Friday, May 26, 2017

Be Good and Do Good (இந்திய மண்ணில் பயணம் 9 )

ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா.... ஒரு இடத்துக்கு ரெண்டாவது முறையாப் போறோமுன்னு வச்சுக்குங்க.... மொதல்முறை எப்படி இருந்துச்சு, இப்ப எப்படி இருக்குன்னு மனசு ஒருபக்கம் ஞாபகப்படுத்திக்கிட்டே வரும்.  அதைச் சொல்லாம இருக்க முடியுதா?  ரிஷிகேஷும் இப்படித்தான்.

மணி ஆறாகப்போகுது. இன்னொருக்கா த்ரிவேணி காட் போய்  கங்கா ஆர்த்தி  பார்க்கலாமான்னு கேக்க வாயைத் திறக்கும்போது, கண்ணில் பட்டது சிவானந்தா ஆஷ்ரம்  வாசல். இங்கேயும் போனமுறை போனோம்தான்... ஆனா கார்பார்க்கில் வண்டியை விடறதுக்கும், அப்படியே ராம்ஜூலா மேல் நடந்து அந்தாண்டை போகறதுக்கும்தான். அந்த வாசல் வேற மாதிரி  இருந்துச்சே....

 அது சைடு வழி. இது  மெயின்ரோடுலேயே  இருக்கும் வழி.
உள்ளே போய் இறங்குனதும் பார்த்தா....  பத்துப்பதினைஞ்சு படிக்கட்டுகளுக்கு மேல் ஒரு கோவில்  மாதிரித் தெரிஞ்சது.  மேலே வளைவில் குழலூதும் கண்ணன்.

படிகளேறி மேலே போனால்  இப்ப நுழைஞ்சு வந்த முகப்பு அலங்கார வளைவில்  அந்தப் பக்கம்,  கிருஷ்ணர் இருந்தாரே   அதே இடத்தில்  இந்தப்பக்கம் நடராஜர்! பக்கத்தில் சின்னதா சிவகாமி.
கண்ணுக்கு நேரா கோவில். வெளிச்சுவரில் யானை வரிசை ரெண்டு பக்கமும்.  முகப்பில் புள்ளையார்!  சகுனம் சரி!
விஸ்வநாத மந்திர்னு பெயர் போட்டுருக்கு. கோவிலுக்குள் போக இங்கிருந்தும் இன்னும் பத்துப்பதினைஞ்சு படிகள் ஏறணும்.  முன்னால் பெரிய மண்டபம். அந்தாண்டை கருவறை.
சின்ன மேடை அமைப்பில்  நாகக்குடையின் கீழ் விஸ்வநாத். அவருக்கு முன்னே சின்னதா ஒரு பளிங்கு நந்தி.
கோவில் சிலைகள், சுவர்கள், தரைகள் எல்லாமே  பளிங்குக் கற்கள்தான்.  வட இந்தியக் கோவில்கள் முக்கால் வாசி இப்படித்தான். நம்ம பக்கம்போல் கருங்கல் சிலைகள் இல்லாததால் பொதுவாவே மூக்கும் முழியும் மொழுக்குன்னு இருப்பதாத் தெரியும்.  நம்ம பக்கம் மாதிரி நுணுக்கமான  வேலைப்பாடுகள்,  அலங்காரங்கள் அவ்வளவாக் கிடையாது.
சிவலிங்கத்துக்குப் பின்புறம் இன்னும் கொஞ்ச உயரமாடத்தில்  குழலூதும் க்ருஷ்ணன்.  இவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும்  கொஞ்சம் உயரம் குறைஞ்ச மேடைகளில் ஒரு பக்கம் மஹாவிஷ்ணு & லக்ஷ்மி. இன்னொரு பக்கம் ஸ்ரீ ராமனும், ஹனுமனும்.

சந்நிதியில் உயரமான குத்துவிளக்குகளில்  ஒரு முகம் மட்டும் அமைதியாக எரிஞ்சுக்கிட்டு இருக்கு.

பட்டையா விபூதி  நெற்றியில் அணிந்த  சந்யாஸி  ஒருத்தர்  சிவலிங்கத்துக்குப் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தார்.

