Wednesday, February 27, 2019

சட்னு ஒரு முடிவு !!!!! (பயணத்தொடர், பகுதி 72 )

பழக்கத்துக்கு எப்படி அடிமை ஆகிட்டோமுன்னு நினைச்சாக் கொஞ்சம் அவமானமாத்தான் இருக்குன்னாலும்.....  விடமுடியுதா?  இதெல்லாம் இல்லாத நாட்களில் எப்படி இருந்தோம்?வாழ்க்கை அப்பவும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது! இப்போ ருசிகண்ட பூனை போல ......
ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தப்ப சரியா மணி பனிரெண்டு.  ரிஸப்ஷன் வழியாத்தானே உள்ளே போவோம்.....   தலையைத் திருப்பிப் பார்த்தவுடன்,  'இன்னும்  ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க மேடம்'  னு  சொன்னதைக் கேட்டதும்தான் கோபம் பொங்கிவர ஆரம்பிச்சது....  ஒன்னும் சொல்லாம அறைக்குப் போனதும்.....  'ஏம்மா....  இன்னைக்கே கிளம்பிறலாமா?' ன்னார் 'நம்மவர்'.

டிஜிட்டல் பேனர், போஸ்டர் ஒட்டுவதில் மருதைக்காரர்களை மிஞ்ச முடியாது!

'நமக்கு நாளைக்குத்தானே அங்கே புக்கிங் இருக்கு'ன்னதும், 'கேட்டுப் பார்க்கிறேன். இன்னைக்குக் கிடைச்சால் போயிடலாமா?'

ஒரு விநாடி தயக்கத்துக்குப்பின் 'போயிடலாம்'னு சொன்னேன்.   மதுரை வந்துட்டு மீனாக்ஷியைப் பார்க்காமல் போறோமேன்ற  குற்ற உணர்வு தான்....  நேத்து சாயங்காலம் ரெண்டு கோவில்கள் போய் வந்தபின்  மீனாக்ஷியைப் பார்க்க  நேரமில்லை.   அதுதவிர.... ஒவ்வொருமுறை இங்கே வர்றப்பவும் கோவில் சட்டதிட்டங்கள் மாறிடுது.  கேமெரா டிக்கெட் வாங்கிக்கலாம். கேமெரா கூடாது. செல்ஃபோன்  கொண்டு போகலாம் /  போகக்கூடாது. டிக்கெட்  வாங்கினால்  ரெண்டுக்கும் அனுமதி உண்டு.   டிக்கெட்டே இல்லை. நோ கேமெரா, நோ செல்ஃபோன்.....  வலையிலும் சரியா விவரம் போடறதில்லை....

இன்னிக்கு நல்லா விசாரிச்சுட்டு, நாலுமணிக்கு போகலாமுன்னு நினைச்சுருந்தேன். பகல் வெளிச்சம் இருந்தால் வெளியில்  கொஞ்சம் படங்கள் எடுத்துக்கலாமே....
 நம்ம மதுரைத் தம்பிகளின் நினைவு வந்தது உண்மை ! 
அதுக்குள்ளே ஃபோன் பேசி முடிச்சவர், ரூம் இருக்காம். இன்றையில் இருந்தே எடுத்துக்கறோமுன்னு சொல்லிட்டேன்னார்.  கீழே  ரிஸப்ஷனுக்குப் போன் செஞ்சு ஒருமணிக்கு செக்கவுட் செய்யறோமுன்னு  சொல்லியாச்.
நம்ம ரமேஷுக்கும், இப்படி ஒரு மணிக்குக் கிளம்பறோம்.  சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ரெடி ஆகிருங்கன்னு  சொன்னோம்.

பொதுவா எனக்கு எந்த ஊருக்குப் போய்த் தங்கினாலும் குறைஞ்சபட்சம் ரெண்டுநாள் தங்கணும் என்று கணக்கு. நம்மவர்தான் ஒருநாள் ஒரு ஊர்னு திட்டம் போட்டுருவார்.  அதுக்கே 'தனிச் சண்டை' போடுவேன்.  சாயங்காலம் அந்த ஊர் போய்ச் சேர்ந்து மறுநாள்  பகல் கிளம்பணுமுன்னா.... ஊர் விசேஷத்தை என்னன்னு பார்க்கறது?

