக் கொஞ்சம் ஆச்சரியம் அடைஞ்சதென்னவோ உண்மை. இல்லேன்னா விலைவாசி இருக்கும் நிலையில் அஞ்சு பாட்டில் பன்னீர் பத்து ரூபாய்க்கு........????? ஒருவேளை அது FUN நீராவும் இருக்கலாம்:-)
நல்ல கூட்டம். கோவிலைச் சுத்திட்டு வெளியே வந்தோம். கோவில் குளம் அழகான நீராழி மண்டபத்தோடு படு சுத்தமா இருக்கு. பார்க்கவே ரொம்ப அழகு.

தொடரும்......:-)