Wednesday, May 17, 2017

காட்டுக்குள்ளே போறோம் !!!! (இந்திய மண்ணில் பயணம் 5 )

மணி இப்போ பத்தே முக்கால்தான்.  ஹரித்வார் போகலாமுன்னு  முகேஷிடம் சொன்னதும்,  ஹைவேலெ போகணுமா இல்லை காட்டு வழியில் போகலாமான்னு கேட்டார். அப்படி என்ன காடு இங்கே இருக்குன்னா....  ராஜாஜி நேஷனல் பார்க் இருக்குன்னார்.

ஆமாம். அது தெரியும். போனமுறை ஹரித்வார் போக முடிவு செஞ்சதும், வலையில் தங்குமிடங்களைத் தேடி பார்க் வ்யூ ஹொட்டேல் புக் பண்ணி இருந்தோம். அந்த பார்க்  இதுதான். ஹொட்டேலுக்கு வந்து செக்கின் ஆனதும் பார்க் எங்கேன்னு கேட்டதுக்கு,  ஒரு பத்துப்பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலே நேஷனல் பார்க் இருக்குன்னு பதில் வந்துச்சு.

காட்டு வழியே போகலாமுன்னு சொன்னதும், அங்கே உள்ளே போக ஒரு கட்டணம்  உண்டுன்னார்.
"ஓக்கே.     அது          ஒன்னும்    பிரச்சனை      இல்லை"

 அங்கே போகும் பாதையில்  நுழைஞ்சதும்,  டிக்கட் கவுன்ட்டரில்  டிக்கெட் வாங்கிக்கிட்டோம்.



Tiger reserve னு பார்த்ததும் ஆசையாத்தான் இருந்துச்சு. அப்ப ஒரு சின்னப் பையன் சைக்கிளில் தனியாப் போய்க்கிட்டு இருப்பதைப் பார்த்துட்டு புலி வராதுன்னு புரிஞ்சே போச்சு. ஆனாலும் காடு..... காடல்லவோ!

தண்ணீர் நிறைச்சு ஓடும்  பெரிய  அகலமான கால்வாயை ஒட்டியே ரோடு போகுது. மத்தபடி ரெண்டு பக்கமும்  அடர்த்தியான மரங்கள்.  நேத்து டெஹ்ராடூன் ஏர்ப்போர்ட்லே இருந்து வரும்போதும் இதே மாதிரி அடர்த்தியான மரங்களுக்கிடையில் உள்ள சாலையில்தான் வந்துருந்தோம். அப்ப  அதுவரையும் இந்தக் காடு போகுதா என்ன?

அப்புறம்தான் தெரிஞ்சது  இந்தக் காடு 820.42 சதுர கிமீ பரப்பு உள்ளதுன்னு!  நம்ம ராஜாஜி அவர்களின் பெயரைத்தான் இந்த தேசியப் பூங்காவுக்கு வச்சுருக்காங்க. (தமிழன் பெயர்  இருக்குன்னு மகிழ்ச்சி அடையணுமா இல்லையா? )   இங்கிருந்து ஒரு நூத்தி நாப்பது கிமீ பயணிச்சால்   Jim Corbett National Park போயி  உண்மையான புலிகளையே பார்த்துடலாம்!!  அடடா... தெரியாமப் போச்சே.....

இந்தப் பகுதியில் போய்க்கிட்டு இருக்கும்போது  கொஞ்ச தூரத்தில்குரங்குகள்  சாலையில் என்னத்தையோ எடுத்துத் தின்னுதுக.


ரெண்டு கார் வேற நிக்குது. அவுங்கதான் எதாவது போட்டுருக்கணும்.  இந்த மாதிரியான இடங்களில் இப்படி  மிருகங்களுக்கோ, இல்லை பறவைகளுக்கோ  தீனி எதுவும் போடக்கூடாது. போட்டுப் பழக்கிட்டா அப்புறம் அதுகள்தான் கஷ்டப்படும்னு  இங்கே நியூஸியில் காட்டிலாக்கா சொல்லும்.

ஒரு அம்மா, தன் குழந்தையோடு ஒரு வாழைப்பழத்தைத் தின்னுக்கிட்டு இருந்துச்சு.
சாலை  கெனாலை விட்டுத் திரும்பி வேற பக்கம் போய் ஒரு பாலத்தைக் கடந்து போகுது இப்போ. கங்கைதான். ஆனால் தண்ணீரே இல்லாத பகுதியா சேறும் சகதியுமா இருந்துச்சு.  கொஞ்ச தூரத்துலே திரும்பியும்  அந்தக் கால்வாய் கண்ணில் பட்டது. வளைஞ்சு வளைஞ்சு போகும் பாதையோ என்னவோ....

