Friday, June 23, 2017

வாங்க நம்ம பத்ரியை தரிசிக்கலாம்.... (இந்திய மண்ணில் பயணம் 21)

வாசலைக் கடந்து ப்ரகாரத்துக்குள் நுழையறோம்.  ஒரே ஒரு ப்ரகாரம்தான்.  நேரா   கருவறை.  அவ்ளோ பெரிய கோவில்னு சொல்ல முடியாது. இடப்பக்கச் சுவரில் ப்ரம்மா, ஆதிசேஷனோடு விஷ்ணு, சிவன், கண்பதி, ஆஞ்சின்னு வரிசையா சின்ன புடைப்புச் சிற்பங்கள்.  தனியா ஒரு புள்ளையார் சந்நிதி.   வலதுபக்கம் திரும்பினால் தனியா,  தாயார் சந்நிதி.  மஹாலக்ஷ்மி!  அரவிந்தவல்லித் தாயார்!
புள்ளையாருக்கும் தாயாருக்கும் இடையில் தேவஸ்தான ஆபீஸ் & டிக்கெட் கவுண்ட்டர். பூஜைக்கான கட்டணங்களுக்குப் பட்டியல் அச்சடிச்சு வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு எடுத்துக்கிட்டேன்.  கண்ணை ஓட்டுனா.... இருபத்தேழாயிரத்தில்  இருந்து  முப்பத்தியொரு ரூ வரையில் பலதரப்பட்டவை.  இருக்கட்டும், நிதானமாப் பார்க்கலாம்....   இப்படி எடுத்தவுடனே ஷாக் கொடுக்காம சின்னதுலே ஆரம்பிச்சு இருக்கப்டாதோ?
முதல்லே மூலவரை தரிசனம் பண்ணிக்கலாமேன்னு  கருவறையை வலம் வந்து வேகமாப் போனோம்.  மூலவர் சேவிக்கும் வரிசையில் நாலைஞ்சு பேர்தான் இருந்தாங்க. பிரகார தேவதைகளை  அப்புறமா தரிசனம் செஞ்சாலாச்சு.

இங்கே ஸ்பெஷல் தரிசனம் என்ற ஒன்னு இல்லை.  மூலவர் தரிசனம் எல்லோருக்கும் ஒன்னேதான்.  பக்கவாட்டு வாசல் வழியா உள்ளே போகணும்.  கருவறைக்குப் போக மூணு வாசல் இருக்கு.  கோவிலின் ப்ரதான வாசலை நோக்கி ஒரு கதவு. சில சமயம் தவிர   இதை எப்பவும் மூடியே வச்சுருக்காங்க. மூலவருக்கு வலப்பக்கம், இடப்பக்கம்னு  ரெண்டு பக்கத்தில் இரண்டு வாசல்கள்.  இப்ப நாம் நுழைஞ்சது  மூலவருக்கு இடப்பக்கம் இருக்கும் வாசல்.
உள்ளே மூணு பகுதிகளா  இருக்கு. கருவறை, தரிசன மண்டபம், சபா மண்டபம். முன்னாடி இருக்கும் தரிசன மண்டபத்துலே கருவறையை ஒட்டி சின்னதா ஒரு பெஞ்சு போல இருக்கையில் ஒரு  காவி உடுத்திய  பண்டிட் உக்கார்ந்துருக்கார். கையில் ஒரு மைக் வேற!  அவருக்கு முன் இருக்கும் இடத்தில்  கருவறையை நோக்கி ஒரு கும்பலா மக்கள் உக்கார்ந்துருந்தாங்க.
நாம்  சபா மண்டபத்தில் இருந்து பெருமாளை ஸேவிக்கிறோம். நமக்கும் உக்கார்ந்துருக்கும் மக்களுக்குமிடையில் ஒரு கம்பித் தடுப்பு இடுப்புயரத்தில். வெள்ளி நிலைவாசல் கருவறைக்கு.
அதுலே பாதிக்குமேல் இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கும்  கண்ணாடிப்பொட்டி உண்டியல். நல்லவேளை மூலவரும் அவரோடு மற்ற கடவுளர்களும் சின்ன மேடைபோல் கொஞ்சம் உயரத்தில் இருப்பதால் நமக்கு மறைக்கலை. வெள்ளி வாசலுக்கு ரெண்டு பக்கமும் ஜயவிஜயர்கள்.  கொஞ்சம் நம்ம ஊர் ஸ்டைலில்.

