Friday, June 30, 2017

மூணாம் தரிசனம்(இந்திய மண்ணில் பயணம் 24)

ஐட்டிநரியில் கூட  இங்கே பத்ரியில் இருந்து  நேரா ருத்ரப்ரயாக் என்றுதான் போட்டுருக்கு.  வெறும் 152 கிமீ தூரம்தான் என்றாலும் மலைப்பாதைப் பயணம் ஆச்சே!  நாலரை மணின்னு  கூகுள் சொன்னால் ..... அது அப்படியே நடக்குமா?  குறைஞ்சது  ஆறுமணி ஆகலாம்.    எப்படி வசதின்னு முகேஷைக் கேட்டதுக்கு பிரச்சனை இல்லைன்னுட்டார்.

காலையில்  சீக்கிரமே எழுந்து  ஆறரைக்கு  ரெடியாகிட்டேன்.  ஜன்னல் திரைச்சீலையைத் திறந்தால்.... மசமசன்னு .... நீலகந்தா  இருக்கார்!
நம்மவரும் தயாரானதும் கீழே போனால் நம்ம முகேஷும்  ரெடி!

 எல்லோருமாக் கோவிலுக்குப்போயிட்டோம்.  மணி ஏழுதான்.  அவ்வளவாக் கூட்டம் இல்லை. சட்னு தரிசனம்  ஆச்சு.   சனிக்கிழமை  கோவில் என்ற  நம்ம வழக்கமும் நிறைவேறுன  திருப்தியுடன் கருவறையையும் பிரகாரத்தையும் வலம் வந்து  அர்ஜுனனிடம் கொஞ்சம் பேசிட்டு, போயிட்டு வரேண்டான்னு  'பைபை ' சொல்லிட்டு அரைமணியில் வெளியே வந்துருந்தோம்.
  மேலே படம் :    நம்ம முகேஷ்

 கட்டாயம் ஜாக்கெட் போட்டுக்கிட்டுத்தான் போகணுமுன்னு நம்மவருக்கு ஒரே பிடிவாதம். அதானே   வேலைமெனக்கெட நியூஸியில் இருந்து கொண்டு போனதுக்கு  ஒரு வேலை  வைக்கவேணாம்?
காலை நேரத்துக் குளிர் இதம்தான்! நியூஸி போல நடுங்கும் குளிர் இப்ப இல்லை. ஆனால்  இந்த மாசக் கடைசியில் பின்னி எடுத்துருமாம்.  இந்தக் குளிரை நம்ம பத்ரி நாராயணன் கூடத் தாங்க மாட்டார்னுதான்  ஆறு மாசத்துக்குக் கோவிலையே மூடி வச்சுடறாங்க.
வாசல் பக்கம் தசாவதாரம் இருப்பதை இப்பதான் பார்த்தேன்!   கருட்ஜியும்  அதே கிழக்கோலத்தில் இருந்தார்.

தீபாவளி முடிஞ்சதும்,  நல்ல நாள் பார்த்து (அநேகமா தீபாவளிக்கு நாலாம் நாள்) உற்சவர் பத்ரி  கிளம்பி கீழே ஜோஷிமட் வந்துருவார்.  மூலவரும் மத்தவங்களும் அங்கேயே கதவை சாத்திக்கிட்டு உள்ளேயே இருக்க,   வெளியே ஒரு ஆர்மிக்கார் காவல் காக்கும் ட்யூட்டியில்!  கதவை அடைக்குமுன் ஒரு நெய் விளக்கு ஏத்தி வச்சுட்டு  வந்துருவாங்களாம். அப்புறம்?
ஆறுமாசத்துக்கு  கோவில் அடைப்புதான்.  அப்படி ஒரு பனிப்பொழிவு காலம். ஊருக்குள்ளே ஆர்மி தவிர வேற ஈ காக்கா கிடையாது.  எல்லாத் தெருவையும் வீடுகளையும் போய் செக் பண்ணி, தப்பித்தவறி அங்கே இருப்பவங்களையும் கீழே ஓட்டி விட்டுருவாங்க. எந்த வியாபாரமும் இல்லை. எல்லா ஹொட்டேல்களும் கூட இங்கே ஆறுமாசம்தான், வியாபாரம்.

