Monday, June 26, 2017

மானா....... போனா.... சாயா .... (இந்திய மண்ணில் பயணம் 22)

ஒரு மணிக்கு எழுந்த   நம்மவர், கிளம்பும்மா போய் சாப்பிடலாமுன்னு  தயாராகி, முகேஷுக்கும் சேதியை செல்லில் சொன்னதும் கீழே போனோம்.  கடைத்தெருவில் எதாவது கிடைக்குதான்னு பார்க்கணும். ஒரு கிமீ தூரம் தானே?  BRO Camp ஏரியா தாண்டித்தான் போய் வந்துக்கிட்டு இருக்கோம். யாரும் ஒன்னும் சொல்லலை. ஆர்மி ஆட்கள் நடமாட்டம் இருக்கு.


கடைவீதியில் சர்தேஸ்வரி ரெஸ்ட்டாரண்ட், பார்க்கக் கொஞ்சம் பரவாயில்லை. பூரா தேசத்துக்கும் அவுங்கவுங்க ஸ்டைல் சாப்பாடு போடறாங்களாம். சர்தேஷ் !
மக்கே தி ரோடி, ஸர்சோங் தா ஸாக் ன்னு பஞ்சாபில் ஆரம்பிச்சு குஜராதி, மார்வாடி, மஹாராஷ்ட்ரியன், கத்வாலி, இந்தோரி, தமிழனுக்கான தாலி (மீல்) வரை இருக்கு. அதுவும் ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்னு மூணு வேளையும் அவுங்கவுங்க சாப்பாடே போட்டுருவாங்களாம்! சைனீஸைக்கூட விட்டு வைக்கலை :-)



நமக்கு  மஸால்தோசா!  பரவாயில்லை. சட்னி கூட ஓக்கே. ஆனால் சாம்பார்.....
சாப்பிட்டதும் மானாவுக்குப் போறோம்.  வெறும் மூணு கிமீ தூரம்தான்.  இந்திய எல்லைக்குள்ளே இருக்கும் கடைசி கிராமம்.  இங்கே  போகலைன்னா பத்ரிநாத் யாத்திரை பூர்த்தி ஆகாது :-)


கிராமத்தின் எல்லை தாண்டி மலைக்கு மேல் ஏறிப்போய்  அப்புறம் மலைக்கு இடையில் இருக்கும் கணவாயைத் தாண்டுனா அடுத்த நாடு  திபெத் வந்துரும். மொத்தமே  இருவத்திநாலு கிமீதான். அதான் BRO  ஆட்கள் ரோந்து சுத்திக்கிட்டே இருக்காங்க.
ஆர்மி ஏரியா, படம் எடுக்கக்கூடாதுன்னு என்னை மிரட்டிக்கிட்டே வந்தார் நம்மவர் :-(   கிராமத்துக்குள்ளே வந்து இறங்கினா எல்லோரும்  செல்ஃபோனில் படம் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்காங்க.






இந்த மானாவின் மொத்த சனத்தொகையே ஒரு அறுநூறுதான். வீடுகள் ஒரு நூத்திஎம்பதுன்னு சொல்றாங்க. முக்கால்வாசி, தகரக்கூரை போட்ட குடிசைகள்தான்.  ஒரு கடைவீதி. இதுதான் இந்தியாவின் கடைசி கிராமம்னு அலங்கார வளைவு வேற!


கடல்மட்டத்தில் இருந்து பத்தாயிரத்து நூத்திமுப்பத்திமூணரை அடி உயரத்துலே  இருக்கும் ஊர்.   ரெண்டு பக்கமும்  சேர்த்தே   ஒரு நாப்பது கடைகளைத் தாண்டினதும்  நமக்கு வலதுபக்கம் மலைச்சரிவை ஒட்டியே சில கடைகள்.  நமக்கிடது பக்கம் பள்ளத்துலே  ஆறு!  தண்ணி  கொஞ்சூண்டுதான்.....  உண்மையில் இது சரஸ்வதி நதியில் இருந்து வரும் தண்ணீர்தானாம்.  பூமிக்குள் இறங்கிய சரஸ்வதி , அலக்நந்தாவுடன்  கலந்துருது.