 மூலவர் பத்ரிநாத், கருப்பு  பளிங்குக் கல் சிலை . இல்லை சாளக்ராமோ? நான்கு கைகளுடன் பத்மாசனத்தில் இருக்காராம். முகத்தைத் தவிர  ஒன்னும்தெரியலை. ஜிலுஜிலுன்னு போர்த்திவிட்டுருக்காங்க.  பூக்களால் ஒரு  அலங்காரம்!   கூடவே நகைநட்டுகள் வேற ! வெள்ளி  பீடத்தில்  உக்கார்ந்துருக்கார். தலைக்கு மேல் தங்கக்குடை!  தலையில் தங்கக்ரீடம்.  தலைக்கு ரெண்டு பக்கமும்  மயிலிறகு விசிறி. நம்ம குருவாயூர் க்ருஷ்ணருக்கு இருக்குமே  அப்படி!  நெத்தியில் திருமண்  தகதகன்னு  ஜொலிக்குது. வைரம்தான்! சந்நிதி மேடையில் குபேரன் (முகம் மட்டும் பெருசாத் தெரியுது ) பெரிய திருவடி கருட்ஜி கை கூப்பி நிக்கறார்.  நாரதரும் உத்தவரும். இந்தப் பக்கம் நரநாராயணர்கள்னு  ரெண்டு சிலைகள், உக்கார்ந்து இருக்காங்க.
யாரும் ஜருகு சொல்லலைன்னாலும்  சாமியைக் கைகூப்பி வணங்கிட்டு  சில நிமிசம் நின்னு பார்த்துட்டு  நகர்ந்து போறோம்.   நமக்குப் பின்னால்  இருக்கும் கதவு  அரைக்கதவா கீழ் பாதி  மூடி இருக்கு. அங்கே நின்னும் பக்தர்கள் ஸேவிக்கறாங்க.  நாம் மறைச்சுக்கிட்டு இருக்கோமேன்னு  நாமாய்த்தான் நகர்ந்து போறோம்.

கம்பித்தடுப்பையொட்டி ஒரு  பெஞ்சு, அதுலே பிரஸாதம். எல்லாம் சக்கரை மிட்டாய்தான்.  பக்தர்கள் கொண்டு வரும் தாம்பாளத்துலே இருந்து  கொஞ்சம் எடுத்து ஒரு   சின்ன அண்டா/அடுக்கில் போட்டுக்கிட்டு  மீதிப் பிரஸாதத்தை தட்டோடு பக்தருக்கே கொடுத்துடறாங்க. அப்புறம் அண்டாவில் இருப்பதை வாரி வாரி  வரிசையில் நகரும் நமக்கெல்லாம் தர்றாங்க.
பெருமாள் 'தானே ' ஸ்வயம்புவா தோன்றிய  க்ஷேத்ரங்கள் எட்டுன்னு சொல்வாங்க.  ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், பத்ரிநாத், நாங்குநேரி,  முக்திநாத்,  நைமிசாரண்யம், புஷ்கர்னு....   இது எட்டு இல்லை...பத்துன்னு  சொல்றதும் உண்டு.  மற்ற ரெண்டு,  காஞ்சிபுரமும் மேல்கோட்டையும்.
இந்தக்  கோவிலில் மீண்டும் பத்ரிநாதரைக் கொண்டு வந்து வச்சவர் யாருன்னா...   ஸ்டாப்...ஸ்டாப்.... அதென்ன மீண்டும்? அவர்தான் ஸ்வயம்புவாச்சே!