இந்த ஊர்லே பள்ளிக்கூடமே  இல்லை.  வியாபாரிகளின் குடும்பங்கள் கூட இங்கே  நிரந்தரமாத் தங்கறது இல்லையாம். குடும்பம், பள்ளிக்கூடம் எல்லாம் கீழே ஜோஷிமத்தில் தான். நேத்து  பை வாங்குன கடையில்  வியாபாரிகளோடு கொஞ்சம் பேசுனதில்  இதெல்லாம் தெரிஞ்சது.

நாட்டின் கடைசி எல்லை மானா என்பதால்  அங்கேயும் யாரும் இருக்கக்கூடாது.  ரோந்து சுத்திக்கிட்டு இருக்கும் ராணுவம்தான் ஆறு மாசத்துக்கு ஊரையே   காப்பாத்திக் காவல் காக்குது!

இது சாமி ஊர். சாமிக்கான ஊர்.   சாமியை வச்சுத்தான் ஊரே!  சாமி இல்லைன்னா ஊரும் இல்லை!  மாதங்களில் நான் மார்கழியா இருக்கேன்னு சொன்னவன், ஊர்களில் நான் பத்ரியாக இருக்கேன்னு  வாய்விட்டுச் சொல்லலையே தவிர,  இது  அவனுக்கான ஊர்  மட்டுமே!  அவந்தான் ஊரே!

பனி காலம் முடிஞ்சு,  பனிக்கட்டிகள் எல்லாம் உருகிக்கரைஞ்சு  போனதும், சாலைகளைச் சரிபார்த்து எல்லாம் ஓக்கேன்னு சொன்னதும்,  ராவல்கள்  நல்லநாள் பார்த்து, பத்ரிநாராயணர் உற்சவரை மீண்டும்  மலையில் இருக்கும் கோவிலுக்குக் கொண்டு வந்து, கோவிலைத் திறப்பாங்க.

உற்சவர் கீழே போறதும், மேலே வர்றதும் எல்லாம் சின்னப் பல்லக்கில்தான்.  ஆட்கள்தான் சுமந்துக்கிட்டுப் போய் வர்றாங்களாம். பழைய கால சம்ப்ரதாயம் எல்லாம்  கொஞ்சம் விட்டுட்டு,  இனி வாகனத்தில் கூட்டிக்கிட்டுப்போய் வந்தால் நல்லதுன்னு எனக்குத் தோணுது!

நம்ம பக்கங்களிலும் பாருங்க.... சாமி திருவீதி உலா போகும்போது  இன்னும் நிறையக் கோவில்களில் ஸ்ரீபாதம் தாங்கிகள்தான் சுமந்துக்கிட்டுப் போறாங்க. சாமி மட்டுமுன்னாக்கூடப் பரவாயில்லை....   கிண் கிண்ணுன்னு இருக்கும்  நாலு பட்டர்களையும் வேற சுமக்கணும்.  சின்னதா ஒரு மோட்டர் வச்சு சாமித் தேரை இழுத்துக்கிட்டுப் போனால் என்ன? சாமி இதுக்கெல்லாமாக் கோச்சுக்கப்போறார்?   நம்ம அடையார் அநந்தபத்மநாபன் கோவிலில் இப்படி இஞ்சின் வச்சு இழுக்கறாங்க.  அந்தக் கோவிலெனக்கு ரொம்பவே பிடிச்சுப்போன காரணங்களில் இதுவும் ஒன்னு!

தீபாவளி முடிஞ்சு கீழே போன உற்சவர்,  நாம் ஜோஷிமத்தில் பார்த்த நரசிம்ஹர் கோவிலில்தான் தங்கி இருப்பார்.  இங்கிருந்து  அவரோடு போகும் ராவல் பண்டிட்கள்தான் தினசரி பூஜையை அங்கே அவருக்குச் செய்றாங்க.  இப்ப அருமையான பெரிய கோவில் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்தோமே...  அது முடிஞ்சதும் இன்னும் கொஞ்சம் தாராளமா இவருக்கு இடம் கிடைக்கும். இப்போ அங்கே நல்ல நெருக்கடி, ஒரே கூட்டம் சாமி மேடையில் :-)
எல்லாம் ரெடி.  ஆள் வந்ததும் பூஜை ஆரம்பிக்கணும் :-)

மே மாசம் ஒரு நல்ல நாள்  பார்த்துப் பண்டிட்கள் சொன்னதும் (எல்லாம் க்ளியர்னு ஆர்மி தகவல் அனுப்புன பின்னேதான்) உற்சவர்  ஜம்முன்னு கிளம்பி  மேலே  கோவிலுக்கு வந்து சேருவார்.  கோவிலைத் திறந்து உள்ளே போனால்....  கருவறையில்  விளக்கு (ஆறுமாசம் முன்னாடி ஏத்தி வச்சுட்டுப் போனது) இன்னும் எரிஞ்சுக்கிட்டு இருக்குமாம்!!!