இது என்ன சமாச்சாரம்... எங்கெ போனாலும்  ஏகாந்த தரிசனம் லபிக்குதேன்னு  இருந்தது உண்மை. நாங்கள் கிருஷ்ணரையும், சிவனையும் மற்ற தெய்வங்களையும் மனசாரக்  கும்பிட்டுக்கிட்டு சந்நிதியைச் சுத்தி வரலாமுன்னு  கிளம்பும்போது, அங்கே ஒரு அம்மா வந்தாங்க. 'ஆறரைக்கு  ஆரத்தி இருக்கு. பார்த்துட்டுப் போங்க'ன்னதும் சரின்னு  அங்கே ஓரமாப் போட்டுருந்த இருக்கைகளில் உக்கார்ந்தோம். இன்னும் காமணிதான் இருக்கு.

இந்த மண்டபத்தில் ஒரு பளிங்குத் தூணையொட்டியே  கைகளில் உடுக்கையும் சூலமும் ஏந்தி சிவன் பத்மாசனத்தில் தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். தலையில் இருந்து எட்டிப் பார்க்கிறாள் கங்கை :-)

நாங்க பார்த்துக்கிட்டு இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமா ஆட்கள் வரத்தொடங்கி மண்டபம் ஏறக்கொறைய நிறைஞ்சே போச்சு. எல்லோரும் இங்கே தங்கி இருக்கறவங்களாம். சிலர் பயணிகள், சிலர் யோகா கத்துக்க வந்தவங்க, சிலர் இங்கே  தொண்டூழியம் செய்ய வந்தவங்கன்னு  கலந்து கட்டி....

 தாம்பாளம் மாதிரி   பெரிய பெரிய  ஜால்ரா, சலங்கை இத்துடன், இப்பல்லாம்  கிடைக்கும்  எலெக்ட்ரானிக்  மேளதாளம் வேற!   வெள்ளை உடை  அணிஞ்ச ஒரு உதவியாளர்  உள்ளே போய்  உக்கார்ந்துக்கிட்டு,  பதினாறு உபசாரங்களுக்கான  ஜோதி விளக்குகளையும், மற்ற சம்ப்ரதாயமான  சமாச்சாரங்களையும்  ஒவ்வொன்னா ஏத்தி, எடுத்து நீட்டின்னு  இருக்க, ஜல்ஜல்ன்னு  பூஜை நடக்குது.  அபிஷேகம், ஆரத்தி எல்லாம் ஜோர். ' சிவ சிவா,   ஓம் நமசிவாய' இப்படி  பக்தர்கள்  சிவனைக் கூப்பிட்டு  வணங்கறாங்க.

இதுக்குள்ளே   மூணு பெரிய தூக்குபோணிகளைக் கொண்டுவந்து  சிவனுக்கு முன் வச்சுட்டுப் போனார் இன்னொரு உதவியாளர். சுமார்  இருவது நிமிசம் போல பூஜை நடந்து முடிஞ்சதும் எல்லோருக்கும் கற்பூரஜோதியை கண்ணுலே ஒத்திக்கக் காண்பிச்சாங்க.


முதலில் பார்த்த அம்மா,  'பிரஸாதம் வாங்கிக்குங்கோ'ன்னு  சொன்னதும் நாங்களும் வரிசையில் போய் நின்னோம். யாரும் தமிழ் பேசலை. ஹிந்தியில்தான் பேச்சுவார்த்தை.  ச்சல்தா ஹை :-)

சுடச்சுட வெண்பொங்கலும், சுண்டலும் கிடைச்சது.  வெளியே முற்றத்தில் போய் சாப்பிட்டதும்,  அங்கிருந்த குழாயில் கை கழுவிட்டுக் கோவிலை வலம் வந்த நாங்க எப்படியோ இன்னொரு  வாசலுக்குள் போயிட்டோம்.

பெரிய நீளமான ஹால்.... அந்தக் கோடியில்  ஒரு மேடை.  என்னன்னு கிட்டப்போய்ப் பார்த்தால்...சிவானந்தரின் சமாதி! நல்ல மரவேலைப்பாடுகளால்  இதுக்கான நுழைவு வாசல் அலங்காரம் செஞ்சுருக்காங்க.

