Friday, February 15, 2019

டீக்கதை............. (பயணத்தொடர், பகுதி 67 )

இந்த மூணார் என்ற பெயர்க்காரணம் விசாரிச்சால்.......  அது ஒன்னும் ப்ரமாதம் இல்லை. முதிரப்புழை, நல்ல தண்ணி, குண்டலைன்னு  மூணு ஆறுகள் இந்த இடத்தில் பாயுது. அதான் அப்படின்னு .....   மூணு ஆறு....    மூணார்....
கடல் மட்டத்தில் இருந்து  ஐயாயிரத்துச்சொச்சம் அடிகள் உயரத்தில் இருக்கும் ஊர்.  எப்பவும் குளுகுளுன்னு  இருக்கும் காலநிலை. மலைப்ரதேசம் என்பதால்  மக்கள்  தொகை ரொம்பவே குறைவு!  இன்னும் மேலே போகப்போக  ஆளில்லாத காடுதான்.  கேரள அரசின்  உடமை!  வனத்துறையின் பராமரிப்பு.  நமக்குத்தான் மேலே போய், அழகான காட்சிகளைக் காணக் கொடுப்பினை இல்லாமல் போச்சு...

திரும்ப லொங்கு லொங்குன்னு அதே பதிமூணு கிமீ கடந்து மூணார் வந்துட்டோம். இறக்கம் என்பதால் இருபத்தியஞ்சு நிமிட்.   கண்ணன்தேவன் கம்பெனியின் சாய் பஸாருக்குப் போய் ஒரு டீ குடிச்சுக்கலாமா?  பத்தே ரூவில்  நல்ல சாயா கிடைச்சது. இது வெறும் டீக்கடை மட்டுமில்லை.  விதவிதமான டீத்தூள்களும்,  மசாலாப் பொருட்கள், வாசனை எண்ணெய்னு  ரொம்ப அழகா நீட்டா அடுக்கி வச்சுருக்காங்க.

ரிப்பிள்ஸ்னு  இவுங்க டீ (200 கிராம்) நீலகிரித் தைலம் ஒரு சின்ன பாட்டில் (100 மில்லி) வாங்கினதோடு என் ஷாப்பிங் முடிஞ்சது :-)

மதுரை,தேனி வழியா சபரிமலைக்குப் போறவங்க மூணாரு வழியாத்தான் போறாங்க.

எப்பவும் கூட்டமாவே இருக்கும் ஊர்களில் இதுவும் ஒன்னு.... விதவிதமான சர்ச்சுகள், பெருசா மசூதி, ஜஸ்ட் பெயருக்கு ஒரு  கோவில்....


கண்ணன் தேவன்  டீ ஃபேக்டரியில் டீ ம்யூஸியம் ஒன்னு இருக்குன்னு அங்கே போனோம். பக்கத்துலேதான் ஒரு ரெண்டரை கிமீ தூரத்தில்.

உள்ளே போய்ப் பார்க்க ஆளுக்கு எழுபத்தியஞ்சு ரூ கட்டணம்.  நுழைஞ்சவுடனே  வெள்ளைக்காரன் காலத்துலே வேட்டையாடுன மிருகங்களின் தலைகள்.... சோகமா சுவரில் இருந்தன.........


சுருக்கமா இந்த தேயிலைத் தோட்ட வரலாறு  புல்லட் பாய்ண்ட்டா எழுதி வச்சுருக்காங்க.

மலையில் பரந்து விரிஞ்சு கிடக்கும் இடத்துலே  இந்த  கண்ணந்தேவன்  மலை டீ ப்ளான்டேஷனுக்கான இடம்   கிட்டத்தட்ட அம்பத்தியொன்பதாயிரம் ஏக்கர் நிலம்!   ஹைய்யோ.......