ஆமாம். தானே தோன்றியவர்தான்.  ஆனால் புத்தமதத்தினர்   இந்தக் கோவிலைப் பிடிச்சுக்கிட்டு, பத்ரியைத் தூக்கி  கடாசிட்டாங்க.   இவர் போய் விழுந்தது, அந்த நாரத் குண்ட் என்னும்  நாரதர் குளத்துலே!  இங்கே இருக்கற குளிருக்கு, வெந்நீர் ஊத்துலே நிம்மதியா  இருந்துருப்பார்.
அப்போ ஒரு சமயம் நம்ம ஆதிசங்கரர், காலடியில் இருந்து  காலடியாவே நடந்து பாரதத்தை கிழக்கும் மேற்கும், வடக்கும்  தெற்குமா  அளந்துக்கிட்டு இருக்கார்.  சின்ன வயசு.  மனச்சோர்வு இல்லை.  இங்கே வந்து சேர்ந்து, வெந்நீர் குளத்துலே குளிக்கும்போது  சிலை கிடைச்சுருக்கு!
அதை வெளியில் எடுத்தவர், மீண்டும்  கோவிலில் பிரதிஷ்டை செஞ்சுருக்கார். அப்போ இங்கே ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த மன்னர்  கோவில் கட்ட உதவி இருக்கார்.

நல்ல தரிசனம்தான். தாயார் சந்நிதிக்கு எதிரில் இருக்கும் வாசல் வழியே வெளியே வந்ததும்,  தாயாருக்கு இன்னொரு கும்பிடு போட்டுட்டுக் கோவிலை வலம் வர்றோம்.  நேரே இடது பக்க மூலையில்  ஆதிசங்கரருக்கு ஒரு சந்நிதி.  நேரெதிரா   வெராந்தா மாதிரி இருக்குமிடத்தில் பக்தர்கள் உக்கார்ந்துக்கலாம்.  வலப்பக்க ஓரத்தில் கம்பியழி போட்ட வெராந்தாப் பகுதி. உள்ளே  எதோ  குருவோடு யாத்திரை வந்த குழு. அடைச்சு உக்கார்ந்து பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க.

கருவறையை ஒட்டியே சுவத்தில் காமதேனு , தர்மஷிலான்னு ஒரு  பெரிய கல் உருவம் இருக்கு. அப்படியே கும்பிட்டுக்கிட்டுப் போறோம். மூலையில் வலம் திரும்பியதும்  வரிசையா நாலைஞ்சு சந்நிதிகள்.  கண்டகர்ணா சந்நிதி. இவர் க்ஷேத்ரபாலராம்.  அடுத்து செந்தூரமினுக்கில் நம்ம ஆஞ்சி!  கொஞ்சம் பெரிய உருவம்தான்.

அடுத்த சந்நிதியைப் பார்த்து நான் அங்கேயே நின்னுட்டேன். நரநாராயணர்ன்னு!  நாராயணன் தவக் கோலத்தில்  ஒரு பீடத்தில் பத்மாசனம் போட்டு உக்கார்ந்துருக்கார்.  அவருக்குப் பக்கத்தில்  அர்ஜுன்.  நம்ம அர்ஜுன்தாங்க. வலது காலை மடக்கி அந்தப் பாதம் இடது காலின் முழங்காலில் முட்டுக்கொடுத்துருக்க, இடது பாதம் தரையில் நல்லா ஊன்றிக்கிட்டு நிக்கறார்.  இடது கையில் காண்டீபம்.  என்ன ஒரு அழகான முகங்கறீங்க?  இளவயதுக்காரன் இல்லை. குறைஞ்சது அம்பது வயசுக்காரனா இருக்கணும்.  முகத்துலே முதிர்ச்சி தெரியுது!   கம்பீரமான பெரிய மீசை வேற!  மெய் மறந்து நின்னேன்!   வெள்ளி விக்ரஹங்கள்!  நல்ல பெரிய சைஸ்தான். ரெண்டரை அடி உயரம்  இருக்கலாம். கிண்னுன்னு  ஸாலிடா  இருக்கு. பெருமாளுக்கு முன்னால்  இவுங்க உயரத்துக்கும் பருமனுக்கும் சம்பந்தமே இல்லாம துக்கினியூண்டு மரப்பாச்சி மாதிரி   ரெண்டு சிலைகள். யாருன்னே தெரியலை.