சாது சிவானந்தரின் பொன்மொழிகள் ரெண்டே ரெண்டுதான்.  அவைகளையும் மேலே எழுதி வச்சுருக்காங்க. Bபலே Bபனோ  . Bபலா கரோ. ( Be good. Do good. ) அவ்ளோதான். இது ரெண்டிலேயே எல்லாம் அடங்கிருது பார்த்தீங்களா!!

சிவானந்தர், இங்கே ஆஸ்ரமம் அமைச்சது 1930 ஆம் ஆண்டு.   அப்பெல்லாம் அவ்வளவாக  ஆஸ்ரமங்கள் பெருகி இருக்காதுன்னு நினைக்கிறேன். இருக்கும்  சில பல ஆஸ்ரமங்களில் வெளியாட்களை  அனுமதிக்காமல் கட்டுதிட்டமா இருந்த காலக்கட்டத்தில் வெளி ஆட்களை முக்கியமா ஆன்மீக அனுபவம் தேடி வரும் வெள்ளையர்களை  முதலில் உள்ளே அனுமதிச்ச ஆஸ்ரமம் இதுதான்!

சிவானந்தரின் பூர்வாசிரமப் பெயர்  குப்புசாமி.  நம்ம திருநெல்வேலி பத்தமடை ஊர்க்காரர்தான். மருத்துவர். தஞ்சையில் மருத்துவம் படிச்சுருக்கார். பிறந்த வருசம் 1887.  படிச்சு முடிச்சதும் மலேயா (அப்பெல்லாம் மலேயான்னுதான் சொல்வாங்க) நாட்டுக்குப்போய்  மருத்துவரா தொழிலை ஆரம்பிச்சு, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மருத்துவம்  பார்த்துக்கிட்டு இருந்தார்.
பத்து வருசம் மலேயாவில் இருந்தவருக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டுருக்கு. 1923 இல் இந்தியாவுக்கு திரும்பி வந்தவர்,  கொஞ்சநாள் கழிச்சு  காசி, ரிஷிகேஷ்னு  போயிருக்கார். அப்போதான் விஸ்வானந்த சரஸ்வதி என்ற சந்நியாசியை சந்திக்கிறார்.  அவரையே குருவாக ஏத்துக்கிட்டு  அவருடனேயே  ஆன்மிக வழியில்  தன்  வாழ்வை  நடத்திக்க சந்நியாசம் வாங்கிக்கிட்டார். அப்பதான் சிவானந்த சரஸ்வதி என்னும்  பெயரும்  கிடைச்சது.

1936 இல் டிவைன் லைஃப் சொஸைட்டி என்று ஆரம்பிச்சு ஆன்மிகத்தேடல் உள்ளவர்களையும்,  யோகா கற்றுக்கிட்டு செஞ்சால் அது எப்படி உடல்,மனநலம்  எல்லாத்துக்கும் உதவுதுன்றதையும் சொல்லி, யோகா  முறைகள் பயில வரும் மக்களையும்  ஒன்று சேர்த்தார். அந்தக் காலக் கட்டதுலேதான்  வெள்ளையர்கள் பலர் இதே தேடலில்  இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.


இதுக்கிடையில் இவர் வேலை பார்த்த சமயத்தில் சேர்ந்த ப்ராவிடன்ட் ஃபண்டு  காசு  வந்து சேர்ந்தவுடன், இங்கே இலவச மருத்துமனை ஒன்னு ஆரம்பிச்சு  மக்களுக்கு  மருத்துவம்  பார்க்கவும் ஆரம்பிச்சார்.  டாக்டர்  படிப்பு வீணாப் போகலை பாருங்க.

இவருக்கும் நிறைய சிஷ்யர்கள் வந்து சேர்ந்தாங்க. அவுங்களும் தீக்ஷை கிடைச்சதும்  தனியாகப் போய் வெவ்வேற  வகைகளில்  மனித குலத்துக்கு சேவை செய்ய ஆரம்பிச்சாங்க.  சின்மயா மிஷன் கூட இப்படி ஆரம்பிச்சதுதான்.


