Monday, February 04, 2019

பன்முகத்திறமையாளருடன் ஒரு இனிய சந்திப்பு ! (பயணத்தொடர், பகுதி 63 )

இன்றையக் கணக்கில்  இன்னும் அரைநாள் இருக்கு.......   சந்திக்க நினைத்தவர்களை சந்திச்சுக்கலாம். தோழி வீட்டுக்குப் புறப்பட்டோம். இப்ப சில வருஷங்களாகத்தான் தெரியும்.  ஃபேஸ்புக் ப்ரபலம் !  வெறும் எழுத்தோட நின்னுடாமல் இன்னும் பல சமாச்சாரங்களில்  பூந்து வெளையாடறாங்க.!  சமீபத்து சமாச்சாரம்.....    ஆன்மிகக் கதைகள் தொலைக்காட்சியில்  சொல்றது ! கோபுரம் டிவியில் அட்டகாசமாக் கதை சொல்றாங்க.... நீங்களும் பாருங்க!!


இவுங்களும் இப்போ இந்தியாவுக்கு வந்துருக்காங்க. அதுவும் அவுங்க வீடு இருக்கும் ஊருக்கு நாமும் வந்துருக்கோம்!  விடமுடியுமோ?

வரவான்னு அனுமதி கேட்டு, விலாசம் எல்லாம் வாங்கிக்கிட்டு இதோன்னு  கிளம்பினோம். போற வழியில் நம்ம முரளிகடையில் காஃபியைக் குடிச்சுட்டுப்போகணும்.  அங்கெ போனா.....  தூண்டில்களில் பஜ்ஜி :-)

 வீட்டைத் தேடிப்போகும்போது ஒரு திருப்பத்தைத் தவறவிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கோம். அப்புறம் திரும்ப அவுங்களைக் கூப்பிட்டு சரியான இடத்தில் திரும்பிப்போனா....  இதோ எதிரில் ஓட்டமும் நடையுமா வந்துக்கிட்டு இருக்காங்க  நம்ம சுமிதா ரமேஷ்!

வலைப்பழக்கத்தில் ஒரு வசதி என்னன்னா.....  புதுசா, முதல்முறை பார்க்கிறோம் என்ற சங்கோஜம், தயக்கம் எல்லாம் போயிருது. தினம் பார்த்துப்பேசும் நெருக்கம் வர்றது உண்மை! இதுலே இன்னொன்னு என்னன்னா.....  அவுங்களை மட்டுமில்லை, அவுங்க குடும்பமே நமக்குத் தெரிஞ்சுரும். கோபாலைப் பார்த்தே அடையாளம் தெரிஞ்சு வந்து பேசுனவங்க நிறையப்பேர்!  இத்தனைக்கும் அவுங்களோட எனக்கு வலைப்பேச்சே இல்லை!


மகள், அப்பா, அம்மா, இன்னுமொரு உறவினர்னு எல்லோருடனும் கலகலப்பான பேச்சு! இத்தனை அழகு எங்கிருந்து வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்! 'அம்மா' !!!
அடை சாப்பிடச் சொன்னாங்க......     ஆசைதான். ஆனால்.... வயித்துக்குள்ளே பஜ்ஜி !  கிளம்பும் சமயம் வச்சுக்கொடுத்தலில்  மீண்டும் ஒரு எவர்ஸில்வர் கிண்ணம் !  'நம்மவரோடு' நான் 'ஐ கான்டாக்ட்' வச்சுக்கலை :-)

கிளம்பிவரும்போது தண்ணீர் இல்லாக் குளம்  கண்ணில் பட்டது. தீர்த்தவாரி நடந்த காலமும் உண்டாம்! இப்போ......   காவிரி பாயும் மண்ணில் இதென்ன சோதனை..... ப்ச்.....
அடுத்துப்போனது நம்ம ரெங்கனின் அரண்மனைக்கு! ரங்கவிலாஸ் மண்டபம் கலகலன்னு இருக்கு! பெரியவரை தரிசனம் பண்ணிக்கப் போகலை.  அவர்  இருக்குமிடத்தில் நாமும் இருக்கோம் என்றதே போதும். நம்மை அவர் பார்த்துக்குவார். 