இப்படித்தான் நாம் போன யூரோப் ட்ரிப்பில் நாளுக்கு ஒரு ஊர்னு போட்டுவச்சுருந்தாங்க. ஆனால் அதுலே காலை எட்டு முதல் மாலை அஞ்சுவரை பஸ்ஸுலேயே அந்த ஊரைச் சுத்திட்டு சாயங்காலம் ஹொட்டேலுக்குக் கொண்டு போயிருவாங்க.  அதிலிருந்து மறுநாள் காலை வரை நம் சொந்த ஏற்பாட்டில் அங்கே இங்கேன்னு ஊருக்குள் போய்வரலாம்.  அதுவும்கூட  டின்னர் அவுங்களே ஏற்பாடு செஞ்சு கொடுக்காத நாட்களில் மட்டும்.  ஒரு சில பெரிய ஊர்களில் மட்டுமே தொடர்ந்து ரெண்டுநாள் தங்கல். என்ன ஒன்னுன்னா அங்கெல்லாம்  நம்ம கோவில்கள் இல்லை பாருங்க.... அதனால் ஊர் சுத்திப் பார்க்கறது மட்டுமே! 

 நம்ம ஊரில் பயணம் செய்யும்போது  எனக்குக் கோவில்கள் விஸிட்தான் ரொம்ப முக்கியம். அதிலும் குறிப்பிட்ட நேரங்களில் திறந்து வைப்பதால் அதுக்குள்ளே போயாக வேண்டிய நிர்பந்தம் வேற.  பகலில் கோவிலை மூடி வச்சுருப்பதால்  அந்த நேரங்களைத்தான்  ஊர் சுத்திப் பார்க்க ஒதுக்கணும். மேலும் நம்ம பக்கங்களில்  எல்லா ஊரிலுமா பார்க்கன்னு  இடங்கள் இருக்கு?  அந்தந்த ஊரில் அந்த ஊர்க் கோவில்களே முக்கியம் இல்லையோ!

அதானே காஞ்சிபுரமா என்ன? கோவில் மூடி இருக்கும் நேரம் புடவைக்கடைக்குள் நுழைய?  

இங்கே மதுரையில் சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்குன்னாலும் அநேகமா எல்லாம்  ஏற்கெனவே பார்த்த இடங்கள்தான்.  மாமியார் வீடு 'போடி' என்பதால்  மதுரை வழியாத்தானே போக்குவரவு.

இப்பெல்லாம் வெயில் ரொம்பக் கடுமையா இருக்கு.  வாகன நெரிசல்களால் எரிச்சலும்  கூட....  அதனால் மேலே மொட்டை மாடியில் இருந்தாவது மதுரையை க்ளிக்கலாமுன்னு போனோம்.  மாடியில் ஒரு  ரூஃப்டாப் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. மாலையில் மட்டும்தான் . அதானே... மொட்டை வெயிலில் எங்கே உக்கார்ந்து சாப்பிட முடியும்?






மாடிக்குப் போனோம். சின்ன இடம்தான்.   சுப்ரீம் போல பெருசா  இல்லை.   ஆனால்  சின்னச் சின்ன  வளைவில்  நாலைஞ்சு  அமைப்பு.  ரொமான்டிக் டின்னர் :-)  சுத்திவர நாலைஞ்சு க்ளிக்ஸ் ஆச்சு.  அப்புறம்  அறைக்கு வந்து  நம்ம பொருட்களை  எடுத்துக்கிட்டுச் செக் அவுட் செஞ்சோம்.


ஊரை விட்டு விலகுமுன் இப்போதைக்குக் கடைசியா  ரெண்டு சமாச்சாரம்  பாக்கி.....   அதுவும் பெருமாளின் அருளால் அல்மோஸ்ட் ஒரே இடத்தில் கிடைச்சது.  முதலாவது  ஜிகர்தண்டா. அது   ஊர் முழுக்க மத்த இடங்களில் கிடைச்சாலும் அந்த 'ஃபேமஸ் ' போல் வராது.  நாம் தங்கி இருந்த மதுரை ரெஸிடன்ஸி மேல மாரட்  தெரு. இந்த ஃபேமஸ் ஜிகர்தண்டா கீழ மாரட் தெரு.  அங்கே போய்ச் சேரவே  காமணி ஆச்சு. போக்குவரத்து நெரிசல் போதாதுன்னு வழியில் நம்ம  பெருந்தலைவர் காமராஜ் ஐயாவின்  பிறந்தநாளை முன்னிட்டு, அவர் சிலைக்கு  மாலை மரியாதை செஞ்சுக்கிட்டு இருக்காங்க .
ஃபேமஸ் ஜிகர்தண்டா கடையில் வழக்கம்போல் கூட்டம் நெரியுது.  'நம்மவர்' போய்  மூணு  ஸ்பெஷல் வாங்கினார். நம்ம ரமேஷுக்குத்தான்   பார்க்கிங்  கிடைக்காம கொஞ்சம் அல்லாட வேண்டி இருந்துருக்கு. அவரும் வந்து சேர்ந்துக்கிட்டார்.  மனமும் வயிறும் குளிர  ஜிகர்தண்டாவைக் குடிச்சேன்.  வயிறு திம்னு ஆச்சு. நம்ம லஞ்ச் முடிஞ்சது :-)


