Monday, October 12, 2020

நீலக்கடல் ஏரியில் ஒரு சிற்பக்கலை...... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 10 )

காலையில் கண் திறக்கும்போதே ஏரி நினைப்புதான்.  மணி  இப்போஅஞ்சே முக்கால். ஏரியாண்டை ஜிலோன்னு இருக்கு!   நேத்து ஓட்டத்துக்கு உதவுன ட்ராஃபிக் கோன்களையெல்லாம்  வண்டியில் அடுக்கி வச்சுட்டுப் போயிருக்காங்க, அதுக்கான ஆட்கள்.  ட்ரைவர் வந்து ஓட்டிக்கிட்டுப் போவார்.  ஏரிவரை ஒரு வாக் போகலாமான்னு நினைச்சுட்டு, உடனே எண்ணத்தை மாத்திக்கிட்டேன்.  உடுப்பெல்லாம் மாத்திக்கிட்டுப் போக சோம்பல்தான்.  வெளியே உக்கார்ந்து கொஞ்ச நேரம்  ஏரி வேடிக்கை.

சட்னு  குளிச்சு ரெடி ஆனோம். ஏரி பார்த்தபடி ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. ஏழரை மணிக்கு  வானத்துலே நிலா !  இப்ப டே லைட் ஸேவிங்ஸ் இருப்பதால் உண்மை மணி ஆறரைதான், கேட்டோ ! 
மைன் பே (Mine Bay )என்ற இடத்துக்குப் போறோம். இந்த ஊரின் மிகப்பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் இது !  படகில் மட்டும்தான் போய்ப் பார்க்க முடியும். படகுத்துறைக்குப் போகலாமுன்னு கிளம்பிப்போனோம். நம்ம மோட்டலில் இருந்து ஒரு நாலு கிமீ. டாப்போ டவுனைத் தாண்டிப் போகணும். 
ஞாயித்துக்கிழமை. வீக் எண்ட் காரணம்....   ஊரே உறக்கத்தில் இருக்கு.  வாத்துகள் கூடன்னா பாருங்க! செல்லம் வச்சுருக்கும் மக்கள்ஸ் மட்டும்  ஏரிக்கரையாண்டை வாக் போய்க்கிட்டு இருக்காங்க. 
படகுத்துறைக்குப் போனால் விதவிதமான படகுகள் வரிசை கட்டி நிக்குதுகள். மாடர்னா இருப்பது முதல் பழைய காலத்து நீராவிப் படகு மாடல் வரை.... பாய்மரக்கப்பல் (! ) கூட  இருக்கு.  இது  தனிப்பட்ட வகையில் வாடகைக்கு !   சரித்திரம் பிடிக்கும் என்பதால் பழசுக்கே என் ஓட்டு !  Ernest Kemp னு ஒன்னு.  . பொதுவா தினம் மூணு ட்ரிப் சுத்திப்பார்க்க, சாயங்காலம் அஞ்சுக்குக் காக்டெய்ல் க்ரூஸ்னு ஒன்னுமா நாலு வாட்டியாம்.  
 



காலை பத்தரைக்கு முதல் ட்ரிப். ரெண்டு மணி நேரம் எடுக்குமாம்.   டிக்கெட்  புக்கிங் ஆஃபீஸ் திறந்துருக்கு. அதுலே கெம்புக்கு ரெண்டு டிக்கெட்ஸ் வாங்கிட்டோம்.  இன்னும் ஒன்னேகால் மணி நேரம் இருக்கேன்னு  ஏரிக்கரையைச் சுத்திக்கிட்டு  இருக்கோம் இப்ப. அங்கங்கே  சில பொழுதுபோக்கு சமாச்சாரங்கள்  ஆரம்பம் ஆகும் அறிகுறி !