 திருவாங்கூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த  இடத்தை,  பூஞ்சார் தம்புரானிடம் இருந்து  வெள்ளைக்கார ஜான் டேனியல் மன்றோ துரை,  1877 ஆம்  வருஷம் குத்தகைக்கு எடுக்கறார்.  ஏற்கெனவே இலங்கைத் தேயிலைத் தோட்ட அனுபவம் இருப்பதால் இந்த இடம் தேயிலை பயிரிடப் பொருத்தமானதுன்னு பிடிபட்டுப் போயிருக்கு!   அடுத்த மூணு வருஷம், இடத்தைச் சீர்படுத்தி ஓரளவு சாலைகள் எல்லாம்  அமைச்சதும் 1880 இல் முதல் தேயிலைச் செடியை  நட்டாங்க. அப்ப இருந்து ஏத்தம்தான்.  வேலை செய்ய ஆட்கள்  இந்தப் பகுதியில்   இல்லைன்னு தமிழ்நாட்டு மக்களைக் கூப்ட்டுப் போயிருக்காங்க. பாண்டிய நாட்டு மக்கள்!

கண்ணன்தேவன் குன்றுன்னு இந்த இடத்துக்குப் பெயர் . அந்த மூணாறுகளில் நல்லதண்ணின்னு சொல்லும் ஆறு வர்ற ஏரியாதான் இது!  ஃபின்லே கம்பெனி இவரோடு சேர்ந்து கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ரொட்யூஸ் கம்பெனின்னு 1897 ஆம் வருசம் ஆரம்பிச்சாங்க.  இதுக்குள்ளே அக்கம்பக்கம் வெவ்வேறு  பெயர்களில் இருந்த எஸ்டேட்டுகளையும்  ஒன்னு சேர்த்துட்டாங்க.  தேயிலை மட்டுமில்லாம, காஃபி, ஏலக்காய், குறுமிளகு, கிராம்புன்னு  மத்த மசாலா சாமான்களையும் பயிரிட்டதும் வியாபாரம் நல்லாவே நடந்துருக்கு.  இந்த மசாலாவைத் தேடி வந்தவங்கதானே பிரிட்டிஷ் கூட்டம்.  நல்லா இங்கிருந்து  அங்கே அனுப்பிக்க, சொந்த கம்பெனின்னது வாகாப் போயிருக்கு!

1924 இல் ரொம்பப் பெருமழை பெய்த காரணத்தில் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு  ஏற்பட்டு ஏகப்பட்ட இடங்கள் போயே போயிருச்சாம். நிறைய உயிச்சேதம் வேற.....
ஒரு வழியாத் திரும்பி எழுந்துருக்கு வியாபாரம். இடையில் என்னென்னவோ மாற்றங்கள். நாட்டுக்குச் சுதந்திரமும் வந்துருச்சு. ப்ரிட்டிஷ் கம்பெனிகள் பலதும் உள்ளூர்  கம்பெனிகளுக்கு வியாபாரத்தை வித்துட்டுக் கிளம்பிருச்சு.
அப்பெல்லாம்  பெரிய  அளவில் வியாபாரம் நடத்தறவங்க யாருன்னா டாடாவும் பிர்லாவும்தான்! நாட்டின் பெரிய பணக்கார நிறுவனம் !  ச்சும்மா காசு இருக்கறாப்ல அலட்டும் ஆட்களைக்கூட.... ஆமாம்... இவரு பெரிய டா(ட்)டா னு சொல்வாங்க.

டாடா நிறுவனம், ஃபின்லே கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து டாடாஃபின்லே க்ரூப்னு  இதுலே டாடா டீ  தயாரிப்பு கொடிகட்டிப் பறக்க ஆரம்பிச்சது.  (அப்புறமா ஃபின்லே வை ஓரங்கட்டி இருப்பாங்க, இல்லே? )
ஒரு கம்பெனி நடக்கும்போதே  புதுசு புதுசா இன்னொன்னு ஆரம்பிச்சு வியாபாரத்தைப் பெருக்கிக்கறது  நடக்குதா இல்லையா?  இதே கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ரொட்யூஸ் கம்பெனிக்கு டாடா டீ கம்பெனி தன்  உரிமையை மாத்திக் கொடுத்துருச்சாம்.  (எல்லாம் ஒன்னுக்குள்ளே ஒன்னுதான்!)