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத கோவிலுக்குள், தேவர்கள் வந்து இந்த ஆறுமாசமும் தங்கி  பெருமாளைப் பூஜிப்பதாக ஒரு ஐதீகம்.

கீழே ஜோஷிமட்டில் இருக்கும் உற்சவர் , இந்த வருசம் (2017) மே மாசம் 6 ஆம் தேதி இங்கே வந்துட்டார். கோவில் திறந்தாச்சு.

இந்தக் கோவில் மட்டுமில்லை.... சார்தாம்னு சொல்லும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கூட ஆறுமாசம் அடைப்புதான். பயணம் போக விரும்பும் அன்பர்கள்,  கோவில் திறந்துருக்கும் சமயம் எதுன்னு தீர விசாரிச்சுக்கிட்டுத் திட்டம் தீட்டுங்க.

நம்மூர் கோவில்கள் சிலதில், பொம்னாட்டி, பொடவை(தான்) கட்டிண்டு வரணுமுன்னு இல்லாத நக்ரா செய்யும்போது, இந்தக் கோவிலில்  புடவை வேணாம். பேசாம ஸல்வார் கமீஸ் போட்டுக்கிட்டு வான்னு சொல்லுது,   கோவில் மேனேஜ்மென்ட்! Women are advised to avoid sarees and opt for salwar kameez or trousers.  பேன்ட்ஸ் கூட ஓக்கேதானாம்!

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊரைவிட்டுக் கிளம்பப்போறோமேன்னு நினைச்சதில் பத்ரி மேலே ஒரே  அன்பா வந்துச்சு. அதிலும் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிய மனசே வரலை. இன்னொருக்காச் சட்னு உள்ளே ஓடிப்போய் அவனைப் பார்த்துட்டு வெளியில் வந்து  'சம்ப்ரதாயமான ஃபோட்டோ ஷூட்' முடிச்சுக்கிட்டுப் பாலம் வழியா நடந்து போறோம்.



சின்னக்குட்டிங்க சிலர் ஒரு நாக்குட்டியை வச்சுக்கிட்டு ஓரமா வரிசையில் உக்கார்ந்துருந்தாங்க.  சனத்தைப் பார்த்ததும் சட்னு கை நீளுது.
 நாக்குட்டிக்குப் பாலு.....   வா. கடையில் வாங்கிக்கொடுக்கறேன்னதுக்கு  ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு சிரிக்குதுங்க.  பத்துரூபாயை எடுத்து நீட்டுனார் நம்மவர்.



அந்தாண்டை தப்த் குண்டில் புகை பறக்குது.  சுடுதண்ணி  அலக்நந்தாவில் வழியும் போது  நீராவி மண்டுது!  சனம் குளிச்சுக்கிட்டு  இருக்கு. நல்ல நடமாட்டம்.

பாலம் கடந்ததும், 'போயிட்டு வரேன்டா  பத்ரி' ன்னு  கோவிலைப் பார்த்து  கை கூப்பினேன்!
இருவத்திரெண்டரை மணி நேரம் தங்குன ஊரில் மூணு முறை கோவிலுக்குப் போக வாய்ச்சது  ரொம்பவே மகிழ்ச்சி!  இன்னும் ஒரு நாள் தங்கி இருந்து மற்ற இடங்களையும் பார்த்திருக்கலாம்தான். அதுக்கு 'அவன் அனுமதி  இல்லைன்னு நினைச்சுக்கிட்டேன்.

இங்கே  ஒரு ஆறு  விக்கிரஹம் (!!!) வாங்குனதைச் சொன்னேனோ? எல்லாம் குட்டி.  ஒன்னரை , ரெண்டு செமீ சைஸ்தான்:-)  நேபாளில் வாங்குனமே அதைப்போலவே....