இப்ப  சிவானந்தா ஆஷ்ரம் ஒரு பெரிய யோகா  மையமாக இருக்கு.  யாத்திரை செய்யும் ஆன்மிகத்தேடல் உள்ளவர்களுக்கும்  இங்கே இலவசமா இருக்க இடமும்  உண்ண உணவும் தர்றாங்க. நல்ல வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் இந்த வளாகத்துலே இயங்குது.  பல வருசங்களுக்கு முன்னே (1945)இங்கே  ஆயுர்வேத  மருந்து தயாரிப்பதுன்னு ஆரம்பிச்சு அந்தவகையில் சிகிச்சைகளும்  நடத்திக்கிட்டு இருக்காங்க.


இதைத்தவிர இங்கே உள்ளேயே கோவில் ஒன்னு! இப்ப நாம் போய் வந்தோமே அது.  எல்லாம் ரொம்பவே நல்லா நடக்குதுன்னுதான்  சொல்றாங்க. இவருடைய எழுபதாவது வயசுக்கு விழா ஒன்னு எடுத்து  சிவானந்தா   அமைதித் தூண்  (Sivananda Peace Pillar)ஒன்னு கட்டி இருக்காங்க.

இவருடைய  பிரசங்கங்கள், ஆன்மிக அனுபவம்,  மனிதன் அமைதியை விரும்பினால் எப்படி நடந்துக்கணும் என்ற போதனைகளையெல்லாம் புத்தகமா வெளியிட்டு இருக்காங்க. இங்கேயே அதுக்குண்டான பதிப்பக வசதியும் இருக்கு!
இவர் தன்னுடைய  76 வது வயசில் சாமிகிட்டே போயிட்டார். ஏற்கெனவே சொன்னமாதிரி ரெண்டே ரெண்டு  முக்கிய போதனை தான்.  நல்லவனாக இரு. நல்லதைச் செய்.  சிம்பிள், இல்லே?

கோவிலில் பூஜை முடிஞ்ச ஒரு பத்து நிமிசத்துலே  எல்லா இடங்களையும் ஒரு அமைதி வந்து நிரப்பிருச்சு.  கோவில் ரொம்பவே உயரமான இடத்தில் இருப்பதால் இங்கிருந்து பார்க்கும்போது கங்கை  ஆரவாரமில்லாமல்  அமைதியா 'நிக்கற'மாதிரியே தெரிஞ்சது.
நம்ம மனசிலும் ஒரு அமைதி வந்தது போல இருந்துச்சு.  அடடா... இது என்ன வழக்கத்துக்கு மாறா?

ஏழு மணிக்கே இப்படி இருட்டான்னு நாங்களும் கிளம்பிட்டோம்.  இன்னும் கொஞ்சம்  சீக்கிரமா நேரத்துலேயே போயிருந்தால் உள்ளே சுத்திப் பார்த்துருக்க முடிஞ்சுருக்கும்.


கங்காவியூ வந்து சேர்ந்தோம்.   நாளைக்கு  காலையில் எட்டரை மணிக்குக் கிளம்பணும். முகேஷிடம் சொல்லிட்டு அறைக்குப்போய்  இடதுபக்க ஜன்னலில் பார்த்தால்............   த்ரிவேணி காட்டில் கங்கா ஆரத்தி முடிஞ்சு ஜிலோன்னு இருக்கு!  கடை காலி !  மூடியாச் :-)

சரி.  தூங்கலாம்.

நல்லா ரெஸ்ட் எடுங்க.  நாளைக்கு நீண்ட பயணம் போகணும்.....


தொடரும்.......  :-)


13 comments:

said...

சிவகாமி ஆடவந்தால் நடராஜர் என்ன செய்வார்!!!

தரைகளை பார்க்கும்போது கோவில் மாதிரியே இல்லை.. ஹோட்டல் மாதிரி இருக்கிறது! (ஓ.. அடுத்த வரிகளில் நீங்களே விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்)

என் நண்பர் ஒருவர் கோவிலில் யாராவது தரும் பிரசாதங்களை வாங்க மாட்டார்! பரிகாரம் செய்வாங்களாம். அதெல்லாம் நமக்கு வந்துடும் என்பார்!!!!

said...

வாங்க ஸ்ரீராம்.