பெருமாளுக்கும், அர்ஜுனனுக்கும்  ஜிலுஜிலுன்னு    நார்த் இண்டியன் பாவாடை (அதான் விக்ரகங்களுக்கு விஜயா ஸ்டோரில் விக்குதே, அதைப்போல) கட்டி விட்டுருக்காங்க. நாந்தான் கால் எப்படி வச்சுருக்கார்னு  பெருமாள் பாவாடையை விலக்கிப் பார்த்தேன். உண்மையில் பத்தும் பத்தாமையுமா முதுகாண்டை  ஓப்பனாக் கிடந்துச்சே.  அப்பத்தான்  தெரிஞ்சது....   உக்கார்ந்துருக்கார், ஆனால் உயரமான ஒரு பீடத்துக்கு மேலேன்னு!  அப்படியே அர்ஜுனன் உடுப்பை விலக்கினால் கால்  'எல்'  மாதிரி  அடுத்தகாலைத் தொட்டுக்கிட்டு இருக்கு!

ச்சும்மாச் சொல்லக்கூடாது,   இதை  வடிவமைச்சு வார்த்தவர்  உண்மையில் கலைஞர்! ரசனை மிக்கவரா இருக்கணும்.
இந்த அர்ஜுனனைத் தேடிக்கிட்டே இருந்தேன். தேடல் தவம் பலிச்சுருச்சு. நாலு வருஷங்களுக்குப்பின் படம் ஒன்னு கிடைச்சது.  அதே அர்ஜுன் இல்லைதான். ஆனால் ஏறக்கொறையன்னு  சொல்லிக்கலாம்.  அந்த அர்ஜுன் இன்னும் அழகு!  உயரமும் கூடுதல்.   வலப்பாதம் இடது முழங்காலோடு ஒட்டியே இருந்தது. அதே வேணுமுன்னு இன்னும் தவம் செய்யலாமா ?  ஊஹூம்... நடக்காத வேலை. அதைப்போலன்னு சொல்லி இங்கே அந்தப் படத்தைச் சேர்த்துட்டேன்.  பார்த்துக்குங்க.  இதை ஒரு மாதிரிப் படமா வச்சுக்கிட்டு, நேரில் பார்க்கும்போது  ஆறு வித்தியாசம் சொல்லணும், ஆமா :-)

போலாமா, போலாமான்னு நம்மவர் கேட்டுக்கிட்டே இருக்கார். எனக்குத்தான் போக மனசே இல்லையே.....

அடுத்து ஒரு  திறந்த மண்டபம் போல ஒன்னு. அதுலே யாகம் செய்யும் குண்டம் ஒன்னு.  யாரோ சிலர் தீ வளர்த்துக்கிட்டு இருக்காங்க. அங்கேயும் ஒரு   பண்டிட் இருக்கார்.

கோவில் வாசலுக்குப் போகும்போது இடதுபக்கச் சுவரில் சூரியன்! அதென்ன கணக்கோ எட்டுக்குதிரை பூட்டிய சாரட்டில்!

மணி பார்த்தால் பதினொன்னேகால். சரியா ஒரு மணி நேரம் கோவிலுக்குள்ளே இருந்துருக்கோம். அதுலே அரை மணி அர்ஜுன் பக்கத்துலே :-)

சிம்மவாசல் படிக்கட்டில்  நம்மவர்  உக்கார்ந்தார். விடலாமோ? க்ளிக் க்ளிக். :-)
வெளியே நல்ல கூட்டம்.  எல்லா மாநில மக்களுமாய் கலந்து கட்டி. அப்பதான் ஒரு பெரியவர் தன்னுடைய செல்லை நீட்டி படம் எடுத்துத் தரச்சொன்னார்.  சென்னைவாசி. நம்ம சிந்தாதிரிப்பேட்டை விஸ்வநாதன்!
இன்னொரு பத்துப்பேர் குழு அவுங்க செல்லை நீட்டுனாங்க. சமூகசேவைதான்!  நாமும் அவுங்க சேவையைக் கேட்டு வாங்கிக்கிட்டோம்.