சாலையைக் கடந்து வண்டி நிறுத்துன இடத்துக்கு போனால்  பூக்காரம்மா  இருக்காங்க.  ஆஹா.... நம்ம ரெண்டாவது ஆசையும் நிறைவேறிடுச்சு!
இனி நேரா ஊரை விட்டுக் கிளம்பிப் போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.  பைபாஸ் ரோடுகள் வந்துட்டதால்  வழியில் வரும்  ஊருக்குள் போகாமலேயே இப்பெல்லாம்  பயணிக்க முடியுது. புதுக்கோட்டை வழியாத்தான் போறோம். நாம் போக வேண்டியது   இருநூத்தி இருபது கிமீ தூரம்.  நாலு நாலரை மணி நேரம் ஆகுமுன்னு  கூகுளார் சொல்றார்.
தேசிய நெடுஞ்சாலையில்  பறக்குது வண்டி.  சுமார் மூணு மணிநேரப் பயண தூரத்தில்  அடையார் ஆனந்தபவன் கண்ணில் பட்டது.  சின்ன ப்ரேக் எடுத்துக்கணும்.   ரெஸ்ட் ரூம் வசதிகள்  பரவாயில்லை.  ஜூனியர் குப்பண்ணா, அடையார் ஆனந்தபவன் எல்லாம் ஒரே கட்டடத்தில் அடுத்தடுத்து இருக்கு.  இப்படி நெடுஞ்சாலைகளில்  அங்கங்கே  கழிவறை வசதிகளோடு  நல்ல   ரெஸ்ட்டாரண்டுகள் இன்னும் கூடுதலா நாட்டுக்குத் தேவை.

இப்போதைக்கு நமக்கு மூணு காஃபி மட்டும்!  அடுத்த ஒரு மணி நேரத்தில்  கும்மோணம் ராயாஸ் க்ராண்ட் போய்ச் சேர்ந்தோம்.  செக்கின் செஞ்சு வைஃபை கனெக்‌ஷன்  கிடைச்சதும் (இப்படி ஸ்மார்ட் ஃபோனுக்கு அடிமையாகிக்கிடக்கோமேன்னு ஒரு பக்கம் அவமானமா இருந்தாலும்) மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
ராயாஸில் அறைகள் பெருசாவும்  சுத்தமாவும் இருக்கு என்பதால்  எப்பவும் இங்கேதான் தங்கறோம்.  பாத்ரூமில் ஃபேன் இருக்கு என்பது விசேஷம்!

(நம்ம சண்டிகர் வீட்டிலும் எல்லாக் குளியலறைகளிலும்  ஃபேன் இருக்கும். போதாக்குறைக்கு  அங்கே பால்கனிகளில் கூட ஃபேன். அப்போ  ஊர் எவ்ளோ சூடா இருக்கும்னு பார்த்துக்குங்க!)

வாசலில் இருக்கும் Rice & Spice Restaurant இல் இருந்து  பஜ்ஜி, காஃபி வரவழைச்சுத்  தின்னதும் தெம்பு வந்துருச்சு.

இனி........

தொடரும்.....:-)


3 comments:

said...

அருமை அருமை !
நன்றி.

said...

உங்களுடன் மதுரைப் பயணம் நிறைவு செய்து, தற்போது உங்களுடைய கும்பகோணம் அனுபவத்தைக் காணக் காத்திருக்கிறேன்.

said...

இணைய வசதியை சரிசெய்ய ரெண்டு நாள்னா கண்டிப்பா அது கதைதான். அதுவும் ஓட்டல்காரங்க புகார் சொன்னா ஒடனே வந்து செய்வாங்களே. வீடுகள்ளயே பிரச்சனை வர்ரதில்ல.

அடுத்து குடந்தையா... நன்று நன்று