அந்த அர்ஜுனன்.....   இங்கே :-)
இந்த அர்ஜுனனைத் தேடிக்கிட்டே இருந்தேன். தேடல் தவம் பலிச்சுருச்சு. நாலு வருஷங்களுக்குப்பின் படம் ஒன்னு கிடைச்சது.  அதே அர்ஜுன் இல்லைதான். ஆனால் ஏறக்கொறையன்னு  சொல்லிக்கலாம்.  அந்த அர்ஜுன் இன்னும் அழகு!  உயரமும் கூடுதல்.   வலப்பாதம் இடது முழங்காலோடு ஒட்டியே இருந்தது. அதே வேணுமுன்னு இன்னும் தவம் செய்யலாமா ?  ஊஹூம்... நடக்காத வேலை. அதைப்போலன்னு சொல்லி இங்கே அந்தப் படத்தைச் சேர்த்துட்டேன்.  பார்த்துக்குங்க.  இதை ஒரு மாதிரிப் படமா வச்சுக்கிட்டு, நேரில் பார்க்கும்போது  ஆறு வித்தியாசம் சொல்லணும், ஆமா :-)


தொடரும்........:-)





14 comments:

said...

மனது முழுக்க பத்ரிதான் நிறைந்து இருக்கிறது. எப்போதுமே கிளம்பும்போது இதைப் பார்க்க விட்டுட்டோமே, இதை இன்னொருமுறை தரிசித்திருக்கலாம் என்ற எண்ணம் வருவதைக் கவனித்திருப்பீர்களே!

said...

அருமை நன்றி

said...

சின்னக்குழப்பம்.

மூன்று
மூன்றாவது

மூணாவது - 3 சுழி ணா வா ? 2 சுழி னாவா ?

said...

மீண்டும் பத்ரி கண்ட மகிழ்ச்சி.
தரிசனம் மிக அருமை.
படங்கள் அழகு.

said...

குட்டி பைரவர் கவர்கிறார். பத்ரி கோவில் கலர்புல்லா இருக்கு.

said...

// விஸ்வநாத் said...

சின்னக்குழப்பம்.

மூன்று
மூன்றாவது

மூணாவது - 3 சுழி ணா வா ? 2 சுழி னாவா ? //

விஸ்வநாத், மூனு என்பதும் சரியே. நின்றுங்குறத நின்னுன்னுதான எழுதுறோம். நிண்ணுன்னா எழுதுறோம். ஒன்று - ஒன்னு. மூன்று - மூனு. கன்று - கன்னு எல்லாம் பேச்சு வழக்கில் சரியே. இவற்றை தவறென்று சொல்ல எந்த இலக்கணமும் கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் மூணு என்று எழுதும் போதோ சொல்லும் போதோ பலுக்கல் மாறுபடும். அதனால் நான் எப்பொழுதும் பேச்சு வழக்கில் இரண்டு சுழிகளையே பயன்படுத்துவேன்.

said...

மனம்போல் தரிசனம் அமைந்த்ததற்கு வாழ்த்துகள்

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சில ஊர்களில்தான் இப்படி. சில இடங்களில் எப்படா கிளம்புவோமுன்னு இருக்கும்!

said...

வாங்க விஸ்வநாத் ,

மூணுன்னு அழுத்திச் சொல்றதுதான் வழக்கமுன்னு நினைக்கிறேன்.

மூனு... மூனு.... சொல்லிப் பார்த்தால் நல்லா இல்லையே :-)

said...

வாங்க கோமதி அரசு.

நீங்கெல்லாம் அப்பவே போய் வந்த இடம், நமக்கு இப்பதான் கிடைச்சது :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆமாம்...வேறெங்கேயும் இவ்ளோ கலர்ஃபுல்லா ஒரு நுழைவு வாயில் பார்த்ததே இல்லை!

குட்டி சூப்பர்! நல்லா வளர்த்தா அருமையான வகையா இருக்கும்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

விளக்கத்துக்கு நன்றி.

said...

அழகான கோவில். சற்றேரக்குறைய ஒரு நாள் தங்கி மூன்று முறை பத்ரிநாதனின் தரிசனம்..... நல்ல விஷயம்.

ஆறு மாதம் மட்டுமே பார்க்க முடியும் என்பதும் ஒரு விதத்தில் நல்லது தான். இயற்கை அன்னையின் பராமரிப்பில் கோவில்.....

தொடர்கிறேன்.