 சரியா  செல்ஃபி  எடுக்க வர்றதில்லைபா......   செல்ஃபி ஸ்டிக் ஒன்னு   வாங்கி வச்சு  இதுவரை அதைப் பயன்படுத்தவே இல்லை.  ஏன் கொண்டுவரலைன்னு சண்டை    போடலாமான்னு நினைச்சு, பிறகு மனசை மாத்திக்கிட்டேன்.  பாவம்  பெருமாள்.... இங்கேயுமான்னு நினைச்சுக்கப் போறார்!
கருவறையில் பார்த்த கடவுளர்களை  திரும்ப மனக்கண்ணால் தரிசனம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்பதான் சட்னு ஒரு தோணல். உத்தவர் ஏன் இங்கே இருக்கார்?  அவரும் சாமி ஆயிட்டாரா?   விசாரிக்கணும்.  அப்புறம் விவரம் கிடைச்சது.

க்ருஷ்ணாவதாரம் முடிஞ்சு பலராமன், வெள்ளைப் பாம்புருவில் பிலத்துக்குள் போயிட்டார்.  க்ருஷ்ணனும், ஜாராவின் அம்பு காலில் துளைச்சதால்  அவதாரத்தை முடிச்சுட்டுக்கிளம்ப ரெடியாகிட்டான்.  (குஜராத் பயணத்தில்  வெராவல் கோவிலில்  பார்த்துருக்கோம். ) அப்பதான் க்ருஷ்ணனுக்கு ரொம்பவே ப்ரியமான உத்தவர்  (இவர்தான் கோகுலத்தில் இருந்த க்ருஷ்ணனை,  மதுரா மன்னன் கம்சனிடம் கூட்டிவரப் போனவர்.  அவனும் பாருங்க.... தன்னுடைய  சாவுக்காகவே இவனைக் கூட்டிவான்னு அவரை அனுப்பி இருக்கான்.  இப்படி சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிட்டானே) தானும் கூடவே வரேன்னு  சொல்றார்.  'உம் ஆயுசு முடியலை. அதுவரை நீர் ஜீவிக்கத்தான் வேணுமு'ன்னு  க்ருஷ் சொன்னதைக் கேக்காமல்   கூட வந்தே தீருவேன்னு அடம் பிடிக்கறார்.  அப்பதான் க்ருஷ் சொல்றான்....  ' நீர் பத்ரியில் போய்  எனக்காகக் காத்திரும். அங்கே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்'  அதனால்தான்  இவர் இவ்ளோதூரம் வந்து  இங்கேயே அவனுக்காகக் காத்திருந்தார்.  அதுக்காகத்தான் அவர் சிலையும் இந்தக் கூட்டத்தில் இருக்கு!

நம்ம புராணங்களில் பாருங்க....   எப்படியெப்படியோ பல சம்பவங்களும் கதைகளும் ஒன்னுக்குள் ஒன்னாகப் பின்னிப் பிணைஞ்சு கிடக்கு என்றதை யோசிச்சால்..... ஹைய்யோன்னு இருக்கும்.   கதைன்னே வச்சுக்கிட்டாலும்....  எப்படி இப்படி? லாஜிக்காலேயே  அடிச்சுட்டாங்க   அந்த 'புனைவாசிரியர்கள்' இல்லே? 

கோவில் பனிரெண்டரைக்கு  மூடிருவாங்களாம்.  கருவறை இருக்கும் கட்டடம் மட்டும்தான். பிரகாரத்துக்குப் போய்வரலாம்.  பிரச்சனையே இல்லை. அதான் சனம் கூட்டங்கூட்டமா போறதும் வாரதுமாத்தானே  இருக்காங்க.


வேடிக்கை பார்த்துக்கிட்டே மெள்ள படிகள் இறங்கிப் பாலம் வழியாவே  நடந்து  கடைவீதிச் சந்தும் தாண்டி கார்பார்க் வரை நடந்தோம்.  ரோட்ஸைட் ஸலூன் இருக்கு!