சாமிக்குப் படைச்ச பின் அதுலே தோஷம் இருக்குமோ? நம்ம சனம்...இப்படித்தான் வேண்டாததை நினைக்கும். இங்கே ஒரு கிறிஸ்துவ மதத்தோழி, நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னு எதாவது சாப்பிடக் கொடுப்போமே அப்போ 'உங்க சாமிக்கு வச்சீங்களா'ன்னு கேப்பாங்க. அது சின்னத் தட்டுலே வச்சுருவேன். இது பெரிய பாத்திரத்துலே இருக்குன்னு சொன்னால் சாப்பிடுவாங்க.

நல்லது நடந்தால் நன்றி கூற பிரசாதம் படைக்கலாமே... நான் அப்படித்தான் செய்வேன்.

இது கோவில் ஆட்கள், தினப்படி பூஜைக்காகவே செய்யும் பிரஸாதம்தான். திருப்பதியில் புளியோதரை கொடுக்கறாப்போல :-)

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

said...

வட இந்தியப் பயணம் சென்றபோது கங்கா ஆர்த்தி பார்த்தோம். கண்கொள்ளாக் காட்சி. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தமிழ் விக்கிபீடியாவில் கங்கா ஆர்த்தி என்ற தலைப்பில் அக்டோபர் 2014இல் புதிய பதிவினை ஆரம்பித்து எழுதியுள்ளேன்.

said...

நாங்களும் ஆசிரமம் போனோம்.
படங்கள் எல்லாம் அழகு.
இறைவனுக்கு படைத்த உணவில் தோஷம் ஏது? நானும் அப்படித்தான் சொல்லி வாங்க்கி சாப்பிடுவேன்.

said...

அழகான் விளக்கம் நேரில் செல்ல முடியாதவர்களை கைப்பிடித்து கொண்டு செல்வது போன்ற எழுத்து நடை.நான் பார்த்ததை எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற அக்கரையுடன் தெளிவான் புகைப்படம்.உங்கள் பதிவு படித்தபின்பு கங்கா ஆரத்தி பார்க்கவேண்டும் என இரைவனிடம் கூடுதல் ப்ரார்த்தனை செய்கிறேன்.அன்புடன்
மீரா

said...

விஸ்வநாதன் கோயில்னு சொல்லிட்டு உள்ள கிருஷ்ணர் சிலை இருக்கேன்னு பாத்தேன். முன்னாடி சிவலிங்கம் இருக்குறது அப்புறந்தான் தெரிஞ்சது. விஸ்வம்னாலும் ஜகம்னாலும் ஒன்னுதான். ஆனா பாருங்க. விஸ்வநாதன்னு சிவனையும் ஜகன்னாதன்னு விஷ்ணுவையும் சொல்றோம். ஆக ரெண்டு பேருமே ஜனநாதன் தான்.

வெண்பொங்கல் எல்லாம் வடக்க கொடுக்குறாங்களேன்னு யோசிச்சேன். பத்தமடைக்காரர் தொடங்கிய மடமாச்சே. அதான்.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரொம்ப நல்லது.

நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

உண்மைதான். அவன் இல்லாத இடம் எது? அவன் இல்லாத பொருள் எது?

said...

வாங்க மீரா பாலாஜி.

விரைவில் லபிக்கணும்! பெருமாளிடம் அப்பீல் பண்ணியாச் !

said...

வாங்க ஜிரா.

அரியும் சிவனும் ஒன்னு இல்லையோ!

பேச்சு தமிழில் இல்லையே தவிர சாப்பாடு தமிழ்தான்:-) உணவுப் பழக்கங்கள் அப்படி ஆகிப்போகுது.

நாங்க ஃபிஜியில் இருந்தப்ப அண்டை வீட்டுக்காரர்கள் நாயர்கள். மலையாளம் ஒரு சொல் தெரியாது. ஆனால் விசேஷ தினச் சாப்பாட்டில் அவில் கட்டாயம் உண்டு. அது என்ன அவில்னு ஒருநாள் பார்த்தால்..... அவியல் ! :-)

said...

பெரும்பாலான வட இந்திய கோவில்களில் சிலைகள், தரை, சுவர் எங்கும் பளிங்கு மயம். நம் ஊர் போல நுணுக்கமான வேலைப்பாடுகள் பார்க்க முடியாது என்றாலும், பெரும்பாலான கோவில்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.....

சிவானந்த சரஸ்வதி ஆஸ்ரமம் - ஒரு முறை சென்றதுண்டு.

தொடர்கிறேன்.