முதுகுலே கூடையைக் கட்டிக்கிட்டு இருக்கும் இளைஞர்கள்,  ரொம்ப உற்சாகத்தோடு, வா வான்னு வரவேற்கறாங்க.  நம்மை அந்தக் கூடையில் உக்காரவச்சுச் சுமந்துக்கிட்டு  மலைக்குகைகளுக்குக் கொண்டு போய் காமிப்பாங்களாம். எல்லாம்  ஒரு இருவது வயசு இருந்தாலே அதிகம்.  ஐயோ....  இந்தப்புள்ளைங்க முதுகுலேயான்னு  மனசு நடுங்கிப் போச்சு.
அடி சிறுத்து  மேல்பக்கம் அகலமா இருக்கும் கூடையில்  பாதியை வெட்டுனாப்போல பின்னி இருக்காங்க.  அடி வட்டத்துலே நாம் உக்கார்ந்துக்கிட்டால்  அப்படியே  முதுகிலே சாய்ச்சுக்கிட்டு நடப்பாங்க. நாம்  மல்லாக்கப்போட்ட தவளையைப்போல்  வானம் பார்த்துக்கிட்டு போகணும்.... கொஞ்சம் ஒல்லி உடம்புன்னா ரெண்டு பேருக்கும்  நல்லது.  கூடையில் குண்டுன்னா.... அவ்ளோதான்... பாவம்...பையன்.



இதுலே 'நீயெல்லாம் ஒரு குண்டே இல்லை. எவ்ளோ  குண்டான  பொம்பிளை யெல்லாம் பத்திரமாக் கொண்டு போய் கொண்டாந்துருக்கேன் தெரியுமா?  ஆமாம் தானே... நீ சொல்லு நீ சொல்லு'ன்னு சகாக்களைச் சப்போர்ட்டுக்குக் கூப்புடறாங்க.

என்னால் நடக்கவும் முடியாது.  சுமக்கவிடவும் மனம் இல்லை. மேலும்  உயரம் அதிகம் என்றதால் ஆஸ்த்மா மெல்ல வேலையைக் காமிக்குது. நம்மவர் மட்டும் மேலே போய் பார்த்துட்டு வரேன்னார்.  என் கண்ணைக் கொடுத்து  அனுப்பினேன்:-)
அவர் திரும்பி வரும் வரை, இளவெயில் காய்ஞ்சுக்கிட்டு வேடிக்கைதான்.  படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் மச்சு  போல ஒரு இடத்தில் உக்கார்ந்துருந்தேன்.   போறவங்க வாரவங்க எல்லாம் என்னைக் கடந்துதான்......


பால்கி பையர்கள் அங்கேயே சுத்திக்கிட்டு இருக்காங்க.  ரொம்ப ஒன்னும் கிடைக்கறது இல்லையாம்.  மிஞ்சி மிஞ்சிப்போனால் ஆறுமாசம் சம்பாரிக்கறதுதான்.  அதுவும் குளிர் காலம் முடிஞ்சாலும் மேலும் ஒரு மாசம்வரை பயணிகள் வரத்து கம்மிதானாம்.
"அப்ப குளிர்காலத்துலே என்ன செய்வீங்க?  "

"இங்கே யாரும் தங்கமாட்டோம். எல்லாத்தையும் அப்படியப்படியே விட்டுட்டு,  கீழே போயிருவோம்.  நாங்க வளர்க்கற கோழி, ஆடுகளையும் கூட்டிக்கிட்டுதான் போவோம்.  தப்பித் தவறியும் கூட தங்க விடமாட்டாங்க மிலிட்டரிக்கார்.   வீடெல்லாம் அப்படியே பனிக்குள்ளே போயிரும். திரும்பி வந்துதான் எல்லாத்தையும் சுத்தம் செஞ்சு திரும்ப வாழ்க்கையை ஆரம்பிப்போம் "

ஆறுமாசத்துக்கு   ஒருமுறை  இப்படியா? நினைக்கவே பேஜாராத்தான் இருக்கு.  அந்த ஆறுமாசத்தையும் விடறதில்லை... வீட்டுக்கு முன்னாலே, பக்கத்துலே இருக்கும் கையகல  இடத்தில் பூச்செடிகளும், காய்கறிகளுமா பயிர் செஞ்சுருக்காங்க.