கேரளாவில் பொழுதன்னிக்கும் தொழிற்சங்கம் கிளப்பி விடும் ஹர்த்தால்  நீங்க கேள்விப்பட்டுருக்கலாம்.  நாங்க கேரளாவில் இருந்த காலத்தில்  வீட்டு  வாசல் வழியா  ஊர்வலமும்,  (வெவ்வேற )கம்பெனி அடைப்புமா  நடந்ததைப் பார்த்துருக்கேன். ஊர்வலம் கூட  கூட்டமாப் போக மாட்டாங்க. தனி மனித வரிசையா அது பாட்டுக்கு ஆஞ்சி வால் போல ஒத்தை ஒத்தையாப் போய்க்கிட்டு இருக்கும்.  அப்பப்பக் கேக்கும் வெல்லுவிளியைக் கொண்டுதான்  ஊர்வலம் போகுதுன்னே தெரியும்.  தெருவை  அடைச்சுக்கிட்டுப் போகாம ஒத்தை வரிசையில் ஓரமாப் போற ஒழுங்கு எனக்குப் பிடிக்கும். போற வர்ற ட்ராஃபிக் அதுபாட்டுக்கு!  (என்ன பெரிய ட்ராஃபிக்.....  சைக்கிள்தான் பெரும்பாலும். கார் எப்பவாவது..... ஹூம் அது ஒரு கனாக் காலம்!)

அக்கம்பக்கத்து வீடுகளில்  வேலைக்குப் போகும் பெண்கள் லீவு கிடைச்சுருச்சுன்னு மத்த  வீட்டு வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. வேலைக்குப் போகலையான்னு கேட்டால், 'சமரம்'னு பதில் வரும்!

'நம்மவரே' பல நாட்களில்  வேலையில் இருந்து திடுக்னு வீட்டு வந்துருவார்.  தொழிலாளர்கள் 'சமரம்' செஞ்சால்,  மேலதிகாரிகள் மட்டும் அங்கே  ச்சும்மா உக்காந்துக்கிட்டு என்ன செய்ய?

இங்கேயும் தொழிற்சங்கத் தொல்லை இல்லாமல் இருந்துருக்க வாய்ப்பே இல்லை.....   ஒரு கட்டத்தில் என்ன செஞ்சாங்கன்னா.....   கம்பெனியின் (ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை)  பங்குகளைத் தொழிலாளர்களே வாங்கிக்கலாமுன்னு முடிவு அறிவிச்சு, இப்ப அங்கே வேலைசெய்யும் தொழிலாளர் அனைவரும் பங்குதாரர்களா  ஆகி இருக்காங்க.    என்னதான் கொஞ்சூண்டு பங்குனாலும்.....  நாமும் பங்குதாரர்ன்ற எண்ணம் வந்ததும்.... வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குது போல!


இதெல்லாம் கம்பெனி சார்பில் சொல்லி இருக்கும் இடத்தில் இருந்து வாசிச்சதுதான்.  இதோட அடுத்த பக்கமுன்னும் சிலர் சொல்லி இருப்பாங்க. ஷேர் கொடுத்துத் தொழிலாளர்களை ஏமாத்திட்டதாவும் ஒரு கதை இருக்கு.....

ஆகக்கூடி, இப்போ  இந்தத் தொழிற்சாலை, கம்பெனியைச் சேர்ந்த  மொத்தப் பணியாளர்களும் பங்குதாரர்களே!
 பனிரெண்டாயிரத்து எழுநூறு பேர்னு கம்பெனி சொல்லுது!

நாங்க 'சரித்திரம்' தெரிஞ்சுக்கறதுலே இருக்கும்போது...  சீக்கிரம் மேலே போங்க.... அங்கே  டீ இலைத் தயாரிப்பு விளக்கம்  சொல்ல ஆரம்பிச்சாச்சுன்னதும்  அங்கே போனா... ஒரு பெரிய கூட்டம். க்ரூப் டூர்  ஃப்ரம் நார்த் இண்டியா.  (நம்மையும் கூட்டத்து மக்கள்னு நினைச்சுட்டாங்க!)