ஒரு பத்தேகாலுக்குத் திரும்பப் படகுத்துறைக்கு வந்தோம்.  கெம்ப் ரெடியா இருக்கு!   சுமாரான கூட்டம். இந்த கெம்புக்கே ஒரு சரித்திரம் இருக்குன்னா பாருங்க....
படகு ஒரு பதிநாலரை மீட்டர் நீளம்.  பார்க்கத்தான் நீராவிக்கப்பல், ஆனா உள்ளே டீஸல் எஞ்சின்தான் வச்சுருக்காங்க. ஸ்டீரிங் வீல் , பழங்காலத்துலே தீயணக்கும் வண்டியில் இருக்கும் நீளக்குழாயை (ஹோஸ்)சுத்திவைக்கப் பயன்படுத்துன ஹோஸ் ரீலின் ஒரு பக்கம்.  அந்தக் காலத்துலேக் குதிரைகள்தான் தீயணைக்கும் வண்டிகளை இழுத்துக்கிட்டுப் போயிருக்கு!  கெம்புக்கான விஸில், ஒரு காலத்துலே  மரங்களை எடுத்துப்போகப் பயன்பட்ட சின்ன கூட்ஸ் ரயிலில் இருந்ததாம்.  கெம்புக்கு வயசு ஒன்னும் அதிகமில்லை.  இந்த வருசத்தோடு வயசு நாப்பது.

கெரிகெரி  ஊரைச் சேர்ந்த ஜான் எலியட் என்றவருக்கு ஒரு படகு செஞ்சுக்க ஆசை. ஒரு அம்பதுபேர் பயணம் செய்யும் அளவு, அதிகமா எரிபொருள் செலவாகக்கூடாது,  சுமாரான ஆழத்திலும்  போகணும், அதே சமயம் பார்க்கறதுக்கு 1920களில் இருந்த நீராவிக்கப்பல் போலவும் இருக்கணும். என்னென்ன ஆசைகள் வருது பாருங்க... மனுஷ்யருக்கு.....   வெலிங்டனில் இருக்கும் ப்ரூஸ் என்றவர்  டிசைனை வரைஞ்சு கொடுக்கறார்.   மேற்கொண்டு  வாட்ஸன் என்ற ஸ்டீல்போட் கட்டும் கம்பெனி, படகின் கீழ் பாகத்தையும், கெம்ப்தார்ன் போட் பில்டிங் கம்பெனி,  மரத்தால் ஆன மேல்பகுதியையும் கட்டிக் கொடுக்கறதாப் பேச்சு.

மூணே மாசத்துலே அவரவர் வேலை ஆச்சு. ரெண்டும்  வெவ்வேற இடத்தில் தயாராகி இருக்கு.  கீழ்ப்பகுதி தயாரான இடத்துக்கு,  மேற்பகுதியைக் கொண்டு போனாங்க. க்ரேன்லே தூக்கி வச்சதும் சரியாப் பொருந்தியிருக்கு!  படகுக்குக்குப் பெயர் வைக்கணுமே.....    ஜான் எலியட்டின் சொந்த ஊர்ப் பாசத்தால் அங்கே பிரபலமாயிருந்தவர் பெயரை வச்சார். ஆல்ஃப்ரெட்  ஏர்னஸ்ட் கெம்ப் ! டிசம்பர் 6, 1980லே  படகை இழுத்துக்கிட்டுப்போய், ரெண்டு க்ரேன் வச்சுத் தூக்கி, அந்த ஊர் ஆத்துத் தண்ணியில் விட்டதும் மிதக்க ஆரம்பிச்சது. 

பயணிகளைக்கூட்டிப்போய் சுத்திக்காமிக்கும் பிஸினஸ் ஆரம்பிச்சு நல்லா நடந்துருக்கு. ஆனால் பாருங்க,,, எண்ணி மூணாம் மாசத்துலே பேய்மழையும் பெருவெள்ளமுமா வந்து, படகுத்துறையில் நிறுத்தி வச்சிருந்த படகுகளை அடிச்சுக்கிட்டுபோய், ரொம்பவே டேமேஜ் பண்ணிருச்சு. ஆத்துலேயும்  மணல், வெள்ளத்தில் அடிச்சு வந்து ரொம்பிட்டதால்  அங்கே படகே  மிதக்க முடியாம ஒரு கஷ்டம். மண்ணைத் தோண்டி எடுத்து, கொஞ்சமாவது ஆழம் ஆனால்தான் படகு ஓட்டமுடியும். சின்ன  வேலையா என்ன ?  யார் பொறுப்பேத்துக்குவாங்க ?  அதானே... பூனைக்கு  யார் மணி கட்டுவது ?  ஜான் எலியட் வேற வழி இல்லாம படகை விற்கிறார்.  டாப்போக்காரர்  Simon Dickie,கெம்ப்பை வாங்கி பெரிய ட்ரக்கில் வச்சு மெள்ள மெள்ளக் கொண்டு வந்து டாப்போ ஏரியில் மிதக்க விட்டார். 7 டிசம்பர் 1982.