வாழ்க்கைமேல் எப்படி ஒரு பிடிப்பும் தன்னம்பிக்கையும் இருக்கு பாருங்க!  நமக்கோ ஒரு குறிப்பிட்ட வருமானமும், வசதிகளும் இருக்கும்போதும் எதுக்கெடுத்தாலும் சலிச்சுக்கறோமேன்னு....    ஆனாலும் ரொம்பத்தான் ஆகிக்கிடக்கு நமக்கு....   :-(

குழாயாண்டை ஒரு அம்மா  டெனிம் பேண்ட் ஒன்னைத் துவைச்சுக்கிட்டு இருந்தாங்க. பையனுடையது போல!  கல்லில் ஈரப்பேண்ட்டை விரிச்சுப்போட்டு, சோப்புத்தூள் பாக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துத் துணியில் தடவிக்கிட்டு இருந்தாங்க. அப்படியே தேய்ச்சுட்டு, குழாய்த்தண்ணியில் நேரடியாக் காமிக்கிறாங்க. துவையல் ஆச்சு!  ஒரு பக்கெட் வச்சுக்கக்கூடாதோ?  அதுகூட ஒரு ஆடம்பரமா இருக்குமோ என்னவோ....
மேலேறிப் பார்க்கப்போன நம்மவர் ஒரு அம்பது நிமிட்லே திரும்பி வந்தார். தனியா இருக்கேனேன்னு அவசர அவசரமாத் திரும்பிட்டாராம்.  ஒரு குகைக்குள்ளே ஜோன்னு தண்ணீர் பாயுது. சரஸ்வதி நதியாம்.
ஒரு சின்னக்கோவில் சரஸ்வதிக்கு  இருக்கு.  பீமனுக்கு ஒரு குளம் வேற !

இன்னொரு குகையை வியாஸ் குஃபான்னு சொல்றாங்களாம். அங்கேதான்  வேத வியாஸர், மஹாபாரதக் கதையை யோசிச்சுச்  சொல்லச்சொல்ல புள்ளையார் உக்கார்ந்து  எழுதுனது. படங்களைப் பார்த்துக்கிட்டேன்.

குகைக்குள் சரஸ்வதி அப்படியே குபுகுபுன்னு  பொங்கி வர்றதைப் பார்த்ததும்....   அடடா.... கோட்டை விட்டுட்டேனே.... கொஞ்சம் கஷ்டப்பட்டு ஊர்ந்தாவது  போய்ப் பார்த்திருக்கலாமென்னு தோணியது உண்மை.




அடுத்தாப்லெயே  கணேஷ் குஃபா இருக்கு. இங்கிருந்து ஒரு ஆறு கிமீ மேலே  ட்ரெக்கிங் போகணும். போனால்?  பெரிய நீர்வீழ்ச்சி ஒன்னு பார்க்கலாம். வசுதாரா ஃபால்ஸ்.  நானூறு அடி உசரத்துலே இருந்து  கொட்டும் தண்ணீர்....  இதுதான் அலக்நந்தா நதிக்கான ஆரம்பம்.  அங்கெல்லாம் ஏறிப்போக கால் உரம் வேணாமா?    நோகாம இருந்த இடத்தில் இருந்தே  வலையில் பார்த்துக்கலாம். ஹிமாச்சல் க்ளேஸியர் (பனிப்பள்ளத்தாக்கு )  தண்ணீர்தான் நீர்விழ்ச்சியா இறங்குதாம்.  வற்றாத ஜீவநதி கங்கைக்கான ஆதாரம் இது.

இதேமாதிரி மலை உச்சியில் இருந்து இறங்கும் பிரமாண்டமான நீர்வீழ்ச்சி ஒன்னு  இங்கெ நியூஸியின் தெற்குத்தீவில்,  508.53 அடி உசரத்துலே இருந்து கீழே பாய்ஞ்சுக்கிட்டே இருக்கு!  பல வருசங்களுக்கு முன்னால் அங்கே போனப்ப,   ஆகாய கங்கை இதுன்னு நினைச்சு,  ' இனி  நம்மூரு கங்கையைப்  பார்க்கலைன்னாக் கூடப் பரவாயில்லை' ன்னு  சொல்லவும் செஞ்சேன். 
   மேலே  படம்:  நியூஸியின் ஸ்டெர்லிங் ஃபால்ஸ்.

அப்போ நம்ம கண்ணாலே கங்கையைப் பார்ப்போமுன்னு   கனவுலேகூட நினைச்சுப் பார்க்கலை!  ஆனால் இப்போ  கங்கையைப் பல இடங்களில் பார்த்த பிறகு, மறுபடி இதே ஸ்டெர்லிங் ஃபால்ஸ் பார்க்கவும் ஒரு  மூணரை மாசத்துக்கு முந்தி ஒரு ச்சான்ஸ் கிடைச்சது.  கிட்டக் கொண்டு போகும் படகில் நின்னு பார்த்து ஆனந்திக்கலாம், தொப்பலா நனைஞ்சுக்கிட்டே!