அங்கே பச்சையாப் பறிச்ச இலைகளைப் போட்டு வச்சு, அதுக்குமுன்னால் ஒருத்தர் மைக் பிடிச்சு விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கார். இவரும் ஒரு வட இந்தியர்தான். கூட்டத்தைப் பார்த்த குஷி யில்...... நாலு வரி  விளக்கம் சொல்லிட்டு, மக்களிடம் கேள்வி கேட்டுக்கிட்டு நிக்கறார்.  பள்ளிக்கூடம் போல.... சனமும்  'பதில் தெரியும் தெரியுமு'ன்னு கை தூக்கிக்கிட்டுக் குதிக்குது....   என்ன பிள்ளைகளா... புரிஞ்சதா....... நீ சொல்லு.... இப்ப   நான் என்ன சொன்னேன்னு.....    எல்லாம் முக்கால் ஹிந்தியும் கால் இங்லிஷுமா....

நாங்க ஓசைப்படாம நழுவிக் கீழே வந்துட்டோம்.  ம்யூஸியப் பகுதியில் அந்தக் காலச் சாமான்கள், மெஷீன்கள், அப்போ இருந்த பிபிஎக்ஸ் போர்டுன்னு  வேடிக்கை பார்த்துட்டு,  ஒரு சின்ன விவரணப்படம் காமிக்கும் அறைக்குப் போயிட்டோம்.
சாயிப்புமார் ( வெள்ளையர்களைக் குறிக்கும் மலையாளச் சொல்!)ஆளு அம்புன்னு நல்லாவே அனுபவிச்சுருக்காங்க. அப்பத்து மதாம்மாரும்..... அடுக்கடுக்கான  பெரிய பெரிய  உடுப்புகளோடு எஜமானிகள் ரோலை நல்லாவே  அனுபவிச்சுப் போயிருக்காங்க.!

கீழே  தேயிலைகளை நாலு வித மெஷீன் மூலம் செலுத்தி அதைத் தூளாக ஆக்கறாங்க.











உலர்ந்த தேயிலைத்தூள் இப்படி.... இதுலேயே க்ரேடு பிரிச்சதும்.... இலை,பொடித்தூள் னு நாலைஞ்சு விதம் கிடைச்சுருது. கட்டக் கடைசின்னு கடைப்பகுதிக்கு வந்துடறோம்.


விதவிதமான தேயிலைத்தூள்களும், மசாலாச் சாமான்களுமா விற்பனை. கூடவே கைவினைப்பொருட்களும்.


தேங்காய் நார், ஓலைகள்  பயன்படுத்திச் செஞ்சவைகள் அட்டகாசமா இருக்குன்னாலும்.....   நியூஸிக்குக் கொண்டுவரமுடியாததால் 'ஆசை'யை அங்கேயே விட்டொழிச்சேன்.  ஆனாலும் அந்தப் படகு வீடு ரொம்பவே சிம்பிள் &ஸ்வீட்!

ஏதும் வாங்காம வந்தால் டீ ம்யூஸியம் வந்து போன 'நினைவே எனக்கு வராதென்பதால்'  ஃப்ரிட்ஜ் மேக்னெட் ரெண்டு வாங்கினேன். நம்ம ஃப்ரிட்ஜ்தான் இரிடியம் ஃபினிஷ் ஆச்சே. அதுலே ஒட்டாதேன்னார் 'நம்மவர்'.  ஆமாம்.... அதுக்காக யானையை விடமுடியுமா?   வேற இடம் இருக்கே....   அடுப்புச் சிமினி!

போதும் பார்த்தது....    மணி இப்பவே ஒன்னே கால்.  லஞ்சுக்கு எங்கே போகன்னு சட்னு முடிவெடுத்தேன். நாப்பதியொரு வகையில் எனக்கு ஒன்னாவது கிடைக்காதா?  ச்சலோ.... அலிபாபா.....  இந்த மழை வேற விடவே இல்லை......   கெமெரா நனைஞ்சுருமோன்னு காப்பாத்தி வச்சுக்கிட்டு இருக்கேன்.....
அலிபாபா வாசலில் நிறைய வண்டிகள்.  உள்ளேயும் கூட்டம். நம்மவர் வெஜ் ஃப்ரைட் ரைஸ், எனக்கு ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ், நம்ம ரமேஷ் ஒரு சிக்கன் பிரியாணி.
நாப்பத்தியொன்னில்  கண்ணில் பட்டது இதுவரை பத்து. மீதி முப்பத்தியொன்னு.....