இப்ப நம் கண்ணுக்குத் தெரிஞ்சது சில்லா (Chilla Dam) அணை. இங்கே  ஹைட்ரோ பவர் ஸ்டேஷன் இருக்கு.  கரண்டு எடுத்த (!) தண்ணிதான் கெனால் வழியாப் போகுது :-)


இதை அடுத்தே கொஞ்ச தூரத்தில்  ராஜாஜி நேஷனல் பார்க், நல்வரவுன்னு போர்டு வச்சுருக்கு. பத்துப் பனிரெண்டு  மிருகங்களும், 315 பறவை இனங்களும் இருக்காமே!  
பெரிய காம்பவுண்டு சுவர். கேட் மூடி இருக்கு. நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரைதான் பொதுமக்களுக்கு  அனுமதி.  இன்றைக்கு செப்டம்பர் 27.  இன்னும் ஒன்னரை மாசம் கழிச்சு  வந்தால் போதும் ............
அடுத்த   அஞ்சாறு நிமிசத்தில்  தண்ணீர் ஓடைமாதிரி இருந்த இடத்தில்  முன்னே போகும் வண்டிகளைத் தொடர்ந்து முகேஷும் போய்க்கிட்டு இருக்கார். குறுக்கு வழியாம்.   ஆகக்கூடி முக்கால் மணியில் ஹரித்வார் வந்துருந்தோம்.



அதோ தூரத்தில் மன்ஸா தேவி கோவில் மலைமேலே தெரியுது. போனமுறை அங்கே போய் வந்தாச்சு. இந்தப் பயணத்தில்  வேணாம். இப்போதைக்கு நமக்கு நேரமில்லை......


தொடரும்........... :-)



13 comments:

said...

தொடர்கிறோம்..

said...

நன்றி.
அடுத்ததெங்கே என்ற ஆர்வத்துடன் தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.


அடுத்து..... கங்கைக் குளியல்தான் :-)

said...

காட்டுக்குள் .....பசுமை....

said...

காட்டு வழியா போறதே ஒரு தனி அனுபவமா இருக்குமே. ஆனா சைக்கிள்ள ஒருத்தர் போறாருன்னா பாதுகாப்பான காடாகத்தான் இருக்கனும்.

நம்முடைய தின்பண்டங்களை காட்டு விலங்குகளுக்குக் கொடுக்கக் கூடாது. அது அந்தச் சுவைக்குப் பழகிப்போய் அதுக்கே ஏங்கத் தொடங்கீரும். நம்ம மக்களுக்கு அறிவு அவ்வளவுதான். பழங்கள் குடுத்தாக்கூட ஓக்கே. வடை பப்ஸ் போண்டா சமோசா சிப்சுன்னு கொடுத்து அதையும் கெடுக்குறாங்க. இன்னும் சில ரவுடிகள் “தண்ணி” பழக்கத்தை வேற குரங்குகளுக்குப் பழக்கிவிடுறாங்க. என்று திருந்துமோ இந்த உலகம்!!!

said...

ஐயோ பாவம் என்று விலங்குகளுக்குத் தீனி போடுகிறார்கள் இதன் பலன் பழனி மலையில் எங்கள் கையில் இருந்த கூல் டிரிங் பாட்டிலை ஒரு குரங்கு பறித்துக் கொண்டு போய் வாயால் மூடியைக் கடித்திழுத்து அந்த கூல் டிரிங் கை குடிதபோதுதான் தெரிந்தது

said...

உடன் வந்துகொண்டேயிருக்கிறோம்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஆமாங்க. நல்ல பசுமைதான். குளுகுளு வனம் !

said...

வாங்க ஜிரா.


சனம் சொன்னதைக் கேக்காதுங்க..... அவுங்களுக்கு வேண்டியதெல்லாம் வேடிக்கை மட்டும்தான். இயற்கையை அழிக்கறோமேன்னு குற்ற உணர்ச்சியே கிடையாது.... .. :-(

'தண்ணி' குடிச்சுட்டுக் கண்ணாடி பாட்டில்களை உடைச்சுக் காட்டுலே போட்டுட்டு போதுகள். யானைகளில் காலிலே புதைஞ்சு புண்ணாகி உயிருக்கே ஆபத்து வந்துருது. ஒரு விநாடி யோசிக்குமுன்னு நினைக்கிறீங்க? :-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பாவம்பாவம்னு அதுக வாழ்க்கையைக் கெடுத்துடறாங்க. போதாக் குறைக்கு அவுங்க இருப்பிடங்களையெல்லாம் அழிச்சுக்கிட்டே வர்றதுலே இயற்கையா வாழக்கூட அதுகளால் முடியலை... ப்ச்....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சி !

said...

இக்காட்டுப் பகுதியில் பெரும்பாலும் மிருக நடமாட்டம் மிகக் குறைவு - குறிப்பாக ஹரித்வார் பக்கங்களில். ஜிம் கார்பெட் பகுதியிலேயே இப்போதெல்லாம் மிருக நடமாட்டம் பார்ப்பது அரிதாக இருக்கிறது.

காட்டிற்குள் வன இலாகவின் தங்கும் விடுதி கூட உண்டு.

ஹரித்வாருக்குள் நுழைந்து பார்த்தவற்றை படிக்க இதோ வந்து கொண்டிருக்கிறேன்!