அங்கே இன்னொரு குருஜி, தன்னோடு வந்த பக்தர்களுக்கு எதோ சாமி கதை சொல்லிக்கிட்டு நிக்கறார். இப்பெல்லாம் குருஜிக்கள் இப்படி எக்ஸ்கர்ஷன் கூட்டிப்போவது  அதிகமாகி வருது, இல்லையோ?
கார்பார்க்கில் இருந்து  பளிச்ன்னு தெரியுது நீல்கந்தா சிகரம்!  பனி மூடி, வெள்ளை வெளேர்னு அழகு!
நம்ம வண்டியைக் காணோமேன்னு  சுத்திக்கிட்டு இருக்கோம், முகேஷ் வேறெங்கிருந்தோ ஓடி வர்றார்.  பக்கத்து சந்துலே பார்க் பண்ணிட்டாராம். காரணம்?  இலவச இடம்:-)
பாதையில் அங்கங்கே  சேர் போட்டு உக்காந்து  மக்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கு 'புலீஸ்'.  யாரையும் உபத்திரம் செய்யலை.  நாங்க அறைக்கு வந்துட்டோம்.  உச்சி நேரத்துக்கு சுத்த வேணாமேன்னுதான்.  கொஞ்சம் ஓய்வுக்குப்பின் பகல் சாப்பாட்டுக்குப் போனால் ஆச்சு.

பொதுவா பத்ரியில் இணையத்தொடர்பு  அநேகமா இல்லைன்னு சொல்லலாம். ஹொட்டேலில் நோ வைஃபை.  ஒருவிதத்தில் அப்பாடான்னு நிம்மதியா இருந்ததும் உண்மை!

கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் சாப்பிடப்போகலாமேன்னு சொல்லிக்கிட்டு இருந்த நம்மவர் ஒரு தூக்கம் போட்டார். எனக்குப் பொழுது போக்க ரெண்டு பொம்மைகள் மட்டும்தான்.  கெமெராக்கள்.  ஒரே ஸீனை  மாத்தி மாத்தி அந்த ரெண்டு கெமெராவில் க்ளிக்கிட்டு இருந்தேன்.
ஊரைச் சுத்தியும் மலைகளே மலைகள். கோவில்கூட நரன் நாராயணன் என்ற மலைக்குக் கீழேதான் இருக்கு!  இங்கேதான்   மஹாவிஷ்ணு தவம் செஞ்சாராம்.  'ஐயோ..   புருஷனுக்கு  வெயில் ஆகாதே'ன்னு  அந்த மஹாலக்ஷ்மியே  இங்கே  மரமா நின்னு  நிழல் கொடுத்தாளாம்.  அதுவும் என்ன மரம்? நல்ல பெரிய பெரிய இலைகள் குடைபிடிக்கும் மரமா இல்லாம  வதரி மரம். வடக்கீஸ்களுக்கு  வ வராதுன்னு  ஏற்கெனவே சொல்லி இருக்கேனே ...  ஞாபகம் இருக்கோ?   அதனால் இந்த வதரி, இங்கே  பதரி  ஆகிப்போச்சு.  வதரிகாஷ்ரம். பதரிகாஷ்ரம்.   மெள்ள மெள்ள பதரி,  பத்ரியும் ஆச்சு.

வதரிப் பழம் அநேகமா எல்லோருமே தின்னுருப்போம்.  இல்லைங்கறீங்களா?  ஊஹூம்ம்....  தின்னது உண்மை. வேற ஒன்னுமில்லை. இலந்தப் பழம்தான் இது. இந்த இலந்தைப் பழத்துக்கும், சாமிக்கும் எதோ சம்பந்தம் இருக்குதான் போல.  பொற்கோவில் பயணத்துலே  அந்த அம்ரித் ஸரோவர் கரையிலே கூட இலந்தை மரங்கள்தான் இருக்கு.  மூணும்  ரொம்ப வயசான மரங்கள். 600 வயசுன்னு சொல்றாங்க. அப்போ  தங்கக்கோவிலுக்கு நம்ம  கூட வராதவங்க, இப்பப்போய் எட்டிப் பாருங்க நேரம் இருந்தால்..



தொடரும்.........  :-)

PINகுறிப்பு:   கருவறைப்   படங்கள் அனைத்தும் சுட்டவைகளே.....    ஆண்டவருக்கு அருளியவர்களுக்கு நன்றி.
படங்களைத் தேடுனபோது....  இது ஜெயின் கோவிலாக இருக்கணுமுன்னு  ஒரு  இடத்தில் இருக்கு.  ..... உண்மையா இருக்குமோ?  ஙே....