சாப்பாடானதும் கிளம்பினோம்.  இருட்டுமுன்  போடிக்குப் போய்ச் சேரலாம்.
கொஞ்சதூரம் போனபிறகு, மழை கொஞ்சம் நின்னதுன்னு இறங்கி சில க்ளிக்ஸ். இங்கிருந்து பிரியும் சாலை வழியே  சபரிமலை நூத்தித் தொன்னுத்தியாறு கிமீ !
வண்டியைத் திருப்பிக்கிட்டு,  போடிக்கும் வழியைப் பிடிச்சோம்.

ஒரு கடையில் கொஞ்சம் வாழைப்பழங்கள் வாங்கினேன். அங்கே ஈச்சம்பழமும் கிடைச்சது. அழகான நிறம்! அதையும் கொஞ்சம் வாங்கிருன்னார் 'நம்மவர்'.
க்ரீன்ராயல் வந்து சேரும்போது மணி அஞ்சு. ரூம் சர்வீஸில் காஃபி வரவழைச்சுக் குடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வு.  எடுத்த படங்களை லேப்டாப்பில் லோடு பண்ணிப் பார்த்தால்......  மழையால் முக்கால்வாசிக்கும் மேல் மசமச.....  ப்ச்.

தம்பி ஃபோன் பண்ணி  ட்ரிப் எப்படி இருந்துச்சுன்னு கேட்டதுக்கு 'இட்லி நல்லா இருந்தது'ன்னேன். ராச்சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரணுமாம்.  உடம்பு அலுப்பா இருக்கு. இங்கேயே எதாவது வாங்கிக்கறோமுன்னோம்.

முக்கியமா ரமேஷுக்கு  என்னவோ சரியில்லை.  சாப்பிட்ட சிக்கனில் ஏதோ குழப்பம் போல....   திரும்பி வந்ததும் 'டேஷ்' எடுத்துட்டார். லேசா ஜுரம் வேற.....   கைவசம் இருந்த ஜுரமாத்திரை கொடுத்துட்டு, நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டோம்.  எங்கேயும் அலைய வேணாம்....

நாங்க க்ரீன்ராயல் முன்பக்கத்துக்குப்போய்க் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு வந்தோம். புலி இருக்கு!
சின்ன மண்டபத்துலே புள்ளையார் இருக்கார்.
ராத்ரி டின்னருக்கு  ஜீரா ரைஸ், சப்பாத்தி, தடுக்கா தால்.   இந்த  ஜீரா ரைஸும், தாலும் ரமேஷோட ஷேர் பண்ணியாச்சு.  தனியா ஒன்னும்  வேணாமுன்னுட்டார். ஆனாலும் வெறும் வயித்தோடு படுக்க வேணாமுன்னோம்.

ஏன் நம்ம பக்க சாப்பாடு ஒன்னும் வைக்கறதில்லை?  வடநாட்டுச் சமையல்தான் தமிழ்நாடு முழுக்க. அப்புறமும் ஹிந்தி கூடாதுன்னு  போராட்டம் நடத்துவாங்களாம்.....   ஏற்கெனவே துணிமணிகள் , கல்யாணச் சடங்குகள் எல்லாம்  வடக்கு ஸ்டைல் ஆயாச்சு. இப்போ சமையலும். ...
நார்த் இண்டியா சாப்பாடு வேணாமுன்னா.... இருக்கவே இருக்கு சைனீஸ்!

என்ன நடக்குது இங்கே? 'தமிழன்டா' எல்லாம்  அட்டைக் கத்திகளோ?

என்னவோ போங்க....

தொடரும்...... :-)

PINகுறிப்பு :  டீக் குடிக்கும் போது பாதியில் நிறுத்த முடியலை......   கூடுதல் படங்களாப் போயிருச்சு....