 பொறந்த ரெண்டே வருஷத்தில்  கெம்ப்போட விதி மாறிப்போய் புது இடத்துக்கு வந்துருச்சு.  இப்படி ஒரு சரித்திரம் படைச்ச அந்தக் கெம்ப்லெதான் நாம் இப்போ போறோம்.

பத்தரைக்கு விஸில் அடிச்சு, இதோன்னு படகு புறப்பட்டுருச்சு.    மைன் பே நோக்கிப் பயணம். இப்ப எதைப் பார்க்கப்போறோம் ? இன்னொரு சரித்திரம்தான் :-)   Maori Carving in Mine Bay !
Master carver Matahi Whakataka-Brightwell, தங்கள் இன மூத்தோர்களிடம், சிற்பச் செதுக்கல் கலையை செய்யறதுக்குப் பத்துவருசமா பயிற்சி எடுத்துக்கிட்டார்.  குருகுலம் மாதிரி.  மவோரிகளின் சிற்பக்கலை ஒரு தனி வகை. முக்கியமா எல்லாமே மரச்சிற்பங்கள்தான்.  70 களில் பயிற்சி முடிஞ்சதும் டாப்போ வில்  இருக்கும் பாட்டி வீட்டுக்கு வந்துருக்கார்.  இந்தக் குறிப்பிட்ட இனக்குழுவில் இவர் 27 வது தலைமுறை !  ஒருநாள்   ஏரியில் சின்னப்படகில் சுத்திக்கிட்டு இருக்கும்போது, ஏரியில் ஒரு பெரிய பாறை, மாடம் போல் ஒரு அமைப்பா இருக்கு . இதுலே ஒரு சிற்பம் செதுக்குன்னு  மனசுக்குள்  ஒரு குரல்  சொல்லுது.  அந்தக் குரல் சொன்னதைக்கேட்டு,  அந்தப்பாறையில் செதுக்கு வேலை ஆரம்பிக்கிறார்.  சட்னு ஆரம்பிக்கிற வேலையா இது?  திட்டம் தீட்டவே நாளாகி இருக்கு....  1976 இல்  தொடக்கம்.
இது இப்பத்துப்படம். வயசு 67 ! சில படங்கள் அருளிய கூகுளாருக்கு நன்றி !

பாறையாண்டை போறதுக்கு வேற வழி கிடையாது. படகில்தான் போகவேணும். தண்ணிக்குள்ளே இருந்து எழுந்து நிக்கும் பாறையில்  ஒரு  முப்பதுநாப்பது அடி உயரமும், நல்ல அகலமுமா இருக்கும் இடத்தில் மவொரி முகம் ஒன்னு  செதுக்கறார். உதவிக்கு இவருடைய  உறவினர் ஒருவரும், இன்னும் ஒரு மூணு பேரும் வந்தாங்க.  
அக்கம்பக்கத்துப் பாறைகளில் இன்னும் சில சிற்பங்களைச் செதுக்கிட்டாங்க.1980 இல்  வேலை முடிஞ்சது.  ஃபிப்ரவரி 6 ஆம் தேதி, மக்கள் பார்வைக்குத் திறப்பு விழா ஆச்சு. இந்த ஃபிப்.6 எங்களுக்கு  நேஷனல் டே !  வைட்டாங்கி தினம் !  மவொரிகளுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் ஒரு ஒப்பந்தம்  கையெழுத்தான நாள்.! 


இவ்ளோ உயர சிற்பச் செதுக்கல்னா  கை எப்படி எட்டும் ?  உள்ளூர்காரர்கள் scaffolding வகை ஏணி ஏற்பாடுகளுக்குச் செலவு செஞ்சாங்க. முக்கியமா  பார் நடத்தும் ஆட்கள்தானாம் !   வெயில் காலத்துலே மட்டும்தான் தண்ணியாண்டை நின்னு வேலை செய்ய முடியும் என்பதால் இதுக்கே  நாலு வருஷம் ஆகி இருக்கு! 