நாட்டின் கடைசி கிராமத்தில்  கடைசி  டீக்கடையில் சாயா குடிக்கணும் என்பது இப்போ ஒரு  ரிச்சுவல் ஆகிக்கிடக்கு. அந்தக் காலத்தில் யாரோ ஆரம்பிச்சு வச்சுருக்கலாம். இப்ப அங்கங்கே 'கடைசி டீக் கடை' இருக்கு :-)

ஒரு காஃபி ஷாப் கூட வந்துருக்கு.  நாமும் ஒரு கடையில் டீ சொன்னோம்.  கடுப்பமா ஒன்னு கிடைச்சது. பொட்டிக் கடைகளில்  டீ போட்டுக் கொடுக்கறாங்க.  என்ன பாலோ.... ஒரு வாசனை.....   வாங்கி வாயாண்டை கொண்டு போனதுமே தெரிஞ்சுருச்சு.  நைஸா... அங்கேயே வச்சுட்டேன்.

மணி மூணாகுதேன்னு கிளம்பி அறைக்கு வந்துட்டோம்.   கோவில்  மூணு மணிக்குத் திறக்கறாங்க என்பதால்  கொஞ்ச நேரத்துலே கிளம்பி கோவிலுக்குப் போகலாமா?

தொடரும்......    :-)  

PINகுறிப்பு:  ஆர்வம் உள்ளவர்கள் பார்க்க அன் எடிட்டட்  மானா ஆல்பம் இங்கே :-)


15 comments:

said...

அந்த ஓட்டல்ல பாத்தீங்களா... இந்தியன், சௌத் இந்தியன், சைனீஸ்னு எழுதியிருக்கு. இந்தியா வேற. சௌத் இந்தியா வேற. வடவர்கள் சிந்தனையே அப்படித்தான் இருக்கு. என்ன செய்றது! சௌத் இந்தியால இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ்னு எழுதுனா அவங்களுக்கு உறைச்சாலும் உறைக்கலாம்.

நார்த் இண்டியால போனா நான் நம்மூர் வகைகளை ஆர்டர் பண்றதே இல்லை. ரொம்பப் பாதுகாப்பா ரொட்டி தால்னு போயிர்ரது. அவங்களுக்கு நல்லா வர்ர பண்டம் + நிறைய விக்கும் பண்டம்.

அங்கெல்லாம் வெள்ளாட்டுப் பாலில் டீ பொடுவாங்களோ என்னவோ. இல்ல காட்டெருமைப் பாலா இருக்குமோ? நமக்குப் பழக்கமில்லாப் பால்னா வாடையே காட்டிக் கொடுத்துருது பாருங்க. அதுக்குதான் ஆண்டவன் வாய்க்கு மேல உயிர்களுக்கு மூக்கை வெச்சான்.

வடக்க கடைக்கோடி பட்டிக்காடு. தெற்க கடைக்கோடி நகரம். பண்பாடு தட்பவெட்பம்னு எத்தனை காரணிகள்.

சின்னப்பசங்க முதுகுல தூக்கிச் சொமக்கும் வேலை. அந்த வயசுலதான் செய்ய முடியும். ஆனாலும் இன்னொரு ஆளை முதுகுல ஒரேயொருத்தரே தூக்கிட்டுப் போறதுன்னா யோசனையாத்தான் இருக்கு. மிலிட்டிரில இந்த மாதிரி கொண்டு போக சிறப்புப் பயிற்சியே இருக்கு. ஆனா மிலிட்டிரிக்காரர்களுக்கு உள்ள உடற்பயிற்சியும் உடல்வலிமையும் இந்தச் சின்னப் பசங்களுக்கு இருக்காதுதான்.

said...

அருமை நன்றி

//என் கண்ணைக் கொடுத்து அனுப்பினேன்:-// பாரதிராஜா படத்துலேல்லாம் ஆரம்பத்துல அவர் இப்படித்தான் பேசுவார் ... காமெராவை எடுத்துச்செல்லவில்லை, என் கண்ணனின் கண்களைத்தான் எடுத்துச் சென்றேன்;


//ஒரு பக்கெட் வச்சுக்கக்கூடாதோ? அதுகூட ஒரு ஆடம்பரமா இருக்குமோ என்னவோ....//

பட்டினத்தார் பத்ரகிரியாரை பணக்காரர் ன்னு சொன்னாராம், திருவோடு ஒன்னு சொந்தமா வச்சிக்கிட்டதுக்காக.

said...