9 comments:

said...

மூணாறு பார்த்ததில்லை. இதுமாதிரி டீ மியூசியமும்! என்ன வச்சிருப்பாங்கன்னு பார்த்தால் சுவாரஸ்யமாய்த்தான் இருக்கும் போல்

said...

மூணாறு டிரிப் புக்கிங்லாம் பண்ணி கடைசியில் கேன்சலாயிடுச்சு (சென்னை வெள்ளம் வந்தபோது).

தமிழனைப் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். இன்னும் சிலவருடங்களில் (இப்போவே) ஹிந்தி தெரியலைனா பல கடைகள்ல சாமான்கள் வாங்க முடியாது.

said...

வாங்க ஸ்ரீராம்,

மழைகாலத்தில் போனால் கஷ்டம். ரெண்டுநாள் தங்கி நிதானமாப் பார்த்துட்டு வாங்க.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எனக்குமே இன்னொருமுறை நிதானமாப் போகணுமுன்னுதான் இருக்கு!

பார்க்கலாம்.

ஓசைப்படாம ஹிந்தி நுழைஞ்சுதான் இருக்கு, இல்லே?

said...

அப்பாடா ஒரு பதிவு கோவில் குளங்கள் என்று இல்லாமல்

said...

ஓசைப்படாம இந்தி நுழையல. தெரிஞ்சே உள்ள நுழைக்கப்படுது. செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதியை நிறுத்தி வைத்திருக்கும் மத்திய அரசு, இந்தி மொழி வளர்ச்சிக்கு நிதியை அள்ளிக் கொடுக்குது. கடந்த ஆறேழு ஆண்டுகளா தமிழ்நாடு அரசு ஒன்னும் கேக்கல. கிழிக்கல. இப்ப கடிவாளம் டெல்லியில இருக்குறப்ப இவங்க என்னத்த கேக்கப் போறாங்க.

மூணாறுக்கு பெயர்க்காரணம் இப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன். நீங்க உறுதிப்படுத்தீட்டீங்க. இதுவரைக்கும் போனதில்ல. போகனும் ஒருவாட்டி.

டாட்டா அந்தக் காலத்தில் வெள்ளையருக்கு அபின் சப்ளையரா இருந்ததாகச் சொல்றாங்க. அப்படி சம்பாதிச்ச காசை வெச்சும் வெள்ளைக்கார நெருக்கத்தை வெச்சும் பல தொழில்களை வெள்ளைக்காரன் போகும் போது வாங்கியதா எங்கயோ படிச்ச நினைவு.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அடடா.... அப்படியா சொல்றீங்க!!! பதிவில் கோவில் நேரடியா இல்லைன்னாலும் படங்களில் வந்துருச்சே... அதுவும் மும்மதங்களுடையதுமாக!

:-)

கோவில் சமாச்சாரங்கள் சொல்லி போரடிச்சுக்கிட்டு இருக்கேனா ? அட ராமா.....

said...

வாங்க ஜிரா.

என்னன்னு சொல்றது...போங்க..... எப்படியாவது நாடு உருப்பட்டாச் சரின்ற நிலைமை வந்துருக்கு பாருங்க.....

நல்லவேளை ...மோடியின் தாய்மொழி ஹிந்தி இல்லை......

மூணாறு போக ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க.....

said...

// நல்லவேளை ...மோடியின் தாய்மொழி ஹிந்தி இல்லை...... //

மோடி என்றில்லை. யாராக இருந்தாலும் இந்திதான் முன்னிறுத்தப்படும். ஏனென்றால் அங்கே அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் அப்படிப்பட்ட கூட்டம். அரசின் கொள்கைமுடிவுகளைத் தவிர இவர்கள் முன்னிறுத்துவதுதான் இந்தியா. என்று அந்தப் பதவிகளில் எல்லாம் தென்னிந்தியர்களும் எல்லா சாதீய நிலையில் இருப்பவர்களும் சரிசமமாக எண்ணிக்கையில் அமர்கிறார்களோ, அன்றுதான் இந்த நிலை மாறும்.