மவொரிகள் பாரம்பரிய சமாச்சாரமாப்  பச்சை குத்திக்குவாங்க. அதுவும்  முகம் பூராவும் வரிவரியா இருக்கும்.  அவர்கள் இனக்குழு, கலை, கலாச்சாரம் பற்றியெல்லாம் வரிகளுக்குள் பொருள் இருக்கு. முதல்முதலில் பார்க்கறப்ப.... ஐயோ.... எப்படி முகம் பூராவும்னு  பயந்துருக்கேன். ஆண்கள்தான் இப்படி. பெண்கள்  உதட்டுக்குக்கீழே முகவாய்க்கடையில் மட்டும்தான்.
இந்தப் பாறையில் செதுக்குனது ஒரு மவொரி ஆணின் முகம்தான்!   இந்த சிற்பவேலை ஆரம்பிச்சதுமே கொஞ்சம் புகழும் வர ஆரம்பிச்சு, இது ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷனா ஆகி இருக்கு!  நம்ம படகும் ஓரளவு கிட்டேதான் போய் நின்னுச்சு. இன்னும் கிட்டேப் போய்ப் பார்க்கணுமுன்னா சின்ன குட்டிப்படகில்(Kayak) போகணும். இந்த டாப்போ ஏரியின் அதிகபட்ச ஆழம் 610 அடி !  மனசில் வச்சுக்குங்க. 





படகில் காஃபி, டீ, ஜூஸ்னு வச்சுருக்காங்க.  அவுங்கவுங்க போட்டுக்கணும். நமக்கு டீ.  'நம்மவர்' போட்டதுதான். ஏரி விவரங்கள் எல்லாம்  படகில் இருக்கும் கைடு சொல்லிக்கிட்டே வந்தார்.

நீலமாத் தெரியும் ஏரி  பார்க்கவே அழகு!  பாறையாண்டை போனதும் ஒரு பத்து நிமிட்  ஸ்டாப்பிங். எனக்கு இந்தப் பெரிய சிற்பத்தை விடக் கீழே சின்னப் பாறைகளின் மேல்  இருந்த சிற்பங்கள் ரொம்பப் பிடிச்சுப்போச்சு.  

முதலை உடம்பும்  மனுசத்தலையுமா இருக்கோ ? அக்கம்பக்கத்துப் பாறைகளிலும் முகங்கள்... பாம்பு போல ஒன்னு.....  ஙே.... இங்கேதான் பாம்பே இல்லையே....  எப்படி ? பார்த்துருப்பாங்களா என்ன ? எங்கே ? 

திரும்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆச்சு. பனிரெண்டேமுக்காலுக்கு தரையில் இறங்கினோம்.  பக்கத்துப் படகுக்கு அடுத்த செட் பயணிகள் ரெடியா இருந்தாங்க.  கெம்புக்கு ரெண்டுமணி வரை ரெஸ்ட்.  நாமும், கை வசம் இருந்த தீனி  லஞ்ச் முடிச்சுக்கிட்டோம்.

அரை நூற்றாண்டு சரித்திரம் பார்த்த திருப்தியில், அடுத்த சரித்திரம் பார்க்கப் போலாமா ?

தொடரும்........ :-)


6 comments:

said...

ஏரிக்கு நடுவே, பாறையில் சிற்பங்கள். எத்தனை அழகு! எவ்வளவு உழைப்பு!

உங்கள் வழி நாங்களும் பாறைச் சிற்பங்களை பார்த்து ரசித்தோம். நன்றி.

said...

மிகவும் அழகு மேடம் :) 
உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக வேண்டும் :) 
ரொம்ப நாளா  வாசிக்கிறேன் ஆனால் இதுதான் முதல் பின்னூட்டம் .. 
ஒரு குடும்ப உறுப்பினர் போல உணர்கிறேன் .. 
வாழ்க வளமுடன் 

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உழைக்க அஞ்சாத கலைஞர் ! சமீபத்தில்கூட ஒருக்காப்போய் கொஞ்சம் நகாசு வேலைகளைச் செஞ்சுட்டு வந்துருக்கார்!

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க சக்தி கோமதி !

முதல் வருகைக்கு நன்றி ! ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்க ! அன்பும் ஆசிகளும் !

said...

அருமை நன்றி

said...

ஏரிக்கு நடுவே பாறைகளில் சிற்பங்கள் வடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததே ஆச்சரியம்தான் அழகிய சிற்பங்கள்.