15 comments:

said...

அருமையான விளக்கங்களுடன்
அற்புதமான படங்களுடன் தரிசித்து
ஆனந்தம் கொண்டோம்
நல்வாழ்த்துக்களுடன்...

said...

நிறைய விவரங்களுடன், அழகிய படங்களுடன் கொடுத்ததற்கு நன்றி. விவரங்கள் எனக்கு எங்கே உபயோகப்படப் போகிறது? நான் கிணற்றுத்தவளை. படங்கள் பார்த்து ரசித்துக் கொண்டேன்.

said...

அருமை நன்றி.

said...

வாங்க ரமணி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

நானும் பல இடங்களில் இப்படித்தான். ஆனால் ரொம்ப கௌரவமாச் சொல்லிக்குவேன் 'ஆர்ம் சேர் ட்ராவலர்'னு :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

said...

மனசுல இருந்த பதிரிநாதரை நேரில் பாத்துட்டீங்க. அந்தப் பரவசமே உங்களுக்குப் பெரும் பரவசமாயிருக்கும். வாழ்க. வாழ்க.

பதரிங்குறது இலந்தையா. இன்னைக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன். இலந்தைநாதன்னு பேர் வைக்க யோசிப்போம். ஆனா பதிரிநாதன்/பத்ரிநாதன்னு பேர் வைக்க யோசிக்க மாட்டோம். பிரித்வின்னு பேர். பொருள் பாத்தா மண். ஒன்னும் சொல்றதுக்கில்ல.


அந்த நரநாராயணர் போட்டோ இருந்தா போடுங்க டீச்சர். நீங்க சொன்னப்புறம் பாக்கனும்னு தோணுது.

ரிஷிமூலம் நதிமூலம் மாதிரி கோயில்மூலமும் பாத்தா பல பிரச்சனைகள் இருக்கும். கண்டுக்காம போக வேண்டியதுதான்.

அப்புறம்... முப்பத்தேழாயிரத்துக்கு என்ன பூசை செய்வாங்கன்னு யோசிச்சுக்கிட்டேயிருக்கேன்.

said...

அழகான கோயில். நல்ல தரிசனம். அதுவும் நிதானமாக. நன்றி.

said...

வாங்க ஜிரா.

அதான் வாசலோடு கேமெராவுக்குத் தடை போட்டாச்சே.... :-(

ஒரு சான்ஸ், ஜஸ்ட் ஒரே ஒரு க்ளிக் மட்டும் அவர்களை எடுக்க வுட்ருக்கக்கூடாதா..... மனசுநிறைய ஏக்கம்தான். ஆனால் இது ஒன்னும் பழங்காலத்து விக்ரஹம் இல்லை. மிஞ்சிப்போனா ஒரு 100 வருசம்தான் இருக்கும். வெள்ளி. அட்டகாசமா இருக்கு!

இந்த அர்ஜுனனுக்காகவே இன்னொருக்கா போகலாமான்னு ஆசைதான்....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

அருமை

said...

அருமையான விளக்கம். உங்கள் மூலம் நானும் பத்ரி நாதரை தருசித்த பாக்கியம் கிடைத்தது!

said...

அன்னைக்கே வாசிச்சேன். பின்னூட்டம் இட மறந்துவிட்டது.

நீல்கந்தா சிகரம்! - அடடா... ஆட்டோல ஏறி அந்த சிகரத்தின் அருகிலாவது போயிருக்கலாமே.. வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. போட்டோ சூப்பர்.

said...

நிறைய பதிவு போட்டுடீங்க ....நான் ரொம்ப லேட்..ஆன எல்லாத்தையும் படித்து, பார்த்து ரசித்தேன்...

கருடன்,அலக்நந்தா, தப்த் குண்ட் ..எல்லாம் அருமை..

said...

அழகான இடம் தான். கோவிலில் இருந்து வெளியே வர மனம் வருவதில்லை பலருக்கும்....

படங்கள் வழமை போலவே அழகு.

தொடர்கிறேன்.