நேராப் போய் கெமெரா டிக்கெட் வாங்கினேன்.  கால் போன போக்கில் ஒரு சுத்து.  ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு  உணர்வும் அனுபவமும். சாயங்காலம் ஆனதும் நிலமும் மனமும் குளிர்ந்துருது!  பூனை உலா......

ரங்க விமானம் பார்த்ததும்  சட்னு கண் நிறைஞ்சது.  நாளைக் காலை ஊரைவிட்டுக் கிளம்பறோம்.... இதுதான் கடைசி..... போயிட்டு வரேன்னு சொல்லிக்கணும், இல்லே?


தாயாரின் சந்நிதி மண்டபத்தில்தான்  மக்கள் விஸ்ராந்தியா உக்கார்ந்துருக்காங்க.  தாயின் மடியில் சுகம்! தாழம்பூ பார்த்ததும்  வாங்கினேன். இது  நிஜமாவே மனசு வந்து தாயாருக்குத் தர்றதுக்குத்தான் :-)

சுலபதரிசனம் எப்போதும் தர்றது தாய்தான்! ஆச்சு.  மேட்டழகிய சிங்கர் படிகளில்  எந்த யோசனையும் இல்லாமல் நிச்சிந்தையா உக்கார்ந்து அனுபவிக்கிறேன்.  இன்றே கடைசி, இன்றே கடைசி.....

மணி எட்டுத்தான் ஆச்சுன்னாலும் பல சந்நிதிகள் மூடிக்கிடக்கு.


குரு வணக்கம் செஞ்சுக்கிட்டுத் 'தெரிஞ்ச' தெய்வங்களுக்கெல்லாம்  நன்றியுடன்  கும்பிட்டு போட்டுக்கிட்டே போறோம். எதோ ஒரு மண்டபத்துக்குள் போகும் வழி திறந்துருந்ததும், அதுக்குள்ளே போனால்.....  பேபி க்ருஷ்ணா !  முதல்முறையா இங்கே  நுழைய வாய்ப்பு !
அடப்பாவமே.... குழந்தைக்கு இப்படியா பட்டை நாமம் போடறது?
 





இன்னும் நமக்குத்  தெரியாமல் மூடிக்கிடக்கும்  மண்டபங்களும் சந்நிதிகளும் ஏராளம் இங்கே!   அவனாக் கூப்பிட்டுக் காமிக்கும்வரை  பொறுமை காக்க வேணும்!

கொடிமரம் ஸேவிச்சு பெரிய திருவடி ஸேவிச்சு வெளியே வரும்போதே 'இனி எப்போ?' ன்ற  நினைவில் துக்கம்  கூடவே வருது....

ராச்சாப்பாடு ஒன்னு பாக்கி இருக்கே.....  நேத்து நம்ம கீதாவிடம் பேசிக்கிட்டு இருந்தப்ப அவுங்க சொன்ன இடத்தில் இதுவும் ஒன்னுன்னு  ஸ்ரீராகவேந்திரா அன்னபூரணி ஹோம்லி மெஸ் போறோம். இதே அம்மாமண்டபம் ரோடில் இருந்து  கோவிலுக்குப் போறவர்ற   வழியில்தான் இருக்கு.