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொழியுமாமிது ஏன் இப்போது/ திவியதேசம் காணப் போகும் போது கோவில்கள் தவிர மீதியெல்லாம் புற்களோ எல்லாப்புகழும் திவ்ய தேசங்களுக்கே

said...

நீங்கள் மசால் தோசை. ஸார் என்ன சாப்பிட்டார்? தாலியா?

கூடைப்பயணம் திகில் பயணம்தான் போல. பாவம் இளைஞர்கள். பாவம் அவரால் வாழ்க்கை. அந்த மக்களில் ராணுவமும் கலந்திருக்குமோ, காரகினமாகவே அவர்களை அங்கேயிருந்து காலி செய்ய விடாமல் வைத்திருப்பார்களோ என்றும் தோன்றுகிறது!

டீயைப் பார்த்தால் செயற்கைப் பாலோ என்று தோன்றுகிறது!

said...

வாங்க ஜிரா.

பாவமாத்தான் இருக்கு இந்த இளைஞர்களின் வாழ்க்கையைப் பார்த்தால்.... கல்விக்கும் வழி இல்லை பாருங்க..... :-(

நல்ல உடல் வளம் வேணாமா ஆர்மியில் சேர? ப்ச்....

said...

வாங்க விஸ்வநாத்.

எப்படியோ வாழ்க்கை ஓடுது பாருங்க!!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அக்கம்பக்கம் பார்க்காம என்ன பயணம் வேண்டிக்கிடக்குன்னுட்டுதான் :-)

said...

வாங்க ஸ்ரீராம்

வேற இடங்களுக்குப் போய் வசிக்க இவுங்களுக்கு விருப்பம் இல்லையாமே.... பிறந்த மண்!

குளிர் தாங்க சரியான வசதிகள் இல்லைன்னுதான் யாரையும் குளிர்காலத்தில் இங்கெ தங்க விடுவதில்லை. ஆபத்துன்னா இதே ஆர்மிதானே காப்பத்தவும் ஓடணும்!

மேலும் பார்டர் பாருங்க. ஆள்நடமாட்டம் வேணும்தானே?

said...

குலு மணா வேற இந்த மானா வேறயா?

இந்த யாத்திரை என்னை மிகவும் கவர்கிறது. ( நீங்கள் இருவரும், குறிப்பாக நீங்கள் ஃபேலியோ டயட்டினால் மிகவும் எடை குறைந்து இருப்பதும் தெரிகிறது. வாழ்த்துக்கள்)

ஒரு திட்டமும் இல்லாமல், ஆனால் தேவையான பணத்துடன் இந்த இடங்களுக்கெல்லாம் சென்று ஒன்று விடாமல் தரிசித்துவிட்டு/பார்த்துவிட்டு வரவேண்டும். வாய்ப்பு இருந்தால், முழுப் பனியால் இடங்கள் மூழ்கியிருக்க அந்தச் சூழ்னிலையிலும் 4-5 நாட்கள் தங்கிவிட்டு வரவேண்டும்.

said...

Super Ji ! Dharisanam pannathupola iruku

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

குலு பக்கம் மணாலி.

இது மானா ! மானா ன்னு ஒரு மவொரியில் ஒரு சொல் இருக்கு! இதுக்குப் பொருள் மரியாதை ! ஆனர்! (நாம் கூட மானம் மரியாதைன்னு சொல்றது இதே அர்த்தத்தில்தானே? )

முழுப்பனி காலத்தில் பத்ரி வரை போக அனுமதி இல்லை. ஜோஷிமத் போயிட்டு ஔலிக்குப் போய் தங்கி பனிச்சறுக்கு விளையாடிட்டு வரலாம். முன்கூட்டியே பதிவு செஞ்சுக்கணும். நல்ல கூட்டம் இருக்கும் சமயம் அது!

said...

வாங்க திலீப் குமார்.

முதல் வருகைக்கு நன்றி.

said...

சரஸ்வதி நதி...அழகு...

கடைசி கிராமம்...சூப்பர்...

said...

Thulasi Ji, Tamizhil comment seivathu eppadi ?

said...

கடைசி கிராமம் - இங்கே போகாமல் பத்ரி பயணம் நிறைவடைவதில்லை! உண்மை தான். 99% பயணிகள் இங்கேயும் சென்று வருகிறார்கள்!

அழகிய இடம். படங்கள் அனைத்தும் அழகு.

தொடர்கிறேன்.