பேருக்கேத்தாப்லெ குடும்பமே அங்கே ஆக்கிப்போடறாங்க ! குழந்தையும் குட்டியுமா கூட்டுக்குடும்பம் போல ! பிள்ளைகள் அங்கங்கே உக்காந்து வீட்டுப்பாடம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.. ஆம்பியன்ஸ்ன்னு இப்பெல்லாம் சொல்றாங்களே.... இங்கே குடும்ப ஆம்பியன்ஸ். இதுவும் ஒரு விதத்தில் நல்லாத்தான் இருக்கு. இந்தக் காரணம் ஒன்னு போதும்..... கூடுதல் சுத்தம் எதிர்பார்க்கக்கூடாதுன்றதுக்கு!
வாசல் முற்றத்தில் கொஞ்சம் பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க.  இங்கே ஒரு ஓரமா கையலம்பக் குழாய்!
  உள்ளே நான் உக்கார்ந்துருக்கும்  இடத்தில் எனக்குப் பின்னால் ஒரு ஜன்னல் தெரியுது பாருங்க.....  அதன் வழியா நாம் சாப்பிட்ட இலையைத் தூக்கிப்போட்டுடணும்!  ஈஸி டிஸ்போஸல் ! அந்தாண்டை மாடு இருக்குமோ?

ஆளுக்கொரு தோசையும் பாலுமா முடிச்சுக்கிட்டோம். ரமேஷ் சப்பாத்தி வாங்கிக்கிட்டார்.


நம்ம சுமி வீட்டில் இருந்து திரும்பி வரும்போது வழியில் உதிரி மல்லி ஒரு சின்னப்பொதி பத்து ரூபாய்க்குக் கிடைச்சது. அறைக்கு வந்ததும்  ஊசி நூலால் கோர்த்தேன்.  நல்ல அடர்த்தியா மூணு முழம் வந்தது!  பயணத்தில் எப்பவும் ஊசிநூல் வச்சுக்கறது நல்லது.  சட்னு ஒரு பட்டன் தைக்கவோ, ஒரு தையல் போட்டுக்கவோ, இல்லே இப்படிப் பூ கிடைச்சால் கோர்த்துக்கவோ முடியும் :-)

கொஞ்சம் துணிமணிகளை அடுக்கிட்டு, மறுநாளைக்கு வேண்டியவைகளை  எடுத்து வச்சுட்டுப் படுத்தாச்சு. நல்லா ரெஸ்ட் எடுக்கணும். நாளை ஒரு  இருநூத்தஞ்சு கிமீ பயணம் இருக்கு!

தொடரும்..... :-)


10 comments:

said...

அருமையான சந்திப்பு.

said...

நீங்கள் போட்ட சாக்கில் படங்களைப் பார்த்தோம். ஜோர்.

ஜன்னலைப் பார்த்ததும்
ஈஸி டிஸ்போஸல்.
மாடு இருக்குமோ?
அடுத்த ஈஸி டிஸ்போஸல்!

said...

அடப்பாவமே.... குழந்தைக்கு இப்படியா பட்டை நாமம் போடறது?/ அதானே கொஞ்சமுமழகுணர்ச்சி இல்லாமல்

said...

அருமை நன்றி

said...

நல்லா இருக்கு. ரங்கநாதர் தரிசனம் அன்றைக்கு நடந்ததா இல்லையா? அழகிய குழந்தைக்கு அழகியல் இன்மையில் திருமண்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

வருகைக்கு நன்றி.

பின்னூட்ட பதில் எழுதக் கொஞ்சம் தாமதம் ஆகிப்போச்சு. மன்னிக்கணும்....

said...

வாங்க ஜீவி.

மாடு இருந்தால் நல்லா இருக்கும்! இருக்கான்றதுதான் தெரியலை.... இருட்டிப்போச்சு. ஒருவேளை எருமையோ!!! :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

சின்ன நெத்திக்கு ஏத்தமாதிரி போடப்டாதோ!!!

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தாயார் தரிசனம் மட்டுமே!

ஒரு மண்டபத்தில் ஸ்ரீவேணுகோபாலைப் பார்த்தேன்!

குழந்தைக்கு திருஷ்டிபரிகாரம்.... அந்த நாமம்....